Saturday, February 15, 2014

''அவர்களைக் கொன்றதுபோல் உன்னையும் கொல்வார்கள்!'' கிறுகிறுக்க வைக்கும் கிரிக்கெட் சூதாட்ட சப்போர்ட்

ஐ.பி.எல். 2014-க்கான வீரர்களின் ஏலம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஐ.பி.எல். ஜுரம் ரசிகர்களிடம் தொடங்கிவிட்டது. ஆனால், கடந்த ஐ.பி.எல்-லில் வெளிவந்த சூதாட்டப் புகார்கள், கைதுகள், வாக்குமூலங்கள் ஏற்படுத்திய சிக்கல்கள் இன்னும் அவிழவில்லை. இந்த வழக்கு பற்றி அப்போது விசாரித்துவந்த க்யூ பிராஞ்ச் அதிகாரி சம்பத்குமார், நீதிபதி முகுல் முத்கல் குழு முன்பு சமர்ப்பித்துள்ள அறிக்கை, ஐ.பி.எல்-லுக்குப் பின்னால் நடைபெற்ற திரைமறைவு வேலைகளை அம்பலப்படுத்தி உள்ளது.
 சம்பத்குமார் அறிக்கையின் சாராம்சம் இதுதான்...  
''போலி பாஸ்போர்ட்களைத் தயாரிப்பவர்களை கைதுசெய்ய க்யூ பிராஞ்ச் போலீஸ் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடுதல் வேட்டை நடத்தியது. அதில் ஜாபர் என்ற ஜபருல்லா சிக்கினார். விசாரணையில் அவர், மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகளின் துணையுடன் இந்த மோசடியை நடத்துவதாகத் தெரிவித்தார். அவருடைய செல்போனை ஆய்வு செய்ததில், ஹரிஷ் பஜாஜ் என்கிறவரிடம் தொடர்ந்து பேசியிருப்பது தெரியவந்தது. ஹரிஷ் மீது க்யூ பிராஞ்ச் போலீஸாரின் பார்வை திரும்பியது. இதைத் தெரிந்துகொண்ட ஹரிஷ், தான் பயன்படுத்திய செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
இந்த நேரத்தில், ...... எஸ்.பி. என்னைத் தொடர்புகொண்டு, 'வழக்கறிஞர் ...... உங்களைச் சந்திப்பார். அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்யுங்கள்’ என்றார். அவர் சொன்னபடியே ...... என்னை வந்து சந்தித்தார். அவருடன் ஒட்டுமொத்த காவல்துறையும் வலைவீசித் தேடிக்கொண்டிருந்த ஹரிஷ் பஜாஜ் என்பவரும் வந்தார். என்னிடம் பேசிய அந்த வழக்கறிஞர் 'இவருக்கு பாஸ்போர்ட் மோசடி போன்ற விவகாரங்கள் தெரியாது. இவர் சாதாரண கிரிக்கெட் புக்கி’ என்றார். இருந்தாலும், ஹரிஷை கைதுசெய்து, கஸ்டடியில் எடுத்து விசாரித்தோம்.
ஹரிஷ் அளித்த வாக்குமூலம் இது... 'அவருடைய தொழில் சென்னையில் தொழில் செய்யும் சில மார்வாடிகளுக்கு போலீஸ்காரர்களுடன் லிங்க் ஏற்படுத்திக் கொடுப்பதும், போலீஸ்காரர்கள் மற்றும் ரவுடிகளால் அவர்களின் தொழிலுக்கு எந்தப் பிரச்னையும் வராமல் பார்த்துக்கொள்வதும்தான். கிரிக்கெட் பெட்டிங்கிலும் ஆர்வம் உண்டு. சென்னையில் கிரிக்கெட் பெட்டிங் ஏஜன்டாக இருந்தவர் பிரசாந்த். அவர் சூதாடிகளுக்கு டிப்ஸ் கொடுப்பவர். அதற்கு கமிஷனாக ஒவ்வொரு சூதாடியிடம் இருந்தும் 4,000 ரூபாய் வாங்கிக்கொள்வார். அதுபோல், போலீஸ்காரர்களிடம் இருந்து புக்கிகளுக்கு தொல்லை வராமலும் பிரசாந்த் பார்த்துக்கொள்வார். இதற்காக ஒவ்வொரு புக்கிகளிடம் இருந்தும் வாரம் 30 ஆயிரம் ரூபாய் வசூல்செய்து போலீஸுக்குக் கொடுப்பார்.
