Saturday, December 28, 2013

ஆறாம் திணை - 68 மருத்துவர் கு.சிவராமன்

நெரிசலும் இரைச்சலுமான இந்த வாழ்வில் ஒவ்வொருவருக்குள்ளும் புற்றாக வளர்வது, 'மன அழுத்தமும் மனச்சோர்வும்’ மட்டும்தான். நவீன வாழ்வியலின் பெரும் சங்கடமான இது, பின்னாளில் முழு மனவியாதியாகப் பரிணமிக்கிறது. அதோடு மற்ற வியாதிகளை ஊக்குவித்தும் உருவாக்குவதும் மன அழுத்தத்தின் முக்கியமான பிரச்னை. அது காய்ச்சல், தலைவலி முதல் கேன்சர் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிறது அந்தக் கால சித்த மருத்துவம் முதல் இந்தக் கால நவீன அறிவியல் வரை.  
முடக்கத்தான் தோசை சாப்பிட்டு மூட்டுவலியைக் கட்டுப்படுத்துவதுபோல, உளுந்தங்களி சாப்பிட்டு மாதவிடாய் வலியை நீக்குவதுபோல, இஞ்சி ரசாயனம் அருந்தி மைக்ரேன் தலைவலியைப் போக்குவதுபோல, உணவை மட்டும் ஊட்டி உள்ளத்து வலியை உதறுவது கடினம். ஆனால், உணவை 'ஊட்டுபவர்’ மூலம் உள்ளத்துக்கு மருந்திட முடியும். ஆனால், ஊட்டுபவர்களைத்தான் கொஞ்ச நாளாகக் காணோம்!
'அடிச்சட்டி ஆனை போல; கடைசி வாய் வாங்கிக்கோடா’ - எனச் சொல்லிக் குழைந்த பருப்பு சாதத்தில் கூடுதலாக தன் கைச்சுவையைச் சேர்க்கவேண்டிய அம்மாவுக்கு, நேர நெருக்கடி. 'வெண்டைக்காய் பச்சடி மீதி வெக்காமச் சாப்பிட்டானா?’ எனக் கேட்க வேண்டிய அப்பாவுக்கு, மூன்றாவது காது (செல்போன்) முளைத்து வீட்டிலும் அலுவல் நெருக்கடிகளைக் கொட்டிக்கொண்டே இருக்கிறது. இந்த நெருக்கடிகளில் உணவு அக்கறை மட்டும் அல்லாது, சின்னச் சின்னப் பாராட்டுகள், சுமையை இறக்கும் அரவணைப்புகள், மருந்திடும் புன்னகைகள், வருத்தங்களைக் காது கொடுத்துக் கேட்கும் பொறுமை... என எல்லாமே செத்துப்போனதில் மனசை அழுத்தும் பாறாங்கல்லின் கனம் அதிகரித்துக்கொண்டே போகிறது.
அந்த மன அழுத்தமே காதலையும் கருத்தரிப்பையும் தாமதிக்க வைக்கிறது. ஆண்களின் பிரத்யேக ஹார்மோன் டெஸ்டோஸ்டீரான், லேடிக் செல்களில் இருந்து ஊற வேண்டும். ஆனால், இந்த மாற்றம் மன அழுத்தத்தால் மந்தப்பட்டு விந்தணு உற்பத்தி குறைவதும், உடலுறுவுக்கான நாட்டத்தைக் குறைப்பதும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. பெண்களுக்கு சினைமுட்டை சரியான நாளில் பிதுங்கி, கருப்பையை நோக்கி வருவதைத் தாமதப்படுத்தி, கருத்தரிப்பில்கூட சிக்கலை உண்டாக்குகின்றன மன அழுத்தங்கள்!
இப்படி, பெண்களுக்கு மன அழுத்தத்தில் ஏற்படும் கருத்தரிப்புக் கோளாறு மற்றும் சினைமுட்டைப் பிரச்னைகள் இரண்டுக்கும், 'எள்’ ஒரு நல்ல மருந்து. எள்(நல்லெ)ளெண்ணெய் தடவிய உளுத்தங்களியும், தொலிஉளுந்தும் புழுங்கல் அரிசியும் சேர்த்துச் சமைத்த உளுந்தஞ்சோறும், அதில் பிசைந்து சாப்பிட எள்ளுத் துவையலும் பெண்களுக்கான ஆரோக்கிய உணவு. எள்ளில்தான் இன்று ஆண்மையைப் பெருக்கும் ஆங்கில மருந்துகளில் பரவலாகச் சேர்க்கப்படும் L-ARGININE  எனும் அமினோ அமிலமும் புரதமும் மிக அதிக அளவில் உள்ளன. ஆதலால், ஆண்களும் எள்ளை எள்ளி நகையாடாமல் உணவில் அடிக்கடி சாப்பிடலாம். ஆனால், எள்ளும் உளுந்தும் மட்டும் இதற்குப் போதாது. மன அழுத்தத்தை நீக்கும் புரிதலையும் பொறுமையையும் வளர்க்க வேண்டும். இன்ஸ்டன்ட் உலகில் இந்த இரண்டுக்குமான மெனக்கெடலுக்குப் பலருக்கு நேரம் இல்லை!
