Thursday, December 12, 2013

ரஜினி பற்றி ரஜினி!

இது நம்ம ரஜினி படம்’ என்று தன்னை ரசிப்பவர்களையும், 'என்ன பெரிய ரஜினி படம்?’ என்று விமர்சிப்பவர்களையும் தான் நடித்த படங்களை முதல் நாளே பார்க்கத் தூண்டும் தமிழ் சினிமாவின் 'பாட்ஷா’ ரஜினிக்கு இப்போது வயசு 64. கண்டக்டர் டு சூப்பர் ஸ்டார் வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் ரஜினி குறிப்பிட்டவற்றின் தொகுப்பு இங்கே...
''சென்னை கிருஷ்ணவேணி தியேட்டர்ல 'அபூர்வ ராகங்கள்’ படத்தை முதன்முதலாப் பார்த்தேன். நான் நடிச்ச காட்சி வந்ததும் பக்கத்து சீட்டுல இருந்த குட்டிப்பொண்ணு, என்னைப் பார்த்துட்டே இருந்துச்சு. படம் முடிஞ்சு வெளியே வரும்போது என்கிட்ட ஓடிவந்து, சினிமா டிக்கெட் பின்னாடி ஆட்டோகிஃராப் கேட்டுச்சு. என் முதல் ரசிகை அந்தச் சிறுமிதான்; நான் போட்ட முதல் ஆட்டோகிஃராப் அதுதான்!''
''எனக்கும் லதாவுக்கும் திருப்பதியில் கல்யாணம். பத்திரிகை நண்பர்கள் எல்லாருக்கும் தகவல் சொல்லிட்டு, 'யாரும் கல்யாணத்துக்கு வராதீங்க. கல்யாண போட்டோ உங்க ஆபீஸ் தேடி வரும்’னு சொன்னேன். 'மீறி நாங்க வந்தா என்ன செய்வீங்க?’னு ஒருத்தர் கேட்டார். 'உதைப்பேன்’னு சொன்னேன். இப்படிச் சொன்னதுக்காக பின்னாடி ரொம்ப வருத்தப் பட்டேன்!''
''சினிமா நிகழ்ச்சிக்காக ஒருமுறை மதுரை போயிருந்தப்ப, மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போனோம். அங்கே எல்லாரும் பேர், பிறந்த நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செஞ்சாங்க. கோயில் குருக்கள் என்கிட்ட, 'உங்க நட்சத்திரம் என்ன?’னு கேட்டப்ப, 'தெரியாது சாமி’னு சொன்னேன். பின்பு, ரசிகர்கள் எனக்கு 'சூப்பர் ஸ்டார்’னு ஒரு நட்சத்திரத்தைக் கொடுத்தாங்க. அந்த நட்சத்திர ராசியை கடைசி வரை காப்பாத்தணும்னு முடிவெடுத்தேன்!''
''நான் கஷ்டப்பட்டபோதும், வசதியா இருக்கும்போதும் என்மேல ஒரே மாதிரி அன்பு செலுத்துற ராஜ்பகதூர், ஆச்சர்யமான நண்பன். ஆஞ்சநேயர் பக்கத்துல இருந்தா ராமனுக்கு அசுர பலம் சேரும். அதுபோல எனக்கு ஆஞ்சநேயரா இருந்த நண்பன் காந்தி. அவன் இறந்தது பெரிய இழப்பு!''
''சம்மர் வந்துட்டா, 'போன வருஷத்தோட இந்த வருஷம் வெயில் ஜாஸ்தி’னு எல்லாரும் புலம்புறாங்க. ஆனா, அவங்களுக்கு ஒரு வயசு ஜாஸ்தி ஆகிருச்சு. அதனால உடம்பு அந்த அனலைத் தாங்க முடியலைங்கிறதை மறந்துடு றாங்க!''
'' 'நான் யார்?’னு தெரிஞ்சுக்க எனக்குத் தனிமை தேவைப்படுது. அதனால இமயமலை போறேன். அது ரிஷிகள், முனிகள் தவம் செஞ்ச / செய்ற புண்ணிய பூமி. அங்கே 'நான் யார்?’னு என்னைச் சுலபமாக் கண்டுபிடிக்கிற வாய்ப்பு அதிகம். அதான் அடிக்கடி போறேன்!''
''இந்தம்மா மறுபடியும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனால்கூட காப்பாத்த முடியாது!''
'' 'பாபா’ படப்பெட்டிகளை அபகரித்து தகராறு செய்த ஒரு கட்சியைக் கண்டிச்சு கண்ணியமா கறுப்புக்கொடி காட்டினார்கள் என் ரசிகர்கள். அவங்களை அந்தக் கட்சிக்காரங்க அடிச்சிருக்காங்க. நான் அவங்களைப் பார்த்துக் கேட்கிறேன், 'மதுரையில இருக்குற ரசிகர்களை அடிக்கிறீங்க. சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா... என எல்லா நாட்லயும் ரசிகர்கள் கறுப்புக்கொடி காட்டுவாங்க. அப்போ என்ன செய்வீங்க?’ ''

