Saturday, February 15, 2014

ஆறாம் திணை - 75 மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: எஸ்.ஏ.வி.இளையராஜா - Vikatan

'கடந்த ஆண்டு இந்தியாவில் 15 பில்லியன் ரூபாயைத் தாண்டிய வணிகம் அளித்திருக்கிறது காதலர் தினக் கொண்டாட்டங்கள். இந்த வருடம் இது இன்னும் அதிகரிக்கும்!’ என்று கணக்கிடுகிறார்கள் அசோசெம் எனும் இந்திய வணிக நிறுவனக் கூட்டமைப்பினர்.
'வாலன்டைன்ஸ் டே’ திருவிழா, காதலர்களுக்கு முக்கியமோ இல்லையோ, வணிகர்களுக்கு மிக முக்கியமானது. வழக்கம் போல் பூக்களின் தட்டுப் பாட்டுக்காக இந்த ஆண்டும் ஹாலந்து அரசு சிறப்பு விமானங்களை நெதர்லாந்தில் இருந்து ரோஜா முதலான பூக்களுடன் பல ஐரோப்பிய-அமெரிக்க நாடுகளுக்கு இயக்குகிறது. சீக்கிரமே அப்படியான விமானங்கள் இந்தியாவுக்கும் வரும்.
சாதி வேற்றுமைகளை ஒழிக்கும் காதல், பூக்களுடனும், சாக்லேட்டுகளுடனும், பரிசுகளுடனும் கொண்டாடப்படுவது சந்தோஷமே. அதே சமயம், அதன் பயன் காலமெல்லாம் நிலைத்திருக்கிறதா என்று யோசித்தால், சுற்றும் முற்றும் நிறைய சறுக்கல்கள்!
'திருமணம் என்பது என்னைப் பொறுத்தவரை, ஒரு கப் காபி சாப்பிடுவது மாதிரி!’- சமீபத்தில் என்னிடம் இப்படிச் சொன்னவர், யாரோ அயல்தேசப் பெண்மணி அல்ல. சென்னை மந்தவெளியில் சமீபத்தில் மணமுறிவு செய்துகொண்ட ஒரு பெண். நிறையவே மனதை உலுக்கிய அந்த வரிகள், 'ஆறாம் திணை’யில் மறந்துபோன வரகரிசியையும் ஏழு சுத்து கைமுறுக்கின் பாரம்பரியத்தை மட்டும் பேசினால் போதாது என்பதை உணர்த்தியது. எக்குத்தப்பாக உயரும் விவாகரத்துகளின் எண்ணிக்கைகள் இனிவரும் நாட்களில் திருமணம் மீதான நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக உடைக்கும் என்றே தோன்றுகிறது.
குடும்ப வன்முறைகளில், யாரோ ஒருவரை அடிமைப்படுத்திச் சுரண்டும் அவல வாழ்வில் விவாகரத்துகள் வரவேற்கக்கூடியவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மறுமணம் என்பதை ஏளனமாகப் பார்க்கக் கூடாதது மட்டுமல்ல; அத்தியாவசியமானதும்கூட. சங்க இலக்கியங்கள் சொன்ன, 'வெள்ளரிக்காய் விதையைப் போல, விரைத்து வறண்டு நிற்கும் நீரில்லாத சோற்றை, வெறும் கீரைக் குழம்போடும், எள் துவையலுடன், தின்றுகொண்டு பாய்கூட இல்லாமல் கல் மேல் படுத்து கைம்மை நோன்பு இயற்றி’ வருந்தும் பெண்கள் போல் எந்தப் பெண்ணும், இனி இருக்க வேண்டியது இல்லை. ஆனால், இன்றைய விவாகரத்து வழக்குகளில் பெரும்பாலானவை 'மனப்பொருத்தம் இல்லை’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வருவதுதான் நம்மைக் கவலைகொள்ள வைக்கிறது!
'என்னோடு வா... வீடு வரைக்கும்;
என் வீட்டைப் பார்... என்னைப் பிடிக்கும்!’ 
என காதலன்/காதலியை வீட்டுக்கு அழைத்து வந்து சம்மதம் பெறுவோரும் சரி, 'பத்தும் பொருந்தி இருக்குப்பா... பத்தும் பத்தாததுக்குக் கடனைக் கிடனை வாங்கிக்கலாம்பா’ என வீட்டில் பார்த்த வாழ்க்கைத் துணையைக் கல்யாணத்துக்குப் பிறகு காதலிப்போரும் சரி... மிகக் குறுகிய காலத்தில் 'மனப்பொருத்தம் இல்லை’ என நீதிமன்ற வளாகத்தில் நிற்க என்ன காரணம்? உளவியல் மலட்டுத்தன்மை (Mental impotence) காரணமாக அவதியுறும் இருபாலரின் எண்ணிக்கையும், 'எதற்காக நான் இணக்கமாகப் போக வேண்டும்?’ என்ற கேள்வியும்தான் மனப்பொருத்தம் எனும் கட்டடத்தின் அடிச்செங்கலை உடைக்கும் வேலையை அன்றாடம் செய்கின்றன.
