Thursday, January 30, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை ! - 14

கூட்டணி ஃபார்முலா உருவானது!  
நேருவை அறிந்தவர்கள், நேரு வயதை எட்டியவர்கள், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுடன் பழகியவர்கள் என ஒரு பெருங்கூட்டம் கட்சியைவிட்டு விலகிப்போனதை வருத்தமாகப் பார்க்கவில்லை இந்திரா. தனக்கு வசதியாகிப் போனதாகவே உணர்ந்தார். அதிகாரக் குவிமையமாக தானும் காங்கிரஸ் தலைமையும் மாறுவது ஒன்றே லட்சியம் என்பதுபோலச் செயல்பட்டார். இந்த நோக்கத்துடன் இந்தியாவையே ஒற்றை ஆட்சி நாடாக ஆக்குவதற்கான முயற்சிகளை எடுத்தார்.
இந்தியா பரந்து விரிந்துபட்ட ஒரு தேசம். இதில் பல மொழிகளைப் பேசும் தேசிய இனங்கள் இருக்கின்றன. வேறு வேறு கடவுள்களை வணங்கும் மதங்களைச் சேர்ந்த மக்கள் இருக்கின்றனர். இந்தப் பரப்பில் வர்த்தகம் செய்த கிழக்கிந்திய கம்பெனி தன்னுடைய தொழில்பரப்பை மொத்தமாக பிரிட்டிஷாருக்குத் தாரை வார்த்தபோது பல்வேறு சமஸ்தானங்கள், குறுநில மன்னர்கள், பாளையப்பட்டுகள் அனைத்தையும் சேர்த்து அளித்தனர். இதில் பலருடனும் சண்டையிட்டும் சமாதானமாகவும் மொத்த இடத்தையும் பிரிட்டிஷ் ஆட்சி வளைத்து, அதற்கு ஒன்றுபட்ட ஒரு வரைபடத்தை உருவாக்கியது. ஒற்றை ஆட்சிகொண்ட நிர்வாக முறை அமலானது.
ஒரு நாடு முழுவதும் ஒரே ஆட்சியால் ஆளப்பட்டால், அந்த முறைக்கு ஒற்றை ஆட்சி முறை என்று பெயர். ஒரு அரசாங்கத்தின் அனைத்து விதமான அதிகாரங்களும் ஒரு குறிப்பிட்ட மையத்தில், அதாவது மத்திய அரசாங்கத்திடம் இருந்து செயல்படுத்தப்படும் ஒற்றை ஆட்சியை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் செயல்படுத்தினார்கள்.
பல்வேறு மொழி, இன, மத, சாதி, பண்பாடு கொண்ட நாட்டை ஒற்றை ஆட்சி முறை எப்படி பிரதிபலிக்க முடியும்? எனவேதான், 'கூட்டாச்சி தத்துவம் மலர வேண்டும்’ என்று நம்முடைய விடுதலைப் போராட்ட வீரர்கள் குரல் கொடுத்தனர். கூட்டாட்சி என்பது பல்வேறு மாநிலங்கள் இருக்கும், அந்த மாநிலங்களை இணைக்கும் மத்தியக் கூட்டமைப்பு அரசு ஒன்று இருக்கும். ஒரே நாட்டுக்குள் ஒரு மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் இருக்கும். இந்தக் கூட்டாட்சி முறையைத்தான் காங்கிரஸ் கட்சியும் சுதந்திரப் போராட்ட காலத்தில் வலியுறுத்தியது.
