Wednesday, October 7, 2015

800சிசியில் ஒரு மினி எஸ்யுவி...வந்துவிட்டது க்விட்!

- Motor Vikatan Article

கேம் சேஞ்சர்ஸ் - ரெனோ க்விட்தொகுப்பு: சார்லஸ்
‘இந்தியாவில் புதிய யுகத்தைத் துவக்குகிறோம்’ எனச் சொல்லி, க்விட் காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரெனோ. சுமார் 30 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் ஒன் காராக இருப்பது, மாருதியின் 800சிசி கார்கள்தான். 3 - 5 லட்சம் ரூபாய்க்குள் கார் வாங்குபவர்கள்தான் இந்தியாவில் அதிகம். அந்த மார்க்கெட்டுக்கு இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் அழிவு இல்லை என்பதுதான் ஆல்ட்டோவின் வெற்றி சொல்லும் செய்தி.
மாருதியின் போட்டியாளரான ஹூண்டாய் இந்தியாவுக்குள் நுழையும்போது, ‘1,000 சிசிக்குக் குறைவான கார்களைத் தயாரிக்க மாட்டோம். எங்கள் கார்கள் பவர்ஃபுல்லாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்’ என்றார்கள். ஆனால், ஆல்ட்டோ கார்களின் அசாத்திய விற்பனை, ஹூண்டாயைக் கீழே இறங்கி வரவைத்தது. இயான் எனும் 800சிசி காரை அறிமுகப்படுத்தியது ஹூண்டாய். இந்த கார் விற்பனைக்கு வந்தபோது, ‘இது கேம் சேஞ்சராக இருக்கும்’ என்றது ஹூண்டாய். ஆல்ட்டோவைவிட உண்மையிலேயே ஸ்டைலான காராக இருந்தாலும், மாருதியின் நம்பகத்தன்மையைப் பெற முடியாததால், இயான் போட்டியில் இருந்து விலகி ஒதுங்கியது.
இந்தியாவில் மஹிந்திராவுடன் கூட்டணி அமைத்து லோகன் எனும் காரை விற்பனைக்குக் கொண்டுவந்தது ரெனோ. லோகன் விற்பனையில் முந்தினாலும், மஹிந்திரா - ரெனோ இடையே நிகழ்ந்த பங்குபிரிப்புப் பிரச்னையால், லோகன் மார்க்கெட்டை இழந்தது. லோகனை மஹிந்திராவிடமே விட்டுக்கொடுத்துவிட்டு, தன்னுடைய உலகளாவிய கூட்டாளியான நிஸானுடன் இணைந்து சென்னையில் தொழிற்சாலை துவக்கியது ரெனோ. ஸ்ரீ பெரும்புதூர் அருகே ஒரகடத்தில் துவங்கப்பட்ட இந்தத் தொழிற்சாலையில் இருந்து, நிஸானின் மைக்ரா 2010-ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. ரெனோவின் முதல் காராக ஃப்ளூயன்ஸ் 2011-ம் ஆண்டுதான் வெளிவந்தது. இதற்கு அடுத்து கோலியோஸ் விற்பனைக்கு வந்தது. ஆனால், இந்த இரண்டு கார்களுமே சென்னையில் தயாரிக்கப்படாத கார்கள் என்பதால், விலை அதிகமாக இருந்தன. அதனால், ரெனோ-நிஸான் ஒப்பந்தத்தின் அடிப்படையில்  நிஸான் மைக்ரா மற்றும் சன்னி கார்களை பல்ஸ், ஸ்காலா என்று பெயர் மாற்றி விற்பனை செய்யத் துவங்கியது ரெனோ. இதுவும் மார்க்கெட்டில் எடுபடவில்லை.
இதனால், 2012 ஜூலையில் முழுக்க முழுக்க சென்னையில் தயாரிக்கப்பட்ட டஸ்ட்டர் காரை விற்பனைக்குக் கொண்டுவந்தது ரெனோ. 8 - 12 லட்சம் ரூபாய்க்குள் வெளிவந்த மினி எஸ்யுவி காரான டஸ்ட்டர், மார்க்கெட்டில் செம ஹிட்! ரெனோ இந்தியாவில் விற்பனையைத் துவக்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு லாபம் பார்த்தது, இந்த காரில்தான். டஸ்ட்டரின் வெற்றியை அப்படியே மினி ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் பெறத் திட்டம் போட்டுக் களத்தில் இறங்கிய ரெனோ, இப்போது க்விட் காரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. மினி டஸ்ட்டராகவே விற்பனைக்கு வந்திருக்கும் க்விட்  எப்படி இருக்கிறது?
டிஸைன்
டஸ்ட்டர், க்விட் இரண்டு கார்களையும் அருகருகே நிற்க வைக்கும்போதே, இரண்டு கார்களுமே கிட்டத்தட்ட ஒரே டிஸைனை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டவை என்பது புரிந்துவிடும். ரெனோ க்விட் காரை மினி எஸ்யுவி என்றோ, க்ராஸ்ஓவர் என்றோ அழைக்கவில்லை. அப்படிச் சொன்னால்... அதிக இடவசதி, அதிக சிறப்பம்சங்களை மக்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதால், எஸ்யுவி டிஸைனில் இருந்து உருவாக்கப்பட்ட ஹேட்ச்பேக் கார் என்று சொல்கிறது ரெனோ.
முன்பக்க வீல் ஆர்ச், மிரட்டும் க்ரில், பவர்ஃபுல் ஹெட்லைட்ஸ், பனி விளக்குக்குகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவமான இடம் என பார்க்க எஸ்யுவி போலவே இருக்கிறது க்விட். எஸ்யுவி போல இருக்க வேண்டும் என்பதற்காக, காரின் பக்கவாட்டிலும், முன்பக்கத்திலும் கறுப்பு வண்ண பிளாஸ்டிக் கிளாடிங் கொடுத்திருக்கிறார்கள். இதைத் தாண்டி காருக்கு எஸ்யுவி லுக் கொடுக்கும் முக்கியமான விஷயம், க்விட்டின் கிரவுண்ட் கிளியரன்ஸ். மாருதி ஆல்ட்டோவைவிட 20 மிமீ அதிகமாக, அதாவது 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்டிருக்கிறது க்விட். 13 இன்ச் டயர்கள்தான். ஆனால் காரை நேரில் பார்க்கும்போது, மிக சிறியது போலத் தெரியவில்லை.
பட்ஜெட் கார் என்பதால், எங்கெல்லாம் செலவைக் குறைக்க முடியும் எனப் பார்த்துக் கடுமையாக உழைத்திருப்பது, காரை உற்றுக் கவனிக்கும்போது புரிகிறது. காரை ‘டோ’ செய்வதற்கான ஹூக் காரின் முன்பக்கத்தில் இருப்பதோடு, வீல்களில் நான்கு நட்டுகளுக்குப் பதிலாக மூன்று நட்டுகளும் அதற்கு பிளாஸ்டிக் மூடிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. முன்பக்க விண்ட் ஸ்கிரீனில் ஒற்றை வைப்பர், பக்கவாட்டுக் கண்ணாடிகளை அட்ஜஸ்ட் செய்வதற்கு மேனுவல் அட்ஜஸ்ட் என 3 லட்சம் ரூபாய் காருக்கான அத்தனை சிக்கனங்களையும் இதில் பார்க்க முடிகிறது. காரின் கதவுகளை வேகமாக மூடும்போதே, இது எவ்வளவு எடை குறைவான கார் என்பது புரிந்துவிடும். ஆல்ட்டோ, இயான் கார்களைவிட கிட்டத்தட்ட 50 - 60 கிலோ எடை குறைவான, வெறும் 660 கிலோ எடை மட்டுமே கொண்ட கார், ரெனோ க்விட். ‘எடை குறைவாக இருப்பதால், எந்தப் பாதுகாப்புக் குறைபாடும் இல்லை. இது இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் நடைமுறைக்கு வரவுள்ள இந்திய அரசின் புதிய பாதுகாப்புச் சோதனைகளையும் வெற்றியுடன் கடக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது’ என்கிறது ரெனோ.
உள்ளே!
இந்த செக்மென்ட்டிலேயே இந்த காரில்தான் இருக்கிறது என்று சொல்வது போல, க்விட்டில் சில முக்கியமான சிறப்பம்சங்களைச் சேர்த்திருக்கிறது ரெனோ. அதில், முதலில் இருப்பது டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர். பார்ப்பதற்கு அழகாக மட்டும் அல்ல, துல்லியமாகவும் இருக்கிறது. ஆனால், ஆர்பிஎம் அளவைக் காட்டும் டேக்கோ மீட்டர் இல்லை. ‘இவ்வளவு சின்ன காருக்கு இவ்வளவு பெரிய ஸ்டீயரிங் வீலா’ என்பதுபோலப் பெரிதாக இருக்கிறது. வழக்கமாக சின்ன கார்களில் இருப்பதுபோல, ரிவர்ஸ் கியர் ஐந்தாவது கியருக்குக் கீழே இல்லை. முதல் கியருக்கு அருகில் முன்பக்கம் தள்ளி மாற்றுவதுபோல வடிமைக்கப்பட்டுள்ளது.
