Saturday, June 21, 2014

உணவு யுத்தம்! - 10 - பாப்கார்னும் பாதிப்புகளும்!

பாப்கார்னும் பாதிப்புகளும்!
 ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பே பெரு நாட்டு மக்கள் சோள ரகத்தைச் சாப்பிட்டு வந்திருக்கின்றனர். மத்திய மெக்ஸிகோவில் உள்ள 'பெத்கேரே’ என்ற இடத்தில் இருந்து 5,600 வருடங்களுக்கு முன் உபயோகிக்கப்பட்ட சோளம் கிடைத்திருக்கிறது. 16 அல்லது 17-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலனியர் மூலமே இந்தச் சோளம் அமெரிக்காவுக்கு அறிமுகமானது. இன்று அதிகம் மக்காச்சோளம் விளையும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.
ஆரம்ப காலங்களில் ஆடு மாடுகளுக்கான பிரதான உணவாகக் கருதப்பட்ட மக்காச்சோளம், இன்று உலகின் முக்கிய தானியங்களில் ஒன்றாக, பெரிய சந்தையை உருவாக்கியிருக்கிறது. கோழிப் பண்ணைகளில் தீவனமாக மக்காச்சோளம் இன்றும் அதிகமாகப் பயன்படுத்தபடுகிறது.
பாப்கார்ன் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. காரணம், அதில் நார்ச்சத்துகள் அதிகம். குறைவான கலோரி உள்ள ஆரோக்கிய உணவு. அத்துடன், வைட்டமின்களும் மினரல்களும் இணைந்தவை என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு பாக்கெட் வெண்ணெய் தடவி பொரித்த சோளப்பொரியில் 1,261 கலோரி உள்ளது. இதில் 79 கிராம் கொழுப்பும் 1,300 மில்லி கிராம் சோடியம் உப்பும் உள்ளன.
ஆனால், அதை உப்பும் வெண்ணெய்யும் மசாலாவும் சேர்த்து மெஷினில் பொரித்து ரசாயன சுவையூட்டிகளைச் சேர்த்து சாப்பிடும்போது, அது கெடுதலான உணவாக மாறிவிடுகிறது. குறிப்பாக, சுவையூட்டுவதற்காக அதில் சேர்க்கப்படும் டை-அசிட்டால் தான் பாப்கார்னின் மணத்துக்கு முக்கிய காரணம். இந்த மணம் நுரையீரல் ஒவ்வாமையை உண்டுபண்ணக் கூடியது. தொடர்ந்து பாப்கார்ன் சாப்பிடுகிறவர்களுக்கு, நுரையீரல் நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள்.
பெங்களூரில் உள்ள மல்டிப்ளெக்ஸ் ஒன்றில் பாப்கார்ன் விற்பனையகம் வைத்திருக்கும் ராஜ்பன் என்பவர், தனது வருமானம் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறவரின் வருமானத்தைவிட இரு மடங்கு அதிகம் என்கிறார்.
'ஒரு நாளைக்குச் சராசரியாக 1,500 பேர் சினிமா பார்க்க வருகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், அதில் 1,400 பேர் பாப்கார்ன் மற்றும குளிர்பானங்கள் வாங்குகின்றனர். ஒரு காம்போ பேக்கின் விலை 250 ரூபாய் என்றால், எங்கள் ஒருநாள் வருமானம் 3.5 லட்சம். எல்லா செலவுகளும் போக ஆண்டுக்கு எப்படியும் 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை சம்பாதிக்கிறேன்’ என்கிறார்.
இந்திய சினிமா தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் பாப்கார்ன் விநியோகத்தில் 90 சதவிகிதம் அமெரிக்க கம்பெனிகளுடையது. இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் தங்களின் இந்திய நிறுவனங்கள் துணையுடன் ஆயிரம் கோடிக்கும் மேல் விற்பனை செய்கின்றன.
பாப்கார்ன் சந்தையின் அபரிமித வளர்ச்சியின் காரணமாக 2015-ல் 2,034 கோடி ரூபாய்க்கு பாப்கார்ன் விற்பனையாகும் எனக் கணக்கிட்டிருக்கின்றனர்.
ரூபாய் 120-க்கு விற்கப்படும் ஒரு பாக்கெட் பாப்கார்ன் தயாரிக்க ஆகும் செலவு, ஒரு ரூபாய் 80 காசு. விற்பனையாளர் கமிஷன், போக்குவரத்து, விளம்பரம், இத்யாதி என அத்தனையும் சேர்த்துக்கொண்டாலும் ரூ.10-க்குள்தான் வரும் என்றால், ஒரு பாக்கெட் விற்பனையில் ரூ.110 லாபம். இவ்வளவு கொள்ளை லாபம் வேறு எந்தத் தொழிலிலும் கிடையாது.
அதே நேரம், மக்காச்சோளம் விவசாயம் செய்யும் விவசாயிக்கு ஒரு கிலோவுக்குக் கிடைக்கும் விலை ரூ.20 மட்டுமே. அதுவும், அமெரிக்கா மற்றும் அர்ஜென்டினாவில் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி ஆவதால், உள்ளூர் சந்தையில் விலை சரிந்துவிடுகிறது.
நாம் சாப்பிடும் பாப்கார்னால் உண்மையான லாபம் யாருக்கு என்றால், அமெரிக்க நிறுவனங்களுக்குத்தான். ஆகவே, அவர்கள் பாப்கார்ன் சந்தையைப் பெரிதுபடுத்த எல்லாவிதமான விளம்பர உத்திகளையும் பயன்படுத்துகின்றனர்.
வீடுகளிலும் சாலையோரங்களிலும் மட்டுமே தயாரிக்கப்பட்டு சாப்பிடப்பட்டு வந்த சோளப்பொரி பரவலானது, பாப்கார்ன் இயந்திரத்தின் வருகையால்தான். 1892-ம் ஆண்டு, சார்லஸ் கிரேடர் என்ற அமெரிக்கர், பாப்கார்னைத் தயாரிக்க நீராவியால் இயங்கும் இயந்திரத்தைக் கொண்ட தள்ளுவண்டியை வடிவமைத்தார். அதன் தொடர்ச்சியாக, பாப்கார்ன் இயந்திரங்களை விற்க ஆரம்பித்தார். இன்று வரை இவரது குடும்பத்தினரே அதிக அளவில் பாப்கார்ன் மெஷினை விற்றுவருகின்றனர்.
சீனாவில், நாம் அரிசியைப் பொரிப்பதுபோல மூடிவைத்த பாத்திரத்துக்குள் சோளத்தைப் போட்டு பொரிக்கும் முறையிருக்கிறது. சீனர்களும் பாப்கார்னை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.
ஜப்பானில் 15-க்கும் மேற்பட்ட ருசிகளில் பாப்கார்ன் விற்கப்படுகிறது. ஆனால், வீதியில் நடந்துகொண்டே பாப்கார்ன் சாப்பிடுவதை ஜப்பானியர்கள் விரும்புவது இல்லை. தீம்பார்க் போன்றவற்றினுள் செல்லும்போது கழுத்தில் தொங்குமாறு அமைக்கப்பட்ட பாப்கார்ன் டின்களை வாங்கி மாட்டிக்கொள்கிறார்கள். பசிக்கும்போதெல்லாம் சாப்பிடுகிறார்கள்.
1914-ல்தான் பிராண்டெட் பாப்கார்ன்கள் அறிமுகமாகின. ஜாலி டைம் எனப்படும் பாப்கார்ன்தான் முதன்முறையாக விற்பனைக்கு வந்த பிராண்டெட் பாப்கார்ன். 1945-ல் மைக்ரோவேவ் மூலம் சோளத்தைப் பொரிக்கலாம் என்ற முறை உருவாக்கப்பட்ட பிறகு, இன்று வரை அதுவே பிரதானமாகக் கையாளப்பட்டு வருகிறது.
1940-களில் அமெரிக்காவில் பாப்கார்ன் சந்தை குறைய ஆரம்பித்தது. விற்பனையை அதிகரிக்க பாப்கார்ன் நிறுவனங்கள் குளிர்பான நிறுவனங்களுடன் கைகோத்துக்கொண்டு விளம்பரம் செய்யத் துவங்கின. அப்படித்தான் குளிர்பானமும் பாப்கார்னும் தியேட்டரில் இணைந்து விற்பனையாவது துவங்கியது. அன்று துவங்கிய சந்தை, இன்று விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து நிற்கிறது.
பாப்கார்ன் பெற்றுள்ள பெரிய வரவேற்பைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஜனவரி 19-ம் தேதியை தேசிய பாப்கார்ன் தினமாக அறிவித்துள்ளது அமெரிக்கப் பாப்கார்ன் போர்டு.
பாப்கார்ன் மட்டுமல்ல... தியேட்டரில் விற்பனையாகும் சமோசா, போண்டா போன்ற பெரும்பான்மை உணவு வகைகள் தரமற்றவையே. அவை எப்போது தயாரிக்கப்பட்டன என்பதற்கு எந்தக் குறிப்பும் கிடையாது. காலையில் செய்து மீதமான உணவுப்பொருட்களை, திரும்பத் திரும்பச் சூடுபடுத்தி விற்றுவருகிறார்கள் என்பதே பெரும்பாலும் நிஜம்.
தியேட்டரை ஒரு உணவு மேஜையாக மாற்றியதில் இருந்து மீள்வதற்கு என்னதான் தீர்வு? இடைவேளை இல்லாமல் சினிமா தொடர்வதே! அமெரிக்காவில் அப்படித்தான் சினிமா திரையிடப்படுகிறது. ஆனால், இடைவேளை இல்லாமல் நம்மால் சினிமா பார்க்க முடியாது. ஆங்கிலப் படங்களுக்குக்கூட நாமாக ஓர் இடத்தில் இடைவேளை விட்டுக்கொள்கிறோம்.
அமீர் கான் தயாரிப்பில் வெளியான ஹிந்தி படமான 'தோபி காட்’ படம் இடைவேளை இல்லாமல் திரையிடப்பட்டது. இதை ஏற்க மறுத்து அரங்கில் கூச்சலிட்டனர். சில அரங்குகளில் தாங்களே எழுந்து வெளியே சென்று பாப்கார்ன் வாங்கிச் சாப்பிடத் துவங்கிவிட்டனர். இந்தப் பிரச்னை காரணமாகவே இன்று வரை இரண்டு மணி நேரம் சினிமா எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. சினிமாவை அடுத்தகட்டம் நோக்கி வளரவிடாமல் தடுத்திருப்பதில் பாப்கார்ன் போன்ற இடைவேளை உணவுகளுக்கும் ஒரு முக்கியப் பங்கு இருக்கிறது.
மக்காச்சோள உற்பத்தியில் உலகில் ஐந்தாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. அமெரிக்காவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. இது சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் வெள்ளை சோளமும் சிவப்பு சோளமும் பாரம்பரியமாகப் பயிரிடப்பட்டு வருகின்றன. சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இவை சர்க்கரை நோயில் இருந்து உடலைக் காப்பாற்றக் கூடியவை.
அமெரிக்காவில் பாப்கார்ன் கலாசாரம் எப்படி பரவியது என்பது குறித்து ஆண்ட்ரூ ஸ்மித், 'பாப்டு கல்சர்’ என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த நூலில் பாப்கார்ன் வரலாறும், சமகால உண்மைகளும் மிகத்தெளிவாக எடுத்துக்காட்டப்படுகின்றன.
இன்றுள்ள மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் பற்றி இவ்வளவு கவலைப்படுகிறோம். ஆனால், ஐரோப்பிய நாடுகளில் 'கோல்டு க்ளாஸ் ஸீட்டிங்’ என்ற பெயரில் தலையணை, போர்வை, இலவச பாப்கார்ன் மற்றும் ஒயின்கள் வழங்கப்படும் ஆடம்பர திரையரங்குகள் இப்போது அறிமுகமாகி வருகின்றன.
என்ன வகையான படம் என்பதற்கு ஏற்றார்போல உணவு வகைகளை வழங்க இருக்கிறோம் என்றும் கூறுகிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய சினிமா அரங்குகளில் இதுபோன்ற உணவுடன் கூடிய படுக்கைகள் கொண்ட வசதி உருவாக்கப்பட்டுவிடும்.
முன்பு கிராமங்களில் உள்ள டூரிங் டாக்கீஸ்களில் இரவு காட்சிக்கு வருபவர்கள் பசியோடு இருப்பார்களே என, அருகிலேயே ஒரு எளிய பரோட்டா கடையை வைத்திருப்பார்கள். தியேட்டரின் ஒரு வாசல் வழியாக ஹோட்டலுக்குள் போய்விடலாம். அதை நகரவாசிகள், 'இது எல்லாம் சினிமா தியேட்டரா?’ என்று கேலிசெய்தார்கள். இன்றைக்கு சிறிய நகரங்களில் படம் முடியும் வரை வாயை மெல்லும் பழக்கம் இன்னமும் வரவில்லை.
சினிமா தியேட்டர்கள், ரயில்வே ஸ்டேஷன், பேருந்து நிலையம், ஷாப்பிங் மால் போன்ற இடங்களில் விற்கப்படும் ஸ்நாக்ஸ், கூல்டிரிங்ஸ், தண்ணீர் பாட்டில், உணவு வகைகள் குறித்த புகார்களைத் தெரிவிக்க நுகர்வோர் அமைப்பு 24 மணி நேரமும் இயங்கும் தொலைபேசி (044-66334346) எண் கொடுத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி நுகர்வோர் தங்களின் புகார்களைப் பதிவு செய்தல் அவசியம்.
ஜெர்மனியில் இப்போது பாப்கார்ன் கலாசாரத்துக்கு எதிராக, 'தியேட்டரில் பாப்கார்ன் விற்க மாட்டோம்’ என்ற ஓர் இயக்கத்தை உருவாக்கியிருக்கின்றனர். குறிப்பாக, கினோ சினிமா என்ற அரங்கில் பாப்கார்ன் விற்கப்படுவது இல்லை என்ற அறிவிப்பு முகப்பிலே வைக்கப்பட்டிருக்கிறது.
வியாபார தந்திரங்களில் மயங்கி... சினிமா மயக்கத்தில் கிரங்கி... பாப்கார்ன் போன்ற விஷயங்களுக்கு அடிமை ஆவது உடல் ரீதியாக பெரிய உபாதையை உருவாக்கிவிடும் என்பதே பெரும்பாலானவர்கள் கருத்து!


