Thursday, January 30, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 17

இந்திராவும் சஞ்சயும் சேர்ந்து இந்திய அரசியலின் ஸ்திரத்தன்மையையே குலைத்தார்கள். எப்போதும் ஆட்சியையும் அரசாங்கத்தையும் கொதிநிலையிலேயே வைத்திருந்தார்கள். தன்னுடைய ஆசைகளை பூர்த்திசெய்யாத அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாத அல்லது, விமர்சனம் செய்யக்கூடியவர்களை நினைத்த நேரத்தில் கழுத்தறுத்து வீட்டுக்கு அனுப்புவதும்... தகுதியற்ற, தலையாட்டிப் பொம்மைகளை கொண்டுவந்து பதவிகளில் உட்காரவைப்பதுமான துக்ளக் தர்பார் இந்தக் காலகட்டத்தில்தான் தொடங்கியது.
 கட்சியில் உருவான சர்வாதிகாரப் பாணிக்கு ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். ஒன்றிரண்டு மட்டும் இங்கே...
அப்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்துகொண்டு இருந்தது. மூன்று காங்கிரஸ் கோஷ்டிகள் இருந்ததால், மாநில ஆட்சி நிம்மதியை இழந்தது. அப்போது இந்திராவும் சஞ்சயும், கமலாபதி திரிபாதியை முதலமைச்சராக உள்ளே புகுத்தினார்கள். சில மாதங்களில் கமலாபதி திரிபாதியையும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆட்சியையே கலைத்துவிடலாம் என்று முடிவெடுத்தார்கள்.
உ.பி. மாநில அமைச்சரவைக் கூட்டம் உலக அதிசயமாகவும் ரகசியமாகவும் டெல்லியில் கூடியது. காங்கிரஸ் ஆட்சியைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவரலாம் என்று மேலிடம் கூறியதை அமைச்சர்கள் ஏற்கவில்லை. காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதே என்று அமைச்சர்கள் சொன்னார்கள். 'நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது இல்லை’ என்று கமலாபதி திரிபாதியும் வெளிப்படையாக (10.6.1973) அறிவித்தார். அதற்கு இரண்டு நாட்கள் கழித்து உ.பி. ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
''அரசியல் சட்டத்தில் உள்ள விதிகள், காங்கிரஸ் கட்சியின் நலனுக்காகவும் தனிப்பட்டவர்களின் அக்கறைக்காகவும் முறைதவறிப் பயன்படுத்தப்பட்டது'' என்று இந்துஸ்தான் டைம்ஸ் எழுதியது.
இது உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டுமல்ல... பல மாநிலங்களில் நடந்தது. தனக்குப் பிடிக்காத மாநில முதலமைச்சர்களைக் கட்டாயப்படுத்தி, பதவியில் இருந்து இறக்கினார் இந்திரா. ஆந்திர மாநில முதலமைச்சர் பிரமானந்த ரெட்டி, மத்தியப்பிரதேச முதலமைச்சர் சுக்லா, அசாம் முதல்வர் சவுத்ரி, ராஜஸ்தான் முதல்வர் சுகாதியா ஆகியோர் கேள்வி கேட்பார் இல்லாமல் பதவியில் இருந்து இறக்கப்பட்டார்கள். அவர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் செல்வாக்கும் இருந்தது. பெரும்பான்மை உறுப்பினர் ஆதரவும் இருந்தது. அதையும் மீறி நீக்கப்பட்டார்கள் என்றால், இரண்டு காரணங்கள்.
தங்களுக்கு அடக்கமானவர்களாக அவர்கள் இல்லை என்பது ஒன்று.
இரண்டாவது, மாநிலத்தில் தங்களுக்கென இவர்கள் தனிப்பட்ட செல்வாக்கை சேர்த்துக்கொள்வது தவறு என்ற பொறாமை கலந்த எரிச்சல். இவை இரண்டும்தான் அடிப்படைக் காரணம்.
