Sunday, December 8, 2013

ஆறாம் திணை - 65

சில வாசிப்புகள், நம் மனதை மிகவும் உலுக்கும். அப்படி, சமீபத்தில் என் மனதை உலுக்கிய இரண்டு புத்தகங்கள்... சங்கீதா ஸ்ரீராம் எழுதிய 'பசுமைப் புரட்சியின் கதை’ எனும் தமிழ்ப் புத்தகமும், நான்சி எழுதிய 'DEATH BY SUPERMARKET’ எனும் ஆங்கிலப் புத்தகமும். 'மாற்றுக் கருத்து பேசுபவர்கள், உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதோடு நிறுத்திவிட்டு, அறிவியல், வரலாற்றுச் செய்திகளை ஆவணப்படுத்தத் தவறிவிடுவார்கள்’ என்ற குற்றச்சாட்டைத் தகர்த்திருக்கின்றன இந்தப் புத்தகங்கள்.
'பசுமைப் புரட்சியின் கதை’, வரலாற்றுரீதியாக ஆங்கிலேயர்கள் நம் மண்ணின் வளத்தை எப்படித் திட்டமிட்டுத் தகர்த்தார்கள், அவர்களது வாழ்வியலுக்கும் வணிகத்துக்குமான களமாக மாற்ற, நம் மண்ணை எப்படியெல்லாம் சிதைத்தார்கள் என்பதைக் காட்சிகளாக கண் முன்னே நிறுத்துகிறது. 'DEATH BY SUPERMARKET’ புத்தகமோ, உணவுச் சந்தையில் கோலோச்சும் நிறுவனங்களுக்காக மட்டுமே உருவாக்கப்படும் அறிவியல் சான்றுகளையும், மிரட்டும் அதன் மறுபக்கத்தையும் தோலுரித்துக் காட்டுகிறது.
இந்திய விவசாயிகளுக்கு நவீன வேளாண் அறிவியலைக் கற்றுக்கொடுக்க, சர் ஆல்பர்ட் ஹோவர்ட் என்கிற வேளாண் விஞ்ஞானியை அனுப்பிவைத்தது அப்போதைய ஆங்கிலேய அரசு. 15 வருடங்கள் இந்தியாவின் ஈடு இணையற்ற விவசாயப் பாரம்பரிய அறிவியலைப் பார்த்துவிட்டு, 'இங்கே நான் கற்பிக்க ஒன்றும் இல்லை. கற்றுக்கொண்டதுதான் ஏராளம். உண்மையில் மேலை நாடுகள் இவர்கள் அறிவைத் தேடிக் கற்க வேண்டும்’ என்று தான் எழுதிய 'AN AGRICULTURAL TESTAMENT’ என்ற புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். காய்ப்பு உவப்பு இல்லாத அவரது ஆய்வும், தேடலும், அகங்காரம் இல்லாத மனமும்தான் அப்படி எழுத வைத்தன.
னிதனின் எந்த உதவியும் இல்லாமல், விருட்சமாக வளர்ந்து, அடர்ந்து, பசுமையாகப் பரவி, கோடிக்கணக்கான உயிரிகளுக்கு (மனிதனுக்கும் சேர்த்து!) உணவூட்டிக் கொண்டிருக்கும் காடுகள் கற்றுத்தரும் பாடத்தைப் பெற பகுத்தறிவு பத்தாது. மசானபு புகோகா தன் 'ஒற்றை வைக்கோல் புரட்சி’ என்ற நூலில் சொல்லும் நுண்ணறிவு தேவை. இந்த நுண்ணறிவு மட்டுமே பாரம்பரியத்தின் அறம் சார்ந்த அறிவியலை நமக்குப் புரியவைக்கும். ஆனால், நம் மெக்காலே கல்விமுறையும், மனப்பாடம் செய்து எழுதும் நுழைவுத் தேர்வுகளும் மாணவர்களின் நுண்ணறிவுத் திறனை அழிப்பதில் முன்நிற்கின்றன என்பது வேதனையான உண்மை.
'இந்த நுண்ணறிவைக்கொண்டு என்ன செய்ய முடியும்? பசி, பஞ்சம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதற்கான அறிவார்ந்த மனிதனின் தேடல்தானே, அதிக உணவு உற்பத்திக்கான அறிவியல்? 'வங்காளப் பெரும் பஞ்சத்தின் சோகமும் கோரமும் மீண்டும் நிகழ வேண்டுமா?’ என்று சண்டை பிடிப்பார்கள் பலர். வங்காளப் பெரும் பஞ்சத்தையும் காரணம் காட்டித்தான் இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டனர். ஆனால், அந்தப் பசுமைப் புரட்சி குறித்து, அமர்த்தியா சென் தன் 'POVERTY AND FAMINES’ என்ற புத்தகத்தில், 'இந்தப் பசி, பஞ்சம் தானாக உருவானது அல்ல; உருவாக்கப்பட்டது. ஏறத்தாழ ஒரு வருடத்துக்கான உணவு கையிருப்பில் இருந்தது. பசிக் கொடுமையால் இறந்துபோன 30 லட்சம் மக்களும் வறியவர்கள்தான். உணவுப் பற்றாக்குறையில் எந்தப் பணக்காரரும் அவதிப்பட்டதாகவோ இறந்ததாகவோ சான்று இல்லை’ என்கிறார் அவர். உணவுப் பற்றாக்குறை, மக்கள்தொகைப் பெருக்கம் என்று சொல்லப்படும் காரணங்கள் ஜோடிக்கப்படுபவையோ என்று வலுவாகச் சந்தேகிக்கவைக்கிறது.
