Sunday, June 24, 2012

பிறந்த நாள் ஸ்பெஷல் :அஜீத் / விஜய் !

தமிழ் திரையுலகின் முக்கியமானவர்கள் பட்டியலில் இருப்பவர் அஜீத். பஸ்ஸில் கண்டக்டராக இருந்து  நடிகரான ரஜினியை அடுத்து தனது சொந்த முயற்சியில் வெற்றியும் தோல்விகளையும் ஒரு சேர பார்த்தவர் அஜீத். இன்றும் எனது விருப்பதற்காக எனது ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் என தனது நற்பணி மன்றங்களை எல்லாம் களைத்து விட்டு இன்றும் தான் உண்டு தனக்கு பிடித்த சினிமா உண்டு என்று ஒதுங்கி வாழ்பவர் 



அவரை பற்றிய 41 துளிகள் இங்கே...

தெலுங்கு படமான பிரேம புஸ்தகம் மூலம் திரையுலகிற்கு (1992) அறிமுகம் ஆனார்.

தமிழில் 'அமராவதி' என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார். அத்திரைப்படத்தை அடுத்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே என பல படங்களில் நடித்தார்.

தனக்கு எதிர்பார்த்த வெற்றி இல்லையே என தவித்தவர்க்கு 'ஆசை' என்ற படத்தின் மூலம் வெற்றியை கொடுத்தவர் வஸந்த். அந்த படத்தை தயாரித்தவர் மணி ரத்னம்.

அடுத்தடுத்து பல படங்களில் நடித்தாலும் காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்களின் வெற்றியால் முன்னணி கதாநாயகனாக வலம் வர தொடங்கினார்.

1998ம் ஆண்டு வெளிவந்த 'காதல் மன்னன்' என்ற படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.

அமர்க்களம் படப்பிடிப்பில் ஏற்பட்ட காதலால் ஷாலினியை 2000-ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். நட்சத்திரத் தம்பதியினருக்கு வாரிசு 'அனோஷ்கா' என்ற குட்டி தேவதை.

தனது பெயருக்கும் முன்னால் எந்த பெயரையும் போட விரும்ப மாட்டார். ஆனால் அமர்க்களம் படத்தில் 'அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டத்தை கொடுத்தவர் சரண்.  அடுத்து சரண் இயக்கிய 'அசல்' படத்தில் பட்டம் எதுவும் போட வேண்டாம் என அஜீத்தே நீக்க சொல்லிவிட்டார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வந்த வெற்றிப்படம் 'தீனா'. படத்தில் " தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது.. நீ ஆடு தலை.. " என்று வசனம் வரும். அன்று முதல் ரசிகர்களுக்கும் 'தல' ஆனார் அஜீத்.

அவரது சினிமா வாழ்க்கையில் சர்ச்சைகளும் விடவில்லை. நியூ, மிரட்டல், நான் கடவுள், ஏறுமுகம் என பல படங்கள் இவர் கமிட் ஆகிவிட்டு கருத்து வேறுபாடால் நடிக்க முடியாது என்று கூறி விட்டார்.

வாலி, வில்லன், வரலாறு போன்ற படங்களில் இரண்டு/மூன்று வேடங்களில் நடித்தார். அப்படி நடித்த படங்கள் எல்லாம் ஹிட்.!   ஆனந்தப் பூங்காற்றே, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், நீ வருவாய் என போன்ற படங்களில் கௌரவ வேடத்திலும் நடித்திருக்கிறார்.


மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். அதனாலேயே பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து விடுவார். சமீபத்தில் கலந்து கொண்ட 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற நிகழ்ச்சியில் " ஐயா.. அடிக்கடி ஏதாவது நிகழ்ச்சினு மிரட்டி வர சொல்றாங்கய்யா.. " என்று மேடையில் முதல்வர் கருணாநிதியிடமே முறையிட்டார். அஜீத் பேச்சிற்கு மேடையில் இருந்த ரஜினி எழுந்து நின்று கை தட்டினார்.

இன்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நெருக்கமானவர் அஜீத். ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக்கில் அஜீத் தான் நடிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தவர் ரஜினி.

