Friday, October 11, 2013

ஜெயிக்கும் குதிரையா... சொதப்பல் ஜோக்கரா? - ராகுல்காந்தி டோட்டல் ஸ்கேன்

சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்பு கோட்-சூட், டர்பன் சகிதமாக மன்மோகன் சிங் பிரதமர் ஆனபோது, 'இவர் சராசரி அரசியல்வாதி இல்லை; 'பொருளாதார மேதை’, 'மிஸ்டர் க்ளீன்’ என்றார்கள். ஒன்பது ஆண்டு காலம் முடிந்துவிட்டன. மன்மோகன், இந்தியாவை இரு சுற்றுகள் ஆண்டு முடிக்கப் போகிறார். இதோ மறுபடியும் தேர்தல் வருகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ராகுல் காந்தி முன்நிறுத்தப்படுகிறார். இப்போது 'இவர், சராசரி அரசியல்வாதி இல்லை; பதவி ஆசை இல்லாதவர்; கிராமங்களின் ஆணிவேர் வரை அறிந்தவர்’ என்கிறார்கள்.
  ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பிரதமர் வேட்பாளராக இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், அவரைத் தாண்டி இன்னொருவர் அந்த இடத்துக்கு வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. பெரும் 'மீடியா லாபி’யுடன் களத்தில் முன்நிற்கும் மோடியை, ராகுல் சமாளிப்பாரா? தொடர்ந்து மூன்றாம் முறையாக காங்கிரஸை ஆட்சிபீடத்தில் ஏற்றுவாரா? ராகுல் காந்தியின் பலம், பலவீனங்கள் குறித்த அலசல்கள் இங்கே...
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தி, காங்கிரஸ் கட்சியால் வெற்றிபெற முடியுமா? 2ஜி தொடங்கி நிலக்கரி வரையிலான பிரமாண்ட ஊழல் குற்றச்சாட்டுகளை ராகுல் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்? காங்கிரஸ் கூட்டணியின் பிரதிநிதி என்ற அடிப்படையில் அதன் நன்மை, தீமைகளுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளும் பக்குவம் ராகுலுக்கு இருக்கிறதா? பதில் சொல்கிறார்... இளைஞர் காங்கிரஸின் முன்னாள் தேசியப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜோதிமணி.
''ராகுல்... புதிய நம்பிக்கை!''
''அரசியலில், 'ஊழலை’ ஒரு பொது விவாதமாக கொண்டுவந்ததில் முன்னோடி, ராஜீவ் காந்தி. அவரது வழித்தடத்தைப் பின்பற்றி, கட்சிக்குள்ளும் வெளியிலும் ஊழலை ஒழிக்க ராகுல் முயற்சிக்கிறார். குறிப்பாக, 'அரசியலில் லஞ்சம்; அரசியல்வாதிகள் இடையே லஞ்சம்’ என்றுதான் பொத்தாம்பொதுவாக பேசுகிறார்களே ஒழிய... அரசியல் கட்சிகளில் புழங்கும் லஞ்சம், ஊழல்குறித்து யாரும் பேசுவது இல்லை. ராகுல் ஒருவர்தான் இதுகுறித்துப் பேசிவருகிறார். அதற்கான முன்முயற்சியாக, வெளிப்படைத் தன்மையுள்ள அரசியல் கட்சியாக காங்கிரஸை மாற்ற மெனக்கெடுகிறார். அதற்கான உதாரணம்தான் 2006-ல் நடத்தப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான உள்கட்சித் தேர்தல். ஒட்டுமொத்த இந்திய அரசியல் கட்சிகளிலேயே முதல்முறையாக ஜனநாயக முறைப்படி வாக்களித்து, உள்கட்சி நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர். கடும் எதிர்ப்புகளையும் பிரச்னைகளையும் தாண்டி ராகுல் இதைச் சாதித்தார்.
குற்றப் பின்னணி உடையவர்கள் எம்.பி., எம்.எல்.ஏ-வாக பதவி வகிப்பதைப் பற்றிய சர்ச்சை இப்போதுதான் பேசப்படுகிறது. ஆனால் ராகுல், அன்றைக்கே இளைஞர் மற்றும் மாணவர் காங்கிரஸில் கிரிமினல் பின்னணி உள்ளவர்கள் போட்டியிடுவதைத் தடை செய்தார். இப்படி தொடர்ந்து செய்யும்போது குற்றப் பின்னணி கொண்டவர்கள், ஆரம்ப மட்டத்திலேயே தடுத்து நிறுத்தப்படுவார்கள். இன்னும் 10 ஆண்டுகள் கழித்து இதன் நேர்மறை விளைவை நாம் உணர முடியும்.
