Sunday, December 21, 2014

ரியல் எஸ்டேட்... ரியல் அப்டேட்! திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்பாட் ரேட் நிலவரம்!

- Vikatan article

ரியல் எஸ்டேட்... ரியல் அப்டேட்!
திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்பாட் ரேட் நிலவரம்!
மு.கோதாஸ்ரீ படங்கள்: தே.தீட்ஷித்.
அடித்தட்டு மக்களாகட்டும் அல்லது மேல்தட்டு மக்களாகட்டும் சொந்த வீடு என்பது அடிப்படைத் தேவை  என்றாகிவிட்டது. முந்தைய காலத்தில் பரம்பரை பரம்பரையாகக் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்ததால், ஒவ்வொருவருக்கும் சொந்தமாக வீடு என்று ஒன்று இருக்கவே செய்தது. ஆனால், இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் ஊர்விட்டு ஊர் மாறுவது சர்வசாதாரணம் என்றாகிவிட்டது.
இப்படி வேலை நிமித்தமாக எந்த ஊரில் வசித்தாலும் ஓய்வுக்காலத்தில் மனதுக்குப் பிடித்த ஊரில் செட்டிலாக வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உண்டு. ஆன்மிகத்தில் அதிக நாட்டமுள்ள பக்தர்கள் தங்கள் ஓய்வுக்காலத்தில் ஸ்ரீரங்கத்தில் செட்டிலாக விரும்புவதுண்டு.
60 வயதைத் தாண்டிய பலரும் கடந்த 10-15 வருடங்களாக இப்படி வந்து ஸ்ரீரங்கத்தில் செட்டிலாக விரும்புவதால், அங்கு ரியல் எஸ்டேட் விலை உயர்ந்துகொண்டே போகிறது.
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் எஸ்.ராமசுப்ரமணியம் இப்படி சொன்னார். “ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றி உள்ள சப்தபிரகார பகுதிகளில் இப்போது ரிஜிஸ்ட்ரேஷன் கிடையாது. மேலும், கோயிலைச் சுற்றி உள்ள நிலங்கள் ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தம் என்ற வழக்கு ஹைகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதனால் அதிக மனைகள் கிடைப்பது இல்லை என்பதால், கடந்த ஐந்து வருடங்களாக ஸ்ரீரங்கத்தில் மனை விலை மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதனால் நிலத்துக்குச்  சொந்தக்காரர் சொல்வதுதான் விலையாக உள்ளது. பத்திரப் பதிவு இல்லாத இடங் களில் இந்த விலை நிர்ணயம் குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது. மேலும், அண்மை ஆண்டுகளில் தமிழக அரசு வழிகாட்டி மதிப்பை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது.
ஸ்ரீரங்கத்தில் பிரதான பகுதிகளில் மனை ஒரு சதுர அடி ரூ.5,000 - 7,000ஆக உள்ளது. விலை அதிகம் என்றாலும் பெரும்பாலானோர் குறிப்பாக, வெளிநாடுவாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐகள்) ஸ்ரீரங்கம் பகுதியையே தேர்ந்தெடுக் கின்றனர். விலை அதிகமாக இருந்தாலும் அரங்கனை சுற்றி உள்ள பகுதி அமைதியானது என்பதே காரணம். சப்தபிரகாரம் தவிர்த்து, ஸ்ரீரங்கத்து பகுதிகளான மேலூர், தெப்பக்குளம், நெடுந்தெரு போன்ற பகுதிகளில் பத்திரப் பதிவு உண்டு.”
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பில்டர் முரளிதரன், ‘‘ஸ்ரீரங்கத்தின் முக்கியப் பிரச்னை, மனை விலை மிக அதிகம் என்பதுதான். இந்த அளவுக்கு அதிகமாக திருவானைக்கோவில், சமயபுரம் போன்ற இடங்களில் இல்லை. வெளிமாநிலங்கள், நாடுகளில் வாழ்பவர்கள் இங்குச் சொந்த வீடு வாங்கி செட்டிலாக விரும்புகிறார்கள். இதனால், முக்கிய பில்டர்கள் மற்றும் புரமோட்டர்களின் ஆர்வம் ஸ்ரீரங்கத்தை நோக்கி உள்ளது. இதனால் இங்கு பில்டர்களுக்கு இடையே நல்ல போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டி யால் சில பில்டர்கள், தங்களின் லாபத்தைக் குறைத்து அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலையைக் குறைத்தும் தருகிறார்கள்.