கல்யாணத்திற்கு முன்பு புகைபிடிக்கும்  பழக்கம் கொண்டவர். கல்யாணம் ஆனவுடன் தனது மனைவிக்காக சிகரெட்டை விட்டொழித்தார்.

சிம்பு, ஜீவா, ஆர்யா என தமிழ் திரையுலகின் அடுத்த தலைமுறை நாயகர்கள் ஃபேவரைட் எப்போதும் அஜீத் தான்.  அதிலும் சிம்பு ஒரு அஜீத் வெறியர்.

பல நாயகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு நாயகியாக இவர் தான் வேண்டும் என்று சிபாரிசு செய்வார்கள். ஆனால் அஜீத் எப்போதும் நாயகி விஷயத்தில் தலையிடுவது இல்லை.

'நேருக்கு நேர் படத்தில் அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்தனர். இருந்தாலும், கருத்து வேறுபாடு காரணமாக அஜீத் படத்திலிருந்து விலக, சரவணன் என்ற இளைஞரை அஜீத் நடித்த வேடத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் வஸந்த். சரவணனுக்கு சினிமாவுக்காக சூட்டப்பட்ட பெயர் சூர்யா.

அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்த ஒரே படம் 'ராஜாவின் பார்வையிலே'. அதன் பிறகு இருவருக்கும் என தனித்தனியாக ரசிகர்கள் கூட்டம் சேர, இணைந்து நடிப்பதைத் தவிர்த்தனர். இருவரும் தொழில்முறையில் போட்டியாளர்கள் என ஆகிவிட, அவர்களது ரசிகர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். 'மங்காத்தா' படப்பிடிப்பில் விஜய்யும் அஜீத்தும் சந்தித்து கொண்டதிலிருந்து இன்றும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

சுப நிகழ்ச்சிகளுக்கு போகிறாரோ இல்லையோ துக்க நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வார். சமீபத்தில் பாடகி சித்ராவின் குழந்தை  நந்தனா இறந்ததற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

தனது 50வது படமான மங்காத்தாவில் ஜார்ஜ் க்லூனி போன்ற கெட்டப்பில் நடித்தார். வாலி, வரலாறு என தான் கதாநாயகனாக நடித்த படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தாலும், மங்காத்தா படத்தில் நடித்தது  நெகட்டிவ் ரோலில் மட்டுமே.

சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அஜீத் ரசிகர்கள் சிலர் கூறவே " எனது பெயரை தவறாக உபயோகித்தால் ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவேன்" என்று எச்சரித்தார்.  நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் இவரது பெயர் தவறாக  உபயோகப்படுத்தப்படவே தனது அனைத்து ரசிகர் மன்றங்களையும் கலைத்து விட்டார் அஜீத்.


அஜீத் ரசிகர் மன்ற கலைப்புக்கு கூறும் காரணம் " மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகருக்கும் அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"

தீவிரமான சாய்பாபா பக்தர். கார், பைக் என எந்தப் பொருள் வாங்கினாலும் பாபாவுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுதான் பயன்படுத்துவார்!

வெளி இடங்களில் தண்ணீர், பழரசம் போன்றவற்றை அருந்த வேண்டியிருந்தால், இடது கையால் தான் கிளாஸைப் பிடித்துக் கொள்வார். பெரும்பாலான வலது கைக்காரர்கள் பயன்படுத்தியபோது உதடுகள் பட்ட பகுதியைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை!

சினிமாவில் நடிப்பதற்கு முன் வேலை பார்த்த ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தின் நிலவரங்களை இப்போதும் அடிக்கடி அப்டேட் செய்துகொள்கிறார்!

வீடு, அலுவலகம் என எங்கு ரசிகர்களைச் சந்தித்தாலும், 'உங்க குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. மன்றப் பணிகளை நேரம் இருந்தா பார்த்துக்கலாம்!' எனப் பாசமாக வலியுறுத்துவார்!

உள்ளூர் அரசியல் பற்றித்தான் கருத்துச் சொல்ல மாட்டார். ஆனால், உலக அரசியலின் இன்றைய நிலவரம்பற்றி எந்த நிமிடமும் அவரிடம் பேச, விவாதிக்க அவ்வளவு விஷயம் இருக்கும்!

