Friday, February 21, 2014

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் ! பசுமைப் போராளி எழுதும் தொடர் (1 -5)

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் !
பசுமைப் போராளி எழுதும் பரபர தொடர்

நதி, தன் வரலாறு கூறும் கதையைப் போன்றதுதான் நம் வாழ்க்கையும். எங்கோ பிறந்து, எங்கெங்கோ வளர்ந்து, எங்கோ போய் முடிகிற தண்ணீரின் போக்கைப் போல இந்த வாழ்க்கை, சுற்றிச் சுழற்றுகிறது. கனவிலும் நினையாத ஊருக்கு நம்மைக் கிளம்பச் சொல்கிறது. வரைபடத்திலும் பார்த்திராத ஊரில், நம்மை வாழச் சொல்கிறது. திரும்பிப் பார்க்கிற போதெல்லாம் வாழ்க்கையின் வழித்தடங்கள் அழகியச் சித்திரங்களாகவும், ஆச்சரியப்படத்தக்க விசித்திரங்களாகவும் நமக்குள் விரிகின்றன.
புத்தன் என்றால், எப்படி போதி மரத்தடியும், துக்கம் நேர்ந்த வீடும் தவிர்க்க முடியாத நினைவுகளாகத் தலைதூக்குகிறதோ... அதைப்போலத்தான் நம் வழித்தடங்களும். 'எனது வாழ்க்கை’ என்கிற இரண்டு வார்த்தைகள், என்னை இழுத்துச் சென்ற தூரம் அதிகம். என் நினைவுகளின் வழிப்பயணத்தில் உங்களையும் விரல் பிடித்து அழைத்துச் செல்கிறேன்.
1966...
கோவில்பட்டி பருத்தி ஆராய்ச்சி நிலையம்...
மாதாந்திர ஆய்வுக் கூட்டம்...
''செலவைக் கூட்டுகிற எந்த ஆராய்ச்சியும், வானம் பார்த்த உழவர்க்குப் பயன்படாது'' என்று சீறலாகப் பேசும் பண்ணை மேலாளர், அதற்கான காரணங்களை விளக்கிப் பேசுகிறார்.
எல்லோரும் ஆமோதித்து தலை ஆட்டுகின்றனர்.
''அப்படியானால், இந்த உண்மையை ஆண்டு அறிக்கையில் எழுத வேண்டும்; ஆராய்ச்சி முறைகள் மாற்றப்படவேண்டும்'' என்று மேலும் அழுத்தம் கொடுக்கிறார் மேலாளர்.
அந்த ஆதங்கத்தைப் பலரும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால், ஆண்டு அறிக்கையில் அதை எழுதுவதற்கு மட்டும் யாருமே இசைந்து கொடுக்கவில்லை.
''கோவில்பட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பதை கோவில்பட்டியில் முடிவு செய்யவில்லை. கோவையில் முடிவு செய்வார்கள்; அல்லது டெல்லியில் முடிவு செய்வார்கள்; அல்லது அமெரிக்காவில் முடிவு செய்வார்கள். 'நமது ஆராய்ச்சி சரியில்லை' என்று நாமே எழுதிவிட்டால், இந்த நிலையத்தை மட்டும் இழுத்து மூடுவார்கள். நாம் எல்லாரும் விரிவாக்கப் பணியாளராக வெயிலில் அலைய நேரிடும்!''  
என்பதுதான் அதற்கான காரணமாக அங்கிருந்தவர்களால் முன் வைக்கப்படுகிறது.
இந்த வார்த்தைகள், அந்த பண்ணை மேலாளரை மனதளவில் நொறுக்கிப் போடுகிறது. 'எதற்காக இந்த வேலையைச் செய்கிறோம் என்கிற துளியளவு அக்கறைகூட இல்லாமல், வெயிலில் பயணிப்பதற்கு பயந்து, வாழ்நாள் முழுவதும் பொய்யையே கட்டி அழப்போகின்ற அந்தக் கூட்டத்தில், நாமும் ஒருவனாக இருக்க வேண்டுமா? நம்முடைய நலனுக்காக என்றைக்கு சமரசம் ஆகிறோமோ... அப்போதுதான் தீமையின் திசையில் நாம் கால் வைக்கத் தொடங்குகிறோம்' என்று மனதுக்குள் மருகுகிறார்!
மறுநாள், தன்னுடைய நேரடி உயர்அதிகாரியான மீனாட்சி முன்பாக போய் உட்காருகிறார் பண்ணை மேலாளர். எந்தச் சூழலிலும் முகம் சுளிக்காதவர் மீனாட்சி. ஆனால், அன்றைய தினம், 'நான் என் வேலையை விடப்போகிறேன்' என்று பண்ணை மேலாளர் சொன்னதும்... அதிர்ச்சி அடைந்தவராக நிமிர்கிறார்.
''வெளியில போய் என்ன செய்வீங்க?''
''உறவினர்கள், நண்பர்கள் நிலங்களில் வேலை செய்வேன்''
''உங்கள் அப்பா செலவிலேயே ஆளாகிவிட்டீர்களா?''
''இல்லையில்லை... எனது கல்விக்காக அரசு செலவிட்டிருக்கிறது. அதற்காக, உழவர்களுக்குக் கேடு செய்யும் பணியைத் தொடர வேண்டுமா?''
''அப்படிச் சொல்லவில்லை. உங்களுடைய அறிவு, விரிந்து பரந்த வட்டத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதுதான் என் கருத்து.''
''அது எப்படி சாத்தியப்படும்?'’
''அவசரப்பட்டு தெருவில் போய் நிற்காதீர்கள். வாய்ப்பு தேடிவரும், காத்திருங்கள்...''