- Vikatan

உணவு யுத்தம்! - 9 - தியேட்டரும் பாப்கார்னும்!


திருவிளையாடல் பார்த்திருக்கிறீர்கள்தானே! அதில் தருமி சிவனிடம் நிறைய கேள்விகள் கேட்பார். தருமி கேட்கத் தவறிய கேள்விகள் எப்போதும் இருக்கின்றன. அப்படியான சில கேள்விகளாக இதைச் சொல்லலாம்.
பிரிக்க முடியாதது என்னவோ?
தியேட்டரும் பாப்கார்னும்!
சேர்ந்தே இருப்பது?
பாப்கார்னும் கூல்டிரிங்ஸும்!
சேராமல் இருப்பது?
வயிறும் ஃபாஸ்ட் ஃபுட்டும்!
சொல்லக் கூடாதது?
பாப்கார்ன் விலை!
சொல்லக் கூடியது?
காசு கொடுத்து வயிற்றுவலியை வாங்கிய கதை!
பாப்கார்ன் என்பது?
பகல் கொள்ளை!
சினிமா தியேட்டரில் பாப்கார்ன் விற்பது எதனால்?
படம் நல்லா இல்லை என்பதை மறக்கடிக்க!
தருமியைப்போல நாம் எப்போதும் கேள்விகளை மட்டுமே வைத்திருக்கிறோம். யாரிடம் பதில் கேட்பது எனத் தெரியவில்லை. இன்று உணவின் பெயரால் பகிரங்கக் கொள்ளை நடைபெறும் முக்கிய இடம் திரையரங்கம்.
சென்னை ஷாப்பிங் மாலில் உள்ள மல்டிஃப்ளெக்ஸ் திரையரங்கு ஒன்றுக்குப் படம் பார்க்கப் போயிருந்தேன். டிக்கெட் கட்டணம் 120, உள்ளே போய் உட்கார்ந்த உடன் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டு ஊதா நிற சட்டை அணிந்த ஓர் இளைஞன் இரண்டு மெனு கார்டுகளை நீட்டினார்.
பீட்சா, வெஜ் ரோல், பர்கர், ஃபிரெஞ்ச் ஃபிரைஸ், பேல்பூரி, பானிபூரி, நக்கட்ஸ் என முப்பது, நாற்பது உணவு வகைகள். தவறிப்போய் ஏதாவது ஹோட்டலுக்குள் நுழைந்துவிட்டேனோ என நினைத்தபடியே திரும்பிப் பார்த்தேன்.
அருகில் உட்கார்ந்திருந்த ஒரு குடும்பம் கடகடவென ஆர்டர் கொடுக்க ஆரம்பித்தனர். படம் துவங்கிய அரை மணி நேரத்தில் பெரிய தட்டு நிறைய சான்ட்விச், பீட்சா, வெஜ் ரோல் என வந்து சேர்ந்தது. கூடவே, இரண்டு அரை லிட்டர் கூல்டிரிங்ஸ் பாட்டில், டைனிங் டேபிள் இல்லாத குறை மட்டுமே. அவர்கள் இடைவேளை வரை சாப்பிட்டுக்கொண்டே படம் பார்த்தார்கள். பக்கத்தில் உட்கார்ந்திருந்த இன்னொருவர் அவர்கள் சாப்பிடுவதை எச்சில் ஒழுகப் பார்த்துக்கொண்டே இருந்தார்.
சினிமா தியேட்டரா அல்லது ரெஸ்டாரன்ட் உள்ளே சினிமா போடுகிறார்களா எனத் தெரியாமல் தடுமாறிப்போனேன். இடைவேளை விடப்பட்டது. வெளியே பாப்கார்ன் வாங்க நீண்ட வரிசை. ஒரு பாப்கார்ன் விலை ரூ.80-ல் துவங்கி 240 வரை லார்ஜ் சைஸ், எக்செல், டபுள் எக்செல் என விரிந்துகொண்டே போனது.
அரை கிலோ அளவு பாப்கார்ன் பாக்கெட் ஒன்றை சுமந்துகொண்டு போனது அந்தக் குடும்பம். கூடவே நான்கு குளிர்பானங்கள், சமோசா, பப்ஸ், சாஷ் பாக்கெட்கள், சாக்லேட் மபின், இத்யாதிகள்.
ஒரு காபி குடிக்கலாம் என்று கவுன்ட்டரில் இருந்த பெண்ணிடம் கேட்டேன். 75 ரூபாய் என்றார். என்ன காபி எனக் கேட்டபோது ரெடிமேட் பால் படவுரைக் கொண்டு தயாரிக்கப்படும் மெஷின் காபி எனச் சொன்னார். குடிக்க முடியாத குமட்டல் காபியின் விலை 75 என்பதால் அது வேண்டாம் எனச் சொல்லிவிட்டு, தண்ணீர் பாட்டில் தாருங்கள் என்றேன். ஒரு பாட்டில் தண்ணீர் 50 ரூபாய் என்றார். வெளியே 10 ரூபாய்தானே என்றபோது, தியேட்டரில் 50 ரூபாய்தான் என்றார். இதைப்பற்றிப் புகார் தெரிவிக்க விரும்புகிறேன் என்றேன். தியேட்டர் மேனேஜரிடம் போய்ச் சொல்லுங்கள். இவை தனியார் கடைகள். எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்றார் அந்த விற்பனை பெண்.
பொதுக் குடிநீர் எங்கே இருக்கிறது எனக் கேட்டேன். அப்படி ஒன்று கிடையாது. கடையில் விற்பதை மட்டுமே வாங்க வேண்டும் என்றார். தினமும் பல்லாயிரம் பேர் வந்துபோகிற அரங்கில் குடிநீர் கிடையாது. இதில் நாமாக வீட்டில் இருந்து எந்த உணவுப்பொருளையும் கொண்டுபோய்விடக் கூடாது என்பதற்காக மெட்டல் டிடெக்டர் சகிதமாக ஒரு கும்பல் நுழைவாயிலில் நம்மை நிறுத்திவைத்துத் தடவி தடவி சோதிக்கின்றனர்.
இந்தச் சோதனையில் ஒரு பெரியவரிடம் திருப்பதி லட்டு சிக்கிவிட்டது. கோயிலுக்குப் போய்விட்டு வந்தவர், அப்படியே சினிமா பார்க்க நுழைந்திருக்கிறார். அதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். சாமி பிரசாதம் என அவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். அனுமதிக்கவே இல்லை. லட்டை தனியே எடுத்து அவருக்கு ஒரு ரசீது சீட்டு போட்டுக் கொடுத்து, படம் முடியும்போது பெற்றுக்கொள்ளுங்கள் என்று உள்ளேவிட்டார்கள். இந்த விஷயத்தில் பிரதமர் அலுவலகத்தில்கூட இவ்வளவு பாதுகாப்பு கெடுபிடி இருக்குமா எனத் தெரியாது.
சினிமா தியேட்டர் என்பது படம் பார்க்கும் இடம் இல்லை. அது ஒரு சந்தைக்கூடம். அங்கே படமும் பார்க்கலாம் என்பதே இன்றைய நிஜம். இலை போட்டு முழு சாப்பாடு போடவில்லை. அதுவும் விரைவில் நடந்தேறிவிடக் கூடும்.
ஒரு நாடகம் பார்க்கும்போதோ, இசை நிகழ்ச்சி பார்க்கும்போதோ இப்படி வாயில் எதையாவது மென்றுகொண்டே ரசிப்பதில்லையே... சினிமா பார்க்கும்போது மட்டும் ஏன் எதையாவது மென்றுகொண்டேயிருக்க ஆசைப்படுகிறோம்?
சர்க்கஸ் நிகழ்ச்சியில் ஒரு நிகழ்வுக்கும் மற்றொரு நிகழ்வுக்கும் இடையில் சற்று இடைவெளி இருக்கும். அதை நிரப்புவதற்கே பாப்கார்ன் விற்பனை உதவியது. அந்தப் பழக்கம்தான் சினிமா பார்க்கும்போதும் தொடர்கிறது என்கிறார் உணவியல் அறிஞர் மெக்ரெயன்.
எனக்கென்னவோ நம் ஊரில் எந்த இடத்திலும் எதையும சாப்பிடுவதற்கு ஒரு காரணமும் தேவை இல்லை என்றே தோன்றுகிறது. கண்டதையும் சாப்பிடத் தயாராக இருப்பதுதானே நமது பண்பாடு. இல்லாவிட்டால் ராத்திரி ஒன்றரை மணிக்கு மிட்நைட் ஹோட்டலில் இவ்வளவு கூட்டம் அலைமோதுமா என்ன?
ஒருமுறை சாலையோர உணவகம் ஒன்றுக்குச் சாப்பிடப் போயிருந்தேன். கடையை எடுத்துவைத்துவிட்டார்கள். சூடாக இருந்த கல்லில் தோசை போட்டுத் தருகிறேன்... உட்காருங்கள் என்றார் உரிமையாளர். பரிமாறுகிறவன் எரிச்சலான குரலில் சொன்னான். 'என்னா சார் மனுசங்க... விடிஞ்சு எழுந்ததில் இருந்து தூங்கப் போறவரைக்கும் எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்காங்க. நல்லவேளை தூக்கத்துல சாப்பிடுறது இல்லை. இப்படியே போனா, உலகம் தாங்காது. ஒருத்தருக்கும் வாயைக் கட்டணும்னு நினைப்பே கிடையாது.’
அவன் சொன்ன விதம் சிரிப்பாக வந்தது. ஆனால், சொன்ன விஷயம் உண்மையானது. சாவு வீட்டுக்குப் போனால்கூட நமக்கு வகை வகையான சாப்பாடு வேண்டியிருக்கிறது. ஏன் இப்படி நாக்கின் அடிமைகளாக மாறியிருக்கிறோம். இந்தப் பழக்கத்தின் ஒரு பகுதிதான் தியேட்டருக்குள் அள்ளி அப்பிக்கொள்வது.
எனது பள்ளி வயதில் சினிமா தியேட்டரில் இடைவேளையின்போது முறுக்கு, கடலை மிட்டாய் விற்பவர்களைக் கண்டிருக்கிறேன். அவர்களின் குரலே வசீகரமாக இருக்கும். முறுக்கின் விலை 5 பைசா, கடலை மிட்டாய் 5 பைசா. தவிர தேங்காய் பர்பி, வேர்க்கடலை, பால் ஐஸ், சேமியா ஐஸ் விற்பார்கள். சோடா கலர் விற்பதும் உண்டு. சினிமா பார்க்க வருபவர்களில் பாதி பேர் எதுவும் வாங்கிச் சாப்பிட மாட்டார்கள். அது கௌரவக் குறைச்சல் என நினைப்பார்கள்.
பாப்கார்ன் விற்பது 80-களின் பிற்பகுதியில்தான் திரையரங்குகளில் துவங்கியது. அப்போதும்கூட சோளப்பொரியை மனுசன் தின்பானா என யாரும் வாங்க மாட்டார்கள். இன்றைக்கு பாப்கார்ன் விற்கப்படாத தியேட்டர்களே இல்லை. ஒரு ஆண்டுக்கு 1,235 கோடி ரூபாய்களுக்கு இந்தியாவில் பாப்கார்ன் விற்பனை ஆகிறது. இதில் 75 சதவிகிதம் சினிமா தியேட்டர்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
தியேட்டரில் எப்படி பாப்கார்ன் முக்கிய இடம் பிடித்தது... யார் இதை அறிமுகம் செய்து வைத்தவர்கள்? இந்திய சினிமா தியேட்டர்களில் பாப்கார்ன் விற்க துவங்கியது அமெரிக்கப் பாதிப்பில்தான். 1929-ல் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியிருந்த அமெரிக்காவில், உணவின் விலை மிக அதிகமாக இருந்தது. ஆகவே, பசியைத் தாங்கிக்கொள்ள வீதியில் மலிவு விலையில் விற்கப்படும் பாப்கார்னை வாங்கி, தியேட்டருக்குள் கொண்டுபோய் ரகசியமாக சாப்பிட ஆரம்பித்தனர். வீதிகளில் தள்ளுவண்டியில் விற்கப்படும் பாப்கார்ன் விற்பனை அதிகமாகியது.
பொருளாதாரச் சரிவில் இருந்த தியேட்டர்கள் பார்வையாளர்களைத் திருப்திப்படுத்த பாப்கார்ன் விற்பனையை தியேட்டரினுள் அனுமதித்தன. குறைந்த விலையில் நிறைய பாப்கார்ன் கிடைக்கிறது என்பதால், மக்களும் பசியைப் போக்கியபடி சினிமா பார்க்கத் துவங்கினர். ஒருவகையில் இது ஒரு பஞ்ச காலத்து உணவுபோலத்தான் அறிமுகமானது. 1927-ம் வருடம் நியூயார்கின் ரோஸ் தியேட்டரில்தான் பாப்கார்னின் சினிமா பிரவேசம் அறிமுகமானது.
அதற்கு முன்பு வரை சினிமா தியேட்டர் என்பது உயர்குடியினர் வரும் இடம் என்பதால், அங்கே மலிவான உணவுப்பொருட்கள் விற்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்த மாற்றமே பாப்கார்ன் தியேட்டருக்குள் நுழைந்த கதை.
இதுபோலவே இரண்டாம் உலகப்போரின்போது சர்க்கரைக்கு ரேஷன் முறை கொண்டுவரப்பட்டது. ஆகவே, இனிப்பு மிட்டாய்கள் தயாரிப்பது குறைந்துபோனது. இந்தச் சந்தையைத் தனதாக்கிக் கொண்டது பாப்கார்ன். யுத்தகாலத்தில் அதன் விற்பனை ஆறு மடங்கு அதிகமானது.
பாப்கார்ன் எனப்படுவது ஒரு சோள ரகம். அதன் பூர்வீகம் மெக்சிகோ. அங்கு வாழ்ந்துவந்த அஸ்டெக் பழங்குடி மக்கள் மக்காச்சோளத்தை உணவாகக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். சோளக்கதிர்களை மாலையாகக் கட்டிக்கொண்டு ஆடுவதும் அவர்களது வழக்கம். ஸ்பானிய காலனிய மயமாக்கம் காரணமாக அஸ்டெக் பழங்குடியினர்கள் அழித்து ஒழிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்த உணவு முறைகளில் சில காலனிய நாடுகளுக்குப் பரவத் துவங்கின. அப்படிப் பரவியதுதான் மக்காச்சோளமும்.
- Vikatan