சந்தைகள் தரும் சான்றுகள்தான் சாமானியனை மட்டுமல்ல நம் மருத்துவ உலகையும் வழி நடத்துகின்றன. சோள அவலும், ஓட்ஸ் கஞ்சியும் இங்கே பெற்றிருக்கும் வரவேற்பும், 'தேனி பக்கம் 50 ஏக்கர் இருக்கு... ஆலிவ் மரம் நட்டா வருமா சார்?’ என்பது போன்ற விசாரிப்புகளும் எனக்குள் பயத்தை விதைக்கின்றன. 'புரதம் தரும், ஈஸ்ட்ரோஜன் தரும், புற்று தடுக்கும்’ எனச் சொல்லி மருத்துவ உலகத்தால் பலமாக முன்நிறுத்தப்படும் சோயாவும் சரி, 'ஐரோப்பாவில், அமெரிக்காவில் குண்டர்களே இல்லை; இதய நோயாளியே இல்லை; அதனால் ஆலிவ் ஆயில் பயன்படுத்துங்கள்’ என நடுத்தர வர்க்கத்தில் மெள்ள மெள்ளப் புகுத்தப்படும் ஆலிவ் எண்ணையும் சரி... நம் மரபணுக்களுக்குப் பழக்கம் இல்லாதது.
ந்தைக்குச் சாதகமாக எழுதப்படும் அறிவியலில், சமீபத்தில் நாம் மொத்தமாகத் தொலைத்தது தேங்காயை. படித்த மக்களிடையே 'தேங்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் வரும்’ என்ற கருத்து பலமாக வேரூன்றப்பட்டு இருக்கிறது. எண்ணெய்வித்து கம்பெனிகள் உருவாக்கிய அந்த மாயை, மருத்துவர் வழியாக பாமரன் மண்டையில் புகுத்தப்பட்டு, 'வெள்ளைச் சட்னி வேண்டாம் சார்’ என்ற அளவில் கொண்டுசேர்த்திருக்கிறது. 'எந்த ஒரு தாவர எண்ணெயிலும் கொலஸ்ட்ரால் கிடையாது. விலங்குக் கொழுப்பிலும் பாலிலும் நெய்யிலும்தான் அது உள்ளது. மாறாக, தேங்காயும் அதன் எண்ணெயும் இதயத்துக்குப் பலம் தரும் HIGH DENSITY LIPOPROTEIN-ஐ உயர்த்தும் என்கின்றன சில ஆய்வுகள். சவலைப் பிள்ளைக்கு தேங்காய் எண்ணெயை ராகிக் கூழில் கொடுத்த பாட்டிக்கு, தேங்காய் எண்ணெயின் MEDIUM CHAIN TRIGLYCERIDES பற்றி தெரியாது. இன்றைய விஞ்ஞானம், அதே MCT-ஐ மிகவும் எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைக்கு மருந்தாகக் கொடுக்கிறது. ராகி கஞ்சி குழந்தையின் இரைப்பையைத் திடப் பொருட்களைச் செரிக்கப் பக்குவப்படுத்தும் ஓர் உணவு.
வயிற்றுப்புண், அடிக்கடி வரும் வாய்ப்புண் இவை இரண்டுக்கும் தேங்காய்ப் பால், மணத்தக்காளிக் கீரை, சிறுபயறு சேர்த்துச் செய்த குழம்பு இவை அனைத்தும் உணவு வடிவில் இருக்கும் மருந்துகள். இதில் கீரைக்குப் பதில் முருங்கைக்காய் சேர்த்துவிட்டால், அதுவே நெல்லை மாவட்டத்துப் பிரபலமான சொதி குழம்பு. வெயில் காலத்துக்கு ஏற்ற உணவான இது, நீர்ச்சுருக்கத்துக்கான மருந்தும்கூட. உடல் மெலிந்து இருக்கும் குழந்தைகள் சுவைத்துச் சாப்பிட்டு உடல் தேற, கசப்பு டானிக்குகளைக் காட்டிலும், தேங்காய்த் துருவல், பனை வெல்லம் சேர்த்த சிகப்பரிசி மாவுக்குள் பொதிந்துவைத்து, வேகவைத்து எடுக்கப்பட்ட கொழுக்கட்டை / மோதகம் பெரிதும் உதவும். 'வெர்ஜின் தேங்காய் எண்ணெய்’ எனப்படும், பிழிந்த தேங்காய்ப் பாலில் இருந்து நேரடியாக எடுக்கப்படும் எண்ணெய், இன்று உலகின் வளர்ந்த நாடுகள் அதிகம் தேடும் மருந்து. பெண்களைச் சிரமப்படுத்தும் வெள்ளைப்போக்கு, குடல் புண்கள், குழந்தைகளுக்கு வரும் கணச்சூடு... என பல நோய்களுக்கு தேங்காயில் இருந்து செய்யப்படும் மருந்துகள் சித்த மருத்துவத்தில் ஏராளம். ஆனால், கொலஸ்ட்ரால் பயத்தில் இத்தனையையும் இழந்து வருவதுதான் வேதனை!
- பரிமாறுவேன்...

No comments:

Post a Comment