Sunday, December 21, 2014

அந்த நாள்... 3

- Vikatan Article

அந்த நாள்... 3
டி.அருள் எழிலன், படங்கள்: கே.ராஜசேகரன்
ன்று நினைத்தாலும் குலை நடுங்கும் கொடூரம் அது!
அரைப்படி நெல் கூடுதலாக, அதுவும் கூலியாகக் கேட்டதற்காக, கீழ்வெண்மணியில் உயிருடன் கொளுத்திக் கொல்லப்பட்டனர் 44 விவசாயத் தொழிலாளர்கள். அவர்கள் எரிந்தபோது எழுந்த தணல்தான்... விவசாயிகள் விடுதலையின் முதல் விளக்கு!
ஊருக்குள் மல்லுவேட்டி கட்டித் திரியும் இளசுகளுக்குப் பெயர் மைனர். தன் நிலம் என்றாலும் சேற்றில் கால்படாமல் கொழுத்தவனுக்கு பெயர் 'ஆண்டே’. அந்த ஆண்டே கொளுத்திப்போட்ட தீயில் வெந்து தணிந்தவர்கள் 'உழைப்பவனுக்கே வெள்ளாமை சொந்தம்’ என்பதற்கான விதையை விதைத்தவர்கள்!
சம்பா சாகுபடி நடவுக்கான வயலில் கணுக்கால் அளவு மட்டுமே தண்ணீர் நிற்கும்படி, சேற்றில் கால் புதைய மண்ணைப் பண்படுத்திக்கொண்டிருக்கிறார்  பழுத்த விவசாயி பழனிவேல். 1968-ல் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் கீழ்வெண்மணியில் நடந்த அந்தக் கொடூரத்தைக் கண்ணால் கண்ட சாட்சி இவர். நிலத்தில் சொட்டுச் சொட்டாக, உதிரம்போல விழும் பழனிவேலின் வியர்வைத் துளிகள் சொல்ல, 50 ஆண்டு வரலாறு உண்டு. 1968-க்கு முன்பு வரை பண்ணை அடிமையாக இருந்த பழனிவேல், இப்போது நான்கு ஏக்கர் நிலத்துக்கு உரிமையாளர்.          20 பேருக்கு கூலி கொடுக்கும் விவசாயி.
''இப்ப நாங்க கௌரவமா, மற்ற மனுஷமக்கள் மாதிரி மருவாதியா வாழ்றோம்னா, அதுக்குக் காரணம் அன்னைக்கு எங்க உரிமைக்காக எரிஞ்ச அந்த 44 பேர்தான். அதுங்க எல்லாம் சாமான்யப்பட்ட உசுரு இல்ல!'' - துயரத்தால் மூடப்பட்ட அந்தக் கறுப்பு நாளை நினைவுகூரும்போது பழனிவேலின் உடலில் ஒருவிதப் பதற்றம் படர்கிறது.
''காலங்காலமா இங்கதான் பொறந்து வளந்தோம். எங்க அப்பார் காலத்துல அடிமைப் பரம்பரையா இருந்தோம். ஆறு வயசுல  மகன் இருந்தா அவன் பண்ணையார் வீட்டு மாடுகளை மேய்க்கணும்; அப்பன் பண்ணையில் வேலை செய்யணும்; மனைவி அவன் வீட்டுக்கு எடுபிடி வேலை செய்யணும். இதுதான் இங்க இருந்த பரம்பரைப் பண்ணை அடிமை முறை. வயல் வேலைக்கு கொஞ்சம் தாமதமாப் போனாக்கூட சாணிப்பால், சவுக்கடிதான். காராம் பசுவில் கறந்த பாலைக் குடிக்கும் பண்ணையாருங்க, எங்க முன்னோர்களுக்கு சாணியைத் தண்ணியில் கரைச்சுக் குடிக்கவைப்பாங்க. அதைத்தான் பண்ணையாருங்க 'சாணிப்பால்’னு சொல்வாங்க. காவிரி எப்படி கர்நாடகாவில் இருந்து வந்துச்சோ, அதே மாதிரிதான் எங்களுக்கு விடுதலை வாங்கிக்கொடுத்த சீனிவாச ராவும் கர்நாடகாவில் இருந்து வந்தார். அவர் போராடித்தான் சாணிப்பால் சவுக்கடியை இல்லாமல் ஆக்கினார். அந்தக் கொடுமை எங்க அப்பார் காலத்திலேயே முடிஞ்சுபோச்சு. ஆனா, வாழ்க்கை மாறலை; கூலி உயரலை. அதே கொடுமைகள் வேற வடிவத்தில் தொடர்ந்துச்சு...'' என்று பேசும் பழனிவேல் படிப்பு வாசம் அறியாதவர். பல ஆண்டுகால கம்யூனிஸத் தொடர்பு, அவருக்கு ஓர் அரசியல் வாழ்வைப் பழக்கியிருக்கிறது.