சாதி பார்த்து, பணம் பார்த்து, ஆள்பலம் பார்த்து பதவி கொடுத்து வளர்த்துவிடுவது தான் இன்றைய அரசியல் கட்சிகளின் பொது இயல்பு. 'ஓட்டு போடுவதோடு ஒதுங்கி நில்லுங்கள்’ என்று மக்களை விலக்கி வைத்துவிட்டு, அரசியல் கட்சிகள் விருப்பம் போல ஆட்டம் போடுகின்றன. இதைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்கான ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்தவும் அரசியல் கட்சிகள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். அதை ராகுல் காந்தி செய்கிறார்.
அதேபோல இன்றைய அரசியல் கட்சிகளுக்குள், 'ஜனநாயகம்’ என்பது பெயர் அளவுக்குதான் இருக்கிறது. நான் காங்கிரஸ் கட்சியையும் சேர்த்தே சொல்கிறேன். இதை நேர்மையாக ஒப்புக்கொண்டு வெளிப்படையாக திறந்த விவாதம் நடத்த ராகுல் முயற்சிக்கிறார். அதில் என்ன தவறு? மற்ற அரசியல் கட்சிகளிடம் இதை நீங்கள் ஒரு துளிகூட காண முடியாது!''
''காங்கிரஸ் கட்சியின்மேல் உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து, ராகுல் காந்தியைத் துண்டித்து தனியே பார்க்க முடியுமா?''
''ஊழல், எல்லா நாடுகளிலும் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது. ஆனால், அது தன் சொந்தக் கட்சியிலேயே, சொந்த அரசாங்கத்திலேயே நடைபெற்றாலும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது எத்தனை இடங்களில் நடக்கிறது? தாங்கள் கொண்டுவந்த கொள்கையில் பிழை என்றால், அதை ஒப்புக்கொண்டு சரிசெய்யும் மனத்துணிவு எத்தனை பேருக்கு இருக்கிறது?
காங்கிரஸ் கூட்டணி அரசைப் பொறுத்தவரை, மூன்று பெரிய ஊழல்களைக் குறிப்பிடலாம்.
1) 2ஜி அலைக்கற்றை ஊழல். இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2) காமன்வெல்த் ஊழல். இதில் சுரேஷ் கல்மாடி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் சிறையில் இருக்கிறார்.
3) ஆதர்ஷ் வீட்டுவசதி வாரிய ஊழல். இது, மிகச் சிறிய ஊழல். காங்கிரஸைச் சேர்ந்த மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர், ஒரு வீட்டை தனது மாமியாருக்கு ஒதுக்கிவிட்டார் என்பது குற்றச்சாட்டு. இதற்காக அவர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். அதற்கு, ராகுல் காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். நிலக்கரி ஊழலைப் பொறுத்தவரை, 1993-ல் தொடங்கி, 2012 வரையிலுமான சுரங்கக் கொள்கையின் அடிப்படையில் அது மதிப்பிடப்படுகிறது. இதில், பல மாநிலங்களும் அரசியல் கட்சிகளும் சம்பந்தப்பட்டுள்ளன. காங்கிரஸை மட்டும் குற்றம் சாட்டுவது உள் நோக்கம் கொண்டது!''

''ராகுல் காந்தி, திடமான முடிவு எடுப்பதில் தயக்கம் கொண்டவராகவே இருக்கிறாரே?'
''பஞ்சாப்பில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலை நடத்த உள்கட்சியில் எதிர்ப்பு வந்தபோது, 'இளைஞர் காங்கிரஸ்’ என்ற அமைப்பை முழுவதும் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தியவர் ராகுல். சமீபத்தில் குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் பதவி இழப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, அவசரச் சட்டம் கொண்டுவர நாடாளுமன்றம் முயன்றது. தன் சொந்தக் கட்சியின் அமைச்சரவையாக இருந்தபோதிலும் அதைக் கடுமையாக விமர்சித்தவர் ராகுல். தான் மட்டுமே தலைவராக இருக்க வேண்டும் என்று எண்ணாமல் நாடு முழுவதும் பிரதேசத் தலைமைகளை உருவாக்குவதில் ராகுல் முன் நிற்கிறார். 'மற்றவர்கள் வளர்ந்து வந்தால், தன் இடம் போய்விடுமே!’ என்ற பயமற்ற துணிச்சல்காரர் அவர். காந்தியின் வழியில், நாட்டின் கிராமங்களை நேரடியாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறார். அதனால்தான் எத்தனையோ பாதுகாப்பு பிரச்னைகளையும் தாண்டி துணிவுடன் கிராமத்துக் குடிசைகள் வரையிலும் செல்கிறார். அவர் எளிமையாக இருப்பதால், உறுதியற்றவர் என்று சொல்ல முடியாது!''