சாய்பாபாவுக்குப் பிறகு அஜீத்துக்குப் பிடித்த தெய்வம் திருப்பதி வெங்கடாஜலபதி. சென்னையில் இருந்தே இதுவரை இரண்டு தடவை நடந்தே சென்று திருப்பதி சாமி தரிசனம் செய்திருக்கிறார்!

ரேஸ் போட்டிகளில் அஜீத்துக்கு ரோல் மாடல் பிரபல ரேசர் அயர்டன் சென்னா. அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதிதான் அயர்டன் ஒரு கார் விபத்தில் இறந்தார். அதை நினைத்து தன் பிறந்த நாளன்றும் உருகி வருந்துவார் அஜீத்!

ரசிகர்களின் திருமணங்களுக்குத் தன்னுடைய பெயர், படம் போட்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள் அடிப்பதை விரும்பவே மாட்டார். 'கல்யாணம் ரொம்ப பெர்சனல் விஷயம்ல!' என்பார்!

தனது மொபைல் போனில் குழந்தை அனோஷ்கா பிறந்ததில் இருந்து இப்போது வரை நடப்பது, பேசுவது, ஓடுவது, சிரிப்பது என எல்லாமே குட்டிக் குட்டி வீடியோ கிளிப்பிங்குகளாக இருக்கின்றன. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவற்றைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பார்!

'இது நான் பேச உங்களுக்கு உகந்த நேரமா?' என கேட்டுவிட்டுத்தான் தொலைபேசி, அலைபேசிகளில் பேச ஆரம்பிப்பார்!

பொதுவாக, சுயசரிதை நூல்கள் வாசிப்பது பிடிக்கும். ரஜினி பரிசளித்த 'ஹிமாலயன் மாஸ்டர்ஸ்' புத்தகத்தை அடிக்கடி வாசிப்பார். வீட்டில் மினி நூலகமே உண்டு!

அஜீத்தின் விமான ஆசை கிளை விரித்தது ஆசான் மெமோரியல் பள்ளியில். அங்கே அவர் பாடமாகப் படித்த ஏரோ மாடலிங்தான் இன்றைய ரிமோட் விமானம், பைலட் அசோசியேஷன் நடவடிக்கைகள் வரை வளர்ந்து நிற்கிறது!

உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார், சிக்கன் பிரியாணி சமைப்பதில் எக்ஸ்பர்ட். சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருப்பதாகத் தெரிந்தால், நண்பர்கள் வீட்டில் குவிந்து, பிரியாணி சமைக்கச் சொல்லி அஜீத்தை வம்பிழுப்பார்கள்!

எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் புதுவித உணவு வகைகளாக ஆர்டர் செய்வார். அந்த உணவு அருமையாக இருந்தால், அதைத் தயாரித்தவர்களை நேரில் அழைத்துப் பாராட்டித் தள்ளிவிடுவார்!

படிக்கிற காலத்தில் தீவிர கிரிக்கெட் பிரியர். ஆனால், இப்போது 'கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் எல்லா விளையாட்டுகளுக்கும் தேவை' என்கிறார்!

மனித முகங்களைப் படம் பிடிப்பதில் கேமராமேன் அஜீத்துக்கு அத்தனை ஆர்வம். நண்பர்களின் கேமரா பழுதடைந்தால் பைசா செலவில்லாமல் ரிப்பேர் சரி செய்து தரும் அளவுக்கு கேமராக் காதலர் இவர்!

அனோஷ்கா, தந்தையை 'அஜீத் குமார்' என்றுதான் அழைப்பாள். அப்படி ஒவ்வொரு முறை அனோஷ்கா அழைக்கும்போதும் பூரிப்பில் முகம் இன்னும் சிவக்கும் அஜீத்துக்கு!

மினியேச்சர் ஹெல்மெட்களைச் சேகரிப்பது அஜீத்தின் பொழுதுபோக்கு. விதவித நாணயங்கள், தபால் தலைகளைக் காட்டிலும் அபூர்வமான கலெக்ஷன்ஸ் இது!

