Saturday, April 5, 2014

ஆறாம் திணை - 82 மருத்துவர் கு.சிவராமன்

'மறதிகூட ஞாபகங்களில்தான் கட்டமைக்கப்படுகின்றன!’ என்ற கவித்துவமான வரியை, சமீபத்தில் சு.வெங்கடேசனின் எழுத்துகளில் வாசித்தேன். இந்த வரிகளுக்குப் பின்னே, கவிதையைத் தாண்டி அறிவியலும் ஒளிந்து நிற்பதுதான் விசேஷம்.
'தேவை இல்லாம இதை எடுத்து கையையோ, காலையோ காயப்படுத்திடக்கூடாது’ என்று, சில விளையாட்டுச் சாமான்களை நம் பாட்டி பரணில் ஒளித்துவைப்பது போல, நம்மைச் சங்கடப்படுத்தும் சில விஷயங்களை அழகாக encoding செய்து, hippocampus--ன் ஓரத்தில் மூளை ஒளித்துவைப்பதால்தான், நிறைய பேர் முதல் காதலைச் சௌகரியமாக மறந்துவிடு கிறார்கள். ஆனால், நினைவுகள் குறித்த அறிவியல், பிரமிக்கவைக்கும் புதிர் முடிச்சுகளைக்கொண்டது.
மூன்று வயதில் 300 திருக்குறள் சொல்லும் குழந்தை, 11 வயதில் மனப்பாடப் பகுதியைப் படிக்க முடியாமல் 'மாப்பிள்ளை பெஞ்சு’க்கு மாறுவதும், 17 வருடங்களுக்கு முன் மனதுக்குப் பிடித்தவள் அணிந்திருந்த ஆரஞ்சு கலர் ரிப்பன் ஞாபகம் இருக்கும்போது, 15 நிமிடங்களுக்கு முன்வைத்த வண்டிச் சாவியை மறந்துவிட்டு வீட்டையே தலைகீழாகப் புரட்டுவதும் மூளையின் ரசவாதம்தான்.
மூளை, தனக்குள் சேரும் புதுப்புதுத் தகவல்களை ENCODINGசெய்து, சரியான இடத்தில் STORAGE செய்து, பின்னர் DECODING செய்து காட்டும் வித்தையில்தான் நம் நினைவுத்திறன் ஒளிந்திருக்கிறது. இந்தச் சூத்திரத்தின் நெளிவு சுளிவைக் கற்றவர்கள்தான் விஸ்வநாதன் ஆனந்தா கவோ, அஷ்டாவதானியாகவோ உருவாகிறார்கள்.
பிறந்த குழந்தையை, பிரசவித்தத் தாயின் வயிற்றுப் பகுதியில் வைத்தால், எவருடைய தலையீடும் இல்லாமல், அது நகர்ந்து நகர்ந்து தாயின் மார்புக்காம்பைப் பற்றி சீம்பாலை அருந்துவதை அறிவியல் பார்த்து வியந்திருக்கிறது. குழந்தைக்கு அந்த அறிவு பிறக்கும்போதே 'Pre loaded’-ஆக மூளையில் பதிக்கப்பட்டிருக்கிறது போலும். ஆனால், மூன்றாம் மாதத்தில் அப்பா முகம் பார்த்துச் சிரிப்பதும், தடுப்பூசி போடவரும் நர்ஸைப் பார்த்து முகம் திருப்பிக்கொண்டு கை, கால் உதைத்து அழுவதும், நினைவுகளை மூளையில் பதியவைத்து பின் எடுக்கப் பழகும் வித்தையைக் குழந்தைகள் கற்றுக்கொள்வதாலேயே நடக்கின்றன.
செய்திகளை, தற்காலிக ஞாபகம், நீடித்த ஞாபகம் என மூளை வேறு வேறு வடிவில் பதிவுசெய்யும். தற்காலிக ஞாபகம் ஒலி வடிவில் (Acoustic) மூளையில் பதியும். ஒரு தொலைபேசி எண்ணை செவி வழியில் கேட்டு டயல் செய்த பிறகான 30 நொடிகளில் அந்த எண்ணை நாம் மறந்துபோவது, அந்த Acoustic Storage  எனும் தற்காலிக ஞாபகத்திறன் மூலம்தான். மூச்சு முட்டும் பணியில் இருக்கும்போது, 'ஏங்க... வீட்டுக்கு வரும்போது கால் கிலோ வெண்டைக்காய் வாங்கிட்டு வாங்க’ என்று மனைவி போனில் சொல்வதை, மூளையின் தற்காலிக ஞாபக டிபார்ட்மென்டில் போடுவதால்தான், அந்தக் கணமே அதை மறந்து, அம்மாஞ்சியாக வீட்டுக்குச் சென்று 'தேமே’ என்று திட்டு வாங்கிக்கொண்டு இருப்போம்.
நாம் கேள்விப்படும் விஷயம், தற்காலிக ஞாபக டிபார்ட்மென்ட்டா... நாள்பட்ட ஞாபக டிபார்ட்மென்ட்டா... என்பதை நாம் தெளிவாக முடிவுசெய்து பதியப் பழகிக்கொண்டால் மட்டுமே நினைவாற்றல் மிளிரும். இந்தத் துரித உலகில் தூக்கமின்மை, மன இறுக்கம், இரைச்சலான சுற்றுச்சூழல்... எனப் பல காரணிகள் நம் மறதியை அதிகரிக்கின்றன. பள்ளி/பரீட்சை சார்ந்த, பணி சார்ந்த, பயன் சார்ந்த விஷயங்களைத் தவிர பிறவற்றை எல்லாம் தற்காலிக ஞாபகப் பதிவில் வைத்துக்கொள்ள நவீனம் கற்றுக்கொடுப்பதில்தான் மனித மூளை கொஞ்சம் மங்க ஆரம்பித்துவிட்டது.
