Saturday, January 4, 2014

ஆ... சாமியோவ்! 12

போலி சாமியார்களை உலகம் தெரியாத சிலர், தெய்வமாகவே பாவித்து காலில் விழுகிறார்கள். உலகம் தெரிந்தவர்களோ இவர்களை காமெடியன்களாகப் பார்த்துச் சிரித்துவிட்டு நகர்கிறார்கள். ஆக, உலகம் புரிந்தவர்கள், புரியாதவர்கள் ஆகிய இருதரப்பினராலுமே போலி சாமியார்களுக்குப் பெரிதாக எந்தத் தடைகளும் கிளம்புவதில்லை. இதுபோன்ற போலிகளால் எத்தனையோ பேருக்கு பார்வை போகிறது. கேட்கும் திறன் போகிறது. ஏன் ஒரு சிலருக்கு உயிரேகூட போய்விடுகிறது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களே இதற்கெல்லாம் காரணம் போலி சாமியார் என்று அறியாமல் மீண்டும் அவர்களின் காலடியே சரணம் என்று விழுந்து கிடக்கிறார்கள்.
 ஆந்திர மாநிலம் ஹைதராபாத் மாவட்டத்தில், நேரேடிகுண்ட மண்டலத்தில் இருக்கும் இஸ்பூர்தண்டக் கிராமத்தில் இன்றும்  இப்படி அரங்கேறி வருகிறது. 'கணபதி சாமி’ என்று கேட்டால் அந்தப் பகுதியில் பலருக்கும் தெரியாது. அதுவே 'கிட்னி பாபா’ என்று கேட்டால் இந்த சாமியாரின் ஆசிரமத்துக்கு சரியாக வழி சொல்வார்கள்.
ஒருவகையில் கிட்னி பாபா மாடர்ன் ஆசாமி. 'சாமியார் என்றால் காவி அங்கியும், உத்தி ராட்சக் கொட்டையும்தான் அடையாளமா?’ என்று கேட்பதைப்போல, மடிப்புக் கலையாத ஃபுல் பேன்ட், வெள்ளை முழுக்கைச் சட்டை, படிந்து வாரப்பட்ட தலைமுடி என்று நவீன தோற்றத்தில் இருப்பார். போனால் போகிறது என்று இட்டுக்கொண்டதைப் போல, நெற்றியில் சிறியதாக விபூதியும் குங்குமமும் கண்சிமிட்டும்.
பொதுவாக சாமியார்களுக்குப் பக்தர்கள்தான் இருப்பார்கள். ஆனால் கிட்னி பாபாவுக்கு இருப்பதோ... எல்லாமே நோயாளிகள்தான்! அதிலும் குறிப்பாக வயிற்று வலி நோயாளிகள்தான். 'வயிற்று வலி’ என்று சொல்லிக்கொண்டு தன்னிடம் யார் வந்தாலும் கிட்னி பாபாவைப் பொறுத்தவரை அவர்கள் கிட்னியில் கல் உள்ள நோயாளிதான். கிட்னி பாபா தன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் 'அழகை’ சொல்வதற்கு முன்பு இவரது மருத்துவமனையாக செயல்படும் ஆசிரமத்தைப் பற்றி சொல்லியாக வேண்டும்.
கிராமத்தைவிட்டு தள்ளி இருக்கும் சவுக்குத் தோப்பைத் தாண்டி வெட்ட வெளியில் ஓர் ஒற்றை மரம். அந்த மரத்துக்கு பக்கத்தில் மூங்கில் சுவர்களைக்கொண்ட ஓர் ஓலைக் குடிசை. கிட்னி பாபா எதிலுமே டிரான்ஸ்பரென்ட். அதனால், ஓலை குடிசைக்குள் அவர் தன் பக்த நோயாளிகளுக்கு என்ன சிகிச்சை அளிக்கிறார் என்பதை வெளியில் இருந்தே பார்க்க முடியும். கிட்னி பாபா ரொம்ப ரொம்ப பிஸி. அவரை எல்லா நாட்களிலும் பார்த்துவிட முடியாது. திங்கட்கிழமை மட்டும்தான் அவர் அப்பாயின்ட்மென்ட் கிடைக்கும். அதனால் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இவரிடம் அற்புத அதிசய ஆசீர்வாத சிகிச்சைப்பெற கூட்டம் அலைமோதும். கிட்னி பாபாவுக்கு பௌர்ணமியும் அமா வாசையும் உகந்த தினங்கள் என்பதால் அன்று திங்கட்கிழமையாக இல்லாவிட்டாலும் அன்றும் ஆசிரமம் திறந்திருக்கும்.
