Friday, February 7, 2014

கலைவாணர் ஒரு புரியாத புதிர்! எம்.ஜி.ராமச்சந்திரன் - Vikatan 1966

புகழ் வந்ததனால் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் செருக்குக்கொண்டது கிடையாது. அந்தப் புகழ் எத்தகையது; அதன் ஆக்கிரமிப்பால் விளையக்கூடிய முடிவுகள் என்ன என்பதை முற்றும் உணர்ந்தவர். புகழ் மிகுதியின் அடித்தளத்தில் அவரது அறிவும் பண்புமே அவரை நேர்வழியில் இயக்கிக் கொண்டிருந்தன.
மகாத்மா காந்தியை உண்மையிலேயே மதித்தவர் அவர். கதரும் கட்டுவார். ஆனால், காங்கிரஸ்காரர் அல்ல.
அறிஞர் அண்ணா அவர்களைத் தலைசிறந்த தீர்க்கதரிசியாக, மக்கள் நலத்தின் வழிகாட்டியாகப் போற்றியவர் அவர். ஆனால், தி.மு.கழக உறுப்பினர் அல்ல.
பெரியார் ராமசாமி நாயக்கர் அவர்களை அரசியல் வழிகாட்டியாகக் கருதினார். ஆனால், திராவிடக் கழகத்தில் அங்கத்தினர் அல்ல.
சக நடிகர்களிடம்கூட குறைகண்டால் எடுத்துக் கூறித் திருத்துவார். ஆனால், அவர்களால் போற்றி, மாலைகளே சூட்டப்படுவார்.
இப்படி எல்லோரும் போற்றும் ஓர் அதிசயச் சக்தியாகத் திகழ்ந்த அவர், ஒரு 'புரியாத புதிர்’ என்று நான் சொல்லும்போது, உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். 'கலைவாணரைப் பற்றி எல்லாம் புரிந்ததுதானே! புரியாத ஒரு புதிராக அவர் இருந்தது எப்படி?’ என்று கேட்கவும் செய்யலாம்.
இங்கே சில அனுபவங்களை, எந்தக் காலத்திலும் மறக்க முடியாத சில நிகழ்ச்சிகளை உங்கள் முன் எடுத்துரைக்க விரும்புகிறேன்.
'மாய மச்சேந்திரா’ படத்தில் நடிப்பதற்காக நாங்கள் எல்லோரும் கல்கத்தாவில் தங்கியிருந்தோம்.
டைரக்டர் ராஜாசந்திரசேகர் அவர்கள்தான், பட கம்பெனி சொந்தக்காரரான பி.எல்.கேம்கா அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் பாலமாக இருந்தார். பணம் வேண்டும் என்றாலும், வேறு எது வேண்டும் என்றாலும் அவர் மூலமாகத்தான் நாங்கள் பெறுவோம்.
பாடல்களை, கிராமபோன் ரெக்கார்டிங்கில் பதிவுசெய்யத் தீர்மானிக்கப்பட்டது. கலைவாணர், பின்னணி இசைக் கலைஞர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள், அந்தப் பாடல் பதிவுக்காக ஏதும் ஒரு தொகை தங்களுக்குத் தரப்பட வேண்டும் என்று கேட்டார்கள். முதலாளி மறுத்துவிட்டார் என்று டைரக்டர் கூறினார்.
பாடல் பதிவுக்கு எந்த நாள் குறிக்கப்பட்டதோ, அதற்கு முதல் நாள் வரை பேச்சு நடந்தது. அதற்குப் பயன் இல்லாமல்போகவே, மறுநாள் அந்தப் பணியில் கலந்துகொள்ள முடியாது என்று கூறிவிட்டார்கள்.
மறுநாள் விடியற்காலையிலேயே எல்லோரும் எழுந்தார்கள். எழுந்தார்கள் அல்ல; எழுப்பப் பட்டார்கள். வேறு யாராலும் அல்ல, கலைவாணரால்தான்.