 இதை Dogleg ரிவர்ஸ் கியர் என்பார்கள். இது பெரிய விஷயம் இல்லை என்றாலும், மாருதி கார்களை ஓட்டிப் பழகியவர்களுக்கு ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும். மற்ற ரெனோ கார்களில் இருப்பதுபோல இல்லாமல், மாருதி கார்களில் இருப்பதுபோல இண்டிகேட்டர் ஸ்டாக் இடதுபக்கத்திலும், வைப்பர் ஸ்டாக் வலதுபக்கத்திலும் இருக்கின்றன.  மிக முக்கியமான சிறப்பம்சம், டஸ்ட்டரில் இருப்பதுபோன்ற ஜிபிஎஸ் வசதியுடன்கூடிய டச் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த டச் ஸ்கிரீனுக்குப் பதிலாக பின்பக்க பவர் விண்டோஸ், இரண்டு வைப்பர்கள், உள்ளுக்குள் இருந்தபடியே பக்கவாட்டுக் கண்ணாடிகளை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, ஏபிஎஸ் பிரேக் போன்ற முக்கியமான வசதிகளை ரெனோ கொடுத்திருக்கலாம். டச் ஸ்கிரீன் தேவைப்படுபவர்கள், அதை வெளிமார்க்கெட்டில் இருந்தே வாங்கிப் பொருத்திக் கொள்வார்களே!
டஸ்ட்டர்போல இல்லாமல் காருக்குள் தண்ணீர், ஜூஸ் பாட்டில்கள் வைக்க அதிக இடம் இருக்கின்றன. இரண்டு க்ளோவ் பாக்ஸ்கள் இருப்பதால், முக்கியமான பேப்பர் மற்றும் பொருட்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால், சீட்டுக்கு இடையில் வைக்கப்பட்டு இருக்கும் கப் ஹோல்டர்களில், பாட்டில்கள் வைக்கும் அளவுக்கு இடம் இல்லை.
ஆல்ட்டோ, இயான் போன்ற 800சிசி கார்களில் இருந்து க்விட் வித்தியாசப்படும் முக்கிய இடம், இடவசதிதான். 2,422 மிமீ வீல்பேஸ் கொண்ட க்விட் காரில் கால்களை நீட்டி மடக்கி வசதியாக உட்கார, அதிக இடம் இருக்கிறது. இருக்கைகள் உயரமாக இருப்பதால் வெளிச்சாலையை நன்றாகப் பார்த்து ஓட்ட முடிகிறது. பின் இருக்கைகளில் மூன்று பேர் உட்காரும் அளவுக்கு இடம் இருக்கிறது. டிக்கியில் 300 லிட்டர் கொள்ளளவுகொண்ட இடம் இருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. இது, மற்ற 800சிசி கார்களைக் காட்டிலும் மிக அதிகம். ஆனால், 28 லிட்டர் பெட்ரோல் டேங்க் என்பது மிகவும் குறைவு.
இன்ஜின்
799 சிசி, 3 சிலிண்டர், ஆல் அலுமினியம் இன்ஜினைக் கொண்டிருக்கிறது க்விட். இந்தியாவுக்குப் புதுவரவான இந்த இன்ஜின், அதிகபட்சமாக 53.26bhp சக்தியை வெளிப் படுத்துகிறது. இதன் டார்க் 7.34kgm.  பவர், டார்க்கில் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, இணையாகவே இருந்தாலும் ரெனோ சொல்லும் மைலேஜ் மிரட்டுகிறது. ‘லிட்டருக்கு 25.17 கி.மீ மைலேஜ் தரும்’ என்கிறது ரெனோ. எடை குறைவாக இருப்பதால், இந்த மைலேஜ் சாத்தியமானது என்கிறது. ஆனால், இதை முழுமையாக டெஸ்ட் செய்தபிறகே உறுதிப்படுத்த முடியும்.
3 சிலிண்டர் இன்ஜின் என்பதால், காரை ஸ்டார்ட் செய்ததுமே அதிர்வுகளையும், அதிகப்படியான இன்ஜின் சத்தத்தையும் உணர முடிகிறது. ஆனால், இது ஆக்ஸிலரேட்டரை மிதிக்க ஆரம்பித்ததும் மறைகிறது. முதல் கியரில் மாற்றியதுமே தூக்கிப்போடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அடுத்தடுத்த கியர்களை மாற்றி வேகம் பிடிக்க ஆரம்பித்ததும்தான், இன்ஜின் ஸ்மூத்தாக இயங்க ஆரம்பிக்கிறது. அதிகப்படியான டார்க் 4,386 ஆர்பிஎம்-ல்தான் எட்டுகிறது என்றாலும், 80 சதவிகித டார்க்கை 1,200 ஆர்பிஎம்-லேயே கடக்க முடிகிறது. இதனால் நகர டிராஃபிக் நெருக்கடிகளுக்குள் ஓட்டுவது ஈஸியாக இருக்கிறது. அதிகமாக ஆக்ஸிலரேட்டரை மிதிக்க வேண்டியது இல்லை. அதனால், மைலேஜ் அதிகம் கிடைக்கும்.
காரின் பெர்ஃபாமென்ஸை ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது, பவர் டெலிவரி சீராக இல்லை என்பதை உணர முடிகிறது. முதல் மற்றும் இரண்டாவது கியர்களுக்கு இடையே இடைவெளி குறைவாக இருக்கிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது கியருக்கான இடைவெளி மிக அதிகம். 3 சிலிண்டர் இன்ஜின் என்பதால், இன்ஜினில் ஏற்படும் கரகர சத்தம் காருக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஐந்தாவது கியரில் வேகமாகப் பறக்கலாம் என நினைக்கும்போது, சத்தம் மட்டுமே அதிகமாக கேட்கிறதே தவிர, பவர் சட்டெனக் குறைந்துவிடுகிறது. 800சிசி கார் என்பதால் இந்த பெர்ஃபாமென்ஸ் குறைபாடுகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
கையாளுமை
ரெனோ கார்களில் ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை, எப்போதுமே சிறப்பாக இருக்கும். டஸ்ட்டரை ஓட்டியவர்களுக்கு இது புரியும். சின்ன கார் என்றாலும், அதே ஓட்டுதல் தரம் க்விட்டிலும் தொடர்வதுதான் பெரிய ப்ளஸ். மேடு பள்ளங்களை ஈஸியாகக் கடக்கிறது ரெனோவின் சஸ்பென்ஷன். இதனால் காருக்குள் அதிகப்படியான அலுங்கல் குலுங்கல்கள் இல்லை. எடை குறைவான கார்தான் என்றாலும் அதிக வேகங்களில் செல்லும்போது ஸ்டெபிலிட்டியும் சிறப்பாகவே இருக்கிறது. இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால், பாடி ரோல் இல்லை என்பதுதான். அதாவது, வளைவுகளில் வளைத்துத் திருப்பி ஓட்டும்போது, காருக்குள் இருப்பவர்களுக்கும் வளைந்து நெளிவார்கள். இதற்குப் பெயர்தான் பாடி ரோல். சில கார்களில் இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கும். ஆனால், ரெனோ க்விட்டில் பாடி ரோல் மிகவும் குறைவாகவே இருக்கிறது.
எலெக்ட்ரிக் அசிஸ்ட் கொண்ட பவர் ஸ்டீயரிங் மிகவும் லைட்டாக இருக்கிறது. இது, நகருக்குள் வளைத்துத் திருப்பி ஓட்டுவதற்கு ஈஸியாக, ஜாலியாக இருந்தாலும், நெடுஞ்சாலையில் ஓட்டும்போது பயமாக இருக்கிறது. யு-டர்ன் எடுப்பது ஈஸியாக இல்லை. ஸ்டீயரிங்கைப் பலமுறை வளைத்துத் திருப்ப வேண்டியிருக்கிறது.
முதல் தீர்ப்பு
மாருதி எவ்வளவு காலம்தான் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது? மாருதியைத் தாண்டி அந்த விலையில் வேறு போட்டியாளர்களிடம் இருந்து கார்களை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அங்கே ஒரு இடைவெளி இருக்கிறது என்பதைப் புரிந்து, அதற்கான காராக க்விட்டைக் கொண்டுவந்திருக்கும் ரெனோவின் முயற்சியைப் பாராட்ட வேண்டும். அதேசமயம், மாருதி - மக்களிடம் 30 ஆண்டுகளாக வளர்த்திருக்கும் நம்பிக்கையை, சர்வீஸ் தரத்தை வெறும் மூன்றே ஆண்டுகளான ரெனோவால் பிடிக்க முடியுமா என்பது சந்தேகமே! 
 