உணவு யுத்தம்! - 8

சர்பத்... பழம்.. மோர்!
பிரமாண்டமான முதலீடு, விரிவான வலைப்பின்னல் போன்ற விநியோகம் அசுரத்தனமான பகட்டு விளம்பரங்கள்... இவை காரணமாக இந்தியாவில் இந்த நிறுவனங்கள் வேரூன்றி விட்டன. இன்று குளிர்பான சந்தையில் 93 சதவிகிதம் அமெரிக்க பானங்களிடம் உள்ளன. சந்தையின் மதிப்பு 5 ஆயிரம் கோடி ரூபாய்.
உலகம் முழுவதும் குளிர்பானங்களை அதிகம் குடிப்பதன் காரணமாக ஆண்டுக்கு 1,80,000 பேர் இறந்துபோகிறார்கள் என்கிறது அமெரிக்க மருத்துவக் கழக அறிக்கை. இதில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 1,33,000. இதய பாதிப்பு காரணமாக இறந்துபோகிறவர்கள் 44,000 பேர். ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளில் 6.000 பேர் இறந்துபோகிறார்கள்.
உலகிலே அதிக குளிர்பானங்களைக் குடிக்கும் நாடு மெக்சிகோ. குறைவாகக் குடிப்பவர்கள் ஜப்பானியர்கள்.
செயற்கை குளிர்பானங்கள் அறிமுகமாவதற்கு முன்பு வரை தமிழகத்தில் புகழ்பெற்றிருந்தது சர்பத். பெட்டிக் கடைகள்தோறும் சர்பத் கிடைக்கும். வீட்டிலும் சர்பத் தயாரிப்பார்கள். சர்பத், எலுமிச்சை சாறில் தயாரிக்கப்படுவது. அதிலும் குறிப்பாக நன்னாரி சாறு சேர்த்து உருவாக்கப்படும் சர்பத் குளிர்ச்சியானது.
நன்னாரி என்றால் நல்ல மணமுடையது என்று பொருள். இதை பாதாள மூலிகை என்றும் சொல்கிறார்கள். நன்னாரி ஒரு கொடி இனம். இது ஒரு மருத்துவ மூலிகை. நன்னாரியில் சீமை நன்னாரி, பெருநன்னாரி, கருநன்னாரி எனப் பலவகை உண்டு. உடல் உஷ்ணம் தணிய நன்னாரி வேரை மண் பானை நீரில் போட்டு வைத்து குடிநீராகப் பயன்படுத்துவது வழக்கம்.
மொகலாய சக்ரவர்த்தி பாபர் வழியாகத்தான் சர்பத் இந்தியாவுக்கு வந்தது என்கிறார்கள். பாபர் நாமாவில் இதுபற்றிய குறிப்பு காணப்படுகிறது. சர்பத் என்பது அரபுச் சொல்லான சர்பா என்பதில் இருந்தே உருவானது. அதன் பொருள் குடிப்பதற்கானது என்பதாகும்.
இந்தியாவெங்கும் மொகலாயர்களே சர்பத்தை அறிமுகம் செய்திருக்கிறார்கள். சர்பத் பெர்ஷியாவில் புகழ்பெற்ற பானம். குறிப்பாக துருக்கியிலும் ஈரானிலும் உணவுக்கு முன்பாகக் குடிக்கப்படும் பானமாக சர்பத் இன்றும் இருந்து வருகிறது.
மாமன்னர் ஜஹாங்கீர் ஃபலூடா சர்பத் குடிப்பதை விரும்பக் கூடியவர். இந்த சர்பத் பாலில் உருவாக்கப்படுவதாகும். ஆப்பிள், பேரி, பீச், திராட்சை, மாம்பழம் போன்ற பழச்சாறுகள், ரோஜா இதழ்கள், மூலிகைகளைக் கொண்டும் சர்பத் தயாரிக்கப்படுவது வழக்கம். மொகலாயர்கள் காலத்தில் 134 வகை சர்பத், அவர்களது அரண்மனையில் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது.
இதுபோலவே கோடைக்காலத்தில் குடிநீருடன் வெட்டிவேர் சேர்த்துப் போடப்படுவதால் குளிர்ச்சியும் மணமுமான சுவைநீர் கிடைக்கிறது. வெட்டிவேர் என்பது ஒரு வகை புல். இதன் வேர் மணத்துடன் உள்ளது. இந்த வெட்டி வேர் வெப்பத்தை அகற்றி உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. மண் அரிப்பைத் தடுக்கவும் நீரின் கடினத் தன்மையைப் போக்கவும் வெட்டி வேர் பயன்படுகிறது.
கரும்புச்சாறு எனும் கருப்பஞ்சாறு பாரம்பரியமாக அருந்தப்பட்டுவரும் பானம். இது கோடையில் தாகத்தைத் தணித்துச் சூட்டைக் குறைப்பதுடன் சிறுநீரகக் கற்களை வெளியேற்றுகிறது.
இளநீர், இயற்கையிலேயே உருவான தாது உப்புகள் அதிகம் உள்ள பானம். பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது என்கிறார்கள்.
வட இந்தியாவில் புகழ்பெற்ற குளிர்பானம் லஸ்ஸி. இது, பஞ்சாபியர்களின் பானம். தயிரில் இனிப்பும் பழங்களும் சேர்த்து அடித்துத் தயாரிக்கபடும் இந்த பானம் கோடைக்கு ஏற்றதாகும்.
லஸ்ஸி விற்பனை அதிகமான காலத்தில் கையால் லஸ்ஸி தயாரிக்க முடியவில்லை என்று துணி துவைக்கும் வாஷிங்மெஷினைக் கொண்டு லஸ்ஸி தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தனர். இதனால் பஞ்சாபில் வாஷிங்மெஷின் எண்ணிக்கை பெருகியது என்பார்கள். அந்த அளவு லஸ்ஸி பிரபலமான குளிர்பானமாகும்.
ஜல்ஜீரா எனப்படும் சீரகம் கலந்த தண்ணீரும் கோடையில் உஷ்ணத்தைத் தணிக்கக் கூடியது. ஒடிசாவில் உள்ள ஆதிவாசி மக்கள் ராகியில் செய்த மண்டியபெஜ் என்ற பானத்தைக் குடிக்கின்றனர். இது ஊறவைத்து நொதித்த ராகி கஞ்சியாகும். இதைக் குடிப்பதன் வழியே உடல் சூடு தணிவதுடன் புத்துணர்வு உண்டாகும் என்றும் கூறுகிறார்கள். கோராபுட் பகுதியில் உள்ள ஆதிவாசிகளிடம் இந்தப் பழக்கம் காணப்படுகிறது.
கோடை உஷ்ணத்தைத் தணித்துக் கொள்வதற்காக மதுரையில் கிடைப்பது ஜிகர்தண்டா. இது கடற்பாசியைக் கொண்டு தயாரிக்கப்படுவது. அத்துடன் ஜவ்வரிசி, பால், பாதம்பிசின், நன்னாரி அல்லது ரோஸ் சிரப் சேர்த்து தயாரிக்கின்றனர். ஜிகர் என்றால் இதயம், தண்டா என்றால் குளிர்ச்சி. ஆகவே இதயத்தைக் குளிர்விக்கும் பானம் என்கிறார்கள் மதுரைவாசிகள். 'மொகலாயர்களின் திருமணத்தில் அருந்தப்படும் இந்த பானம் பற்றி அயினி அக்பரி நூலில் குறிப்பு உள்ளது. தண்டா என்ற சொல் தண்டல் என்ற அரபிச் சொல்லில் இருந்து உருவானது, அதற்கு பெயர் கடலோடி அல்லது படகோட்டி. ஆகவே கடற்பாசியில் இருந்து தயாரிக்கப்படும் பானம் உடல் வலிமை தேவைப்படும் படகோட்டிகளுக்கானது. தண்டா என்றால் கோல் அல்லது கம்பு என்றும் பொருள். குறிப்பாக பீமனின் கையில் உள்ள கோலைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் இன்றும் ஜிகர்தண்டா கடைகளில் பீமன் உருவம் வரையப்பட்டிருக்கிறது’ என்கிறார் வரலாற்று ஆய்வாளர் ஆர்.வெங்கட்ராமன்.
