Thursday, March 13, 2014

வீட்டுக் கடன்: கட்டாயம் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! சி.சரவணன்

இன்றைக்குச் சொத்து வாங்குபவர்களில் பெரும்பாலானோர், வீட்டுக் கடன் மூலமாகவே வாங்குகிறார்கள். வீட்டுக் கடனுக்குச் செல்லும்போது பல விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். இல்லையெனில் சொந்த வீட்டில் சோகமாக வசிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். வீட்டுக் கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 10 முக்கிய அம்சங்களைப் பட்டியல் போட்டுத் தந்தார், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் உதவிப் பொதுமேலாளரும் வீட்டுக் கடன் ஆலோசகருமான ஆர்.கணேசன்.
1. மார்ஜின் மணி!
தனி வீடோ அல்லது அடுக்குமாடிக் குடியிருப்போ, எதை வாங்குவதாக இருந்தாலும் மொத்த தொகைக்கும் கடன் தரமாட்டார்கள். சுமார் 20 சதவிகித தொகையை வீடு வாங்குபவர் தன் கையில் இருந்துதான் போடவேண்டி இருக்கும். சிலர் இந்த மார்ஜின் தொகைக்கு பெர்சனல் லோன் வாங்குகிறார்கள். இதனால்,  வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ, பெர்சனல் லோன் இஎம்ஐ என அதிகத் தொகை சம்பளத்திலிருந்து போகும். அந்த வகையில் பணச் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.
இதைத் தவிர்க்க இந்த மார்ஜின் தொகையை முன்னரே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் அல்லது கடன் தொகையைக் குறைத்து சிறிய வீட்டை வாங்கலாம். மனை வாங்கி வீடு கட்டினால் இப்போது சிறிய வீடாகக் கட்டிக்கொண்டு, பிற்பாடு அந்த வீட்டை விரிவாக்கம் செய்யலாம். வீட்டுக் கடன் மாத தவணை கைக்குக் கிடைக்கும் சம்பளத்தில் 40-45 சதவிகிதத்தைத் தாண்டாதவாறு இருத்தல் அவசியம்.
2. கடன் வாங்கும் வங்கி / நிறுவனம் தேர்வு!
இன்றைக்குப் பொதுத்துறை வங்கிகள், பழைய தலைமுறை தனியார் வங்கிகள், புதிய தலைமுறை தனியார் வங்கிகள், தனியார் வீட்டு வசதி நிறுவனங்கள், பொதுத்துறை வீட்டு வசதி நிறுவனங்கள் எனப்  பல வங்கிகள் வீட்டுக் கடன் வழங்குகிறது.  
அரசு சார்ந்த நிறுவனங்களில் கடன் வாங்க, நீங்கள் அவர்களைத் தேடி போகவேண்டி இருக்கும். தனியார் என்றால் உங்களின் வீடு தேடி வந்து கடனுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துவிடுவார்கள்.பொதுவாக, தனியார் வங்கிகள் / தனியார் வீட்டு வசதி நிறுவனங்களை விடப் பொதுத்துறை வங்கிகள் / பொதுத்துறை வீட்டு வசதி நிறுவனங் களில் கடனுக்கான வட்டி சுமார் 1% குறைவாக இருக்கும்.
வீட்டுக் கடன் என்பது ஒரு முறை செய்யப்படும் விஷயம் என்பதால் வங்கி அமைந்திருக்கும் இடத்துக்கான தொலைவை பார்க்க வேண்டியதில்லை. வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கிதான் நம் வீடு அல்லது அலுவலகத்தின் அருகில் இருக்க வேண்டும். வீட்டுக் கடனுக்கு இது தேவை இல்லை.இ.சி.எஸ், முன்தேதியிட்ட காசோலைகளைத் தருவதன் மூலம் தூரம் ஒரு சுமையாக இருக்காது. வசதி மற்றும் வட்டி விகிதத்தைக் கவனித்துத் தூரமாக இருக்கும் வங்கி / நிறுவனத்தையும் தேர்வு செய்து வீட்டுக் கடன் வாங்கலாம்.
3. வீட்டுக் கடனுக்கான ஒப்புதல்!
வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் அளிப்பது வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தின் கிளையா அல்லது அதன் மத்திய பரிசீலனை மையமா (சென்ட்ரலைஸ்டு பிராசஸிங் சென்டர்) என்பதைக் கவனிப்பது முக்கியம். கிளை அலுவலகமே கடன் வழங்கிவிடும் என்றால் விரைவாகக் கடன் கிடைத்துவிடும்.வங்கிகளின் மத்திய பரிசீலனை மையத்தில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்தக்
கூட்டத்தில் உங்களுக்குக் கடன் கிடைக்க அதிகநாள் ஆகக்கூடும். எனவே, வங்கிக் கிளைகளே கடனுக்கு ஒப்புதல் வழங்கும் விதமாக இருப்பதைத் தேர்ந்தெடுத்து கடன் வாங்குவது நல்லது.
4. கட்டணங்கள் முக்கியம்!
வீட்டுக் கடன் வாங்கும்போது பரிசீலனைக் கட்டணம், ஆவணக் கட்டணம் என வங்கிகள்/வீட்டு வசதி நிறுவனங்கள் குறிப்பிட்ட சதவிகிதக் கட்டணத்தை வசூலிக்கும். இவை தவிர, பில்டிங் வேல்யூவேஷன், லீகல் ஒப்பீனியன் எனத் தனியாகக் கட்டணம் வாங்கும் வங்கிகளும் இருக்கின்றன. சில வங்கிகளில், முதலில் வாங்கப்படும் பரிசீலனைக் கட்டணத்திலே இந்த வேலையும் அடங்கிவிடும். அந்த வகையில், மொத்தமாகக் கட்டணங்கள் எல்லாவற்றையும் கூட்டி, எந்த வங்கியில் குறைவாக இருக்கிறதோ, அதில் கடன் வாங்கும் முயற்சியை மேற்கொள்ளலாம்.
5. கான்ட்ராக்டரின் தரம்!
நீங்கள் வீடு வாங்கப்போகும் புரமோட்டர்/ பிளான்/ கான்ட்ராக்டரின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை அறிந்து அதன்பிறகு தேர்வு செய்வது நல்லது. இல்லை எனில் சொன்ன நேரத்தில் உங்களுக்கு வீட்டை முடித்துச் சாவியைத் தருவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நீங்கள் வீடு வாங்கப்போகும் புரமோட்டர் அல்லது உங்களுக்கு வீடு கட்டித் தரப்போகிற பில்டரை பற்றி நன்றாக விசாரித்து அதன் பிறகு முடிவு செய்யுங்கள்.
6. கடனுக்கான காசோலை!
மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, வீட்டுக் கடனுக்கான கடன் காசோலையை புரமோட்டர்/பில்டர்/கான்ட்ராக்டருக்கு வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனம் தரும்போது உங்களுக்குத் தகவல் தெரிவித்துவிட்டுதான் தரவேண்டும் என்பதை ஆரம்பத்திலே தெரிவித்துவிட வேண்டும். இல்லையெனில் பில்டரோ / கான்ட்ராக்டரோ வீட்டு வேலையைச் சரிவர முடிக்காமல் உங்களுக்குத் தெரியாமலேயே பணத்தை வாங்கிச் சென்றுவிடுவார். எனவே, ஜாக்கிரதை!
7. வட்டி விகிதம்!
வீட்டுக் கடனை பொறுத்தவரை யில், நிலையான (ஃபிக்ஸட்) வட்டி, மாறுபடும் (ஃப்ளோட்) வட்டி என இருவிதமாக வட்டி விகிதம் இருக்கின்றது. நிலையான வட்டி என்பது முதலில்வரும் 3 - 5 வருடங் களுக்கு மட்டும்தான். அதன்பிறகு அப்போதுள்ள நிலையான வட்டி அல்லது ஃப்ளோட்டிங் வட்டியைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
ஃப்ளோட்டிங் வட்டி விகிதம் என்பது கடன் சந்தை வட்டி விகித மாற்றத்துக்கு ஏற்ப ஏறும், இறங்கும்.  நிலையான மற்றும் மாறுபடும் வட்டி விகிதத்துக்கு இடையே சுமார் 1.52% வித்தியாசம் இருப்பதால் தற்போதைய சூழ்நிலையில் ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தைத் தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும். பொதுவாக, கடனுக்கான வட்டி விகிதம் குறையும் சூழ்நிலை நிலவினால், ஃப்ளோட்டிங் வட்டியைத் தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.
மேலும், நீங்கள் முன்னணி நிறுவனத்தில் வேலை பார்ப்பவராக இருந்தால், சிபில் ரேட்டிங்கில் அதிக ஸ்கோர்கள் இருந்தால் வட்டியில் பேரம் பேசி குறைக்க முடியும். வட்டியை கவனிக்கும் அதே நேரத்தில், 1 லட்சம் ரூபாய்க்கு எவ்வளவு இஎம்ஐ என்பதையும் கவனியுங்கள். கடனுக்கான வட்டியை, கடன் தொகை குறையக் குறையக் கணக்கிடும் முறை, ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடும் முறை என இரண்டுமுறை இருக்கின்றன. கடன் தொகை குறையக் குறையக் கணக்கிடும் முறையில் வட்டிக்குச் செல்லும் தொகை குறைவாக இருக்கும். அந்த வகையில் எந்த வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தில் இஎம்ஐ குறைவாக இருக்கிறதோ, அதைத் தேர்வு செய்யுங்கள்.
8. கடனைத் திரும்பக் கட்டும் காலம்!
வாங்கிய கடனை குறைந்த ஆண்டு களில் 5 - 10 ஆண்டுகளில் கட்டினால், மாத தவணை அதிகமாக இருக்கும். இதுவே அதிக ஆண்டுகளில் 15-20 ஆண்டுகளில் கட்டினால் மாத தவணை குறைவாக இருக்கும். அதேநேரத்தில், குறைந்த ஆண்டுகளில் கட்டினால் வட்டிக்குச் செல்லும் தொகை குறைவாக இருக்கும். ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க, வட்டிக்கு போகும் தொகை அதிகமாக இருக்கும். இவற்றை அலசி ஆராய்ந்து உங்களால் கட்டக்கூடிய தொகையை இஎம்ஐ-ஆகக் கேட்டுப் பெறுங்கள். பிற்பாடு சம்பளம் உயர்ந்தபிறகு அதிகத்  தொகையைக் கட்டுவதன் மூலம் வட்டியை மிச்சப்படுத்தலாம்.
9. கடன் தொகை வழங்கும் நிலை...
வீடு கட்டுவது என்றால் அஸ்திவாரம், பிளிந்த், நிலை, ரூப் எனப் பலவாறாகப் பிரித்து வீட்டைக் கட்ட கடன் தொகையை வழங்கும். சில வங்கிகளில் வங்கி மேலாளர்களே வீட்டைப் பார்த்து கடன் தொகையை வழங்கிவிடுவார்கள். இதுபோன்ற நிலையில் வீட்டு வேலை தடைபடாது.சில வங்கிகளில் இன்ஜினீயர்கள் வந்து பார்த்து சர்ட்டிஃபிகேட் தந்தால் தான் அடுத்தநிலைக் கடனைத் தருவார்கள். அப்போது காலதாமதம் ஏற்படக்கூடும். இதுபோன்ற வங்கிகளைத் தவிர்ப்பது நல்லது. இந்த விஷயத்தை வங்கி மேலாளரிடம் ஆரம்பத்திலேயே கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.
10. மாரடோரியம் பீரியடு!
வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டுவது எனில் கட்டுமானம் முடிய எப்படியும் 18 மாதம் ஆகிவிடும். இந்தக் காலகட்டத்தில் மொத்த வீட்டுக் கடன், 3 அல்லது 4 பிரிவாகப் பிரித்து வழங்கப்பட்டிருக்கும். இந்தக் காலத்தில் வீட்டுக் கடனுக்கான வட்டி சேர்ந்திருக்கும். இதனை 'ப்ரீ இஎம்ஐ’ என்பார்கள். இந்த வட்டியை மாதாமாதம் கட்டி வருவது நல்லது.இல்லையெனில் இந்த வட்டியையும் வீட்டுக் கடனாக மாற்றிவிடுவார்கள். நீங்கள் கூடுதல் இஎம்ஐ கட்ட வேண்டிவரும்'' என்றார் கணேசன்.
வீட்டுக் கடன் வாங்கப் போகிறவர்கள் இந்த 10 விஷயங் களையும் கவனிக்கலாமே!
படங்கள்: பா.காளிமுத்து,
ர.சதானந்த்.