அந்தப் பண்ணை மேலாளரின் கோபத்தையும் ஆதங்கத்தையும் மீனாட்சியின் வார்த்தைகள் அமைதிப்படுத்துகின்றன. மீனாட்சி சொன்ன வாய்ப்புக்காக மேலும் மூன்று ஆண்டுகள் காத்திருக்கிறார்.
1969... மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து விடைபெறும் அந்த பண்ணை மேலாளர், 'பறவையின் விடுதலைக்குச் சமமான விடுபடல்' என்று துள்ளித் திரிந்து வெளியேறுகிறார்.
அந்த மேலாளர், நான்தான் என்பது என் நெஞ்சுக்கு நெருக்கமான பலருக்கும் தெரியும். ஆனால்...?
அந்த மேலாளர், நான்தான் என்பது என் நெஞ்சுக்கு நெருக்கமான பலருக்கும் தெரியும். ஆனால்...?
கோவில்பட்டி பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் நான் கற்றுக் கொண்டவை எவை... கண்டு பொங்கியவை எவை... மேலாளர் பணியை உதற வைத்தவை எவையெவை? என்பதெல்லாம், அவர்கள் அத்தனை பேருக்கும் தெரியாத சங்கதி!
இந்தக் கேள்விகளுக்கு மட்டுமல்ல, இன்னும் பற்பல கேள்விகளுக்கு விடையைத் தெரிந்து கொள்ள... கோவில்பட்டியில் இன்னும் சில காலம் என்னோடு உங்களைக் கைபிடித்து அழைத்துச் சென்றே ஆகவேண்டும்.
கோவில்பட்டியிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையில், தொடர் வண்டி நிலையத்தில் இருந்து மூன்று கல் தொலைவில் அமைந்திருக்கும் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்துக்கு, ஒராண்டு முன்பே விவசாய மாணவனாக சென்றிருக்கிறேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் பட்டம் பயின்றபோது, கல்விச் சுற்றுலாவாக இரண்டு நாட்கள், அந்த ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி சுற்றிப் பார்த்திருக்கிறேன்.
நாங்கள் சென்றிருந்தபோது அங்கே கடுமையான வெயில். 'இங்கே வேலை கிடைச்சா, அடுத்த நாளே லீவு போட்டுட்டு ஊருக்குப் போயிடணும்’ என வெயிலின் உக்கிரத்தை என்னோடு வந்திருந்தவர்கள் கிண்டலாகப் பேசி சிரித்தார்கள். நானும் சேர்ந்தே சிரித்தேன். உச்சிவெயில் அந்தச் சிரிப்பை உள்வாங்கி வைத்திருந்ததோ என்னவோ... என்னை அப்படியே நினைவில் வைத்திருந்து, கோவில்பட்டியிலேயே எனக்கான வேலைக்கு வித்திட்டது. படிப்பை முடித்த கையோடு, 1963-ம் ஆண்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதி அங்கே வேலையில் சேர்ந்தேன்!
கோவில்பட்டி, பருத்தி ஆராய்ச்சி நிலையம், வெள்ளையர்களால் 1901-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஐரோப்பியச் சந்தையில் பருத்திக்கு நல்ல மதிப்பு இருந்தது. பருத்தி இழையின் நீளம், ஒரு அங்குலத்துக்கும் கூடுதலாக இருந்தால், விலையும் கூடுதலாகக் கிடைக்கும். அதற்காகவே நிறுவப்பட்ட நிலையம்தான் இது. ஆனால், 1950-க்குப் பிறகு புஞ்சை தானியப் பயிர் அனைத்துக்குமான ஆராய்ச்சி நிலையமாக இது மேம்படுத்தப்பட்டுவிட்டது. நான் கருங்கண்ணி பருத்தி ஆராய்ச்சிப் பிரிவில், துணை விஞ்ஞானி.
வெளியூர் என்றாலே தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் சரியான இடம் தேடுவதுதானே முதல் வேலை. அந்த விதத்தில் எனக்கு நல்ல கொடுப்பினை. காளாம்பட்டி சீனிவாசன் என்கிற கிடைத்தற்கு அரிய நண்பர்... விடுதியில் தங்குவதற்கும், உணவகத்தில் கணக்கு வைப்பதற்கும் உதவினார்.
பருத்தி ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றிய மூத்த விஞ்ஞானி டி.எஸ். ஆரோன், பொறுமையும் திறமையும் மிக்கவர். எல்லாருக்கும் முன்பாக நிலத்தில் நிற்பார்; மற்றவர்கள் நிழலுக்கு வந்த பின்பும் பருத்திச் செடிகளோடு உறவாடிக்கொண்டு இருப்பார். செடிகளின் மீதான சிநேகம் அவரை அந்தளவுக்கு வேலையில் லயிக்க வைத்திருந்தது. அவரது கையில் கட்டி இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் கடிகாரத்தின் மேல்புறக் கண்ணாடி, கோடையில் வெடித்துக் கிடக்கும் ஏரிபோல சிதைந்துகிடக்கும். அந்தக் கடிகாரத்தின் நினைவுகூட இன்னும் என்னுள் நீக்கமற நிறைந்திருக்கிறது. நம்முடைய ஆத்மார்த்தமான உழைப்பு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதையும், ஆராய்ச்சி நுட்பத்தையும் எனக்குக் கற்பித்தவர் ஆரோன்.
ஆராய்ச்சி நிலையத்தின் தலைமையகம் அமைந்த பண்ணை, 15 ஏக்கர் செம்மண் பூமி. அங்கு நீர்வசதி உண்டு. இறவைப் பயிர் ஆராய்ச்சி (குறிப்பாக மிளகாய்) மட்டுமே இங்கு நடைபெற்றது. முக்கியமான ஆராய்ச்சிகள், பெய்யும் மழைநீரை நம்பியே இருந்தன. இதற்கான நிலம், கரிசல் மண் பூமி. அப்பண்ணை மேலும் மூன்று கல் வடக்கில் இருந்தது.