பிறந்தவுடன் நிகழும் குழந்தைகள் மரணம், சவலைப் பிள்ளைகள் பெருக்கம், பெண்கள் நலம் என நாட்டின் நலவாழ்வுப் புள்ளிகளில் நாம், வளர்ந்த நாடுகளைவிடப் பெருவாரியாகப் பின்தங்கி இருக்கிறோம். விவாகரத்தில் மட்டும் இன்னும் நாம் பாதுகாப்பாக இருப்பதற்கு, 'திருமணக் குடும்ப அமைப்பு’ என்ற கட்டுமானத்தின் மீதான நம் பலமான நம்பிக்கையும், அதை ஒட்டியே நகரும் வாழ்வியலும் மிகமிக முக்கியமான காரணம். (அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில்  மணமுறிவு சராசரியாக 47 சதவிகிதக் கணக்கில் இருக்க, இங்கே அது இன்னும் 6 சதவிகிதப் புள்ளிகளில் குறைவாக இருக்கிறது என இந்தியக் குடும்ப நலவாழ்வு புள்ளிவிவரம் சொல்கிறது.) ஆனால், அந்தக் கட்டுமானம் உடைய ஆரம்பித்ததற்கு, பெருகும் மன அழுத்தமும், மன அழுத்தத்தைச் சீராக்கும் வழி தெரியாமல் விழி பிதுங்கி நாம் நிற்பதும் ஒரு முக்கியமான காரணம்.
'காளாஞ்சகப்படை’ என அழைக்கப்படும் சோரியாசிஸ், மன அழுத்தத்தில் பெருகும் முக்கியமான தோல் நோய்களில் ஒன்று. தோலில் தீயினால் சுட்ட புண் போல் சிவந்தும், செதில் செதிலாக உதிர்ந்தும், சில நேரங்களில் உள்ளங்கை உள்ளங்கால் தோலில் வெடிப்புகளும் பெருகிச் சிரமப்படும் இளைஞர் யுவதிகள் இன்று அதிகம். எளிய தமிழ்நாட்டுத் தாவரமான வெட்பாலை மரத்தின் இலையை மட்டும், செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் ஊறப்போட்டு இரண்டு நாள் வெயிலில் வைத்து எடுத்தால், எண்ணெய் அடர்ந்த கருநீல நிறமாகும். அந்த எண்ணெயை சோரியாசிஸ் பாதித்த சருமத்தில் வெளிப்பூச்சாகப் பூசி, இந்த நோயை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆய்ந்து உறுதிப்படுத்தியுள்ளது. மருந்துடன் மனசையும் இலகுவாக்கினால் மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
னச்சோர்வு, இளந்தலைமுறையினருக்கு உண்டாக்கும் இன்னொரு தொல்லை, Gastroesophageal Reflux Disease (GERD) எனும் வயிற்றை வலித்து, உணவை எதுக்களித்து, தொண்டையில் சமயங்களில் புண் உண்டாக்கும் குன்ம நோய். அடிக்கடி ஆர்ப்பரித்து வெம்பும் மனம் இதற்கு ஒரு முக்கியமான காரணம். காரமான எண்ணெயில் பொரித்த உணவையும் கிழங்குகளையும் சில மாதங்கள் நீக்குவதுடன், இட்லிக்கு பிரண்டைச் சட்னி, இடியாப்பத்துக்குத் தேங்காய்ப்பால், தாகத்துக்கு மோர், சாப்பிடும்போது ஜீரணிக்க சீரகத் தண்ணீர், இரவில் கனிந்த வாழை... என உணவைத் திட்டமிடுங்கள்.
அப்பா-அம்மா அனுப்பிய செல்கள் சேர்ந்து உருவான முதல் கருமுட்டையில் இருந்து, நாம் எருமுட்டைக்குள் போகும் வரை ஒவ்வொரு கணமும் திட்டமிட்டபடி படியெடுக்கும் மரபணுக்கள், வாழ்வியல் நெருக்கடியில் தடம்புரளும்போது, புற்றுப்பெருக்கம் தொடங்குகிறது. சாதாரண சோகை, தலைவலி, ஜுரம்கூட சில நாட்கள் கூடுதலாக நீடித்தால், புற்றாக இருக்குமோ என்ற கண்ணோட்டத்தில் சிந்திக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மருத்துவ உலகம். மலக்குடலுக்குள் வரும் சாதாரண 'பாலிப்’, மார்பகத்திலும் கருப்பையிலும் வரும் சாதாரண 'நார்தசைக் கட்டிகள்’, எப்போதும் நெருக்கடியிலும் மனச்சோர்விலும் இருப்போருக்கு புற்றாக மாற வாய்ப்பு உண்டு என்கிறது இன்றைய அறிவியல்.