- Nanayam Vikatan

ஆறாம் திணை - 79 மருத்துவர் கு.சிவராமன்

டந்த சில நூற்றாண்டுகளாகவே 'காயகல்பம்’ என்ற நுட்பமான அறிவியல், வணிகப்பிடிக்குள் சிக்கிச் சீரழிந்து வருகிறது. சிக்ஸ்பேக் வைத்த பலசாலி ஒருவர், தன் கையையும் காலையும் முறுக்கி ஒரு கண்ணாடிப் புட்டியைக் கையில் வைத்துக்கொண்டு, ''இந்தக் காயகல்ப லேகியத்தைச் சாப்பிட்டதால்தான் இந்த முறுக்கு உடம்பும், 'அந்த’ விஷயத்தில் வீரியமும் கிடைத்தது'' என்று கூறும் விளம்பரங்கள் இன்றைக்கு அதிகம். காயகல்பம் என்றாலே, ஆண்மைக் குறைவுக்கான மருந்து என அர்த்தமற்ற ஒரு காரணத்தைக் கற்பித்தன அறமற்ற வணிக வியூகங்கள்!
அன்று, வாழ்வை 'இறைவன்’ எனும் புள்ளியில் விரித்துப் பார்த்தவரும் சரி, 'இயற்கை’ எனும் புள்ளியில் சுருக்கிப் பார்த்தவரும் சரி, நோயற்று ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ்வது மட்டுமே அடிப்படை ஆரோக்கியம் என்பதைத் தெள்ளத்தெளிவாக அறிந்திருந்தனர்.
'உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன்... உயிர் வளர்த்தேனே!’ என்ற திருமந்திரமும், 'உயிர்க் குருதியெல்லாம் உடம்பின் பயனே... அயர்ப்பின்றி யாதியை நாடு’ எனும் ஒளவையின் வரிகள் சொன்னது அதைத்தான்.
சுருக்கமாகச் சொன்னால், அந்தக் காலத்திலேயே புழக்கத்தில் இருந்த தடுப்பூசி டானிக்குகள் என்றோ, புற்றாகும் மாற்றத்தைத் தடுக்கும் மருந்தாகவோகூட காயகல்ப அறிவியலைப் புரிந்துகொள்ளலாம். சில கற்ப மருந்துகளை, நோயில்லா காலத்தில் சில உணவு கட்டுப்பாடுகளுடன் ஒரு மண்டலம் அல்லது குறிப்பிட்ட சில நாட்கள் சாப்பிடுகையில் உடலுக்குப் பொதுவான நோய் எதிர்ப்பாற்றல் கூடும். உடல் தோல் சுருக்கம், முடி நரைப்பது நிற்கும் அல்லது தள்ளிப்போகும் என்ற கருத்தாக்கம் இருந்திருக்கிறது!
'அப்போ ஆயுள் அபாரமாக அதிகரிக்குமா? இப்போ நீங்களே அறிவியலுக்கு எதிராப் பேசுறீங்களே!’ எனச் சண்டைக்கு வர வேண்டாம்.
ஒரு மருந்து அல்லது நலப்புரிதல், வயோதிகத்தைத் தள்ளிப்போட உதவுகிறது என்றால், இன்றைய விஞ்ஞான புரிதலின்படி செல் அழிவை மீட்டெடுக்கும் பணியைச்           செய்யக்கூடிய தாவர நுண்கூறுகள் அதில் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் பொருள்.
பேராசிரியர் ரொனால்டு டேஃபீனோ என்கிற அமெரிக்க விஞ்ஞானி, டெலோமெரேஸ் (Telomerase) எனும் நொதியின் மூலம் வயோதிகத்தைக் கட்டுப்படுத்தலாம் எனும் நம்பிக்கையை எலிகள் மூலம் ஆய்வு செய்து நிரூபித்து, இது மனிதனிலும் சாத்தியம் என்று எழுதினார்.
உலக விஞ்ஞானிகள் இடையே நன்மதிப்பு பெற்ற அறிவியல் பத்திரிகையான 'நேச்சர்’-ல் அந்த ஆய்வு 2010-ல் வெளியானது. அறிவியல் சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தாலும், டெலோமெரேஸ் நல்ல செல்லைப் புற்றாக்க விடாது தடுக்கும் என டேஃபீனோ தொடர்ந்து சொல்லிவந்தார்.
காயகல்பம் என்றதும் முன்பு சொன்னபடி 'அண்டாகா கசம்... அபூகா ஹுகும்’ கதையெல்லாம் அல்ல. இஞ்சித் தேனூறல், கற்றாழை, வேம்பு, கரிசாலை, பொன்னாங்கண்ணிக் கீரை, மணத்தக்காளி, மஞ்சள் பூசணி இவற்றைத்தான் நோயற்ற வாழ்வுக்கான கற்ப மூலிகைகளாகக் கருவூரார் சித்தர் சொல்கிறார். கருவூரார், வாத காவியத்தில் சொன்ன          108 மூலிகைகளில் பல, காய்கறி மார்கெட்டிலும், வாய்க்கால் வரப்பு ஓரத்திலும், கோடை வாசஸ்தல மலைகளிலும் கிடைப்பவைதான்.
யணத்தில் காலில் நீர் கோப்பவருக்கு சுரைக்காய்க் கூட்டு, தூக்கம் கெடுத்து கண்விழித்துப் பணியாற்றி கண் எரிச்சலுடன் உடல் சூடு மிகுந்து நிற்போருக்கு கீழாநெல்லியும் மோரும், மந்தபுத்தி போக சிறுகீரை மிளகுச் சேர்த்துக் கூட்டும், சளி பிடித்தவருக்குத் தூதுவளை ரசமும், எப்போதுமே மெலிந்து இருப்போருக்கு தேற்றான்கொட்டைப் பொடியும், மேகவெட்டைக்கு ஓரிதழ்தாமரை... என கல்ப மருந்துப் பட்டியல் தமிழர் மருத்துவப் புரிதலில் ஏராளம் உண்டு.
'காலமே யிஞ்சியுண்ணக் காட்டினார் சூத்திரத்தில் மாலையதிலே கடுக்காய் மத்தியான் சுக்கருந்த’ என்ற திருவள்ளுவ நாயனார் கற்ப பாடல் சொல்வது, 'காலையில் இஞ்சி, கடும்பகலில் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிடு’ என்பதுதான். 'அப்ப மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எல்லாம் வேண்டாம். பப்புல போய் எல்லா வயசிலும் ஆடலாம்’ என்ற பொருள் அல்ல இதற்கு. எந்தக் கற்பமும் முறையான யோகப் பயிற்சியுடன் இருந்தால்தான் பயன் தரும். 'வளியினை வாங்கி வயத்தில் அடக்கில் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்’ எனத் திருமூலர் மூச்சுப் பயிற்சியில் சொன்னதும் அதைத்தான்.
அரிஸ்டாட்டில், கேலன், ஹிப்போகிரட்டஸில் இருந்து இன்றைய நவீன மருத்துவப் புரிதல் வந்தது போல, நம் தேரனும், திருமூலனும், அகத்தியனும் சொன்னதை ஆய்ந்தும், அலசியும், விரித்தும் பயனாக்க சமகால விஞ்ஞானிகள் தயங்குவது மடமை! அதுமட்டுமல்ல, வெளிநாட்டு மரபணுவுக்கு நம் ஒட்டுமொத்த     பாரம்பரிய உணவு விதைகளையும் காவுகொடுத்து, மரபணு மாற்றிய பயிர்களின் கள ஆய்வுக்கு மட்டும் துள்ளியெழும் நவீன ஆய்வுகள், 'ஏல... செத்த சும்மா இரு. அவுக எப்படியும் காப்பாத்திருவாக’ என மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் அப்பாவி ஏழைத் தம்பதிக்குச் செய்யும் சமூக அநீதியும்கூட!
- பரிமாறுவேன்...

- Vikatan

ஆறாம் திணை - 78 மருத்துவர் கு.சிவராமன்

நான்கு நாள் காய்ச்சலில் நரம்பில் நோய்வாய்ப்பட்டு நடக்க முடியாமல்போன போலியோவைக் கிட்டத்தட்ட ஓரங்கட்டியேவிட்டோம். மூன்றே நாட்களில் மூளைக்காய்ச்சல் வந்து மூளை வளர்ச்சி ஸ்தம்பிக்கும் நோய்கூட வெகுவாக அருகிவிட்டது. ஆனால், சமீபத்தில் சாதாரணக் காய்ச்சல் வந்துபோன பிறகு, இரண்டு, மூன்று மாதங்களாக நடக்கும்போது குதிகாலில், கால்மூட்டில் வரும் புதுவித மூட்டு வலி நோய் பெருகிவருகிறது.
'மூட்டுகளை விடுங்க... சும்மா எழுதும்போதும், 'ஓ’வுக்காக விரலைச் சுழிக்கும்போதும், 'விண்’னு வலிக்குதுங்க. வலி மாத்திரையைத் தவிர வேறு வழியே இல்லையா?’ என்று அதிகம் பேர் விசாரிக்கின்றனர். 'சிக்குன்குனியாவுக்குப் பிந்தைய மூட்டு வலி’ (POST CHIKUNGUNYA) என்று வலியோடு அழைக்கப்படும் இந்த மூட்டுவலி, வயதானால் வரும் மூட்டு வலியோ அல்லது தனக்குத்தானே சண்டையிட்டுக்கொண்டு (auto immune) வரும் ருமட்டாய்டு மூட்டு வலியோ கிடையாது.
வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் சமாசாரங்கள், வந்த வேலை முடிந்த பின்னரும் அங்கு இருந்து நகராமல் கூடுதல் நாட்கள் மூட்டுகளுக்கு இடையில் தங்கியிருப்பதன் விளைவே இது. ஏற்கெனவே ருமட்டாய்டு மூட்டு வலி இருப்போருக்கு இந்த வைரஸ் காய்ச்சல் மூட்டு வலியும் சேர்ந்துகொள்ளும்போது, வலி தீவிரமாக இருப்பதும் நீடிப்பதும் உண்டு.
சாதாரணக் கொசு கொண்டுசேர்க்கும் அசாதாரண நோய்களில் ஒன்றுதான் சிக்குன்குனியா. 1960-களில் ஆப்பிரிக்காவில் கடும் சேட்டை செய்த பின், பல காலம் அமைதியாக இருந்துவந்த இந்தக் கொசு வைரஸ் கூட்டணி, 2006 டிசம்பரில் மறுபிரவேசம் நடத்தி கடந்த ஆறேழு ஆண்டுகளில் இந்தியாவிலும், இன்னும் சில கிழக்கு ஆசிய நாடுகளிலும் அட்டூழியம் பண்ணிக்கொண்டு இருக்கிறது. தீவிர ஜுரம், மூட்டு வலி, சிவப்புப் படைகளுடன் வரும் சிக்குன்குனியாவை நம் ஊர் நிலவேம்புக் குடிநீரைக்கொண்டு தீர்த்துக்கொள்ளலாம். அதன் பிறகும் தொடரும் வலிக்கு, வலிநிவாரணி மட்டும் போதாது. ஜுரம் விட்ட பின்னரும் சில காலம் இந்த நிலவேம்புக் குடிநீரை காலை, மாலை என வாரம் இரு நாள் சாப்பிடுவதுடன் உணவிலும் கொஞ்சம் அக்கறையாக இருப்பது அவசியம்.
'புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்’ என்கிறது சித்த மருத்துவம். நோயணுகா விதியில் 'கருணையன்றி பிற புசியோம்’ என தேரன் சொன்ன பிடிகருணைக்கிழங்கைத் தவிர பிற கிழங்குகளை மூட்டு வலிக்காரர்கள் சாப்பிடாது இருப்பதும் அவசியம். சிறுநீர் நன்றாக வெளியேறவைக்கும் வெள்ளரி, நீர்முள்ளி, பார்லி முதலான உணவுகளையும் அன்றாடம் சேர்ப்பதுடன், 'ஒமேகா 3’ சத்து நிரம்பியிருக்கும் மீனையும் சாப்பிட வேண்டும்.
கவுட் (GOUT) எனப்படும் யூரிக் அமில மூட்டு வலிக்காரரைத் தவிர பிறர் மீன், மீன் எண்ணெய் ஆகியவற்றை உட்கொள்ளலாம். கவுட் எனும் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் வரும் மூட்டு வலிக்கு நண்டு, மீன், கோழி இவற்றில் இருந்து பெறப்படும் விலங்கினப் புரதங்களைத் தவிர்த்தே ஆக வேண்டும். அதிகபட்ச பியூரின்களைக்கொண்ட காலிஃப்ளவர் மற்றும் சில கீரை வகைகளை 'கவுட்’ மூட்டு வலிக்காரர்கள் உணவில் தவிர்ப்பது மிக முக்கியம். ஆனால், 'முடக்கறுத்தான் கீரை’ சேர்த்துச் செய்யப்படும் அடை/தோசை, மூட்டு வலிக்குக் காரணமான அதிகபட்ச வாதத்தன்மையைப் போக்கும். அதை எல்லாவித மூட்டு வலிகளால் அவதிப்படுவோரும் சாப்பிடலாம்.
வயதாகி மூட்டு தேய்ந்துவரும் ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ் எனும் வயோதிக மூட்டு வலிக்கு கம்பங்கூழ், பிரண்டைத் துவையல் உன்னத உணவு. இது கால்சியமும் தந்து, கூடவே ஆன்ட்டி-ஆக்சிடென்ட்டும் அளிக்கும். எல்லா மூட்டு வலிகளுக்குமே இன்று வாக்ஸினுக்கான அமெரிக்கக் காப்புரிமை வரை பயணித்துவிட்ட நம்ம ஊர் அமுக்கரா கிழங்குச் சூரணம், மூட்டுகளை, தசைகளை, கார்டிலேஜை என அனைத்தையும் வலுப்படுத்தி, கொசுறாக வயோதிகத் தள்ளாமையையும் சரிப்படுத்தும். அன்று தமிழ் மருத்துவம் சொன்ன அத்தனையையும் இன்று நவீன அறிவியல் தரவுகளும் ஆதரிக்கின்றன.
'கொசுவில் இருந்து மலேரியா வரும்னு தெரியும். மூட்டு வலியுமா?’ எனப் பதறும் நாம், அப்போதும் சுற்றுச்சூழலைச் செப்பனிட முயலாமல், 'பெண் கொசுவுக்குக் குடும்பக் கட்டுப்பாடு பண்ணலாமா... அதன் மரபணுவை மாற்றிவிடலாமா?’ என ஹாலிவுட் சினிமா வில்லன் கணக்காகப் பயங்கர யோசனைகளைத்தான் விதைக்கிறோம்!
இயற்கையான ஏரிகளும், குளம்-குட்டைகளும் அதன் சூழலியல் பன்முகத்தன்மையால் கொசுவை இயற்கையாகவே கட்டுப்படுத்தும். ஏரியின் பச்சைப் பாசிகள்தான் கொசுமுட்டைக்கான வாழ்விடம். கொசு முட்டை, மீனுக்கான உணவிடம். மீனும் சில மெல்லுடலிகளும் அங்கு வாழும் நாரைக்கான உணவு.
இந்தப் பல்லுயிர் பன்முகச் சுழற்சி புரியாமல், 'வளர்ச்சி’ என்ற பெயரில் கழிவுகளைக் கொட்டி 75 சதுர கிலோமீட்டராக இருந்த காஷ்மீர் தால் ஏரியை 12 சதுர கிலோமீட்டருக்குச் சுருக்கிவிட்டோம். முடிந்தமட்டும் நல்ல நீரை உறிஞ்சிவிட்டு டெல்லியின் யமுனை, சென்னையின் கூவம்... இரண்டையும் கழிவுநீர் சாலைகளாக்கிவிட்டோம்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய ஏரி, பழவேற்காடு லகூன். அதன் 450 சதுர கிலோமீட்டர் அளவு, இப்போது 360 சதுர கிலோமீட்டருக்குச் சுருங்கிவிட்டதாம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்த ஏரி அரேபியர்களும் போர்த்துக்கீசியர்களும் பயன்படுத்திய ஒரு துறைமுகம் என்பது சென்னைவாசிகளுக்கே தெரியாத ஓர் ஆச்சரியத் தகவல்!
செங்கல்பட்டைச் சுற்றி சுமார் 2,000 ஏரி, குளங்கள் இருந்ததாக மிகச் சமீப வரலாறுகூட சொல்கிறது. ஆனால், அப்போது கொசு கடித்ததாகவோ, கூட்டமாக வந்து நம் உடலில் குத்தித் துளைத்ததாகவோ தடயங்கள் இல்லை. இன்றோ கொசு குசலம் விசாரிக்காத குடியிருப்பே இல்லை. நல்லவேளை, கொசுக்கடி மூலம் ஹெச்.ஐ.வி., காமாலை போன்றவை பரவுவது இல்லை. ஒருவேளை வருங்காலத்தில் கொசு கடித்து உயிர்க்கொல்லி வைரஸோ அல்லது ஆண்மைக்குறைவோ வந்தால் மட்டும்தான் சூழலைக் காத்து சுகாதாரத்தை மீட்க முயல்வோமோ!?
- பரிமாறுவேன்...

