Saturday, December 7, 2013

ஆ...சாமியோவ் ! - 5



உ ணவு என்றால் கண்ணீர் சொட்டும் அளவுக்குக் காரம்... டான்ஸ் என்றால் சிரஞ்சீவி மாதிரி ஃபாஸ்ட் மூவ்மென்ட்ஸ்... டயலாக் என்றால் தியேட்டரே இடிந்துவிழும் அளவுக்கு ஹை-பிட்சில் சத்தம்... இப்படி எதிலுமே உச்சத்தை விரும்பும் ஆந்திர மக்கள் ஏமாறுவதிலும் உச்சம்தான். சாமான்யனான ஒருவன் சிவ சாய்பாபா ஆன வினோதம், அந்த தெலுங்கு மண்ணில் வெகு சமீபத்தில் நடந்துள்ளது.
 ஹைதராபாத் - பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் இந்த மகானுபாவரின் ஆசிரமத்தைப் பார்த்தால் பல கோடீஸ்வரர்களே பொறாமைப்படுவார்கள். கோட்டைக் கதவுகள் மாதிரித் தோற்றமளிக்கும் பிரமாண்டமான கதவுகள் தொடங்கி, வண்ணப்பூக்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனம் வரை அந்த ஆசிரமத்தில் எல்லாமே தெலுங்கு சினிமா செட் மாதிரி பளிச் பளிச் என்று கண்ணைப் பறிப்பதுபோல இருக்கும். அவர் பெயர் சிவ சாய்பாபா.
லோக்கல் எம்.எல்.ஏ., மாநில அமைச்சர், மத்திய அமைச்சர் என்று எப்போதும் வி.ஐ.பி-க்களின் வருகையால் தனது ஆசிரமம் பரபரப்பாகவே இருக்க வேண்டும் என்பதில் சிவ சாய்பாபா குறியாக இருப்பார். இந்த அசைன்மென்ட்டை சரிவர செய்வதற்கு தனி பக்தர்கள் படையே நியமித்திருந்தார்.
வெறும் கையை தலைக்கு மேலே காற்றில் சுற்றி விபூதி வரவழைப்பது, வாயில் கையைவிட்டு மோதிரத்தைத் தருவிப்பது... என்று தந்திர வேலைகளை செய்வார். 'யோகா தெரிந்தால்தான் யோகி’ என்று பாழாய்ப்போன பக்தர்களுக்கு யார் சொல்லிவைத்தார்களோ... அந்த யோகாவில், தான் ஒரு 'அப்பாடக்கர்’ என்பதை ஊருக்கும் உலகுக்கும் நிரூபிக்க சிவ சாய்பாபா அவ்வப்போது யோகா செய்து, படுத்துவார். பாண்டி விளையாடுவதுபோல குதிகால்களால் நடந்துக்காட்டி அதற்கு 'பாபா யோகா’ என்று பச்சைக்குத்தி பறைசாற்றுவார். பள்ளிக்கூட ட்ரில் மாஸ்டர் மாதிரி கைகளையும் கால்களையும் வினோதமாக நீட்டி மடக்கி எக்ஸர்சைஸ் செய்து, பக்தர்களையும் அதேபோல செய்யச் சொல்வார். யோகாவை தப்புத் தப்பாக செய்ததாலோ, என்னவோ... பக்தர்கள் அதை புதுவிதமான யோகக்கலை என்று சுலபமாக நம்பிவிட்டார்கள். இது மாதிரி சின்னச்சின்ன வித்தைகள் எல்லாம் லோக்கல் பக்தர்களைத்தான் ஆசிரமத்துக்கு வரவழைத்ததே தவிர கூரையைப் பிய்த்துக்கொண்டு பணம் கொட்டும் அளவுக்குப் பணக்காரப் பக்தர்களையோ அல்லது டாலர்களைக் காணிக்கையாகக் கொட்டும் வெளிநாட்டு பக்தர்களையோ ஈர்க்கவில்லை. அதுவரை தன்னை சாய்பாபாவின் அவதாரம் என்று கூட்டத்தைக் கூட்டியவர் ஒரு கட்டத்துக்குப் பிறகு தன்னை சிவனின் அவதாரம் என்றே சொல்லிக்கொண்டார். சிவ சாய்பாபா என்ற அவரது பொய் பெயரின் ஆரம்பமே 'சிவ’ என்று இருந்ததும் அவருக்கு வசதியாகப் போய்விட்டது. சிவன் என்றால் அவருக்குத் தெரிந்ததெல்லாம் பாம்பு மட்டும்தான்.