தான் நடித்த படம் ரிலீஸ் ஆன பிறகு ரிசல்ட் கேட்டு அதைப்பற்றிய விமர்சனத்தில் ஈடுபடவே மாட்டார் அஜீத். 'சந்தைக்கு வந்திருச்சு. இனி ரசிகர்கள்தான் தீர்மானிக்கணும். நம்ம பங்கு முடிஞ்சுபோச்சு!' என்பார்!

தங்களது படம் வெளியாகும்போது படத்துக்கான பப்ளிசிட்டிக்கு பல நடிகர்கள் ஊர் ஊராக செல்லும் நிலையில்,  'மங்காத்தா' படத்திலிருந்து என் படம் குறித்து  எதுவும் பேசக்கூடாது என முடிவு செய்திருக்கிறேன்.."   என படம் குறித்து பேச  திடமாக மறுத்திருக்கிறார்.

பிறந்த நாள் ஸ்பெஷல் : விஜய்


ஏ,பி,சி என எல்லா சென்டர்களிலும் வேட்டையாடும் கில்லி கிங்! ஆக்ஷன் அதிரடியும் காமெடி கதகளியுமாக வெரைட்டி விருந்து வைக்கும் விஜய்யின் டிட் பிட்ஸ்...

* முதல் நான்கைந்து படங்களுக்குப் பிறகு விஜயகாந்த்தோடு நடித்த 'செந்தூரப்பாண்டி', விஜய்யைப் பட்டிதொட்டி எங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது. அதை மிகவும் பெருந்தன்மையோடு இப்பவும் ஒப்புக்கொள்வார் விஜய்!

* பின்னணிப் பாடகராக 'தேவா' படத்தில் பாட ஆரம்பித்த விஜய், 2005-ல் 'சச்சின்' வரை 23 பாடல்களைப் பாடினார். அதன் பின்னர் ஏனோ  பாடுவதைத் தவிர்த்து வந்தவர், தற்போது 'துப்பாக்கி' படத்தில் ஒரு பாடலை பாடி இருக்கிறார்.

* விஜய்க்குத் திருமணம் ஆனவுடனேயே அவரது காஸ்ட்யூம் டிசைனராக மாறிவிட்டார் மனைவி சங்கீதா. இன்றைக்குவரைக்கும் அவர் தேர்ந்தெடுத்துத் தருகிற டிரெஸ்களை மட்டுமே அணிகிறார் விஜய். இந்த காஸ்ட்யூம் டிசைன் சினிமா வரைக்கும் போகிற வாய்ப்பு இருக்கிறது!

* திடீரென்று நினைவு வந்தால் நண்பர்களோடு காரில் வந்து ஆசையாக லயோலா கல்லூரி வகுப்பு பெஞ்சில் உட்கார்ந்துவிட்டுச் செல்வார் விஜய். அன்றைக்கு மாணவர்களோடு உட்கார்ந்து கலகலப்பாக உரையாடும் விஜய்யை நீங்கள் இதற்கு முன் கண்டிருக்க மாட்டீர்கள்!

* ஜூன் 22 பிறந்த நாளன்று எங்கே இருந்தாலும் ஓடி வந்து தாயின் அருகில் இருக்கவே விரும்புவார். வெளிநாட்டில் இருந்தாலும் அங்கிருந்து கிளம்பிவந்து அன்று முழுவதும் அம்மா பக்கமே இருக்கிற அம்மா பிள்ளை விஜய்!

* எவ்வளவு வேலை, ஷூட்டிங் முடிந்து வந்தாலும் ஹோம் தியேட்டரில் ஏதாவது ஒரு ஆங்கிலப் படம் பார்த்துவிட்டுத்தான் தூங்குவார். அதிசயிக்கும்படியான பெருவாரியான டிவிடி கலெக்ஷன் வைத்திருக்கிற பெருமை அவருக்கு உண்டு!

* நான்-வெஜ் உணவுகளின் மேல் விஜய்க்குப் பிரியம் உண்டு. அதுவும் அம்மா சமைத்த அசைவ உணவுகளுக்கு விஜய் அடிமை!

* விஜய்க்கு நகைகளின் மீது அவ்வளவாக ஆசை கிடையாது.

* ஹிந்தியில் அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் அமிதாப்தான். இன்றைக்கும் அவர் நடித்து வெளியாகிற ஹிந்திப் படங்களுக்கு முதல் நாள்... முதல் ஷோ பார்க்க ஆசைப்பட்டுப் போவார்!

