Friday, February 7, 2014

முகம் தெரியாத அந்த அற்புத மனிதர்! Sivakumar

 
மாடியில் புத்தகம் படித்துக்கொண்டிருந்தார் சிவகுமார்.

''உங்கள் டின்னர் விருந்தாளி யார்..?'' என்று கேட்டதுதான் தாமதம்... அதுவரை சிரித்துப் பேசிக்கொண்டிருந்த சிவகுமார். சடக்கென்று உணர்வு மாறினார். விழிகளில் இலக்கையும் தாண்டி மனம் தொலைதூரத்துக்குப் போய்விட்டது போலும்! சில விநாடி மௌனத்துக்குப் பிறகு, பேச ஆரம்பித்தார் சிவகுமார்.
''முகம் தெரியாத மனிதரை என் வீட்டு விருந்துக்கு அழைக்க விரும்புகிறேன்'' என்ற சிவகுமாரின்       கண்களிலே ஆர்வமும் ஆசையும் கலந்து நிறைந்தன.

''முகம் தெரியாத மனிதரா?! உங்களுக்குத் தெரியாதவரா அவர்?''
''என் அம்மாவும் பெரியவர்களும் சொல்லிச் சொல்லி நிறையவே அவரைப் பற்றித் தெரிந்திருக்கிறேன். ஆனால், தனது 34-வது வயதிலேயே எல்லாவற்றையும் முடித்துக்கொண்டுவிட்ட, புகைப்படம்கூட எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டதால் என் மனதில் அரூபமாய் வாழ்ந்துகொண்டிருக்கிற அந்த அற்புத மனிதர்... என்னைப் பொறுத்தவரை முகம் தெரியாத மனிதரே!''
''அவரை அழைப்பதற்குக் காரணம் என்ன..?''
''அவர் நல்ல பக்திமான். ஜோதிடக் கலையில் வல்லவர். செல்வாக்கும் சொல்வாக்கும் மிக்கவர். அவர் கணித்துச் சொன்னால், அது அப்படியே நடக்குமாம்! தனக்கு இரண்டாவது மகன் பிறந்ததும், அவன் ஜாதகத்தை ஓலைச்சுவடியில் குறித்து வைத்தாராம்! அந்த அன்பு மகனுக்கு ஓராண்டு நிறைவதற்குள் தந்தை யான தன் வாழ்வு முடிந்துவிடும் என்று கணித்துச் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு மாதமும் கிருத்திகையன்று பழநிமலைக்குப் போய், தான் பாராயணம் செய்து வைத்திருந்த 'திருப்புகழ்’ மொத்தப் பாடலையும் முருகன் சந்நிதியில் நின்று மனமுருகப்பாடி, மூன்று கால பூஜையும் முடிந்த பின்பே தன் கிராமத்துக்குத் திரும்பியவர்.
தமிழ் கற்றுத் தரவே தரமான ஆசிரியர் இல்லாத காலத்தில், ஆங்கில போதகன் வாங்கி, அதன் உதவியால் ஆங்கிலம் பயின்றவர். ஊர்ப் பிள்ளைகளுக்கு இரவு நேரங்களில் விளக்கொளியில் கல்வி போதித்திருக்கிறார்... அதுவும் இலவசமாக!
அந்த மனிதரது வாழ்க்கையின் கடைசி கிருத்திகை நாள்... பழநி முருகன் சந்நிதியில் 'முத்தைத்தரு பத்தித்திருநகை அத்திக்கிறை சத்திச்சரவண...’ என முழுவது மாய்த் திருப்புகழைப் பாடி முடிக்கும்போது, அங்கேயே நாடி விழுந்துவிட்டது. குரல் ஒடுங்கி விட்டது. ஓரிரு வாரம் படுக்கை யில் இருந்திருக்கிறார். தொண்டை யில் ஏதோ கட்டி! வைத்தியம் பலனளிக்காமல், அவர் ஓலைச் சுவடியில் குறிப்பிட்ட தேதியி லேயே பூவுலகிலிருந்து விடைபெற் றுக்கொண்டுவிட்டார். அன்று மாலை வரை தவழ்ந்து விளையா டிய அவரது குழந்தை, அப்பனின் சடலத்தை அடக்கம் செய்துவிட்டு அனைவரும் திரும்பி வந்தபோது தள்ளாடி, சுவர் பிடித்து எழுந்து நின்றானாம்! 'அப்பனை எடுத்து முழுங்கிட்டுச் சுட்டித்தலையன் நிக்கறாம் பாரு...’ என்று வேதனை யால் உறவினர்கள் வெம்பி வெடித் தார்களாம்...''