மனமகிழ்ச்சிக்கு என்றே ஒரு மன்றம் ஊருக்குள் இருந்தது. வேளாண் விஞ்ஞானிகளும் பஞ்சாலையில் பணியாற்றும் ஊழியர்களும் மாலையில் ஒன்று கூடும் இடம் அது. பலவிதமான விளையாட்டுகளும் அங்கு நடக்கும். தகவல் பரிமாற்றத்துக்கும் கேலிப் பேச்சுக்கும் குறைவு இருக்காது. இந்தக் கலகலப்புகளுக்கு நடுவே ஒரு நாள்... மூத்த விஞ்ஞானி, ராபின்சன் ஒரு கேள்வி எழுப்பினார்.
''நான்கு பருவங்கள் தெரியுமா?''
''தெரியுமே! கோடைக் காலம், குளிர் காலம், இலையுதிர் காலம், வசந்த காலம்''
- இது எனது பதில்.
ராபின்சன் தொடர்ந்தார்.
''அதை எல்லாம் மறந்துவிடு! கோவில்பட்டியில் மூன்று பருவங்கள் மட்டுமே உண்டு! அவை என்ன?
''ஹாட் (Hot), ஹாட்டர் (Hotter), ஹாட்டஸ்ட் (Hottest).. அதாவது... வெப்பக் காலம், கோடைக் காலம், கடும்கோடைக் காலம்.''
கோவில்பட்டியின் நிலைமை இப்படித்தான் இருக்கும். சுற்றுவட்டாரத்தில் மழை நாட்கள் குறைவு. பெய்யும் மழையும் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கொட்டித் தீர்த்துவிடும். மழைநீரை ஏரி, குளங்களில் சேமித்து காலத்தைக் கழிப்பார்கள் மக்கள். பெண்களும், குழந்தைகளும் பஞ்சாலையிலும் தீப்பெட்டித் தொழிலிலும் கடலை மிட்டாய் ஆலைகளிலும் பிழைப்புக்காகத் தஞ்சம் அடைந்திருப்பார்கள். கடின வாழ்க்கைக்குக் கடன்பட்டவர்களைப் போல் இயங்கியது அவர்களுடைய ஒவ்வொரு நாளும்.
ஒரு சில நாட்கள் மட்டுமே பெய்யும் மழைநீரையும் உறிஞ்சி வைத்து கொண்ட கரிசல் மண் பூமி, நம்நாட்டு பருத்திக்குப் பொருத்தமானது. வறட்சி தாங்கவும் பூச்சிநோய் தாக்குதலை எதிர்க்கவும் பழகிப்போன பருத்தியைத்தான் 'கருங்கண்ணிப் பருத்தி’ என்பார்கள். ஆடுகளை கிடை மறித்தும், மாட்டு எருவை நிலத்தில் பரப்பியும், கம்பையும்... பருத்தியையும் மாற்றி மாற்றி பயிர்செய்தும் சிறப்பான விளைச்சல் எடுக்கும் பக்குவத்தை சமுதாயம் தலைமுறை தலைமுறையாகக் கைமாற்றிக் கொடுத்திருந்தது. இதைவிடப் பெரிதாகச் செய்துவிடப் போவதாகத்தான் விஞ்ஞானிகள் அங்கே களம் இறங்கி இருந்தார்கள். ஆனால், அப்படி ஒன்றும் சாதித்து விடவில்லை என்பதுதான் பச்சையான உண்மை.
இந்த உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக, பண்ணையில் என்னைப் போல வேலையில் இருந்தவர்களில் சிலரின் அறிவுப் பரப்பை ஆராய்ச்சி செய்தாலே போதும். அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக... முக்கியமான பணியில் இருந்த அந்த நபரை உங்களுக்குச் சொல்லலாம். செய்தித்தாள்களில் 'எட்டு கோள்கள் ஒன்றுகூடப் போகின்றன... அதனால் பூமி அழியப் போகிறது!' என்கிற வதந்தி அந்த நாட்களில் ஏக பிரபலம். பூமி அழியப் போவதாக ஒரு நாளைக் குறிப்பிட்டு ஓராண்டு முன்பாகவே அந்த வதந்தி பரப்பப்பட்டிருந்தது.
சரியாக அந்த நாளில் தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ள அவர் முடிவு செய்தார். விடுப்பு எடுத்துக் கொண்டு, வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தார். கதவு உட்புறம் தாளிடப்பட்டிருந்தது. மதியம் ஆனதும் சன்னல் வழியாகப் பண்ணையாளை அழைத்துப் பணம் கொடுத்து உணவு வாங்கி வரச்சொல்லி சாப்பிட்டார். மறுநாள், காலையில் நாங்கள் எல்லோரும் அவர் கண்முன்னே நன்றாக நடமாடிக் கொண்டிருந்ததை அதிர்ச்சியோடுதான் பார்த்தார்- உலகம் அழியாமல் போனதில் அவருக்கு ஏக வருத்தம்!
ஆராய்ச்சி நிலையத்தில் அந்த விஞ்ஞானி நடத்திய இந்தக் கூத்தை, மற்ற விஞ்ஞானிகள் எல்லாம் பலகாலமாக சொல்லிச் சிரிப்பது உண்டு. வேளாண் துறையில் இதுபோல பல 'ஞானக்கூத்தர்கள்' உண்டு. இவர்கள் பற்றிய செய்திகளே... கரிசல்காட்டுப் பண்ணையில், மக்களுக்குக் களைப்பு நீக்கும் மருந்து!


koவில்பட்டி ஆராய்ச்சி நிலையத்தில் எனக்கு வாய்த்த நண்பர்களில் இருவர் குறிப்பிடப்பட வேண்டியவர்கள் க.சு.சுப்பையா தாவரவியலில் அறிவாழம் உள்ளவர். இலக்கியப் பரிமாற்றத்தில் ஈடுபாடு கொண்டவர். சுப்பையா குடும்ப நண்பராகவும் ஆனார்.
