Saturday, December 7, 2013

மகாத்மா முதல் மன்மோகன் வரை ! - 5 அடிமடியில் கை வைப்பது என்பார்கள்... அதைத்தான் மாமா நேருவுக்கு எதிராக மருமகன் ஃபெரோஸ் செய்தார்.

அடிமடியில் கை வைப்பது என்பார்கள்... அதைத்தான் மாமா நேருவுக்கு எதிராக மருமகன் ஃபெரோஸ் செய்தார்.
 1957-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் ஃபெரோஸ் பேசிய பேச்சு, சுதந்திர இந்தியாவில் வீசப்பட்ட முதல் ஊழல் வெடிகுண்டாக இருந்தது. அடிமை இந்திய நாடாளுமன்றத்தில் பகத்சிங் வீசிய கந்தக வெடிகுண்டுகளுக்கு இணையான அதிர் வலைகளை இது உருவாக்கியது. ஃபெரோஸ் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டிய நெருக்கடி அன்றைய நிதி அமைச்சரும் நேருவின் ஆத்மார்த்தமான நண்பருமான டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கு ஏற்பட்டது. அதற்கு சில மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான அளவுக்கு பணத்தைச் செலவு செய்ததாகச் சொல்லப்பட்ட ஹரிதாஸ் முந்த்ரா என்ற பிரபலமான வர்த்தகருக்கு எதிராகத்தான் ஃபெரோஸ் பேசினார்.
சோஷலிசம் பேசிய நேரு, பிரதமர் பதவியில் இருக்கிறார். 'அடுத்த பத்து ஆண்டுகளில் தனியார் துறைகள் அனைத்தும் தேசியமயமாக்கப்படும்’ என்று நெஞ்சை நிமிர்த்தி நேரு அறிவித்துவிட்டார். இதையே அடிப்படையாக வைத்து ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டிக்கொண்டு இருந்தார்கள். ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாடு (1955 ஜனவரி) அறிவித்த இரண்டு முக்கியமான தீர்மானங்கள் அந்தக் கட்சியின் அந்தஸ்தை வானளாவ உயர்த்திவிட்டன. ஒருவருக்கு ஒரு பதவிதான் என்ற அடிப்படையில் பிரதமர் நேருவே, தான் இதுவரை வகித்துவந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை யு.என்.தெப்பருக்கு தாரைவார்த்தார். சோஷலிச சமுதாயத்தை உருவாக்க காங்கிரஸ் பாடுபடும் என்று அறிவித்த இந்த மாநாடு, தேசிய சொத்துக்களை பொதுமக்களுக்கு உரிமை ஆக்கியது. நேருவின் நடவடிக்கைகளைப் பார்த்து கம்யூனிஸ்ட்களே மிரண்டுபோனார்கள். எந்த அளவுக்குப் போனது என்றால், புரட்சியே நடக்காமல் இந்தியாவில் கம்யூனிஸத்தை நேரு உருவாக்கி வருவதாக கம்யூனிஸ்ட் தலைவர்களே பேச ஆரம்பித்துவிட்டார்கள். பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்குவதற்கான திட்டங்களைப் பற்றி மட்டுமே பிரதமரும் நிதி அமைச்சரும் இதர அமைச்சர்களும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அன்றைக்கு இருந்த ஒரே பிரதான எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட்களும் குழப்பமான சூழ்நிலையில் இருக்கும்போது... அத்தனைக்கும் சேர்த்து ஆப்புவைத்தார் ஃபெரோஸ்.
