Saturday, October 5, 2013

ஆறாம் திணை

From Vikatan..

நீரின்றி அமையாது உலகு’. நம் உடலும் அப்படித்தான். உடலின்  ஒவ்வொரு சிறு செயல்பாடுகளுக்கும் அத்தியாவசியமான பொருள் நீர். அந்த நீரைத் தேவையான அளவு பருக மறந்த அறியாமையில் இருந்திருக்கிறது உழைக்கும் கூட்டம். இது இன்றைக்கு மட்டுமல்ல, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் இருந்திருக்கிறது என்பதற்கு சிறுநீரகக் கற்கள் குறித்த வரலாற்றுச் செய்திகளே சான்று!
'கலங்கியதோர் தண்ணீர்தான்
குடித்த பேர்க்கும்
வாட்டமாய் வரம்பு
தப்பித் திரிந்த பேர்க்கும்
வந்து சேரும் கல்லடைப்பு’ என்று பாடிய யூகி முனிவரும் சரி, 'நான் சிறுநீரகக் கல்லுக்கு அறுவைசிகிச்சை செய்ய மாட்டேன்; மருத்துவம் செய்யவே பரிந்துரைப்பேன்’ என ஹிப்போகிரட்டீஸ் செய்த சபதத்திலும் சரி, சிறுநீரகக் கல் அடைப்புக்கு மேற்கொண்ட வைத்தியமே ஒசாமா பின்லேடனின் ரகசிய இருப்பிடத்தை அமெரிக்கா கண்டறிய உதவிய சமீபத்திய சம்பவமும் சரி... பெருங்காலமாக அந்தச் சிறு கல்லை மனிதன் சுமந்து வந்திருக்கிறான் என்பதைப் பறைசாற்றுகின்றன!
மாசில்லாத, சுடவைத்து ஆறவைத்த தண்ணீரைக் குடித்தபோது அதிகம் வராத கற்கள், இப்போது ப்ளாஸ்டிக் குடுவையில், ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் செய்து, பல தர நிர்ணயக் கட்டுப்பாட்டுடன் தருவிக்கப்படுவதாகச் சொல்லப்படும் தண்ணீரை அருந்தும் காலத்தில் அதிகரித்து வருகிறது. பதப்படுத்தப்பட்ட அனைத்து உணவிலும், குடுவையில் அடைத்து விற்கப்படும் துரித உணவிலும், புதுப்புது பன்னாட்டு உணவிலும், பாட்டியின் ஊறுகாய் உணவிலும் எக்கச்சக்கமாகச் சேர்க்கப்படும் உப்புதான் சிறுநீரகக் கல் உருவாகப் பிரதான காரணம்.
போதாக்குறைக்கு, காலையில் வீட்டில் ஒரு டி.டி.எஸ். அளவுள்ள தண்ணீர், மதியம் அலுவலகத்தில் வேறு ஒரு தண்ணீர் கம்பெனியின் வேறு டி.டி.எஸ். அளவுள்ள தண்ணீர்... இப்படி ஒரே தண்ணீரே பல அவதாரங்களில் உடம்புக்குள் செல்ல, அதற்குப் பரிச்சயம் இல்லாமல் 'தேமே’ என விழிக்கிறது நம் உடம்பின் மரபணுக்கள். சுத்தமான தண்ணீர், குடிமக்களின் அடிப்படை உரிமை என்கிறது இந்திய அரசியல்அமைப்புச் சட்டம். ஆனால், அது அம்மா குடிநீராக 10 ரூபாய் பாட்டிலில் அடைக்கப்பட்டுக் கிடைத்தால் போதாது. குறைந்தபட்சம் அடி பம்ப்பிலோ தெருமுனைக் குழாயடியிலோ வர வேண்டும்.