குளிர்பானங்களைப்போலவே அதிக விற்பனையாகும் இன்னொரு பொருள் ஐஸ்க்ரீம். இரண்டு வயது குழந்தை முதல் 90 வயது முதியவர் வரை அத்தனை பேரும் ஐஸ்க்ரீம் சாப்பிட ஆசைப்படுகின்றனர். இந்திய ஐஸ்க்ரீம் சந்தையின் மார்க்கெட் 2,000 கோடி. இதில் 40 சதவிகிதம் பன்னாட்டு நிறுவனங்கள் வசமுள்ளது. இத்தாலி, ஃபிரான்ஸ், அமெரிக்கா, கனடாவின் ஐஸ்க்ரீம் கம்பெனிகள் இந்திய ஐஸ்க்ரீம் சந்தையில் வலுவாக கால் ஊன்றியுள்ளன.
ஐஸ்க்ரீம் சாப்பிடுகிற பழக்கம் சீனாவில் இருந்தே தொடங்கியது என்கின்றனர். தாங் வம்ச ஆட்சி காலத்தில் பசு, எருமை மற்றும் ஆட்டுப் பாலில் தயாரிக்கப்பட்ட தயிரை கற்பூரம் சேர்த்து குளிரவைத்து சாப்பிட்டிருக்கிறார்கள். தாங் அரசனிடம் இந்தக் குளிர் தயிரை உருவாக்க 94 பணியாளர்கள் இருந்தனர் என்கிறது சீன வரலாறு. ரெஃப்ரிஜிரேட்டர் எனும் குளிர்சாதனப் பெட்டி அறிமுகமாகாத காலம் என்பதால் உணவைக் குளிர வைப்பதற்கு ஐஸ்கட்டியோடு உப்பு சேர்த்து வைத்திருக்கிறார்கள்.
1660 வரை ஐரோப்பியர்கள் ஐஸ்க்ரீமை அறிந்திருக்கவில்லை. நேபிள் நகரில் குளிர வைத்து உறைந்த பால் 1664-ல் அறிமுகமானது. ஆரம்ப காலத்தில் மன்னர்கள் மட்டுமே உண்ணும் அரிய உணவாக ஐஸ்க்ரீம் கருதப் பட்டது, 1800-களில் ஃபிரான்ஸில் ஐஸ்க்ரீம் தயாரிக்கப்பட்டது.
1843-ல் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் அறிமுகமாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. ஐஸ்க்ரீம் தயாரிப்பதற்கு ஐஸ் வேண்டும் அல்லவா? அது கனடா, அமெரிக்கா, நார்வே போன்ற நாடுகளில் இருந்து பாளம் பாளமாக வெட்டி எடுக்கப்பட்டு கப்பல் மூலம் உலக நாடுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அப்படித்தான் இந்தியாவுக்கும் ஐஸ் விற்பனைக்கு வந்து சேர்ந்தது.
சென்னையில் உள்ள ஐஸ் ஹவுஸ் அப்படி ஐஸ் பாளங்களைப் பாதுகாத்து வைக்கும் சேமிப்பறை. அந்தக் காலத்தில் ஒருவருக்கு ஐஸ் வேண்டும் என்றால் டாக்டரிடம் போய் மருந்துசீட்டு வாங்கிவர வேண்டும். பல் மருத்துவம் போன்ற மருத்துவக் காரணங்களுக்கு மட்டும்தான் ஐஸ் விநியோகம் செய்யப்பட்டது.
1866-ல் பாரீஸில் நடைபெற்ற விருந்து ஒன்றில் சீன அரசு பிரதிநிதிக்கு விசேஷமாக ஐஸ்க்ரீம் வழங்கப்பட்டது. எப்படி தெரியுமா, ஆம்லெட்டின் உள்ளே ஐஸ்க்ரீமை வைத்துப் பொரித்துத் தந்திருக்கிறார்கள். பொரித்த ஐஸ்க்ரீம் ஜெர்மன் சமையல்காரர்களின் கண்டுபிடிப்பாகும்.
ஐஸ்க்ரீம் தயாரிப்பதில் இத்தாலியர்களும் ஃபிரான்ஸ் நாட்டினரும் முன்னோடிகள். கோன் ஐஸ் அறிமுகம் செய்தவர்கள் அமெரிக்கர்கள்.
1919-ல் குச்சியில் செய்த ஐஸ்க்ரீமை அமெரிக்காவில் அறிமுகம் செய்தார்கள். அது பிரபலமாகி உலகெங்கும் குச்சி ஐஸ் சாப்பிடுவது பரவியது. ஐஸ்க்ரீமை பிரபலப்படுத்தியவை தள்ளுவண்டிகள், மற்றும் வேன்கள். ஐஸ்க்ரீமை வீதிவீதியாகக் கொண்டு போய் விற்ற தள்ளுவண்டிகள் காரணமாகவே குழந்தைகளின் விருப்ப உணவாக அது மாறியது.
ரஷ்யாவில் பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஐஸ்க்ரீம்களை மாமன்னர் பீட்டரும் அரசி கேத்ரீனும் விரும்பி சாப்பிட்டிருக்கிறார்கள். 19-ம் நூற்றாண்டில்தான் ரஷ்யாவுக்கு ஐஸ்க்ரீம் மெஷின் அறிமுகமானது.
தாகத்தைத் தணிப்பதற்கு நமது பாரம்பரிய பானங்களை அருந்தத் துவங்கினால், உடல்நலம் பாதுகாக்கப்படுவதுடன் பன்னாட்டு கொள்ளை தடுத்து நிறுத்தப்படவும் கூடும்.
ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ஐந்து பழங்களைச் சாப்பிடுங்கள் என்கிறது உலக ஆரோக்கிய நிறுவனம். பழக்கடையில் ஆப்பிள், கொய்யா, அன்னாசி, பப்பாளி, சப்போட்டா, அத்தி, செர்ரி, மங்குஸ்தான், கிவி, துரியன், க்ரீன் ஆப்பிள் என்று ஏதேதோ தேசங்களின் பழங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அநேகமாக வருடத்தின் சில மாதங்களில் மட்டுமே கிடைக்கும் என்றிருந்த பழங்கள் எதுவும் இப்போது இல்லை.
எல்லா பழங்களும் எப்போதும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதில் பெரும்பகுதி வணிக தந்திரங்களுக்கு உள்ளாகி ரசாயனம் கலந்து பழுக்க வைத்தவை, புகை போட்டவை என்கிறார்கள்.
இதில் ஸ்டிக்கர் ஒட்டிய ஆப்பிள்கள் வேறு. பழங்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டி விற்க வேண்டிய நிலைமை எப்படி வந்தது என்று ஒரு பழக்கடைக்காரரிடம் கேட்டேன். கடைக்காரர் சிரித்தபடியே, 'ஸ்டிக்கர் ஒட்டினால்தான் நிறைய பேர் வாங்குகிறார்கள். ஸ்டிக்கரை நாங்களே அச்சிடுகிறோம்’ என்றார்.
பழக்கடையில் உள்ள பழங்களில் எதை நுகர்ந்து பார்த்தபோதும் வாசனையே வருவது இல்லை. சிறிய துண்டுகளாக வெட்டிச் சாப்பிட்டுப் பார்த்தாலும் சுவை அறிய முடிவது இல்லை. காகிதத்தை சவைப்பதைப் போலவே இருக்கிறது.
கலப்படம் செய்யவே முடியாது என்று நினைத்திருந்த பழங்களில்தான் இன்று அதிகமான அளவு கலப்படமும் உடற்கேடு விளைவிக்கும் பொருட்களும் கலக்கப்படுகின்றன. அதிலும் காய்களாகப் பறிக்கப்பட்டு ரசாயனம் கலந்து பழங்களாக மாற்றப்படுவதே அதிகம்.
பெட்டிக் கடைகள்தோறும் தொங்கிக்கொண்டிருந்த நாட்டு வாழைப் பழங்களை கடந்த 20 ஆண்டுகளுக்குள் முற்றிலும் ஒழித்துவிட்டார்கள். இது திட்டமிட்ட சதி. ஒட்டு ரகங்கள்தான் விற்பனைக்குக் கிடைக்கின்றன. உடல் ஆரோக்கியத்துக்கான பழங்கள் என்பது போய் எந்தச் சூழ்நிலையிலும் இந்தப் பழங்களை சாப்பிட்டுவிடாமல், உடலைப் பாதுகாக்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது.
இயற்கையில் தாகத்தைத் தணிக்கும் ஆற்றல் தண்ணீருக்குத்தான் உள்ளது. ஆகவே, தினமும் மூன்றில் இருந்து ஐந்து லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். எத்தனை வண்ணங்களில் சுவைகளில் குளிர்பானங்கள் சந்தையில் வந்தாலும் எதுவும் சுவையான மோருக்கு இணையாகாது என்பதே காலம் காட்டும் நிஜம்!

