Saturday, February 4, 2012

எனது இந்தியா!

எனது இந்தியா!

நீதியின் முன்னால்

டந்த காலம் நிகழ் காலத்திற்குக் கற்றுத்தரும் பாடத்தின் பெயர்தான் வரலாறு. சரித்திரம் என்பது உறைந்துபோன கற்படிவம் இல்லை, அது வாழ்வனுபவங்களின் வழியே நாம் கவனிக்கத் தவறிய உண்மைகளை, மறந்துபோன நினைவுகளை, அறியப்படாமல்போன துயரங்களை நினைவூட்டும் அறிவுத் துறை.
அதிகாரம் கைமாறுவதன் சரித்திரத்தை மட்டுமே வாசித்துப் பழகிய நமக்கு, சரித்திரம் என்பது ஒரு பெரும் மானுடப் பிரவாகம் என்பதைப் புரிந்துகொள்வது சற்று சிரமமாகவே இருக்கக்கூடும்.
வரலாற்றின் குரலுக்குச் செவிசாய்க்காமல் நிகழ்காலப் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியாது, வரலாற்றினை ஒரு நதி என உருவகப்படுத்​தினால், ஒரே நதிதான் எல்லாக் காலத்திலும் ஒடிக்​கொண்டு இருக்கிறது, ஆனால், அதில் ஒடும் தண்ணீர் ஒன்றல்ல, தண்ணீர் ஒவ்வொரு பருவ காலத்திலும் அதற்கான விசையோடு வேறுவேறு கதியில் பெருகி ஓடுகிறது
அப்படி வரலாற்றின் போக்​கானது அரசியல், அதிகாரம், கலாசாரம், சமூக மாற்றம் என்று பல்வேறு காரணிகளால் வேகமெடுப்​பதும் தணிவதுமாகவே இருக்கிறது, எந்த விசை, வரலாற்று இயக்கத்தினை சாத்தியப்படுத்துகிறது, எதன் வழியே வரலாறு தன்னை அடையாளப்​படுத்திக்​கொள்கிறது, அதன் பின் இயங்கிய மனிதர்கள் யார் எவர் என்பதை அறிய முற்படும்போது, சரித்திரத்தை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ளத் துவங்குகிறோம்.
நீதிக்காகக் காத்திருப்பது பிறரோடு பகிர்ந்துகொள்ள முடியாத துயரம், மன உளைச்சல். இன்று எளிய மனிதர்களில் இருந்து அரசியல் தலைவர்கள் வரை பலரும் நீதிமன்றத்தில் தங்களுக்கான நீதி கிடைக்குமா என்று காத்துக்கிடக்கிறார்கள்.
மனு நீதி, விதுர நீதி, சாணக்கிய நீதி, பதினென் கீழ்க்கணக்கு நீதி நூல்கள் என்று எண்ணிக்கையற்ற நீதி சாஸ்திரங்கள் இந்தியாவில் இருக்கின்றன. ஆனால் நடைமுறை வாழ்வில் இவை தனிமனிதனைப் பாதிக்கவே இல்லை.
ஒவ்வொரு நீதிமன்ற வளாகத்திலும் வலியும் மௌனமும் கொண்ட மனிதர்கள் நிற்கிறார்​கள், நீதிதேவதை அவர்களை சலனமற்று பார்த்துக்கொண்டே இருக்கிறாள்.
இந்திய வரலாறு எத்தனையோ வழக்குகளைச் சந்தித்திருக்கிறது... சில விசித்திரமானவை; சில புதிரானவை.
சுதந்திர இந்தியாவின் முதல் பெரும் நீதி விசாரணை, காந்தி கொலை வழக்கு. வேறு எந்த வழக்கினையும் விட இந்த வழக்கு  முதன்மையானது, காரணம் அஹிம்சையைப் போதித்த காந்தியைக் கொன்றவனை எப்படித் தண்டிக்கப்போகிறார்கள்? அப்படி ஒருவனுக்குத் தண்டனை தருவதை காந்திய வழி ஏற்றுக்கொள்ளுமா? எதற்காக காந்தி கொல்லப்பட்டார்?