''ராகுல் காந்தி என்கிற தனிநபர், மாற்றத்தை விரும்புகிறார் என்றே வைத்துக்கொண்டாலும், கட்சியின் கொள்கை அளவில் மாற்றத்தைக் கொண்டுவராமல் அவரால் என்ன செய்ய முடியும்?'
''1991-ல் அரசாங்கம் தனியார்மய, தாராளமயக் கொள் கைகளைக் கொண்டுவந்தது. அவற்றின் மூலம் மக்களை வளப்படுத்த முடியும் என்று நம்பினார்கள். ஆனால், அந்தக் கொள்கைகள் கோடீஸ்வரர்களையும் நடுத்தர வர்க்கத்தினரையும் மேம்படுத்தியதே தவிர, பல கோடி ஏழைகளுக்கு வளங்களைப் பகிர்ந்து அளிக்கவில்லை. இதை ராகுல் காந்தி உணர்ந்திருக்கிறார். அதனால்தான், அதிகாரப் பரவலாக்கம் என்பதையும், திட்டங்களுக்கான நிதி, பஞ்சாயத்து அளவில் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார். அரசுக்கு வெளியில் இருந்து கருத்தளவில் இதை ஏற்றுக்கொள்ளும் ராகுல், அரசின் உள்ளே செல்லும்போது இதை கொள்கையாக நிச்சயம் அமல் படுத்துவார்.''

ராகுல் காந்தியை புதிய நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதமுடியுமா?, 10 ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணி அரசின் மீதான மக்களின் அதிருப்திகளை அவரால் எதிர்கொள்ள முடியுமா? பதில் சொல்கிறார், தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்.
''ராகுல்... நச்சுச் சூழலின் வாரிசு!''
''காங்கிரஸ் கட்சி, கிட்டத்தட்ட 10 ஆண்டுகாலம் இந்தியாவை ஆட்சி செய்து மக்களிடம் பெரும் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. எதிர்வரும் தேர்தல் அந்தக் கட்சிக்குப் பெரும் சவாலாக இருக்கப்போகிறது. ஆகவேதான், அவர்கள் தோற்றுப்போன ஓர் அரசின் பிரதிநிதியான மன்மோகன் சிங்கை ஓரம் கட்டிவிட்டு, ராகுல்  காந்தியை முன்னே கொண்டுவருகின்றனர். ஆனால், இந்தச் சீரழிந்த அரசியல் சூழலில் ராகுல் காந்தி எந்த வகையிலும் வேறுபட்டவராகவோ, நம்பிக்கை அளிப்பவராகவோ இல்லை என்பதுதான் யதார்த்தம்.
நாளைக்கே ராகுல் காந்தி பிரதமராக வந்தாலும், மன்மோகன் சிங் செயல்படுத்திக் கொண்டிருக்கும் இதே தனியார் மய, தாராளமயக் கொள்கைகளைத்தான் இன்னும் வேகமாக; நாசூக்காக அமல்படுத்தப்போகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில், இன்றைய அரசியல் என்பது கட்சிகளும் கம்பெனிகளும் இரண்டறக் கலந்ததாக மாறிவிட்டது. முன்பு எல்லாம் கம்பெனிகள், கட்சிகளுக்கு காசு கொடுத்து காரியம் சாதித்துக்கொள்வார்கள். அதை நாம் 'லஞ்சம்’ என்போம்; அவர்கள் 'நன்கொடை’ என்பார்கள். இப்போது இந்த இடைவெளியே இல்லை. கம்பெனியே கட்சி ஆரம்பிக்கிறது; கட்சிக்காரர்கள் கம்பெனி ஆரம்பிக்கிறார்கள். இதனால் கம்பெனிகளின் ஒட்டுண்ணிகளாக, 'கட்சிக்காரர்கள்’ பரிணாம வளர்ச்சி அடந்துள்ளனர். இந்த 'ஒட்டுண்ணி முதலாளிகள்’ இருக்கும்வரை ராகுல் காந்தியால் எந்த மாற்றத்தையும் செயல்படுத்த இயலாது.''
