Thursday, January 30, 2014

ஆறாம் திணை - 72

டந்த வாரம் உணவு விடுதி ஒன்றில் சாப்பிட்டுவிட்டு, ''கை கழுவும் இடம் எங்கே?'' எனக் கேட்டேன். ''ப்ளீஸ் வெயிட் சார்... ஃபிங்கர் பௌல் வரும்!'' என்றார் சிப்பந்தி. கைகளைப் பிசைந்து ஓடும் நீரில் கழுவாது, கோப்பைச் சுடுநீரில் கையை மூழ்கடித்துக் கழுவுவது நாகரிகமா... மடச் சோம்பேறித்தனமா? புரியவில்லை! வந்த கழுவும் கோப்பையில் வெந்நீரில் மிதந்துகொண்டிருந்த எலுமிச்சம் பழத் துண்டைப் பார்த்து கொஞ்சம் வேதனையாக இருந்தது. எத்தனை அற்புதமான பாரம்பரிய மருந்து எலுமிச்சை... அதற்கு இந்த நிலையா?
மந்திரிக்கு மந்திரியாக, மன்னனுக்கு மன்னனாக, தந்திரிக்கு மித்திரனாக... என விடுகதையாக சித்தர் தேரன் மருந்து பாரதத்தில்  பாடியிருக்கும் பழம், எலுமிச்சை. சித்த மருத்துவப் புரிதலில், 'மந்திரி எனும் 'பித்தம்’ அதிகரித்துவரும் நோய்க்கு, அரசவையின் மந்திரி போல் சமயோசிதமாக உடலுக்கு வேறு பிரச்னை ஏதும் வராமல் பக்கவிளைவு இல்லாது தணிக்கும் ஆற்றலும், உடலின் மன்னனான 'வாதத்தை’, சரியாக நிர்வகிக்கும் மன்னனாக இருப்பதும், தந்திரமாக உடலில் சேரும் 'கபத்து’க்கு மித்திரனாக (நண்பனாக) இருந்து அதை வெளியேற்றும் இயல்பும்... என மூன்று பணிகளையும் செவ்வனே செய்யும் இந்த எலுமிச்சை’ எனக் கவித்துவத்துடன் சொல்கிறார் சித்தர் தேரன்.
இறைவழிபாடாக இருந்தாலும் சரி, பெரியோரை வணங்கும் விருந்தோம்பலாக இருந்தாலும் சரி, எலுமிச்சைக்கு தமிழர் அளித்திருக்கும் இடம் பெரிது. மஞ்சள், வேம்பு போல எலுமிச்சைக்கும் நம் மருத்துவ மரபில் பெரும்பயன் இருந்திருக்கிறது. நோய் எதிர்ப்பாற்றலுக்கு மிக அத்தியாவசியமான வைட்டமின்- சி சத்து எலுமிச்சையில் இருப்பது நமக்குத் தெரியும். ஆனால், வாந்தி, தலைசுற்றல், ரத்தக்கொதிப்பு காரணமாக வரும் தலைவலி, மயக்கம் போன்ற பல பிரச்னைகளுக்கும் அது மருந்து என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.
ஈராக் நாட்டின் எலுமிச்சையைக் காட்டிலும், நம் ஊர் எலுமிச்சையில் வைட்டமின்-சி அதிகம். 'சீமை கமலா ஆரஞ்சு’ எனச் சொல்லி, விலை அதிகமாக விற்கப்படும் 'மான்ட்ரேய்ன் பொமெல்லா’ ஒட்டு ரகக் கலவைப் பழத்துக்கு இணையான வைட்டமின்-சி சத்து, அதைவிடப் பெரிதும் விலை குறைவான நம் நாட்டு எலுமிச்சையில் உண்டு. புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் உணவு வகைகளில், சீனத்து பிரக்கோலி போல், காபூல் மாதுளை போல், தென் அமெரிக்க நாட்டின் கிராவியாலா போல், எலுமிச்சையின் பயனும் மிகவும் பேசப்பட்டு வருகிறது.
எலுமிச்சையின் தோலில், பழத்தில் உள்ள eriocitrin, hesperidin, naringin முதலான flavones glycosides உடல் எடை குறைப்பில், சர்க்கரை நோய் வராது தடுக்க, ரத்தக்கொழுப்பு குறைக்க எனப் பல தொற்றா வாழ்வியல் நோய்களில் பயனாவதை நவீன உணவு அறிவியல் உறுதிப்படுத்தியுள்ளது.