சோஷலிச சமுதாயம், பொதுத் துறைக்கு ஆதரவு, தனியார் துறைக்கு தடங்கல்... என்று பிரதமர் நேரு புகழ் மயக்கத்தில் இருந்தபோது, இன்னொரு பக்கத்தில் இதற்கு எதிரான வேலைகளை காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சில பெரிய மனிதர்கள் பார்த்தார்கள். அதனைத்தான் ஃபெரோஸ் அம்பலப்படுத்தினார். கொல்கத்தாவைச் சேர்ந்த ஹரிதாஸ் முந்த்ராவின் நிறுவனங்களில் ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஏராளமான பணத்தை முதலீடு செய்திருந்தது. அனைத்தும் பொதுத் துறைக்கு மாற வேண்டும் என்று ஒரு அரசாங்கம் கொள்கை வகுத்திருக்கும்போது, ஒரு தனியார் நிறுவனத்தில் பொதுத் துறை நிறுவனம் முதலீடு செய்வது எத்தகைய முரண்பாடு என்பதே ஃபெரோஸின் கேள்வி.
''நொடித்துப்போன நிலையில் இருக்கும் ஒரு நிறுவனத்துக்கு, இனிமேல் இந்த நிறுவனத்தை நடத்த முடியுமா, முடியாதா என்ற கவலையில் இருக்கும் ஒரு மனிதருக்கு, நிதி நெருக்கடியில் இருந்து தன்னைக் காப்பாற்றுவதற்கு யார் இருக்கிறார்கள் என்ற அச்சத்தில் இருக்கும் ஒருவருக்கு, இப்படிப்பட்ட சலுகையை இந்த அரசாங்கம் எப்படிச் செய்யலாம்?'' என்றார் ஃபெரோஸ்.
ஹரிதாஸ் முந்த்ராவின் ஆறு நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் இருந்தன. அந்த நிறுவனங்களை மீட்டெடுக்க முந்த்ராவுக்கு அவசர அவசியம் பணம். ஆனால், வீழ்ந்துகொண்டு இருக்கும் நிறுவனத்தில் யார் முதலீடு செய்வார்கள்... யார் கடன் கொடுப்பார்கள்... யார் அதன் பங்குகளை வாங்குவார்கள்? ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை பலிகடா ஆக்கியது காங்கிரஸ் அரசு. அதன் லட்சக்கணக்கான சந்தாதாரர்களின் கண்ணீரால் சேமிக்கப்பட்ட கரன்சி, சில கையெழுத்துக்களால் முந்திராவின் கஜானாவுக்குப் போனது. காங்கிரஸை காவல் தெய்வமாக நினைத்து வணங்க ஆரம்பித்தார் முந்திரா. இதனால், அவரது நிறுவனத்தின் பங்குகள் சடசடவென ஏற ஆரம்பித்தன. இதனைத்தான், 'இந்த அரசாங்கத்தின் அவமானகரமான செயல்’ என்று ஃபெரோஸ் வர்ணித்தார்.
''சரிய ஆரம்பித்திருந்த முந்த்ரா நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்காகவே, ஆயுள் காப்பீட்டுக் கழகம் அதிகளவிலான பணத்தை முதலீடு செய்துள்ளது. முந்த்ரா நிறுவனத்தில் இருந்து பங்குகளை வாங்கலாமா என்று ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பரிசீலனை நடந்திருந்தால் அவர்கள் இந்த நிறுவனத்தைத் திரும்பிக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் முதலீட்டு கமிட்டியின் எதிர்ப்பையும் மீறி பங்குகளை வாங்கி இருக்கிறார்கள் என்றால், அது யாரோ ஒரு அதிகாரம் பொருந்தியவர் தூண்டுதலின் பேரில் இது நடந்துள்ளது. இந்தப் பணப்பரிமாற்றம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தியாக வேண்டும்'' என்று ஃபெரோஸ் பொங்கினார்.
குற்றச்சாட்டை நேரடியாகவே வைத்தார் ஃபெரோஸ். முதலில் குற்றச்சாட்டை மறுத்த நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, பின்னர் அதுகுறித்து விளக்கமாகப் பேசியாக வேண்டியதாயிற்று.