சாதாரணமாக, 150 தொலைபேசி எண்களை மூளையில் பதிந்துவைத்திருக்கும் நாம் செல்போனில் கணக்கில் அடங்கா எண்களைப் பதியத்தொடங்கியதும், 'டேய் மாப்ள... என் செல்போன் நம்பர் உன் போன் புக்ல பார்த்துச் சொல்லேன்...’ எனக் கேட்கத் தொடங்கிவிட்டோம். நம் அன்றாட வாழ்வில் சட்டை, பேன்ட் போல ஒட்டிக்கொண்ட  'E’ (எலெக்ட்ரானிக்) உபகரணங்கள் இன்னொரு காரணம்!
அந்தக் காலத்தில் சந்தம் மாறாமல், ஆயிரக்கணக்கில் பதியம் பாடியதற்கும், 'நாலு மரக்கா நெல் ஏன் குறையுது? கார்த்திகையில பூ பிடிக்கணுமே... என்னாச்சு?’ என கணக்காகக் கேள்வி பிறந்ததற்கும் அன்றைய சலனமற்ற நுண்ணறிவும், சிதைவு பெறாத பாரம்பரிய உணவும், அதிகம் ஆர்ப்பரிக்காத மனமும் முக்கியமான காரணிகள். தவிர, நினைவாற்றலைக் கூட்டும் எளிய தாவரங்களை உணவாக உட்கொண்டதும் வரலாறு!
வல்லாரைக் கீரை தோசை அப்படியானது தான். வெளி உபயோகமாக நாள்பட்ட புண்களை ஆற்றுவதில் பயனாகும் இந்தக் கீரையின் தாதுச்சத்துகள், மனதைச் செம்மையாக்கி நல்ல உறக்கமும், தீர்க்கமான நினைவாற்றலும் தரும். வலிப்பு நோய்க்கு இதைப் பயன்படுத்துவது குறித்த ஆய்வுகள் நடைபெற்றிருக்கின்றன.
சங்கு வடிவில் பூக்கும் சங்குப் பூ எனும் மூலிகை, நீர்ப்பிரமி எனும் பிரமிச்செடியும், நினைவாற்றல் திறனை அதிகரிக்கும் நுண்தாவரக் கூறுகள் கொண்டவை. அதன் ஆய்வு முடிவுகளை வைத்தே, 'இன்னும் இரண்டு ஸ்பூன் சேர்த்துச் சாப்பிட்டால், உங்க கடந்த காலம்கூட ஞாபகம் வரும்’ என்ற ரேஞ்சில் விளம்பரப்படுத்தி ஏகப்பட்ட உணவுகள் சந்தையில் விற்கப்படுகின்றன.
இயல்பிலேயே DHA அதிகம் உள்ள மீன்கள், POLYPHENOLS, TRITERPENOIDS உள்ள வண்ணக்கனிகள், சிறு தானியங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டே, விலை உயர்ந்த சந்தை உணவுகளைத் தவிர்க்கலாம்.
நடைப்பயிற்சிக்குக் கிடைத்த அலாதியான வரவேற்பு இன்னும் மூச்சுப்பயிற்சிக்குக் கிடைக்கவில்லை. ஒருவேளை, அதைத் தவக்கோலத்தோடு ஒட்டியே பார்த்து, 'ஓ... இது முனிவர்கள் பிராப்பர்ட்டி போல’ என பெருவாரியானோர் பயந்ததுகூட காரணமாக இருக்கலாம். ஆனால், மூச்சுப்பயிற்சியில் நடைபெற்றுவரும் ஆய்வுகளை உன்னித்துக் கவனித்தால், அது தரும் விவரங்கள் ஏராளம். பலர் நினைப்பது போல அது ஆக்சிஜன் அள்ளும் விஷயம் மட்டுமல்ல; நுரையீரலின் துணைகொண்டு மூளைச்சுரப்பிகளை, நரம்புகளை, திசுக்களை, நிணநீர் ஓட்டத்தை ஆளும் விஷயம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
'காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளனுக்குக் கூற்றை உதைக்கும் குரியதுவாமே’ என மூச்சை ஆளும் உத்தி சொன்ன நம் முன்னோருக்கு, மூச்சுப்பயிற்சி நரம்பு மண்டலம் மூலம் வேலை செய்கிறதா அல்லது ஆண்டவர் மூலம் வேலை செய்கிறதா எனத் தெரியாது. ஆனால், அதைப் பயிற்சி செய்தால் நோயின்றி நீடூழி வாழலாம்; கல்வி கேள்வியில் உயரலாம் எனக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கிறது!
'பயன்படுத்து; பின் கசக்கி எறி’ - சித்தாந்தம்கொண்ட துரித நவீனக் கலாசாரம், பொருளில் மட்டுமல்லாது; நாம் அன்றாடம் கடக்கும் அன்பு, காதல், கரிசனம், மெனக்கெடல், அரவணைப்பு, மரபு பழக்கம்... என எல்லாவற்றையும் மூளை தற்காலிகப் பதிவில் மட்டுமே கட்டமைத்துள்ளன. பயன் முடிந்ததும் தூக்கி எறிவதில்தான், நம் சமூகத்தில் பழக்கமே இல்லாத வயோதிகத்தின் அவமானமும், அடையாளமே மறந்துபோகும் அல்சிமர் நோயும் இப்போது பெருவாரியாக முளைக்கின்றன போலும்!
- பரிமாறுவேன்...
- Vikatan

No comments:

Post a Comment