Sunday, December 21, 2014

தண்ணீர்... கண்ணீர்! நிஜ ‘கத்தி’ விவகாரம்

- Junior Vikatan

வங்க பசிக்குப் பிச்சை கேக்கல, விவசாயத்துக்கு தண்ணி கேக்குறாங்க’  இந்த வசனம் 'கத்தி’ திரைப்படத்தில் வரும். விவசாயத்துக்கான தண்ணீரைத் திருடும் ஒரு குளிர்பான ஆலைக்கு எதிராகப் பேசப்படும் இந்த வசனம் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் உண்மையாகி இருக்கிறது.
 ஏற்கெனவே நீராதாரம் போதாமல் மக்கள் தவிக்கும் நிலையில், ஒரு தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்திருப்பது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் காட்டிய எதிர்ப்புக்குப்் பிறகு பெருந்துறை யூனியன் அலுவலகத்தில் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பெருந்துறை, சென்னிமலை, காஞ்சிக்கோவில், ஊத்துக்குளி உள்ளிட்ட 25 ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள், ஆலை நிர்வாகத்தினர், டி.ஆர்.ஓ சதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் ஆலை சார்பாகக் கலந்து கொண்ட நிர்வாகி சத்யா, ''இதுவரை ஒரு லிட்டர் கோலா தயாரிக்க 3.62 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தினோம். பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 1.2 லிட்டர் நீரைத்தான் பயன்படுத்தி வருகிறோம். எங்களால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது' என்று சொல்லிவிட்டு விளம்பரங்களைக் காட்டத் தொடங்கினார். மக்கள், 'உங்களின் திட்ட வரைவு அறிக்கை எங்களுக்கு வேண்டும்’ என்று சொல்ல அவர் மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் அமர்ந்துவிட்டார். அனைத்து மக்களின் பலத்த எதிர்ப்புக்குப் பிறகு, ''குளிர்பான நிறுவனம், பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோரின் கருத்துகளை அறிக்கையாகத் தயார்செய்து அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும்'' என்று சொல்லி டி.ஆர்.ஓ கூட்டத்தை முடித்தார்.
கூடங்குளம் போராட்டத்தில் கலந்து கொண்டவரும் சகாயம் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்தவருமான முகிலன், 'நானும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவன்தான். ஏற்கெனவே இங்கு சாய, சலவை, பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், 25 கிராமங்களின் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிவிட்டனர். ஆலை சார்பாக தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை என்று கேட்டுள்ளனர். அவர்களின் கணக்கு எல்லாம் திருப்பூர் திட்டத்துக்குச் செல்லும் காவிரி திட்டத்தில் இருந்து நீர் பெற்றுக்கொள்ளலாம் என்பதுதான். அப்படி அவர்கள் எடுத்தால் விவசாயத்துக்கு இருக்கும் கொஞ்சம் தண்ணீரும் திருடப்பட்டுவிடும். ஏழை விவசாயி எங்குதான் போவான்? இந்தியாவில் செயல்பட்டுவரும் 24 கோலா ஆலைகளும் இப்படி பிரச்னையில்தான் இயங்குகின்றன. சமீபத்தில்கூட வாரணாசியில் விதிமுறைகளுக்கு அதிகமாக தண்ணீர் எடுத்த கோலா நிறுவனம் மூடப்பட்டது. கேரளாவில் இவர்களின் நிறுவனம் 8 வருட தொடர் போராட்டங்களால் மூடப்பட்டது. ஆனால், இங்கே அரசு இவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது. பெருமுதலாளிகளுக்கான வளர்ச்சிதான் தொழில் வளர்ச்சியா? தி.மு.க ஆட்சியில் இதே சிப்காட்டில் தொடங்கப்பட இருந்த நச்சுக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு எதிராகவும் மக்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்த இன்றைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், உடனடியாக இதில் ஒரு தீர்வு காண வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
பெருந்துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் கந்தசாமி, ''இந்த நிறுவனத்தின் தரப்பில் நிறுவனத்துக்்காக நாங்கள் எந்த ஒரு ஆழ்துளை கிணற்றையும் அமைக்க மாட்டோம் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது இந்த ஆலையின் வளாகத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 71.34 ஏக்கர் நிலப்பரப்புக்குள் 10 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் பேச்சைக் கேட்டு, நிறுவனம் அமைய நாம் அனுமதி கொடுத்தால் நம்மை அழித்துவிடுவார்கள். மேலும் இந்தப் பகுதி விவசாயி ஒருவர் வெளிநாடுகளுக்கு இயற்கை விவசாய காய்கறிகளை ஏற்றுமதி செய்து வந்தார். ஆனால், அவரது ஏற்றுமதி காய்கறிகளை வெளிநாட்டில் இருந்து திருப்பி அனுப்பிவிட்டனர். காரணம், அந்தக் காய்கறிகளில் நச்சுத்தன்மை இருப்பதாகக் கூறுகின்றனர். இதற்குக் காரணம் ஏற்கெனவே இந்தப் பகுதியில் இருக்கும் சிப்காட் நிறுவனத்தால் வெளியிடப்படும் நச்சுக்கழிவுகள் இவரது நிலத்தில் கலந்து இருப்பதுதான். எனவே  இந்த நிறுவனம் அமைய எந்தவித அனுமதியும் கொடுக்கக் கூடாது. சிப்காட்டை சுற்றி இருக்கும் பகுதிகளில் 20 பேரில் ஒருவருக்கு புற்றுநோய், 40,000 டன்கள் விஷக் குப்பை, பெண்கள் மற்றும் கால்நடைகளுக்கு மலட்டுத்தன்மை... இவைதான் இவர்கள் இதுவரை நமக்குக் கொடுத்த பரிசுகள். கேரளத்தில் நேர்ந்ததுபோல இங்கு நடக்க நாங்கள் விடமாட்டோம்'' என்று கொந்தளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தின் கருத்தை அறிய பலமுறை தொடர்புகொண்டோம். ஆனால், அவர் நம்மிடம் பேசவில்லை.
கண்ணை விற்றுச் சித்திரம் வரைய நினைப்பது முட்டாள்தனம். மண்ணை விற்று வாழ நினைப்பது?
மா.அ.மோகன் பிரபாகரன், கு.ஆனந்தராஜ்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி 

No comments:

Post a Comment