''உறுப்பினர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல நான் மறுக்கவில்லை. அந்தப் பொறுப்பில் இருந்து விலகிச்செல்ல நான் விரும்பவில்லை. அதிகாரிகள்தான் அனைத்துக்கும் காரணம் என்று சப்பைக்கட்டு கட்ட முயலவில்லை. முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை மத்திய நிதித் துறை அமைச்சகம் நேரடியாக நிர்வகிக்கவில்லை. எனவே, அதில் நாங்கள் நேரடியாகத் தலையிட்டு எதனையும் செய்ய முடியாது. இது மாதிரித்தான் நீங்கள் செயல்பட வேண்டும் என்றோ, இந்தப் பங்குகளைத்தான் வாங்கவேண்டும் என்றோ நாங்கள் கட்டளையிட முடியாது. அவர்கள் இதுபற்றி எங்களிடம் ஆலோசனை நடத்துவதும் இல்லை'' என்று நிதி அமைச்சர் சொன்னார்.
ஆனாலும், ஃபெரோஸ் விடவில்லை. ''நிதியமைச்சரின் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளன'' என்று நிதியமைச்சரின் முகத்தை நோக்கிச் சொன்னார் ஃபெரோஸ். நண்பரைக் காப்பாற்றுவதா, மருமகன் குற்றச்சாட்டை மறுப்பதா என்பதற்கு மத்தியில் நேரு துடித்தார். அடுத்த அறிவிப்பை நிதியமைச்சர் செய்தார். ''சொல்லப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா என்பதை ஆராய விசாரணை கமிஷன் அமைக்கப்படும்'' என்று நிதியமைச்சர் பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் சொன்னார்.
1958-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி நீதிபதி எம்.சி.சக்லா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. கமிஷன் அமைக்கப்பட்ட மூன்றாவது நாளே தன்னுடைய விசாரணையை நீதிபதி சக்லா தொடங்கினார். பிப்ரவரி 5-ம் தேதி விசாரணையை முடித்தார். பிப்ரவரி 10-ம் தேதி தன்னுடைய அறிக்கையை அரசாங்கத்திடம் கொடுத்தார் நீதிபதி. இந்திய வரலாற்றில் இவ்வளவு துரிதமாக நடந்த முதலும் கடைசியுமான விசாரணை இதுதான்.
ஜனவரி மாதம் 17-ம் தேதி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் 10-ம் தேதி அறிக்கை தரப்பட்டது. இது ஏதோ கண்துடைப்பு விசாரணையாக இல்லை. இந்த விசாரணைக்கு உத்தரவிட்ட நிதியமைச்சரை நோக்கியே கையை நீட்டியது சக்லா கமிஷன்.
இந்த கமிஷனின் முக்கியப் புள்ளியாக நிதித் துறையின் செயலாளர் ஹெச்.எம்.படேல் குறிக்கப்பட்டார். ''நிதித் துறைச் செயலாளராக இருந்த ஹெச்.எம்.படேலின் அறிவுரையின் பெயரிலேயே முந்த்ராவின் பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. அவரது தூண்டுதலால்தான் இந்தப் பங்குகளை வாங்கவேண்டிய நெருக்கடி ஆயுள் காப்பீட்டுக் கழக அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. பங்குகள் வாங்க தேர்வு செய்யப்பட்ட தேதி உட்பட முந்த்ராவுக்கு முன்கூட்டியே தெரிந்துள்ளது. அந்தத் தேதியில் தனது நிறுவனப் பங்குகளை மார்க்கெட்டில் கூட்டிவைத்து முந்த்ரா விளையாடிவிட்டார். அதாவது, செயற்கையாகத் தனது பங்குகளின் விலையை அதிகப்படுத்திக் கொண்டார்கள். இதனால் தேவையில்லாமல் அநியாய விலைக்கு காப்பீட்டுக் கழகம் இந்தப் பங்குகளை வாங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவை அனைத்தும் நிதித் துறையின் செயலாளர் ஹெச்.எம்.படேலுக்குத் தெரியும்'' என்ற முடிவுக்கு கமிஷன் வந்தது.