கார்  ஸ்டைலாக இருக்கிறது; அதிக இடம் இருக்கிறது; மைலேஜ் அதிகம் கிடைக்கும் என ப்ளஸ்கள் இருந்தாலும் பெர்ஃபாமென்ஸ் சுமார் ரகம்தான். மேலும், ஏற்கெனவே சொன்னதுபோல முதல் கார் வாடிக்கையாளர்கள் யாரும் முழுக்க முழுக்க அவர்களின் சொந்த முடிவில் கார் வாங்குவது இல்லை. மனைவி, அப்பா, அண்ணண், உறவினர்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் என எல்லாரையுமே கேட்டு, குழப்பமாகி பிறகு தெளிவாகித்தான் கார் வாங்குகிறார்கள். மாருதியைத் தாண்டி தன் பக்கம் ஒரு வாடிக்கையாளரை வர வைக்க ரெனோ அதிகம் மெனக்கெட வேண்டும். அதைச் செய்தால் மட்டுமே ரெனோ க்விட், மார்க்கெட் லீடராக முதல் இடம் பிடிக்கும்.

டெஸ்ட் ரிப்போர்ட் / மஹிந்திரா TUV 3OO

- Motor Vikatan

ரொம்ப டஃப் எஸ்யுவி!
டெஸ்ட் ரிப்போர்ட் / மஹிந்திரா TUV 3OOசார்லஸ், சார்லஸ் படங்கள்: கே. ராஜசேகரன்
மும்பையில் டிஸைன் செய்து, சென்னையில் இன்ஜினீயரிங் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது, மஹிந்திரா TUV 300. இன்னும் சில மாதங்களுக்குள் இந்திய கார் மார்க்கெட்டில் மினி எஸ்யுவிகளின் மார்க்கெட் ஷேர், 30 சதவிகிதமாக உயரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட், ரெனோ டஸ்ட்டர், நிஸான் டெரானோ, மாருதி S-க்ராஸ், ஹூண்டாய் க்ரெட்டா என மினி எஸ்யுவிகளின் படையெடுப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. இதில், ஃபோர்டு எக்கோஸ்போர்ட் மட்டுமே 4 மீட்டருக்குள் அடங்கும் மினி எஸ்யுவி.
4 மீட்டருக்குள்ளான கார்களுக்கு இந்தியாவில் வரிச்சலுகை இருப்பதால், 4 மீட்டருக்குள்ளான முதல் எஸ்யுவி காரை அறிமுகப் படுத்தியது மஹிந்திரா. குவான்ட்டோ என்ற பெயரில் வெளிவந்த இந்த 4 மீட்டர் எஸ்யுவி செம ஃப்ளாப்! அதனால், கிட்டத்தட்ட 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், புத்தம் புதிய பிளாட்ஃபார்மில் TUV 300 என்ற பெயரில் புதிய மினி எஸ்யுவி காரை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது. இதை ‘டி.யு.வி த்ரீ டபுள் ஓ’ என்றுதான் உச்சரிக்க வேண்டும். புதிய காரை புனேவில் உள்ள மஹிந்திராவின் தொழிற்சாலையில் டெஸ்ட் செய்தோம்!
டிஸைன்
புதிய கார் என்றாலும் ஸ்கார்ப்பியோவின் அடிப்படை ஆர்க்கிடெக்ச்சரில்தான் TUV 300 உருவாக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோஃபார்ம் லேடர் ஃப்ரேம், முன்பக்கம் டபுள் விஷ்போன் இண்டிபெண்டன்ட் சஸ்பென்ஷன், பின்பக்கம் மல்ட்டி லிங்க் நான்-இண்டிபெண்டன்ட் சஸ்பென்ஷன் மற்றும் காயில் ஸ்ப்ரிங் செட் அப், 2,680 மிமீ வீல்பேஸ் ஆகியவை TUV 300 காரிலும் தொடர்கிறது. ஆனால், இதைத் தாண்டி ஸ்கார்ப்பியோவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட காராக இருக்கிறது TUV 300. ஸ்கார்ப்பியோவைவிட 10 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகம். ஸ்கார்ப்பியோவைவிட எடை குறைவு. ஆனால், ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட்டுடன் ஒப்பிடும்போது,  TUV 300 காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 10 மிமீ குறைவு என்பதோடு, 300 கிலோ எடை அதிகம்.
 உள்ளே...
வெளிப்பக்க டிஸைன் ஸ்கார்ப்பியோ, பொலேரோ போன்று அதே பழைய பாக்ஸ் வடிவத்தில் இருந்தாலும், உள்ளே முற்றிலும் புதிய டிஸைனுடன் இருக்கிறது TUV 300. ஸ்கார்ப்பியோவைவிட 10 மிமீ உயரம் அதிகமாக இருந்தாலும், சீட்டுகளின் உயரம் குறைவாக வைக்கப்பட்டுள்ளதால், ஸ்கார்ப்பியோவைவிடவும் சீட்டிங் பொசிஷன் வசதியாக இருக்கிறது. சீட் உயரம் குறைவாக இருப்பதால், காருக்குள் ஏறுவதும் இறங்குவதும் ஈஸியாக இருக்கிறது. டோர் பேடுகள் ஸ்கார்ப்பியோவில் இருப்பதுபோலவே கையைக் குத்திக் காயப்படுத்தாது. சென்டர் கன்ஸோல் பட்டன்கள் புதிதாக இருக்கின்றன. புதிய ஸ்டீயரிங் டிஸைன் பார்ப்பதற்கு அழகாகவும், வசதியாகவும் இருக்கிறது. டிஜிட்டல் இன்ஃபோ டிஸ்ப்ளே செம ஸ்மார்ட்.
புதிய சிறப்பம்சங்கள் பல இருந்தாலும், ஏற்கெனவே செய்த தவறையே TUV 300 காரிலும் செய்திருக்கிறது மஹிந்திரா. பவர் விண்டோஸ் சுவிட்ச்சுகள் கதவில் இல்லாமல் ஹேண்ட் பிரேக்குக்கு அடியில் வைக்கப்பட்டுள்ளன. ஸ்கார்ப்பியோவில், டோர் பாக்கெட்டில் இருந்து எதையாவது எடுக்க வேண்டும் என்றால், கதவைத் திறந்துதான் எடுக்க வேண்டும். இதில், முன்பக்க கதவுகளில் இந்தப் பிரச்னை இல்லையே தவிர, பின்பக்கக் கதவு பாக்கெட்டில் வைக்கும் பொருட்களை எடுக்க, ரொம்ப சிரமப்பட வேண்டும்.
இடவசதியில் மஹிந்திரா எந்த இடத்திலும் காம்ப்ரமைஸ் செய்யவில்லை. காருக்குள் கால்களை நீட்டி, மடக்கி உட்கார ஏராளமான இடவசதி உள்ளது. பின் வரிசை இருக்கைகளில் மூன்று பேர் வசதியாக உட்காரலாம். 7 சீட்டர் கார் என்று விளம்பரப்படுத்துவதற்காக, இதில் டிக்கியின் பக்கவாட்டில் உட்காரும் வகையில் ஜம்ப் சீட்டுகளைப் பொருத்தியிருக்கிறது மஹிந்திரா. நகருக்குள் சின்ன தூரப் பயணங்களுக்கு இதில் உட்கார்ந்து பயணிக்கலாமே தவிர, நீண்ட தூரப் பயணங்கள் மயக்கத்தை வரவைக்கும். ஜம்ப் சீட்டுகளை மடக்கிவிட்டால், டிக்கியில் பொருட்கள் வைக்க 400 லிட்டர் இடவசதி உள்ளது.
ஸ்கார்ப்பியோவில் உள்ள டச் ஸ்கிரீன் இதிலும் உண்டு. சிடி ப்ளேயர் இல்லை. ஆனால் யுஎஸ்பி, ப்ளூடூத் வசதிகள் உள்ளன. விலை உயர்ந்த வேரியன்ட்டில் இரண்டு காற்றுப் பைகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக் வசதிகள் உள்ளன.
இன்ஜின்
‘எம்ஹாக்-80’ என இந்த இன்ஜினுக்குப் பெயரிட்டிருக்கிறது மஹிந்திரா. 1.5 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின்தான் என்றாலும், ஜெர்மன் இன்ஜின்களுக்கு இணையாக தொழில்நுட்பத்தில் கில்லியாக இருக்கிறது. டூயல் ஸ்டேஜ் டர்போ சார்ஜர் மற்றும் டூயல் மாஸ் ஃப்ளை வீலைக் கொண்டிருக்கிறது இந்த இன்ஜின். இது 82.85 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. உச்சபட்ச டார்க்கான 23.4kgm டார்க்கை 1,500ஆர்பிஎம்லேயே தொட்டுவிடுகிறது TUV 300. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு ஆப்ஷனுமே உண்டு.
குவான்ட்டோவின் இன்ஜினைவிட இது இன்னும் டெக்னிக்கலாக மெருகேறிய இன்ஜினாக இருந்தாலும், அதிர்வுகளை உணர முடிகிறது. டர்போ லேக் அதிகமாக இல்லை. ஆனால், 3,800
ஆர்பிஎம்-ஐத் தாண்டியதும் பவர் இல்லை. இதனால், நெடுஞ்சாலையில் ஓவர்டேக் செய்வதற்குக் கொஞ்சம் அதிகமாகவே மெனக்கெட வேண்டியிருக்கும். TUV 300 காரிலும் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டமான மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது மஹிந்திரா. இதன்படி 2 விநாடிகளுக்கு மேல் கார் ஒரே இடத்தில் நின்றால், இன்ஜின் ஆஃப் ஆகிவிடும். மீண்டும் கிளட்ச் மீது கால் வைத்ததும் இன்ஜின் ஆன் ஆகிவிடும். ‘அராய் சான்றிதழ்படி இது, லிட்டருக்கு 18.49 கி.மீ மைலேஜ் தரும்’ என்கிறது மஹிந்திரா.
இதன் ஓட்டுதல் தரம் கிட்டத்தட்ட ஸ்கார்ப்பியோ போலவே இருக்கிறது. சின்ன பள்ளங்களில் ஓகே. ஆனால், பெரிய மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, கார் அதிகமாகவே குலுங்குகிறது.
வெல்லுமா  TUV 3OO?
வெரிட்டோவையும், e2o காரையும் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், மஹிந்திரா ஒரு எஸ்யுவி கார் தயாரிப்பு நிறுவனம். ஸ்கார்ப்பியோ, பொலேரோ, ஸைலோ, XUV 500 என மஹிந்திராவின் எல்லா எஸ்யுவிகளுமே மாஸ் செல்லர்கள். எஸ்யுவி மார்க்கெட்டுக்குள் எவ்வளவு புது செக்மென்ட்டுகளை உருவாக்க முடியுமோ, அங்கெல்லாம் புது கார்களைக் களம் இறக்க வேண்டும் என்பதுதான் மஹிந்திராவின் திட்டம். ஃபோர்டு எக்கோஸ்போர்ட், ரெனோ டஸ்ட்டர், டெரானோ, S-க்ராஸ், க்ரெட்டா கார்களின் மார்க்கெட்டைப் பிடிப்பதே மஹிந்திராவின் லட்சியம்.
மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட விலை உயர்ந்த TUV 300 காரின் சென்னை ஆன் ரோடு விலை, 9.82 லட்சம் ரூபாய்.  ரெனோ டஸ்ட்டரின் 85bhp சக்திகொண்ட மாடலின் சென்னை ஆன் ரோடு விலை, 12.61 லட்சம் ரூபாய். கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் விலை குறைவு. டஸ்ட்டரின் தரம் இல்லை என்றாலும் இடவசதியிலும், சிறப்பம்சங்களிலும் முன் நிற்கிறது மஹிந்திரா. உள்பக்கத் தரத்தைப் பொறுத்தவரை, இதுவரை வந்த மஹிந்திரா கார்களில் TUV 300 கார்தான் பெஸ்ட். கரடுமுரடான தோற்றம் கொண்ட விலை குறைவான டஃப் எஸ்யுவி வேண்டும் என்றால், TUV 300 நல்ல சாய்ஸ்!