தீராத வயிற்று வலி என்று வருகிறவர்களுக்கு உடனடியாக கிட்னியில் இருக்கும் கல்லை எடுத்துவிட மாட்டார் இந்த கிட்னி பாபா. சிவனும் பார்வதியும் சேர்ந்து அருள்பாளிக்கும் படத்துக்கு கீழே அமர்ந்து, 'நான் கடவுள். நீ நோயாளி. என்னை நம்பு. நீ குணமாவாய்’ என்று சொல்லிவிட்டு நோயாளிக்கு விபூதி குங்குமப் பிரசாதங்கள் கொடுத்து பூசிக்கொள்ளச் சொல்வார். அடுத்து இரண்டாவது கட்ட சிகிச்சைக்காக ஆசிரமத்துக்கு வெளியே சற்று தூரம் தள்ளியிருக்கும் ஒரு வேப்ப மரத்தடிக்கு அழைத்துச் சென்று செம்மண் பொடியால் மண் தரையில் பல கட்டங்களை வரைவார். பிறகு எலுமிச்சைப் பழங்களை அரிந்து கொஞ்ச நேரம் இந்தக் கட்டங்களில் வைத்து விளையாடிக்கொண்டே மாந்திரிக மந்திரங்களைச் சொல்வார்.
அதன் பிறகுதான் க்ளைமாக்ஸ். தனது உதவி யாளரையும் நோயாளியுடன் வந்தவரையும் அங்கேயே அமர வைத்துவிட்டு வயிற்று வலிக்காரரை மட்டும் மறைவான இடத்துக்கு அழைத்துச் செல்லுவார். அங்கே வயிற்றுவலிக்காரர் தன் ஆடைகளை எல்லாம் களைந்துவிட்டு நிற்கச் சொல்லும் கிட்னி பாபா அவர்களை கண்களாலேயே ஸ்கேன் செய்வார். அந்த ஸ்கேனிலேயே கிட்னியில் கல் எங்கே இருக்கிறது... எத்தனை பெரிதாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துவிடுவார். இது முடிந்ததும் நோயாளியை மீண்டும் தன் ஆசிரமத்துக்கே ஆபரேஷன் செய்ய அழைத்துவருவார்.
நோயாளியை நெடுஞ்சாண்கிடையாக மண் தரையில் குப்புறப் படுக்கச் சொல்லிவிட்டு குத்துக்கலிட்டு உட்காரும் சாமியார், குங்குமம் மஞ்சள் ஆகியவற்றால் ஆபரேஷன் செய்ய வேண்டிய இடத்தை நீவிவிடுவார். பிறகு நடுமுதுகில் கொத்து புரோட்டா போடுவதைப்போல வெறும் கைகளைக்கொண்டே வெட்டுவார். அந்த நேரம் எதோ ஒரு தெய்வீக சக்திக்கு ஆட்பட்டவரைப்போல கண்களை மூடி தலையை சுழட்டியப்படியே நோயாளியின் முதுகில் கடிப்பார். அப்போது அவரது உதவியாளர் ஒரு துண்டு பேப்பரை பயபக்தியோடு நீட்ட, நோயாளியின் முதுகு வழியாக கடித்து எடுக்கப்பட்ட கிட்னி கல்லை, கிட்னி பாபா துப்புவார். ஆனால், ரத்தமோ சத்தமோ எதுவுமே இருக்காது, ஏன், பாபா கடித்த பல் தடம்கூட நோயாளியின் உடம்பில் இருக்காது. இந்த அதிசயத்தை நோயாளியின் உடன் வந்தவர்கள் கண்டு கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள்.
எல்லா நோயாளிகளுக்குமே இத்தனை எளிமையாக சிகிச்சை முடிந்துவிடாது. ஒரு சிலருக்கு இதுபோன்று இரண்டு மூன்று சிட்டிங்கூட தேவைப்படும். ஒரு ஆபரேஷனுக்கு கிட்னி பாபா வாங்கும் ஃபீஸ் வெறும் 700 ரூபாய்தான். ஃபீஸ் குறைவாக இருப்பதால் ஹைதராபாத்தைத் தாண்டி கரீம் நகர், வாராங்கல் ஏன் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தெல்லாம்கூட கிட்னி பாபாவிடம் ஆபரேஷனுக்காகப் பலர் வருகிறார்கள்.
'இங்கிலீஷ் டாக்டர்களிடம் போய் பல ஆயிரங்கள் செலவு செய்தும் என் வயிற்று வலி சரியாகவில்லை. அதனால்தான் இங்கே ஆப ரேஷனுக்காக வந்திருக்கிறோம்!’ என்று சொல்கிற அளவுக்கு அங்கு வரும் பக்தர்கள் வெகுளியாக இருப்பதுதான் கிட்னி பாபாவின் தொழிலுக்கான மூலதனம்.
ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை கிட்னி சாமியார் என்ன, சட்னி சாமியார்கூட பலமாகவே கல்லா கட்டுவார்கள்!
-Vikatan Article

No comments:

Post a Comment