Saturday, February 15, 2014

தண்ணீர்..தண்ணீர்... 1

''ஊர்ல நம்ம வீட்டுலயும் 'வாட்டர் ப்யூரிஃபையர்' போட்டாச்சுல. நம்ம ஊர்ல வீட்டுக்கு வீடு இப்ப இந்த மெஷினுங்கதான் ஓடிட்டிருக்கு. உங்க 'மினரல் வாட்டர்' எல்லாம் தோத்துடும். சும்மா கல்கண்டு மாதிரி இருக்கும்ல....''
''என்னது, அந்த வரப்பட்டிக்காட்டுல வாட்டர் ப்யூரிஃபையர் பயன்படுத்தறீங்களா?''
''பின்ன என்னப்பா... பத்து, பதினைஞ்சு வருஷத்துக்கு முன்ன வாய்க்கா தண்ணியைக்கூட அள்ளி அள்ளி குடிச்சுட்டு இருந்தவங்கதான். ஆனா, இப்ப தண்ணி சரியா இல்ல. நிலத்தடிநீர் கெட்டுப் போச்சு. போர் போட்டு எடுக்கற தண்ணியைகூட அப்படியே வாயில வெக்க முடியல. சுத்தமான தண்ணியா குடிக்கணும்ல...''
-நகரங்களில் மட்டுமல்ல... இன்று தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களிலும் கூட மினரல் வாட்டர் பாட்டில்கள் பளபளக்கின்றன. வீட்டுக்கு வீடு டிஷ் ஆண்டெனா வைத்திருப்பது போல... 'தண்ணீர் சுத்திகரிக்கும்' இயந்திரங்களையும் மாட்டி வைத்திருக்கிறார்கள்.
நியாயம்தான்... சுத்தமான குடிநீர் அவசியம்தான். ஆனால், ஒட்டுமொத்த தண்ணீரின் சுத்தத்தைப் பாதுகாப்பது பற்றி கவலைப்படாமல், நாம் குடிக்கும் தண்ணீர் மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என்கிற நிலைப்பாடு... எந்த அளவுக்கு சரி?
நீர் நிலைகளைப் பாதுகாத்து காலாகாலத்துக்கும் ஜீவராசிகளுக்கான நீர்த் தேவையை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கம்தான். ஆனால், 'தனியார் 20 ரூபாய்க்கு மினரல் வாட்டர் பாட்டில் விக்கறாங்க... உங்கள் அன்புச் சகோதரியான நான் 10 ரூபாய்க்குக் கொடுக்கிறேனே...!' என்று முதல்வரே பெருமை அடித்துக் கொண்டிருக்கும்போது... வேறென்ன சொல்ல!
இது, இன்றைக்குச் சரியாக இருக்கலாம். நாளைக்கு...?
ஆம், உடனடித் தேவைக்கு சரி. ஆனால், நீண்டகால அடிப்படையில் பார்த்தால், 'கடல்நீரைச் சுத்திகரித்து குடிநீராக்குகிறோம்...', 'வீட்டுக்கு வீடுதண்ணீரைச் சுத்திகரிக்கிறோம்' என்கிற பெயரில், இருக்கின்ற நீரையெல்லாம் சுத்திகரிக்க ஆரம்பித்தால், அதன் எச்சமாக தேங்கும் கழிவுநீர், திரும்பத் திரும்ப பூமிக்குள் அனுப்பப்பட்டு, ஒரு கட்டத்தில்... ''இந்தத் தண்ணியில தொடர்ந்து கழிவு நீர் சேர்ந்ததால... 10 ஆயிரம் டிடிஎஸ் இருக்கு. இதை சுத்தப்படுத்தவே முடியாது. வேணும்னா... செவ்வாய் கிரகத்துல தண்ணியிருக்காம். ஒரு கிரவுண்ட் 500 கோடி ரூபாய்தான். பேசாம அங்க போயிட்டா... தண்ணி என்ன, பைப் போட்டு தேவலோக அமிர்தத்தையேகூட எடுத்துக்கலாம். நானெல்லாம் ஏற்கெனவே ஏழு கிரவுண்ட் வாங்கிப் போட்டுட்டேன். என்ன... நீங்க நாலு கிரவுண்ட் புக் பண்றீங்களா...?'' என்று நம்ம 'டெல்லி' கணேஷ் உள்ளிட்ட பெரியதிரை, சின்னத்திரை நட்சத்திரப் பட்டாளங்கள் டிவி-யில் தோன்றி உங்களிடம் வீட்டுமனை விற்கவேண்டிய நிலை வந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை!
காற்று, தண்ணீர் இந்த இரண்டும் இயற்கை அளித்த இலவசங்கள்... ஆனால், காலஓட்டத்தில் குடும்ப பட்ஜெட்டின் செலவுப் பட்டியலில் அவையும்கூட இடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டன! இயற்கையின் அருட்கொடைகளை முறையாகப் பயன்படுத்தாதன் விளைவு... இலவசமாகக் கிடைத்து வந்த தண்ணீர் இன்று விலைக்கு வாங்க வேண்டிய பொருளாக மாறியிருக்கிறது. ஊதாரித்தனமாக செலவு செய்பவர்களை, 'காசை தண்ணியா செலவு செய்றான் பாரு’ என உவமையாகச் சொல்வார்கள். ஆனால், இன்று தண்ணீருக்காக காசு செலவு செய்யும் நெருக்கடியான நிலை!