இதில் இன்னொரு கேவலம் நடந்தது. நீக்கப்பட்ட முதலமைச்சர் பதவிக்கு... அடுத்து இருக்கும் தகுதியானவரை நியமிக்காமல், தனக்கு வேண்டிய மத்திய அமைச்சர்களை பதவி விலகச் செய்து, மாநில முதலமைச்சராகக் கொண்டுவந்து பொருத்தும் காரியத்தையும் இந்திரா செய்தார். இவர்கள் எம்.எல்.ஏ-க்களாகவே இருக்க மாட்டார்கள். அதனால் என்ன... இந்திராவுக்கு வேண்டியவர்களாயிற்றே!
மத்திய அமைச்சராக இருந்த சித்தார்த்த சங்கர் ரே, மேற்கு வங்க முதலமைச்சர் ஆக்கப்பட்டார். ஓஜா, குஜராத் மாநில முதலமைச்சராகவும், சேத்தி, மத்தியப்பிரதேச முதலமைச்சராகவும், திருமதி நந்தினி சத்பதி, ஒரிஸ்ஸா முதலமைச்சராகவும் வந்து உட்கார்ந்தார்கள். இவர்கள் அனைவரும் மத்திய அமைச்சர்களாக இருந்து இந்திராவால் மாநிலங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர்கள்.
இப்படி இறக்குமதி செய்வதற்காக நடத்தப்பட்ட நாடகங்களும் அபத்தமானவை.
குஜராத் முதல்வராக ஓஜாவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தத் தேர்தலை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து மத்திய அமைச்சர் சர்தார் ஸ்வரண்சிங் குஜராத் வந்தார். வாக்கெடுப்பு நடந்தது. ஓஜாவுக்கு அதிக வாக்குகள் ஒருவேளை விழாமல் போயிருந்தால், அது இந்திராவுக்கு அவமானமாக ஆகிவிடும் என்பதால், வாக்குப்பெட்டியை டெல்லிக்கு கொண்டுபோகச் சொன்னார் ஸ்வரண்சிங். இதனை டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்குக் கொண்டுபோனாலும் பரவாயில்லை. மத்திய அரசாங்கத்தின் செயலகங்கள் இருக்கும் 'சவுத் பிளாக்’ எடுத்துச் சென்று வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகத்தில் கொண்டுபோய் வைத்தார்கள். அங்கு வாக்கு எண்ணிக்கை நடந்தது. ஓஜா 'வெற்றிபெற்றதாக’ அறிவிக்கப்பட்டார்.
இப்படி இறக்குமதி செய்யப்பட்ட ஓஜாவால், குஜராத் மாநில முதலமைச்சராக நீடிக்க முடியவில்லை. அவரால் அந்த மாநில மக்களையும், கட்சியையும் திருப்திப்படுத்த முடியவில்லை. தகுதியற்றவர் என இந்திராவால் அவரே கருதப்பட்டார். ஓஜாவை நீக்கிவிட்டு சிம்மன்பாய் படேலை முதலமைச்சர் ஆக்கினார் இந்திரா. குஜராத்தில் உணவுப் பஞ்சம் தலைதூக்கியபோது முதல்வர் சிம்மன்பாய் படேல், பிரதமர் இந்திரா ஆகிய இருவராலும் எதுவும் செய்ய முடியவில்லை. 'என்னுடைய ஆட்சியைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள்’ என்று ஒரு மாநில முதலமைச்சரே கோரிக்கை வைக்கும் இழி சூழ்நிலையை சிம்மன்பாய் படேல் உருவாக்கினார். இதனை ஏற்றுக்கொள்வதைத் தவிர இந்திராவுக்கு வேறுவழி இல்லை. குடியரசுத் தலைவர் கட்சியும் அமலானது. ஜனநாயக நெறிமுறைகளோடு சேர்ந்து சிம்மன்பாய் படேலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன் விருந்தாளியாக இருந்தவர், திடீரென வெறுப்பாளி ஆனார்.
குஜராத் மாநிலத்தை ஓஜாவால் சரிக்கட்ட முடியவில்லை என்பதைப் போலவே, மத்தியப்பிரதேசத்தில் சேத்தி அதிக மாதங்கள் நீடிக்கவில்லை. ஒரிஸ்ஸாவில் நந்தினி சத்பதி விரைவில் பதவி விலகிவிட்டார். மீண்டும் இந்த மாநிலத்தில் பொதுத் தேர்தல் வந்தது.