நுண்ணறிவும், ஆற்றலும், திறமையும் உள்ளவர்களை முடக்குவதற்கு... மேற்பதவிகளில் இருந்தவர்கள் அயராது பாடுபடுவார்கள்; பலவித வித்தைகளையும் கட்டவிழ்த்து விடுவார்கள். இதிகாச காலம்தொட்டு, இன்றையக் காலம் வரை மேற்பதவிக்காரர்களின் குணம் மாறாது இருப்பது ஆச்சரியம்தான்!
மேற்பதவிக்காரர்களின் கட்டுப்பாடுகள் பிடிக்காதவர்கள், ஒருகட்டத்தில் சலிப்படைந்து வெளியேறுவார்கள். இப்படி வெளியேறியவர்களில் க.சு.சுப்பையாவும் ஒருவர். பின்னாளில் 'ஸ்பிக்' ரசாயன உரக் கம்பெனியின் துணைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற சுப்பையாவை, தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றின்போது சமீபத்தில் பார்த்தேன். உடல் நலிவுற்ற நிலையில் இருந்தார்.
இன்னொரு நண்பர்... 'ஸ்டோர் காப்பாளர்' சங்கரன். மிக எளிமையானவர். அதுவே அவரது வலிமையும்கூட! அவர் சினந்து நான் பார்த்ததே இல்லை. விதைகள் விளைபொருட்கள், இடுபொருட்கள், கருவிகள் அனைத்தும் இவர் பொறுப்பில் இருந்தன. ஆதலால் எல்லாரையும் சந்திக்கும் அவசியம் இவருக்கு இருந்தது. கோவில்பட்டியைச் சேர்ந்தவர். வெளி செல்வாக்கும் உண்டு. யாராக இருந்தாலும், இவரிடம் ஏதாவது உதவி பெற்றிருப்பார்கள். எட்டயபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரதி விழா நிகழ்வுகளுக்கு என்னை அழைத்துச் சென்றவர்.
பாரதி விழாவின்போது நா.வானமாமலை, நல்லக்கண்ணு, பாலதண்டாயுதம், குன்றக்குடி அடிகளார், சாலமன் பாப்பையா, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி போன்றவர்களோடு நெருக்கமாக இருக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அதுவே... பாரதியுடன் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. 'பாரத சமுதாயம், ஒப்பில்லாத சமுதாயமாகவும்... உலகத்துக்கு ஒரு புதுமையாகவும் விளங்க வேண்டும்' என்கிற உணர்ச்சித் தீ, அப்போதுதான் என்னையும் பற்றிக் கொண்டது.
'நேர் படப் பேசு, நையப் புடை’ என்கிற பாரதி சொல்லுக்கு இலக்கணமாக இருந்தவர்களில் பருத்திப் பிரிவு விஞ்ஞானி ராஜகோபாலின் தந்தையும் ஒருவர். மாவட்ட அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் கோயில்களுக்குப் போவதில்லை. வீட்டிலேயே கடவுள் படங்களை வைத்து வழிபடுபவர். அவர் ஒரு முறை கூறிய சொல், வாழ்நாள் முழுவதும் என்னோடு பயணிக்கிறது.
‘YIELDING TO INJUSTICE AND MISUSE OF POWER ARE NOTHING BUT MORAL PROSTITUTION.’
'அநீதிக்கு விட்டுக் கொடுப்பதும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும், மனதளவில் விபசாரம் செய்வதைத் தவிர வேறில்லை' வாழ்க்கையின் இலக்கணத்தைச் சொன்ன வார்த்தைகள் இவை. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அநாகரிகங்கள் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், அந்த வார்த்தைகளின் சத்தியமான உண்மை நெஞ்சை அறைகிறது.
கோவில்பட்டி வந்த ஆறு மாதத்தில் மூன்று நிகழ்வுகள் நடந்தேறின. பண்ணைக்குள்ளேயே எனக்கு வீடு ஒதுக்கப்பட்டுவிட்டது. திருமணம் முடித்து மனைவி சாவித்திரியை அழைத்து வந்துவிட்டேன். பருத்தி ஆராய்ச்சிப் பிரிவில் இருந்த என்னை, 'மேலாளர்' பதவி கொடுத்து, கரிசல் காட்டுப் பண்ணைக்கு மாற்றி விட்டார்கள்.
உடனடியாக எனக்கு இருந்த கடமைகள் இரண்டு. ஒன்று, வேலியாக வளர்ந்திருந்த சீமைக் கருவேல் மரங்களை வேரோடு பெயர்த்து அப்புறப்படுத்த வேண்டும். இரண்டு, 158 ஏக்கர் நிலத்துக்கும் முள்கம்பி வேலி போட வேண்டும்!
சீமைக் கருவேல் வேலியை அப்புறப்படுத்த வேண்டிய முடிவு எப்படி வந்தது?
'வேலியே பயிரை மேய்ந்த கதை' என்பதற்கு ஆதார சம்பவம் அது.