நிதித் துறை அமைச்சர் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்றாலும்... நீதிபதி சக்லா, தீர்மானமான ஒரு கருத்தைச் சொன்னார். ''நிதித் துறை செயலாளர்தான் இதனைச் செய்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இந்த விவகாரங்கள் நிதித் துறை அமைச்சருக்குத் தெரியாமல் இருக்க முடியாது. தன் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் செய்யும் செயல்களுக்கு, அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு அமைச்சர்தான் முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும். இந்தியாவில் நடப்பது நாடாளுமன்ற ஜனநாயகம். இங்கு தனது அமைச்சகம் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்தான் முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும்'' என்று சொன்னார். இந்த அறிக்கை நேருவுக்கு நெருக்கடியைக் கொடுத்தது. அறிக்கை தாக்கல் ஆனதுமே, தனது பதவி விலகல் கடிதத்தை நிதியமைச்சர் டி.டி.கே. கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து டி.டி.கே.வும் நேருவும் எழுதிக்கொண்ட கடிதங்கள் முக்கியமானவை.
''அதிகாரி செய்யும் தவறுக்கு அமைச்சர்தான் பொறுப்பு என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டியவன் நான்தானே'' என்றார் டி.டி.கே.
''இந்த விவகாரத்தை அமைச்சர் நேரடியாக அறியாவிட்டாலும், அவர் முழு பொறுப்பை ஏற்றே தீர வேண்டும்'' என்றார் பிரதமர் நேரு.
இருவருமே அவரவர் அளவில் தங்களது நேர்மையை நிரூபிக்க நினைத்தார்கள்.  ஆனால்  இன்று, எந்தக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும் அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று விசாரணை கமிஷன்கள் அமைக்கப்படுவது இல்லை. அப்படியே அமைக்கப்பட்டாலும் அதற்குத் தேவையான ஆவணங்களைத் தருவது இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் அதற்கு முன்னால் ஆஜராவது இல்லை. முதல் அறிக்கை, இரண்டாம் அறிக்கை, மூன்றாம் அறிக்கை, அரைக் காலாண்டு அறிக்கை, அரையாண்டு அறிக்கை, வரைவு அறிக்கை, இறுதி அறிக்கைக்கு முந்தைய வரைவு அறிக்கை... என்று இழுத்து, ஆட்சிக் காலக்கட்டமான ஐந்து ஆண்டுகளையே முடித்துவிடுகிறார்கள். உச்ச நீதிமன்றம் போடும் கிடுக்கிப்பிடிகளைக்கூட சாமர்த்தியமாகச் சமாளித்து தப்பிக்கும் தந்திரமும் இன்றைய அரசியல்வாதிகளுக்குத் தெரிந்துள்ளது. ஆனால், 100 ரூபாய் லஞ்சம் வாங்கியவனும் 5,000 கையூட்டு கேட்டவனும் வேலையை இழந்து வாழ்க்கையைத் தொலைத்து ரோட்டில் அலைகிறான். ஆனால், ஆயிரம் கோடிகளில் புரள்பவர்களுக்கு பண மழை பொழிவது எப்போதும் நிற்கவில்லை. அப்படியானால், உண்மையான சுதந்திரம் இவர்களுக்கு மட்டும்தானே கிடைத்துள்ளது?
''சுதந்திரம் என்பது ஆட்சியாளர்களை மாற்றுவது மட்டுமல்ல. சமூகத்தின் அடித்தட்டு மக்களின் பொருளாதார முன்னேற்றமே சுதந்திரத்தின் அளவைத் தீர்மானிக்கும்'' என்று ஃபெரோஸ் பேசினார். இது மாமா, மனைவி, மகன்... ஆட்சி வரை தொடர்ந்தது!

- Vikatan article 

No comments:

Post a Comment