- Vikatan

ஆறாம் திணை - 77 மருத்துவர் கு.சிவராமன்

'கலர்கலராகக் கனவுகள் மட்டும் இருந்தால் பத்தாது; உணவும் இருக்க வேண்டும்’ என்கிறது உணவு அறிவியல். சில மணங்களை மனம் ரசிப்பதற்கு, மூளைக்குச் சில வண்ணங்கள் தேவைப்படு கின்றனவாம். ஆதலால், உணவில் வண்ணம் தீட்டும் வணிகம், ஒரு வருடத்துக்குக் கிட்டத்தட்ட 2,200 மில்லியன் டாலருக்கு நடக்கிறது!
ஹோட்டலில் செக்கச்செவேலென இருக்கும் தந்தூரி சிக்கனையும் சில்லி சிக்கனையும் சாப்பிட்டுவிட்டு கையை, சமையல் பாத்திரம் கழுவுவதுபோல் எலுமிச்சைச் சாறு, சோப்புத் தண்ணீர் எல்லாம் விட்டுக் கழுவிய பின்னரும் கையில் இளஞ்சிவப்பாக ஒட்டியிருப்பது, கோழியில் இருந்தோ, குழம்பில் போட்ட மிளகாய் வற்றலில் இருந்தோ வந்தது கிடையாது. உங்கள் கண்களைக் கவர அதில் தூவிய 'ரெட் டை 40’ எனும் 'ஆசோ டை’யின் எச்சமாக இருக்கலாம்.
பெட்ரோலில் இருந்து பிரித்து எடுக்கப்படும் இந்த ரசாயன நிறமி வகைகள்தாம் பஞ்சு மிட்டாய், கேசரி, தந்தூரி சிக்கன்களிலும் பெருவாரியாகச் சேர்க்கப்படுகின்றன. சிக்கனும், பஞ்சுமிட்டாயும், கேசரியும் ரத்தச் சிவப்பாக இருந்தால்தான் பிடிக்கும் என்றால், ஒருவேளை ரத்தம் வற்றும் புற்றுநோயும் கூடவே வரலாம் என்கிறது இன்றைய ஆய்வுகள். பல நாடுகள் அந்த நிறமிகளைத் தடையும் செய்திருக்கின்றன. இப்படிச் செயற்கையாக இல்லாமல், எத்தனை நிறங்கள் இயற்கை உணவில் இருக்கின்றன என உற்றுப்பார்த்தால் ஆச்சரியம்!
தாவரம் தன் வளர்சிதை மாற்றத்தில் சேமித்துவைக்கும் பொருள்தாம் இந்தத் தாவர நிறமிகள். 'பாலிபீனால்கள் குழுமம்’ என்று தாவரவியலாளரால் அழைக்கப்படும் சத்துகளில்தான், இந்த நிறமிகளைத் தரும் சத்துகள் அனைத்தும் அடங்கும். இவை, தாவரம் தன்னை அல்ட்ரா வயலெட் கதிர்களில் இருந்தும், அழிச்சாட்டியம் செய்யும் சில கிருமிகளில் இருந்தும் பாதுகாத்துக்கொள்ள உருவாக்கிக்கொண்டவை. மனிதன் அதனைச் சாப்பிடும்போது, அதையும் தாண்டி, சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு முதலான தொற்றா நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் தாக்காதபடி உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றல் தருவதில் பெரும் பயன் தருகிறது!
'ஓ... அப்போ இந்த பாலிபீனால் மாத்திரை எங்கே கிடைக்கும்?’ என்று உடனே இணையத்தில் தேட வேண்டாம்.
பால் சேர்க்காத ஒரு கப் தேநீரில் (100-150 மி.கி.) எளிதில் கிடைக்கும். க்ரீன் டீயில் இந்தச் சத்து கூடுதல். 100 கிராம் கறுப்புப் பன்னீர் திராட்சையோ, கருநீல நாவல் பழமோ, சிவந்த ஆப்பிளோ, பப்பாளியோ, மாதுளையோ, உங்களுக்கு (200-300 மி.கி.) பாலிபீனாலைத் தரக்கூடும். இந்தப் பழங்கள் மிகவும் கனிவதற்கு முன்பு, கொஞ்சம் இளங்காயாக இருந்தால் பீனாலிக் அமிலங்கள் சற்று அதிக அளவில் கிடைக்கும். அதிகம் பழுத்திடாத இளங்கொய்யாவை சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பதும், 'வாழை இளம் பிஞ்சொழிய கனியருந்தல் செய்யோம்!’ என, சித்த மருத்துவ நோயணுகா விதி பாடியதும் இதனால்தான்.
அதே சமயம் ஆன்தோசயனின் எனும் நிறமிச் சத்துகளோ, நன்கு பழுக்கும்போது பழத்தோலில் உருவாகிறது. ஆதலால் மாதுளை, பப்பாளி, தக்காளி, மாம்பழம் ஆகியவற்றை நன்கு கனிந்த பின்னர் சாப்பிடுவது சிறந்தது. வெறும் வயிற்றில் வேறு உணவு இல்லாத வேளையில் பழங்கள் உள்ளே சென்றால்தான் மருத்துவப் பயன்தரும் அதன் நிறமிச்சத்துகள் முழுமையாக உட்கிரகிக்கப்படும். டெசர்ட் என்ற பெயரில் பழத்தை கடைசி பெஞ்சில் உட்காரவைப்பது முட்டாள்தனம்!
அதே சமயம் இந்த பாலினால்களை சமைப்பதில், சேமிப்பதில் கவனம் இல்லாவிட்டால் அதன் பயனை இழக்கக்கூடும். சிறிய வெங்காயம், தக்காளி, முள்ளங்கி, ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா எனும் புளிச்சகீரை ஆகிய காய்கறிகளிலும், சதகுப்பை முதலான பல மூலிகைகளிலும் உள்ள 'குயிர்செட்டின்’ எனும் சத்துதான், நம் ரத்த நாளத்தில் கொழுப்புப் படியாமல் இருக்க உதவும் முக்கியமான பாலிபீனால் சத்து. ஆனால், வெங்காயத்தையும் தக்காளியையும் சமைக்காமல் சாலட் ஆக சாப்பிடும்போதுதான் முழுப் பயன் கிடைக்கும். வெங்காயத்தை வேக வைக்கும்போது 80 சதவிகிதமும், வறுக்கும்போது 30 சதவிகிதமும் பாலிபீனால்கள் காணாமல்போகும். கூடவே இந்த பாலிபீனால்கள் உடலில் உட்கிரகிக்கப்பட, நம் சிறுகுடல், பெருங்குடல் பகுதியில் லோக்டோபேசிலஸ் முதலான புரோபயாடிக்ஸ் இருப்பது நல்லதாம். அது இயல்பாகக் கிடைப்பது மோரில் மட்டுமே. ஆக, சின்ன வெங்காயத்தின் பயன் முழுமையாக வேண்டுமானால், வெங்காயத் தயிர் பச்சடியோ, வெங்காயம் தொட்டுக்கொண்டு மோர் சோறாகவோ, மோர் சேர்த்த கம்பங்கூழாகவோ சாப்பிடுவது சாலச் சிறந்தது.
வெங்காய பக்கோடா, சுவை தரலாம்; ஆனால் சுகம் தராது. அதேபோல் வெங்காயத்தின் வெளி வட்டத்தில்தான் அந்தச் சத்து அதிகம். சுத்தம் பார்க்கிறேன் பேர்வழி என வெளிப்பக்கம் பூராவும் உரித்து உரித்து, உள்ளே உள்ள வெள்ளை வெங்காயத்தை மட்டும் சாப்பிடுவது புத்திசாலித்தனம் அல்ல.
இப்படி இயற்கையாக நிறமும் கொடுத்து, உடலுக்கு உரமும் தரும் பொருள்கள் ஏராளமாக இருக்கும்போது, 'முந்தானைப் பக்கம் சிவப்பு கலர் பார்டரும், கொசுவத்தில் லைட் ஷேடும் வர்ற மாதிரி கொடுங்க’ என்று கேட்பதுபோல, நாம் சாப்பிடும் கேக்கில் மூணு அடுக்கு வண்ணம், பிஸ்கட் பார்டர் ஒரு வண்ணம், உள்ளே க்ரீம் இரண்டு வண்ணம், குளிர்பானத்தில் புது வண்ணம் எனச் சாப்பிடுவது, கொஞ்சமாக பெட்ரோலும் தாரும் குடிப்பதற்குச் சமம்.