வேலியில் இருந்து 12 மீட்டர் தூரத்துக்குப் பருத்திச் செடி வளர்ச்சி குன்றி இருந்தது. வேலியில் இருந்து 1 மீட்டர் தூரம் தள்ளி 60 சென்டி மீட்டர் அகலம் மற்றும் ஆழத்துக்குப் பள்ளம் தோண்டினார்கள். குறுக்கிட்ட சீமைக்கருவேல் வேர்களை எல்லாம் வெட்டி வீசினார்கள். அடுத்தப் பருவத்தில் இருந்து பருத்திச் செடி நன்றாக வளர்ந்து பூத்துக் காய்த்தது. இந்த வளர்ச்சி மூன்று ஆண்டுகளுக்குத்தான். அதன் பிறகு, மீண்டும் பருத்திச் செடி வளர்ச்சி குன்றியது. நிலத்தை அகழ்ந்து பார்த்த போது ஓர் உண்மை புரிந்தது. சீமைக் கருவேல் மரம்... தனது வேரை, வெட்டப்பட்ட பள்ளத்துக்குக் கீழே அனுப்பியது. பிறகு, வேரானது மேல் எழுந்து நீண்டு பயிரை மேய்ந்தது. சீமைக் கருவேல் வேரில் சுரக்கும் நச்சு, பயிர்ச் செடிகளின் சாரத்தைச் சப்பி எடுத்துவிடுகிறது. இந்த உண்மை தெரிந்த பிறகே வேலிக் கருவேல் மரங்களை அப்புறப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது.
வேலிக்காக சீமைக்கருவேல் வளர்த்தது போலவே... சிந்தனை மட்டத்தில் ஒரு நச்சுமரம் வளர்க்கப்பட்டது. 'அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள ஆராய்ச்சியும் நடைமுறையும் இந்தியாவில் புகுத்தப்பட்டால், இங்கு விளைச்சல் பெருகும், பஞ்சம் அகலும்' என்ற பிழையான கருத்து அரசியல்வாதிகள் மற்றும் விஞ்ஞானிகளின் முழக்கமாக இருந்தது. இதற்கேற்ப ஆராய்ச்சிகளும் பயிர் வகைகளும் மாற்றப்பட்டன.
கோவில்பட்டி வட்டார உழவர்கள் எதைப் பயிரிட வேண்டும் என்பதை டெல்லியில் முடிவு செய்தார்கள். அமெரிக்க எண்ணெய் கம்பெனி ராக்பெல்லர் நிறுவனமும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமும் கைகோத்தபடி புதிய ஒட்டுரகச் சோளம் (C.S.H), ஒட்டுரகக் கம்பு (HB) விதைகளை உண்டு பண்ணி, கோவில்பட்டிக்கு அனுப்பினார்கள். அவற்றுக்கு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி நஞ்சுகள், பூஞ்சணக் கொல்லி நஞ்சுகளைப் பரிந்துரை செய்தார்கள்.
நடப்பில் இருந்த விதைக்கும், டெல்லி இறக்குமதி செய்த விதைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. நடப்பில் இருந்தவை... பொறுக்கு விதை முறையில் தனித்தேர்வு (Pure Line Selection) செய்யப்பட்டவை.
நம் மூதாதையர் சில ஆயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடித்த முறைதான் இந்த பொறுக்கு விதை முறை. விளைந்துள்ள ஒரு நிலத்தில் இறங்கி, நன்கு விளைந்துள்ள சில கதிர்களை மட்டும் தனியாக அறுவடை செய்து, உலர்த்தி, மணிகளை உதிர்த்து சேமித்து வைத்து, தனி நிலத்தில் விதைப்பார்கள். அதில் விளையும் சிறந்த கதிர்களை மீண்டும் கொய்வார்கள்; சேமிப்பார்கள். இப்படி மீண்டும் செய்வதன் மூலம் பெறுவதே பொறுக்கு விதைகள். கோவில்பட்டி 2 வெள்ளைச் சோளம், கே.1 (கோவில்பட்டி) மிளகாய், கே.1 கம்பு, கே.2 ராகி எல்லாம் இப்படித் தேர்வு செய்யப்பட்டவையே. டெல்லி அனுப்பிய சோளமும், கம்பும் அப்படிப்பட்டவை அல்ல. முற்றிலும் வேறுபட்ட இரண்டு செடிகளின் மகரந்தத்தையும் சூலையும் ஒட்டுக் கட்டித் தயாரிக்கப்பட்டவை.
பொறுக்கு விதையில் இருந்து விளைந்தவற்றிலிருந்து திரும்பத் திரும்ப விதை எடுக்கமுடியும். ஒட்டு விதையில் அப்படி செய்தால்... பகுதி செடிகளில் கதிர் வராது, அல்லது கதிரில் மணி பிடிக்காது.
பாரம்பரிய விதைகளை விதைப்பதற்கு என்று ஒரு பருவம் உண்டு. ஒட்டு விதைகளுக்கு அத்தகையக் கட்டுப்பாடு கிடையாது. பாரம்பரிய விதைக்கு ஆட்டு எரு, மாட்டு எரு, பிண்ணாக்கு போதுமானது. ஒட்டு விதைகளுக்கு ரசாயன உரம் தேவை.
பாரம்பரிய விதைகள் உயர்ந்த தரம் உள்ளவை. ஒட்டு விதைகள் கூடுதல் விளைச்சலுக்காகவே உற்பத்தி செய்யப்பட்டவை. அவை, 'அமோக விளைச்சல் ரகங்கள்’ (High Yielding Varieties) என்று பெயர் சூட்டப்பட்டவை. ஆனால், வானம் பார்த்த பூமியில்... அமோக விளைச்சல் ரகங்கள் என்று கொடுக்கப்பட்ட சோளமும், கம்பும் அமோகமாக விளையாதது மட்டும் அல்ல; அதனால் வந்த பக்க விளைவுகளும் பாதகமாகவே இருந்தன!

வானம் பார்த்த கோவில்பட்டி பூமியில்... அமோக விளைச்சல் ரகங்கள் (High Yielding Varieties) என்று கொடுக்கப்பட்ட சோளமும், கம்பும்... பக்க விளைவுகளையே அதிகமாக விளைவித்தன!