மனச்சோர்வில் இருந்து வெளியேற மூச்சுப்பயிற்சியும் பிராணாயாமமும் மிகமிக அவசியம். பலரும் நினைப்பது போல யோகா இந்துமத வழிபாட்டை ஒட்டியது அல்ல. இன்னும் சொல்லப்போனால், மதங்களை, மத வழிபாட்டை எதிர்த்த சாங்கிய ஆசீவகச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது. பக்தி மரபிலும் தாந்திரீக மரபிலும் திருமூலரும் பதஞ்சலியும் பேசிய அளவுக்கு முன்னரே, வேதமறுப்பு இயக்கங்கள் யோகாவின் கூறுகளை அலசியிருக்கின்றன. மதங்களைப் புறந்தள்ளிவிட்டு யோகாசனங்களைப் பார்க்க முடியும். பிராணாயாமப் பயிற்சியில் நடக்கும் உடல் இயக்க மாற்றத்தில், உணவுப் பொருளில் இருந்து சக்தி எப்படிக் கிரகிக்கப் பெறுகிறது, உடலின் எதிர்ப்புச் சக்தி எப்படித் தூண்டப்படுகிறது, மனச்சோர்வில் நிகழும் அரைகுறை உறக்கம் எப்படிச் சீராகிறது, மன அழுத்தத்தில் பெருகும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் எப்படிக் குறைகிறது... எனத் துல்லியமாக ஆராய்ந்திருக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியதெல்லாம் முறையான வாழ்வியலைப் படிப்பதும், படித்ததை தினம் பயிற்சி செய்வதும் மட்டுமே!
எல்லோருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கும். அப்படிக் 'கடந்தவை’, நம் 'நாளை’யைக் கட்டமைப்பதில் பெரும் பங்கு வகிக்கும். கல்யாண்ஜியின் 'மர அலமாரிக்குள் ஓடிய மணல் ஆறு’ வரிகளைப் படித்ததும் முணுக்கென்று இமைகள் நனைந்த ஈரம் இன்னும் நினைவில் இருக்கிறது. சிவவாக்கியரின் 'மனத்தகத்து அழுக்கறதா மௌனஞான யோகிகள்’ உணர்த்தும் அறச்சீற்றம் இன்னும் அடிமனதில் ஒட்டியிருக்கிறது. 'சலங்கை ஒலி’ கமல், தன் தோழி நீட்டிய தேசிய நடன விழா அழைப்பிதழில் தன் பெயர், படத்தைக் கண்டதும் மனம் பொங்கி அழுகையில், 'இப்படி ஒரு தோழி நமக்கும் கிடைப்பாளா?’ என்ற ஏங்கியது இப்போதும் மூச்சில் கலந்திருக்கிறது. பள்ளியில் செபஸ்தியான் வாத்தியார், கவிதைக்கு இலக்கணம் சொல்லித்தந்த, Spontaneous overflow of powerful feelings in tranquility’- வாக்கியத்தின் 'tranquility’-ஐ தேடிய ஏக்கம் நெஞ்சில் இன்னும் தேங்கியிருக்கிறது.
'கறுப்பு ஓவியக் கண்காட்சி’யில் ஓவியர் நடேஷின் 'கூட்டுக்குள் இருந்த ஹாஃப்-பாயில் முட்டை’ இன்னும் வலித்துக்கொண்டே இருக்கிறது. வாழ்வில் இப்படி கடந்துபோன, ஏக்கமும், நேசமும், கோபமும், வலியும் வாழ்வின் பல பரிமாணங்களைக் காட்டி மன எழுச்சியைத் தரும். ஆனால், இன்றைய தலைமுறையோ இப்படி எதையும் கடக்காமல், பணமும் பணம் சார்ந்த அசைவுமாக வாழும் தட்டையான நகரத்து ஓட்டங்களுக்குள் சிக்கியிருக்கிறது; சிக்கவிடப்பட்டிருக்கிறது!
ஒவ்வொருவரிடமும் களவாடப்பட்ட அந்த மன எழுச்சிக்கான வித்துகளை, இந்தப் புது வருஷத்தில் இருந்தேனும் மீட்டெடுப்போமே! நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

-Vikatan

No comments:

Post a Comment