''என்ன?'' என்று கேட்டார்கள்.
''இன்னைக்கு ரெக்கார்டிங் இல்லே... போக வேண்டாமோ?'' என்றார் கலைவாணர்.
யாருக்குமே ஒன்றும் புரியவில்லை.
''நீங்களும்தானே சம்மதித்தீர்கள்! 'பணம் வாங்காமல் யாருமே வேலை செய்ய மாட்டோம்’ என்று அவர்களிடம் சொன்னீர்களே? ஏன் இப்போது போகச் சொல்கிறீர்கள்? பணம்தான் தரவில்லையே! போனால் அவமானம் இல்லையா? டைரக்டர் கேலிபண்ண மாட்டாரா?'' என்று எல்லோரும் கலைவாணரைப் பார்த்துக் கேட்டார்கள்.
அப்போது கலைவாணர் சொன்ன பதில் இதுதான்:
''நம்மை யார் கேலி பண்ணப்போறாங்க! ராஜா சந்திரசேகர்தானே! அவர் நம்ம ஆளுதானே! ஆனால், முதலாளி யாரு தெரியுமா? கல்கத்தாக்காரர்! நம்மைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? தமிழ் நாட்டிலிருந்து வரும் கலைஞர்கள், நடிகர்கள், அவர்களுக்கு ஒற்றுமை கிடையாது; கட்டுப்பாடு கிடையாது. தமிழ்நாட்டு ஆளுங்க எல்லோருமே இப்படித்தான் இருப்பாங்க என்று எண்ணி இழிவாப் பேசினா, அந்தக் கறையை எப்படித் துடைக்க முடியும்? முதலில் நாம் செய்யவேண்டியதைச் செய்துவிடுவோம். அப்புறம் போராடி நம்ம உரிமையைக் கேட்டுக்கொள்வோம்.''
அதன் பிறகு எல்லோரும் பாடல்பதிவில் கலந்துகொண்டார்கள். நானும் கூடப் போனேன். நான் பாடப் போனேனா என்று கேட்டுவிடாதீர்கள்!
ராஜாசந்திரசேகர் கொஞ்சம் தாமதமாக வந்தார். கலைவாணரைப் பார்த்தவுடனே அவருடைய கண்கள் தெரிவித்த நன்றி இருக்கிறதே, அதை எந்த வார்த்தையாலும் விவரிக்க முடியாது.
எது எப்படி இருந்தாலும் பாடல் பதிவில் கலந்துகொள்ள முடியாது என்று சொல்லி, கலைவாணருடைய கருத்துப்படி போய்க் கலந்துகொண்டார்களே, அவர்களுக்கும் எனக்கும் கலைவாணர் ஒரு புரியாத புதிராகத் தோன்றினார். ஏன் முதலில் போராட்டத்தில் கலந்துகொண்டார்! மற்றவரையும் போராடும்படி சொன்னாரே! ஆனால், பின்பு ஏன் திடீரென்று பாடல் பதிவில் கலந்துகொள்ள வற்புறுத்தினார்?
அன்று யாருக்குமே புரியாத ஒரு புதிர்தான் அது.
சிலர் இப்படியும் சொன்னார்கள் மறைவாக: 'கலைவாணர், தான் நல்ல பேர் வாங்கிக்கொள்வதற்காக நம்மைக் காட்டிக்கொடுத்துவிட்டார்’ என்று.
ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பாடல் பதிவில் கலந்துகொண்டவர்களுக்கு ஏதோ ஒரு பணம் வந்து சேர்ந்த பிறகுதான், அவர் தனக்காக அப்படிச் செய்யவில்லை; மற்றவர்களுக்காகவும்தான் செய்தார் என்பதைப் புரிந்து கொண்டார்கள். இவர்தான் கலைவாணர்.