சி.எஸ்.எச் (கோஆர்டினேட்டட் சொர்கம் ஹைபிரீட்) சோள வகைக்கு, குட்டையான செடிகள், நீண்ட கதிர்கள் உண்டு. ஆனால், கதிரில் இருந்து மணியைப் பிரித்தெடுப்பது துன்பம் மிகுந்ததாக இருந்தது. கதிர்களைக் களத்தில் பரப்பி, மாடுகளைப் பிணைத்துச் சுற்றவிடும்போது... தானியம் தனியே பிரியாமல் உமியுடன் சேர்ந்தே விழுந்தது. தானியம் வெள்ளைச் சோளம் போலவோ... செஞ்சோளம் போலவோ... ருசியாக இல்லை. ரசாயன உரம் போட்டு, பூச்சிக்கொல்லியும் தெளித்ததால் கசக்கவும் செய்தது. உழவர்கள், பலமுனைகளிலும் துன்ப துயரங்களுக்கு ஆளானார்கள்.
எச்.பி (ஹைபிரீட் பஜ்ரா) கம்புப் பயிர்... குட்டையாகவும் கிளைவிட்டும் புதர் போலவும் வளர்ந்தது. கதிர் வரும்போது பூஞ்சை நோய் தாக்கியது... கரிப்பூட்டை நோய் வந்து தானியம் கரியாகிக் கொட்டியது. உழவர்கள் தொடர்ந்து, இழப்பை சந்தித்தார்கள்.
இப்படி அனைத்திலும் பேரிழப்பு என்பது தொடர் தாக்குதலாக வடிவெடுத்தது ஒருபக்கமிருக்க... பாரம்பரிய புஞ்சை தானிய விதைகள் (சோளம், கம்பு, வரகு, கேழ்வரகு, குதிரைவாலி, தினை, சாமை, பனிவரகு) எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தன-மறுபக்கத்தில்.
கோவில்பட்டி ஆராய்ச்சி நிலையத்தில் மாதம் ஒருமுறை ஆய்வுக்குழுக் கூட்டம் (ரிசர்ச் கவுன்சில்) கூடும். சாதனைகள் மற்றும் முன்னேற்றம் அலசப்படும். பண்ணை நிர்வாகியாக இருந்த காரணத்தால், இருபதுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளும் என்னுடைய விரல்முனையில் இருந்தன. பண்ணைக்குள் வந்த உழவர்களைக் கூட்டிச் சென்று அனைத்தையும் விளக்கினேன். ஆனாலும், எங்களது கண்டுபிடிப்புகள் பண்ணையின் வேலிக்கு வெளியே போகவில்லை. காரணத்தைக் கண்டறிய மனம் துடித்தது.
அறுபது ஆண்டுகால மழையளவு கை வசம் இருந்தது. எடுத்து மேசை மீது விரித்தேன். கூட்டிக் கழித்துப் பார்த்தேன். ஓர் உண்மை பளிச்சிட்டது. எல்லா வருடங்களிலும் மழை சீராகப் பெய்வது இல்லை. சராசரியாக நான்கு ஆண்டுகளில் ஓராண்டு வானம் பொய்த்துவிடுகிறது. அது எந்த ஆண்டு என்று முன்கூட்டியே கணிக்கமுடியாது என்பதால், அந்த ஆண்டு உழுவதும் விதைப்பதுமே இழப்பாகிவிடும்.
அரசு, செய்வது ஆராய்ச்சி. அது 'மழை குறைவு’ அல்லது 'காலத்தில் பெய்யவில்லை’ என்று எழுதி கணக்கை முடிப்பதற்காகவே நடத்தப்படும் ஆராய்ச்சி! அது வெற்றி பெற்றாலும்... பெறாவிட்டாலும் சம்பளம் வந்துவிடும் என் போன்ற அதிகாரிகளுக்கு. ஆனால், வயல்காட்டில் ஒவ்வொரு உழவரும் தினம் தினம் நடத்திக் கொண்டிருப்பது... 'வாழ்வா, சாவா?' போராட்டம்!
கோவில்பட்டி பண்ணையில் ஏழு இணை காங்கேயம் மாடுகள் இருந்தன. அனைத்தையும் முன்கூட்டியே வாங்கி வைத்து நேரத்தில் வேலைகளைச் செய்து முடிப்போம்!
ஆனால், எல்லா உழவர்களுக்கும் இது சாத்தியமா...?
பண்ணையில் டிராக்டர்கள், வாகனங்கள், இயந்திரக் கலப்பைகள், மூட்டை மூட்டையாக உரங்கள், பூச்சிக்கொல்லிகள், தேவையான அளவுக்கு கூலியாட்கள்... என்று எது கேட்டாலும் அந்த நிமிடமே கிடைக்கும்!
அடுத்தவேளை உணவுக்கே வழியில்லாத உழவர்களுக்கெல்லாம் இது சாத்தியமா?
இங்கே, 'நானொரு விவசாயி' என்று சொல்லிக் கொள்ளும் கூட்டத்தில் 70, 80 சதவிகிதத்தினரின் நிலை... முளைத்த விதை, 'பிழைத்துக் கொள்ளும்' என்கிற நம்பிக்கை வந்த பிறகு... மனைவி, அம்மா ஆகியோரின் கழுத்தில் காதில் இருக்கும் நகைகளை அடகு வைக்கும் அளவுக்குத்தான் இருக்கிறது பல காலமாக! அதன் பிறகுதான் சாகுபடி செலவுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள்!
'வானம் பார்த்த பூமியில் நிச்சயமற்ற வேளாண்மை. மழை குறைந்த ஆண்டுகளில், ரசாயன உரம் எதிர்விளைவையே உண்டு பண்ணும். அதனால் பணச்செலவு மிகுந்த இந்த சாகுபடி, உழவர்களை எப்படிக் காப்பாற்றும்?' என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே நினைவலைகள் சொந்த ஊர்ப்பக்கம் தாவியோடி, சின்ன வயது ஞாபகங்களைக் கீறிவிட்டன.