* ஜாலி மூடில் இருந்தால் மனைவி சங்கீதாவை 'ஹாய் கீஸ்' எனக் கூப்பிடுவார். எப்பவாவது கொஞ்சம் கோபமாக இருந்தால் 'வாங்க போங்க'தான்!

* வருஷத்துக்கு ஒரு தடவையாவது மனைவி, குழந்தைகளுடன் நிச்சயம் லண்டன் டிரிப் உண்டு. சங்கீதாவின் அப்பா வீட்டில் கொஞ்சநாள் இருந்த பிறகு, பயணம் அதற்கடுத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் விரிவடையும். எந்த நாட்டுக்கு, எந்த இடம் என்று டிசைட் பண்ணுவது பையன் சஞ்சய்தான்! 

* தி.நகரில் சூர்யாவின் அடுத்த வீட்டுக்காரராக இருக்கிற டைரக்டர் பாரதிராஜா, கொட்டிவாக்கத்தில் விஜய்க்குப் பக்கத்துவீட்டுக்காரராக இருக்கிறார்!

* விளையாடுவதற்கு மிகவும் பிரியப்படுவார். கொட்டிவாக்கம் வீட்டில் இப்போது விளையாடுவது டென்னிஸ். இப்ப இவருக்கு விடாப்பிடியாக ஜோடி கட்டுவது அவரது மகன் சஞ்சய்தான்!

* சஞ்சய்யின் ஒவ்வொரு வயது கூடும்போதும் அவனது நடவடிக்கைகளை வீடியோவில் பதிவுசெய்து வைத்திருக்கிறார். 20 வயது ஆனதும் அவனது பிறந்த நாளுக்கு விஜய் அளிக்கப்போகிற பெரிய பரிசு அதுதான்!

* அப்பாவிடம் முதலில் சினிமாவில் நடிக்கிற ஆசையைச் சொல்ல, பேசிக் காட்டியது 'அண்ணாமலை' பட வசனம்தான். அதனால் இன்றைக்கும் அந்த வசனத்தை மனப்பாடமாகப் பேசிக் காட்டுவார்!

* நடனத்தில் மிகவும் பெயர் பெற்ற விஜய்க்கு பிடித்த நடனக்காரர்கள் பிரபுதேவா, லாரன்ஸ், மாதுரி தீட்சித்தானாம்!

* நெருக்கமான கல்லூரி நண்பர்களை அழைப்பது 'மச்சி'. மற்றவர்களை விஜய் அழைப்பது 'என்னங்கண்ணா!'

* கிச்சன் பக்கமும் எட்டிப் பார்ப்பார் விஜய். நெருங்கிய நண்பர்கள் குடும்பத்தோடு வந்தால், அழகிய தோசை வார்த்துக் கொடுப்பது இந்த அழகிய தமிழ் மகன்தான். அவர் தயாரித்துத் தருகிற காபி விசேஷ சுவையாக இருக்குமாம்!

* எப்போதும் விரும்பிச் சாப்பிடுவது மட்டன் குருமா, தோசை. இளம் தோசையாக இருந்தால் இன்னும் பிடித்தமாகச் சாப்பிடுவார்!

* வீட்டின் வராந்தாவில் காத்திருக்கும் எல்லா கார்களின் நிறமும் கறுப்பு. 

* அம்மா ஷோபா சந்திரசேகர் இசை கச்சேரிகளில் பாட ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்துவார். அம்மாவின் கச்சேரிகளுக்கு முதல் ஆளாக ஆஜர் ஆவார் எப்போதும்!

* மகன் சஞ்சய்யும், மகள் திவ்யா சாஷாவும் அப்பாவின் நடிப்பில் ஆர்வமாக இருந்தாலும் படிப்பிலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜய். நாலு வயதில் இருந்தே கம்ப்யூட்டரில் விளையாடுகிறாள் சாஷா!

* எவ்வளவோ அழைப்புகள் வந்தும் பிற மொழிப் படங்களில் நடிக்கச் சம்மதிப்பது இல்லை விஜய். தமிழில் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக நிற்கிறார்! சமீபத்தில் பிரபுதேவாவின் விருப்பத்திற்காக 'ரவுடி ரத்தோர்' படத்தில் அக்ஷய் கன்னாவுடன் ஒரு குத்தாட்டம் போட்டார்.

