Thursday, January 30, 2014

ஆறாம் திணை - 73

த்தமாகக் குறட்டை விட்டுத் தூங்குபவரைப் பார்த்து, 'ச்சே... கள்ளம்கபடம் இல்லா மனசு... அசந்து தூங்குறார். கொடுத்து வெச்சவர்!’ என ஆச்சரியப்படாதீர்கள். சத்தமானக் குறட்டைப் பழக்கம், ஆரோக்கியக் குறியீடு அல்ல. உடல் எடை அதிகமாக இருந்து தொப்பையுடன் வலம் வருபவர் வாயில் இருந்து வரும் இந்த அனிச்சை ஒலி, பல வேளைகளில் அபாயச் சங்கு ஒலி.
சில விநாடிகள் இடையிடையே மூச்சு நின்று தடங்கலுடன் நடைபெறும் சுவாசத்தின்போதும், அனிச்சையாக வாயால் கொஞ்சம் காற்றை ஆற்றலுடன் உள்ளிழுக்கும்போதும் எழுவதுதான் அந்த விபரீதச் சத்தம். இப்படி ஒவ்வொரு முறையும் சில விநாடி மூச்சுத்தடங்கல் நிகழும்போதும் தடாலடியாக ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையும். பின் சத்தமான உள்ளிழுப்பில் அந்த இழப்பு ஈடுகட்டப்படும். இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு காரணமாக, ஆழ்ந்த உறக்கம் இல்லாது, மேலெழுந்தவாரியான உறக்கமே நிகழும். இப்படி ஆழ்ந்த உறக்கம் இல்லாத, குறட்டையுடன் அவதிப்படும் நோயை 'Sleep Apnea’ என்கிறார்கள். இவர்களுக்கு இதயத் துடிப்பில் தள்ளாட்டம், இதயத் தசைகள் வலுக்குறைவு, மாரடைப்பு... எனப் பல பிரச்னைகள் வரக்கூடும். கவனமாக இல்லையென்றால், திடீர் மரணம்கூட சம்பவிக்கும் வாய்ப்பு உண்டு.
பெருந்தொப்பைக்காரர்களுக்கு அதிகக் குறட்டை இருக்கும். நாள்பட்ட ஆஸ்துமா நோயினர், சைனஸ் நோய் உள்ளவருக்கும் குறட்டை வரும். குறட்டைக்கும் மதுவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. குடிப்பழக்கம் உள்ள நபருக்கு வரும் குறட்டை, காலன் கொடுக்கும் அபாய அலாரம். இரவில் மது அருந்தி, நடு இரவில் அதிகக் கொழுப்பு, காரம் உள்ள உணவைச் சாப்பிட்டு உறங்கும் பலருக்கும் கண்டிப்பாகக் குறட்டை இருக்கும். அது ஆழ்நிலைத் தூக்கத்தைப் பாதிப்பதால், பகலில் மனம் ஒட்டாத அலுவலகக் கூட்டத்தில் சில மணித்துளிகள் அமர்ந்திருந்தாலே தூக்கம் கண்களைச் சுழற்றும். பகல் உறக்கம் சில மணித்துளிகள் இல்லாவிட்டால், மாலை பணியில் எரிச்சல் எட்டிப்பார்க்கும்.
குறட்டை பற்றிய குறிப்புகள், கும்பகர்ணப் படலம் உள்ள ராமாயணம் தவிர்த்து அன்றைய மருத்துவக் குறிப்புகளில் அதிகம் தென்படவில்லை. உடல் உழைப்பு அதிகம் இல்லாத காலத்தில் குறட்டை அதிக அளவு இருந்திருக்காது போலும். சித்த மருத்துவம், குறட்டைப் பழத் தைலத்தை மூக்கடைப்பு நோய்களுக்குப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறது. சைனஸ் நோயால் வரும் குறட்டையை அது தடுப்பதால், அந்தப் பெயர் வந்ததா என்பது உறுதியாகத் தெரியவில்லை!
குறட்டையில் இருந்து விடுபட, குடியில் இருந்து விடுபட வேண்டும். உடல் எடையைக், (குறிப்பாக தொப்பையை) குறைத்தே ஆகவேண்டும். இல்லாவிடில் சந்திரனுக்குப் பயணப்படும் விண்வெளி வீரர் போல, ஒரு முகமூடி உபகரணத்தை அணிந்துகொண்டு ஆக்ஸிஜன் உருளைகள் உதவியுடன் உறங்க வேண்டிவரும்.
