Saturday, April 5, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 33

இரண்டு மாபெரும் கொலைச் சம்பவங்களுக்கு மத்தியில் ராஜீவ் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

ஒன்று - இந்திராவின் படுகொலையைத் தொடர்ந்து சீக்கிய சமுதாயத்தவர்களாகப் பார்த்துப் பார்த்து பச்சைப் படுகொலைகள் செய்தது.
இரண்டாவது - பல்லாயிரக்கணக்கானவர்கள் செத்தும் பல லட்சக் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டும்போன பஞ்சாப் யூனியன் கார்பைடு சம்பவம்.
இரண்டிலுமே தனது தகுதியின்மையை ராஜீவ் நிரூபித்தார். இந்திராவைக் கொலை செய்தது அவருக்குப் பாதுகாவலராக இருந்த இரண்டு பேர். இருவருமே சீக்கியர்கள். அதற்காக சீக்கியர்கள் அனைவருமே குற்றவாளிகள் ஆகிவிட முடியுமா? அதிகாரம் கையில் இருந்தால் அப்படித்தானே தீர்ப்பளிக்க முடியும்? இந்திராவை கொலை செய்தது சீக்கியர் என்று கேள்விப்பட்டதுமே சீக்கியர்கள் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களைப் பார்த்துப் பார்த்து கொலை செய்தார்கள். 1947 இந்தியப் பிரிவினைக்குப் பிறகு 1984-ல்தான் கூட்டுக் கொலைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தவர், இனத்தவருக்கு எதிராக திட்டமிட்டு படுகொலை நடத்தப்பட்டது. சீக்கிய படுகொலைகளின் மொத்த சாராம்சத்தையும், 'காந்திக்குப் பிறகு இந்தியா’ என்ற தனது புத்தகத்தில் ராமச்சந்திர குஹா படம் பிடித்துக் காட்டுகிறார்.
''அக்டோபர் 31 இரவு தொடங்கிய வன்முறை நவம்பர் முதல் இரண்டு நாட்கள் தீவிரமடைந்தது. முதல் மோசமான சம்பவங்கள் தெற்கு டெல்லியிலும் மத்திய டெல்லியிலும் நடந்தன. அடுத்து அந்த நடவடிக்கை, கிழக்கு யமுனையைக் கடந்து அங்கிருந்த புனர் வாழ்வுக் குடியிருப்புகளுக்குப் பரவியது. எங்கும் சீக்கியர்கள் மட்டுமே இலக்காக இருந்தனர். அவர்களுடைய வீடுகள் எரிக்கப்பட்டன. அவர்களுடைய கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அவர்களுடைய கோயில்களும் மத நூல்களும் அவமதிக்கப்பட்டன. வெறிபிடித்த மக்கள், 'சர்தார்களைத் தீர்த்துக்கட்டு’, 'துரோகிகளைக் கொன்று போடு’, 'சீக்கியர்களுக்குப் பாடம் கற்பி’ என்பது போன்ற கோஷங்களை எழுப்பியதாக நேரில் கண்டவர்கள் கூறினார்கள்.
டெல்லியில் மட்டும் வன்முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் முடிந்தனர். 18 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட சீக்கிய ஆண்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர். அவர்கள் பல விதங்களில் கொல்லப்பட்டனர். அதுவும் அவர்களுடைய தாய் மற்றும் மனைவிக்கு முன்பாக உடல்கள் கொளுத்தப்பட்டன. ஒரு சம்பவத்தில் சிறு குழந்தையை தந்தையுடன் சேர்த்து எரிக்கும்போது, 'ஏ சாம்ப் கா பச்ச ஹை. இஸே பீ கதம் கரோ’ (இது ஒரு பாம்புக் குட்டி. இதையும் சேர்த்துத் தீர்த்துக்கட்டு) என்று கோஷமிட்டனர்.
வெறிக்கூட்டத்தில் இருந்தவர்களை, பெரும்பாலும் காங்கிரஸ் அரசியல்வாதிகளான மாநகர கவுன்சிலர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏன் மத்திய மந்திரிகளேகூட வழிநடத்தினர். இந்த வேலையைச் செய்ய விரும்பி வந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பணமும் மதுவும் அளிப்பதாக உறுதி கூறினர். கூடவே அவர்கள், தாங்கள் கொள்ளையடிக்கும் பொருள்களையும் எடுத்துக்கொள்ளலாம். போலீஸ் இதனைப் பார்த்துக் கொண்டிருந்ததுடன் கொலை செய்வதற்கும் கொள்ளை அடிப்பதற்கும் தீவிரமாக உதவவும் செய்தனர்.
