Saturday, January 4, 2014

புதைக்கப்பட்ட ஒரு விதையின் கதை!

'பசுமைப் புரட்சி’யின் பெயரால் ரசாயன விவசாயத்துக்கு அடிமைப்படுத்தப்பட்ட இந்திய... குறிப்பாக, தமிழக விவசாயிகளை 'இயற்கை வேளாண்மை’யின் பக்கம் திருப்பிய 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ.நம்மாழ்வார், 45 ஆண்டுகளாக தான் நேசித்து வந்த இயற்கையுடன், கடந்த 30-ம் தேதி அன்று இரண்டறக் கலந்தார். 75 வயதாகும் இந்தப் பசுமைப் போராளி, தன்னுடைய போராட்டப் பயணத்தின் நடுவே, பட்டுக்கோட்டை அருகே இருக்கும் அத்திவெட்டி கிராமத்துக்குச் சென்றபோது, கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக இயற்கை எய்தினார்.
 நம்மாழ்வாரின் விருப்பப்படியே அவருயை உடலை அடக்கம் செய்வதற்காக, கரூர் மாவட்டம், கடவூர், சுருமான்பட்டியில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் அவர் உருவாக்கியிருக்கும் 'வானகம்' உயிர்ச்சூழல் பண்ணைக்கு, ஜனவரி 1 அன்று கொண்டு சென்றனர். அந்த வரப்பட்டிக்காட்டுக்கும் மக்கள் அணி அணியாக திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது... அனைவரையும் சிலிர்க்க வைத்தது. இதில், 80 சதவிகிதம் பேர் இளைஞர்கள். விகடன் குழுமத்தின் சார்பில் பசுமை விகடன் ஆசிரியர் குழுவினர் நம்மாழ்வாரின் உடலுக்கு 'பச்சை துண்டு போர்த்தி’ மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நம்மாழ்வார் உடலைப் புதைப்பதற்காக திருநீறு, உப்பு, மிளகு, சங்குக்காய், துளசி இலைகள், தர்பைப் புல் என பல்வேறு பொருட்களைக் கொண்டு வந்து குவித்தனர், சைவ சமயத்தைச் சேர்ந்த சிலர். குழியில் இதையெல்லாம் கொட்டி, அதன் மீது நம்மாழ்வாரின் உடல் வைக்கப்படும் என்றும் கூறினர். இதனால், நம்மாழ்வாரின் உடல் மக்காது இருக்கும் என்பதே அவர்களுடைய விளக்கம். ஆனால், உடல் அடக்கத்தின்போது அந்த இடத்துக்கு வந்த அவருடைய மனைவி சாவித்திரி, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ''ஐயா இயற்கையோடு வாழ்ந்தவர். மண்ணோடு மண்ணாக வேண்டும் என்பதே அவருடைய கொள்கை'' என்று கொதிப்போடு சொன்னார். இதையடுத்து, குழியில் போடப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டு, எந்தவிதமான சடங்குகளும் இல்லாமல், அங்கு தோண்டிய மண்ணை மட்டுமே வைத்து, நம்மாழ்வாரின் உடலை அடக்கம் செய்தனர். அதன் மீது வேப்பங்கன்று ஒன்றையும் நம்மாழ்வார் விருப்பப்படியே நட்டு வைத்தனர்.
1938-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்தவர் நம்மாழ்வார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி., வேளாண்மை அறிவியல் பட்டம் பெற்றவர், 1960-ம் ஆண்டு கோவில்பட்டியில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பண்ணை மேலாளராக ஏழு ஆண்டுகள் பணி புரிந்தவர். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வீரிய விதைகள் போன்றவற்றால்... வேளாண்மை நஞ்சாகிப் போனதோடு, விவசாயிகளும் கடன்காரர்களாக அலைவதைக் கண்டு, தனது ஆராய்ச்சியாளர் பணியை உதறினார். பிறகு, நோபல் பரிசு பெற்ற 'டோம்னிக் பையர்’ என்ற அறிஞரின் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலக அளவில் பயணம் செய்தவர், பிறகு... இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தேவையான இயற்கை வேளாண்மை நோக்கி விவசாயிகளை திசைதிருப்ப ஆரம்பித்தார். அழிவு நிலையில் இருந்த, நூற்றுக்கணக்கான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து, விவசாயிகளிடம் சேர்த்த பெருமை நம்மாழ்வாரையே சேரும்.
இறப்புக்குப் பிறகும், இயற்கை விவசாயம் தழைத்தோங்க வேண்டும் என்ற எண்ணத்தில்... 'வானகம்’ உயிர்ச்சூழல் பயிற்சிப் பண்ணையை உருவாக்கினர். அங்கு, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கும் விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்து... இளைஞர்களையும் விவசாயத்தை நோக்கி ஈர்க்கும் வேலையைச் செய்தார். அந்த விதைகள் முளைத்து, தற்போது விருட்சமாக மாறி இருக்கின்றன.
ஆம்... விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை!
- காசி.வேம்பையன்

-Vikatan Article

No comments:

Post a Comment