''அப்ப நிலம் எல்லாம் மக்கள்கிட்ட இல்லை. பெரும்பாலும் மடங்கள், ஆசிரமங்கள், நிலச்சுவான்தார்களிடம்தான். ஆயிரமாயிரம் ஏக்கர் நிலங்கள் இருக்கும். அதில் நேரம் காலம் பாக்காம பண்ணை அடிமைகள் வேலைபார்க்கணும். சூரியன் உதிக்கிறதுக்கு முன்னாடி வேலைக்குப் போயிட்டு,  சூரியன் மறைஞ்சு இருட்டுன பிறகு வீட்டுக்குத் திரும்பணும். இதான் கண்டிஷன். ஆண்டைகள் குடுக்கறதுதான் கூலி. லீவு கிடையாது. கொஞ்சம் தாமதமாப் போனாக்கூட,  கண்ணுமண்ணு தெரியாம அடிப்பாங்க. சாப்பிட விட மாட்டாங்க. வயல் வேலைக்கு வர்ற பொம்பளைக, தங்களோட கைக்குழந்தைங்களை களத்துமேடு, வாய்க்கால் வரப்பு மரங்களில் தொட்டில் கட்டி தூங்கப் போட்டுட்டு வருவாங்க. வேலைக்கு நடுவில் குழந்தைங்க அழுதா பால் கொடுக்கக்கூட விட மாட்டாங்க. இத்தனை கொடுமைகளையும் அனுபவிச்சு வயல் வேலைகளை முடிச்சுட்டு நிமிர்ந்தா, 'ஆண்டே’, அவன் வீட்டு வேலைகளையும் செய்யச் சொல்வான். கடைசியில் அவனா விரும்பினா கொஞ்சம் தானியமோ, அரிசியோ போடுவான். அதையும் இடுப்பில் துண்டைக் கட்டிட்டு, வேட்டியை விரிச்சு வாங்கிட்டு வந்து வெறும் சோறு மட்டும் பொங்கிச் சாப்பிடுவோம். மாசத்தில் அமாவாசை அன்னைக்கு மட்டும் பண்ணையாருங்ககிட்ட கேட்டு, அவங்க விரும்பினா நாங்க லீவு எடுக்கலாம்.  இதை வெறுமனே உழைப்புச் சுரண்டல், சாதிக் கொடுமைனு மட்டும் சொல்லிட முடியாது. ரெண்டும் ஒண்ணோடு ஒண்ணு கலந்தது. இதுதான் கீழத் தஞ்சை முழுக்க நிலவிய கொடூரம்.
அப்ப கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க வந்து எங்களுக்காகப் பேசினாங்க. ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க விவசாயிகள்கிட்ட அது பெரிய கலகமா மாறுச்சு. 'சிவப்புக் கொடிக் கட்சிக்காரங்க பேசுறது நியாயம்தானே’னு நாங்களும் யோசிச்சப்ப, 'கொடுக்கிற சம்பளத்தைவிட அரைப் படி நெல் அதிகம் வேணும்’னு கேட்டோம். கூலி தராட்டி எங்க பொம்பளைங்களைத் திரட்டிட்டுப்போய் அவங்க வீட்டு முன்னால ஒப்பாரிவெச்சுப் போராடணும்னு முடிவு பண்ணோம்.
