Saturday, December 7, 2013

ஆ...சாமியோவ் ! - 4



பகவான் கிருஷ்ணர் அவதரித்ததாக மக்கள் வழிபடும் திருத்தலம் மதுரா. டெல்லியில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கிருஷ்ண ஜன்ம பூமி. அதை ஒட்டி பிருந்தாவன், கோவர்தன்... என்று கிருஷ்ணரோடு தொடர்புகொண்ட ஏராளமான புண்ணியத் தலங்கள். 
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு, இந்தப் புனித நகரம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அதிர்ச்சிக்கு உள்ளானது. ஓர் உல்லாச சாமியார் ஏற்படுத்திய உலுக்கல் சம்பவம் அது.
'நாராசமான அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு இறை நம்பிக்கை கொண்ட பக்தர்கள் பலரும் கோபம் கொப்பளிக்க வீதிகளில் குவிந்தனர். 'பகவத் ஆச்சார்யாவை கைதுசெய்’ என்று விலா எலும்பு புடைக்க அடிவயிற்றில் இருந்து குரல் எடுத்து கோஷங்கள் எழுப்பினர். அவரின் உருவபொம்மையை எரித்தனர்.
மதுரா மட்டுமல்லாது பிருந்தாவன், கோவர்தன்... என்று எல்லா ஊர்களிலும் போலீஸார் வந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தப்பட வேண்டிய அளவுக்குச் சூழ்நிலை மோசமாகியது. இத்தனைக்கும் அவர்கள் கைதுசெய்ய சொன்ன பகவத் ஆச்சார்யா ஒரு பக்திப்பழம். அந்த நிமிஷம் வரை 'சுவாமிஜி’ என்று இவர்கள் கையெடுத்து வணங்கிய ஒரு ஆன்மிகக் கடல். பக்தி மனத்தைப் பரப்பும் தனது உபன்யாசங்களால் மதுரா நகரைப் பரவசப்படுத்தியவர். பகவானின் புகழைப் பாடும் கீதா உபாசகர்.
என்ன நடந்தது?
மதுரா நகரத்தில் மூண்ட இந்தக் கலவரத்துக்குக் காரணம், இணையதளங்களில் வெளியான வீடியோ க்ளிப்ஸ். அந்த வீடியோக்களில் சுவாமிஜி பிரேம நிலையில் ஒரு பெண்ணை ஆலிங்கணம் செய்யும் காட்சிகள் துவங்கி, சிருஷ்டி வித்தைகள் வரை இடம் பெற்றிருந்தன. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் அந்த அந்தரங்கக் காட்சிகளில் சுவாமிஜியோடு இருந்தது வேறு யாருமல்ல; அவரது மனைவி!
அவர் தன் சொந்த மனைவியோடு ஆலிங்கணம் செய்தால் அதற்கு மக்கள் எதற்குக் கொந்தளிக்க வேண்டும்?
விஷயம் இருக்கிறது. அந்த வீடியோ அத்தோடு முடிந்திருந்தால் சுவாமிஜியின் மீது மக்களுக்கு அனுதாபம்தான் உருவாகியிருக்கும்.
மேலும் அவர் 'பகவத் ஆச்சாரியா’ என்ற பெயரில் உபன்யாசகராக வலம் வந்தாலும் 'முற்றும் துறந்த துறவி’ என்று இவர் தன்னை என்றைக்குமே தம்பட்டம் அடித்துக்கொண்டது இல்லை. இல்லறத்தில் நல்லறம் காண்பவராகவே தன்னைச் சித்திரித்தார். 'இவரது பொல்லாத காலம். இவரது அந்தரங்கத்தை யாரோ விஷமிகள் படமெடுத்து அசிங்கப்படுத்திவிட்டார்கள்’ என்று இவர் மீது பரிதாபம் ஏற்பட்டு, அதை வெளியிட்ட பாவி யார் என்று தேடியிருப்பார்கள்.
'ஆசாபாசங்களைக் கடந்த நிர்வாண நிலை’ குறித்து உபதேசிக்கும் இந்த சுவாமிஜி இடம்பெற்றிருந்த அந்த வீடியோவில் இவரும், இவரது மனைவியும் மட்டும் இடம்பெற்றிருக்கவில்லை. இவர்களோடு ஒரு சில வெளிநாட்டவர்களும் நிர்வாண நிலையில் இருந்தனர். இந்த வீடியோவைப் பார்த்த போலீஸார், 'கலி முற்றிவிட்டது’ என்று தலையில் அடித்துக் கொண்டு விட்டுவிட நினைத்தார்கள்.
சரசங்களையும் சல்லாபங்களையும் தாண்டி பகவத் ஆச்சாரியாவிடம் இருந்த விபரீதமான திட்டங்களையும் போலீஸார் அந்த வீடியோவில் மோப்பம் பிடித்தனர். யமுனை நதிக்கரையில் கோபியர்களோடு பகவான் கிருஷ்ணர் ராசலீலையில் ஈடுபட்டதாகப் புராணங்களில் இடம்பெறும் ஷேத்திரங்களை எல்லாம் தனியாகப் படம்பிடித்து பகவத் ஆச்சார்யா தனது வீடியோவில் சேர்த்திருந்தார். அதோடு நடுநடுவே ராதா - கிருஷ்ணனின் காதல் சொட்டும் சாகா வரம்பெற்ற ஓவியங்கள், மதுராவின் புனிதமான கோயில்கள்... என்று அந்த வீடியோவை பல்சுவை சிறப்புடன் படைத்திருந்ததுதான் போலீஸாருக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.