* விஜய்யோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் சிம்ரன், ஜோதிகா, த்ரிஷா. உலக அழகி ப்ரியங்கா சோப்ரா அறிமுகமானது விஜய்யுடன் ஜோடி சேர்ந்த  'தமிழன்' படத்தில் தான். 

* ஜாலியாக ரிக்கார்டிங்கில் உட்கார ஆசைப்படுவார் விஜய். எப்பவும் அவரது சமீபத்திய பாடல்களின் முணுமுணுப்போடுதான் காணப்படுவார் விஜய்!

* வெளிநாடு படப்பிடிப்பு செல்லும் போதும் சரி, வரும் போதும் சரி முதலில் அம்மாவிற்கு ATTENDANCE கொடுத்து விட்டு தான் தனது கொட்டிவாக்கம் வீட்டிற்கு செல்கிறார்.

* ஒவ்வொரு படம் முடியும் போதும் அதில் பங்குபெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் அன்பளிப்பு கொடுத்து மகிழ்வது விஜய் வழக்கம்.

''கேரளா மறுக்கிறது... தமிழகம் அழைக்கிறது!''(Pipeline project)

எரிவாயு திட்டத்தை எதிர்க்கும் கொங்கு விவசாயிகள்
தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டுமாம் என்ற பழமொழியைக்  கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது, கிண்டலுக்காகச் சொல்வது. ஆனால், நிஜத்தில் ஒரு சம்பவம் இதுமாதிரித்தான் நடந்துள்ளது!
கேரளாவில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு எரிவாயு கொண்டு செல்வதற்காக மத்திய அரசு தீட்டியுள்ள திட்டம், தமிழக விவசாயி களைப் பாதித்து உள்ளது. எரிவாயு சுமந்து செல்லும் பைப் லைனை, தமிழக விவசாய நிலங்கள் வழியாகக் கொண்டு செல்வதுதான் காரணம்.
இந்தத் திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கொந்தளித்த கொங்கு மண்டல விவசாயிகள், கடந்த வாரம் திருப்பூரில் அதிகாரிகளைத் தடுத்து தங்களது கடுமையான எதிர்ப்பைக் காட்டினார்கள். அடுத்து, 'விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்​புக் குழு’ என்ற அமைப்பை ஆரம்பித்து போராடத் தொடங்கி இருக்கிறார்கள்.
கோவையைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்​ணனிடம் பேசினோம். ''கொச்சினில் இருந்து பெங்களூருவுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு கொண்டு செல்வதற்கு மத்திய அரசு 1996-ம் ஆண்டே திட்டம் தீட்டியது. ஆனால், என்ன காரணத்தாலோ அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டனர். இப்போது, திடீரென்று எங்கள் நிலங்களில் குழாய் அமைக்கும் பணியைத் தொடங்கி உள்ளனர். இந்தத் திட்டத்துக்காக நிலம் கையகப்​படுத்தும் பணியை மத்திய அரசின் 'கெயில்’ நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவன அதிகாரிகள் எந்தத் தகவலும் சொல்லாமல் திடீ​ரென்று போலீஸ் பாதுகாப்புடன் எங்கள் நிலத்தில் புகுந்து மரங்களை வெட்டுகின்றனர்; நிலங்களை ஆர்ஜிதம் செய்கிறார்கள். எதிர்ப்புத் தெரிவித்தால், 'நீ புழல் சிறைக்குப் போய் இருக்கியா? திகார் சிறையைப் பார்க்கணுமா?’ என்று மிரட்டுகின்றனர். கடந்த வாரம் திருப்பூரில் இப்படி மிரட்டியதால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், அதிகாரிகளை நிலத்துக்குள் அனுமதிக்காமல் பிரச்னை செய்தார்கள். அதன்பிறகு போலீஸ் வந்துதான் நிலைமை சரியானது.