'எதிர்கால இந்திய அரசமைப்பு, கூட்டாட்சி அமைப்பாகத்தான் இருக்கும்’ என்று காங்கிரஸ் கட்சியின் தீர்மானம் கூறியது. ஆனால், சுதந்திரம் அடையும் காலகட்டம் நெருங்கிவரும் சூழ்நிலையில், 'அநேகமாக விடுதலை பெற்ற இந்தியா ஒரு கூட்டாட்சி அமைப்பைக் கொண்ட இந்தியாவாகத்தான் இருக்கும். ஆனால், மிக அதிகமான ஒற்றை ஆட்சி முறைகளும் கட்டுப்பாடுகளும் ஏதோ ஒரு வகையில் அந்தக் கூட்டாட்சி அமைப்பில் இடம்பெற வேண்டும்’ என்று நேரு சொல்ல ஆரம்பித்தார். மாநிலத்தில் அரசுகள் இருந்தாலும் மத்திய அரசிடமே அனைத்து அதிகாரங்களும் அமைய வேண்டும் என்று நேரு நினைத்தார். காங்கிரஸ் கட்சியையும் ஒரு மத்திய மயமாக்கப்பட்ட ஒரு கட்சியாக உருவாக்கினார். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி மாநில காங்கிரஸ் கமிட்டிகள் இருந்தாலும், அனைத்துக்கும் அதிகாரம் பொருந்திய அமைப்பு... அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி. காங்கிரஸ் ஒர்க்கிங் கமிட்டி என்று இதைச் சொல்வார்கள். நடைமுறையில் காங்கிரஸ் காரிய கமிட்டி என்று அழைப்பது இதைத்தான். அனைவரையும் ஆட்டிப் படைக்கும் அதிகாரம் பொருந்தியது இந்தக் காரிய கமிட்டி. இது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவரின் கண்ணசைவைப் பார்த்து மட்டுமே இயங்கக் கூடியது. இந்தத் தலைவரைத்தான் காங்கிரஸ் மேலிடம் என்றும் கட்சியின் ஹை கமாண்ட் என்றும் அழைக்கிறோம். மாநில காங்கிரஸ் தலைவர்களாக இருந்தாலும் மாநில அரசின் காங்கிரஸ் முதல்வர்களாக இருந்தாலும், இவர்கள் அனைவருமே இந்த ஹை கமாண்டுக்குக் கட்டுப்பட்டவர்கள். அவர்கள் நினைத்தால் பதவியில் தொடரலாம். மனம் மாறினால் பதவியை இழக்கலாம். மாநிலத் தலைமைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கட்சி மட்டத்தில் முடிவெடுத்த காங்கிரஸ் கட்சி, மாநில அரசுகளுக்கே பெரிய அதிகாரங்கள் எதுவும் இல்லை என்ற சூழ்நிலையைப் படிப்படியாக உருவாக்கவும் செய்தது.
இன்னொன்று... அரசாங்கத்துக்கும் அரசாங்கத்தை ஆளும் கட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்ற சூழ்நிலையையும் காங்கிரஸ் கட்சி உருவாக்கியது.
ஒரு அரசாங்கத்தை, ஒரு அரசியல் கட்சி ஆளலாம். அதற்காக அந்த அரசியல் கட்சியே அரசாங்கமாக ஆக முடியுமா? ஆனால், காங்கிரஸ் அப்படி வித்தியாசம் காண முடியாத அளவுக்கு ஒரு அரசாங்கத்தை ஆளும் அரசாங்க கட்சியாகவே செயல்படத் தொடங்கியது.
இந்தியாவின் நிர்வாக நெறிமுறைகளை ஆய்வுசெய்த வரலாற்று ஆசிரியர்கள் இந்த நுணுக்கமான குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மீது வைக்கிறார்கள். ''காங்கிரஸின் ஆட்சி முறை, ஒரு அரசியல் கட்சிக்கும் அரசுக்கும் இருக்க வேண்டிய எல்லைக் கோட்டை முழுவதும் மங்கச் செய்துவிட்டது'' என்று பேராசிரியர் கே.எம்.பாம்வெல் எழுதி இருக்கிறார். அதாவது, மத்தியில் அதிகாரத்தைக் குவிப்பது, மத்திய ஆட்சிக்கும் அதை ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கும் வித்தியாசம் இல்லாமல் பார்த்துக்கொள்வது - என்ற சூழ்நிலையை நேரு காலத்தில் லேசாக ஆரம்பித்து இந்திரா காலத்தில் அதைக் கெட்டிப்படுத்தினார்கள். 1947-1967 வரை இதில் அசைக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இந்த அடக்குமுறைக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் எழுந்தன. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை விட்டு இறங்கி தி.மு.க. ஆட்சியைப் பிடித்ததுபோல, பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுத்தது.
மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் ஏகபோகம் - 1967-ல் தகர்ந்தது என்றே சொல்லலாம். காங்கிரஸை வீழ்த்த வேண்டுமானால், 'ஒரே வழி எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர வேண்டும்; எந்தக் கட்சியும் எந்தக் கட்சியுடனும் சேரலாம். காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்பது ஒன்றே கொள்கை; மற்றவற்றை, ஓரமாக ஒதுக்கி வைத்துவிட வேண்டும்’ என்ற கூட்டணி ஃபார்முலா அப்போதுதான் உருவானது. உன்னதமான சோஷலிஸ்ட்கள் என்று கொண்டாடப்பட்ட ராம் மனோகர் லோஹியா, வகுப்புவாத ஜனசங்கத்துடனும் வலதுசாரி சுதந்திரா கட்சியுடனும் சேர்ந்தார். 'திராவிட இனவாதம்’ பேசிய அண்ணாவும் 'தமிழ்த் தேசியவாதம்’ பாடிய ம.பொ.சி-யும் மதச் சிந்தனைகள் கொண்ட முஸ்லிம் லீக்கும், வலதுசாரி எண்ணம் கொண்ட ராஜாஜியையும் கம்யூனிச சிந்தனையாளர்களான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் சேர்த்துக்கொண்டு காங்கிரஸை வீழ்த்தப் புறப்பட்ட காலம் அது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக்குடன் கூட்டணி அமைத்தது. பஞ்சாபில் அகாலிதளம் தலைமையிலான அரசை, ஜனசங்கமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்து ஆதரித்தார்கள். பஞ்சாப், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைந்த எதிர்க்கட்சி அரசாங்கங்களில் சுதந்திரா கட்சியும் ஜனசங்கமும் சோஷலிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இடம்பெற்றன. அரசாங்கத்தில் சேராமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது.
இன்றைக்கு மதச்சார்பின்மைக்கு எதிராக மார்தட்டிக் கிளம்பி இருப்பவர்கள், கடந்த காலத்தில் காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்பதற்காக மதவாத சக்திகளுடனும் வலதுசாரிகளுடனும் எந்தக் கூச்சமும் இல்லாமல் கூட்டணி வைத்துக்கொண்டவர்கள்தான் என்பதே வரலாற்றுப் புரிதல்.
இந்திராவுக்கு எதிராக தமிழகம் நீங்கலாக பிற மாநிலங்களில் அமைக்கப்பட்ட கூட்டணி அரசுகள், உள் முரண்பாடுகளால் உதிர ஆரம்பித்தன. 1967 முதல் 1970 வரை பீகாரில் ஏழு அரசுகள், உ.பி-யில் நான்கு அரசுகள், ஹரியானா, மத்தியப்பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்காளத்தில் தலா மூன்று அரசுகள் அமைந்தன. இந்த உள்குழப்பம் காரணமாக ஏழு மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. இந்த இடைப்பட்ட மூன்று ஆண்டு காலத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுமார் 800 எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறியதாகவும் அதில் 150 பேர் அமைச்சர்கள் ஆனதாகவும் ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எதிர்க்கட்சிகளின் இந்த ஸ்திரமற்ற தன்மையை மேலே உட்கார்ந்து இந்திரா ரசித்தார். மாநிலங்களில் அவரது செல்வாக்கு குறைந்தாலும், மத்தியில் அவரது அதிகாரம் பலமாக இருந்தது. 1971 தேர்தலில் 'இந்திராவை ஒழிப்போம்’ என்று ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா, ஜனசங்கம், எஸ்.எஸ்.பி. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன.