‘ஆராரோ ஆரிராரோ’

- Dr Vikatan Article

‘ஆராரோ ஆரிராரோ’
பெரும்பாலானவர்கள் தூங்குவதை, நேரத்தை வீணாக்கும் செயல் என்று கருதுகின்றனர். ஆறு மணி நேரத்துக்குக் குறைவாகத் தூங்கினால் ஒன்றும் ஆகிவிடாது என்று நம்புகிறவர்கள் அதிகம். என்றாவது ஒரு சில நாட்கள் மிகக் குறைவான நேரம் தூங்கினால், பெரிய பிரச்னை வராது. ஆனால், நீண்ட காலமாகக் குறைந்த நேரம் தூங்கினால், அது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும்.
போதுமான அளவு தூக்கம் இல்லை என்றால்...
தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு இதய நோய், மாரடைப்பு, இதயச் செயல் இழப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடல் பருமன்
போதுமான அளவு தூங்காமல், டி.வி பார்ப்பவர்கள், கம்ப்யூட்டர் முன்னால் மணிக்கணக்கில் நேரம் செலவிடுபவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் 6 முதல் 8 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கிறது.
இதய நோய்
போதுமான நேரம் தூங்காதவர்களுக்கு, இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 100 சதவிகிதம் அதிகம்.
தூக்கம்... சில தகவல்கள்!
நம்முடைய வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியைத் தூங்கியே கழிக்கிறோம். உடற்பயிற்சி,உணவுபோல தூக்கமும் மிகவும் அவசியமானது.
20-ல் ஒருவருக்கு ஸ்லீப் ஆப்னியா பிரச்னை உள்ளது.
ஒரு மனிதனால் 10 நாட்கள் வரை தூங்காமல் இருக்க முடியும். அதற்கு மேல் தூங்காமல் இருந்தால், மரணம் நிகழும் வாய்ப்பு உள்ளது.
தூக்கத்தை ஒத்திப்போடும் ஒரே உயிரினம் மனிதன்தான்.

Sunday, August 30, 2015

உலகை உலுக்கிய புகைப்படங்கள்! (மினி தொடர்: பகுதி-1)

- Vikatan Article

ன்றைய நவீன உலகத்தில் கேமரா என்பது தவிர்க்கவே முடியாத ஒரு கருவியாக மாறியிருக்கிறது. உலகத்தில் ஏதாவது ஒரு வடிவத்தில் கேமராவுடன் உறவு கொண்டாடாத மனிதர்கள் இல்லை என்றே சொல்லலாம். கேமராவுக்கு முன்னோ அல்லது கேமராவுக்குப் பின்னோ நின்று ஆவணப்படுத்திக் கொண்டேயிருக்கிறான்.

நம் அன்றாட வாழ்வில் மிகவும் அவசியத் தேவையாகிவிட்ட இந்த கேமராவின் பிறப்பு, அதன் பரிணாம வளர்ச்சிகள், கடந்து வந்த பாதைகள், அது ஏற்படுத்திய தாக்கங்கள் என அனைத்தும் மிகவும் சுவாரஸ்யமானவை. ஓவியம், இசை, இலக்கியம் உள்ளிட்ட எந்தக் கலைகளுக்கும் இல்லாத சிறப்பு இந்த கேமராவுக்கும், அது உருவாக்கிய புகைப்படத்துக்கும் மட்டுமே இருக்கிறது. எந்தக் கலைகளுக்கும் இதுதான் ஆரம்பம் என்று துல்லியமான ஆதாரங்களோடு நம்மால் கூற முடியாது. ஏதோ ஒரு வகையில் ஆவணப்படுத்தப்பட்டதில் இருந்துதான் அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். நவீன உலகத்தின் விஞ்ஞான கண்டுபிடிப்பான கேமரா அப்படி அல்ல. இதுதான் உலகத்தில் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் என்று ஆணித்தரமாக நம்மால் சொல்லிவிட முடியும்.

