கனிமொழி
''பத்திரிகையாளராகப் பணியாற்ற முடிவுசெய்தது எப்படி?''
''எழுதுவதில் எனக்கு இயல்பாகவே ஆர்வம் உண்டு. ஆனால், நான் என்னவாக வேண்டும் என்பதில் குழப்பம் இருந்தது. அப்பாதான் 'நீ பத்திரிகைத் துறையில் சேர்ந்தால் நன்றாக வருவாய்’ என்று ஊக்கப்படுத்தினார். பிறகுதான் 'ஹிந்து’வில் பயிற்சி உதவியாசிரியராகச் சேர்ந்தேன். எல்லோரும் 'தலைவர் பொண்ணு ஏன் இங்கிலீஷ் பத்திரிகையில் சேர்ந்தீங்க?’ என்று கேட்கிறார்கள். தமிழில் எனக்கு ஓரளவு புலமை உண்டு. ஆங்கிலப் பத்திரிகை எனும்போது மேலும் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளவும் முடியும். பத்திரிகை உலகில் நல்ல எக்ஸ்போஷர் கிடைக்கும் என்றும் தோன்றியது. இப்போதைக்கு 'டெஸ்க்வொர்க்’தான். கலை, இசை போன்றவற்றில் எனக்கு அதிக ஆர்வம் என்பதைக் கேட்டறிந்து,‘Friday Page’ பகுதியில் என்னை நியமித்திருக்கிறார்கள். மெள்ள மெள்ள நிருபராவேன்!''
சுப்பிரமணியன் சுவாமி
''உங்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் நடந்த சமரச முயற்சிகளை விவரிப்பீர்களா?''
(வாய்விட்டுச் சிரித்து): ''சமரசத்துக்காக இதுவரை அவர் என்னை நேரடியாகச் சந்திக்கவோ, பேசவோ இல்லை. ஆனால், 'அம்மா அனுப்பிச்சாங்க’ என்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், அதிகாரிகள்... ஏன் சில சீனியர் பத்திரிகையாளர்கள்கூட என்னை வந்து பார்த்தார்கள். 'எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் சமாதானமாகப் போகலாமே’ என்று அம்மா சொன்னதாகச் சொன்னார்கள். நான் சளைக்காமல், 'முதலில் அவர் தன் பதவியை ராஜினாமா செய்யட்டும். அப்புறம் வந்து பேசச் சொல்லுங்கள்’ என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.
பின்னே.?! போர்க்களத்தில் நான் நிற்கும்போது வெற்றியா, தோல்வியா என்பதுதான் கேள்வி. இதில் சமரசத்துக்கு எங்கே இடம்?!''
ரத்தினவேல்பாண்டியன்
''வான்கூவரில் நடந்த சர்வதேச கிரிமினல் சட்ட மாநாட்டில் நீங்கள் பேசிய பேச்சுக்கு ஏக வரவேற்பு கிடைத்ததாமே... அப்படி என்ன பேசினீர்கள்?''
''முதலில் மாநாட்டைப் பற்றி...
ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாகக் குற்றவியல் சட்டங்கள் இருப்பதுபோலவே முழு உலகத்துக்கும் பொதுவான குற்றவியல் சட்டம் ஒன்று இப்போது உருவாகிவருகிறது.
பொதுவில் மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் செய்பவர்களைத் தண்டிக்கவே, இந்தச் சட்டம். உதாரணமாக - கப்பல் கொள்ளை, விமானக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், போர்க் குற்றங்கள் இவற்றைச் சொல்லலாம்.
வான்கூவரில் நடந்த மாநாட்டில் இந்திய அரசின் பிரதிநிதியாக நான் கலந்துகொண்டேன். மாநாட்டில் நான் பேசும்போது 'தேவைப்பட்டால் சர்வதேசக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கவும் வழி செய்ய வேண்டும்’ என்று பேசினேன். இதற்கு மாநாட்டில் கலந்துகொண்ட மற்ற நாடுகளின் பிரதிநிதிகள் பலத்த ஆட்சேபம் தெரிவித்தார்கள். தொடர்ந்து நான் பேசும்போது, 'நீதி தேவதைக்கு ஒரு கையில் தராசும் இன்னொரு கையில் கொலைவாளும் கொடுத்திருப்பதற்குக் காரணமே - தவறு நிரூபிக்கப்பட்டால் தகுந்த தண்டனை தந்தே ஆக வேண்டும் என்பதைச் சொல்லத்தான். மரண தண்டனையே கூடாது என்றால், நீதித் தாயின் கையில் இருந்து கொலைவாளைப் பிடுங்கிவிட்டு ஒரு பூமாலையைக் கொடுத்துவிடலாமே’ என்று கேட்க, முதலில் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள்கூடப் பாராட்ட ஆரம்பித்துவிட்டார்கள். மாநாட்டின் முடிவில், 'மரண தண்டனை தேவை’ என்று நான் வலியுறுத்திய கருத்தும் ஐ.நா. சபையின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது!''
வசந்தகுமாரி
''இந்தியாவின் அரசு பஸ் டிரைவராகப் பணியில் இருக்கும் முதல் பெண் நீங்கள். பஸ் ஓட்டும்போது சில சமயம் கேலி, கிண்டல்கூட எழலாம். உங்களால் கவனம் சிதறாமல் பணியைச் செய்ய முடிகிறதா?''
''பல ஆண்டுகளுக்கு முன்பே டிரைவிங் லைசென்ஸ் பெற்று, கடந்த மூன்று ஆண்டுகளாக நான் சிரமப்பட்டுப் பெற்ற வேலை இது. இதுவே நான் 'பொறுமைசாலி’ என்பதை உணர்த்தும். போராடிக் கிடைத்த வெற்றியை நிச்சயம் தக்கவைத்துக்கொள்வேன். என் வேலையைச் சாதாரணமானவர்களின் கிண்டல், கேலிக்காக எல்லாம் விட்டுக்கொடுத்துவிட முடியாது. நாகர்கோவில் நகரில் பலரும் வியந்து பெருமைப்பட்டுப் பார்க்கும் பஸ் டிரைவராக நான் இருப்பேன். என்னால் ஆண் டிரைவர்களுக்குச் சரிசமமாக பஸ் ஓட்ட முடியும். தேவைப்பட்டால் ஆண் டிரைவர்களை என்னால் 'ஓவர்டேக்’ செய்யவும் முடியும்... (புன்னகையுடன்) நான் சொல்வது வேலையில்!''
- Vikatan
No comments:
Post a Comment