அப்படி வலிவலம் தேசிகர் பண்ணையில் ஒப்பாரிப் போராட்டம் நடத்தினோம். எங்களுக்குப் பின்னால் கம்யூனிஸ்ட் கட்சி இருந்துச்சு. பண்ணையார்கள் பின்னால் கம்யூனிஸ்ட் இல்லாத எல்லா கட்சிகளும் இருந்துச்சு. ஒரு பக்கம் கம்யூனிஸ்ட்காரங்க நடத்தின போராட்டம், இன்னொரு பக்கம் நாங்க கூலி உயர்வுக்காகவும் உரிமைக்காகவும் வாயைத் திறந்து பேச ஆரம்பிச்சோம். பண்ணையார்களுக்கு 'இந்தப்  பள்ளு - பறைகளும் பேச ஆரம்பிச்சுடுச்சே’ங்கிற எரிச்சல், இன்னொரு பக்கம் இதுக்குப் பின்னால் இருக்கிற கம்யூனிஸ்ட் கட்சிக்காரனை ஒழிக்கணுங்கிற கோபம். அது ரெண்டும் சேர்ந்து நடந்ததுதான் 44 பேரை உசுரோட எரிச்ச அவலம்!'' - 'அந்த நாளுக்குள்’ செல்வதற்கு முன் சின்ன இடைவேளை எடுத்துக்கொள்கிறார் பழனிவேல்.
''ஒருநாள் கம்யூனிஸ்ட்காரங்க கூட்டத்துக்குப் போயிட்டு, மறுநாள் வயல் வேலைக்குப் போனப்ப, 'யாரும் நிலத்தில் இறங்கக் கூடாது. இறங்கணும்னா கம்யூனிஸ்ட் கட்சியை விட்டுட்டு வரணும்’னு சொன்னாங்க. அப்ப கோபாலகிருஷ்ண நாயுடுதான் நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர். நீளக் கழி, கத்தி, நல்ல ராஜபாளையம் நாய்... இவை மட்டும் இல்லாம துப்பாக்கி, சுத்தி அடியாளுங்களோட அவர் நடந்துவரும்போது எதிரில் யாரும் போக மாட்டாங்க. 'அட்டூழியம்’கிறதுக்கு மறு பேர் அவர்தான். அவரோட அச்சுறுத்தலுக்குத் தாக்குப்பிடிக்கிறதே கஷ்டம். அவரோட ஆட்கள் குடுத்த குடைச்சலில் இருக்கை, ஆலங்குடி, பெருந்தலங்குடி, இருஞ்சூர் கிராம மக்கள் எல்லாம் அவங்க பக்கம் போயிட்டாங்க. அவங்க குடுக்கிற கூலியை வாங்கிட்டு சொன்ன வேலையைச் செஞ்சுட்டுப் போக சம்மதிச்சாங்க. எங்களுக்கு நெல்லை கூலியா அளந்து குடுத்தவன், அவங்களுக்கு மட்டும் அரிசி அளந்து குடுத்தான். எங்களுக்குப் பதிலா தெற்கில் இருந்து கூலி ஆட்களை நெல் அறுப்புக்குக் கூட்டிவந்தான். 'பட்டினிப் போட்டு சாவடிச்சாதான் இந்த நாய்ங்க திருந்துவானுங்க’னு நினைச்சு அப்படிப் பண்ணாங்க. நாங்க நேரடியா போய்த் தட்டிக்கேட்டோம். எங்க ஆளுங்க மூணு பேரைப் பிடிச்சு ஒரு பண்ணையார் வீட்டில் அடைச்சுவெச்சுட்டாங்க. நாங்களே அந்த வீட்டுக்குள் புகுந்து மூணு பேரையும் மீட்டு வந்தோம். அன்னைக்கு ஏதோ நடக்கப்போவுதுனு தெரிஞ்சது. ஆனா, அது இம்புட்டுப் பெரிய கொடூரமா இருக்கும்னு தெரியாது.
