Saturday, January 4, 2014

விகடன் விருதுகள் 2013 - 1

சிறந்த படம்  -  பரதேசி
 பார்க்கவே அழகான பச்சைப் பசேல் தேயிலைத் தோட்டத்தின் ஒவ்வொரு செடியின் வேரும், கூலித் தொழிலாளிகளின் ரத்தத்தை உரமாக உறிஞ்சியது என்பதை நெஞ்சில் அறையும் விதமாகச் சொன்னதில், 'பரதேசி’ முக்கியமான தமிழ் சினிமா. 'எரியும் பனிக்காடு’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பணத்துக்கு ஆசைப்பட்டு பிரிட்டிஷ்காரர்களுக்கு விசுவாசமாக தன் சொந்த மக்க ளையே காவுகொடுத்த கங்காணிகளின் இரட்டை நாக்கு வாழ்க்கை, மிக அழுத்தமாகப் பதிவுசெய் யப்பட்டிருந்தது. முதலாளிகள், ஏழைகளின் அறியாமையை எப்படி அதட்டி, மிரட்டி உழைப்பாக உறிஞ்சினார்கள் என்பதை கணுக்கால் நரம்பு அறுப்பு, கசாப்பு மருத்துவம், வெறிபிடித்த அடியாட்கள், கடுங் குளிர், பெண்கள் மீதான பலாத் காரம்... என கொத்தடிமை வாழ்க்கையின் அறியாத பக்கங்களை மனம் வலிக்க வலிக்கப் புரட்டிய படம் இது. தனக்கென எந்தக் குரலும் இல்லாமல் தேயிலைத் தோட்டத்தில் உழைத்து உழைத்தே ஆயுளைத் தொலைத்த சாமானியன் மீது கவன ஈர்ப்பு கொண்டுவந்த வகையில், இது தமிழின் தவிர்க்க முடியாத சினிமா!
சிறந்த இயக்குநர் -  பாலா  - பரதேசி
ளிய மனிதர்களின் வலிகளையும் பிணிகளையும் அதிர அதிரப் பதிவுசெய்யும் பாலா, 'பரதேசி’யில் கையில் எடுத்தது பஞ்சம் பிழைக்க தேயிலைத் தோட்டத்துக்குக் கூலியாகச் சென்று, கொத்தடிமைகளாக வாட்டி வதைக்கப்பட்ட தமிழர்களின் கதை. தங்கள் வாழ்வையும் வாலிபத்தையும் தொலைத்த சாலூர் கிராம மக்களின் சோகத்தை 'ராசா’ என்கிற கதாபாத்திரத்தில் புதைத்து ஆவணமாக்கினார். ஒரு தேயிலைத் தோட்டக்காடுதான் லொகேஷன். வெள்ளைக்காரனுக்கு சலாம் போட்டுப் பிழைப்பு நடத்தும் கங்காணி, மறுபக்கம் தப்புக்கணக்குச் சொல்லி கூலிகளின் உயிரை, உழைப்பை உறிஞ்சும் அட்டையாக இருக்கிறான். 'நானே மருத்துவம் கத்துக்கிட்டேன்’ என்று அரைகுறை வைத்தியம் பார்க்கும் போலி மருத்துவர், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் அப்பாவிப் பெண்கள், தப்பித்து ஓடுபவர்களைப் பிடித்துவந்து முடமாக்கும் கொடூரம், எதற்கும் அசராது மகளுக்காக உயிர்வாழும் ஒரு பெண், இதற்கு நடுவே கதைநாயகன் என 'பரதேசி’ படத்தை நகர்த்துவது வெகுசில கதாபாத்திரங்கள்தான். ஆனாலும், ஒரு வரலாற்றுத் துயரத்தை, கண்ணீரும் ரத்தமுமாக சொன்ன வகையில் சிறந்த இயக்குநராக நிலைகொள்கிறார் பாலா!