நியாயம் என்று தனக்குத் தெரிந்த எதையும் வெளியில் சொல்லாமலோ அதற்காகப் போராடாமலோ அவரால் இருக்க முடியாது; இருக்கவும் மாட்டார்.
இதுதான் கலைவாணரின் உள்ளம்.
ஆனால், ஒரு செயல் நிகழும்போது அவரைப் பற்றி ஒரு புதிராகத்தான் நினைப்பார்கள். முடிவுக்குப் பிறகுதான் உண்மை விளங்கும்.
ட்சுமணதாஸ் என்ற சிறப்புப் பெற்ற கதையாசிரியர் (உரையாடல் ஆசிரியர்-  பாடலாசிரியர்), கலைவாணரை 'என்னடா கிருஷ்ணா’ என்றுதான் அழைப்பார். எல்லோருக்கும் கலைவாணரை அவர் 'டா’ போட்டு அழைப்பதும் அதைப் பற்றி கலைவாணர் சிறிதும் பொருட்படுத்தாமல் சகஜமாகப் பழகுவதும் வியப்பாக மட்டுமல்ல, வேதனையாகவும் இருந்தது. சிலருக்கு அளவுக்கடங்காத கோபம்கூட உண்டாயிற்று. அவர் எப்படி கலைவாணரை ஏக வசனத்தில் அழைக்கலாம்? இதுவே அவர்களின் சினத்துக்குக் காரணம்.
சிலர் லட்சுமணதாஸ் அவர்களைத் தனியாக அழைத்து இழிவாகப் பேசி பயமுறுத்தவும் செய்தனர்.
மறு நாள் கலைவாணர் எல்லோருடனும் சாப்பிடுகையில், கவி லட்சுமணதாஸைப் பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டு மற்றவர்களிடம் ''லட்சுமணதாஸ் யார் தெரியுமா? ஓர் ஊரில் ஒரு சமயம் கான்ட்ராக்டர் எங்களுடைய பல நாடகங்கள் நடத்தி முடிச்சதுக்கு அப்புறமும் எங்களை விடுவதாக இல்லை. கையில் காசு இல்லாமல் ஊர் திரும்ப முடியாது. அப்போ லட்சுமணதாஸ் என்ன செய்தார் தெரியுமா? அந்த கான்ட்ராக்டரோட போராடி பணத்தை வசூல் பண்ணி, நாங்க எல்லோரும் ஒழுங்கா ஊர் திரும்ப வழி செய்தார்.
அப்போ நான் இப்போ மாதிரி பெரிய ஆர்ட்டிஸ்ட் இல்லே! சாதாரண நடிகன். அப்பவே அவர் பெரிய கவிஞர். அவர் என்னைப் பெரிய மரியாதையோட பேசணும்னு நான் எதிர்பார்க்க முடியுமோ! 'என்னடா கிருஷ்ணா’னு அவரு கூப்பிடாம வேறு யாரு கூப்பிடறது?'' என்றார். எல்லோருக்கும் அந்த விளக்கத்தின் மூலம் புரியாதிருந்த புதிர் புரிந்தது.
இதில் ஒரு புதிய விளைவு என்னவென்றால், கவி லட்சுமணதாஸ் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கலைவாணரை 'என்னப்பா! வாப்பா!’ என்று முறையை மாற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்.
லைவாணவர் அவருடைய கடைசி காலகட்டத்தில் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இருந்தாரே, அப்போது ஒரு நிகழ்ச்சி.
அவரைக் காண அங்கு சென்றவர்களில் குறிப்பிட்ட பலரிடமும் ''ராமச்சந்திரனைப் பார்க்கணும்; அவனை வரச் சொல்லுங்கள்'' என்றாராம். மதுரம் அம்மையார் அவர்களும் போன் வழியாக எனக்குத் தகவல் கொடுத்தார். ''யாரும் அவரைப் பார்த்துத் தொந்தரவு செய்யக் கூடாது'' என்று டாக்டர் அட்வைஸ் செய்திருப்பதாக அறிந்ததால், நான் நேரில் போய்ச் சந்திக்கத் தாமதித்தேன். ஆனால், உடனடியாக நேரில் போய்க் கலைவாணரைப் பார்க்கவில்லையே தவிர, அவருடைய நலத்துக்கான ஆர்வமும் எல்லாவிதத் தொடர்பும் கொண்டிருந்தேன்.