மனை விலை அதிகமாகிவிட்டது. கூடவே, கட்டுமானப் பொருட்களான செங்கல், மணல், ஜல்லி என பல பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டன. இதனால், நடுத்தர வருமானப் பிரிவினர் வாங்கும் அளவுக்கு வீட்டின் விலை இல்லை. இதனால் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளை விற்பதில்கூட சிரமம் வருகிறது. தற்போதைய நிலையில் ஸ்ரீரங்கத்தில் அதிக வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், அந்த அளவுக்கு டிமாண்ட் இல்லை என்பதால் விற்பனையில் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது.
நடுத்தர வருமானப் பிரிவினரும் வீடு வாங்க வேண்டும் என்பதால் ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய ஏதுவாக உள்ள இடங்களைத் தேர்வு செய்கிறோம். ஆனால், அந்தமாதிரியான இடங்கள் ஸ்ரீரங்கத்தில் மிகக் குறைவு. சொத்துப் பத்திரம் இருந்தால் மட்டுமே கடன் பெற முடியும். தற்போது சொந்த ஊரிலேயே வேலை பார்த்து, அங்கேயே செட்டில் ஆகிறவர்கள் மிக மிகக் குறைவு.
வேலை விஷயமாக வெளியில் செல்பவர்கள் அங்கேயே செட்டில் ஆவதால், இங்குள்ள பூர்வீக வீட்டை எப்படியாவது விற்றுவிடத் தான் ஆசைப்படுகிறார்கள். இடத்தேவை அதிகம். ஆனால், இருப்புக் குறைவு, இதனால் இடத்துக்காரர்கள் சொல்லும் விலை மிக அதிகமாக உள்ளது” என்றவர், ஸ்ரீரங்கத்தில் பொதுவாக, தனி வீடுகள் ரூ.40 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை, அதற்கும் அதிக மாகவும்கூட விற்பனையாவதாகச் சொன்னார். அடுக்குமாடிக் குடியிருப்பு ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை விலை போகிறதாம்.
ஸ்ரீரங்கத்தில் மனை வாங்கி வீடு கட்டும் நரசிம்மன் என்பவருடன் பேசினோம். ‘‘ஸ்ரீரங்கத்தைப் பொறுத்தவரை, கட்டடத்தின் மதிப்பைவிட நிலத்தின் மதிப்புதான் அதிகம். பழங்கால கல் கட்டடத்துக்கு மதிப்பு குறைவு.
ஒருகாலத்தில் வெறும் வயல் வெளியாக இருந்த ஸ்ரீரங்கத்தின் சுற்றுப்பகுதி இன்று கமர்ஷியல் இடமாக மாறிவிட்டது. அதிகம் பேர் இங்கு வீடு வாங்க ஆசைப்படுவதால், அதற்கு ஏற்றமாதிரி விலையும் அதிகமாகி, இன்று திருச்சியிலேயே அதிக விலை மதிப்புமிக்கப் பகுதியாக இருக்கிறது.
ஸ்ரீரங்கத்து சுற்றுவட்டாரப் பகுதியான தசாவதார சன்னதி, மேலூர், அம்மா மண்டபப் பகுதி களில் அடுக்குமாடி வீடுகள் ரூ.40 லட்சம் முதல் கிடைக்கிறது.  உள்வீதிகளில் வீடு கட்டுவது காஸ்ட்லி என்றாலும், அதற்கான நன்மைகள் அதிகம். அடிப்படை தேவைகளான மார்க்கெட், போக்குவரத்து, கோயில், அமைதியான சூழல் என அதிகம். இந்த வசதிகள் வெளிப்பகுதிகளில் குறைவு. ஆக, ஸ்ரீரங்கத்தில் வீடு கட்டுவதன் மூலம் எனக்கு லாபமே கிடைக்கும்’’ என்றார்.
ஸ்ரீரங்கம் என்கிற ஆன்மிக பூமியை பக்தர்கள் பலரும் நாடிச் செல்வதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்?  

No comments:

Post a Comment