சிறந்த நடிகர்  - அதர்வா -  பரதேசி
24 வயதுதான். எண்ணிக்கையில் மூன்றாவது படம்தான். ஆனால், திரையில் இந்த இரண்டும் நினைவில் வராதபடி நடிப்பில் மிரட்டினார் 'சாலூர் ராசா’ அதர்வா. அங்கம்மாவோடு காதலில் இருக்கும்போது, வறுமையும் பஞ்சமும் துரத்தியடிக்க 'எப்படியும் பணம் சம்பாதித்துவிடுவோம்... அங்கம்மாவோடு சந்தோஷமாக வாழ்ந்துவிடலாம்’ என்ற சாமானியக் கனவோடு ஊரைவிட்டு கிளம்பும்போது தொடங்குகிறது அதர்வாவின் கணக்கு. ஒவ்வொரு முறை கணக்கு முடிக்கும்போது நம்பிக்கையாக அமர்வதும், 'இன்னும் சில வருடங்கள் வேலை செய்ய வேண்டும்’ என்று கங்காணி சொல்வதும் மனம் வெதும்பித் திரும்புவதுமாக ஒரு கொத்தடிமையின் மனநிலை, உடல்மொழியை அச்சு அசலாக வார்த்திருந்த அதர்வா, இந்த வருடத்தின் சிறந்த நடிகர்!
சிறந்த நடிகை -  பூஜா -  விடியும்முன்
ளமையின் விளிம்பில் பொலிவு இழந்துபோன ஒரு பாலியல் தொழிலாளி, தன் ஒரே மூலதனமான உடல் வனப்பை இழந்தால், என்ன ஆகும்? இதற்கு 'விடியும்முன்’ படத்தில் தன் அசத்தல் நடிப்பின் மூலம் பதில் சொல்லியிருந்தார் பூஜா. லோக்கல் லாட்ஜில் 100-க்கும் 500-க்கும் உடலை விற்கும் பூஜா, ஒரு பெரும் தவறு செய்தால், வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம். இந்தச் சூழ்நிலையில் அவர் நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையில் தடுமாறி தவறு செய்பவராக, பின்பு தான் செய்த தவறின் விபரீதம் உணர்ந்து பிராயச்சித்தம் தேடுபவராக, தன்னை நம்பாத 12 வயது சிறுமிக்கு வளர்ப்புத் தாயாக, துரத்தும் வில்லன்களிடம் இருந்து தப்பிக்கப் பரிதவிக்கும்  பெண்ணாக... ஒரே கேரக்டரில் பல பரிமாணங்களைக் காட்டிய பூஜா, திரையில் ஜொலித்திருக்கும் ஒரு பளீர் நட்சத்திரம்!
சிறந்த குணச்சித்திர நடிகர் - கிஷோர் - ஹரிதாஸ்
ன்கவுன்டர் போலீஸாக, ஆட்டிஸம் பாதித்த மகனுக்குத் தாயுமானவனாக இரு வேறான வாழ்க்கையில் ஆறல்ல... நூறு வித்தியாசங்கள் காட்டி நடித்திருந்தார் கிஷோர். ஒரு பக்கம் வில்லனை வேட்டையாடக் கச்சித ஸ்கெட்ச்களுடன் துரத்துகிற போலீஸ் அதிகாரியாக, இன்னொரு பக்கம் பள்ளிக்கூடத்தில் மகனோடு அமர்ந்து பாடம் கற்கும் இடத்தில் டீச்சர் சினேகாவைப் பார்த்தபடி வெட்கப்படுவதுமாக வெரைட்டி விருந்து படைத்தார். தன் மகனுக்கு எதுதான் வரும் என்று புரியாமல் தவிக்கும்போதும், அவனுக்கு ஓட்டத்தின் மீதுதான் நாட்டம் என்பதைக் கண்டுபிடித்து பயிற்சி கொடுத்துப் பட்டை தீட்டும்போதும், ஆட்டிஸக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு பொறுப்புள்ள தந்தையை கண் முன் நிறுத்தினார். எந்த இடத்திலும் 'நடிப்பு’ என்று தெரியாத இயல்பே கிஷோர் ஸ்பெஷல். அதை இந்தப் படத்தில் மேலும் மெருகேற்றினார் கிஷோர்!
சிறந்த குணச்சித்திர நடிகை - தன்ஷிகா - பரதேசி
சுமைத் தேயிலைக் காடுகளில் எஸ்டேட் அரக்கர்களால் கணவன் கொல்லப்பட, கைக் குழந்தையுடன் தனியாகப் பரிதவிக்கும் ஒரு பெண், தன் சுயமரியாதை யைக் காப்பாற்றிக்கொள்ள அமைத்துக்கொள்ளும் கோபவேலியை, தன்ஷிகா தன் ஒவ்வோர் அசைவிலும் உணர்த்தினார். கூலித் தொழிலாளி மரகதமாக தகிக்கும் கோபத்துடன் தைரியம் காட்டிய அதே பார்வையில், பேரன்பையும் பொதித்துவைத்தார். குத்தீட்டி விழிகள், கம்பீரக் குரல் என தன் சொந்த இயல்புகளை, 'பரதேசி’யின் பழந்தமிழச்சி கதாபாத்திரத்தை மெருகூட்டப் பயன்படுத்திய தன்ஷிகாவுக்கு, தமிழ் சினிமா இன்னும் இன்னும் சவால் கதாபாத்திரங்களை அளிக்க வேண்டும்!  
