Sunday, June 24, 2012

கொலைக்கள தமிழகம்!

தேசத்தையே உலுக்கிய டெல்லி டாக்டர் தம்பதிகளின் மகளான ஆருஷியின் கொலை, கௌரவக் கொலையாக இருக் கக்கூடும் என்று சி.பி.ஐ. சொல்கிறது. தமிழகத்திலோ பழ.கருப்பையா ''நகரத்தாருக்குரிய அடையாளங்கள் என்றும் தொடர வேண்டுமென்றால், நாம் கலப்புத் திருமணத்தை முற்றிலுமாக எதிர்க்க வேண்டும். சமூகத்தை மீறிக் கலப்புத் திருமணம் செய்துகொள்வோரை நம் சமூகத்தில் இருந்து தள்ளி வைத்துவிட வேண்டும்!'' என்று தனது கட்டுரையில் எழுதுகிறார். 'கலப்புத் திருமணம் செய்தால் கையை வெட்டுவேன்’ என்கிறார் பா.ம.க-வின் காடுவெட்டி குரு. ''கலப்புத் திருமணம் செய்துகொள்வதால் கொங்கு வேளாளர் மக்களின் கலாசாரம் கெட்டுப்போகிறது. பெண்களுக்குச் சொத்துரிமை அளிப்பதால், கொங்கு வேளாளர்களின் நிலவுடைமை பாதிக்கப்படுகிறது'' என்று கூறி இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று சங்கப் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இவற்றின் நீட்சியாகவே பின்வரும் சம்பவங்களை அணுக வேண்டியிருக்கிறது.... 
தஞ்சைக்கு அருகில், சூரக்கோட்டை யைச் சேர்ந்த மாரிமுத்து, ஆதிக்க சாதியைச் சேர்ந்த அபிராமியைக் காதல் மணம் புரிந்தார். ஒரு குழந்தையும் பிறந்தது.  ''குழந்தைக்கு செயின் வாங்கி வைத்துள்ளேன். வாங்கிட்டுப் போயிரு!''  என்று அபிராமியின் சகோதரர் அருண்குமார் கூற, அவரது வீட்டுக்குச் சென்ற மாரிமுத்து வீடு திரும்பவில்லை. மறுநாள் காலையில் சூரக்கோட்டை அருகே மாரிமுத்துவின் சடலம்தான் கண்டெடுக்கப்பட்டது. அவருடைய குரல்வளையை அறுத்து, இடது கையை வெட்டி, ஆண் குறியையும் அறுத்து எறிந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், துறிஞ்சிக் குட்டைமேடு பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த துரையும் சாதி இந்துவான தேன்மொழியும் காதலித்ததால் ஆத்திரமடைந்த தேன்மொழியின் குடும்பத்தினர், துரையை அரிவாளால் வெட்டி உயிரைப் பறித்திருக்கிறார்கள்.
  பழநி அருகில் க.கலையமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தலித்தான பத்ரகாளி, ஸ்ரீபிரியா என்கிற சாதி இந்துப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இதனால் ஸ்ரீபிரியாவின் தந்தை சீனிவாசன் உறவினர்களுடன் சென்று தன் மகளைப் படுகொலை செய்துள்ளார்.
  சென்னையைச் சேர்ந்த பார்த்தசாரதி, சரண்யாவைக் காதலித்து மணந்தார். சரண் யாவின் பெற்றோர் கூலிப்படை வைத்து பார்த்தசாரதியைக் கொலை செய்தனர்.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் வெற்றிவேல், சாதி இந்துவான சுகன்யாவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். சுகன்யாவின் தந்தையே மகளைப் படுகொலை செய்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் பரமக் குடி திருச்செல்வி, தலித் இளைஞரான டேனியல்ராஜைக் காதலித்ததால் கொல்லப் பட்டார். அந்தப் பெண்ணின் தாயையும்  பாட்டியையும் தற்போது காவல் துறை கைதுசெய்திருக்கிறது.
ஈரோடு மாவட்டம், பெரியார் நகரைச் சேர்ந்த தலித் இளைஞர் இளங்கோ, திருப்பூரில் செல்வலட்சுமியைக் காதலித்ததால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு இருக்கிறார்.

No comments:

Post a Comment