தீன்மூர்த்தி இல்ல வாயிலில் கூடியிருந்த வெறிக்கூட்டம், 'ரத்தத்துக்கு ரத்தம்’ என்று கோஷமிடுவதை தூர்தர்ஷன் காட்டியதன் மூலம் அந்த நிகழ்ச்சி நிஜத்தில் ஏற்பட அதுவே காரணமாயிற்று. போலீஸின் அலட்சியம் அதிர்ச்சி ஊட்டியது. காங்கிரஸ் அரசியல்வாதிகளின் பங்கு அறத்துக்குப் புறம்பானது. இந்த எல்லாத் தவறுகளையும்விட ராணுவத்தை அழைக்க விருப்பமின்றி இருந்தது மிகமிக மோசமானது. டெல்லியிலேயே பெரிய ராணுவக் குடியிருப்பு இருந்தது. தலைநகரின் 50 மைல் சுற்றுப்புறத்தில் பல தரைப் படைப் பிரிவுகள் இருந்தன. பிரதமருக்கும் உள்துறை அமைச்சர் பி.வி.நரசிம்மராவுக்கும் திரும்பத் திரும்ப வேண்டுகோள் விடுத்தும் அவர்கள் ராணுவத்தை அழைக்கவில்லை. 1, 2 தேதிகளில் நகரில் ராணுவ பலத்தைக் காட்டியிருந்தால் ஒருவேளை அது கலவரத்தை அடக்கியிருக்கும். ஆனால், ஆணை வரவேயில்லை''. அந்த மாபெரும் மனிதப் படுகொலையின்போது ராஜீவ் என்ன சொன்னார் தெரியுமா? ''பெரிய மரம் விழும்போது, தரை அதிரத்தான் செய்யும்!''
இந்திராவின் கொலையை யாராலும் நியாயப்படுத்த முடியாது. அதற்காக ஆயிரக்கணக்கான சீக்கியர்களைக் கொன்றதை நியாயப்படுத்த முடியுமா? அமைதியானவர், சாந்த மானவர், அரசியலை வெறுக்கக் கூடியவர், வேறு வழியில்லாததால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார் என்று சொல்லப்பட்ட ராஜீவின் வாயில் இருந்துதான் இந்த வார்த்தைகள் வந்தன. இந்திராவின் கொலை மாபெரும் சதியின் விளைவு என்பதைப் போலவே சீக்கியர்களின் மீது நடத்தப்பட்டதும் சதித்திட்டமே தவிர தற்செயலானது அல்ல.
காங்கிரஸுக்கும் அகாலி தளம் கட்சிக்குமான வெறுப்பின் விளைவே இந்தச் சம்பவங்கள். 1980-ல் வெற்றிபெற்று பிரதமராக வந்த இந்திரா, பஞ்சாப்பில் சுர்ஜித் சிங் பர்னாலா தலைமையிலான அகாலிதளம் ஆட்சியையும் கலைத்தார். இது சீக்கியர்கள் மனதில் வெறுப்பாக மாறியது. இந்த வெறுப்பை பிந்த்ரன்வாலே பயன்படுத்திக் கொண்டார். காங்கிரஸும் சீக்கியர்களும் எதிரெதிராக அரசியல்ரீதியாக நின்று அது வன்முறை வழியாக மாறியது. பொற்கோயில் என்ற புனித இடம் இதற்கான மையமாக மாறியது. பிந்த்ரன்வாலே குழுவினரைக் கைது செய்வதற்காக 1984 ஜூன் 4, 6 தேதிகளில் ராணுவத்தை அனுப்பினார் இந்திரா. ஆபரேஷன் புளு ஸ்டார் என்று சொல்லப்பட்ட அந்த நடவடிக்கையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் பிந்த்ரன்வாலே கொல்லப்பட்டார். ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தீவிரவாதிகள் மீதான தாக்குதல் என்று சொல்லப்பட்டாலும் தங்கள் மதத்தினரின் புனிதத்தலமான பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பியது இந்திரா மீது வெறுப்பை விதைத்தது. இதனால்தான் அவர் கொல்லப்பட்டார். எனவே அகாலிதளம் - காங்கிரஸ் - சீக்கியர் பகை என்பது பல வருடங்களாகக் கனன்று கொண்டு இருந்தது. அதற்கு திட்டமிட்டு பழிதீர்ப்பதாகவே சீக்கியப் படுகொலைகள் நடந்தன. இது ராஜீவ் ஆட்சியின் முதல் களங்கம்!