_vikatan

மோசமானவங்கள்ல முக்கியமானவங்க! தமிழக எம்.பி-க்களின் ரேங்க் கார்டு- எம்.பரக்கத் அலி

பார்லிமென்டின் 'ஃபேர்வெல் டே’ முடிந்துவிட்டது. புதிய எம்.பி-க்களைத் தேர்ந்தெடுக்கத் தயாராகிவிட்டார்கள் வாக்காளர்கள். எம்.பி-க்களில் பலர், வாக்காளர்களின் வாசல்களைத் தேடி மீண்டும் வரலாம். தமிழகம், புதுச்சேரியில் இருந்து போன 40 பேர், பார்லிமென்ட் பள்ளியில் சாதித்தார்களா... சறுக்கினார்களா..? எம்.பி-க்களின் 'ரேங்க் கார்டு’ என்ன?
வருகைப் பதிவேட்டில் இருந்து ஆரம்பிப்போம்!
2009-ம் ஆண்டில் இருந்து 2014 வரை நாடாளுமன்றத்தில் 15 கூட்டத்தொடர்கள் நடந்திருக்கின்றன. மொத்தமாக 350 நாட்கள். அதிக நாட்கள் அவைக்கு வந்த எம்.பி-க்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராமசுப்புவுக்கு முதல் இடம். மொத்தம் 341 நாட்கள் வந்து 97 சதவிகித அட்டென்டண்ஸ் வைத்திருக்கிறார். இரண்டாம் இடத்தில் சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த லிங்கம். மூன்றாவது இடத்தில் தி.மு.க-வைச் சேர்ந்த டி.கே.எஸ். இளங்கோவன்.  
அதிகம் மட்டம் போட்ட எம்.பி-க்களில் முதல் இடம், ராமநாதபுரம் தி.மு.க. எம்.பி., நடிகர் ரித்தீஷுக்குதான். தமிழக எம்.பி-க்களின் வருகைப் பதிவில் இவருக்கே கடைசி இடம். 350 நாட்களில் 135 நாட்கள் மட்டுமே அவைக்கு வந்திருக்கிறார். ரித்தீஷ§க்கு முந்தைய இடத்தில் விடுதலைச்சிறுத்தைகள் தொல். திருமாவளவன் இருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் உள்ள வருகைப் பதிவேட்டில் அமைச்சர்கள் கையெழுத்துப் போடும் மரபு இல்லை. இதனால் தமிழகம், புதுவையைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், நாராயணசாமி ஆகியோரின் வருகைப் பதிவுகளைக் கணக்கிட முடியவில்லை. ஆ.ராசா 2010 நவம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு ஸ்பெக்ட்ரம் வழக்கில் அவர் கைதுசெய்யப்பட்டு, 15 மாதங்கள் சிறையில் அடைக்கப் பட்டார். இந்தக் காலகட்டத்தில் ராசா நாடாளுமன்றத்தில் பங்கேற்கவில்லை. 2012 மே மாதம் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டப் பிறகு நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை ஈழ விவகாரத்துக்காக 2013 மார்ச் மாதம் தி.மு.க. வாபஸ் வாங்கியதைத் தொடர்ந்து தி.மு.க-வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஐந்து பேர் ராஜினாமா செய்தார்கள். அதன் பிறகு நடந்த கூட்டத்தொடரில் பழனிமாணிக்கம் 18 நாட்களும் காந்தி செல்வன் 32 நாட்களும் அவைக்கு வந்திருக்கிறார்கள். ஜெகத்ரட்சகன் 11 நாட்கள், மு.க.அழகிரியும் நெப்போலியனும் இரண்டே இரண்டு நாட்கள் அவைக்கு வந்திருக்கிறார்கள்.
விவாதம், சிறப்புக் கவன ஈர்ப்பு, கேள்விகள், துணைக் கேள்விகள், அரசினர் மசோதாவில் விவாதம், தனிநபர் மசோதா, தனிநபர் தீர்மானம்... என நாடாளுமன்றத்தில் ஸ்கோர் செய்ய இப்படி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த சப்ஜெக்ட்டில் தேறியவர்கள் ஒருசிலர்தான்.
இப்படி நாடாளுமன்றச் செயல்பாடுகளின் பல்வேறு அம்சங்களை அடிப்படையாக வைத்து எம்.பி-க்களின் செயல்பாடுகளை அலசுவோம்.
அமைச்சர்களாக இருந்தவர்களைத் தவிர மற்றவர்களை எடை போட்டபோது, முதல் ரேங்க், திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராமசுப்புவுக்கு. இரண்டாவது ரேங்க்கில் சுகவனம் (தி.மு.க.), மூன்றாவது ரேங்க்கில் தாமரைச் செல்வன் (தி.மு.க.) இருக்கிறார்கள். நான்காவது, ஐந்தாவது இடங்களில் செம்மலை (அ.தி.மு.க.), சிவசாமி (அ.தி.மு.க.) உள்ளனர். பார்லிமென்ட் கிளாஸில் கடைசி இடம் டி.வேணுகோபால் (தி.மு.க.). அதற்கு முந்தைய இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தொல். திருமாவளவன் இருக்கிறார்.
கட்சிவாரியாக அலசினால் தி.மு.க. எம்.பி-க்களில் முதல் இடம் சுகவனத்துக்கும், கடைசி இடம் டி.வேணுகோபாலுக்கும் போகும். அ.தி.மு.க. எம்.பி-க்களில் செம்மலைக்கு முதல் இடம். கடைசி இடம் ஓ.எஸ்.மணியன். ஆனால், இந்த இரண்டு பேருக்குமே ஜெயலலிதா இப்போது சீட் தரவில்லை. காங்கிரஸ் எம்.பி-க்களிலேயே கடைசி இடத்தில் இருக்கிறார் கிருஷ்ணசாமி. முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரான இவர், அன்புமணியின் மாமனார்!
கேள்விகள் எழுப்புவது, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவது போன்ற சில சம்பிரதாயங்கள் அமைச்சர்களுக்குக் கிடையாது. அதன் அடிப்படையில் தமிழக அமைச்சர்களாக இருந்து பதவியை ராஜினாமா செய்தவர்களையும், இப்போது அமைச்சர்களாக இருப்பவர்களையும் மதிப்பிட்டபோது அதில் முதல் இடம் பிடித்தவர்... '15 நாள் புகழ்’ நாராயணசாமி. அடுத்தடுத்த இடங்களில் ப.சிதம்பரம், பழனிமாணிக்கம், காந்தி செல்வன் வருகிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இந்த ரிப்போர்ட்டில் கடைசி இடம் 'அஞ்சாநெஞ்சன்’ அழகிரிக்கு. எந்தப் பிரிவிலும் அவர் மார்க் வாங்காமல் சைபர் மேல் சைபர்களாகக் குவித்திருக்கிறார்.
ஒவ்வொரு எம்.பி-க்கும் தொகுதியின் வளர்ச்சிக்காக 'தொகுதி மேம்பாட்டு நிதி’ என ஆண்டுக்கு ஐந்து கோடி வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு 25 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. அந்த நிதியைக்கூட சிலர் முழுமையாகப் பயன்படுத்தவில்லை. இந்த நிதியை 100 சதவிகிதம் பயன்படுத்தியவர்களில் முதல் இடத்தில் இருக்கிறார் ஆதிசங்கர். இரண்டாவது இடத்தில் மு.க.அழகிரியும், மூன்றாவது இடத்தில் குமாரும் இருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் ஆங்கிலம், இந்தி மொழிகளில் பேச விரும்பாத 'அமைச்சர்’ அழகிரி, 'தமிழிலேயே பேசட்டும்’ என சபாநாயகர் மீரா குமார் சொல்லியும் கண்டுகொள்ளவில்லை. ரித்தீஷ், நெப்போலியன், கே.பி.ராமலிங்கம் இவர்கள் அழகிரியோடு புடைசூழ அரிதாக நாடாளுமன்றத்துக்கு வருவார் அழகிரி. அமர்வார்; சில நிமிடங்களில் கிளம்பிவிடுவார். மற்ற எந்த வட இந்திய எம்.பி-க்களுடனும் பேச மாட்டார். ஆனால், ஆச்சரியமாக, பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கிஷார் சந்திரா தேவ் என்பவரிடம் சகஜமாக உரையாடுவார் அழகிரி. அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றாலும், அழகிரியின் பள்ளித் தோழன். கோபாலபுரத்தில் ஒன்றாக கிரிகெட் விளையாடியவர்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புண்ணியத்தில் எம்.பி.-யான ஆரூண், சித்தன், கிருஷ்ணசாமி, விஸ்வநாதன், மாணிக் தாகூர் ஆகியோர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவுமே செய்யவில்லை.  பாராளுமன்ற ஊழியர்களால் அதிக சலாம் அடிக்கப்பட்ட எம்.பி. ஆரூண். பீடியைப் போல கரன்சிகளை பாக்கெட்டில் சுருட்டி வைத்திருப்பார். அதைத் தாராளமாக ஏராளமாக ஊழியர்களுக்கு வழங்குவார். அதனால் அவருக்கு ஸ்பெஷல் சலாம்!
அ.தி.மு.க. எம்.பி-க்களில் தம்பிதுரைதான் 'நாடாளுமன்றத்தின் ஜெயலலிதா’! அவரை மீறி அங்கே யாரும் பெர்ஃபார்மன்ஸ் செய்துவிட முடியாது. அ.தி.மு.க. உறுப்பினர்கள் எது பேசுவதாக இருந்தாலும் அவர் அனுமதி பெற்ற பிறகே பேச முடியும்.
தமிழக எம்.பி-க்களில் மத்திய அமைச்சர்களாகப் பணிபுரிந்தவர்களுள் தங்கள் துறை மூலம் கிள்ளுக்கீரை நன்மைகூட செய்யாதவர்களில் முன்னிலையில் இருப்பவர்கள் ஜெகத்ரட்சகன்,  நெப்போலியன், பழனிமாணிக்கம், காந்திசெல்வன் ஆகியோர். ப.சிதம்பரம் தனது சிவகங்கை தொகுதிக்கு நிறைய வங்கிக் கிளைகளையும், ஏ.டி.எம். சென்டர்களையும் கொண்டுவந்தார். சோனியாவை ஒரு முறையும், மன்மோகன் சிங்கை இரண்டு முறையும் தொகுதிக்கு அழைத்துவந்தார். திருமயத்தில் பாய்லர் ஆலை குழாய்கள் பிரிவை பிரதமரை வைத்து திறந்துவைத்தார்.    
ஆக மொத்தத்தில், 'சிறப்பாகச் செயல்பட்டவர்கள்’ என்று தமிழக எம்.பி-க்களில் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. 'மோசமானவங்கள்ல முக்கியமானவங்க’ என்ற ரீதியில்தான் 40 எம்.பி-க்களின் சொற்ப சாதனைகளை பூதக்கண்ணாடி வைத்து தேட வேண்டியிருக்கிறது. பிறகு, இந்தியா எப்படி வல்லரசு ஆகும்?

- Vikatan

Tuesday, March 11, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 29

'இந்திராவே இந்தியா; இந்தியாவே இந்திரா’ - என்ற ஆணவ முழக்கத்தின் காரணமாக இந்தியாவே இந்திராவின் பண்ணை வீடாக மாற்றப்பட்டு, பழக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இனி இந்தியாவில் தேர்தல் நடக்குமா, ஜனநாயகம் தழைக்குமா, நாடாளுமன்றத்தில் கருத்துரிமை கேட்குமா, எதிர்க்கட்சிகள் என்ற ஒன்றே இருக்குமா என்ற சந்தேகக் கேள்விகள் வரிசையாக எழுந்துநின்று அனைத்துக்குமே இல்லை என்ற பதிலே கிடைத்துக்கொண்டிருந்த நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