கடந்த காலத்தின் அரசியல், வரலாறு, போர் மற்றும் புரட்சி, அவை ஏற்படுத்திய அழிவுகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் போன்றவற்றை உண்மையின் சான்றாக படம் பிடித்து நம் கண் முன்னே நிறுத்துகிறது. புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்டு 175 ஆண்டுகள் ஆகிவிட்ட இந்தக் குறுகிய காலத்திலேயே, அனைத்து மக்களையும் அது கவர்ந்து வைத்திருப்பதற்குக் காரணம்... படிப்பறிவில்லாத பாமரனும் அதை எளிமையாகப் புரிந்துகொள்ளும்படி இருப்பதுதான். மேலும், உலக நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதிலும் அதன் உண்மை நிலையை உலகுக்கு உடனுக்குடன் புரிய வைப்பதிலும் புகைப்படத்துக்கு நிகர் வேறில்லை.

'கிளிக்’ என்ற மெல்லிய சத்தத்துடன் ஒவ்வொரு முறையும் இதன் ஷட்டர்கள் திறந்து மூடும்போதும், அந்தந்தக் காலகட்டத்தின் வரலாற்றை விழுங்கி தன்னுள் ஆவணமாக பதிவு செய்துகொள்கிறது. நூற்று எழுபத்தைந்து ஆண்டுகால வரலாற்றின் நேரடி சாட்சியாக இருந்து கொண்டிருக்கும் இந்த கேமரா உருவாக்கிய படங்கள் மூலம் உலகத்தின் கடந்த கால வரலாற்றை திரும்பிப் பார்க்கவே இந்தப் பயணம்.

1. நாப்பாம் சிறுமி  

உடல் முழுவதும் தீக்காயங்களுடன், தனது  இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு முகம் முழுவதும் பீதியுடன் நிர்வாணமாக ஒரு சிறுமி ஓடிவரும் இந்தப் படம் பார்ப்பவர்கள் அனைவரையும் கதிகலங்கச் செய்துவிடும். தெற்கு வியட்நாம் போட்ட நாப்பாம் குண்டினால் தாக்குதலுக்குள்ளான இந்தச் சிறுமி ஓடி வரும் படம் உலக நாடுகள் மொத்தத்தையும் அப்போது அசைத்துப் பார்த்தது. சுமார் 19 வருடங்களாக நடந்து கொண்டிருந்த வியட்நாம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வர இந்தப் படம் மிகப் பெரிய காரணமாக அமைந்தது.
1954-ல் வடக்கு வியட்நாம் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்து வெற்றி கொண்டது. அதன் பிறகு வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிந்திருந்த வியட்நாமை, சோவியத் யூனியன் மற்றும் சீனாவைப்போல ஒரே நாடாக ஆதிக்கம் செலுத்த விரும்பியது வடக்கு வியட்நாம். அதேசமயம் தெற்கு வியட்நாமும் தன்னுடைய சுயாட்சியை விட்டுக்கொடுக்காமல் இருப்பதற்காக வட அமெரிக்காவுடன் சேர்ந்து வடக்கை எதிர்க்க விரும்பியது. இந்தப் போரில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் தெற்கு வியட்நாமுக்கு ஆதரவாக நேரடியாகப் பங்கேற்றனர். சீனா மற்றும் ரஷ்யாவும் வடக்கு வியட்நாமுக்கு அதிகளவில் ஆயுதங்களையும், போர் உத்திகளையும் நேரடியாக கொடுத்து வந்தது. இந்தப் போரின் உச்சத்தில் 58,200 அமெரிக்க ராணுவ வீரர்களும், 11 லட்சம் வியட்நாம் வீரர்களும், சுமார் 20 லட்சம் பொதுமக்களும் மாண்டுபோயினர்.

போர் உச்சத்தில் இருந்த காலகட்டமான 1972 ஜூன் 9-ம் நாள் தெற்கு வியட்நாம் பெட்ரோலிய ரசாயனம் கொண்ட நாப்பாம் குண்டினை தெற்கு வியட்நாமில் இருக்கும் (அப்போது வடக்கு வியட்நாமின் கட்டுப்பாட்டில் இருந்த) 'தராங்பாங்க்’ என்ற கிராமத்தில் வீசியது. இந்த நிலையில்தான் அந்தக் கிராமத்தில் இருந்த எட்டு வயதான சிறுமி பான் தி கிம் ஃப்யூக் (Phan Thi Kim Phuc) தன் சகோதரர்கள் மற்றும் உறவுக்கார சிறுவர்களுடன் ஓடி வந்தாள். அப்போது சிறுமி கிம் ஃப்யூக்கின் உடைகள் முழுவதும் எரிந்து உடலிலும் தீக்காயம் பரவிட்ட நிலையில் ''சுடுது சுடுது'' என்று கதறியபடியே ராணுவம் இருந்த பகுதியை நோக்கி ஓடி வருகிறாள். 

அப்போது அவளுக்கு சற்று தொலைவில் இறந்துபோன ஒரு குழந்தையுடன் அலறிக்கொண்டு வந்த ஒரு மூதாட்டியை அங்கிருந்த புகைப்படக்காரர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் புகைப்படம்  எடுத்துக் கொண்டிருந்த அசோசியேட்டட் பிரஸ்சின் புகைப்பட பத்திரிகையாளர் நிக் வுட் (Nick Ut) தனது வியு ஃபைண்டர் ஓரத்தில் நிர்வாணமாக ஓடிவரும் சிறுமியை பார்த்தார். ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்து, தன் கேமராவை அவளை நோக்கி திருப்பினார். மற்ற புகைப்படக்காரர்கள் அனைவரும் அந்த மூதாட்டியையும் இறந்துபோன குழந்தையையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க, நிக் வுட் மட்டும் நிர்வாணமாக ஓடிவந்த சிறுமி கிம் ஃப்யூக்கை படம் எடுக்கத் தொடங்கினார். 

அந்தச் சிறுமியை புகைப்படம் எடுத்ததோடு நின்றுவிடாமல், அவளுக்கு முதலுதவி செய்து தன் காரிலேயே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உயிர் பிழைக்கவும் வைத்த நிக்குக்கு அப்போது வயது 19 மட்டுமே. பிறகு, தன் அலுவலகத்துக்குச் சென்ற நிக், அந்தப் புகைப்படங்களை பிரிண்ட் போட்டு ஆசிரியர் குழுவினரிடம் காட்டியபோது, சிறுமி நிர்வாணமாக இருப்பதைக் காரணமாக காட்டி முதலில் அவர்கள் அதை பிரசுரிக்க மறுத்துவிட்டனர். பின்னர் நீண்ட விவாதத்துக்குப் பிறகு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தனது முதல் பக்கத்தில் இந்தப் படத்தை பிரசுரித்தது. 

இதன் தொடர்ச்சியாக இந்தப் படம் உலகில் இருந்த அத்தனைப் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளிலும் போருக்கு எதிரான படமாக அடையாளப்படுத்தப்பட்டது. உலக நாடுகளின் கடுமையான கண்டனத்தினாலும், உள்நாட்டு மக்களின் எதிர்ப்பினாலும் 1973-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி அமெரிக்க ராணுவம் வியட்நாமை விட்டு வெளியேறியது. 1975-ம் ஆண்டு ஏப்ரல் 30-ல், வடக்கு வியட்நாமிடம் தெற்கு வியட்நாம் சரணடைந்தது. 1976-ல் ஜூலை 2-ல் 'வியட்நாம் சோசலிசக் குடியரசு’ (The Socialist Republic of Vietnam) உருவானது. இந்தப் படத்துக்காக நிக்குக்கு 1973-ல் நோபல் பரிசுக்கு இணையான பத்திரிகை துறையில் உயரிய விருதான ’புலிட்சர் விருது’ வழங்கப்பட்டது. 

இந்தப் புகைப்படத்தில் உள்ள சிறுமிக்கு இப்போது வயது 52. தற்போது கனடாவில் வசித்து வரும் இவரை 1994-ம் ஆண்டு யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதுவராக (UNESCO Goodwill Ambassador) நியமிக்கப்பட்டார். 1997-ல் 'Kim Phuc Foundation' என்னும் பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் துவங்கி, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறார் கிம் ஃப்யூக். தற்போது இதனுடன் பல கிளை நிறுவனங்கள் இணைந்து 'Kim Phuc Foundation International' என்ற பெயரில் இயங்கி வருகிறது.
- புகைப்படம் பேசும்

Wednesday, July 22, 2015

15 பாடிகாட்ஸ்! உச்சி முதல் உள்ளங்கால் வரை...