- Vikatan

உணவு யுத்தம்! - 7

'பகீர்’ பானங்கள்!

கொளுத்தும் வெயிலை தாங்க முடியாமல் ஏதாவது குடிக்கலாம் என்று தேடினால் பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மட்டுமே கிடைக்கின்றன. உணவுச் சந்தையில் கேள்வியே இல்லாமல் கொள்ளையடிக்கப்படுகிற பொருள் குளிர்பானங்கள்தான். முன்பு வீட்டுக்கு யாராவது முக்கிய விருந்தினர் வந்துவிட்டால் சோடா, கலர் வாங்கிவந்து தருவார்கள். விருந்தினர் குடித்தது போக மிச்சம் வைத்த கலரைக் குடிக்க போட்டா போட்டி நடக்கும்.
திருமண வீடுகள், திருவிழாக்களில் கலர் குடிப்பது என்பது சந்தோஷத்தின் அடையாளம். சாக்ரீம் பவுடரைத் தண்ணீரில் கரைத்து ஒரு பாட்டில் கலர் ஐந்து பைசா என பள்ளியில் விற்பார்கள். வாங்கிக் குடித்திருக்கிறேன்.
இன்று வீட்டுக் குளிர்சாதனப்பெட்டியில் வெயில் காலமோ, மழைக்காலமோ எப்போதும் இரண்டு லிட்டர் கலர் பாட்டில் இருக்கிறது. உப்புமா சாப்பிடுவதாக இருந்தால்கூட ஒரு டம்ளர் கலர் ஊற்றி குடிக்கிறார்கள். 'நான் சோடா கலர் குடிப்பது இல்லை. பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளைத்தான் குடிக்கிறேன்’ என்று ஒரு பிரிவினர் பெருமையடித்துக்கொள்கிறார்கள். 'கழுதை விட்டையில் முன்விட்டை என்ன... பின்விட்டை என்ன?’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோல உடலைக் கெடுப்பதில் கார்பனேட்டட் குளிர்பானங்களும் பாக்கெட் பழச்சாறுகளும் ஒன்றுபோலதான். ரெடிமேட் பழச்சாறில், 10 சதவிகிதம் மட்டுமே பழச்சாறு உள்ளது. மீதமெல்லாம், சர்க்கரை, நீர், செயற்கை நிறங்கள், சுவையூட்டிகள் மட்டுமே.
ஒரு குளிர்பான நிறுவனம் ஆண்டுக்கு 300 கோடி விளம்பரத்துக்கு செலவு செய்கிறது. 50 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் குளிர்பானம் தயாரிப்பதற்கு விநியோகச் செலவு உள்பட சேர்ந்து 5 முதல் 7 ரூபாய் ஆகக் கூடும் என்கிறார்கள். ஒரு லிட்டருக்கு 43 ரூபாய் லாபம் என்றால், ஆண்டுக்கு விற்பனையாகும் 430 கோடி பாட்டில்களுக்கு எவ்வளவு பணம் என்று நீங்களே கணக்குப் போட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.
குளிர்பானச் சந்தை வெறும் தாகம் தணிக்கும் விவகாரம் இல்லை. அது உடலைக் கெடுப்பதில் பன்னாட்டு நிறுவனங்களின் யுத்த களம். இரண்டு முக்கிய அமெரிக்க நிறுவனங்களே இந்தியக் குளிர்பானச் சந்தையின் 70 சதவிகிதத்தை தனது கையில் வைத்திருக்கின்றன. பிரபல நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பாடகர்கள் என அத்தனை பேரும் அவர்கள் பாக்கெட்டில்!
இந்தக் குளிர்பான நிறுவனங்கள் நோ டு H2o அதாவது தண்ணீரை வேண்டாம் என்று ஒதுக்குங்கள் என்று ஒரு புதிய முழக்கத்தை உலகெங்கும் எழுப்பிவருகின்றன. தாகம் எடுத்தால் யாரும் தண்ணீர் குடித்துவிடக் கூடாது. மென்பானங்களில் ஒன்றைத்தான் குடிக்க வேண்டும். இதுதான் சந்தையின் இலக்கு. இந்தச் சந்தைக்கு நம்மை அறியாமலே நாம் பலியாகிவருவதோடு அடுத்த தலைமுறையை இதற்கு காவுகொடுக்கவும் தயார் ஆகிவிட்டோம் என்பதே நிஜம்.
பள்ளியில் படிக்கும் மாணவர் எவருக்கும் பன்னாட்டு குளிர்பானங்களின் பெயர்களைத் தவிர வேறு எந்த பானமும் தெரிவது இல்லை. ஒரு மாணவனிடம் 'பானாகாரம் குடித்திருக்கிறாயா?’ எனக் கேட்டபோது 'அது என்ன பானாகாரம்?’ என்று கேலியாகக் கேட்டான்.
'புளியும் வெல்லமும் சேர்த்துச் செய்வார்களே... பானகம்’ என்றதும் 'அப்படி ஒரு பெயரைக்கூட நான் கேள்விப்பட்டதே இல்லை’ என்றான். அங்கிருந்த ஆசிரியர்கள் பலரும்கூட தங்களுக்கும் அப்படியான பானம் எதையும் தெரியாது என்றார்கள்
'நீர்மோரும் பானாகாரமும் பதநீரும் பழச்சாறுகளும்தானே வெயில் காலத்தில் சூடு தணிப்பவை. ருசியான நொங்கு சாப்பிடுவது, வெள்ளரிப்பிஞ்சுகள், வெள்ளரிப்பழம் என எத்தனையோ இருக்கிறதே! அதை விட்டு ஏன் இந்த கார்பனேட்டட் குளிர்பானங்கள்?’ என்று கேட்டால் 'இதற்கு இணை கிடையாது. மலையில் இருந்து தலைகீழாக குதித்ததுபோல இருக்கும்’ என்கிறார்கள்.
ஒருமுறை கோடைக்காலத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் நண்பர்களுடன் டிரக்கிங் போயிருந்தபோது வெக்கை தாள முடியாமல் தண்ணீர் குடித்துக்கொண்டே இருந்தேன். காட்டில் எங்களுக்கு வழிகாட்டியாக வந்த ஆதிவாசி இளைஞன் ஒருவன் காட்டுச்செடி போன்ற ஒன்றை பறித்துவந்து 'இதன் வேரை சவைத்து சாற்றை உறிஞ்சிக்கொள்ளுங்கள்’ என்றான்.
இதை சாப்பிட்டு எப்படி தாகம் தணியும் என்று புரியாமல் அதை வாயிலிட்டு சவைக்க ஆரம்பித்தேன். ஆச்சர்யம்... அந்தச் சாறு தொண்டையில் குளிர்ச்சி ஏற்படுத்தியதோடு உடலுக்குள் போன சில நிமிஷங்களில் கண்ணில் இருந்த வெக்கை தணிந்து கண் குளிர்ச்சியானதை உணர முடிந்தது. நாவறட்சியும் அடங்கிவிட்டது. அது என்ன வேர் என்று இளைஞனிடம் கேட்டபோது அது மூலிகை என்று சொல்லிவிட்டு அதைப் பற்றி நான் சொல்லக் கூடாது என்றான். ஒரு வேரை ஐந்து நிமிடம் வாயிலிட்டு சவைப்பதன் வழியே உடல் வெக்கையை போக்கிவிட முடியும் என்ற மருத்துவம் நம்மிடம் இருக்கிறது. ஆனால், அதை நாம் முறையாகப் பகிர்ந்துகொள்ளவில்லை. பெருவாரியான மக்கள் பயன்படுத்தும்படியாக அறிமுகப்படுத்தவும் இல்லை.
இன்று குடிக்கிற காபியைக்கூட குளிர்ச்சியான கோல்டு காபியாக வேண்டும் எனக் கேட்கும் தலைமுறை வந்துவிட்டது. ஒருகாலத்தில் காபி டம்ளரை தொட்டால் கையில் சூடு தெரிய வேண்டும் என்று காபி குடிப்பவர்கள் நினைத்தார்கள். ஆறிப்போன காபியை மனுஷன் குடிப்பானா என சண்டையிடும் வீடுகளை எனக்கே தெரியும். இன்று கோல்டு காபி, ஐஸ் டீ என சூடான பானங்களை குளிர்ச்சியாக்கிக் குடிக்கிறார்கள். சூட்டில் இருந்து குளிர்ச்சியை நோக்கி மாறியிருக்கிறது நமது உணவுப்பழக்கம். குளிர்ச்சிக்கு என தனி விலை வைத்து விற்பதுதான் இன்றைய தந்திரம்.