''அதாவது, 'ராகுல் காந்தி நல்லது செய்யத்தான் நினைக்கிறார். ஆனால், அரசியல் சூழல் அவரது கைகளைக் கட்டிவைத்திருக்கிறது’ என்கிறீர்களா?''
''இல்லை. அப்படி நல்லது செய்ய நினைப்பவராக இருந்தால், 'நான்சென்ஸ்’ என்று பிரதமருக்கு எதிராக அற ஆவேசத்துடன் பொங்கி எழும் அவர், தன் சொந்த சகோதரியின் கணவரான ராபர்ட் வதேராவின் டி.எல்.எஃப்  முறைகேடுகளை வன்மையாகக் கண்டித்திருக்க வேண்டும். ஹரியானா மாநிலத்தையே வளைத்துப்போடும் அளவுக்கான வதேராவின் நிலச் சூறையாடல் வெளிப் படையாக அம்பலப்பட்ட பின்னரும், ராகுல் காந்தி பெயர் அளவுக்குக்கூட கண்டிக்கவில்லை. இதில் கள்ள மௌனம் சாதித்துக்கொண்டு, உத்தரப்பிரதேசத்தின் குடிசை வீட்டில் கஞ்சி குடிப்பதால் மட்டும் அவர் ஏழைப்பங்காளன் ஆகிவிடமாட்டார். இந்தக் கஞ்சி குடிக்கும் காட்சியை எல்லாம் இவரது அப்பா ராஜீவ் காந்தி காலத்திலேயே பார்த்துவிட்டோம்.
கடந்த 2004 நாடாளுமன்ற தேர்தலில்கூட காங்கிரஸ் கட்சி, 'ஆம் ஆத்மி’ என்பதைதான் தங்களின் தேர்தல் முழக்கமாக முன்வைத்தது. 'ஆம் ஆத்மி’ என்றால், 'சாமானியன்’ என்று பொருள். அந்தச் சாமானியர்கள், கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லட்சம் கோடியைச் சூறையாடியிருக்கிறார்கள் என்பதைதான் நாம் பார்த்திருக்கிறோமே! இந்த நச்சுச் சூழலின் வாரிசான ராகுல் காந்தி மட்டும் எப்படி மேன்மையானவராக இருப்பார்?''
''காங்கிரஸையும் ராகுல் காந்தியையும் குறைந்தபட்சம் மதச்சார்பற்ற அம்சத்திலேனும் ஆதரிக்கலாம் அல்லவா?''
''பா.ஜ.க. மதவாதக் கட்சி என்பதாலேயே, காங்கிரஸ் மதச்சார்பற்ற கட்சியாகிவிடாது. உண்மையில், பா.ஜ.க. ஒரு தீவிர இந்துத்துவக் கட்சி என்றால், காங்கிரஸ் ஒரு மிதவாத இந்துத்துவக் கட்சி. பாபர் மசூதி இடிப்பு, நரசிம்மராவ் அரசின் பாதுகாப்புடன்தான் நடைபெற்றது.
மத்தியப்பிரதேசத்தில் பசு வதை தடைச் சட்டம் கொண்டுவந்த திக்விஜய் சிங், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். அதே திக்விஜய் சிங்தான், 'உமாபாரதி முட்டை கலந்த கேக் சாப்பிட்டார்’ என்று அதை ஒரு தேசியப் பிரச்னையாக மாற்றினார். குஜராத்தில் மோடி மட்டும்தான் மதவெறியரா? அங்கு பாரதிய ஜனதாவில் இருந்து விலகிவந்த அதே காவிக் கும்பல்தான் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களாக களம் இறக்கப்படுகின்றனர்.
இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் அகமதாபாத்தில்தான், தலித் மக்களுக்கு என்று தனியே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இப்படி நவீன நகர்ப்புறச் சேரிகள் அமைப்பதை காங்கிரஸ் தடுத்து நிறுத்தவில்லையே? குறைந்தபட்சம் குஜராத்தில்கூட வலுவான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்த வில்லையே? ஆகவே, காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்றது என்பது ஒரு போலித் தோற்றம். இதைத் தாங்கிப் பிடிப்பவராகவே ராகுல் காந்தியும் இருக்கிறார்.''
'' 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்’, '100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்’ போன்ற அம்சங்களில் காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தக்க அளவுக்கு செயல்பட்டிருக்கிறதே?''