பாய்ந்து வரும் காளையை ஸ்பெயின் நாட்டு வீரன் சிவப்பு துணியைக் காட்டி வெறுப்பேற்றுவானே... அதுபோல இவர் பல் பிடிங்கிய பாம்பின் முன் முட்டிக்காலிட்டு அமர்ந்து ஒரு கர்சிஃப்பை அதற்கு முன் ஆட்டுவார். ஏதோ சாப்பிட்ட கடனுக்காகப் பாம்பு படமெடுத்து ஆடும்.  ஒரு கட்டத்துக்கு மேல் களைப்பாகிப்போகும் பாம்பு, 'அடப்போய்யா!’ என்று தன் வேலையைப் பார்க்க வேறு பக்கம் திரும்பினால்... சிவ சாய்பாபா அதன் பாதையில் போய் படுத்துக்கொள்வார். பாம்பு அவர் மீது ஏறும்போது சட்டென்று எழுந்துவிடுவார். பாம்பு தப்பித்து ஓடுவதற்காக கீழே இறங்கும்... அதை தப்பிக்கவிடாமல் அவர் குனிந்து, நிமிர்ந்து சமாளிப்பதைச் சுற்றியிருக்கும் அவரது அல்லக்கைகள் 'தாண்டவம்’ என்று வியந்து பாராட்டும். சிவனுக்கும் பாம்புக்குமாவது கனெக்ஷன் உண்டு. ஆனால், சிவனுக்கும் உறுதியான பற்களுக்கும் தொடர்பு உண்டு என்று இவருக்கு யார் சொன்னதோ? தரையில் இருக்கும் ஒரு சின்ன மூட்டையைப் பற்களால் பிடித்து மேலே தூக்கி அதை அவர் தன் தோள்களில் போட்டுக்கொள்வார். இதற்கும் பரவசப்பட்டு இவரைப் போற்றி புகழ்ந்து பாடல்கள் பாடுவார்கள்.
கூட்டத்தை வரவழைப்பதற்காக சிவ சாய்பாபா இப்படி பல அல்லுசில்லு வேலைகளை செய்வதைப் பார்த்த லோக்கல் டி.வி. சேனல்கள் இவரைப் பற்றி புலனாய்வில் இறங்கியபோதுதான் இவரது பூர்வாசிரமப் பெருமைகள் வெட்ட வெளிச்சமாகின. ஆந்திரப்பிரதேசத்தின் அனந்தப்பூர் மற்றும் சித்தூர் மாவட்டங்களில் பலவிதமான கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்த பாபா... ஒரு கட்டத்தில் கர்நாடகாவுக்குத் தப்பி ஓடியவராம். யாரும் தன்னை சந்தேகிக்கக் கூடாது என்பதற்காக சாமியார் வேஷம் போட்டுக்கொண்டு அங்குள்ள ஒரு சீனியர் சாமியாரிடம் 'அப்ரசண்டி’யாக வேலைக்கு சேர்ந்த இவர், வெகு காலத்துக்குப் பிறகு சொந்த மாநிலமான ஆந்திராவில் இருக்கும் சிக்பலாப்பூர் வந்திருக்கிறார்.
தன் முதல் விசிட்டிலேயே லோக்கல் அரசியல்வாதியான ஜாலப்பாவை, சிவ சாய்பாபா மயக்கிவிட... ''இங்கேயே உங்களுக்கு ஒரு ஆசிரமம் கட்டிக் கொடுக்கிறேன்'' என்று சொல்லிவிட்டு சொன்னபடியே கட்டியும் கொடுத்துவிட்டார். மற்றபடி இவருக்கும் புட்டப்பர்த்தி சாய்பாபாவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. பாபாவின் பெயரை வைத்து, காசு பண்ண முயற்சி செய்திருக்கிறார் என்பதையும் டி.வி. சேனல்கள் ஆதாரத்துடன் போட்டு உடைத்தன.
