Friday, February 7, 2014

"காங்கிரஸுக்கு மக்கள் பாடம் கற்பித்ததில் எனக்கு மகிழ்ச்சி!" 29.01.1989

சென்னை, ராமாவரம் தோட்டத்தில் ஜானகியைச் சந்தித்தோம்...
 ''இந்த அசிங்கமான அரசியல் சாக்கடையில் இறங்காமல், அறிஞர் அண்ணாவின் துணைவி ராணி அம்மையார்போல் நீங்களும் ஒதுங்கி இருக்கலாம் இல்லையா? ஏன் இப்படி ஒரு சூழ்நிலையில் மாட்டிக்கொண்டீர்கள்?''
''அசிங்கமான அரசியல் சாக்கடை... அடேங்கப்பா! ரொம்ப யோசனை பண்ணி உபயோகிக்க வேண்டிய வார்த்தை அல்லவா இது? பரவாயில்லை... கேட்டுட்டீங்க. அறிஞர் அண்ணா இறந்தப்போ அவரோட எண்ணங்களை, திட்டங்களை நிறைவேற்ற அருமையான தம்பிமார்கள் இருந்தாங்க. ஆனா நான், புரட்சித் தலைவர் இறந்தப்போ ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையைச் சமாளிக் கத்தான் அரசியல்ல இறங்கினேன். இப்போ எதுலயும் மாட்டிக்கிட்டதா நான் நினைக்கல.''
''எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் மனிதரைச் சுற்றி ஊழல் பெருச்சாளிகளும் சுயநலவாதிகளும் மட்டும்தான் இருந்தார்கள் என்பது தெரிந்துதானே அவர்களை மக்கள் தூக்கி எறிந்தார்கள். அவர்களை நம்பி எப்படி நீங்கள் அரசியலில் இறங்கினீர்கள்?''
''ஓ... ஒருவர் தேர்தலில் தோற்றுவிட்டார் என்பதாலேயே அவர் ஊழல் பெருச்சாளி, சுயநலவாதி என்ற அர்த்தமோ? எனக்கு இன்னமும் அப்படித் தோன்றவில்லை.''
''உங்கள் கணவரின் எதிர்க் கட்சியான தி.மு.க. உங்களை எப்படி நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?''
''எனக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் கிடையாது. என்னைத் தமிழகத்தின் கோடிக்கணக்கான மக்களில் ஒருத்தியாக நடத்தினால் போதும்.''
''இன்னமும் ஒரு குறிப்பிட்ட கும்பலை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலிலேயே விடாக்கண்டராக இருக்கப்போகிறீர்களா?''
''விடாக்கண்டராக என்று நீங்களே குறிப்பிட்டுக் கேட்ட பின்னர், நான் வேறு பதில் சொல்ல வேண்டுமா?''
''நீங்கள் ஏன் அரசியலைவிட்டு முழுவதுமாக ஒதுங்கி, நிஜமாகவே சமூக சேவை செய்யக் கூடாது? எம்.ஜி.ஆரின் எண்ணங்களான - ஏழைகளின் வறுமையைப் போக்க முயற்சித்தல், கல்வியறிவு அளித்தல் போன்ற எண்ணங்களை உங்களிடம் உள்ள சொத்துக் களை மட்டும் செலவழித்து நிறைவேற்ற ஏன் முயற்சிக்கக் கூடாது?''
''அரசியலில் ஈடுபடுவதால் சமூக சேவை செய்ய முடியாமல் போய்விடும் என்று நான் கருதவில்லை. அரசியல் மூலம் சேவை மனப்பான்மையும் வாய்ப்புகளும் அதிகம் கிடைக்கும் என்பதாலேயே அரசியலில் ஈடுபட்டுள்ளேன். மற்றபடி, நான் ஏற்கெனவே சொன்னதுபோல் எனது சொத்துகளை ஏழைகளின் முன்னேற்றத்துக்கு மட்டுமே செலவிடுகிறேன்.''
''தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரையில் உங்களுக்கு மிகவும் வருத்தம் தந்த நிகழ்ச்சி எது?''
''மக்களுக்குச் சேவை செய்யக் கூடிய பெரிய வாய்ப்பு எனக்குக்கூட கிட்டாமல் போனதில்தான் வருத்தம்.''