சொந்த செல்வாக்குப் படைத்தவர்கள் மாநிலங்களில் வளர்ந்துவிடக் கூடாது என்று நினைத்தார்கள். அதனாலேயே எந்தச் செல்வாக்கும் இல்லாத மனிதர்களை முதல்வர்களாகப் புகுத்தினார்கள். இப்படி புகுத்தப்பட்டவர்களால் எந்தப் பயனும் இல்லை. கட்சிக்கும் கெட்ட பேர். ஆட்சியும் பறிபோனது. இந்திரா, சஞ்சய் ஆகியோரின் ஈகோ திருப்தி ஆனது மட்டும்தான் மிச்சம். இந்த எடுத்தேன், கவிழ்த்தேன் போக்கு இன்றுவரை தொடர்கிறது. மாநில முதலமைச்சர்களை நீக்குவது, கட்சியின் மாநிலத் தலைமையைப் பந்தாடுவது ஆகியவைதான் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்குப் பெருந்தடையாக அன்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலேயே இவ்வளவு பந்தாட்டம் என்றால், காங்கிரஸ் அல்லாத மாநிலங்களின் நிலைமை பற்றி கேட்கவே வேண்டாம்.
நேரு பிரதமராக இருந்தபோதே கேரள ஆட்சியைக் கலைத்த முன் அனுபவம் இந்திராவுக்கு இருந்தது. இப்போது அவர் கையில் முழு அதிகாரம் இருக்கும்போது, கேட்கவும் வேண்டுமா?
1966 ஜனவரி 24-ம் நாள் பிரதமராகப் பொறுப்பேற்றது முதல் 1977 வரை தான் ஆட்சி செய்த 10 ஆண்டு காலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை 29 முறை கலைத்தவர் இந்திரா. உ.பி-யில் நான்கு முறை ஆட்சிக் கலைப்பு நடந்தது. பஞ்சாப், மேற்குவங்கம், குஜராத், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களில் மூன்று முறை ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1976 ஜனவரி 30 தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டது,
இது, மாநில ஆட்சிகளை மதிக்காமல், மத்தியில் ஒற்றையாட்சி ஒன்றை உருவாக்கும் காரியம். இதனை கூச்சமில்லாமல் இந்திரா செய்தார். எல்லாவற்றையும் பிரதமரே செய்ய வேண்டும் என்ற சர்வாதிகாரமும், தான் நினைத்ததே கட்சியில், ஆட்சியில், மாநிலங்களில் அமலாக வேண்டும் என்ற எதேச்சதிகாரமும் தலைவிரித்தாடியது.
''அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும். அதிக அதிகாரம், அதிக ஊழலுக்கு வழிவகுக்கும்'' என்ற மொழிக்கு ஏற்ப... லஞ்சமும் முறைகேடும் ஊழலும் இந்தக் காலகட்டத்தில் எங்கெங்கு காணினும் தென்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மிகமிகச் சாதாரணத் தொண்டரான துல்மோகன் ராம், இந்தியப் பிரபலம் ஆனது ஊழலால்தான்.
மிகச் சாமான்யரான துல்மோகன்ராம், எப்படியோ அமைச்சர் எல்.என்.மிஸ்ராவின் அன்பைப் பெற்றுவிட்டார். இல்லாத ஒரு நிறுவனத்துக்கு துல்மோகன் ராம் சொன்னார் என்பதற்காக ஏராளமான சலுகைகளை எஸ்.என்.மிஸ்ரா வழங்கினார். இது ஒருசில நாட்களில் வெளிச்சத்துக்கு வந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் துளைத்தெடுத்தன.
இன்று எந்தப் பிரச்னை என்றாலும் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து கூச்சல் போடுவது, அனைவரும் சபாநாயகர் இருக்கைக்கு ஓடி வருவது, அவரை கெரோ செய்வதைப் பார்க்கிறோம் அல்லவா? இந்தக் காட்சி இந்திய நாடாளுமன்ற வரலாற்றின் முதன்முதலாக துல்மோகன்ராம் விஷயத்தில்தான் அரங்கேறியது. இவ்வளவையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருந்த இந்திரா சொன்னார்: 'ஊழல் என்பது உலகம் எங்கும் காணப்படுவதுதான்.’ அனைவரையும் அதிரவைத்த வாக்குமூலம் இது.