குடிநீருக்கே இந்த நிலை என்றால்....
விவசாயத் தேவைக்கு?
வேரில் வெந்நீர் ஊற்றிவிட்டு, பழங்களை எதிர்பார்த்து அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீராதாரங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு, நீரை எதிர்பார்த்தால் எப்படி கிடைக்கும்? மலைகளில் இருந்து மரங்களை அழித்தோம்... பிறகெப்படி மேகம் சூழ்கொள்ளும்?
மலைகளில் உருவாகி ஆறாக மாறி, குளம், குட்டைகளைக் குளிர்வித்து, ஏரி நிறைத்து, குடிநீர் கொடுத்து, கடலில் கலக்கும் தண்ணீர், அதன் பாதையில் பயணித்த வரையில் பிரச்னை இருக்கவில்லை. ஆனால், வயல்காடு, ஆறு, குளம், குட்டை, ஏரி, கண்மாய் என்று அனைத்து நீராதாரங்களையும் ஆக்கிரமித்து பெரும்பெரும் பங்களாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், ஏர்போர்ட், நீதிமன்றங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், தொழிற்சாலைகள் என்று அமைக்க ஆரம்பித்த பிறகுதான், பொறுமை இழந்து, தன் பாதையை மாற்றிக் கொண்டுவிட்டாள் தண்ணீர் தாய்! கடைசியில், அவள் தனது பயணத்தை நிறுத்தியே பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
விளைவு, பாசனம் இல்லாமல் கருகிக் கிடக்கின்றன பயிர்கள். முடங்கிக் கிடக்கிறது விவசாயம். தை மாதத்திலேயே தலைவிரித்தாடும் பஞ்சம், கொளுத்தும் கோடையில் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறது நெஞ்சம்.
கோடையைச் சமாளிக்க, என்ன செய்யலாம்..? என்பதற்கான ஆய்வுப் பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடங்கியிருக்கிறது, தமிழக அரசு. அப்படி ஆய்வுக்காகச் சென்ற அதிகாரிகள், பிரச்னையின் விஸ்வரூபத்தை கண்ட அதிர்ச்சியில் ஆடிப்போய் கிடக்கிறார்கள்.
''இது ஒரு மோசமான கட்டம். நிலத்தடி நீர் காணாம போய் பல வருசமாச்சு. குடிநீர்த் திட்டத்துக்காக, எந்த இடத்துல போர்வெல் போட்டாலும், புகைதான் வருது. பாசனத்துக்காக கட்டுன அத்தனை அணைகளையும் கூட்டுக்குடிநீர்த் திட்டத்துக்கு மாத்தியாச்சு. அப்படியிருந்தும் குடி தண்ணிக்கு தட்டுப்பாடு.... என்ன செய்யப் போறோம்னே தெரியலையே'' என்று நடுங்கியபடி கூறுகிறார் இந்த ஆய்வில் இடம்பிடித்திருந்த அரசு உயர் அலுவலர் ஒருவர்.
'நீரை நிலத்துல தேடாதே... வானத்துல தேடு’!
யாரால் நிகழ்ந்தது இந்தப் பேராபத்து..? 'தீதும் நன்றும் பிறர் தர வாரா..’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை மனதில் நிறுத்தினால், இதற்கு முழுப்பொறுப்பு ஏற்க வேண்டியது, நாம் ஒவ்வொருவரும்தான்.
'நீரை நிலத்துல தேடாதே... வானத்துல தேடு’ என்பார், 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார். அதாவது, மழை பொழிய என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யுங்கள் என்பதுதான் அதன் உட் பொருள். இனியாகிலும், நெருங்கி வரும் பேராபத்தைத் தடுக்க நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டாமா? தும்பை விட்டு வாலைப் பிடித்திருந்த நாம், தற்போது வாலையும் அல்லவா கைவிட்டுக் கொண்டிருக்கிறோம்.
'எஞ்சியிருக்கும் தண்ணீரையாவது காப்பாற்றினால்தான்... இனி எதிர்காலம் என்கிற எச்சரிக்கை உணர்வு, நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஊற வேண்டும். அது பெருவெள்ளமாகப் பாய்ந்து ஆட்சிப் பொறுப்புகளில் அமர்ந்து கொண்டு, சூழலைப் பற்றியும்... எதிர்கால சந்ததி பற்றியும்... இயற்கைச் சுரண்டல்கள் பற்றியும் கண்டுகொள்ளாமல், பொதுச்சொத்துக்களைச் சுருட்டுவதை மட்டுமே குறிக்கோளாக மேற்கொண்டிருப்போரை சுருட்டிக் கொண்டு போகவேண்டும்...'