1948-ம் வருடம் மே 27-ம் தேதி வழக்கு விசாரணை துவங்கியது. காந்தி கொல்லப்பட்ட இடத்திலேயே கோட்சே கைது செய்யப்பட்டு விட்டான். குற்றத்தை அவன் மறுக்கவும் இல்லை. கைப்பற்றபட்ட துப்பாக்கியில் மீதம் நான்கு குண்டுகள் இருந்தன, மீதி மூன்று காந்தி உடலில் பாய்ந்திருந்தன. ரகுநாத் நாயக் என்ற தோட்டக்காரன் கையில் புல்வெட்டும் கருவியோடு காந்தியின் வலது பக்கம் பத்தடி தள்ளி நின்று இருந்தான். யாரோ ஒருவன் துப்பாக்கியால் காந்தியை சுடுவதைக் கண்டதும் ரகுநாத் நாயக் கோபத்துடன் கோட்சேயை மூன்று முறை புல்வெட்டியால் தாக்கினான்.
அப்போது சார்ஜென்ட் தேவராஜ் சிங் ஓடி வந்து கோட்சேயைப் பிடித்துக்கொண்டான். கூட்டம் அவனை அடித்தே கொன்றுவிடக்கூடும் என்று பயந்து அவனைப் பாதுகாப்பாக பிடித்துத் தள்ளிக்கொண்டு போனார். காந்தி சுடப்படுவதை அருகில் இருந்து கண்ட சர்தார் குர்பாசான்சிங் உணர்ச்சிவசப்பட்டு அழுதபடியே நின்றார். கொலை வழக்கின் முதல் குற்றவாளி என்று நாதுராம் கோட்சே அறிவிக்கப்பட்டான். மற்றவர்களைத் தேடும் பணி துவங்கியது. தனிப் படை அமைக்கப்பட்டு, துரிதமாக விசாரணைகள் நடந்தேறின.
பிப்ரவரி 4-ம் தேதி பிர்லா இல்லத்திற்குச் சென்ற வாடகை காரைக் கண்டுபிடித்து டிரைவர் சுர்ஜித் சிங்கைக் கைது செய்தது போலீஸ். சங்கர் கிருஷ்டய்யா, சாவர்க்கர், நாராயண் ஆப்தே ஆகியோர் கைதானார்கள். ஆப்தே டெல்லியில் உள்ள இந்து மகாசபையின் பின் உள்ள காட்டில் துப்பாக்கி சுட பயிற்சி அளித்த மரத்தை அடையாளம் காட்டினான்.  கோட்சே சுடப் பழகிய வீட்டின் உரிமையாளர்  டாக்டர் பார்ச்சர்  கைது செய்யப்பட்டார்.  ஒன்பது பேரைக் கொலையில் உடந்தையானவர்கள் என்று கைது செய்தார் மும்பையைச் சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரி நகர்வாலா. எந்த அரசியல் குறுக்கீடும் இல்லாமல் இருந்தால் மட்டுமே, தான் இந்த விசாரணையைச் செய்வேன் என்று நகர்வலா கண்டிப்புடன் கூறியிருந்தார். அப்படியே நடந்தேறியது!
காந்தியின் உடலைப் பரிசோதனை செய்த இர்வின் மருத்துவமனை, சிவில் சர்ஜன் லெஃப்ட்டினென்ட் காலோனா தானேஜா, காந்தியின் உடலில் 1/4 x  1/6அளவு ஆழமான முட்டை வடிவத் துளை விழுந்த ஐந்து காயங்கள் இருந்ததைக் குறிப்பிட்டார். அவை, உடலைத் துளைத்த துப்பாக்கிக் குண்டுகளால் உருவானவை என்று உறுதி அளித்தார். காந்தியைச் சுட்ட துப்பாக்கியின் எண் 606824.