முன்பெல்லாம் கோடை துவங்கியதும் இலவச தண்ணீர் பந்தல், மோர் பந்தல், பானாகாரம் தருவது என்று நிறைய சேவைகள் நடக்கும். இலவசமாக தென்னை ஓலையில் செய்யப்பட்ட விசிறிகள்கூட வீசிக்கொள்வதற்காக தருவார்கள். இன்று அப்படி எதுவும் கண்ணில் படுவது இல்லை. வணிகச் சந்தையின் பெருக்கம் சேவையை முடக்கிவிட்டிருக்கிறது.
சங்க காலத்தில் இப்படியான பானங்களுக்கு சுவை நீர் என்று பெயர். கருப்பஞ்சாறும், இளநீரும், மோரும், பலவகையான பழச்சாறுகளும் குடித்திருக்கிறார்கள். பதிற்றுப்பத்தில் தீம்பிழி எந்திரம் என்ற சொல் காணப்படுகிறது. அது கருவியைக் கொண்டு பழத்தைச் சாறு பிழிந்து எடுத்திருக்கிறார்கள் என்பதையே சுட்டுகிறது.
The Five Soft Drink Monsters  என்று மைக் ஆடம்ஸ் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். குளிர்பானங்கள் எந்த அளவு கெடுதல் செய்யக் கூடியவை என்பதைப் புட்டுப்புட்டு வைக்கிறார். அதாவது டின்னில் அடைக்கப்படும் குளிர்பானங்களில் அது நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க பென்ஸாயிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. சுவைக்காக காபின் கலக்கப்படுகிறது. குளிர்பானங்கள் வரும் பெட் பாட்டில்களில், பிஸ்பினால் ஏ என்ற ரசாயனப்பூச்சு உள்ளது. சர்க்கரைக்குப் பதிலான இனிப்புச் சுவை தருவதற்காகச் ஆஸ்பர்டேம் (Aspartame)  என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இப்படியான ரசாயனங்கள் காரணமாக நமக்கு சுவாச ஒவ்வாமை மற்றும் தோல் நோய்கள், இதய நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
உடலில் உள்ள கால்சியம் சத்து குறையவும், பாஸ்பரஸ் அளவு உயரவும் இந்த குளிர்பானங்கள் காரணமாக இருப்பதனால் குளிர்பானங்களை அதிகம் குடித்தால் உடலில் உள்ள பொட்டாசியத்தின் அளவு குறைந்துபோய் தசைகள் சக்தி இழந்துவிடுகின்றன. குளிர்பானங்களைத் தொடர்ந்து குடிப்பதால் பற்சிதைவும், சிறுநீரகக் கோளாறுகளும் ஏற்படுவதைத் தடுக்கவே முடியாது என்கிறார் மைக் ஆடம்ஸ்.
எப்படி இவ்வளவு வேகமாக நம்மிடையே பரவியது இந்தக் குளிர்பான பழக்கம். பதிலுக்காக காலத்தின் பின்திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது.
மேடைப் பேச்சாளர்கள் பேச்சின் ஊடே சோடா குடிப்பது, சண்டையில் சோடா பாட்டில் வீசுவது நமக்குத் தெரியும். சோடா எப்படி எப்போது அறிமுகமானது? அது சுவாரஸ்யமான வரலாறு.
ஐரோப்பாவில் 17-ம் நூற்றாண்டில்தான் முதன்முதலாக மென்பானங்கள் விற்பது துவங்கியது. அப்போது தேன் கலந்த எலுமிச்சை சாறு விற்பனை செய்யப்பட்டது. 1676-ல் பாரீஸில் இதன் விற்பனை உரிமையை ஒரு நிறுவனம் பெற்று ஏகபோக உரிமையாக்கியது.
1767-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோசப் பிரீஸ்ட்லீ என்பவரே கார்பனேட்டட் பானமான சோடாவை உருவாக்கியவர். இங்கிலாந்தின் லீட்ஸில் வசித்த ஜோசப் பிரீஸ்ட்லீ மது தயாரிப்புக்காகப் புளிக்கச் செய்து காய்ச்சிப் பதப்படுத்திய பார்லி பீப்பாய்களில் இருந்த கரியமில வாயுவை ஒரு காலி குவளைக்குள் பிடித்து அதில் தண்ணீரை ஒரு குறிப்பிட்ட அளவு கலந்தார். அது சுவையான நீராக மாறியது. அப்படித்தான் சோடா தயாரிக்கப்பட்டது.
ஜான் மெர்வின் நூத் என்பவரே இதை வணிக ரீதியாக மாற்றினார். ஆரம்ப காலங்களில் சோடா மருந்து கடைகளில் மட்டுமே விற்கப்பட்டது. இது பின்னாளில் ஸ்வீடன் ரசாயனவாதி டோர்பென் பெர்க்மென் வடிவமைத்த சோடா இயந்திரம் மூலம் பெருமளவு தயாரிக்கப்பட்டது. சோடாவோடு பல்வேறு சுவைகளை ஒன்று சேர்ந்தவர் ஜோசப் பெர்சிலிஸ். 19-ம் நூற்றாண்டில் இதுபோன்ற செயற்கை பானங்களைக் குடிப்பதில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. மருந்துக் கடைகளில் மட்டுமே இவை மூலிகை பானங்கள் என விற்கப்பட்டன.
அப்போது கண்ணாடி பாட்டில்கள் தயாரிக்கும் தொழில் பெரிய வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. ஆகவே, சோடா பவுண்டன் எனப்படும் சோடா இயந்திரங்களில் இருந்தே மக்கள் இவற்றை வாங்கிக் குடித்தார்கள். சோடியம் பைகார்பனேட் கொண்டு உருவாக்கப்பட்டதால் அது சோடா எனப்பட்டது. வயிறு உபாதைகளுக்கு மருந்தாக டாக்டர்களால் சிபாரிசு செய்யப்பட்ட சோடாவுக்கு 1800-களில் வரி போடப்பட்டது. பிரிட்டனில் ஒரு பாட்டிலுக்கு 3 பென்ஸ் வரி. பாட்டிலில் அடைக்கப்பட்ட சோடா 1835-ல் சந்தைக்கு வந்தது. 1851-ல் அயர்லாந்தில் ஜிஞ்சர் சோடா அறிமுகமாகி புகழ்பெற்றது. சோடா பாட்டில் மூடியை உருவாக்கியவர் வில்லியம் பெயிண்டர்.
நம் ஊரில் விற்கப்படும் கோலி சோடா பாட்டிலை 1873-ல் உருவாக்கியவர் ஹிரம் காட் (Hiram Codd)என்ற ஆங்கிலேயர். இவரது கோப்ஸ் கிளாஸ் ஒர்க் கம்பெனிதான் கோலி சோடா பாட்டில்களைத் தயாரித்து விற்பனை செய்யத் துவங்கியது. 1881-ல்தான் சோடாவோடு வண்ணம் சேர்க்கப்பட்டு ரசாயன சுவையூட்டி மூலம் குளிர்பானம் உருவாக்கபட்டது.
1886-ல் டாக்டர் ஜான் பெம்பர்ட்ன் கோக்கை உருவாக்கினார். 1898-ல் காலெப் பிராதம் பெப்சி கோலாவை உருவாக்கினார். 1899-ல்தான் கண்ணாடி பாட்டில்கள் தானியங்கி இயந்திரங்களின் மூலம் பெருமளவில் உற்பத்தியாகின. 1920-களில் தானியங்கி குளிர்பான இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. 1957-ல் அலுமினிய டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் அறிமுகமாகின.
இந்தியாவுக்கு இதுபோன்ற குளிர்பானங்கள் கடந்த 60 ஆண்டுகளுக்குள்தான் அறிமுகமாகின. அதிலும் 1977-ல் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் கூட்டாகவே தொழில் துவங்க வேண்டும் என்ற ஜனதா அரசின் நிர்பந்தம் காரணமாக கோக் இந்திய சந்தையை விட்டு வெளியேறியது. பின்பு 1990-ல்களில் தாராளமயமான சந்தை காரணமாக பார்லேயுடன் இணைந்து தனது சந்தையை உருவாக்கிக்கொண்டது.
- Vikatan