கோபாலகிருஷ்ண நாயுடு ஆட்கள் சுமார் 500 பேர் ஊரைச் சுத்தி வளைச்சாங்க. ஊருக்கு வர்ற வழியில் இருந்த எல்லா வீடுங்களுக்கும் தீ வெச்சுட்டே வெண்மணிக்குள் வந்தாங்க. துப்பாக்கியால் கண்டமேனிக்குச் சுட்டாங்க. அதில் பலரும் குண்டடிபட்டுக் கீழே விழ, பொம்பளைங்களையும் குழந்தைகளையும் பத்திரமா இருக்கச் சொல்லி நாங்க எச்சரிச்சோம். நாயுடுவோட ஆளுங்க ஊரை நெருங்கினப்போ, எல்லா பெண்களும் குழந்தைகுட்டிங்களைத் தூக்கிட்டு ஒரே இடத்தில் கூடினாங்க. குருவியைச் சுடுற மாதிரி மனுஷங்களைச் சுட்டுட்டே வந்து கோபாலகிருஷ்ண நாயுடுவையும் அவரோட ஆளுங்களையும் பார்த்த பெண்கள் ராமையா குடிசைக்குள் புகுந்தாங்க. ராமையா வீட்டை விட்டு வெளியில் வந்து நின்னார். அப்ப நாயுடுவோட ஆளுங்க குடிசைக்குத் தீ வெச்சாங்க. குழந்தை, குமரிங்க, பொம்பளைங்க எல்லாரும் 'விட்ருங்கய்யா... விட்ருங்கய்யா’னு கதறி அழுதாங்க. ஒருசிலர் குழந்தைங்களை வெளியில் வீசினாங்க. வெளியே வந்துவிழுந்த குழந்தைகளைத் தூக்கி மறுபடியும் எரியிற தீயில் போட்டாங்க நாயுடுவோட ஆளுங்க.  
எல்லாம் எரிஞ்சு தணிஞ்சு மறுநாள் போலீஸ் வந்து பார்த்துட்டு 28 பேர்னு கணக்கு எழுதினாங்க. ஆனா,  ராமையாவோட மனைவி பாப்பா, மூணு வயசுக் குழந்தை வாசுகி உள்பட ஆணும் பெண்ணுமா 44 பேர் எரிஞ்சு கரிக்கட்டை ஆகிட்டாங்க!'' - நிலைகுத்திய பார்வையுடன் நிறுத்திக்கொள்கிறார் பழனிவேல்.
விவசாயிகளின் போராட்டத்தில் 44 பேர் தீவைத்து எரிக்கப்பட்டார்கள். குண்டடிபட்டும், குத்துப்பட்டும், வெட்டப்பட்டும் கொல்லப்பட்ட தோழர்களின் எண்ணிக்கை  இன்னொரு ரத்தச் சரித்திரம். 44 தலித்களை எரித்துக் கொன்ற வழக்கில் கோபாலகிருஷ்ண நாயுடுவும் அவரது ஆட்களும் உயர் நீதிமன்றத்தால் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார்கள். பின்னர் நக்சல்பாரிகள் நீண்ட காலம் காத்திருந்து 1980-ல்  மிகச்சரியாக டிசம்பரில் கோபாலகிருஷ்ண நாயுடுவைத் தீர்த்துக் கட்டினார்கள். அபூர்வமாகப் பாதுகாப்பு எதுவும் இல்லாமல் கோபாலகிருஷ்ண நாயுடு வெளியில் வந்த ஒரு நாளில் கொல்லப்பட்டார். அவரது இறப்புக்குப் பின் நெல் உற்பத்தியாளர் சங்கம் உடைந்து பலம் இழந்துபோனது. அன்றைக்கு தஞ்சை முழுக்க நடவுப் பெண்கள் குலவைபோட்டுக் கொண்டாடிய மரணம் அது.