தனிப்பட்ட முறையில் வக்கிர புத்தியில் விளைந்த வீடியோ அல்ல அது. வியாபாரம். இணையதளத்தில் வைத்து வெளிநாட்டவர்களுக்கு விற்பனைசெய்ய பல மானங்கெட்ட மார்கெட்டிங் தந்திரங்களையும் பகவத் ஆச்சார்யா கையாண்டிருந்தார். விஷயம் அம்பலமானபோது போலீஸாரே அதிர்ந்தனர்.
பகவத் ஆச்சார்யாவின் அடுத்த வீடியோ அதைவிட 'பகீர்’ ரகம். இதில் தனது மனைவி, வெளிநாட்டவர் என்று நிறுத்திக் கொள்ளாமல் வக்கிர ஆசை பிடித்த இன்னொரு கூட்டத்திடம் தனது வீடியோக்களை மார்கெட்டிங் செய்ய, பகவத் ஆச்சார்யா சில சிறுவர்களையும் தங்களின் களியாட்டத்தில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியிருந்தார். அது போலீஸாருக்கு மட்டுமல்ல, ஊருக்கே உச்சிமண்டை வரை கோபம் ஏற்றியது.
போலீஸாரோடு சேர்ந்து ஊரே கொலைவெறியோடு வலை வீசித் தேடியது. தனது பாவத்துக்கு என்ன சம்பளம் கிடைக்கும் என்று தெரிந்துகொண்ட பகவத் ஆச்சார்யாவும் அவரது மனைவியும் மந்திரம் போட்டதைப் போல தலைமறைவாயினர்.
போலீஸ் சளைக்கவில்லை. ஊராரும் பகவத் ஆச்சார்யாரின் உற்றார், உறவினர், நண்பர்கள்... என்று தங்களுக்குத் தெரிந்த அத்தனை தகவல்களையும் தொடர்ந்து போலீஸாருக்குச் சொல்லி உஷார்படுத்தினர். 'இனிமேல் ஓடுவதற்கோ, ஒளிவதற்கோ இடமில்லை’ என்பதைப் புரிந்துகொண்ட பகவத் ஆச்சார்யா போலீஸ் தன்னைக் கைதுசெய்வதற்கு முன் தன் மனைவியைவிட்டு ஒரு புகார் கொடுப்பது என்று முடிவுசெய்தார்.
''தனிப்பட்ட முறையில் நான் சில வீடியோ பதிவுகளை எடுத்து வைத்திருந்தேன். இந்த வீடியோ பதிவுகள் இருந்த என் கம்ப்யூட்டரைப் பழுதுபார்க்க சர்வீஸ் சென்டரில் கொடுத்திருந்தேன். அங்கே சிலர் கம்ப்யூட்டரில் இருந்த என் அந்தரங்க வீடியோக்களைத் திருடியதோடு, 10 லட்ச ரூபாய் கேட்டு பிளாக் மெயில் செய்தனர். நான் பணம் கொடுக்காததால் அதை அவர்கள் இணையதளங்களில் வெளியிட்டு என்னை அவமானப்படுத்திவிட்டார்கள். அதுமட்டுமல்ல.
எங்களது தனிப்பட்ட வீடியோவில் அவர்கள் வேறு சில காட்சிகளையும் கிராஃபிக்ஸ் மூலம் தந்திரமாகச் சேர்த்து எங்களை வேறு பல பழிகளுக்கும் ஆளாக்கிவிட்டனர். அதனால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' - இப்படி ஒரு புகாரை தன் மனைவியைவிட்டு, போலீஸிடம் கொடுப்பதற்காக பகவத் ஆச்சார்யா தன் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டபோது போலீஸார் முந்திக்கொண்டு அவரையும் அவரது மனைவியையும் அவருக்கு உதவிய வெளிநாட்டவர்களையும் கைது செய்தனர்.
விசாரணையின்போது பகவத் ஆச்சார்யா தன் உண்மையானப் பெயர் ராஜேந்திரா என்றும் தான் ஒரு பெயின்டர் என்றும் வாக்குமூலம் அளித்ததோடு... ''என்னை ஏதோ ப்ளூ ஃபிலிம் பார்ட்டி என்று சாதாரணமாக எடைப்போட்டுவிடாதீர்கள். இணையதளத்தில் பலவிதமான 'பலான’ வீடியோக்கள் கடைவிரித்துக் கிடப்பதால்... தனித்துவம் காட்டினால் மட்டுமே பலான வீடியோக்களை சந்தைப்படுத்த முடியும். அதனால் இந்தத் தொழிலில் டாலர்கள் பார்க்க வேண்டும் என்றால் மார்க்கெட்டிங் தெரிந்திருக்க வேண்டும். அதனால்தான் கிருஷ்ணர் கோபியர் என்று சுவாரஸ்யப்படுத்தினேன்'' என்று ஆரம்பித்து சைபர் செக்யூரிட்டி, சர்வதேச காபி ரைட் சட்டம், அந்நிய செலாவணிச் சட்டம், நிதி நிர்வாகம்... என்று பல விஷயங்களைப் பற்றி டீடெய்லாக விளக்கியிருந்தார்.
காசு ஆசை கடவுளர்களையும் கொச்சைப்படுத்தத் தயங்காது என்பதற்கு பகவத் ஆச்சார்யா ஒரு பக்பக் உதாரணம்.

- Vikatan Article

No comments:

Post a Comment