உணவு யுத்தம்! - 6

இது ஓட்ஸ் அரசியல்!

உணவு உற்பத்தியைப் பெருக்குவதும், முறையாக உணவைப் பகிர்ந்து தருவதும் அரசின் தலையாய கடமை. இதற்கு உற்பத்தி மற்றும் விநியோக முறைகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆனால், இன்று நடப்பது என்ன?
உணவு உற்பத்தியை எடுத்துக்கொண்டால், தன்னிறைவு பெறுவதே தங்களின் நோக்கம் என்று ஒரு காலத்தில் அரசாங்கம் முழக்கமிட்டது. இன்று விவசாயிகளைப் பார்த்து, 'ஏன் விவசாயம் பார்க்கிறீர்கள்... விட்டுவிட வேண்டியதுதானே?’ என்று கேட்கும் நிலையை அரசே உருவாக்கி உள்ளது.
விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட மாற்றங்களும் உர நிறுவனங்களின் கொள்ளைக்காக உருவாக்கப்பட்ட கொள்கைகளும் ஒன்றுசேர்ந்துதான் இன்று உணவுப் பிரச்னையாக வெடித்திருக்கிறது.
உணவுப் பொருளை உற்பத்தி செய்கிற விவசாயியை, பணப் பயிர்களை மட்டுமே உற்பத்தி செய்பவனாக மாற்றியது இன்றைய வேளாண்மை. அத்துடன் விவசாயி உற்பத்தி செய்த பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் போவதுடன், தரகு வணிகர்களின் ஆதாயத்துக்காக சந்தையை சூதாட்டக் களமாக்கியது. கடுமையான விலைவாசி உயர்வு, நில மோசடி, விவசாயக் கடன் சுமை என்று உணவுப் பிரச்னையின் வேர்கள் ஆழமாகப் புதைந்திருக்கின்றன.
மரபான காலை உணவுக்கு மாற்றாக ஓட்ஸ் சாப்பிடுங்கள்; செரல் சாப்பிடுங்கள் என்று விளம்பரங்கள் கூறுகின்றன. செரல் சாப்பிட்டால் அழகான பொலிவான உடல் கிடைக்கும் என்று இளம்பெண்கள் பொய்யாக நம்புகின்றனர்.
காலை உணவுச் சந்தையைக் கைப்பற்ற இன்று வணிக நிறுவனங்களுக்குள் பெரும் போட்டி நடைபெற்று வருகிறது. காரணம்... காலை உணவு என்பது பெரும்பாலும் வீட்டில் சமைத்துச் சாப்பிடுவது; அவசரமாகத் தயாரிக்கப்படுவது. அந்தச் சந்தையைக் கையகப்படுத்திவிட்டால் கோடி கோடியாக அள்ளலாம் என்பது கணக்கு. இதற்காகப் புதிது புதிதாகக் காலை உணவுகள் முளைக்கின்றன.
இந்தியாவில் பல்வேறு ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்காகச் செலவிடப்படும் தொகை ரூ.16,300 கோடி. இதில் உணவு விளம்பரங்கள் மட்டும் ரூ.4,500 கோடி. உணவு நிறுவனங்கள் தங்களின் உணவு ஆராய்ச்சிக்காக செலவிடுவது வெறும் இரண்டு சதவிகிதம் மட்டுமே. 48 சதவிகிதத் தொகை, விளம்பரத்துக்காக செலவிடப்படுகிறது.
ஒரு ஓட்ஸ் தயாரிப்பு நிறுவனம் சென்ற ஆண்டு இந்தியா முழுவதுமான அதன் விளம்பரத்துக்காகச் செலவிட்ட தொகை ரூ.416 கோடி. இவ்வளவு விளம்பரம் செய்து ஏன் ஓட்ஸை சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்கள். நம் உடல் நலத்தின் மீதான அக்கறையால் இல்லை. இந்தச் சந்தையை உருவாக்கிவிட்டால் கொள்ளை லாபம் அடிக்கலாம் என்பதுதான் நோக்கம்.
2000 வருஷங்களுக்கு மேலாகவே ஓட்ஸ் பயிரிடப்பட்டு வந்தாலும், அது பெருமளவு கால்நடைகளுக்கான உணவாகவே அறியப்பட்டது. 90 சதவிகிதம் குதிரைகளுக்கான உணவாக விநியோகம் செய்யப்பட்டது. ஓட்ஸின் தமிழ் பெயர் 'காடைக்கண்ணி’ ஆகும்.
குளிர்ப் பிரதேசங்களில்தான் ஓட்ஸ் விளைகிறது. குறிப்பாக ரஷ்யா, கனடா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அமெரிக்கா, பின்லாந்து, போலந்து போன்ற நாடுகளில் ஓட்ஸ் அதிகம் விளைகிறது.
1513-ல் அமெரிக்காவுக்கு வந்த ஸ்பானியர்கள் வழியாக ஓட்ஸ் அங்கு அறிமுகமானது. அதுவும் ஸ்பானியர்களுடன் வந்த ஆப்பிரிக்க மூர்களே இதை அறிமுகம் செய்திருக்கிறார்கள். அப்போது குறைவான அளவிலே ஓட்ஸ் பயிரிடப்பட்டது. அதுவும் குதிரைக்கான உணவாகவே பயிரிடப்பட்டது.
கடலோடியான கேப்டன் பார்த்தலோமியோ மூலம் 1602-ல் அறிமுகமான ஓட்ஸ், அமெரிக்காவின் எலிசபெத் தீவில் பயிரிடப்பட்டது. 1786-ல் ஜார்ஜ் வாஷிங்டன் 580 ஏக்கரில் ஓட்ஸ் பயிரிட்டிருக்கிறார். கடந்த 200 வருடங்களில் அது அமெரிக்காவில் பிரபலமான தானியமாகிவிட்டது. இன்று 1,80,000 ஏக்கர் பரப்பளவுக்குப் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் இமயமலைப் பகுதியிலும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், பீகார் பகுதிகளிலும் விளைவிக்கப்படுகிறது.
கால்நடை உணவாக இருந்த ஓட்ஸ் எப்படி மனிதர்கள் சாப்பிடும் உணவாக மாறியது? குளிர்ப் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு உடல் உஷ்ணம் அதிகம் தேவை. அதே நேரம் குறைவான உணவால் அதிக சத்தைப் பெற வேண்டிய நிலை அடித்தட்டு மக்களிடம் இருந்தது. அப்படித்தான் அது உணவாக மாறியது. அத்துடன் அதன் வைக்கோல் குதிரை, மாடுகளுக்கு உணவாகிறது. ஓட்ஸில் இருந்து மதுபானங்கள் தயாரிப்பதும் தொழிலாக மாறியிருக்கிறது.
18-ம் நூற்றாண்டு வரை இங்கிலாந்தில் ஓட்ஸ் சாப்பிடுவதைக் கேவலமாகக் கருதினர். அத்துடன், அது ஸ்காட்லாந்துகாரர்கள் சாப்பிடும் உணவு; இங்கிலாந்தில் குதிரைகள் மட்டுமே ஓட்ஸ் சாப்பிடும் என்று பரிகாசம் செய்தனர். இதற்குப் பதிலடி தரும்விதமாக, 'ஓட்ஸ் சாப்பிடுவதால்தான் இங்கிலாந்தில் நல்ல குதிரைகளும், ஸ்காட்லாந்தில் நல்ல மனிதர்களும் வசிக்கிறார்கள்’ என்று ஸ்காட்லாந்து மக்கள் மறுமொழி தந்தனர்.
ஓட்ஸை பிரதான உணவுப் பொருளாக விற்பனை செய்வதற்கு ஒரு அமெரிக்க நிறுவனம் 1870-ல் மிகப்பெரிய விளம்பர வேலையைத் தொடங்கியது. அவர்களின் ஓட்ஸ் பாக்கெட்டுகளை வாங்குபவர்களுக்கு இலவசப் பரிசு பொருட்களைக் கொடுத்தனர். முதன்முதலாக தொலைக்காட்சியில் இடம்பெற்ற பகட்டான உணவு விளம்பரம் ஓட்ஸ் விளம்பரமே.