''அப்ப ஒரு நாளும் எங்க வீடுகளில் இருந்து சமையல் வாசனை வந்தது இல்லை. ஆனா, இன்னைக்கு கறிச்சோறும் நல்ல சாப்பாடும்  சமையல் வாசனையும் வருதுன்னா, அது அன்னைக்கு அவங்க எரிஞ்ச அந்த சாம்பல் மேடுதான் காரணம். வாரக் கூலியா இருந்த அடிமைச் சம்பளம் அன்றாடக் கூலி ஆனது. கார்த்திகை, மார்கழி மாசம்னு பஞ்ச காலங்கள்ல சோத்துக்கத்தாழை, வயல் எலிகள்தான் எங்களுக்குச் சாப்பாடு. ஆனா, இப்ப வெளைச்சல் இல்லாத நேரத்தில்கூட உக்காந்து சாப்பிடுறோம்னா, நிலம் எங்களுக்குச் சொந்தமாகக் கிடைச்சதுதான் காரணம். 1968-க்குப் பிறகு கூலி முறை, உழைப்பு நேரம், உரிமைகள்... எல்லாத்துக்கும் விடிவு வந்துச்சு. விவசாயக் கூலித் தொழிலாளர்களிடம் இருந்து பண்ணையார்களைக் காப்பாற்ற தனியாக 'கிஸான்’ போலீஸை உருவாக்குச்சு அரசாங்கம்.  சில பெரிய மனுஷங்களே எங்கள் கோபத்தின் தார்மீக நியாயங்களைப் புரிஞ்சுக்கிட்டாங்க.  யார் எங்களை அடிமைகளா நடத்தினாங்களோ, அவங்க நிலம் எங்களுக்குச்  சொந்தமாச்சு; ஆனா, அடிச்சுப் பறிக்கலை. உழைச்சுத்தான் சம்பாரிச்சோம். எங்க நிலைமையைப் பார்த்த கிருஷ்ணம்மா- ஜெகந்நாதன் உதவி செஞ்சாங்க. சுமார் 75 குடும்பங்களில் பெரும்பாலானவங்களுக்கு நிலம் வாங்கிக் குடுத்தது அவங்கதான். கட்சி, உரிமையை வாங்கிக் குடுத்தது; கிருஷ்ணாம்மா நிலம் வாங்கிக் குடுத்தாங்க.
நிலம் எங்களுக்குக் கிடைச்சதும் நாங்க மைனர் மாதிரி வாழலை. கடுமையா உழைச்சோம். எங்க பிள்ளைங்க முதல் தலைமுறையா பள்ளிக்கூடம் போனாங்க. ஒரு காலத்தில் அடிமை சனமா இருந்த இதே கீழ்வெண்மணி கிராமத்தில், இன்னைக்கு போலீஸ், ராணுவம், நேவினு எல்லாத்துலயும் எங்க பசங்க வேலைபார்க்கிறாங்க.  நல்ல நிலைமையில் அரசாங்க உத்தியோகம் பாக்குறாங்க. ஊருக்குள்ள படிக்காத பசங்களை நீங்க பார்க்கவே முடியாது. காதல் திருமணம், கலப்பு மணம்னு தமிழகம் பத்திக்கிட்டு எரியுது. ஆனா, இங்கே காதல் திருமணங்கள் சமாதானக் கலப்பு மணமா நடக்குது. எந்தப் பிரச்னையும் இல்லை.
ஏரியாவில் கொடி கட்டி ஆண்ட பல பண்ணையார்களின் வீடுக வெறிச்சோடிக் கிடக்கு. அவங்க வாரிசுகள் நகரங்களில் குடியேறிட்டாங்க. இருக்கிறவங்களும் முன்புபோல இல்லை. காலமும் சூழலும் மாறின மாதிரி, அவங்களும் தங்களை மாத்திக்கிட்டாங்க. இப்ப விவசாயம்தான் பிரச்னை. காவிரியை நம்பி விவசாயம் செய்ய முடியலை. பிரச்னைகளின் தன்மை மாறிப்போச்சு. ஆனா, இந்த மாற்றத்துக்கும் சுயமரியாதையான வாழ்வுக்கும் கம்யூனிஸ்ட் கட்சியும் நாங்களும் கொடுத்த விலை கொஞ்சநஞ்சமா!'' என்கிறார் பழனிவேல்.
எரிந்த ராமையாவின் குடிசைக்கு எதிரில் பிரமாண்டமாக  உருவாகிக்கொண்டிருக்கிறது 'வெண்மணி தியாகிகளின்  நினைவு மண்டபம்’. பழனிவேல், திரும்பி நின்று அந்த மண்டபத்தை நோக்கிக் கையெடுத்துக் கும்பிடுகிறார்.

No comments:

Post a Comment