கரிசல்காட்டு கோவில்பட்டி பூமிக்கும்... காவிரி பாயும் சோழமண்டல பூமிக்கும் இடையே எவ்வளவு பெரிய வேறுபாடு?! தூத்துக்குடி மாவட்டத்தில், கோடைப் பருவத்தில் வெடித்துப் பிளக்கும் கரிசல் மண் பூமி, மீண்டும் பச்சை போர்த்திக் கொள்வதற்கு வானத்தைப் பார்த்துக் காத்திருக்க வேண்டும். ஆனால், காவிரியின் தயவால்... சோழமண்டலம் முழுக்கவே பசுமைதான் பெரும்பாலும்!
குடகு மலையில் அருவியாய்ப் பிறந்து, நடந்து வரும் பாதையில் கரையின் இரு கரைகளிலும் கா(காடு) விரிந்து கிடந்ததால் 'காவிரி' எனப் பெயர் பெற்றது. குளித்தலை வரும்போது அகன்ற காவிரியாய் விரிந்து, திருச்சிக்கு மேற்கில் இருபது கல் தொலைவில் 'முக்கொம்பு' எனும் இடத்தில் கொள்ளிடம் மற்றும் காவிரி என இரண்டாகப் பிரிந்து, திருவரங்கத்தைத் தீவாகச் சூழ்கிறது இந்த நதி. திருச்சி நகரின் வடஎல்லையாகப் பாயும் காவிரி, அங்கிருந்து 16 கிலோ மீட்டரில் (கல்லணையில்) மீண்டும் இரண்டாகப் பிரிகிறது.
வடக்குப் பிரிவு 'காவிரி’ எனவும், தெற்குப்பிரிவு 'வெண்ணாறு’ என்றும் அழைக்கப்படுகின்றன. கல்லணையில் இருந்து கிழக்கே பன்னிரண்டு கல் தொலைவில் காவிரியின் தென்கரையில் இருந்து தெற்கு நோக்கிப் பிரியும் பாதையில் இரண்டு கல் தொலைவில் இருக்கிறது, 'இளங்காடு’. இங்கு வசித்து வந்த கோவிந்தசாமி-அரங்கநாயகி தம்பதிக்கு இரண்டு பெண் மற்றும் நான்கு ஆண் குழந்தைகள். ஆறாவதாகப் பிறந்த நான், 'நம்மாழ்வார்’ என்று பெயர் சூட்டப்பட்டேன். 'விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் இப்பெயர் சூட்டப்பட்டது’ என்று பின்னாளில் அறிந்து கொண்டேன்.
இளங்காடு, ஆயிரம் தலைக்கட்டுகள் கொண்ட பேரூர். தெற்குத்தெருவில் இருந்த நாட்டு ஓடு வேய்ந்த சுற்றுக்கட்டு வீட்டில்தான் நாங்கள் மூன்று (பங்காளி) குடும்பங்களாக கூட்டாக வாழ்ந்தோம்.
வெளிப்புற வாயில்களுக்கு மட்டும் கதவுகள் இருந்தன. உள்பிரிவுகளுக்கு கதவுகள் கிடையாது. தெற்குப் பார்த்த உயரமான திண்ணையுடைய அந்த வீட்டுக்கு முன்பாக ஒரு பூவரச மரம். களிமண்ணால் மெழுகப்பட்டிருந்த வீட்டின் தரையை அன்றாடம் மாட்டுச் சாணத்தைக் கரைத்து மெழுகுவார்கள்.
அ... ஆ... என்பதையெல்லாம் அண்ணன், பாலகிருட்டிணன் கைப்பிடித்து எழுதிக் கற்றுக் கொடுத்தது இப்போதும் மறக்கவில்லை. இப்படி 'மறக்க முடியாத' பட்டியல் மிக நீளம்... 'மேழிப்பால்' குடித்தது உட்பட!

ற்றில் நீர் வருவதற்கு முன்பாக, ஒரு நல்ல நாள் பார்த்து சிறுவர், பெரியவர், நண்பர், சுற்றம் அனைவரும் கூடி  நல்லேர் பூட்டுவார்கள். இளங்காடு, வெண்ணாற்றின் கிளை வாய்க்கால் தென்கரை அருகே இருந்த எங்கள் நிலத்திலும், இப்படி நல்லேர் பூட்டினார்கள்!
 மாடுகளைக் குளிப்பாட்டி கலப்பை, நுகத்தடிக்கு சந்தனம், குங்குமம் பூசி இருந்தார்கள். புதிய தேங்காய் நார்க்கயிறு கொண்டு ஏர் பூட்டினார்கள். தேர்ச்சி பெற்ற ஐந்து பேர்... ஏர் பின்னால் அதட்டிக் கொண்டே நடந்தார்கள். மாடுகள் வேகமாக நடந்தன. காய்ந்து கிடந்த பூமி கட்டி முட்டியாகப் பெயர்ந்து விழுந்தது.
நான்கு, ஐந்து விளா (சுற்று) வந்த பிறகு... ஏர்கள் நின்றன. மேழி (கைப்பிடி) பிடித்திருந்தவர்கள், 'மேழிப்பால் குடிக்கிறவங்கள்லாம் வாங்க' என்று சத்தம் கொடுத்தார்கள். முதல் முறையாக மேழி பிடிப்பவர்களைத்தான் இப்படி அழைப்பார்கள். ''நம்மை, (நம்மாழ்வார் என்பதன் சுருக்கமாம்) இப்படி ஓடி வா'' என்று முன்னேர்க்காரர் கையசைத்துக் கூப்பிட்டார். கட்டி முட்டிகளில் தட்டுத்தடுமாறி, ஏரின் பின்னே போய் நின்றேன்.