இப்போது தேர்தல் வைத்தாலும் காங்கிரஸ் கட்சிதான் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்ற உளவுத் துறையின் அறிக்கையை அப்படியே நம்பியோ, இதற்குமேல் அவசரநிலையை நீட்டித்தால் சஞ்சய் காந்தியின் சகாக்களால், தானே மீள முடியாத புதைக்குழிக்குள் தள்ளப்படுவோம் என்ற பயத்தினாலோ இந்திரா தேர்தல் தேதியை அறிவித்திருக்கலாம்!
எப்படிப் பார்த்தாலும் அது துணிச்சலான முடிவே. இந்திராவுக்குள் இருந்த நேருவின் மகள் என்ற ரத்தம் இன்னும் வற்றிப் போய்விடவில்லை என்பதை வெளிச்சப்படுத்தியது அந்த காரியம். இதைத்தான் சோஷலிஸத் தலைவர் மதுலிமாயி சொன்னார்.
''1977-ல் இந்திரா தேர்தலை நடத்த முன்வந்ததற்குக் காரணம் அவருடைய ஆழ் மனத்தில் பதிந்திருந்த உண்மையான சொரூபம்தான். தவறான காரண காரியங்கள் முடிவுக்கு வந்ததற்கு அதீத சுயமதிப்பீடு போன்ற காரணங்கள் இருந்தாலும், எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் பங்கேற்புடைய ஜனநாயக நெறியின் மேன்மையின்பால் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையும் அரசியலமைப்பு விதித்த முறைப்படித்தான் ஆட்சியில் தொடரவேண்டுமென்ற நாட்டமும்தான் தேர்தலை நடத்தக் காரணமாயின. தான் ஜவஹர்லால் நேருவின் மகள் என்பதையும் எங்களைப்போலவே மகாத்மா காந்தியின் தலைமையில் நடந்த சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் குழந்தை என்பதையும் இந்திரா ஒருபோதும் மறந்திருக்க மாட்டார்'' என்று இந்திராவால் 19 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்ட மதுலிமாயி சொன்னார். உண்மைக் காரணம் இதுதான். இந்தியாவுக்கு ஜனநாயக ஆட்சி முறையே பொறுத்தமானது. மிகப் பெரிய ஆட்டத்தை ஆடி... அது தன்னால் அடக்க முடியாத நிலைக்கு போகப்போவதுவரை தெரிந்து... அதன்பின் இறங்கிவர வேண்டியிருந்தது.
1977-ன் ஆரம்பம் இந்தியாவுக்கு நல்லபடியாக இருந்தது. 75, 76-ம் ஆண்டுகள் மிக மோசமானவையாகக் கழிந்தன.
''18 மாதங்களுக்கு முன்பு நாடு மிகப் பெரும் ஆபத்தில் இருந்தது. மிக மோசமான நிலைமையில் நாடு இருந்ததால்தான் அவசரநிலை கொண்டுவரப்பட்டது. இப்போது நாடு பாதுகாக்கப்பட்டுவிட்டது. இனி நாம் தேர்தலை எதிர்கொள்வோம்'' என்று 1977 ஜனவரி மாதம் வானொலியில் இந்திரா பேசினார். நாட்டுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆபத்து அவரது பதவிக்கு வந்தது. எமர்ஜென்சியை அறிவிக்காமல் இருந்திருந்தால் அவர் பதவி விலகி இருக்க வேண்டும். இன்னொருவரையோ, சஞ்சய் காந்தியையோ கொண்டுவந்திருக்கலாம். அடுத்து ஒரு தொகுதியில் போட்டியிட்டு அவரே வென்று மீண்டும் பிரதமர் ஆகி இருக்க முடியும். ஆனால், இந்த மாற்று ஏற்பாடுகள் எதையும் ஏற்க மறுத்ததால்தான் அவசரநிலையை அமல்படுத்தி இந்திய அரசியலில் மாபெரும் அவமானத்தை சந்திக்கும் நிலைக்கு இந்திரா தள்ளப்பட்டார்.
தேர்தல் நடத்த இருப்பதாக அவர் அறிவித்த ஜனவரி 18-ம் தேதிதான், இந்திரா பிரதமராகப் பதவியேற்ற 11-வது ஆண்டின் தொடக்கம். இந்திரா மனம் மாறுவதற்கும், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒற்றுமைப்படுவதற்கும் இந்த ஒன்றரை ஆண்டுகள் பயன்பட்டன என்று சொல்லலாம். தேர்தல் தேதியை இந்திரா அறிவித்த அன்றே சோனா டாக் பங்களா தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மொரார்ஜி தேசாய் விடுதலையானார். தனிமைச் சிறையில் இருந்தாலும் இந்திராவை எதிர்க்க தலைவர்கள் ஒன்று சேர்க்கும் முடிவை எடுத்துவிட்டார்கள். ஜனவரி 19 அன்று மொரார்ஜி தேசாயின் டெல்லி வீட்டில் தலைவர்கள் ஒன்றுகூடினார்கள்.
மொரார்ஜியின் கட்சியான காங்கிரஸ் (ஓ), சோஷலிஸ்ட் கட்சி, ஜனசங்கம், பாரதிய லோக் தளம் ஆகிய நான்கு கட்சித் தலைவர்களின் கூட்டம் அது. இவர்கள் அனைவரும் ஒரே கட்சியின் பெயரால், ஒரே சின்னத்தில் போட்டியிடப்போவதாக அறிவித்தார்கள். அந்தக் கட்சிக்கு 'ஜனதா கட்சி’ என்று பெயர் சூட்டப்பட்டது. ஜனவரி 23-ம் தேதி அன்று முறைப்படியான அறிவிப்பை ஜெயப்பிரகாஷ் நாராயண் செய்தார். ஜனதா கட்சி, இந்திராவுடன் இருந்தவர்களுக்கே அச்சத்தை ஏற்படுத்தியது. 1975-ல் அவசரநிலைப் பிரகடனத் தீர்மானத்தை மக்களவையில் கொண்டுவந்து முன்மொழிந்த ஜெகஜீவன் ராம் மனதையே அது கரைத்தது. தனது நண்பர்களான பகுகுணா, நந்தினி சத்பதியுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிப்ரவரி 1-ம் தேதி 'விலகிய ஜெகஜீவன் ராம், ஜனநாயக காங்கிரஸ் என்ற புதிய கட்சியை உருவாக்கி, அது ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று அறிவித்தார். ''அவருடைய பதவி விலகல் காங்கிரஸுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் பாபுஜி அரசியல் சாமர்த்தியத்துக்குப் பெயர் போனவர். அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகத் தீர்மானித்தது அந்தக் கப்பல் மூழ்கிக்கொண்டிருப்பதன் அடையாளமாக இல்லாவிட்டாலும் குறைந்தது மிக மோசமாக ஓட்டையாகி ஒழுகிக்கொண்டிருப்பதைக் குறித்தது'' என்று எழுதுகிறார் ராமச்சந்திர குஹா.
1977 மார்ச் 16 முதல் 20 வரை மக்களவைத் தேர்தலுக்கான தேதி குறிக்கப்பட்டது. எமர்ஜென்சியை அகற்றி இந்திராவை விரைவில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என, தனிமைச் சிறையில் இருந்தபடி சபதம் போட்ட ஜெயப்பிரகாஷ் நாராயண் உடல்நலம் அளவுக்கதிகமாக குன்றிப்போயிருந்தது. ஆனால், 'நடப்பது கடைசி யுத்தம், இதிலும் களத்தில் இருப்பேன்’ என்று அறிவித்தபடி நகரம் நகரமாகப் போய் பேசிக்கொண்டு இருந்தார். ''காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதுதான் கடைசியான சுதந்திரத் தேர்தலாக இருக்கும். அப்படியானால் 19 மாத சர்வாதிகாரம் என்பது 19 ஆண்டு பயங்கரவாதமாகிவிடும்'' என்று பம்பாயிலும் பாட்னாவிலும் பயமுறுத்திக்கொண்டு இருந்தார் ஜே.பி. இந்தியாவுக்குத் தன்னால் ஆன வளார்ச்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார் இந்திரா.
மார்ச் 6-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவே இந்திராவுக்கு எதிராக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்கான பேரணி அது. அதே நாளில் பிரபலமான இந்தி காதல் படமான 'பாபி’யை ரிலீஸ் செய்து கூட்டத்தை கலைக்கப் பார்க்கிறார்கள் என்று செய்தி பரவியதாகவும், அதையும் மீறி பேரணிக்கு கூட்டம் வந்ததாகவும் ஒரு தகவல் சொல்கிறது. பேரணிக்கு வருபவர்களைக்கூட தடுக்க முடிந்திருக்கலாம். ஆனால் மக்களை..?
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது ரேபரேலி தொகுதியில் சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தனது பழைய போட்டியாளர் ராஜ்நாராயணிடம் இந்திரா தோற்றுப்போனதாக அறிவிக்கப்பட்டது. அதற்குப் பக்கத்துத் தொகுதியான அமேதியில் அரசியல் அனுபவம் இல்லாத கல்லூரி மாணவன் ரவீந்திர சிங்கிடம் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சஞ்சய் காந்தி தோல்வியைத் தழுவினார். எமர்ஜென்சியின் கதாநாயகர்களான வி.சி.சுக்லா ராய்பூரிலும், பன்சிலால் பிவானியிலும், ஸ்வரண் சிங் ஜலந்தரிலும் தோற்றுப்போனார்கள்.
மொத்தமுள்ள 542 இடங்களில் ஜனதாவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 330 இடங்களைப் பிடித்தன. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமே 154 தொகுதிகளே கிடைத்தன. இந்த 154-ல் 92 இடங்கள் தென் மாநிலங்களில் இருந்து கிடைத்தன. தமிழகம் 14, ஆந்திரா 41, கர்நாடகா 26, கேரளா 11 என காங்கிரஸுக்கு வாரி வழங்கியது. வட மாநிலங்கள் அனைத்துமே இந்திராவுக்கு மிகப் பெரிய சரிவை ஏற்படுத்தியது.
தான் தோற்றுவிடக் கூடும் என்பது மார்ச் 19 மாலை 4 மணிக்கு இந்திராவுக்குத் தெரியவந்தது. தனது செயலாளர் ஆர்.கே.தவானிடம், ''ரேபரேலிக்கு போன் செய்து சரியான தகவல் என்ன என்று கேளுங்கள்'' என்று உறுதிப்படுத்தினார். அப்போது இந்திராவின் தோழியான பூபுல் ஜெயகர் பரிதவித்து ஓடிவந்தார்.
'உனக்கா இந்து... இப்படி நடக்க வேண்டும்?’ என்று பதறினார் பூபுல் ஜெயகர். 'இதெல்லாம் சகஜம் பூபுல், நடக்கக் கூடியதுதான்’- சாதாரணமாக பதிலளித்தார் இந்திரா. இரவு நேரம் ஆகியது. அனைவரையும் சாப்பிட அழைத்துச் சென்றார் சோனியா. யாருக்கும் சாப்பிட மனமில்லை. ஆனால், இந்திரா மட்டும் கவலைப்படாமல் சாப்பிட்டார். இரவு 10.30-க்கு அமைச்சரவையை இந்திரா கூட்டினார். 11 மணிக்கு சஞ்சய் வந்து சேர்ந்தார். அம்மாவைப் பார்த்ததும், 'நடக்கக் கூடாதது நடந்துவிட்டது’ என்று புலம்பினார். அவரை அமைதிப்படுத்திவிட்டு நள்ளிரவு 2 மணி வரை அதிகாரிகளோடு பேசிக்கொண்டு இருந்தார் இந்திரா. 2 மணிக்கு தூங்கி 4 மணிக்கு எழுந்தார். உடனடியாக உத்தரவு போட்டார். 'இந்த வீட்டை உடனடியாக காலிசெய்தாக வேண்டும்’ என்று எண் 1 ஸபதர்ஜஸ் சாலை வீட்டில் இருந்த பொருட்கள் 6.30 மணிக்கு கலைக்கப்பட்டன.
''ஜவஹர்லால் நேருவின் மகள், 11 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர், ஆனந்த பவன் என்ற அரண்மனை போன்ற இல்லத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தவர். தங்குவதற்கு தமக்கென்று ஒரு வீடு இல்லாமல் தவிக்கும் நிலைமையை என்னால் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. வாழ்க்கையை வருவதுபோல் ஏற்கும் மனமுள்ளவர் திருமதி காந்தி என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் அவரிடம் ஒரே ஒரு பொருளுக்கு மட்டும் பஞ்சமில்லை. அதுதான் அவர் மன உறுதி'' என்று இந்திரா குடும்பத்துக்கு நெருக்கமான முஹம்மத் யூனுஸ் எழுதியிருக்கிறார்.
அந்த மனஉறுதியை அசைத்துப் பார்த்தது ஜனதா ஆட்சி!


- Vikatan

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 28

நாடாளுமன்றத்தை ரப்பர் ஸ்டாம்ப் ஆக்கி தங்கள் விருப்பங்களை எல்லாம் சட்டமாக உருவாக்கும் தன்னிச்சையான சூழ்நிலை தாண்டவம் ஆடியதுதான் சர்வாதிகாரத்தின் உச்சம். எதுவெல்லாம் தனது செயல்பாடுகளுக்குத் தடையாக இருந்ததோ, அந்தச் சட்டங்களை எல்லாம் பகிரங்கமாகக் கழுத்தை நெரித்துக் கொல்வதற்கு இந்திரா திட்டமிட்டார்.

1. தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அமல்படுத்தப்பட்ட அவசரநிலைப் பிரகடனத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதற்காகத் தாக்கல் செய்தார். அந்தத் தீர்மானத்தை ஜெகஜீவன்ராம் தாக்கல் செய்தார். அந்தத் தீர்மானம் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் விவாதம் இல்லாமல் நிறைவேறியது.
2. அரசு ஊழியர் ஒருவரைத் தேர்தல் ஏஜென்டாக வைத்துக்கொண்டதால்தானே இந்திராவின் வெற்றி செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் அறிவித்தது. அரசு ஊழியர்களைத் தேர்தல் ஏஜென்டாகப் பணியாற்றுவதை அனுமதிக்கும் சட்டத்திருத்த மசோதா அறிமுகம் ஆனது.
3. அமல்படுத்தப்பட்ட அவசரநிலைப் பிரகடனத்தை யாருமே கேள்வி கேட்கக் கூடாது என்று இந்திரா நினைத்தார். அப்படி கேள்வி கேட்கும் உரிமை நீதிமன்றங்களுக்குத்தானே இருந்தது. எனவே, அவசரநிலைப் பிரகடனம் குறித்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை விசாரிக்கும் உரிமையை அரசியலமைப்புச் சட்டத்தின் 38-வது திருத்தம் மூலமாகப் பறித்தார்.
4. தனது பதவியைப் பறிக்கும் செய்கையை யார் செய்தது? நீதிமன்றம்தானே? அவர்களுக்கு அந்த உரிமை இருந்தால்தானே செய்ய முடியும்? அதையே பறித்துவிடலாமே? அதற்கும் ஒரு திருத்தம் அமல் ஆனது.
பிரதமர் மற்றும் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல் வழக்கை உயர் நீதிமன்றம், மற்றும் உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் 39-வது திருத்தம் மாநிலங்களவை, மக்களவையில் நிறைவேறியது.
5. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னால், யாருமே விசாரிக்கக் கூடாது என்று நினைப்பதாகக் கருதிவிடக் கூடாது என்பதற்காக ஒரு பொம்மை குழுவை உருவாக்க நினைத்தார் இந்திரா.
அதாவது பிரதமர், சபாநாயகர் ஆகியோரின் தேர்தல் வழக்குகளை இனி நாடாளுமன்றம் நியமிக்கும் குழு மட்டுமே விசாரிக்கும் என்ற திருத்தமும் கொண்டுவரப்பட்டது. நாடாளுமன்றக் குழு என்றால் தனக்கு வேண்டப்பட்ட யாரை வேண்டுமானாலும் அந்தக் குழுவில் நியமித்து, விசாரணை நாடகத்தை நடத்தி முடித்துக்கொள்ளலாம்.
6. இந்தத் திருத்தங்கள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டம் 9-வது அட்ட வணையின் கீழ் நிறைவேற்றப்பட்டது. 9-வது அட்டவணையின் கீழ் நிறைவேற் றப்படும் எந்தத் திருத்தங்களையும் நீதிமன்றங்கள் விசாரிக்க முடியாது.
7. குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் ஆகிய பதவிகளை வகிக்கிற எவர் மீதும் அவர்கள் பதவி ஏற்பதற்கு முன்போ, பதவி வகிக்கும் போதோ, தனிப்பட்ட முறையிலோ, அதிகாரபூர்வமாகவோ செய்த எந்தக் காரியத்துக்கும் குற்றவியல் வழக்கோ, உரிமையியல் வழக்கோ போட முடியாது என்ற சட்டத்திருத்தம் தயார் ஆனது. அதாவது, குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் ஆகிய மூவரையும் யாராலும் கேள்வி கேட்க முடியாத சூப்பர் பவர் அந்தஸ்துக்குக் கொண்டுபோனது அந்தத் திருத்தம். நல்லவேளை அது நிறைவேறவில்லை.
8. இவ்வளவையும் கேள்வி கேட்க நீதிமன்றங்கள் இருக்கிறதே? அது தேவையா என்ற அபரிமிதமான யோசனையில் உருவானதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் 42-வது திருத்தம். நீதித் துறையின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்ததுடன் நாடாளுமன்றத்துக்கு வரம்பற்ற அதிகாரத்தைத் தூக்கிக் கொடுத்து பிரதமர் எதை நினைத்தாலும் செய்யலாம் என்று அனுமதி வழங்கிய சட்டத்திருத்தம் அது.
நாடாளுமன்றத்துக்கு அடுத்த நிலையில் உச்ச நீதிமன்றத்தைக் கொண்டுபோய் நிறுத்தினார்கள். அன்றைக்கு அதிகார ஆட்டம் ஆடிய ஏ.ஆர்.அந்துலே, '1967-ம் ஆண்டு முதலே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சதித் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்’ என்று நாடாளுமன்றத்திலேயே பேசினார் என்றால் அன்றைய அத்துமீறல்கள், நீதிமன்ற அவதூறுகளின் குவியல்களாக இருந்தன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
அதாவது நாடாளுமன்றத்துக்குள் அடங்கிய ஒரு அமைப்பாக உச்ச நீதிமன்றத்தை மாற்ற இந்தத் திருத்தம் அடித்தளமிட்டது.
9. நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாக மாற்ற வழிவகை செய்யும் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 1976-ல் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வந்திருக்க வேண்டும். 6 ஆண்டுகளாகப் பதவிக்காலம் நீடிக்கப்பட்டதால் 1977-ல் தேர்தல் நடத்தினால் போதும். ஓராண்டு காலம் இன்னும் கூடுதலாக அனுபவிக்கலாம் என்று நினைத்து அதற்கும் ஒரு திருத்தம் கொண்டுவந்தார்கள்.
10. இப்படி தனித்தனியாக சட்டங்கள், சட்டத் திருத்தங்கள், தீர்மானங்கள் கொண்டுவருவதைவிட மொத்தமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கான வேலையில் காங்கிரஸ் கட்சி மும்முரமானது.
உச்ச நீதிமன்றத்தையே ஒரு அரசியல் கட்சியைப் போலப் பாவித்து அவதூறுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தி வந்த அன்றைய காங்கிரஸ் தலைவர் டி.கே.பரூவா, 'நமது அரசியலமைப்புச் சட்டம் குறித்த புதிய பார்வை - சில கருத்துக்கள் என்ற அறிக்கையைத் தயாரித்து அனைத்து நீதிமன்ற பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கும் அனுப்பினார். இந்த அறிக்கையை அவர் எழுதவில்லை... ஏ.ஆர்.அந்துலே எழுதினார் என்ற ரகசியம் பின்னர்தான் அம்பலம் ஆனது. பிரதமர் ஆட்சி முறையைவிட அதிபர் ஆட்சி முறைதான் சரியானது என்று வாதிட்டது இந்த அறிக்கை. கௌஹாத்தியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர ஸ்வரன் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையில் 1975 ஏப்ரல் 3 அன்று காங்கிரஸ் தலைவர் ஓ.கே.பரூவாவிடம் ஸ்வரன்சிங் கொடுத்தார். அதிபர் ஆட்சி முறை என்ற எண்ணத்தை இந்த காங்கிரஸ் குழுவே ஏற்காமல் இருந்ததுதான் இந்தியாவின் அதிர்ஷ்டம். மாறாக, இவர்கள் ஆதரித்து இருந்தால் இந்தியா இன்று ஜனநாயக நாடாகவே இருந்திருக்குமா என்பதே சந்தேகம்.
அதிபர் முறையைக் கொண்டு வரலாம் என்று சஞ்சய் விரும்பியதாகவும் ஆனால், இந்திரா அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் ஒரு தகவல் உண்டு. அதிகாரம் பொருந்தியவராக ஆக இந்திரா நினைத்தார். ஆனால், சஞ்சய் அதிகாரம் பொருந்தியவராக ஆகியேவிட்டார்.
இந்திராவின் பெயரைச் சொல்லி நடந்ததில் பெரும்பாலானவை சஞ்சய் கட்டளைப்படி நடந்தவையே. அடுத்த சில மாற்றங்களில் இந்திரா இடத்தில் அமர சஞ்சய் திட்டமிட்டு இருந்தார். சஞ்சய் பற்றி தன்னிடம் புகார் செய்த ஒருவரிடம், 'நம்மை முந்திக்கொண்டு அவர்கள் சாமர்த்தியசாலிகள் ஆகிவிட்டார்கள்’ என்று இந்திரா கூறினார். நெருக்கடி நிலையை நீடித்துக்கொண்டே போவதுதான் சஞ்சய் நண்பர்களின் ஆலோசனையாக இருந்தது.
அப்போது பிரிட்டனில் இந்தியத் தூதராக இருந்தவர் பி.கே.நேரு. இவர் இந்திரா குடும்பத்தின் உறவினர். இவரிடம் அரசியமைப்புச் சட்ட ஆலோசனையை சஞ்சய் சொல்லி பன்சிலால் கேட்டுள்ளார். 'எங்கள் சகோதரியை வாழ்நாள் முழுக்கவும் இந்தியாவின் அதிபராக்கிவிடுங்கள். அப்புறம் பிரச்னையே இருக்காது’ என்று பன்சிலால் கேட்க, ஆடிப் போனாராம் பி.கே.நேரு. இந்திராவைப் பெரிய புதைகுழிக்குள் அமுக்கப் பார்க்கிறது ஒரு கூட்டம் என்று அலறிய பி.கே.நேரு, தன்னுடைய மனைவி ஃபோரின் நேருவை உடனடியாக இந்திராவைப் பார்க்க அனுப்பி வைத்தார். இந்தச் சந்திப்பு நடந்தபோது இந்திரா அதிக குழப்பமான மனநிலையில் இருந்ததாக எழுதுகிறார்கள்.
'சிக்கலில் இருந்து விடுபட நினைக்கிறார். ஆனால், எப்படி விடுபடுவது என்று தெரியவில்லை. சுற்றிலும் நிறைய சதி நடக்கிறது. அதில் பாதிக்கு மேல் தனக்குத் தெரியாமலேயே நடக்கிறது. புதிய அரசியலமைப்பு சபையை உருவாக்க வேண்டும்’ என்று தனக்குச் சொல்லப்பட்ட ஆலோசனையை இந்திரா நிராகரித்துவிட்டார், ஆனால் புது அரசியலமைப்பு சபையை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் ஆளும் மாநில சட்டசபைகளில் இருந்து தீர்மானம் போட்டு அனுப்புகிறார்கள். இதையெல்லாம் யார் சொல்லிச் செய்கிறார்கள், அவர்களுக்கு உத்தரவிடுவது யார் என்று அவரால் புரிந்து தெளிய முடியவில்லை. இதிலிருந்து விடுபட ஒரே வழிதான் இருக்கிறது என்பதை இந்திரா கண்டுபிடித்தார்.
தேர்தல் நடத்திவிட்டால் என்ன என்பதுதான் அந்த யோசனை. தேர்தல் நடத்தினால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று உளவுத் துறையை விசாரிக்கச் சொன்னார். 1977 நவம்பரில் ஒருநாள் பத்திரிகையாளர் குல்தீப் நய்யாரைச் சந்தித்த உளவுத் துறை அதிகாரி ஒருவர், 'எமர்ஜென்சி விலக்கப்பட இருக்கிறது’ என்று லேசாகக் காதில் சொல்ல... அவர் அதனை தனக்குத் தெரிந்த கமல்நாத்திடம் உறுதிப்படுத்தி... இந்தியன் எக்ஸ்பிரஸில், அவசரநிலை இரண்டு வாரங்களில் விலக்கிக்கொள்ளப்பட்டு தேர்தல் நடத்தப்படும்’ என்று தலைப்புச் செய்தி ஆக்கினார். எக்ஸ்பிரஸ் உரிமையாளர் கோயங்காவால் நம்ப முடியவில்லை. காலையில் நாளிதழ் வெளிவந்தது. அன்றைய செய்தித் துறை அமைச்சர் வி.சி.சுக்லா இதைப் பார்த்து கோபமாகி, 'குல்தீப் நய்யார் விரைவில் கைது செய்யப்படுவார் என்பதை அவருக்குச் சொல்லுங்கள்’ என்று கத்தினார்.
எடுத்த முடிவில் இந்திரா உறுதியாக இருந்தார். தேர்தல் தேதியை அறிவித்தார்.

- Vikatan

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 27

ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து, எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்து, பத்திரிகைகளை முடக்கி, சிறைகளைச் சித்ரவதைக் கூடங்களாக மாற்றி, யாரெல்லாம் காங்கிரஸ் நடவடிக்கைகளை எதிர்த்தார்களோ அவர்களை எல்லாம் முடக்கிவைத்த அவசரநிலைக் காலகட்டத்தை, இந்தியாவின் வளர்ச்சியான காலகட்டம் என்று வர்ணித்தார் பிரதமர் இந்திரா. நாட்டில் கட்டுப்பாடு ஏற்படவும், நல்வாழ்வை நோக்கி வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தவும்தான் அவசரநிலை அறிவிக்கப்பட்டது என்று சொல்லி, அதன் ஓராண்டு நிறைவு விழாவைக் கொண்டாடினார் இந்திரா.  அதற்காகப் பல்வேறு பத்திரிகைகளில் சிறப்பு பேட்டிகளையும் கொடுத்தார். அதுதான் கொடுமையிலும் கொடுமை!