கோவையில் ஆரம்பித்து திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு வரை விவசாய நிலத்தில் 20 மீட்டர் அகலம் வரை கையகப்படுத்தி, இரண்டு அடி உள்ள குழாயைப் பதிக்​கின்றனர். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், யார் நிலத்தில் இந்தக் குழாய் பதிக்கப்படுகிறதோ, அந்த நபர்தான் குழாயின் பாதுகாப்புக்கு முழுப்பொறுப்பு. ஏதாவது காரணத்தால் பைப் லைனில் சேதம் ஏற்பட்டால் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை விதிக்கச் சட்டம் உள்ளது. எங்களை மறைமுகமாக 24 மணி நேரமும் காவல் பணி செய்ய வைப்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.
இந்த பைப் லைன் செல்லும் பாதை முழுவதும் விவசாயம் செய்யக் கூடாது. மானாவாரி பயிர்களை தவிர, வேறு பயிர்கள் விளைவிக்கக் கூடாது. நீர் பாய்ச்சல் இருக்கக்கூடாது என்பதால் நிம்மதியாக விவசாயம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். நிலத்துக்குப் போதுமான அளவு நஷ்டஈடு கொடுத்​தாலாவது பரவாயில்லை, அதுவும் இல்லை. கைடு லைன் மதிப்பில் 10 சதவிகிதத்தைத்தான் நஷ்ட ஈடாகத் தருகிறார்கள். எங்கள் பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஒரு லட்ச ரூபாய் கைடு லைன் மதிப்பு என்றால், ஏக்கருக்கு 1,000 ரூபாய்தான் இழப்பீடாகக் கிடைக்கும்'' என்றார் வேதனையுடன்.
விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்புக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, ''இந்தத் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், பைப் லைன் செல்லும் 310 கி.மீ. தூரத்தையும் விவசாய நிலங்களில் மட்டுமே கொண்டு செல்ல நினைக்கிறார்கள். இதனால் இந்தப் பகுதி விவசாயம் முற்றிலும் மடிந்து போகும். ஆற்றுப்படுகை, நெடுஞ்சாலை, ரயில்வே பாதை வழியாகவோ மாற்றுப் பாதையிலோ இந்தத் திட்டதைக் கொண்டு செல்ல வேண்டும். தமிழக அரசு எங்கள் தரப்பு நியாயத்தை உணர்ந்து மத்திய அரசிடம் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.
1962-ல் கொண்டுவரபட்ட பி.எம்.பி. (பெட்ரோலி யம் மினரல் பைப்லைன்) சட்டம் மூலம் நிலத்தைக் கையகப்படுத்துகிறது கெயில் நிறுவனம். அந்தக் காலத்து சட்டத்தை வைத்து நிலத்தைப் பறிப்பதை ஏற்கவே முடியாது. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறோம். கேரளாவில் இந்தத் திட்டத்துக்கு அனுமதி மறுக்​கிறார்கள். தமிழகத்தில்தான் எந்தத் தடையும் போடாமல் நிறைவேற்றத் துடிக்கிறார்கள். எங்கள் நிலத்தில் ஓர் அடியைக் கூட விட்டுத் தரமாட்டோம்'' என்றார் காட்டமாக.
நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக தமிழக அரசால் நியமிக்கபட்ட துணை ஆட்சியர் (அதிகாரம்) சந்திரசேகரிடம் பேசினோம். ''இந்தப் பிரச்னை குறித்து கூடிய விரைவில் நடக்க இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். மற்ற விவரங்களை கெயில் நிறுவத்தினரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்'' என்றார்.
கெயில் நிறுவன மேலாளர் அங்கமுத்து, ''விவசாயிகளுக்கு முறைப்படி தகவல் தெரிவித்து விட்டுத்தான் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. நாங்கள் மத்திய அரசு நிறுவனம். நாங்கள் ஏன் விவசாயிகளை மிரட்டப் போகிறோம்? நாங்கள் இது போன்று இந்தியாவில் பல மாநிலங்களில் வெற்றிகரமாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பைப் லைனுக்கு யாராவது சேதம் விளைவித்து, கையும் களவுமாக ஆயுதங்களோடு பிடிபட்டால்தான் கடுமையான தண்டனை கிடைக்கும். விபத்து அபாயங்கள் எதுவும் இல்லை. அதனால், விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை'' என்றார்.
விவசாயிகளைக் காப்பாற்றுமா தமிழக அரசு?