போர்ச்சுக்கல் நாட்டில் ஓர் ஆராய்ச்சி, லெமன் டீயில் தேன் சேர்த்துச் சாப்பிடுவதன் பயனை முழுமையாக ஆய்ந்து, நாம் ஏன் தினம் 'லைம் டீ’ சாப்பிடக் கூடாது என்ற சிந்தனையை விதைத்திருக்கிறது. முக்கியமான விஷயம்... அந்தத் தேநீரில் பாலோ வெள்ளை சர்க்கரையோ சேர்க்கக் கூடாது. அதையும்விட முக்கியமான விஷயம்... அந்தத் தேநீரை 'இன்ஸ்டன்ட் லைம் டீ பவுடரை’ வெந்நீரில் கலந்து தயாரிக்கக் கூடாது. அதில் மணம் இருக்கும்... ஆனால், மருத்துவம் அதிகம் இருக்காது. காரணம், தேயிலையை இன்ஸ்டன்ட் பொடியாக மாற்றும் தொழில்நுட்பத்தில் நம் இந்த பாராவின் முதலில் சொன்ன பல மருத்துவ குணமுள்ள பாலிபீனால்கள் அனைத்தும் குற்றுயிரும் குலையுயிருமாகச் சிதைந்துவிடும். உண்மையான லெமன் டீ பயனுக்கு, அவ்வப்போது தேயிலை போட்ட, கொஞ்சம் எலுமிச்சையைப் பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிடுவது மட்டும்தான் நல்லது. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு; ஆத்திர சமையலுக்குச் சக்தி மட்டு!
ஒரு பக்கம், 'எலுமிச்சைச் சாறு சேர்ந்த திரவத்தால் பாத்திரம் கழுவலாம், கழிப்பறை கழுவலாம்’ என நவீன வணிகம் இந்தப் பழத்தை வேறு இடத்துக்குக் கொண்டுசெல்ல, மறுபக்கம் 'எலுமிச்சை கீமோதெரபியைக் காட்டிலும் பாதுகாப்பான கேன்சர் மருத்துவம்’ என தகவல்கள் பரபரக்கின்றன. எலுமிச்சைச் சாறு, கேன்சர் செல் வளர்ச்சியைத் தடுப்பதை பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஆனால், எலுமிச்சையின் பயன்கள் முழு மருந்தாக மாறுவதற்கு பல காலம் பிடிக்கும். காப்புரிமை அரக்கன் பிடியில் சிக்கியுள்ள மருந்து நிறுவனங்கள், அதற்கெல்லாம் ஆகும் செலவைக் கணக்கிட்டுத்தான் ஆராய்ச்சியையே தொடர்வார்கள். ஒருவேளை அதிக லாபம் சம்பாதிக்க இயலாது எனக் கணக்காளர்கள் கணக்கிட்டுச் சொல்லிவிட்டால், அந்த நிறுவனங்கள் பயனளிக்கும் மருத்துவ முடிவுகளைப் பரணேற்றி வைத்துவிடும்.
கேன்சர் நோயாளிகள் இதற்கெல்லாம் காத்திராமல், எலுமிச்சைச் சாறில் தேன் சேர்த்தோ, எலுமிச்சைச் சாறு கலந்த பச்சைத் தேநீரில் (Green tea) தேன் சேர்த்தோ தங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவத்தோடு கூடுதலாகச் சாப்பிடுவதில் தவறு ஒன்றும் இல்லை!
மன அழுத்தம், மனச்சோர்வு, மனப்பிறழ்வு முதலான பல மன நோய்களுக்கு நெடுங்காலமாகப் பயனளித்த மருத்துவ மூலிகை, எலுமிச்சை. மனச்சோர்வு மன நோயாவது ஒருசிலருக்கு மட்டுமே. சர்க்கரை நோயாக, ரத்தக்கொதிப்பாக, புற்றாக இன்னும் பல வாழ்வியல் நோயாக உருமாறுவதே  அதிகம். எலுமிச்சம் பழச் சாற்றில் லேசான அமிலம் இருந்தால்கூட, அது எளிதில் சீரணித்து, உடலின் காரத்தன்மையை அதிகரிப்பதால், இந்த நோய்களைத் தவிர்க்க உதவிடும்.
ஆகவே, எலுமிச்சை மீது இச்சை கொள்வோம்!
- பரிமாறுவேன்...

- Vikatan Article

No comments:

Post a Comment