'சமாச்சார்’ செய்தி நிறுவனத்துக்காகவும், 'அமிருதபஜார் பத்திரிகா’ இதழின் ஆசிரியர் துஷார் காந்தி கோஷ§க்கு அளித்த பேட்டியிலும், பிரதமர் இந்திரா சொன்ன விஷயங்களைப் பார்த்தால், அன்றைய காலகட்டத்தில் அவரது சிந்தனையை முழுமையாக உணர முடியும்.
இந்திராவின் பதிலில் மட்டுமல்ல... கேள்வியில்கூட எப்படிப்பட்ட அரசியல் இருக்கிறது என்பதை கவனியுங்கள்!
கேள்வி: தேசிய நெருக்கடியை முன்னிட்டு அவசரநிலை அறிவிக்கப்பட்டபோது அதை மிகக்கடுமையாக எதிர்த்த சிலரும்கூட, இன்று அதன்மூலம் நாட்டில் இந்த ஓராண்டு காலத்தில் பொருளாதாரப் புரட்சி தோன்றியிருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள். அரசியல் துறையில், இந்த ஓராண்டு காலத்தில் கிடைத்துள்ள பலன்கள் என்று நீங்கள் குறிப்பிட விரும்புவது என்ன?
பதில்: அரசியல் துறையைவிட பொருளாதாரத் துறையிலேயே நாம் பலன் கண்டிருக்கிறோம். பொருளாதார வளர்ச்சி, சமூகத்தில் இழைக்கப்படும் அநீதிகளை அகற்றுதல், ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது ஆகியவற்றில் செலுத்தப்படும் முயற்சிகளில் இருந்து கவனத்தைத் திருப்பவும் கலைக்கவும் எதிர்க்கட்சியினர் முற்படுகிறார்கள். வெவ்வேறு தோற்றங்களிலும் விதவிதமான கோஷங்களிலும் இந்த சக்தி மறைந்திருந்தாலும், நாட்டில் குழப்பம் விளைவிக்கும் அவர்களது நோக்கம் என்னவோ அப்படியே மாறாமல் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
கேள்வி: உள்நாட்டில் சிலருடைய எதிர்ப்பு நேர்ந்தாலும், வெளிநாடுகளில் இருந்து விரோதமான உணர்ச்சிகள் தோன்றினாலும், நாட்டுக்குக் கிடைக்கும் பொருளாதார, அரசியல் லாபங்களை உத்தேசித்து, அவசரநிலைமையை நாம் பொறுத்துக்கொள்ளலாம் என்று மக்கள் பலரும் நினைக்கிறார்கள். நீங்கள் இந்தக் கருத்தை ஏற்கிறீர்களா?
பதில்: இன்று இவ்வாறு நம்மிடம் பகைமைப் பாராட்டுபவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவசரநிலை அறிவிக்கப்படுவதற்கு முன்பே இருந்தார்கள். அவர்களுடைய கண்களுக்கு அரசாங்கத்தின் செயல்கள் எதுவுமே சரியாகத் தோன்றியது இல்லை. அவர்களில் ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் எல்லாருமே என் தந்தையை அவருடைய ஆயுட்காலம் முழுவதும் அவருடைய கொள்கைகளுக்காக எதிர்த்தவர்களே.
சமீபத்தில் தோன்றியுள்ள ஒரு புதிய சிக்கலை, மேற்கத்திய நாடுகளின் பத்திரிகைகள் மக்கள் கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றன. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் உள்ள நாடுகளின் அரசாங்கங்களை நிலைகுலையச் செய்வதில், தொடர்ந்து தீவிரமான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அந்த நாடுகளில் உள்ள சுதந்திர உணர்ச்சி மிகுந்த தலைவர்களை அவதூறுக்கு ஆளாக்குவதிலும், கொலை செய்வதிலும்கூட இந்த சக்திகள் முனைந்திருக்கின்றன. அந்தந்த நாட்டில் உள்ள சில தனிப்பட்ட நபர்களையோ, குழுவினரையோ தங்கள் வசப்படுத்தவும், பணம் செலவுசெய்து வாங்கிவிடவும், அவர்கள் முற்படுகிறார்கள். தெரிந்தோ, தெரியாமலோ இந்த முயற்சிக்கு சில நாட்டினர் துணை நிற்கிறார்கள்.
கேள்வி: 'அரசாங்கம், தான் செய்துமுடிப் பதாக மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை, மன உறுதியுடன் நிறைவேற்றி வைக்க முற்பட்டிருந்தால், அவசரநிலைக்கு அவசியம் இருந்திராது. அப்படி ஓர் அறிவிப்பு இல்லாமலே இந்த ஓராண்டில் கிடைத்த வெற்றிகளை இந்தியா சாதித்திருக்க முடியும்’ என்று எதிர்க்கட்சிகள் சொல்லிக்கொண்டு வருவதைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்னவென்று கூறுவீர்களா?
பதில்: மக்களுக்கு நாங்கள் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில், நாங்கள் மெத்தனமாகச் செயல்பட்டிருந்தால், அதற்குக் காரணம் போதிய மன உறுதி இல்லாமை அல்ல; எங்களை மீறிய சில சந்தர்ப்பங்களே அதற்குக் காரணம். பங்களாதேஷில் விளைந்த சங்கடமான சூழ்நிலையும், தொடர்ந்து விளைந்த போரும், அரசாங்கத்தின் மீது பளுவான பொறுப்புகளைச் சுமத்திவிட்டன. இதைத் தவிர, சில பகுதிகளில் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கும்கூட, வறட்சி நிலை ஏற்பட்டிருக்கிறது. நாடு இத்தகைய இன்னல்களுக்கு ஆளாகி இருக்கும்போது, ஒன்றுசேர்ந்து தோள் கொடுத்து, மக்களின் உதவிக்கு வரவேண்டியது எதிர்க்கட்சிகளின் பொறுப்பு அல்லவா? இதற்கு மாறாக, இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்டு கட்டுப்பாடின்மை, பலாத்காரம், குற்றங்கள் புரிவது ஆகியவற்றுக்கான சூழ்நிலையை மென்மேலும் தூண்டுவதிலேயே அவர்கள் ஈடுபடலாம் என்று எண்ணினார்கள். சமுதாயத்தின் பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்களும் இந்த அழிவு சக்தியின் சூழலால் பாதிக்கப்பட்டார்கள். உலக வங்கிகூட, நாங்கள் சந்திக்க நேர்ந்த இந்த இடையூறுகளையும், அவற்றை நாங்கள் துணிவுடன் சமாளித்துப் பெற்ற வெற்றியையும் பாராட்டி இருக்கிறது.
கேள்வி: அவசரநிலையைத் தொடர்ந்து நீட்டிப்பதன் மூலம்தான் நாட்டின் முன்னேற்றத்தைச் சாதிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது, அரசியல் சட்டத்தில் தேவையான மாறுதல்களைச் செய்து முடித்த பிறகு, அவசரநிலையை முடித்துக்கொள்வது சாத்தியம் என்று கருதுகிறீர்களா?
பதில்: அவசரநிலையை முடிவின்றி நீட்டிப்பது என்பது சாத்தியம் அல்ல. அதே சமயம் நாட்டு மக்களின் பல பகுதியினருக்கும், அர்த்தமுள்ள ஜனநாயகக் கொள்கைகளின் அமைப்பு உருவாகி அதன் நன்மைகள் கிடைக்கும்படியான ஒரு சூழ்நிலையை நிச்சயமாகக் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
கேள்வி: 20 அம்சப் பொருளாதாரத் திட்டத்தை நீங்கள் அறிவித்தபோது, விலைவாசி பற்றிச் சிந்தித்து எடுக்க வேண்டிய முயற்சிகளுக்குத் தடைசெய்வதுபோல் எழுந்த சவாலை நீங்கள் வெற்றிகரமாகச் சமாளித்துள்ளதாக நினைக்கிறீர்களா? விலைவாசி குறைவதற்கு, உற்பத்தி பெருக வேண்டும். இதில் கணிசமான முன்னேற்றம் கிடைத்துள்ளதா?
பதில்: பெருமளவுக்கு விலைவாசிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. விலைவாசி உயராமல் தடுத்துள்ளோம். தொடர்ந்து தடுத்துக் கட்டுப்படுத்திக்கொண்டு வருகிறோம். ஆனால், எதையும் நாமே நேரடியாகக் கட்டுப்படுத்தக் கூடிய வசதிகள் நமது அமைப்பில் இல்லை. பெரும்பாலான பொருட்களை உற்பத்தி செய்வது, தனியார் துறையினரிடம் இருக்கிறது. சந்தைகளில் பல்வேறு வகையான சக்திகளுக்கு ஈடுகொடுக்க வேண்டியிருக்கிறது.
உற்பத்தியைப் பெருக்குவதுதான் எங்கள் முக்கியமான முயற்சி. உற்பத்திப் பெருகி இருப்பதும் உண்மை. குறிப்பாக, பொதுத் துறையில் உள்ள நிறுவனங்கள் இதில் முன்னேற்றம் காட்டியிருக்கின்றன. பொதுத் துறையில் உள்ள நிறுவனங்கள் இப்போது நிறைய லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளன. நிறைய நஷ்டம் ஏற்பட்டுக்கொண்டிருந்த இடங்களில், அத்தகைய நஷ்டம் பெருமளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.
கேள்வி: கடத்தல்காரர்களின் கொட்டம் ஒடுக்கப்பட்டிருக்கிறது. வரி ஏய்ப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. ஏராளமான கறுப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டு வெளியே கொண்டுவரப்பட்டிருக்கிறது. தொழிற்சாலைகளில் நிலைமை நிச்சயமாக முன்னேறி இருக்கிறது. ஏற்றுமதி வாய்ப்புகள் பெருகி இருக்கின்றன. ஆனால், இவற்றில் பல நிலைகளில் உள்ளே பொருந்திவிட்ட சிறு குறைகள் குந்தகம் விளைவிக்கின்றன. இந்த சிறு இடையூறுகளைத் தவிர்க்க, காலவரையறை செய்யப்பட்ட ஒரு திட்டத்தை வகுத்து, தொழில் முயற்சிகளைக் கூட்டவும், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஊக்கமளிக்கவும் நீங்கள் உத்தேசித்து இருக்கிறீர்களா?
பதில்: இடையூறுகளை நீக்குவதும், உற்பத்திக்கு ஊக்கம் தருவதும், புதிய முதலீடுகளைத் தூண்டி ஆதரிப்பதும் எங்களுடைய முக்கியக் கொள்கைகளாக இருந்து வருகின்றன. பல புதிய யோசனைகளை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். எங்கள் அமைச்சர்கள் தங்களால் ஆனவரை முயன்று வருகிறார்கள். கள்ளக் கடத்தல் பற்றிக் குறிப்பிட்டீர்கள். மறுபடியும் அது தலைதூக்கத் தொடங்கி இருக்கிறது. எங்கள் தீவிர முயற்சிகளைக் கொஞ்சம் தளர்த்தினாலும், அது மறுபடியும் தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. நாங்கள் தொடர்ந்து விழிப்பாக இருந்து செயல்பட்டு வருகிறோம். ஒன்றுக்கொன்று தொடர்புள்ள, இணைந்த முயற்சிகள் அரசாங்கத் துறைகளால் செய்யப்பட வேண்டும். மக்கள் முழு மனத்துடன் ஈடுபாடுகொண்டு, ஒத்துழைக்க வேண்டும். மக்களின் பங்கு என்பது என்ன? தனிப்பட்ட ஒரு பிரஜை தவறான வழிகளில் ஈடுபட்டாலும் அல்லது, அரசாங்க அலுவலர்கள் மக்களை வருத்தித் துன்புறுத்தினாலும், உடனே அதை எங்கள் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான். இப்படிப்பட்ட முறையீடுகளையும் யோசனைகளையும் கவனிப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய முயன்று வருகிறோம்.
கேள்வி: அடுத்த 12 மாதங்கள் எப்படியிருக்கும் என்று உருவகம் செய்து பார்க்கிறீர்கள்?
பதில்: அடுத்த 12 மாதங்களின் விளைவுகளை, கடந்த 12 மாதங்களுடன் இணைத்துப் பார்ப்பது சரியல்ல. பொருளாதார நிலையில் ஒரு நல்ல வளர்ச்சிபெற இன்று நாடு தயாராகிக்கொண்டிருக்கிறது. நாம் நமது திட்டங்களில் தொடர்ந்து நீர்ப்பாசனத்துக்கும், மின்சார உற்பத்திக்கும் கவனம் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துவருகிறோம். தேவையான முதலீட்டு வசதிகள் இல்லாமையினால், புதிய திட்டங்கள் பலவற்றைத் தொடங்க முடியாமல் இருக்கிறோம். அவை பற்றிய யோசனைகள் தேக்க நிலையிலேயே இருக்கின்றன. எடுத்துக்கொண்டு பாதி முடித்துவிட்ட திட்டங்களை, அவற்றை அந்த நிலையில் நட்டாற்றில் விட்டுவிட்டால் நஷ்டமாகிவிடுமே என்பதற்காக தொடர்ந்துகொண்டிருக்கிறோம். நிதி நிலைமை சிரமமாக இருப்பதால், ஒப்புதல் அளிக்கப்பட்டுத் தயாராக இருக்கும் திட்டங்களைக்கூடத் தள்ளிப்போட்டிருக்கிறோம். நல்ல பருவமழையைப் பொறுத்தே பெருமளவுக்கு நாட்டின் நல்லகாலம் அமைந்திருக்கிறது. வானிலை முன்போல இல்லை. ரொம்ப மாறிவிட்டது. டில்லியின் இன்றைய நிலை, ஜூன் மாதம் போலவா உங்களுக்குத் தோன்றுகிறது?'
- இப்படிச் சொல்லிக்கொண்டு இருந்தார் இந்திரா.
அவசர நிலைக் காலத்தில் நடந்த சில நன்மைகள் இன்றுவரை நினைவுகூரப்படுகின்றன. கடைக்காரர்கள் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களின் விலைப்பட்டியலை வெளியிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள். கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் அதற்கான வருமான வரியைத் தாங்களாகவே முன்வந்து கட்டவேண்டும் என்பதை வலியுறுத்தி சிறப்பு அறிவிப்பு செய்யப்பட்டது. அதனால் சுமார் 250 கோடி ரூபாய் வரை அரசு கஜானாவுக்கு வந்து சேர்ந்தது. நாடுமுழுவதும் கடத்தல், கள்ளச்சந்தைக்காரர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். இப்படிப்பட்டவர்களைக் கைது செய்வதற்காகத்தான் 'மிசா’ சட்டமே ஒரு காலத்தில் கொண்டுவரப்பட்டது. இப்படி மேலோட்டமான சில விஷயங்கள் பயத்தின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்டன. ஆனால் சட்டம் சந்தித்த அவலம்தான் அந்தக் காலத்தில் அதிகம்!

- Vikatan

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 26

1976-ம் ஆண்டு பிப்ரவரி 1, 2 ஆகிய இரண்டு நாட்களும் மரணத்தின் குரலை சென்னை மத்தியச் சிறைச்சாலை கேட்டது. அதுவரை தொழுநோயாளிகள் அடைக்கப்பட்டு இருந்த அறையைத் தேர்ந்தெடுத்து, அரசியல் கைதிகளை அடைத்துவைக்கும் குரூரம் அன்று அரங்கேறியது. மத்தியச் சிறையில் ஒன்பதாவது பிளாக்கில் கைதிகள் அடைக்கப்பட்டபோது, வார்டன்கள், கைதி வார்டன்கள், முதன்மைத் தலைமை வார்டன், ஜெயிலர், உதவி ஜெயிலர் ஆகியோர் சேர்ந்துநின்று அரசியல் கைதிகளைத் தாக்கினார்கள். இது அன்றைய சிறைக் கண்காணிப்பாளராக இருந்தவர் முன்னிலையிலேயே நடந்தது.