''ஆர்.டி.ஐ. என்பது, பெரும் போராட்டத்துக்குப் பிறகு வேறு வழியே இல்லாமல் காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த திட்டம். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், பெரும் ஊழலுக்குள் சிக்கிக்கிடப்பதை நாடே அறியும்.
'தமிழ் இனம்’ என்று எடுத்துக் கொண்டாலும், காங்கிரஸ் கட்சி பெரும் துரோகம் இழைத்துவிட்டது என்பதையும், ஈழத் தமிழர்களின் இனப்படுகொலையை முன்னின்று நடத்தியது என்பதையும் யாராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது!
ஈழத் தமிழர்கள் ஒருபுறம் இருக்கட்டும். இந்தியத் தமிழர்களுக்கே காங்கிரஸ் கட்சியால் எந்தப் பயனும் இல்லை. தமிழ்நாட்டுக்கு, காங்கிரஸ் அரசால் எந்தப் பொருளாதார ஆதாயங்களும் இல்லை. தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 5.9 கோடி லிட்டர் மண்ணெண்ணெயை மானிய விலையில் மத்தியத் தொகுப்பில் இருந்து ஒதுக்கீடு செய்துவந்தார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக இதை 2.9 கோடி லிட்டராகக் குறைத்துவிட்டார்கள்.
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும் 13-வது நிதி ஆணையம், 'மத்திய அரசின் வருவாயில் இருந்து, ஆண்டு ஒன்றுக்கு 5.01 சதவிகிதம் நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளது. அதன்படிதான் ஒதுக்கீடும் நடந்துவருகிறது. ஆனால், சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், இந்த நிதி ஒதுக்கீட்டை 2.5 சதவிகிதமாகக் குறைத்துவிட்டார்கள். இதற்கு, 'தமிழ்நாடு செயல்திறன்மிக்க மாநிலம்’ என்று சப்பைக் காரணம் சொல்கிறார்கள். இது மோசடியான வாதம்.
தமிழ்நாட்டுக்கான வருமானம் எங்கிருந்து வருகிறது? இந்திய அரசு, இங்கிருந்து அள்ளிச்செல்லும் வரி வருவாயில் பாதியையாவது கேட்டுப் பெறக்கூடிய அரசியல் துணிச்சல், கருணாநிதிக்கோ, ஜெயலலிதாவுக்கோ கிடையாது. அதற்கு மாறாக டாஸ்மாக் கடைகளை திறந்து, மக்களுக்கு சாராயம் விற்று வருமானத்தைப் பெருக்குகிறார்கள். இந்தச் 'செயல்திறனுக்குதான்’ நிதியை பாதியாகக் குறைக்கிறார்கள். பின்தங்கிய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தவறு இல்லை. அதை மத்திய நிதியில் இருந்து ஒதுக்கிக் கொடுக்கவேண்டும். பக்கத்து மாநிலத்தின் நிதியில் இருந்து எடுத்துத் தரக் கூடாது. ஆக, காங்கிரஸ் ஆட்சி என்பது, தமிழ்நாட்டுக்கு நஷ்டத்தைதான் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது!''
'''மதவாதத்தை உயர்த்திப்பிடிக்கும் பாரதிய ஜனதாவின் மோடியைவிட, 'குறைந்த தீமை’ (Lesser evil) என்ற அடிப்படையில், காங்கிரஸின் ராகுல் பரவாயில்லை’ என்று சிலர் சொல்கிறார்களே?''
''எரியும் கொள்ளியில், சின்னக் கொள்ளி, பெரிய கொள்ளி என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது. தீமை என்றால் தீமைதான். 2004-ல் பா.ஜ.க. 'பெரிய தீமை’ (Greater evil); காங்கிரஸ் 'குறைந்த தீமை’ (Lesser evil). இப்போது அப்படியே தலைகீழாகத் தெரிகிறது. எது ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அது பெரிய தீமையாகத் தெரிவது இயல்பு. ஆனால், மக்களாகிய நமக்கு இரண்டு கழிசடைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. நாங்கள் 'தேர்தலைப் புறக்கணியுங்கள்’ என்கிறோம். அதையும் மீறி வாக்குச்சீட்டில் எதையாவது பதிவுசெய்ய வேண்டும் என்றால், இப்போதுதான் 'யார் மீதும் நம்பிக்கை இல்லை’ என்பதை பதிவுசெய்ய 'நோட்டா’ (NOTA) என்ற வசதி வாக்குச்சீட்டில் வந்துவிட்டதே... அதைப் பயன்படுத்துங்கள்.''

No comments:

Post a Comment