''அவருக்கான டின்னரை ஒட்டி வீட்டை அலங்கரிப்பீர்களா?''
''அவர் வரவை ஒட்டி எங்கள் வீட்டை எளிமையாக அலங்கரிப் போம். அவரை எதிர்கொண்டு வரவேற்றுப் பூஜையறைக்குள் அழைத்துச் செல்வேன். அங்கே நாலடி உயரம், இரண்டரை அடி அகலத்தில் பி.குருசாமி என்ற ஓவியர், தஞ்சாவூர் பாணியில் கண்ணாடியில் வரைந்துள்ள முருகனின் வண்ண ஓவியம் உள்ளது. அதை அவர் உற்றுப் பார்ப்பார். ஐம்பது வருடங்களுக்கு முன், பழநியிலிருந்து அவர் வாங்கி வந்த ஓவியம் அது! அப்போது, 'முத்தைத்தரு பத்தித்திரு’ என்ற இனிய குரல் திடீரென ஒலிக்கும். வாய் ஓயும் வரை அவர் பாடிய திருப்புகழாயிற்றே.. அந்தப் பாடல் ஓசை கேட்டுப் புல்லரித்துப் போய்த் திரும்பிப் பார்ப்பார். கர்னாடக சங்கீதம் கற்றுவரும் என் மகள் பிருந்தா பாடிக்கொண்டிருப்பாள். அதைப் பார்த்துப் பரவசமடைவார்.
என் மூத்த மகன் சரவணன், சிறிய துணி மூட்டை ஒன்றைக் கொண்டு வந்து, அவர் முன் வைப்பான். அதை அவர் பிரிப் பார். அதனுள் அப்பளமாக நொறுங்கிய நிலையில், மிகப் பழைய ஆங்கிலப் போதகன் இருக்கும். அந்தக் காலத்தில் அவர் படித்தாரே, அதே புத்தகம் தான் அது. அப்போது மஞ்சள் தடவிய ஓலைச்சுவடி ஒன்றை அவர் முன் என் மனைவி நீட்டு வாள். அதை வாங்கும்போது, அவர் உடலே நடுங்கும். ஐம்பது வருடங்களுக்கு முன் எந்த மக னின் தலையெழுத்தைக் கணக்கிட் டுத் தன் மரணத் தேதியைக் கண்டு சொன்னாரோ, அந்த மகனின் ஜாதகம்தான் அது...''
''டின்னர் முடிவில் அவருக்கு என்ன பரிசு கொடுப்பீர்கள்...?''
''முகம் தெரியாத அந்த மனிதர் அந்தக் காலத்தில் போட்டோ எடுத்துக் கொள்ளவில்லை. அத னால், அவரைப் பலவாறாக போட்டோ எடுப்பேன். அவரு டன் என் மனைவி, மக்களை நிற்க வைத்து, நானும் நின்று குரூப் போட்டோ போலவும், அவ ரைத் தனியாகவும்  விதவிதமாக போட்டோ எடுத்து அவருக்குப் பரிசாகத் தருவேன்.
கடைசியாக... கண்ணம்மா பேட்டை இடுகாட்டில் உள்ள என் தாயின் சமாதிக்கு அவரை அழைத்துச் செல்வேன். பத்து மாதத்திலேயே தந்தையை இழந்து விட்ட இந்த அபாக்கியவானுக் குத் தந்தையாய், தாயாய், ஆசா னாய், அனைத்துமாய் இருந்த என் அன்னை அமைதி கொண்ட இடம் இது என்று கூறுவேன். அதில் பொறித்துள்ள 'அம்மா! உயிராய், உடலாய், உதிரமாய் என்னுள்ளே நீ இருக்க, பிரிவென் பதேது...’ என்ற வாசகங்களை அவர் உற்று உற்றுப் பார்ப்பார். அவரது இதழ்கள் அதை  உச்சரிக் கும். நடுங்கும் கரங்களால் அதைத் தடவித் தடவிப் பார்ப்பார்.
'பனையோலையில் நான் எழுதி வைத்தபடியே நீ வாழ்வில் உயர்ந்து, உன் குடும்பத்தோடு குதூகலமாய் இருப்பது கண்டு எனக்குச் சந்தோஷம்! தொடர்ந்து அது நீடிக்கட்டும்!’ என்று சொல் லிக் கண்கலங்க எங்களை ஆசீர் வதிப்பார் அந்த மனிதர்!''
இதற்கு மேல் பேச முடியாமல் திக்கித் திணறிவிட்டார் சிவ குமார். அவர் கண்களில் நீர்த் தேக்கம்.
''டின்னருக்கு அழைப்பதாகச் சொன்ன அந்த முகம் தெரியாத மனிதர் வேறு யாருமில்லை... என் தந்தைதான்!''
சின்னக் குழந்தை போலக் குலுங்கிக் குலுங்கி அழுதார் சிவகுமார்.
-Vikatan

No comments:

Post a Comment