தி கார்டியன், தி ஸ்டேட்டஸ் மேன், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய ஏடுகளில் தொடர்ந்து எழுதிவந்த இந்தியாவின் மூத்த பத்திரிகையாளார்களில் ஒருவரான இந்தர் மல்ஹோத்ரா, இந்திரா பற்றிய தனது நூலில் எழுதினார்....
''கட்சிக்கு நிதி வசூலிப்பது என்ற போர்வையில் ஊழல் மலிந்தது. பெரும் தொழில் நிறுவனங்கள் தாம் சார்ந்திருந்த சுதந்திரா கட்சிக்குத்தான் நன்கொடை வழங்குவார்கள் என்று அஞ்சியபோது, லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த காலத்தில், அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் நன்கொடை வழங்குவதை காங்கிரஸ் அரசு தடை செய்திருந்தது. அதன் விளைவாக அரசியல் கட்சிகளுக்கும் பண முதலைகளுக்கும் இடையே பெருமளவு கறுப்புப் பணம் புழங்கியது. பணமே குறிக்கோளாகக் கொண்டவர்களுக்கு அது வரப்பிரசாதமாயிற்று. ஆரம்பத்தில் வசூலாவதில் ஒரு சிறு பங்கை மட்டும் ஒதுக்கிக்கொண்டவர்கள், மெள்ள மெள்ள பெரும்பான்மையினரான பங்கைத் தாமே அமுக்கிக்கொண்டனர். பலராலும் மதிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய், 'பிரதமரின் எடுபிடிகள் டன் கணக்கில் கறுப்புப் பண வசூலில் ஈடுபட்டார்கள்’ என்று நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இந்திராவின் கட்சிக்காக நிதி வசூலித்தவர்களில் முதன்மையானவரான லலித் நாராயண் மிஸ்ராவுக்கு 'ரொக்கப்பண நாராயணன்’ என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது. நீண்டகாலம் பிரதமராக இருந்த நேரு, கட்சிக்கு நிதி வசூலிப்பதிலும் அதனை விநியோகிப்பதிலும் எந்த விதத்திலும் சம்பந்தப்பட்டிருந்தது இல்லை. ஆனால், பிரதமரின் இல்லத்துக்குக் கட்டுக்கட்டாக ரூபாய்களை நிரப்பிய பணப்பெட்டிகளை வருவிப்பது இந்திராவின் தலைமைப் பணிக்குத் தேவையாக இருந்தது!'' என்று எழுதி இருக்கிறார்.
1975 தொடக்கத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் இந்த லலித் நாராயண் மிஸ்ரா என்ற எல்.என்.மிஸ்ரா பேசிக்கொண்டு இருந்தார். மேடைக்கு கீழே புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து, அந்த இடத்திலேயே மிஸ்ரா இறந்துபோனார். இந்த சாவில் பல மர்மங்கள் உண்டு. இந்திராவுக்கு எதிரான அரசியல் புரட்சியின் ஆரம்பம்தான் இந்தப் படுகொலை என்று சொல்வார்கள் பலர். இல்லை, காங்கிரஸுக்குப் பணம் வந்த பாதையை அறிந்த ஒரே நபர் எல்.என்.மிஸ்ரா என்பதால், படுகொலை செய்யப்பட்டார் என்பார்கள் சிலர். எப்படிப் பார்த்தாலும் அரசியல் காரணங்களுக்காக சுதந்திர இந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட முதலாவது அமைச்சர் இவர்தான்.
'என்னைத் தீர்த்துக்கட்ட நடந்த முயற்சிதான் இது’ என்று இந்திரா கூறினார். தனக்கு எதிரான அரசியல், வன்முறை மூலமாக செயல்படுத்தப்படுவதாக இந்திரா உணர்ந்தார். எதிரி அடிக்க நினைப்பதற்கு முன் இவர் தாக்குதலைத் தொடங்கினார்.
அதுதான் எமர்ஜென்சி!
- Vikatan Article

No comments:

Post a Comment