நன்றாகக் கவனியுங்கள். 1940-களில் இருந்து எந்த ராஜாஜியும் காமராஜரும் தனித்தனி தீவுகளாக இருந்து மோதினார்களோ... அந்த இருவரும் 1971 தேர்தலில் ஒன்றாகச் சேர்ந்தார்கள். இந்தக் கூட்டணியில் ஜனசங்கமும் இருந்தது. சோஷலிசம் பேசிய காமராஜரும், வலதுசாரி கொள்கை கொண்ட ராஜாஜியும் மதவாதிகளான ஜனசங்கமும் சேர்ந்து கூட்டணி அமைத்து சந்தித்த தேர்தல் அது. இந்த ஜனசங்கம்தான், இன்றைய பாரதிய ஜனதாவின் தாய். இந்தத் தேர்தலில் இந்திராவுடன் கூட்டணி வைத்தார் கருணாநிதி. சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸை வீழ்த்த மெகா கூட்டணி அமைத்த கட்சி அது.
காமராஜரும் ராஜாஜியும் ஜனசங்கமும் சேர்ந்துவிட்டதால், அந்த அணியே வெற்றிபெறும் என்று செய்திகள் பரவியது. சென்னை கடற்கரையில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்கூட்டத்தில் மைக் முன் பேசப் போன காமராஜரை அழைத்து, தன் ஜிப்பாவில் வைத்திருந்த பொட்டலத்தை அவிழ்த்து விபூதியை எடுத்து நெற்றியில் இட்டார் ராஜாஜி. அன்று பேசிய ராஜாஜி, ''ஞானோதயம் வந்த பிறகுதான் யார் நல்லவர் என்று புரிகிறது'' என்றார். ''நான் சொல்வதற்கு கொஞ்சம் கூச்சப்படுகிறேன். திருமணத்துக்குப் பிறகு மகனும் மருமகளும் ஒன்றுபடுவதுபோல நானும் காமராஜரும் ஒரே குடும்பமாகிவிட்டோம்'' என்று ராஜாஜி சொன்னபோது, ஸ்தாபன காங்கிரஸ் வென்று இந்திரா தோல்வியடைந்ததுபோல எல்லோரும் கைதட்டினர்.
அகில இந்திய அளவில் நாடாளுமன்றத்துக்கும் சேர்த்து நடத்தப்பட்ட இந்தப் பொதுத்தேர்தலில் இந்திராவுக்கும் காங்கிரஸுக்கும் சாதகமான நிலை (1971-ல்) ஏற்பட்டது. பெரும்பான்மை மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. நாடாளுமன்றத்தில் மிகப் பெரும்பான்மை பலத்தை இந்திரா பெற்றார். ஒற்றை ஆட்சி தன்மைகொண்ட ஒரு மத்திய அரசை, மாநிலங்களை அடிமையாக மட்டுமே வைத்திருக்கும் மத்திய அரசை உருவாக்க நினைத்தார். ''மத்திய அரசின் கீதத்துக்கு ஏற்ப மாநில அரசுகள் தாளம் போட வேண்டும் என்பது மிகமிகத் தேவையானது'' என்று திருப்பதியில் பேசும்போது பிரதமர் இந்திரா வெளிப்படையாகச் சொன்னார். தான் நினைத்ததே கட்சியிலும், தான் நினைத்ததே ஆட்சியிலும், தான் நினைத்ததே மாநில ஆட்சிகளிலும் என்று இந்திரா செயல்பட 1971 தேர்தல் வழி அமைத்துக் கொடுத்தது.
இதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல; 'இந்திரா நாயகம்’ என்று புதிய பெயரையே சூட்டினார் இரா.செழியன். இந்த யுகத்தின் நாயகனாக 'மாருதி’ காரில் வந்தார் இந்திராவின் இளைய மகன் சஞ்சய்.

- Vikatan Article

No comments:

Post a Comment