- Dr Vikatan


"உடலின் அனைத்து உறுப்புகளும் திறம்பட இயங்கினால்தான் நம்மால் அன்றாட வேலைகளை சிறப்பாகச் செய்ய முடியும். ஒவ்வொர் உறுப்பையும் பாதுகாக்க, தனிக் கவனம் எடுப்பது நல்லது. இதற்கு, பெரிய மெனக்கெடுதல்கள் தேவை இல்லை. நம் அன்றாட உணவில் சின்ன சின்ன மாற்றங்களை செய்தாலே போதும்.  சில உணவுப் பொருட்களின் தோற்றம், குறிப்பிட்ட உறுப்புகளின் தோற்றத்துடன் பொருந்தியிருப்பதோடு, அவற்றைச் சாப்பிடும்போது, அந்தந்த உறுப்புகளுக்கு பலத்தையும் கூட்டுகின்றன” என்று சொல்லும் ஊட்டச்சத்து ஆலோசகர் ஸ்ருதிலயா எந்தெந்த உணவுகள், எந்தெந்த உறுப்புகளோடு பொருந்துகின்றன என்பதையும், அவை என்னென்ன நன்மைகளைத் தருகின்றன என்பதையும் விளக்குகிறார்.

மூளை - வால்நட்

வால்நட்டின் வடிவத்தைக் கவனித்திருக்கிறீர்களா? மூளையின் மினியேச்சர் போலவே இருக்கும். அக்ரூட்டை பிரெய்ன் ஃபுட் (மூளை உணவு) என்பார்கள். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளதால் மூளையின் செயல்பாட்டுக்கும், சீரான இயக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. குழந்தைகள், பள்ளி செல்லும் பிள்ளைகள், கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று வால்நட். அறிவுத்திறன் (ஐ.க்யூ) மேம்படவும், படைப்பாற்றல் அதிகரிக்கவும் உதவும்.
சமீப ஆய்வுகளில், வால்நட்டில் புரதச்சத்துக்கள் இருப்பதால், மறதி நோய் வராமல் தடுக்கும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் இரண்டு மூன்று அக்ரூட் சாப்பிட்டுவந்தால், மூளை செல்கள் புத்துயிர் பெறும். உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
 

 
கண்கள் - கேரட், பாதாம்

ண்களை ஆன்மாவின் ஜன்னல் என்பார்கள். கண்களைப் பாதுகாக்க  சன் கிளாஸ், கண்ணுக்கான பயிற்சிகள், அடிக்கடி கண்களைக் கழுவுதல், ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது நல்லது.
பார்வைத்திறன் மேம்பட கேரட், பப்பாளி நல்ல பலனைத் தரும். கேரட்டை குறுக்காக வட்ட வடிவில் வெட்டினால், கண்ணின் (Pupil, iris) தோற்றத்தைப் போல இருக்கும். தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால், கண்களில் புரை உருவாவது தடுக்கப்படும். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன், வயதாகும்போது வரும் பார்வைக்குறைபாடுகளை (Macular degeneration) தடுக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற பிரச்னைகள் வராது. கண்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். அதுபோல், பாதாமின் தோற்றம், கண்களின் வெளிப்புற அமைப்பைப் போலவே இருக்கும். கண்களுக்கு நன்மையைச் செய்யக்கூடிய சத்துக்கள் பாதாமில் நிறைந்துள்ளன. கண் மை தயாரிப்புக்கு பாதாம் முக்கிய பொருள். தினமும், நான்கைந்து பாதாமை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது.

காது - காளான்
காதுகளில் காக்லியா (Cochlea) எனும் கேட்கும் திறனுக்கான உறுப்பு வளர வைட்டமின் டி தேவை. அவற்றை காளானும் சூரிய ஒளியும் தரும். காளானில் வைட்டமின் டி, டி3, டி2  சத்துக்கள் நிறைந்துள்ளன. கால்சியம் சத்தை உடல் கிரகித்துக்கொள்ள வைட்டமின் டி உதவுகிறது.
உள்ளுறுப்புகளின் வளர்ச்சி, ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு ஆதாரமாக காளான் இருக்கிறது.  மார்பகம், பிராஸ்டேட் புற்றுநோய்களைத் தடுக்கும். அதிகமாக ஈஸ்ட்ரோஜன் சுரப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சரி செய்யும். விலங்குகளிடமிருந்து பெறப்படும் புரதத்தை காளானிலிருந்தும் பெற முடியும்.

நுரையீரல் - திராட்சை

திராட்சைக் கொடியில் தொங்கும் திராட்சைப் பழத்தைப் பார்த்தால், திராட்சைக் கொத்து நுரையீரல் போலவும், அதில் உள்ள ஒவ்வொரு திராட்சையும் ஆல்வியோலி எனப்படும் நுண்காற்று அறைகள் போலவும் தோன்றும். ரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடைச் சுத்திகரித்து, சுவாசக் காற்றில் உள்ள ஆக்சிஜனைப் பிரித்து, ரத்த அணுக்களில் நிறைத்து அனுப்புகிறது நுரையீரல். இந்தச் செயல்பாட்டை மேம்படுத்தும் திறன், திராட்சைப் பழத்துக்கு உண்டு. நுரையீரலில் வரக்கூடிய புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் திராட்சைக்கு உண்டு. கர்ப்பிணிகள் திராட்சையை 23-வது வாரத்தில் இருந்து சாப்பிட்டுவந்தால், குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். திராட்சையில் உள்ள ப்ரோஆந்தோசயனிடின் (Proanthocyanidin) ஆஸ்துமா பிரச்னையின் வீரியத்தைக் குறைக்கும்.
திராட்சையில் உள்ள பாலிபீனால் நுரையீரல், வாய், சுவாசப் பாதை, மூச்சுக்குழாய், கணையம் போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும்.

மார்பகம் - ஆரஞ்சு

பெண்களின் மார்பக வடிவில் அமைந்திருக்கிறது ஆரஞ்சுப் பழம். சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களில் உள்ள லிமோனாட்ய்ட்ஸ் (Limonoids) புற்றுநோய் செல்களை வளரவிடாது. சிட்ரஸ் பழங்களில் தினமும் ஒன்றைச் சாப்பிட்டுவந்தால், புற்றுநோய்க்கான வாய்ப்பு குறையும். மார்பகச் செல்களின் ஆரோக்கியம் மேம்படும். வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதயத்தில் படிந்த கெட்ட கொழுப்புகளை அகற்றும். சுவாசம் தொடர்பான நோய்கள், சில வகைப் புற்றுநோய்கள், அல்சர், மூட்டுநோய், சிறுநீரகக் கற்கள் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
சிட்ரஸ் நிறைந்த பழங்களை இயற்கையான ஆன்டி-கார்சினோஜென் (Anti-carcinogen) எனச் சொல்லலாம். தினமும் சாப்பிட்டுவர, புற்றுநோய் வரும் ஆபத்துகள் முற்றிலுமாகத் தடுக்கப்படும்.

இதயம் - தக்காளி

சாம்பார், ரசம், புளிக்குழம்பு என நம்முடைய அன்றாட உணவுகளில் தக்காளிக்கு முக்கிய இடம் உண்டு. இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகொண்ட தக்காளியில் சத்துக்கள் ஏராளம். லைக்கோபீன் (Lycopene) என்ற நிறமிதான், தக்காளியின் சிவப்பு நிறத்துக்குக் காரணம். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, இதயத்துக்கு நன்மை விளைவிக்கிறது. கெட்ட கொழுப்பு குறைவதால், தமனிகளில் (Arteries) அடைப்புகள் ஏற்படாது. லைக்கோபீன், சில வகை புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. உணவில் தக்காளியை அதிக அளவில் சேர்த்துக்கொண்டவர்களின் இதயம் பலமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை சில ஆய்வுகள் ஊறுதிசெய்திருக்கின்றன. சிவப்பு நிறப் பழங்களையும் காய்களையும் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியம் பெறும். இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், இதயம் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

கணையம்   - சர்க்கரைவள்ளிக் கிழங்கு

ணையத்தின் வடிவத்தில் இருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் கிளைசெமிக் குறீயீட்டின் அளவு (ரத்தத்தில் சர்க்கரை சேரும் திறன்)  குறைவு. சர்க்கரை நோயாளிகள் இதை  அளவாகச் சாப்பிடலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கு கணையத்தின் செயல்திறனைப் பாதுகாத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள்வைக்க உதவுகிறது. மேலும், இதில் வைட்டமின் பி6 அதிக அளவில் உள்ளது. இது கணைய செல்கள் ஆரோக்கியமாக இருக்கவும், கணையப் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கவும் உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகள் மா, பலா, வாழை, சீதா, சப்போட்டா, திராட்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பழச்சாறுகளைவிட பழமாகச் சாப்பிடுவது நல்லது.