மேழி மீது வலது கையை வைக்கச் சொன்ன ஏரோட்டி, கையை வைத்ததும் அவரது முரட்டுக் கரத்தை மேலே வைத்து மேழியோடு இறுகப் பற்றி 'ஹை' என்று மாடுகளை அதட்டினார். மாடு வேகத்துக்கு என்னால் நடக்க முடியவில்லை... நிற்கவும் வழி இல்லை. எனக்குப் பின்னாலும் ஒரு ஏர் வந்து கொண்டிருந்தது. வலி ஒரு பக்கம், பயம் ஒரு பக்கம் வருத்த, 'தத்தக்க, பித்தக்க’ என்று நடந்தேன். ஏர் ஒரு வளையம் வந்து நின்றபோது... கையை விடுவித்தார். விரல்களைப் பார்த்தேன். சிவந்திருந்தன. கூடவே எரிச்சலும் இருந்தது. எரிச்சலைத் தணிக்க, விரலை வாயில் வைத்து சப்பினேன். பார்த்தவர்கள், ''அதோ, நம்மை மேழிப்பால் குடிக்கிறான்'' என்று கேலி பேசிச் சிரித்தார்கள்.
ஆற்றில் தண்ணீர் வரும் முன்பாக, வீட்டின் பின்புறம் சேமிக்கப்பட்டிருந்த மாட்டு எருவைக் கட்டை வண்டியில் ஏற்றி வயல்களுக்குக் கொண்டு சேர்ப்பார்கள். குப்பை ஏற்றிய வண்டியில் ஏறி சவாரி செய்வதே தனி ஆனந்தம்தான். வயலில் எருவை இறக்கிய பிறகு, வீடு திரும்பும்போது, சிறுவர்களை முன்னால் உட்கார வைத்து மாடுகளின் கயிறுகளைக் கையில் கொடுப்பார்கள். வீடு திரும்பும்போது மாடு பாதையில் நடைபோடுவதில் எந்தத் தடையும் இருக்காது. ஆனாலும், அவற்றை வேகமாக ஓட வைப்பது, வேகமாக நடக்கும் மாட்டைக் கட்டுப்படுத்துவது, திருப்பங்களில் செல்ல வேண்டிய பாதையைத் தீர்மானிப்பது, எதிர்வரும் வண்டிக்கு வழிவிட்டு ஒதுங்குவது... எனப்பல வித்தைகளைக் கற்றுக் கொடுத்தது, அந்த மாதிரியான மாட்டு வண்டிப் பயணம்தான்.
ஊருக்குத் தென்கோடியில், 'பிள்ளை முழுங்கிக்குளம்’ இருந்தது. குளத்தில் நீர் நிரம்பி வழியும் சமயத்தில் இரண்டு மூன்று குழந்தைகள் தவறி விழுந்து இறந்து போனதால், இப்படியரு பெயர். கோடையில் நீர் வற்றிய பிறகு குளத்தில் வண்டலை எடுத்து வண்டியில் ஏற்றி வயலில் சேர்ப்பார்கள். இறந்துபோன நண்டு, நத்தை, மீன், கிளிஞ்சல் அனைத்தும் காவிரித் தண்ணீர் கொண்டு வந்து சேர்த்த வண்டலுடன் சேர்ந்து, பயிர் வளர்க்கும் உரமாகப் பயன்பட்டன.
ஆண்டுதோறும் வண்டல் அள்ளியதால் குளமும் ஆழம் குறையாமல் இருந்தது. குளத்தில் வாளை, விரால், கெண்டை, கெளுத்தி, விலாங்கு, ஆரா, குறவை எனப் பலவகை மீன்களும் இருக்கும்.
குளம் வற்றும் முன்பாக, குளத்தை இரண்டு, மூன்றாகப் பிரித்து, மண்வெட்டி கொண்டு வரப்பு அமைப்பார்கள். பிறகு, இறைப்பெட்டி கொண்டு தண்ணீரை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்கு ஏற்றுவார்கள். இறைப்பெட்டி சேமித்த நீரை ஒருவர் இறவை மரம் கொண்டு இன்னும் கொஞ்சம் மேட்டுக்கு ஏற்றுவார். இறவை மரம் மூலம் இறைத்துக் கொட்டப்படும் தண்ணீர், சிறு வாய்க்கால் மூலமாக பாத்திகளில் பாயும். தென்னை மட்டையைச் சீராகச் சீவி, மட்டப் பலகையாக்கி பாத்தியை சமப்படுத்தி விதைப்பார்கள்.
இதுபோன்ற நிகழ்வு நடந்த ஒரு நாளில், என் சின்னஞ்சிறு கைகளில் நெல் விதையைக் கொட்டி பாத்தியில் விதைக்கச் சொன்னார் அப்பா. அன்று நாற்றங்கால் விதைப்பைத் தொடங்கி வைத்தபோது 'நம்மை’க்கு வயது நான்கு!
தஞ்சாவூர் பெரிய கோயிலைச் சிறியதாகச் செதுக்கியது போல் தோற்றம் கொண்ட ஒரு சிவன் கோயில், இளங்காட்டின் மையப் பகுதியில் அமைந்திருந்தது. நான் படித்த பள்ளிக்கூடம், கோயில் அருகே அமைந்திருந்தது. நான்காம் வகுப்பு படிக்கும்போது நடைபெற்ற மூன்று நிகழ்வுகள் முக்கியமானவை. முதல் நிகழ்வு ஒரு விபத்து.
பள்ளியில் மாலை நேரத்தில் வழக்கம்போல் விளையாட்டு மணி அடித்தது. மாணவர்கள் கலைத்து விடப்பட்ட குளவிகள் போல அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியே பாய்ந்தோம். உற்சாக மிகுதியில் முன்னே வந்து கொண்டிருந்த மாடுகளை யாரும் கண்டு கொள்ளவில்லை.
-இன்னும் பேசுவேன்...

- Pasumai Vikatan

No comments:

Post a Comment