அத்தோடு ஓட்ஸ் சாப்பிடுவர்களுக்கான போட்டி, இலவச ஓட்ஸ் விநியோகம், இலவச சுற்றுலா என மாறி மாறி சலுகைகளை அறிவித்து அந்த நிறுவனம் கடந்த 140 வருடங்களில் அமெரிக்காவின் முக்கிய சந்தையைக் கைப்பற்றியது.
இந்தியாவிலும் ஆதிகாலத்தில் குதிரைகளுக்கு உணவாகவே ஓட்ஸ் தரப்பட்டது. ஆனால் ஓட்ஸ் கஞ்சி குடிப்பது வட இந்தியாவின் சில பகுதிகளில் இருக்கிறது. 1994-ல் ஒரு பன்னாட்டு நிறுவனம் காலை உணவாக ஓட்ஸை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அன்று அவர்கள் முன்பிருந்த சவால்... சூடான காலை உணவை சாப்பிட ஆசைப்படுகிற இந்தியர்களை எப்படி குளிர்ந்த பாலில் ஊறவைத்த ஓட்ஸ் சாப்பிட வைப்பது என்பதே. இதற்காக நிறைய விளம்பரங்களை உருவாக்கினார்கள். முழு பக்க விளம்பரம் கொடுத்தார்கள். விளையாட்டு போட்டிகளை ஸ்பான்சர் செய்தார்கள். ஆனால், மக்கள் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
இதன் அடுத்தகட்டமான ஓட்ஸ் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பெரிய மருத்துவமனைகளைத் தங்களின் நுழைவு வாயிலாக பிடித்துக்கொண்டார்கள். மருத்துவர்களுக்குப் பரிசுகளை அள்ளிக்கொடுத்தார்கள். அத்துடன் ஓட்ஸில் உள்ள எளிதாகக் கரையும் நார்ச்சத்தான பீட்டா குளுகோன் இதயத்தைப் பாதுகாக்கக் கூடியது; புரோட்டின், வைட்டமின் ஈ உள்ளது; ஆகவே ஆரோக்கியத்துக்கு நல்லது எனக் கூறி டாக்டர்களைப் பரிந்துரை செய்யச் சொல்லி தங்களின் விற்பனையைத் தொடங்கினார்கள்.
இதற்காக இந்தியா முழுவதும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. தொலைக்காட்சி விளம்பரங்களும் இவற்றை முதன்மைப்படுத்தின. விளைவு... ஓட்ஸ் சாப்பிடுவது நல்லது என்ற முழக்கம் நாடெங்கும் உரத்துக் கேட்க ஆரம்பித்தது.
ஆரோக்கியத்தை விற்பனைப் பொருளாக்கி இந்திய சந்தையைக் கைப்பற்றியது ஓட்ஸ். 2006-ல் 2,22.4 கோடியாக இருந்த ஓட்ஸ் விற்பனை 2011-ல் 7,515 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த விற்பனை மேலும் அதிகரித்தபடியே உள்ளது. இது 2016-ம் ஆண்டில் 1,565 கோடியை எட்டும் என்று கூறுகிறார்கள்.
இன்றும் கிராமப்புற மக்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை விரும்பவில்லை. அதற்கு முக்கியக் காரணம் பாலில் இதை கலந்து சாப்பிடச் சொல்வதால்தான். இதனால் சூடாக ஓட்ஸ் சாப்பிடுங்கள் என்று புதிய விளம்பர உத்தியை உருவாக்கி உள்ளன அந்த நிறுவனங்கள்.
காலை உணவாக இதைப் பிரபலப்படுத்துவதற்காக தேன், பழச்சுவை, புதினா, ரெடிமேட் என்று 20 மாறுபட்ட ஓட்ஸ் ரகங்களை அறிமுகம் செய்திருக்கிறார்கள். இத்துடன் ஷாப்பிங் மால்களில் இலவச பாக்கெட்டுகளைக் கொடுத்துச் சமைத்துப் பாருங்கள் என்று அள்ளி அள்ளித் தருகிறார்கள்.
ஓட்ஸில் உள்ள பி - குளுக்கான் என்பது கரையக் கூடிய நார்ச்சத்து. இதனால் ஓட்ஸ் ஜீரணமாவதற்கு அதிக நேரம் ஆகிறது. சாதாரண ஓட்ஸ், அரிசியைப் போல 45 நிமிடங்கள் வேக வைக்கப்பட வேண்டியது. ஆனால், துரித சமையலுக்காக இன்ஸ்டன்ட் ஓட்ஸ் மூன்று நிமிடங்களில் வேகும்படி உருவாக்கப்படுகிறது. ஸ்டீல் கட் ஓட்ஸ், ஐரிஷ் ஓட்ஸ், ரோல்ட் ஓட்ஸ் என பலவிதங்களில் வெட்டப்பட்டு ஓட்ஸ் விநியோகம் செய்யப்படுகிறது. இவை செயற்கை முறையில் இயந்திரங்களின் அதிக சூட்டில் அவல் ஆக்கப்படுவதால் பக்க விளைவுகள் ஏற்படக் கூடும் என்கிறார்கள்.
இதைச் சந்தைப்படுத்துவதில் பெரும் துணை செய்பவர்கள்... சூப்பர் மார்க்கெட் எனும் பல்பொருள் அங்காடிகள் வைத்திருப் பவர்கள்தான். அவர்கள் முன்வரிசையில் இந்தப் பொருட்களை வைத்து விற்பனை செய்வதன் வழியே அதிக சலுகைகளைப் பெறுகிறார்கள். இதைச் சாப்பிட்டால் இடை மெலியும் என இளம்பெண்களை தன் பக்கம் இழுக்கின்றன இதைத் தயாரிக்கும் கம்பெனிகள். இது வடிகட்டிய பொய்.
இந்திய அளவில் சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய மூன்று பெருநகரத்தினர் இதை விரும்பிச் சாப்பிடுவதில் முன்னணியில் இருக்கிறார்கள். குறிப்பாக, கேரளாவில் 39 சதவிகிதத்தினர் காலை உணவாக ஓட்ஸை சாப்பிடுகிறார்கள் என்கிறது நீல்சன் புள்ளிவிவரம்.
இந்தியாவின் காலை உணவாகப் பரவிவரும் ஓட்ஸ் சந்தையை யார் கைப்பற்றுவது என்று ஐந்து முக்கிய நிறுவனங்களுக்கு இடையே பலத்த போட்டி. ஐந்தில் மூன்று அமெரிக்க நிறுவனங்கள். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உற்பத்தியாகும் ஓட்ஸை இந்தியாவின் பிரதான காலை உணவாக மாற்றுவதன் வழியே அவர்கள் கோடான கோடி லாபம் அடைய முடியும். இதற்காக இந்திய சந்தையை கபளீகரம் செய்ய முனைகிறார்கள்.
பாரம்பரியமாக நமது விளைநிலங்களில் விளைந்த கம்பும் கேப்பையும் உளுந்தும் விலையில்லாமல் முடங்குகின்றன. இந்த விளைச்சலை அதிகரிக்க எந்த முயற்சியும் எடுப்பது இல்லை. ஆனால் ஓட்ஸ் சந்தையை உருவாக்கி நமது தானியங்களை நாமே குழி தோண்டி புதைக்க தயார் ஆகி வருகிறோம்.
சிறு தானியம், பயறு வகைகளில் தயாரிக்கப்படும் கஞ்சி, ஓட்ஸ் கஞ்சிக்கு சற்றும் குறைவில்லாதது. ஆனால் இதை விளம்பரப்படுத்த யாரும் கோடியாகப் பணம் செலவிடுவது இல்லை என்பதால் எளிதில் புறக்கணித்துப் போகிறோம் என்பதே கண்முன்னுள்ள நிஜம்.

- vikatan