வயிறு - இஞ்சி

யிற்றுக்கு நன்மை செய்யக்கூடிய உணவுகளில் முக்கியமானது இஞ்சி. செரிமான சக்திக்கு இஞ்சி உதவும் என்பதால், இஞ்சிதான் வயிற்றின் `நண்பேண்டா.' மலச்சிக்கல், வயிற்றுக்கோளாறு போன்ற பிரச்னைகளைச் சரிசெய்யும்.
சீரகம், சோம்பு, ஏலக்காய், புதினா போன்றவற்றில் குர்குமின் (Curcumin) நிறைந்துள்ளது. இவற்றைத் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றுக்கு நல்லது. கஷாயம், மூலிகை டீ போன்ற ஏதேனும் ஒரு திரவ உணவைச் சேர்த்துக்கொள்வது நன்மையைத் தரும். 
 
நிறையப் பேருக்கு அல்சர் பிரச்னை பாடாய்ப்படுத்தும். இவர்கள், 50 மி.லி அளவு இஞ்சி, சீரகம் போன்ற குர்குமின் சத்துக்கள் உள்ள உணவுகளைக்கொண்டு டீ தயாரித்து சாப்பிட்டால், வயிற்றுப் பிரச்னைகள் தீரும்.

சிறுநீரகம் - கிட்னி பீன்ஸ்
யர் தரமான புரதத்தை உள்ளடக்கி வைத்துள்ளது கிட்னி பீன்ஸ். கழிவுகளை உடலிருந்து வெளியேற்றும் வேலையைச் சிறுநீரகம் செய்கிறது. அதற்கு ஆதாரமான உயர் புரதம் கிட்னி பீன்ஸில் உள்ளது. சில வகை புரத உணவுகள் கொழுப்பைச் சேர்க்கும். அவை உடலுக்குக் கேடு. ஆனால், கிட்னி பீன்ஸில் உள்ள புரதம், நல்ல புரதம் என்பதால், கொழுப்பை உடலில் சேரவிடாது. அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளதால், சருமத்தின் பளபளப்பைக் கூட்டும். மலச்சிக்கலைப் போக்கும். இதயம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் மறதி நோயைச் சரிசெய்யும்.

கருமுட்டை (ஓவரி) - ஆலிவ்

ருமுட்டையின் வடிவத்தில் ஆலிவ் காய்கள் இருக்கின்றன. ஆலிவ்வில் உள்ள சத்துக்கள் எள், மஞ்சள் போன்ற நம் ஊர் உணவுகளிலும் நிறைந்துள்ளன. ஓலிக் (Olic) ஆசிட் நிறைந்தது ஆலிவ். நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய், முட்டை, நட்ஸ், மீன் போன்றவற்றிலும் ஓலிக் ஆசிட் கிடைப்பதால், அவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், ஓவரியன் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.
ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளைச் சாப்பிடும் பழக்கத்தை அடிப்படையாக மாற்றிக்கொண்டாலே, கருமுட்டையின் வளர்ச்சி சீராக இருக்கும்.

கர்ப்பப்பை  - அவகேடோ

வகேடோவின் விதை அமைப்பு, கர்ப்பப் பையின் உள் வடிவம் போல இருக்கும். ஃபோலிக் சத்துக்களின் களஞ்சியமாக இருப்பதால், அவகேடோ சாப்பிடுவது கர்ப்பப்பைக்கு நல்லது. ஃபோலிக் சத்து நிறைந்துள்ள நம் நாட்டு காய்கறிகளும் உள்ளன.  இவற்றைச் சாப்பிட்டும் கர்ப்பப்பையைப் பலப்படுத்தலாம்.
இனப்பெருக்க உறுப்புகளுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் ஆசிட் சத்து, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், புற்றுநோய் வருவதற்கு முந்தைய நிலையில் தோன்றும் சிக்கல்களைக் குறைக்கும். வாரம் ஒரு அவகேடோ சாப்பிட்டாலே ஃபோலிக் சத்துக்களின் தேவை பூர்த்தியாகும்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை வராமல் அழிக்கும் ஆற்றல் அவகேடோ பழத்துக்கு உண்டு. மேலும், உடல் எடை குறைந்த குழந்தைக்கு நல்ல ஆகாரம். இந்தப் பழத்தை, பழுத்த பிறகே சாப்பிடவேண்டும். காய், செங்காயைச் சாப்பிடக் கூடாது.

செல்கள் - வெங்காயம்

டல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்லிலும் தேவையற்ற கழிவுகள் படிந்திருக்கலாம். செல்களின் ஆரோக்கியத்தை, வலுவைக் கெடுக்கும் கழிவுகளை, நச்சுக்களை நீக்கும் சக்தி, வெங்காயத்துக்கு உண்டு.
கழிவுகளை வெளியே தள்ளி, டீடாக்சிஃபையிங் ஏஜென்டாக (Detoxifying agent) வெங்காயம் செயல்படுகிறது.  ரத்தத்தைச் சுத்திகரிக்கும். சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும்.

எலும்பு - கொத்தமல்லி
கொத்தமல்லியின் தண்டுகள், இரண்டு கால்கள், இரண்டு கைகள் எனக் கிளைபிரியும் மனித எலும்புகளைப் போன்றவை. கொத்தமல்லியில் சிலிக்கான், வைட்டமின் டி, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. எலும்புகளின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது வைட்டமின் டி, கால்சியம் சத்துக்கள்தான். மேலும், சிலிக்கானும் எலும்பு வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்குத் தேவை. கொத்தமல்லியின் இலைகளில், குறிப்பாக இலையின் மையப்பகுதியில் அதிக அளவில் கால்சியம் உள்ளது.  எலும்புகளின்  நெகிழ்வுத்தன்மைக்கும், உடைந்த எலும்புகள் மீண்டும் வளரவும், நீண்ட நாட்கள் வலுவாக இருக்கவும், எலும்பு மெலிதல் நோய் வராமல் தடுக்கவும், தினமும் 30 கிராம் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ரத்தம் - பீட்ரூட்


ன்று பெரும்பாலான பெண்களும் குழந்தைகளும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பதின் பருவப் பெண்களுக்கு வரும் தலையாய பிரச்னை ரத்தசோகை. ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவதால், ரத்தசோகை ஏற்படுகிறது. பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவுமுறைகளைப் பின்பற்றாததால், கருவுறும்போது ரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், குழந்தையின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். பீட்ரூட்டில் இரும்புச்சத்து நிறைவாக உள்ளது. இது ரத்த உற்பத்திக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது. ரத்தத்தின் நிறத்தில் இருக்கும் பீட்ரூட், ஒரு வகையில் ரத்த உற்பத்தித் தொழிற்சாலை.
பீட்ரூட்டில் ஃபோலிக் அமிலம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே ஆகியவை நிறைந்துள்ளன. ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான நைட்ரேட், ஆக்சிஜன் போன்றவற்றை பீட்ரூட் சாறு கொடுக்கும்.
தினமும் பீட்ரூட் சாறு குடித்தால், மலம், சிறுநீர் ஆகியவை ரத்தம் போல சிவப்பு நிறத்தில் வெளியேறும். இதற்குப் பயப்படத் தேவை இல்லை. பீட்ரூட் சாறு, உடலுக்குள் சென்று சரியாக வேலை செய்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறி இது.