வழக்கு விசாரணை நடைபெறுவதற்குத் தேர்வு செய்யப்பட்ட இடம், செங்கோட்டையில் மொகலாய மாமன்னர் ஷாஜகான் நீதி வழங்கிய இடத்தின் ஒரு பகுதி. 100 அடி நீளமும் 23 அடி அகலமும் கொண்டது. முதல் மாடியில் இருந்தது. நீதிமன்றத்தின் ஒரு கோடியில் நீதிபதிக்கான தனிமேடை அமைக்கப்பட்டு இருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆத்மசரண்,  கான்பூரின் மாவட்ட நீதிபதியாகவும் செஷன்ஸ் நீதிபதியாகவும் பணியாற்றியவர்.
முதல் நாள் சரியாக காலை 10 மணிக்கு நீதிபதி பக்கவாட்டுக் கதவு வழியாக நீதிமன்றத்தினுள் நுழைந்து தனது இருக்கையில் அமர்ந்தார். குற்றவாளிகள் ஒரே அணியாகக் கூண்டுக்குள் கொண்டுவரப்பட்டனர், நகர்வாலா தனது குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்தார்.
ஒன்பது குற்றவாளிகளும் மூன்று வரிசையில் அமர்ந்​திருந்தனர், சாவர்க்கர் மட்டுமே அதில் மிகுந்த சோர்வாகக் காணப்பட்டார். மற்றவர்கள் தங்களுக்குள்ளாக சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
ஜூன் 24-ம் தேதி விரிவான விசாரணை ஆரம்பமாகி, நவம்பர் 6-ம் தேதி வரை நடைபெற்றது. அரசுத் தரப்பில் 149 சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். 720 பக்க ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டன, வழக்கிற்குத் துணை சேர்க்கும்படியாக 404 ஆவணங்களும், 80 தடயப் பொருட்களும் நீதிமன்றத்தின் முன்வைக்கப்பட்டன. 160 பக்கம் குற்றவாளிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 297 பக்க எழுத்துபூர்வமான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. ஏழு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் வழக்கில் பங்கேற்றனர்.
கார்க்கரேக்கு மராத்தியும், சங்கருக்கு தெலுங்கும், மதன்லாலுக்கு இந்தியும் தெரிந்திருந்த காரணத்தால், வழக்கு விசாரணையில் மொழிப் பிரச்னை ஏற்பட்டது. அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் சி.கே.தப்தரி வழக்கை நடத்தினார்.எதிர்த் தரப்பில் எல்.பி. போப்பட்கர் முக்கிய வழக்கறிஞராகப் பணியாற்றினார். அவரோடு 15 முக்கிய வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்காக ஆஜர் ஆனார்கள்.
கோட்சே தனது அறிக்கையை கோர்ட்டில் வாசித்தான். அது 93 பக்கங்கள்கொண்டது. 35 ஆயிரம் சொற்கள் அதில் இருந்தன. அந்த அறிக்கையில் தன்னை ஒரு வீரப் புருஷனைப் போல அவன் காட்டிக்கொண்டான்.
1949-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் நாள் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது, விரிவான 204 பக்கத் தீர்ப்பு அது. அந்தத் தீர்ப்பில் காந்தி போன்ற அஹிம்சாவாதியைக்கூட ஒருவன் கொன்றுவிட்டுத் தண்டனையில் இருந்து தப்பிவிடக் கூடாது என்பதற்காகவே, கோட்சேவுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
நீதியின் செயல்பாடு, இந்திய சமூகத்தில் அறத்தின் முக்கியத்துவம் என்று நீதியரசர் ஆத்மசரண் முன்னுதாரணமான ஒரு தீர்ப்பை எழுதினார். அந்தத் தீர்ப்பில் இந்தியப் பிரிவினையில் இருந்து எப்படி காந்தியைக் கொல்லும் சதிச் செயல் விதை ஊன்றப்பட்டது என்பதில் துவங்கி, காந்தியைக் கொன்றவர்களின் அரசியல் பின்புலம் வரை அத்தனையும் கவனமாக விவரிக்கப்படுகிறது.