தவிர சிவ சாய்பாபா லேடீஸ் மேட்டரில் ரொம்ப வீக். அதை மோப்பம் பிடித்த ஒரு டி.வி. சேனல் இந்த சாமியாரின் முகத்திரையைக் கிழிப்பதற்காக, தனது பெண் நிருபர் ஒருவரை விட்டு, அவரிடம் கொஞ்சும் குரலில் பேசவைத்தது. ''உங்களின் மகிமைகளைப் பற்றி நிறைய கேள்விப்பட்டேன். உங்கள் தரிசனத்தைப் பெற ஏங்கிக்கொண்டிருக்கிறேன்’ என்று அந்தப் பெண் நிருபர் சொன்னதைக் கேட்ட சிவ சாய்பாபா முதல் பந்திலேயே க்ளீன் போல்ட்! தான் பேசுவது செல்போனில் பதிவு செய்யப்படுகிறது என்று தெரியாமல், ''வியாழக்கிழமை சாயங்காலம் ஆறு மணிக்கு என் ஆசிரமத்துக்கு வந்து இரவு பூஜையில் கலந்துகொள். உனக்கு என்னுடைய முழு அருளும் கிட்டும்’ என்று அப்போது சிவ சாய்பாபா அழைப்பு விடுத்தார்.
சாமியார் விடுத்த அழைப்பின்படியே, ஆசிரமத்துக்கு சென்ற அந்தப் பெண் நிருபரைப் பார்த்து சிவ சாய்பாபா லிட்டர் கணக்கில் ஜொள்ளுவிட்டதுடன்... 'இன்று இரவு ஆசிரமத்தில்தான் நீ தங்க வேண்டும்’ என்று பிடிவாதமும் பிடித்திருக்கிறார். இதையெல்லாம் தான் கொண்டுபோயிருந்த ரகசிய கேமராவில் பதிவுசெய்த அந்தப் பெண் நிருபர் அங்கிருந்து கிளம்ப எத்தனித்திருக்கிறார். ஆனால் சாமியாரோ விடவில்லை. வற்புறுத்தி தனது பெட்ரூமுக்கு கொண்டுபோய் அங்கே ஒரு ஆபாசப் படத்தைப் போட்டுக்காட்டி அந்தப் பெண்ணையும் கட்டியணைக்க முயற்சி செய்திருக்கிறார். சாமியாரிடம் இருந்து தப்பித்து வெளியேறிய அந்தப் பெண் நிருபர் நேரடியாக சேனல் ஆபீஸுக்கு சென்றார். அடுத்த சில மணிநேரங்களில், 'உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக...’ சாமியார் சினிமா ஒளிப்பரப்பானது. இதைப் பார்த்து பதறிய சாமியார்... துண்டைக் காணோம்; துணியைக் காணோம் என்று அங்கிருந்து எஸ்கேப்! ஆனால் ஆந்திரப் போலீஸ் விடவில்லை. திருப்பதியில் வைத்து இவரை கைது செய்துவிட்டது. 'ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்’ என்பது இந்த சாமியாரின் வாழ்கையிலும் மெய்யானது. சாமியாரின் இந்த காமாந்தக நடவடிக்கைகளை எல்லாம் டி.வி-யில் பார்த்த சிறைக் கைதிகள்... இவர் சிறைக்குள் எங்கே போனாலும் அவரிடம் வந்து, 'சாமி வாயில கையைவிட்டு மோதிரம் எடுத்துக் கொடுங்க. காத்துல கையை ஆட்டி விபூதி வரவழைச்சு கொடுங்க’ என்று கடுப்பேத்த... ஆ... சாமி இப்போது முழி பிதுங்கிக் கிடக்கிறார்.

No comments:

Post a Comment