எத்தனையோ விமரிசனங்களும், ஆங்காங்கே பொய்மையும் இருந்திருந்தாலும் சில ஆயிரம் ஆண்டுகளாக உழைக்கும் இருவரும் இளைப்பாறும் இடமாக, ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் அமைப்பாக இருந்தவை திருமணங்களும் குடும்ப அமைப்புகளுமே!
'குறிஞ்சிப் பூக்கள் மலர்ந்திருக்கும் மலையின் தலைவனுடன் நான் கொண்ட நட்பு, நான் வாழும் நிலத்தைவிட அகலமானதும்; வானத்தைவிட உயரமானதும்; கடலைவிட ஆழமானதும் ஆகும்’ என்ற பெண்ணின் நம்பிக்கையும் 'குவளை மலரின் மணமுடைய கரிய கூந்தலையும், ஆம்பல் மலரின் மணமுடைய பவள வாயினையும் உடையவளே... உன்னைப் பிரிந்தால் இந்த உலகமே எனக்குப் பரிசாகக் கிடைத்தாலும் அதை நான் புறக்கணிப்பேன். உன் காதலே எனக்குப் பெரிது!’ என்ற ஆணின் உறுதியும் உள்ள காதலும், அதில் விளைந்த குடும்பமும் சங்ககாலம் தொட்டு நமக்குப் பழக்கமான ஒன்றுதான்!
ஆனால், நவீன யுகத்தில் பொருள் சேர்க்கவும், தனக்கான சுய அங்கீகாரத்தைப் பெருக்கவும் அதீத நேரத்தை வீட்டுக்கு வெளியே பலரும் செலவழிக்க, தத்தம் காதலை 'எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில்’ தொலைத்து விடுகின்றனர் பலரும். இதனால் பலருக்கு குடும்பம் ஒரு சுமையாகிப் போய் எங்கேயாவது இறக்கிவைக்க மனம் அடிக்கடி எத்தனிக்கிறது.
இப்படி காதல் தொலைத்த பெற்றோரால், அன்றாடம் தன் குழந்தையின் சிணுங்கலில் மறைந்திருக்கும் வியாதியை நிச்சயம் கண்டறிய முடியாது. மனம் நொறுங்கி இருக்கையில் கவனமாக சிறுதானியத்தையோ சிட்டுக்குருவியையோ கண்கள் எப்போதும் தேடாது. களைப்பில் கசங்கிவரும் தன் துணைக்கு, தேன் சேர்த்த பச்சைத் தேநீர் கொடுத்துப் புன்னகைக்க மனம் ஒருபோதும் வராது.
'அட... இது மாதவிடாய் நிற்கும் நேரமே! இவளுக்கு கொஞ்சம் கால்சியம் அதிகமுள்ள மோரும் கம்பு ரொட்டியும் செய்து கொடுக்க வேண்டுமே’ என்ற முனைப்பு கண்டிப்பாக வராது. அக்கறைகளுக்கும், மெனக்கெடலுக்கும், தேடலுக்கும் இளைப்பாற இடம் தருவதற்கும் காதல் மட்டுமே அடித்தளம்!
'தனித்து வாழும் வாழ்வில் சுகம் இல்லையா என்ன? காதலும் சரி, திருமணங்களும் சரி எல்லாம் பொய்த்துப்போன போலிக்கூடுகள்’ என்று இன்று பேசும் பலருக்கும், தம் வசீகரங்கள் தொலைந்துபோன வயோதிகத்தில், 'என்னப்பா? இருமுறீங்க.. தண்ணீர் வேணுமா?’ எனக் கேட்கும் எவரும் இல்லாத உறவற்ற வெறுமையும், அடுக்குமாடி மருத்துவமனையின் ஐந்து நட்சத்திர அறையில், மேல்நாட்டு மருத்துவர் பராமரிப்பில் படுத்திருக்கும்போதும்கூட, கைகளைப் பற்றி தன்னருகே உட்கார்ந்த நிலையில் படுத்திருக்க எவரேனும் இல்லையே எனும் பணக்காரத் தனிமையும் உயிரோடு இருந்து கொல்லும்.
காதல், நெகிழித் தாளில் சுற்றப்பட்ட ரோஜாக்களுக்குள் தேடப்பட வேண்டியது அல்ல. வசீகரிக்கும் வழுவழுப்பான சாக்லேட்டுக்குள்ளும் அது இல்லை. கடன் வாங்கித் தரும் மின்னும் பரிசுகளுக்குள்ளும் காதல் இருக்காது. கண்களால் பேசி, புன்னகையால் பசியாற்றி, தோள்களில் தாலாட்டி உச்சி முத்தத்தில் கருத்தரிக்கும் உயிர்வித்தை அது.
ஆதலினால் காதல் செய்வீர்... அடையாளங்களினால் அல்ல; அன்பினால்!
- பரிமாறுவேன்...
- Vikatan

No comments:

Post a Comment