'குளோபல் வார்மிங்’ எனும் புவி வெப்பமடைதல் பிரச்னை, சுட்டெரிக்கும் கோடை, பனிப்பாறை இளகல், எதிர்பாராத அளவில், எதிர்பாராத இடத்தில் மழை... ஆகியவற்றை மட்டும் தருவது இல்லை. மறைமுகமாக இந்தச் சூழல் இடர்பாடுகள் மனிதனின் சிறுநீரை அதிகரித்தோ அல்லது வற்றவைத்தோ கல் பிரச்னையில் கொண்டுவந்து நிறுத்துகிறது. நாகரிகம் எனக் கருதி, சுற்றுவட்டாரத்தில் 'ஒதுங்க’ வசதியில்லாத வாழ்விடச் சூழலோ, சிறுநீரை அடக்கும் பழக்கமோ இப்போது அதிகம். 'சிறுநீர், அடக்கக் கூடாத 14 வேகங்களுள் ஒன்று’ என்கிறது சித்த மருத்துவம். கல் உருவாவதற்கு, சிறுநீரை அடக்கும் பழக்கமே மிக முக்கிய காரணம்.
'அப்பன்டிசைட்டிஸ் இல்லை; சினைப்பை கட்டியும் இல்லை. இந்த வலி கல்லால் வந்தது’ என்று சிலபல சோதனைகளுக்குப் பின் மருத்துவர் சொன்னதும், பதற வேண்டியது இல்லை. '10 மி.மீ. வரையுள்ள கல்லைப் பார்த்து மிரளத் தேவை இல்லை’ என்கிறது இப்போதைய விஞ்ஞானம். வலியைச் சமாளித்து, கல்லைக் கரைக்கும் மருந்தே இதற்குப் போதுமானது. அதேசமயம், 'அட... இருந்துட்டுப் போகட்டும்’ என்ற அலட்சியமும் கூடாது. கல்லடைப்பு சில நேரத்தில் சிறுநீரகச் செயலிழப்பு வரை கொண்டு சேர்த்துவிடும்.
கல்லைக் கரைக்கும் அல்லது உடைக்கும் பல உணவுகள் நம்மிடம் உள்ளன. அதில், வாழைத்தண்டுக்கு முதல் இடம். சுரைக்காயும் வெள்ளைப்பூசணியும் கற்கள் வராமல் தடுப்பதில் கில்லாடிகள். வெள்ளரி, வாழைத்தண்டு போட்ட பச்சடியும், பார்லி கஞ்சியும், கற்காலத்தின் பொற்கால உணவுகள். பொங்கலுக்கும் இன்னும் பல சாங்கியத்துக்கும் வீட்டு வாசலில் கட்டும் கண்ணுப்பீளைச் செடி, காலைக் குத்தும் நெருஞ்சி முள் போட்டு, தேநீர் அருந்தினால் கற்கள் கரைந்து வெளியேறும் என்பதை, கரிசல் காட்டுச் சித்தரும், கடல் கடந்து படித்துவந்த விஞ்ஞானிகளும்கூட வலுவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதேபோல், 'கல் இருக்குப்பா... நான் கால்சியம் பக்கமே போக மாட்டேன்’ என பால், மோர் வரிசையில் சுண்ணாம்பு படிந்த சுவர் பக்கம்கூட போக மறுப்போருக்கு ஓர் செய்தி... மிகக் குறைவான கால்சியம்கூட கண்டிப்பாக கல் வரவழைக்கும். உடலுக்குத் தேவையான கால்சியம் இல்லாதபோது, எலும்பில் இருந்து கால்சியம் உருகி ரத்தத்தில் கலந்து, பின் சிறுநீரகப் பாதை வழியே பயணிக்கும் காலம் முதல் 'கற்’கால அவதி தொடங்கிவிடும். அதிகபட்ச கால்சியம்தான் கூடாதே தவிர, அளவான கால்சியம் கல் நோய் தீர அவசியம்.
கல்லோ, கேன்சரோ, இப்போதெல்லாம் நமக்கு அதிகச் சவாலாக இருப்பது வாழ்வியல் நோய்கள்தாம். இந்த நோய்களிலிருந்து விடுபட, மருந்து - மாத்திரைகள் மட்டும் போதாது. அன்பு, அரவணைப்பு, ஆற்று மண்ணின் ஊற்று நீர், காற்று, காடு, காணி நிலம், கடல், மலை என் எல்லாவற்றின் மீதான அக்கறையும் அவசியம்!

No comments:

Post a Comment