கொலைக்குக் காரணமானவர்களைக் காப்பாற்ற இன்றுவரை காங்கிரஸ் அரசாங்கம் துடித்துவருவது அதைவிடப் பெரிய களங்கம்!
இரண்டாவது, போபால் விஷவாயுக் கசிவு. ராஜீவ், பதவிக்கு வந்த ஒரு மாதத்தில் நடந்தது இந்தச் சம்பவம். 1984 டிசம்பர் 3-ம் தேதி போபால் நகரத்தைச் சுற்றி புகை மூட்டம் கண்டது. வீடுகளில் தூங்கிக்கொண்டு இருந்தவர்களுக்குக்கூட இருமல் வந்தது. வெளியே ஓடிவந்தார்கள் பலர். எழுந்திருக்கவே முடியாமல் மயங்கினார்கள் பலர். அதற்குக் காரணம் நச்சு வாயு. அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைட் 'பூச்சிக்கொல்லி மருந்து நிறுவனத்தை அங்கு நடத்தி வந்தது. மீதைல் ஐசோ சயனைட் என்ற வாயு திடீரென வெளியேறியது. எந்த விதமான பரிசோதனைகளும் இல்லாமல் அலட்சியமாக அதனை வெளியேற்றிவிட்டார்கள். விஷத்தன்மைகொண்ட அந்த வாயுவை, அதன் விஷத்தன்மையை நீக்கி வெளியிட வேண்டும். ஆனால், அதனைச் செய்யாமல் விஷமாகவே வெளியிடப்பட்டது. காற்றில் விஷப்புகை பரவினால் என்ன ஆகும்? சுவாசிப்பவர்கள் அனைவருமே சுருண்டு விழுந்தார்கள். இந்த விபத்துக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டர்சன் கைது செய்யப்பட்டு உடனே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரை உடனடியாக அமெரிக்காவுக்குச் செல்ல காங்கிரஸ் அரசு அனுமதித்தது.
பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்புக்கு காரணமான ஆண்டர்சனை பாதுகாப்பாக அனுப்பியதற்கு அவர்கள் சொன்ன காரணம், 'அவரைக் கைது செய்தால் இரண்டு நாடுகளின் நல்லுறவு பாதிக்கப்படும்’ என்றார்கள். எத்தனை ஆயிரம் பேர் செத்தாலும் பரவாயில்லை நாட்டின் நல்லுறவு காப்பற்றப்பட்டால் போதும் என்று அன்று முடிவெடுத்ததால்தான் இன்று ஒரு தேவயானியைக்கூட இந்தியாவால் மீட்க முடியாமல் போனது. இன்று வரை யூனியன் கார்பைடு மரணங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய அழிவு விபத்தாக இன்று வரை நிழலாடுகிறது போபால். அந்த நச்சு வாயுக்கள் இன்றுவரை காற்றில் கலந்துகொண்டு இருக்கின்றன.
இப்படிப்பட்ட இரண்டு பேரழிவுகளுக்கு மத்தியில் பிரதமராக ராஜீவ் வந்தார்.
இந்திரா மரணம், மேனகா வெளியேற்றம், கணவர் பிரதமர் - இந்த சூழ்நிலையில் சோனியா வெளிச்சத்துக்கு வந்தார். ''1984-89 ராஜீவ் பிரதமராக இருந்த காலத்தில் சோனியா அரசியலில் கலக்காமல் ஒரு சாதாரண குடும்பப் பெண்ணாக வாழ்ந்து வர முயன்றார். அவருக்கு வெகு சில ஐரோப்பிய மற்றும் இந்திய நண்பர்களே இருந்தனர். அவர்களில் பலர் வெளிநாட்டு தூதுவர்களாகவும் சிலர் தொழிலதிபர்களாகவும் இருந்தனர். ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டால் இந்த நண்பர்கள் நம்பர் 5, ரேஸ் கோர்ஸ் வீட்டுக்கு வந்து பிரெஞ்ச், ஸ்பானீஷ் மொழிகளில் பேசி அரட்டையாடினார்கள். ஒட்டோவியோ குவாட்ராச்சியும் அப்படிப்பட்ட ஞாயிற்றுக்கிழமை நண்பர்களில் ஒருவர்தான்!'' என்று சோனியாவின் வரலாற்றை எழுதிய ரஷீத் கித்பாய் எழுதியிருக்கிறார்.
1987 ஏப்ரல் 16-ம் நாள் ஸ்வீடன் நாட்டு வானொலி சொல்லிய செய்தி குவாட் ராச்சியையும் சோனியாவையும் ராஜீவையும் யார் என்று இந்தியாவுக்கு நிஜமாய்ச் சொன்னது!

- Vikatan

No comments:

Post a Comment