சிறந்த நகைச்சுவை நடிகர்  - சென்ராயன் - மூடர் கூடம்
ப்பாவித் திருடனாக 'மூடர் கூடம்’ படத்தில் சென்ராயன் செய்த காமெடிகள், ரகளை ரகம். திருடும்போது அணிந்துகொள்ள தனக்கு மட்டும் தனி நிறத்தில் 'மங்கி’ குல்லா வாங்குவது முதல், 'என்னைப் பார்த்தா இங்கிலீஷ்ல 10 மார்க்குக்கு மேல எடுக்குற மாதிரி தெரியுதா?’ என்று கேட்பது வரை... ஒல்லி உடம்பை வைத்து கில்லி காமெடி செய்தார் சென்ராயன். 'தமிழே தெரியாத இங்கிலீஷ்காரன்கிட்ட தமிழ்ல பேசக் கூடாதுனு தெரிஞ்ச உனக்கு, இங்கிலீஷ் தெரியாத பச்சத் தமிழன்கிட்ட தமிழ்ல பேசணும்னு ஏன்டா தெரியாமப்போச்சு?’ என்று கெத்தாக அவர் அதட்டியதற்கு திரையரங்கில் அள்ளியது அப்ளாஸ். நடிப்பு, வசன உச்சரிப்பு, உடல்மொழி என அனைத்து அம்சங்களிலும் காட்சிக்குக் காட்சி சென்டம் ஸ்கோர் செய்த சென்ராயனுக்கு... ஹாட்ஸ் ஆஃப்!
சிறந்த நகைச்சுவை நடிகை - மதுமிதா - இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
ம் கொண்டை, ஜகஜக சேலை, ஓவர்டோஸ் மேக்கப், 70 எம்.எம். விழிகள்... 'ராஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்’, 'பாப்ப்ப்பு’... என தன் மனம் கவர்ந்த காதலர்களைச் சொக்கவைக்கும் அழைப்பு... அடிச்சுக்கவே முடியாது நம்ம 'தேன்ன்னடை’ மதுமிதாவை! சமகால 'கள்ளக்காதல்’ தகராறுகளில் அடிக்கடி செய்திகளில் இடம்பெறும் 'மனைவி’களுக்கு, செம சுவாரஸ்யமாக உயிரூட்டி இருந்தது மதுமிதாவின் நடிப்பு. கணவனைக் கொல்ல காதலர்களை ஏவிய அந்தக் கதாபாத்திரம் 'வில்லி’ சாயல் கொண்டது. ஆனால், குரலில் தேன் குழைத்து, மனதில் காதல் குழைத்து, செயலில் வன்மம் குழைத்து... என தாறுமாறு காம்பினேஷனில் கிச்சுக்கிச்சு மூட்டிய மதுமிதாவுக்கு எதிராகக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை... போட்டியே இல்லை!
சிறந்த வில்லன் - அனில் முரளி - 6 மெழுகுவத்திகள்
னம் பதைக்கச் செய்யும் குழந்தைகள் கடத்தல் நெட்வொர்க்கை, நெஞ்சம் பதைபதைக்க விவரித்த '6 மெழுகுவத்திகள்’ படத்தின் மிரட்டல் வில்லன் அனில் முரளி. இவர், 'ராம் சார்... ராம் சார்...’ என நளினமாகப் பேசிப் பேசியே கழுத்தை அறுக்கும் வில்லனாக, உரக்கக் கூவும் சவடால் வசனங்களோ கொடூர ஆயுதங்களோ இல்லாமல், வில்ல வியூகத்தில் மிரட்டினார். உடல்மொழியில் நளினமும், குரல்மொழியில் வஞ்சகமும் நிரம்பிய 'திவாகர்’ என்கிற கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு, சிரித்துக்கொண்டே செத்துப்போகும் அனில் முரளிக்கு, தமிழில் இது முதல் படம். மலையாளத்தில் 150 படங்களுக்கு மேல் நடித்தவர். அடிபட்டக் கோபத்திலும் குழைவாகப் பேசுவது, பின்னிப் பின்னி நெளிந்து நடப்பது என பழக்கவழக்கமான வில்லன்களுக்கு இடையே, அனில் முரளி பதித்தது புதுத் தடம்!