இப்படியெல்லாம் வீராவேசம் கொண்டு சாபம் விடலாம்தான். ஆனால், அதைவிட முக்கியம்... நிஜத்தில், நாம் ஒவ்வொருவருமே களத்தில் இறங்க வேண்டும் என்பதுதான்!
இருக்கும் நிலத்தடி நீரை, கிடைக்கும் மழை நீரை எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்பதை அறிந்துக் கொண்டு, நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட நுட்பங்களை, உங்களுக்கு அறிமுகப்படுத்தவே... 'தண்ணீர்... தண்ணீர்...’ எனும் இந்தப் புதிய தொடர் இங்கே பாய்ந்து வருகிறது. நீர் மேலாண்மை வல்லுநர்கள், பொறியாளர்கள், விவசாயிகள்... என பலதரப்பட்டவர்களும் மிரட்டும் வறட்சியை விரட்டும் தொழில்நுட்பங்களை உங்களிடம் பகிரப் போகிறார்கள்.
நிலங்களைக் குளிர வைக்கும் குளங்கள்!
இதைச் சொன்னதுமே... 'என்ன பேசி என்ன பயன்... சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கும். ஆனா, நடைமுறையில இதெல்லாம் சாத்தியமா?' என்கிற சந்தேகக் கேள்விகள் இந்நேரம் அனைவரிடமுமே மையம் கொண்டிருக்கும். அதில் தவறில்லை. ஆனால், அனைத்தும் நடைமுறை சாத்தியம்தான் என்பதிலும் உண்மை இல்லாமல் இல்லை.
ஆம்... மகாராஷ்டிர மாநிலத்தின், ராலேகண்சித்தி எனும் வறண்ட கிராமத்தை, இன்றைக்கு வளமான விவசாய பூமியாக அண்ணா ஹஜாரே மாற்றியிருக்கிறாரே! அதே மாநிலத்தில் புனே அருகில் இருக்கும் ஹிவ்ரே பஜார் எனும் வறண்ட கிராமம், அந்த ஊர் நல்ல உள்ளங்கள் சிலரின் முயற்சியால் இன்றைக்கு சோலைவனமாக மாறியிருக்கிறதே! எல்லாமே, நீர் மேலாண்மை எனும் மந்திரத்தால் விளைந்த உண்மையே!
இவையெல்லாம் தொலை தூர நிஜங்கள். இங்கே உங்கள் கைக்கு எட்டும் தூரத்தில் திண்டுக்கல் மாவட்டத்திலேயே, நேரடி சாட்சிகளாக நின்று கொண்டிருக்கின்றன பத்துக்கும் மேற்பட்ட குளங்கள்!
நம் முன்னோர்கள், குளங்களை முறையாக தூர்வாரி, வண்டலை நிலங்களில் போட்டனர். நீரும் நிறைந்தது, நிலமும் விளைந்தது. அந்த முறையைக் கைவிட்டதன் விளைவு, குளமும் காய்ந்து, நிலமும் வறண்டு கிடக்கிறது. குளங்கள் விவசாயத்தின் அடிப்படை ஆதாரங்கள். அவற்றை முறையாகப் பராமரித்தாலே... பாதி பிரச்னை தீர்ந்துவிடும். ஒரு குளம் நிறைந்து, அடுத்த குளம்... அது நிறைந்தவுடன் அடுத்த குளம்... என வரிசையாகக் குளங்களை நிறைத்துக் கொண்டே ஏரிகளை அடையும் வகையில் பாசன வாய்க்கால்களை அமைத்திருந்தனர், நம்முன்னோர். அவையெல்லாம் பராமரிப்பில்லாமல் தூர்ந்து போனதும், ஆக்கிரமிக்கப்பட்டதும்... குளங்கள் வறண்டு போக ஒரு காரணம்.
இதைச் சரியாக புரிந்துகொண்டு, கடந்த 2010-ம் ஆண்டு, குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள அத்தனைக் குளங்களையும் இணைத்தார், அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் வள்ளலார் (தற்போது தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்). கிட்டத்தட்ட 14 குளங்கள் இணைக்கப்பட்டதன் பலன், பல ஆண்டுகளுக்கு பிறகு, அங்கிருந்த தரிசுகளில் அரங்கேறியது, உழவுத் தொழில். 'இனி இந்த மண்ணில் விவசாயமே இல்லை’ என நினைத்து, வேலை தேடி வெளியூர் சென்றவர்கள், மீண்டும் ஊர் திரும்பிய அதிசயம் அரங்கேறியது! நம்பிக்கை விதை விதைக்கப்பட்டிருக்கிறது!
- பொங்கிப் பாயும்...

- Vikatan

No comments:

Post a Comment