இந்தக் காட்சிகளை அப்போது சிறைக்​கைதியாக அடைக்கப்பட்டு இருந்த சிட்டிபாபு டைரியாக எழுதினார். சிறைகளின் கோரத்தைச் சொல்லும் முக்கியமான ஆவணமாக இன்று​வரைக்கும் இருக்கும் புத்தகம் அது. சென்னை மத்திய சிறைச்சாலையில் 1976 பிப்ரவரி முதல் 1977 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் அரசியல் கைதிகளைக் கொடுமைப்படுத்தியதாகவும் அடித்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட மாண்புமிகு நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் தலைமையிலான கமிஷனில், மிக முக்கியமான ஆதாரமாக சிட்டிபாபுவின் சிறை டைரி இருந்தது.
''கர்வத்தோடு ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன. நாங்கள் அனைவரும் இரண்டாவது நுழைவாயிலைக் கடந்து சென்றோம். இப்போது நாங்கள் ஒரே வரிசையில் நின்றுகொண்டிருந்தோம். ஒருவர் அவசரமாக அங்கு வந்தார். அவர் வரும்போதே, 'யாருடா இவன்கள் எல்லாம்?’ என்று கத்திக்கொண்டே வந்தார். அவருடைய பேச்சே புதுமையாக இருந்தது. வரவேற்புக்குப் பின்னர் எங்களுக்கு வாழ்த்துக்கூறுவதுபோல அவை இருந்தன. 'இவன்களையெல்லாம் சோதனை போடுங்கள். எந்தப் பயலும் பணம் கொண்டுவந்திருக்கக் கூடாது’ என்று அவர் கூறினார். அப்போது ஒரு வார்டன், ஆசைத்தம்பியிடம் 67 ரூபாய் இருப்பதாகக் கூறினார். அவ்வளவுதான், அந்த அதிகாரியின் சொற்கள் கொடூரமாக இருந்தன. 'அப்படியா ஆசைத்தம்பி? உனக்கு மூளையில்லை? நீ அடிக்கடி சிறைக்கு வந்திருக்கிறாயே’ என்று பேசிக்கொண்டே போனார். அப்போதே எவருக்கும் புரிந்திருக்கும். அமைதியாக இருந்த பாம்பு தலையைத் தூக்கிப் படமெடுத்து ஆடத் தொடங்கிவிட்டதாக நாங்கள் அறிந்துகொண்டோம். 'இவர்களை எல்லாம் ஏழாவது பிளாக்கில் வேண்டாம், ஒன்பதாவது பிளாக்கில் அடைத்து வையுங்கள்’ என்று அவர் கட்டளையிட்டார்!'' என்று தொடங்குகிறது அந்த டைரி. ஒன்பதாவது பிளாக் என்பது அதற்கு முந்தைய தினம் வரை தொழுநோயாளியான கைதிகள் இருந்த அறை. இந்த அறையில் இவர்களை வைப்பதற்காகவே நோயாளிகளை இடம்மாற்றி காலி செய்துவிட்டார்கள் அதிகாரிகள்.
அந்த அறைக்குள் சிட்டிபாபு உள்ளிட்டவர்கள் நள்ளிரவில் அனுப்பிவைக்கப்பட்டனர். அறைக்குள் இருந்த துர்நாற்றத்துக்கு என்ன காரணம் என்றே அவர்களால் உணர முடியவில்லை. ஆனாலும், அதில்தான் அன்றைய இரவு முழுவதும் தூங்கினார்கள். இரவு ஒரு மணிக்கு மேல் மு.க.ஸ்டாலின் அழைத்துவரப்பட்டு அதே சிறையில் அடைக்கப்பட்டார். மறுநாள் மாலையில் என்ன நடந்தது என்பதை சிட்டிபாபு தனது டைரியில் விவரிக்கிறார்...
''இரவு 7.30 மணி. அந்த அறை இருட்டாக இருந்தது. அறைக்கு வெளியே இன்னும் ஓரிரு விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. இரவு சுமார் 8 மணிக்குச் சிலர் அங்கு நுழைவதை மங்கலான வெளிச்சத்தில் காண முடிந்தது. காக்கி ஆடை அணிந்தவர்களும் வெள்ளை ஆடை அணிந்தவர்களும் வந்தனர். அவர்கள் இரண்டு வரிசையாக நின்றனர். அந்த இரண்டு வரிசைகளுக்கும் இடையே அவர்கள் வைத்திருந்த கைத்தடி நீளத்துக்கே இடைவெளி இருந்தது. அறைக் கதவு திறக்கப்பட்டது. அடிக்கும் சப்தம் கேட்டது. அது சினிமாவில் நடப்பதைப்போன்று இருந்தது. கொலைகாரர்களின் கைகளில் இருந்த கைத்தடிகள் அரசியல் கைதிகளின் உடலைப் பதம் பார்த்தன. அய்யோ, அப்பா, அம்மா என்ற அழுகுரலும் கூக்குரலும் கேட்டன...
அடுத்து நாங்கள்! கதவு திறக்கப்படும் ஒலி கேட்டோம். கதவை அவர்கள் வேகமாகத் தள்ளினர். 'வாங்கடா’ என்று குரல் கேட்டது. நான் ஓர் அடி எடுத்துவைப்பதற்கு முன்பாக எனது கன்னத்தில் அறை விழுந்தது. அவர்கள் என்னை சுவற்றின் மேல் தள்ளிவிட்டனர். ஒருவர் என் வயிற்றில் அடித்தார். நான் சுவரில் சரிந்து உட்கார நினைத்தேன். ஆனால் வீராசாமி (ஆற்காடு வீராசாமி) மரம் போல் தரையில் சாய்ந்தார். அவரை ஒரு மதம் பிடித்த யானையைப் போன்ற ஒருவர் தனது வலது காலாலும் இடது காலாலும் உதைத்தார். கையாலும் அடித்தார்.
தமிழகத்து முதலமைச்சர் மகன் என்று நேற்றுவரை அறிந்திருந்த அந்த அதிகாரி, தன் கால் பூட்ஸால் அவன் அழகிய முகத்தைச் சுவை பார்க்க உதைத்தான். அடுத்து கொலைகாரன் ஒருவன் ஓங்கிய கோல், அவனது தோள் பட்டையில். காக்கி உடை அணிந்த வார்டன் ஒருவன், அவனது கன்னத்தில் கை நீட்டினான். இவர்கள் இவனை அடித்தே கொன்றுவிடுவர் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. ஏனையோர் தரையில் படுத்துக்கிடந்தனர். அவர்கள் உதவிக்காக எழுந்து வரமுடியாத நிலையில் இருந்தனர். உடனே என் தம்பியைத் தள்ளிக்கொண்டு குறுக்கே ஓடினேன். தடி அடிகள் என் கழுத்தில் விழுந்தன. அவை அடிகளே அல்ல; கொல்லன் உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பின் மீது சம்மட்டி கொண்டு அடிப்பதைப்போன்று அவை இருந்தன. இந்தக் கொடுமைகளைத் தாங்கிக்கொண்ட பின்னர், என் அருமைத் தம்பியை அறைக்குள் தள்ளிக்கொண்டு வர என்னால் முடிந்தது'' என்று போகிறது அந்த டைரி.
அடிகளை வாங்கி வாங்கி ஆசிரியர் கி.வீரமணியின் முகம் வீங்கிப்போயிருந்ததாகவும் சிட்டிபாபு எழுதி இருக்கிறார். 'விடுதலை’ என்.எஸ்.சம்பந்தம் ஏற்கெனவே இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டவர். அவரை அடித்தார்கள். 'இதற்கு மேல் அடித்தால் அவர் செத்துவிடுவார்’ என்று வீரமணி சொன்னதை அதிகாரிகள் கேட்கவில்லை. சிறை அதிகாரிகளின் நடவடிக்கையை ஜாலியன் வாலாபாக் சம்பவத்துடன் சிட்டிபாபு ஒப்பிட்டுள்ளார்.
''அடுத்து அடியார் (முரசொலி அடியார்) அனுப்பப்பட்டார். அந்தோ பரிதாபம், முந்தைய ஒரு தடவை தாம் அழைக்கப்பட்டிருப்பது போன்று நினைத்துக்கொண்டு அவர் சென்றார். அடியார் என்று அழைத்தவாறே அவர் அடிக்கப்பட்டார். அடிபட்ட பின்னர், அவர் அதிகாரியைச் சந்தித்தார். அன்று இரவு அவர் இருந்த சிறைக்கூடத்துக்கு நான் மாற்றப்பட்டேன். நீலநாராயணன் என்னோடு இருந்தார். வெட்டுண்ட மரம்போல கீழே விழுந்த அடியாரைத் தூக்கிவிட நீலம் முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. அடியாரது முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. ஆயினும், ஒரு சிறு அசைவுகூடத் தென்படவில்லை. அவரது வாயில் நுரை தள்ளியது. அவரது கைகால்கள் கடும் குளிர் கண்டது போன்று நடுங்கின. அவரது முகத்தில் சவக்களைத் தட்டியது. மரணம் அவரை நெருங்கியது'' என்று எழுதி இருக்கிறார் சிட்டிபாபு.
ஏன் இவர்கள் அடிக்கப்பட்டார்கள் என்பது குறித்து நீதிபதி இஸ்மாயில் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிடுகிறார்:
''திராவிட முன்னேற்றக் கழகத்தையும் நிறுவன காங்கிரஸையும் சேர்ந்த காவல் கைதிகளை அவர்களது கட்சியில் இருந்து விலகுமாறு சிறைத் துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். அந்த கைதிகளின் கூற்றுப்படி, அவர்கள் கட்சியில் இருந்து விலக விரும்பவில்லை. அவர்களை அடித்தும் அச்சுறுத்தியும் அவர்கள் கட்சியில் இருந்து விலக வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்கள் தாங்களாகவே முன்வந்து இந்த விலகல் கடிதத்தை கொடுக்கவில்லை. எனவே, சிறை அதிகாரிகள் அரசியல் கைதிகளை அவரவரது கட்சிகளில் இருந்து விலக ராஜினாமா கடிதங்களைக் கொடுக்கும்படி வலியுறுத்தியுள்ளனர் என்ற முடிவுக்கு நான் வருகிறேன்'' என்று சொல்லியிருக்கிறார் நீதிபதி. அந்தளவுக்கு நெருக்கடிகள் தரப்பட்டன.
மாநிலக் கட்சிகளையே தடைசெய்ய பிரதமர் இந்திரா திட்டமிட்டு இருப்பதாக, டெல்லியில் இருந்து தகவல் வந்தது. அப்போதுதான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று எம்.ஜி.ஆர். பெயர் மாற்றம் செய்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரையும் மாற்ற கருணாநிதிக்கு கட்சிக்குள் இருந்த சிலரே ஆலோசனை சொன்னார்கள். ஆனால், அப்படி மாறுதல் செய்யக் கூடாது என்பதில் கருணாநிதி உறுதியாக இருந்தார். சென்னை மத்திய சிறையில் இருந்து கருணாநிதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் ஒன்றில், 'கழகத்தின் தலைமையிலும் மாற்றம் கூடாது. பெயரிலும் மாற்றம் கூடாது’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. தேவையில்லாமல் இந்திராவை கருணாநிதி பகைத்துக்கொண்டதால்தான் இப்படிப்பட்ட சிக்கல் கட்சிக்கு வந்தது என்று சொல்லி சிலர் கருணாநிதியைத் தலைவர் பதவியில் இருந்து அகற்ற திட்டமிட்டார்கள். அதைத்தான் அந்தக் கடிதம் குறிப்பிடுகிறது.
தி.மு.க-வினரை மொத்தமாகச் சிறையில் வைப்பது, கருணாநிதி மற்றும் அவரது அமைச்சர்கள் மீது விசாரணை கமிஷன் வைப்பது, அவரைத் தலைமைப் பதவியில் இருந்து தூக்குவது, தொண்டர்களைப் பயமுறுத்தி அந்தக் கட்சியில் இருந்து விலகவைப்பது என எல்லாவிதமான அச்சுறுத்தல்களும் அந்தக் காலக்கட்டத்தில் செய்யப்பட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை 1976-ம் ஆண்டு முழுக்கவே நெருப்பாறு ஓடிய ஆண்டாக கனன்றுகொண்டு இருந்தது.
இந்திராவுக்கு எதிராக அகில இந்தியக் கட்சிகள் அனைவரும் ஓர் அணியாகத் திரள வேண்டும் என்று கருணாநிதி அறிவித்தார். இதற்கான கலந்துரையாடல் கூட்டம் 76-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் நாள் தி.மு.க. எம்.பி-யான இரா.செழியனின் டெல்லி வீட்டில் நடந்தது. இந்திராவுக்கு எதிரான மிகப்பெரிய அஸ்திரமாக அந்தக் கூட்டம் அமைந்தது.
அசோக் மேத்தா (அகில இந்திய பழைய காங்கிரஸ்), பிலுமோடி (பாரதிய லோக்தளம்), பிஜு பட்நாயக் (சோஷலிஸ்ட் கட்சி), வாஜ்பாய் (ஜனசங்கம்) உள்ளிட்ட தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 'அனைவரும் ஏற்கத்தக்க உடன்பாடு இந்தக் கூட்டத்தில் எட்டப்பட வேண்டும்’ என்று கருணாநிதி சொன்னார். மறுநாள், இதே தலைவர்களது கூட்டம் ஹெச்.எம்.படேல் வீட்டில் நடந்தது. இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்று இந்தக் கூட்டத்தில்தான் முடிவுசெய்யப்பட்டது. அப்போது பாட்னாவில் தங்கியிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண், தனக்கு இது மகிழ்ச்சியைத்தருவதாகக் கருணாநிதிக்குக் கடிதம் அனுப்பினார். எதிர்க்கட்சிகள் அகில இந்திய அளவில் ஓரணியில் திரளத் தொடங்கியதைப் பார்த்து திகைத்த இந்திரா, கொஞ்சம் இறங்கிவர ஆரம்பித்தார்.

- VIkatan