சைனஸ் மூக்கடைப்பு உள்ளவர்கள், சுக்குத் தைலம் அல்லது குறட்டைப் பழத் தைலத்தால் வாரம் ஒருமுறையேனும் எண்ணெய்க் குளியல், மற்றவர் நல்லெண்ணைக் குளியல் போடுவது படிப்படியாக ஆழ்ந்த தூக்கத்தைத் தரும். தினசரி 'கபாலாபாதி’ எனும் நாடிசுத்தி மூச்சுப் பயிற்சியும், பிற பிராணாயாமப் பயிற்சியும் செய்வதுதான் குறட்டையை அடியோடு நீங்கச் செய்வதற்கான மிகச் சிறந்த பயிற்சி. மூச்சுப் பயிற்சியில் உறக்கத்துக்கு எனத் தனி மூச்சுப் பயிற்சியை வடிவமைத்துள்ளனர். 'RAPID EYE MOVEMENT SLEEP’ எனும் மேலோட்டமான தூக்கம் எப்படிக் கட்டுப்பட்டு ஆழ்ந்த உறக்கம் வழிவகுக்கப்படுகிறது என்பதை, electro encephalogram சோதனை மூலம் நிரூபிக்கவும் செய்திருக்கிறார்கள்.
காலையில் 45 நிமிட வேக நடை, மாலை மூச்சுப் பயிற்சி, உடல் எடை குறைக்க உணவுப் பழக்கம், மதுவை ஒழித்தல் மட்டுமே குறட்டைக்கு நிரந்தரத் தீர்வாகும்.
'எல்லாம் சரி... தொப்பை, அதிக உடல் எடை, மது காரணமாகக் குறட்டை வந்தால் நீங்கள் சொல்லும்படி செய்யலாம். என் பையனுக்கு மூன்று வயது. அவன் விடும் குறட்டைக்கு என்ன பண்ணுவது?’ என்று பதட்டமாகக் கேட்பார்கள் சில பெற்றோர். குழந்தைகளுக்கு அடினாய்டு, டான்சிலைடிஸ் பிரச்னைகள் இருப்பின், அதனால் ஏற்படும் தொண்டைச் சதையின் மூச்சு இறுக்கத்தாலும், நெஞ்சில் சளி கட்டுவதால் ஏற்படும் அவதியும்கூட குறட்டையைத் தோற்றுவிக்கலாம். குழந்தைகள் குறட்டைவிடுகிறார்கள் என்றால், அவர்களுக்கு டான்சிலைடிஸ் பிரச்னை இருக்கிறதா என்று குடும்ப மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
வீட்டுத் தொட்டியில் வளரும் கற்பூரவல்லி இலைச் சாற்றில் தேன் சேர்த்து குழைத்துக் கொடுத்தால், மெள்ள மெள்ள டான்சில் வீக்கம் குறையும். அதே போல் மிளகை தேனில் குழைத்துத்  தந்தால், சைனஸ், டான்சிலைடிஸ், நெஞ்சு சளி, இருமல் ஆகியவற்றை நீக்க உதவும். பூண்டுத் தேனைப் பக்குவமாக குழந்தையின் தொண்டைப் பகுதியில் உள்ள டான்சிலின் மீது தடவினாலோ, அதனை குழந்தையின் நாக்கின் பின்புறம் தடவி கொஞ்சம் கொஞ்சமாகச் சுவைக்கச் சொன்னாலோ, மெதுமெதுவாக வீக்கம் குறையும். இதோடு ஐஸ்க்ரீம், இனிப்புகள் மீதான அலாதிப் பிரியத்தை அகற்றுவதால், மீண்டும் மீண்டும் கபம் அங்கே சேருவதைத் தடுக்க முடியும். குழந்தையின் குறட்டையும் மறையத்தொடங்கும்!
ஆழ்ந்த உறக்கம் ஆரோக்கிய ஆயுளுக்கான ரீசார்ஜ் என்பதை மறக்காதீர்கள்!
- பரிமாறுவேன்...
குறட்டைப் பழத் தைல செய்முறை
நாட்டு-சித்த மருந்துக் கடைகளில் 'குறட்டைப்பழம்’ கிடைக்கும். அது, சாப்பிடுவதற்கு உகந்த பழம் அல்ல. ஆனால், அதன் தைலம் மருத்துவக் குணம் நிரம்பியது.
குறட்டைப் பழச்சாறு 1 லிட்டர், சமபங்கு நல்லெண்ணெய். இதில் 20 கிராம் இடித்த மிளகு போட்டுக் காய்ச்ச வேண்டும். சாறு வற்றி எண்ணெய் பிரியும் பதத்தில் இறக்கி புட்டியில் சேமித்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை தலைக்கு இதனைத் தேய்த்து எண்ணெய்க் குளியல் போட்டால்,  மூக்கடைப்பு, தலைவலியுடன் வரும் குறட்டை நீங்கும். குறட்டைப் பழத்துக்கு இன்னொரு பெயர் 'சவுரிப்பழம்’. ஏனென்றால், இந்தத் தைலத்தின் பக்கவிளைவு... அடர்த்தியான கூந்தல் வளர்ச்சி!

- Vikatan Article

1 comment:

  1. டாக்டர் அவர்களுக்கு வணக்கம். தங்களது ப்ளாக்கைப்படித்துவரும் அன்பர்களில் ஒருவன். மருத்துவக் கட்டுரைகள் மிக அருமையாக உள்ளது. நன்றி. நான் குறட்டையால் அவதிப்பட்டு வருகின்றேன். ENT டாக்டரைப் பார்த்தும் பயனில்லை. தாங்கள் குறிப்பிட்ட குறட்டைப்பழ தைலம் impcops-ல் கிடைக்குமா or வேறு மருத்துவம் உண்டா. தங்களது ஆலோசனையை எதிர்பார்க்கும்
    அன்பன்
    விஸ்வநாதன். திருவான்மியூர்.

    ReplyDelete