Saturday, January 4, 2014

ஆ... சாமியோவ்! 11

நன்கு படித்த, ஓரளவுக்கு உலகம் தெரிந்த பலரே... கஷ்டம் என்று வரும்போது ஏமாற்றுக்காரர்களின் வலைகளில் வீழ்ந்துவிடுகிறார்கள். அதனால், சாதாரண மொக்கை சாமியார்களால்கூட பல சமயங்களில் எழுதப்படிக்கத் தெரியாத ஜனங்களின் தலையில் மிளகாய் அரைத்துவிட முடிகிறது. ஏமாறுவதற்கு மக்கள் தயாராக இருக்கும்போது, ஏமாற்றுவதற்கு இந்த சாமியார்களுக்கு பெரிய புத்திசாலித்தனம் தேவைப்படுவது இல்லை. இதற்கு சமீபத்திய உதாரணம் காலியா பாபா.
 ஒடிசாவில் புதிதாக உதயமாகி இருக்கும் ஆங்கூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காலியா பாபா. மாநிலத்தின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த மாவட்டத்தில் மகாநதி பாய்கிறது என்றாலும், அங்கே பூமிப்பரப்புக்கு மேலே இருக்கும் செழுமையையும் செல்வத்தையும்விட, பூமிக்கு அடியில் இருக்கும் தாதுப்பொருட்களில் மறைந்திருக்கும் செல்வம்தான் அதிகம். ஆனால் அந்த ஊர் மக்களுக்கோ, மண்ணே பொன்னாக இருப்பது தெரியாது. அதனால், ஏழ்மை அங்கே ஆதார் அட்டை வாங்கி நிரந்தரமாகக் குடியமர்ந்திருக்கிறது. நீர் முதலைகள் நிறைந்த நீர்பரப்புகளைக் கொண்ட ஆங்கூலில், காலியா பாபா போன்ற நிஜ முதலைகளும் அதிகம்.
'ஒரு சாமியார் என்றால் எப்படி இருக்க வேண்டும்?’ என்றுகூட தெரியாதவர்தான் காலியா பாபா. பார்ப்பதற்கு ஏறக்குறைய நம் ஊர் காமெடி நடிகர் செந்தில் மாதிரிதான் இருக்கிறார். ஊரார் சொத்தை சாப்பிட்டு வளர்த்த தொப்பை, இவருக்கு ஒரு அடி வரை நீண்டிருக்கிறது. இவர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், இவரது ஆசிரமத்தில் நடக்கும் தீர்த்த யாத்திரை என்ற ஆன்மிகம் தவழும் நிகழ்ச்சியை ஒருமுறை பார்த்தால் போதும்.
தீர்த்த யாத்திரை என்றால் ஏதோ டாஸ்மாக் சமாசாரம் என்று நினைத்துவிடக் கூடாது. காலியா பாபா சத்தியச் சந்திராவாக இந்தப் பூவலகில் அவதரித்த திருநாளாம் அது. அதாவது, 58 வயதாகும் காலியா பாபா, இந்த வயதிலும் ஹேப்பி பர்த்டே கொண்டாடுகிறார். அப்போது ஆசிரமத்தைச் சுற்றி நடத்தப்படும் தீர்த்த யாத்திரையில், தலையில் பால்குடத்தை சுமந்தபடி பெண்கள் வருவார்கள். திருப்பதி திருமலை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து புறப்படும் திருக்குடை ஊர்வலத்துக்கு குறைவில்லாத விமரிசையோடு நடக்கும் இந்த ஊர்வலத்தில், தாரை தப்பட்டைகள் காதைக் கிழிக்கும். 'கண்ணன் பிறந்தான், எங்கள் மன்னன் பிறந்தான், மனக் கவலைகள் மறைந்ததம்மா!’ என்ற பாடல் பாணியில் இவரது சிஷ்ய கோடிகள் அந்த ஊருக்கே உரிய அத்தனை ஆட்டம் பாட்டங்களோடும், கோலாட்டங்கள் போட்டபடி இத்துப்போன இந்தக் காலியா பாபாவை அழைத்துக்கொண்டு ஊர்வலம் செல்வார்கள்.
''எல்லா புகழும் எனக்கே எனக்கே!'' என்று அலையும் முகபாவனையோடு ஊர்வலத்தில் நடுநாயகமாக, கையில் புல்லாங்குழலோடும், கறுநீல வண்ணத்தில் இருக்கும் வெற்றுடம்பில் மின்னும் ஆபரணங்களோடும், தலையில் கீரிடத்தைப்போல கட்டப்பட்டிருக்கும் ஜரிகை வைத்த தலைப்பாகையுடனும் கிருஷ்ணன் வேடம் தரித்து காமெடியாக டான்ஸ் ஆடிக்கொண்டே வருவார் காலியா பாபா. ஒரு கட்டத்தில் இவரது பரமாத்ம சிஷ்யைகள் சிலருக்கு பக்தி முற்றிப்போகும். அவர்கள் டைட் கிளோஸ்-அப்பில் காலியா பாபாவைச் சுற்றி வந்து கோபியர் பாவனைக் காட்டி ஆடுவார்கள். அந்த ஷணம் பகவான் கிருஷ்ண பரமாத்மாவே தனக்குள் புகுந்துவிடுவதாக கதை கட்டுவார் காலியா பாபா. சுற்றியிருக்கும் பக்தைகளை எல்லாம் பிருந்தாவனத்தின் கோபியர்களாக பாவித்து ராசலீலை ததும்பும் நடனம் புரியத்தான் இப்படி ஒரு கட்டுக்கதை.  க்ளைமாக்ஸ் ஊர்வலம் ஆசிரமத்தை அடைந்த பிறகுதான் சூடுபிடிக்கும்.