கொலைக்கள தமிழகம்!

தேசத்தையே உலுக்கிய டெல்லி டாக்டர் தம்பதிகளின் மகளான ஆருஷியின் கொலை, கௌரவக் கொலையாக இருக் கக்கூடும் என்று சி.பி.ஐ. சொல்கிறது. தமிழகத்திலோ பழ.கருப்பையா ''நகரத்தாருக்குரிய அடையாளங்கள் என்றும் தொடர வேண்டுமென்றால், நாம் கலப்புத் திருமணத்தை முற்றிலுமாக எதிர்க்க வேண்டும். சமூகத்தை மீறிக் கலப்புத் திருமணம் செய்துகொள்வோரை நம் சமூகத்தில் இருந்து தள்ளி வைத்துவிட வேண்டும்!'' என்று தனது கட்டுரையில் எழுதுகிறார். 'கலப்புத் திருமணம் செய்தால் கையை வெட்டுவேன்’ என்கிறார் பா.ம.க-வின் காடுவெட்டி குரு. ''கலப்புத் திருமணம் செய்துகொள்வதால் கொங்கு வேளாளர் மக்களின் கலாசாரம் கெட்டுப்போகிறது. பெண்களுக்குச் சொத்துரிமை அளிப்பதால், கொங்கு வேளாளர்களின் நிலவுடைமை பாதிக்கப்படுகிறது'' என்று கூறி இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று சங்கப் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இவற்றின் நீட்சியாகவே பின்வரும் சம்பவங்களை அணுக வேண்டியிருக்கிறது.... 
தஞ்சைக்கு அருகில், சூரக்கோட்டை யைச் சேர்ந்த மாரிமுத்து, ஆதிக்க சாதியைச் சேர்ந்த அபிராமியைக் காதல் மணம் புரிந்தார். ஒரு குழந்தையும் பிறந்தது.  ''குழந்தைக்கு செயின் வாங்கி வைத்துள்ளேன். வாங்கிட்டுப் போயிரு!''  என்று அபிராமியின் சகோதரர் அருண்குமார் கூற, அவரது வீட்டுக்குச் சென்ற மாரிமுத்து வீடு திரும்பவில்லை. மறுநாள் காலையில் சூரக்கோட்டை அருகே மாரிமுத்துவின் சடலம்தான் கண்டெடுக்கப்பட்டது. அவருடைய குரல்வளையை அறுத்து, இடது கையை வெட்டி, ஆண் குறியையும் அறுத்து எறிந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், துறிஞ்சிக் குட்டைமேடு பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த துரையும் சாதி இந்துவான தேன்மொழியும் காதலித்ததால் ஆத்திரமடைந்த தேன்மொழியின் குடும்பத்தினர், துரையை அரிவாளால் வெட்டி உயிரைப் பறித்திருக்கிறார்கள்.
  பழநி அருகில் க.கலையமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தலித்தான பத்ரகாளி, ஸ்ரீபிரியா என்கிற சாதி இந்துப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இதனால் ஸ்ரீபிரியாவின் தந்தை சீனிவாசன் உறவினர்களுடன் சென்று தன் மகளைப் படுகொலை செய்துள்ளார்.
  சென்னையைச் சேர்ந்த பார்த்தசாரதி, சரண்யாவைக் காதலித்து மணந்தார். சரண் யாவின் பெற்றோர் கூலிப்படை வைத்து பார்த்தசாரதியைக் கொலை செய்தனர்.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் வெற்றிவேல், சாதி இந்துவான சுகன்யாவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். சுகன்யாவின் தந்தையே மகளைப் படுகொலை செய்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் பரமக் குடி திருச்செல்வி, தலித் இளைஞரான டேனியல்ராஜைக் காதலித்ததால் கொல்லப் பட்டார். அந்தப் பெண்ணின் தாயையும்  பாட்டியையும் தற்போது காவல் துறை கைதுசெய்திருக்கிறது.
ஈரோடு மாவட்டம், பெரியார் நகரைச் சேர்ந்த தலித் இளைஞர் இளங்கோ, திருப்பூரில் செல்வலட்சுமியைக் காதலித்ததால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு இருக்கிறார்.