கடந்த ஐ.பி.எல். போட்டியில் 168 புக்கிகள் ஈடுபட்டனர். அவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் வாரம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் மாமூலாக போலீஸ் அதிகாரிகளுக்கு போயுள்ளது. இதனால், போலீஸ்காரர்கள் பெட்டிங் நடந்த திசை பக்கமே வரவில்லை. ஹரிஷ் பஜாஜ் 50 லட்சம் வரைக் கும், கௌதம் என்பவர் ஒரு கோடி ரூபாய் வரைக்கும் உள்ள பெட்டிங்களை கவனித்துக்கொள்ள... ஒரு கோடிக்கு மேல் தொகை புழங்கும் பெட்டிங்களை கிட்டி என்ற உத்தம் ஜெயினும் வழிநடத்தி உள்ளனர்.
இந்தத் தகவல்களை ஹரிஷ் சொன்னதும், தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதில் பலர் கைதுசெய்யப்பட்டனர். இந்த விவரங்களைத் தெரிந்துகொண்ட மத்திய உளவுத் துறையான ஐ.பி-யும் உள்துறை அமைச்சகமும் டெல்லி போலீஸுக்கு விவரங்களை அளித்தனர். அதன் மூலம்தான், டெல்லியில் ஸ்ரீசாந்த், அங்கீத் சாவ்லா கைதுசெய்யப்பட்டனர். சென்னையிலும் புக்கிகளையும் சூதாடிகளையும் தேடும் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போதுதான் புக்கிகளுக்கு எல்லாம் புக்கியாக செயல்பட்ட கிட்டி என்பவர் சரணடைய விரும்புவதாகச் சொன்னார். நான் அந்தத் தகவலை சி.பி.சி.ஐ.டி. அதிகாரி மஞ்சுநாத்துக்குத் தெரிவித்தேன். அவருடைய உத்தரவின் பேரில் சரணடைந்த கிட்டியை கைதுசெய்து விசாரித்தோம். அவர் அளித்த வாக்குமூலம் என்னவென்றால், கிட்டி பெட்டிங் தொழிலை 12 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் தொடங்கி உள்ளார். அதில் கிட்டிக்கு நிறைய தொடர்புகள் கிடைத்துள்ளது. விக்ரம் அகர்வால் என்ற நட்சத்திர விடுதி உரிமையாளரின் நட்பும் அதில் அடக்கம். அவரும், அவர் மனைவி வந்தனா அகர்வாலும் கிரிக்கெட் பெட்டிங் மூலம் பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். இதற்காக அவர்கள் பிரத்யேகமாக ஒரு இணையதளத்தையும் நடத்தினர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், மகள் ரூபா ஆகியோர் விக்ரம் அகர்வாலின் மனைவி வந்தனா அகர்வாலுக்கு மிக நெருக்கம். இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, ரெய்னா ஆகியோரும் விக்ரம் அகர்வாலுக்கு நெருக்கமானார்கள். இதனால், இந்த இரண்டு அணியின் கிரிக்கெட் வீரர்களுக்கும் அடிக்கடி எழும்பூர் ஹோட்டலில் இரவு விருந்து நடத்தினர். விக்ரம் அகர்வாலுக்கு கிட்டி நெருக்கம் என்பதால், அவரும் பல இரவு விருந்துகளில் கலந்துகொண்டுள்ளார்.
இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு குருநாத் மெய்யப்பனும், விக்ரம் அகர்வாலும் சூதாட்டத்துக்குத் திட்டம் தீட்டினர். கடந்த 2013-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 27-ம் தேதி நடைபெற்ற இரவு விருந்தில் கிட்டி கலந்துகொண்டபோது அவரிடம் பேசிய விக்ரம் அகர்வால், 'ஒரு பெரிய டீல் ஓகே ஆகிவிட்டது. நடைபெறப்போகும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடையிலான போட்டியில், சென்னை தோற்கும்’ என்று சொல்லியுள்ளார். விருந்து முடிந்த பிறகு கிட்டி, குருநாத் மெய்யப்பன், விக்ரம் அகர்வால் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தபோது, ஜெய்ப்பூரில் உள்ள சஞ்சீவ் என்பருடன் குருநாத் மெய்யப்பன் போனில் பேசியுள்ளார். 'பிளான்படி 140 ரன்கள் மட்டும் எடுத்துவிட்டு, போட்டியிலும் தோற்றுவிடுவதாக டோனி சொல்லிவிட்டார். எனவே எந்தப் பிரச்னையும் இல்லை’ என்று சொல்லியுள்ளார். எல்லாப் போட்டிகளிலும் வெற்றிபெற்று வந்த சென்னை அணி, சரியாக 140 ரன்களில் அதன் பிறகுதான் தோற்றது. மேலும், இந்தப் பிரச்னை வெளியில் தெரிந்து வில்லங்கமானதும், கிட்டியை மட்டும் சிக்க வைத்துவிட்டு விக்ரம் அகர்வால் தப்பிவிட்டார்.
அதற்கு காரணமாக கிட்டி சொல்வது, தமிழக உளவுத் துறை அதிகாரி ஒருவர், விக்ரம் அகர்வாலின் நெருங்கிய உறவினர் என்பதுதான். மேலும், கிட்டியை எச்சரித்த விக்ரம் அகர்வால், 'இதுபற்றி வெளியில் வாய் திறந்தால் நீ செத்துவிடுவாய். ஏனென்றால், இந்தப் பிரச்னையில் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் தம்பி அனீஸ் இப்ராஹிமுக்குத் தொடர்பு உள்ளது. ஏற்கெனவே, பெட்டிங் விவகாரத்தில் அவர்களுக்குத் தொல்லை கொடுத்த டெல்லி இன்ஸ்பெக்டர் பதீஸ்தத்தையும் அவருடைய மனைவி கீதா சர்மாவைவும் அவர்கள் கொன்றுவிட்டார்கள். நீயும் வாயைத் திறந்தால், உன்னையும் அவர்கள் கொன்றுவிடுவார்கள்’ என்று சொன்னார். டெல்லி போலீஸ்காரர்கள் அதை தற்கொலை வழக்காகப் பதிவுசெய்து இருப்பது பிறகு தெரியவந்தது.  
இப்படி முக்கியமான வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டு, ஆதாரங்கள் வலுவாக இருந்தபோதும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-யின் க்யூ பிராஞ்ச் சரியாக கையாளவில்லை. இந்தக் குற்றங்களுக்கு மூளையாக இருந்தவர்கள், திட்டமிட்டவர்கள் யாரும் கைதுசெய்யப்படவில்லை. நான் எந்த வகையிலும் கிட்டிக்கு உதவி செய்யவில்லை. நான் நடத்திய விசாரணைகள் அனைத்துக்கும் பதிவு உள்ளது’ என்கிறது அந்த வாக்குமூலம்.
ஐ.பி.எல். 2014 தொடங்கப்போகும் இந்த நேரத்தில் சம்பத்குமார் சமர்ப்பித்த இந்த அறிக்கை, ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குள் மோதலைத் தொடங்கி வைத்துள்ளது. இன்னும் இதில் எத்தனை விவகாரங்கள் வெளிவரப்போகிறது என்று தெரியவில்லை!
- ஜோ.ஸ்டாலின்

- Junior Vikatan

No comments:

Post a Comment