வழக்கு விசாரணையில் அரசு குறுக்கிடவே இல்லை. குற்றவாளிகளுக்கும் முறையான சட்ட உதவிகள் கிடைத்தன. இந்த வழக்கின் மேல் முறையீடு கிழக்கு பஞ்சாப் உயர் நீதிமன்றத்திற்குச் சென்றது. நீதியரசர் ஹர்னாம் சிங் அதை விசாரித்தார். கோட்சே தானே கோர்டில் வாதாட முன்வந்தான். சொந்தச் செலவில் வழக்கறிஞர்களை வைத்துக்கொள்ள முடியாதவர்களுக்கு, அரசே வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து தந்தது.
பஞ்சாப் உயர் நீதிமன்றக் கோடைக் கால விசாரணை சிம்லாவில் நடைபெற்றது. கோர்ட்டிற்குக்கொண்டுவரப்படும் நாதுராம் கோட்சேயைக் காண மக்கள் பெருமளவு திரண்டுவிட்டதால், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
நீதிபதிகள் குழுவில் நீதிபதி பண்டாரி, நீதிபதி அச்சுருராம் நீதிபதி கோஷ்லா ஆகிய மூவர் இடம் பெற்று இருந்தார்கள், அவர்களும் மறுமுறையீட்டினை நிராகரித்து மரண தண்டனையை உறுதி செய்தனர்.
தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் நாளின் முந்தைய இரவில் கோட்சே இருந்த சிறை வளாகத்திற்குள் இரண்டு பேர் ரகசியமாக சுவர் ஏறிக் குதித்தனர். அதை, காவலாளி பார்த்துக் கூச்சலிட்டான். அவர்கள் இருவரும் விசாரிக்கப்பட்டபோது, தென்னிந்தியாவில் இருந்து வந்த இரண்டு பத்திரிக்கையாளர்கள் என்பது தெரிய வந்தது. தங்கள் உயிரைப் பணயம்வைத்து அவர்கள் குற்றவாளிகளைப் பேட்டி காண சிறைக்குள் புகுந்த விவரம் தெரிய வந்தது.முடிவில், கோட்சே தூக்கிலிடப்பட்டான். இறந்த உடலை வெளியே கொண்டுசெல்ல அரசு அனுமதிக்கவில்லை. ஆகவே, சிறைக்குள்ளேயே தகனம் செய்யப்பட்டது. கோட்சேவின் சாம்பல், காகர் என்ற சிறிய ஆற்றில் கரைக்கப்பட்டது. காந்தி கொலை வழக்கு அத்தோடு முடிந்து போனது.
இந்த வழக்கு சுட்டும் உண்மைகள்தான் வரலாற்றின் கசப்பான நிஜங்கள். பிரிவினையின் பெயரால் நடைபெற்ற வன்முறைகளுக்கு உண்மையில் யார் காரணம்? காந்தி போன்ற மகானைக் கொல்லும் மனநிலை எப்படி உருவாகிறது? காந்தி கொல்லப்படக்கூடும் என்று முன் உணர்ந்திருந்த உள்துறை அமைச்சகம் ஏன் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல் போனது? காந்தியை கொன்றது ஒரு முஸ்லீமாகத்தான்  இருக்கக்கூடும் என்ற கசப்பு உணர்வில் நிறைய வன்முறைகள் நடைபெற்றன, அந்த துவேசத்தின் விதை  எப்படி உருவானது? அதுதான் இன்றும் முற்றி வளர்ந்திருக்கிறது இல்லையா?
அதே நேரம் நீதி விசாரணைக்குள் எந்த அரசியலும் இருக்கக் கூடாது. சுதந்திரமாக நேர்மையாக அது நடைபெற வேண்டும் என்பதையும் காந்தி விசாரணை முன்உதாரணமாகக் காட்டுகிறது. அது போன்ற அறத்தை ஏன் நாம் இன்று இழந்துவிட்டோம்?