பிறகு இரண்டொரு நாட்களிலேயே நேரில் பார்க்கச் சென்றேன். அவர் என்னைப் பார்த்ததும், ''ராமச்சந்திரா, நான் எதுக்காகக் கூப்பிட்டனுப்பினேன் தெரியுமா? பல பேர் வர்றாங்க. வந்து, பார்த்துட்டுப் போறாங்க. பத்திரிகைக்காரங்க, 'அவர் வந்து பார்த்தார். இவர் போய்ப் பார்த்தார்’ என்று செய்தி வெளியிடுறாங்க. நீ மட்டும் வந்து பார்த்ததாகச் செய்தி வர்றதில்லை. அதனால் நீ வந்து பார்க்கலைங்கிற செய்திதான் வெளியே தெரியும். எனக்காக நீ செய்துவருகிற காரியங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாது. நீ வரலைன்னு மக்கள் தவறா நினைப்பாங்க. அந்தக் கெட்ட பேர் உனக்கு வேண்டாம்னுதான் உன்னை வரச் சொன்னேன்'' என்றார்.
என்னை வற்புறுத்தி அழைத்ததன் காரணம் இதுதான் என்பது எனக்கு மட்டுமல்ல; யாருக்குத்தான் இந்த வகையில் புரிந்திருக்க முடியும்? அவர் தனக்காகவா என்னை அழைத்தார்? எனக்காக அல்லவா என்னை அழைத்திருக்கிறார்!
அந்தப் புரியாத புதிரைப் பற்றி என்ன சொல்வது? எப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் பண்பு அவரது அந்த அழைப்பில் வெளிப்பட்டது!
அப்படிப் புரியாத புதிராக இருந்த காரணத்தால்தான் என்றென்றும், வரலாறு உள்ள வரைக்கும் நிலைத்து விளங்கும் தகுதி அவரிடம் நிறைந்திருக்க முடிந்தது.
இந்த நாட்டில் எத்தனை எத்தனையோ உள்ளங்களில் அவர் நினைவு குடி கொண்டிருப்பதற்குக் காரணம் அந்தப் பண்புமிக்க செயல்கள்தாம்.
கலைவாணரின் மறைவின்போது துக்கம் தெரிவித்தவர்களில் கட்சி பேதம், மொழி பேதம், இன பேதம் இருக்கவில்லையே! எல்லோரும் தங்களைச் சேர்ந்த ஒரு நல்லவர், உத்தமர், கலைச்செல்வர், அறிவாளி மறைந்துவிட்டதாக அல்லவா துயரம் தெரிவித்தார்கள்!
அவர் மறைந்தாலும், அவர் நினைவு மறையாததற்குக் காரணம், அவர் தமக்கென்று அமைத்துக்கொண்ட வாழ்க்கைப் பண்பு அல்லவா? அந்தப் பண்பின் செயல்களை, உள்ளபடி இன்னும் புரிந்துகொண்டவர்கள் யாரும் இல்லை என்று சொல்வதுதான் பொருத்தமாகும்.
கலைவாணர் என்றும் ஒரு புரியாத புதிராகவே இருக்கட்டும். அந்தப் புரியாத புதிர், என்றென்றும் மக்களின் வாழ்க்கைப் பாதையில் சுடர்விளக்காக ஒளி வீசட்டும்.
வாழ்க கலைவாணர்!
வாழ்க கலைவாணர் பண்பு!

- vikatan article

No comments:

Post a Comment