சிறந்த புதுமுக இயக்குநர் - நலன் குமரசாமி - சூது கவ்வும்
திகாரத்தில் கை வைத்தல் கூடாது, அடி- உதை கூடாது... என்று ஆள் கடத்தலுக்கு ஐந்து விதிகளை வகுத்துக்கொண்டு, 'பேக்கேஜ் டூர்’ கணக்காக மினிமம் பேக்கேஜில் ஆட்களைக் கடத்திய 'சூது கவ்வும்’ படை, தியேட்டரை நோக்கி ரசிகர்களைக் கடத்தியது. இதற்கு முன் ரணகொடூரமாகவும் உளவியல்ரீதியாகவுமே கடத்தலை அணுகிய சினிமாக்களுக்கு இடையில், ஜாலிகேலி எபிசோடுகளுடன் கலாட்டா சினிமாவாக முத்திரை பதித்தது 'சூது கவ்வும்’. கடத்தப்படும் நபரிடம் நேரடியாகச் சென்று பணம் பெறுவது, கடத்தப்பட்டவர்களுக்கு பாக்கெட் மணி கொடுப்பது, அரூபக் காதலியைக் கவர்ச்சியுடன் உலவவைத்தது, 'பயப்படாதீங்க... பயப்படாதீங்க... மூச்சை நல்லா இழுத்துவிட்டு ரிலாக்ஸ் பண்ணுங்க’ எனக் கலகல வசனங்கள், கலாட்டா சம்பவங்களால் 'இருட்டு அறை’க்குள் கூடிய ரசிகர்களை 'முரட்டு குஷி’ப்படுத்தி அனுப்பினார் இயக்குநர் நலன் குமரசாமி!
சிறந்த புதுமுக நடிகை - நஸ்ரியா நசீம் - நேரம்
'இப்படி ஒரு ஹோம்லி காதலி கிடைத்தால் நன்றாக இருக்குமே’ என்று 'ட்ரீம் கேர்ள்ஸ்’ இலக்கணத்தின் அப்டேட்டட் வெர்ஷனாக 'நேரம்’ படத்தில் மலர்ந்து நின்றார் நஸ்ரியா. பொய்க் கோபம், செல்ல வருத்தம், குதூகல மகிழ்ச்சி, ஜாலி கொண்டாட்டம், சீண்டும் சிரிப்பு... என அடுத்தடுத்த நொடிகளில் மாறும் எக்ஸ்பிரஷன்களால் லைக்குகளைக் குவித்துக் கொண்டே இருந்தது இந்தக் கேரளக் கிளி. 'ராஜா ராணி’யில் நைட்டியை ஏற்றிக்கட்டிய 'ரிங்கரிங்கா’ நடனம், 'நய்யாண்டி’ தொப்புள் சர்ச்சை என வருடம் முழுக்க ஹிட் நியூஸில் இடம் பிடித்தது, ஜாலி ஜாக்பாட்!
சிறந்த புதுமுக நடிகர் - நிவின் பால்- நேரம்
திடீரென சாஃப்ட்வேர் வேலை பறிபோக, கந்து வட்டியை வசூலிக்க 'வட்டி’ ராஜா கழுத்தில் கத்தி வைக்க, வரதட்சணை பாக்கித் தொகையைக் கேட்டு தங்கை கணவர் அடம் பண்ண, 'கல்யாணம் பண்ணிக்க’ என்று வீட்டை விட்டு ஓடிவந்த காதலி காணாமல் போக... இதுவும் இன்னபிறவுமாக அடுத்தடுத்து இறுக்கி நெருக்கும் சிக்கல்களை சமாளிக்கும் நடுத்தரக் குடும்பத்து இளைஞன் 'வெற்றி’ கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாக உயிரும் உணர்வும் கொடுத்திருந்தார் நிவின். ஒற்றை சட்டை, வியர்வை அழுக்கு, கோப வேகம் இவற்றைக் கொண்டே வசீகரித்தது 'நேரம்’ நிவின் ஸ்பெஷல்!  

-Vikatan

No comments:

Post a Comment