''இனியாவது ஜோசியத்தில் நம்பிக்கை இல்லாமல் நடக்க முயற்சிப்பீர்களா?''
''நீங்கள் ஜோசியம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? என் கணவரின் படத்துக்கு மாலையிட்டு வணங்கி உத்தரவு கேட்பதையும் அவர் வணங்கிய மூகாம்பிகை கோயிலுக்குப் போவதையும் அவர் மதித்த பெரிய மனிதர்களிடம் ஆலோசனை கேட்பதையும் ஜோசியம் என்கிறீர்களா? ஐ டோன்ட் திங்க் ஸோ.''
''எம்.ஜி.ஆரைத் தூக்கி ஆகாயத்தில் வைத்த மக்கள்தான் தற்போது அவரோடு 40 ஆண்டு காலம் வாழ்க்கை நடத்திய உங்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து உள்ளார்கள். அதுபற்றிய உங்கள் கருத்து என்ன? தயவுசெய்து 'மக்கள் தீர்ப்புக்குக் கட்டுப்படுகிறேன்’ என்று சொல்லி மழுப்பாதீர்கள்...''
''மக்கள் தீர்ப்புக்குக் கட்டுப்படுகிறேன் என்று சொன்னால் மழுப்பலா? பரவாயில்லை. எந்த மக்கள் எம்.ஜி.ஆரை ஆகாயத்தில் தூக்கிவைத்தார்களோ, அந்த மக்கள்தானே என்னைப் புறக்கணித்ததாக நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். அவர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாக நான் விடாமுயற்சியுடன் பாடுபடுவேன்... தப்பில்லையே?''
''தமிழக மக்கள், ஆட்சி செய்யத் தி.மு.க- வைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதேசமயம், எம்.ஜி.ஆரின் வாரிசுச் சண்டையில் ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள். எனவே, தி.மு.க-வின் வெற்றியைவிட, ஜெயலலிதாவின் வெற்றியில்தானே உங்களுக்கு அதிக வருத்தம்?''
''மன்னிக்க வேண்டும். இதற்கு, இப்போது பதில் சொல்ல விரும்பவில்லை.''
''இந்தத் தேர்தலைப் பொறுத்தவரைக்கும் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த விஷயம் ஏதும் உண்டா?''
''யாருக்காவது மெஜாரிட்டி கிடைக்குமா என்று பலரும் சந்தேகித்துக்கொண்டு இருந்த நிலையில், ஒரு கட்சிக்குத் தனிப் பெரும் மெஜாரிட்டி கிடைத்ததும் புரட்சித் தலைவரின் ஆட்சியைத் தொடரவிடாமல் செய்த காங்கிரஸுக்கு மக்கள் பாடம் கற்பித்ததும் நான் சந்தோஷப்படும் விஷயங்கள்!''
''வேறு எந்தக் கட்சியுடனாவது இணைந்து செயல்பட எண்ணம் உண்டா?''
''முன்னிலும் அதிகமான ஆர்வத்துடன், திட்டமிட்டுச் செயல்படப்போகும் எங்கள் கட்சியுடன் யார் வேண்டுமானாலும் இணைய முயற்சி செய்யட்டும்.''
''பொது இடங்களில் கண்ணீருடன் போனீர்களே... எப்போதாவது தனி அறைக்குள் வாய்விட்டு அழுதது உண்டா?''
''என் கணவரின் நினைவுகள் என்னை அதிகமாகத் தாக்கும்போது பொது இடம், தனி அறை என்று பாராமல்தான் வாய்விட்டு அழுதுவிடுகிறேன்.''
''எம்.ஜி.ராமச்சந்திரனின் மனைவி என்ற முறையில் மு.கருணாநிதிக்கு ஏதேனும் கோரிக்கையோ, செய்தியோ சொல்ல இருக்கிறீர்களா?''
''சொல்ல வேண்டியதை நானே அவரிடம் தொலைபேசியில் சொல்லி விட்டேன்.''

- Vikatan

No comments:

Post a Comment