புற்றுநோய் செல்கள் - புரோகோலி

ம்முடைய உடலில் தினசரி ஏராளமான புற்றுநோய் செல்கள் உருவாகின்றன. அதை நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிந்து அழித்துவிடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு ஏற்பட, நம்முடைய தவறான வாழ்வியல் பழக்கங்களும் உணவு பழக்கங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. புரோகோலியில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி6, சி, பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. பைடோகெமிக்கல்களும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளதால், புற்றுநோயை எதிர்க்கும் வல்லமை புரோகோலிக்கு உண்டு. `அமெரிக்க புற்றுநோய் ஆய்வு மையம்' புரோகோலியில் புற்றுநோயை அழிக்கக்கூடிய சத்துக்கள் உள்ளன   எனக்கண்டறிந்திருக்கிறது.
புரோகோலியில் உள்ள சல்ஃபரோபேன், கந்தகம் போன்ற சத்துக்கள் புற்றுநோய் செல்களை அழிக்கும். புற்றுநோய் வரவிடாமல் தடுக்கும். கணையம், பிராஸ்டேட், மார்பகம், வயிறு, நுரையீரல் போன்ற இடங்களில் உருவாகும் புற்றுநோய் செல்களை அழிக்கும் வல்லமை பெற்றது.
வாரத்தில் மூன்று நாட்கள், 100 கிராம் அளவுக்கு புரோகோலியைச் சாப்பிட்டுவந்தால், புற்றுநோய் செல்கள் அழிக்கப்படும் திறன் மேம்படும். ஆரோக்கியம் பெருகும்.



 கல்லீரல் பலப்பட

குடி அல்லது வேறு காரணங்களால் சேதமடைந்த கல்லீரலைப் பலப்படுத்தும் உணவுகள் கிரீன் ஆப்பிள், முட்டைகோஸ், அஸ்வகந்தா, அக்ரூட், சாமை, குதிரைவாலி, முள்ளங்கி, கீழாநெல்லி, நெல்லி. இந்த உணவுகள் கல்லீரல் செல்களைப் புத்துயிர் பெறச்செய்து, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பற்களின் நண்பன்
வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த சிட்ரஸ் பழங்கள், பால் பொருட்கள், ஆப்பிள், கேரட், கீரைகள் ஆகியவை பற்களைப் பாதுகாக்கும். ஊறுகாய், சோடா, குளிர் பானங்கள், மது, சிகரெட், காபி ஆகியவை பற்களுக்கு எதிரி.

ஆரோக்கியமான தசைக்கு

சைகளை ஆரோக்கியமாக்குவதில் ஒமேகா3 ஃபேட்டி அமிலங்களின் சத்து முக்கியமானது. மீன், ஃப்ளக்ஸ் விதைகள், அக்ரூட், புரோகோலி, பால் பொருட்கள், நல்லெண்ணெய், இஞ்சி, வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழங்களைச்சாப்பிடலாம்.

தசைநார்கள் வலுவாக

சைநார்களை உறுதிப்படுத்தும் உணவுகளான புரத உணவுகள், சிட்ரஸ் பழங்கள், தக்காளி, குடமிளகாய், மீன், கீரைகள் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

சிறுகுடல், பெருங்குடலுக்கு

பெருங்குடல் மற்றும் சிறுகுடலை ஆரோக்கியமாக்கும் உணவுகளான ப்ரோபயாடிக் உணவுகள் (தயிர், மோர், யோகர்ட், இட்லி மாவு), மீன், கீரைகள், அவரை, பீன்ஸ், வாழைத்தண்டு ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

பித்தப்பைக்கு

பித்தப்பைக்கு, ஃப்ரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகள், பருப்பு, பயறு வகைகள், மீன், ஆடை நீக்கப்பட்ட பால் பொருட்கள், கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சி, முழு தானி
யங்கள், சிறுதானியங்கள் ஆகியவை நன்மை தரக்கூடியவை. 

அழகிய கூந்தலுக்கு

கூந்தல் வளர புரதமும் வைட்டமின்களும் அவசியம். மீன், கீரைகள், பாதாம், அக்ரூட், சிவப்பு கொய்யா, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பச்சை நிறக் காய்கறிகள், முட்டை, சோயா, முழு தானியங்கள், கறிவேப்பிலை, பேரீச்சை, உலர் திராட்சை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

நகங்கள் நலம்பெற

கங்கள் நம் உடலின் ஆரோக்கியத்தைக் காண்பிக்கும் கண்ணாடி. நகங்கள் பலவீனமாகி உடைந்தாலே ஆரோக்கியமின்மையை உணர்த்துகிறது எனப் புரிந்துகொள்ளலாம். இதற்கு, முந்திரி, வாழை, முட்டை, ஆரஞ்சு, பாதாம், தோல் நீக்கப்பட்ட இறைச்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

நோய்களை எதிர்க்கும் ரெயின்போ காய்கறிகள்

பழங்கள், காய்கறிகள் உடலுக்குப் பலத்தை அளிப்பவை. அதிலும், வைட்டமின் ஏ மற்றும் சி கூட்டணியான ஆரஞ்சு  போன்ற மஞ்சள் நிற உணவுகளைத் தங்க உணவுகள் என்றே சொல்லலாம். இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. ஆரோக்கியத்தைத் தந்து, புத்துணர்வைக் கூட்டும் இந்த உணவுக் கூட்டணி, உடலின் வெளிப்புறத்தைப் பளபளபாக்கும். உட்புறத்தை வலுவாக்கும்.
உணவுகள்எலுமிச்சை, மாம்பழம், அன்னாசி, ஆரஞ்சு, கேரட், பப்பாளி, பரங்கிக்காய், உருளை, சர்க்கரைவள்ளிக்  கிழங்கு, வாழை, மக்காசோளம், கருணைக் கிழங்கு.
கறுப்பு, கருநீல நிறம் கொண்ட உணவுகளில் ஃபிளேவனாய்ட்ஸ், ஆந்தோசைனின் மற்றும் ஐசோஃப்ளேவன்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. இவை, நினைவாற்றல் குறைவு முதல் புற்றுநோய் வரை, பல பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
உணவுகள்: கறுப்பு உளுந்து, பீட்ரூட், திராட்சை, கருஞ்சீரகம், கறுப்பு எள், கறுப்பு அரிசி, கத்தரிக்காய், மிளகு, பிளாக் டீ, நாவல் பழம், கறுப்பு உப்பு, பேரீச்சை.
சிவப்பு மற்றும் அடர்சிவப்பு நிறக் காய்கறி பழங்களில் ஆந்தோசைனின், லைகோபீன்  ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. இவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், சில வகை புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம். குறிப்பாக, லைகோபீன் சத்து, பிராஸ்டேட் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. அதனால், இந்தக் காய்கறிகளை தினசரி சேர்த்துக்கொள்ளும்படி, அமெரிக்காவின் தேசியப் புற்றுநோய் நிறுவனம் பரிந்துரை செய்கிறது. ஆந்தோசைனின் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
உணவுகள்: மாதுளை, தக்காளி, சிவப்பு மிளகாய், ஆப்பிள், தர்பூசணி, சிவப்பு கொய்யா, ஸ்ட்ராபெர்ரி
அன்றாட உணவுகளில் இயற்கையாகவே கிடைக்கக்கூடிய வெள்ளை உணவுகள் சத்துக்கள் நிறைந்தவை. அவற்றைத் தயக்கமின்றிச் சாப்பிடலாம். செயற்கை முறையில் வெள்ளையாக்கப்பட்ட சர்க்கரை, உப்பு போன்ற உணவுகள்தான் உடலுக்குக் கெடுதியை ஏற்படுத்தக்கூடியவை. வெள்ளை உணவுகளில் இதயத்துக்கு நன்மைகளைச் செய்யும் சத்துக்கள் இருக்கின்றன. மேலும், பூண்டு, வெங்காயம் போன்றவை புற்றுநோயைக்கூட தடுக்கும் என்கிறது தேசிய புற்றுநோய் நிறுவனம்.
உணவுகள்: முள்ளங்கி, வெங்காயம், பூண்டு, காலிஃபிளவர், காளான், தேங்காய், முட்டைகோஸ்.
உடலில் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் இம்யூன் செல்கள் பச்சை நிறக் காய்கறிகளில் நிறைந்துள்ளன. இவை, கெட்ட பாக்டீரியாக்களை குடலிருந்து நீக்குகிறது. உடல் எடையைக் குறைக்கும் சக்தி பச்சை நிற உணவுகளுக்கு உண்டு. வயிறு தொடர்பான புற்றுநோய்களை அழிக்கவல்லது. செரிமானச் சக்தியை மேம்படுத்தும். அதிகமான அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்திருக்கும்.
 
உணவுகள்: வெள்ளரி, அவரை, கொத்தமல்லி, குடமிளகாய், கொத்தவரங்காய், வெண்டைக்காய், கீரைகள், கறிவேப்பிலை, நூல்கோல், சௌசௌ, புடலங்காய், பீர்க்கங்காய், பச்சை மிளகாய்.

ப்ரீத்தி, படங்கள்:  அ.பார்த்திபன், 
ரா.வருண் பிரசாத்