''யானை, கீழே விழுந்தா... அதால சீக்கிரம் எந்திரிக்க முடியாது. ஆனா, குதிரை விழுந்தா டப்புனு எந்திரிச்சு முன்னைவிட வேகமா ஓடும். நான் குதிரை. சட்னு எந்திரிச்சு ஓடிக்கிட்டே இருப்பேன்!''
''சந்தனக் கடத்தல் வீரப்பன் கும்பலை அழித்துக்காட்டிய முதல்வர் ஜெயலலிதாவை, 'பராசக்தியின் மறு உருவமாகப் பார்க்கிறேன்’!''
''கமல்கூட 'அவர்கள்’ படம் நடிச்சேன். என் சீன் எடுத்து முடிச்சாச்சு. அடுத்து கமல் நடிக்கணும். அந்த கேப்ல ஷூட்டிங் ஸ்பாட்டைவிட்டு வெளியில கிளம்பினேன். அப்போ 'எங்கடா... சிகரெட் பிடிக்கக் கிளம்பிட்டியா? உள்ளே போடா... அங்கே கமல்னு ஒருத்தன் நடிச்சிட்டு இருக்கான். அவன் நடிக்கிறதைப் பார்த்துக் கத்துக்கோ’னு பாலசந்தர் சார் சொன்னார்!''
''ஒரு தடவை ஃப்ளைட்ல அமிதாப் சாரைச் சந்திச்சேன். நான் போட்டிருந்த கறுப்பு கலர் டிரெஸைப் பார்த்தவர், 'ரஜினி... உனக்கு வெள்ளை கலர் டிரெஸ் நல்லா இருக்கும்’னு சொன்னார். அதுக்குப் பிறகு ஒயிட் டிரெஸ்தான் நிறைய அணியுறேன்!''
''சிங்கப்பூர்ல ட்ரீட்மென்ட், மருந்து மாத்திரைகள் கொடுத்த டாக்டர்ஸ், 'நாங்க தர்ற மருந்துகள் நிறையப் பேர் உடம்பு ஏத்துக்காது. தவிர இவ்வளவு சீக்கிரம் யாருக்கும் க்யூர் ஆனதே இல்லை. உங்களுக்கு மட்டும் எப்படிக் குணமாகுது?’னு ஆச்சர்யமாக் கேட்டாங்க. 'நீங்க கொடுக்கிற மருந்து மாத்திரைகளைவிட என் ரசிகர்கள் பிரார்த்தனைக்கு பவர் அதிகம். அதுதான் என்னைக் காப்பாத்துச்சு’னு சொன்னேன்!''
'' 'எம்.எஸ்.வி-யைச் சந்திக்கிறதுக்கு முன்னாடி சோத்துக்கு வழி இல்லை; சந்திச்சப் பின் சோறு திங்க நேரம் இல்லை’னு வாலி சார் அடிக்கடி சொல்வார். அதுபோலதான், எனக்கு கே.பி-சார். எனக்குள்ளே இருக்கிற நடிகனை முதன்முதலாக் கண்டிபிடிச்சவர் அவர். அப்புறம்தான் உலகத்துக்குத் தெரிஞ்சேன். 'கேமிரா முன்னாடி நடி... பின்னாடி நடிக்காதே’னு அவர் சொன்னதை இப்போ வரைக்கும் கடைப்பிடிச்சிட்டு வர்றேன்!''
'நீங்கள் நினைத்த இடத்தை அடைந்துவிட்டீர்கள். இனி ரிலாக்ஸ்தானே?’ என்ற கேள்வியை ரஜினியிடம் எப்போது கேட்டாலும், ''இல்லை. இப்பவும் போராடிட்டுத்தான் இருக்கேன். ஆரம்பத்தில், இந்த அந்தஸ்தை அடையப் போராடினேன். இப்போ அந்தப் புகழுக்குக் களங்கம் வராமக் காப்பாத்தப் போராடிட்டு இருக்கேன். அப்பவும், இப்பவும்... எப்பவும் நமக்குப் போராட்டம்தான்!'' என்பார்.

No comments:

Post a Comment