தலையில் பால் குடம் வைத்திருக்கும் 'கோபியர்கள்’ எல்லாம் ஆசிரமத்துக்குள் வரிசையாக செல்ல... காலியா பாபாவின் அடுத்த கட்ட ராசலீலை ஆரம்பிக்கும். வீதியில் நடந்த கோலாட்டத்தைவிட ஆசிரமத்தின் உள்ளே கோலாட்டம் வேகம் எடுக்கும். பாடல்கள் ஹை டெசிபலில் முன்னைவிட வேகம் எடுக்கும். கோபிகாஸ்திரீகளாக மாறி பக்தைகள் எல்லோரும் ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டு வட்ட வட்டமாக எதிரும் புதிருமான திசைகளில் பார்க்கிறவர்களுக்கே தலைசுற்றும் அளவுக்கு தன்னைச் சுற்றிவந்து ஆடச்சொல்வார் காலியா பாபா. ஒரு கட்டத்தில் கையில் இருக்கும் புல்லாங்குழலை தூர வீசிவிட்டு, கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் பக்தைகளுடன் காலியா பாபா கைகோத்து ஆடுவார். காலியா பாபாவுக்கு வயது வித்தியாசம் கிடையாது. பக்தைகளுக்கு பிடிக்கிறதோ, இல்லையோ... அவர்களை வலுக்கட்டாயப்படுத்தியாவது ஓரிரு நிமிடங்கள் காலியா பாபா டான்ஸ் ஆடிவிடுவார்.
அதன் பிறகுதான் காலியா பாபாவின் ரியல் அட்டாக் ஆரம்பமாகும். இதுவரை ஸ்ரீகிருஷ்ணனாக இருந்தவர், இப்போது பாலகிருஷ்ணனாக மாறுவார். கைகோத்து ஆடிக்கொண்டிருக்கும் பக்தைகளின் இடுப்பில் பாலகன் கிருஷ்ணனாக தன்னை பாவித்துக்கொள்ளும் காலியா பாபா, ஒரே ஜம்ப்பாக ஏறி உட்கார்ந்துவிடுவார். இடுப்பில் இருந்து கீழே விழுந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதால், பக்தைகளை கரடியைபோல இறுக்கமாகக் கட்டிப் பிடித்துக்கொண்டு அவர்களின் முகத்துக்கு அருகே தன் முகத்தைக் காட்டி பயமுறுத்தி விளையாடுவார். பக்தைகள் பலரும் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், யாராவது பக்தைக்கு சந்தேகம் வந்து கோபத்தில் புடவையை இழுத்து இடுப்பில் சொருகினால், 'தங்கச்சி’ என்று தடாலடியாக காலியா பாபா சரண்டர் ஆகிவிடுவார்.
கிருஷ்ணனாக மட்டும் தன்னைக் காட்டிக்கொண்டால் சிவபக்தைகள் தன் ஆசிரமத்துக்கு வராமல் போய்விடுவார்களோ என்ற பயத்தில் காலியா பாபா அவ்வப்போது சிவதாண்டவமும் ஆடுவார். அப்போது பக்கத்தில் இருக்கும் பக்தைகள் எல்லாம் அவருக்கு பார்வதி தேவியாகத் தெரிவார்கள். இவரின் ருத்ரதாண்டவத்தை காமெடி சேனல்களில் ஒளிபரப்பினால், டி.ஆர்.பி. ஒரே ஜம்ப்பாக உயர்வது நிச்சயம். பக்தைகளுக்கு பிராக்கெட் போடுவதற்கென்றே இவர் ஒரியா மொழியைத் தாண்டி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளும் தெரிந்துவைத்திருக்கிறார். பெரும்பாலும் காமெடி சாமியாராகத் தெரியும் இந்த காலியா பாபா, சிறுமிகளின் தோள்களில் கை போட்டுக்கொண்டு இருக்கும் விடியோ காட்சிகள் திகிலைக் கிளப்புகின்றன.
சமீபத்தில் பிரமணி தேவி என்கிற பெண்மணி அந்த ஊர் போலீஸ் நிலையத்துக்கு காலியா பாபா பற்றி ஒரு புகாருடன் சென்றார். ''நான்கு பிள்ளைகளைப் பெற்ற பெண் நான். அடைக்கலம் தேடி அந்த ஆசிரமத்துக்குச் சென்றேன். என்னை இந்த சாமியார் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார். விஷயம் வெளியே தெரிந்தபோது ஆசிரமத்தில் இருந்த அவரது சிஷ்யர்கள் என்னிடம் நைஸாகப் பேசி கருக்கலைப்பு செய்துவிட்டார்கள். ஆகவே, காலியா பாபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பிரமணி தேவி அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
வெளியூரில் இருந்து வருகிறவர்கள் யாராவது, ''என்னய்யா இது வெட்ககேடு. இப்படிப்பட்ட சாமியாரை எப்படி ஊருக்குள்ளே விட்டுவெச்சிருக்கிங்க?'' என்று காலியா பாபாவின் ஊர்காரர்களைப் பார்த்து கேட்டால், ''என்னங்க பண்றது? அது புத்தி வளர்ச்சி இல்லாத சாமிங்க. என்ன பண்றதுன்னே புரியலை’ என்று புது வியாக்கியானம் கொடுக்கிறார்கள் அந்த ஊர் அப்பாவிகள். அவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை என்று கேட்டால், அந்த ஊர் போலீஸும் இதையேதான் காரணமாகச் சொல்கிறது!
-Vikatan article

No comments:

Post a Comment