Sunday, December 21, 2014

அந்த நாள்... 2 - 15, ஜூலை: 2004 - நிர்வாணப் போராட்டம்

- Vikatan article

அந்த நாள்... 2
- 15, ஜூலை: 2004 - நிர்வாணப் போராட்டம்
ரீ.சிவக்குமார்
ந்த நெருப்புக்கு வயது, 10 ஆண்டுகள்!
15.07.2004... மணிப்பூர் வரலாற்றில் மறக்க முடியாத நாள். அதிகாரத்தின் வன்முறைக்கு எதிராகத் தங்களையே ஆயுதமாக்க முடியும் என  தாய்கள் நிரூபித்த நாள் அது. இந்திய ராணுவத்தின் முகத்தில் நிர்வாணத்தை விசிறியடித்தார்கள் அந்தப் பெண்கள். அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு அரங்கேறியது அந்தக் கொடூரம்.
17-வது அசாம் ரைஃபிள்ஸ் ராணுவப் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள், தங்ஜம் மனோரமா என்கிற பெண்ணின் வீட்டுக்குள் அடாவடியாக நுழைந்தார்கள். 'ராணுவத்தை எதிர்த்துப் போராடும் ஆயுதக் குழுக்களுக்கும் மனோரமாவுக்கும் தொடர்பு இருக்கிறது’ என்பது இந்திய ராணுவத்தின் குற்றச்சாட்டு. மனோரமாவின் வீட்டைச் சூறையாடினார்கள். இருந்த சொற்பப் பணத்தைக் கொள்ளையடித்தார்கள். அனைவரும் பதைபதைத்துப்போய்ப் பார்க்க, மனோரமாவைத் தாக்கினார்கள். அதற்குப் பிறகும் விடவில்லை. விசாரிக்க வேண்டும் என அவரை இழுத்துச் சென்றனர். அன்று மாலை... அரைகுறை ஆடையுடன், உடல் சிதையுண்ட காயங்களுடன், பலரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மனோரமாவின் உடல் வீதியோரம் கிடந்தது.
கொதித்துப்போன மணிப்பூர், போராட்டத்தில் இறங்கியது. அதுதான் அந்தத் தாய்மார்களையும்  போராட்டம் நடத்தும் முடிவை எடுக்கவைத்தது. அசாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவினர் தங்கியிருந்த காங்களா கோட்டையின் இரும்புக் கதவுகளுக்கு முன்பு தாய்கள் திரண்டனர். திடீரென தங்கள் ஆடைகளைக் களைந்தவர்கள், 'ஏ... இந்திய ராணுவமே, உனக்குத் தேவை பெண்களின் உடல்தானே? இதோ எடுத்துக்கொள்... எங்களை மானபங்கப்படுத்து! எங்கள் மகள்களை விட்டுவிடு!’ என்ற பதாகையை கையில் பிடித்துக்கொண்டு நிர்வாணமாக நின்றனர். அதிர்ச்சியில் உறைந்த ராணுவமும் போலீஸும் குனிந்த தலை நிமிராமல், அவர்களின் மீது போர்வைகளைப் போத்திக் கைதுசெய்தது. போராட்டம் நடந்தது என்னவோ மிகச் சில நிமிடங்கள்தான். ஆனால், அந்த நெருப்பின் கங்கு, இன்றும் மணிப்பூரில் கனன்றுகொண்டே இருக்கிறது.
10 வருடங்கள் கடந்தும், மனோரமாவின் கொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை கிடைக்கவில்லை. மணிப்பூர் பெண்களை பாலியல் வல்லுறவுகொண்டதற்கான அதிகார மமதையை வழங்கும், Armed Forces (Special Powers) Act (AFSPA) என்ற ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரச் சட்டமும் இன்னும் நீக்கப்படவில்லை. இந்தியா முழுவதும் தனிநபர்களாலும் அதிகார நிறுவனங்களாலும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை 'ரேப் நேஷன்’ (Rape Nation) என்ற பெயரில் ஆவணப்படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார் லீனா மணிமேகலை. மணிப்பூர்  நிர்வாணப் போராட்டத்தில் பங்குபெற்ற தாய்மார்களை, 10 வருடங்களுக்குப் பிறகு அதே காங்களா கேட்டின் முன் வரவழைத்து அவர்களின் நினைவுகளைப் படமாக எடுத்துள்ளார்.
''காங்களா வாயிலில் நிர்வாணப் போராட்டம் நடத்திய 12 பேரில் ஒருவரான லியோடெம் இபெதாம்பி இறந்துவிட்டார். மற்றவர்களிடம் பேசினேன். சிலர் வயது காரணமாகவும் தொடர்ச்சியான செயல்பாடுகள் காரணமாகவும்  நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் சக்கர நாற்காலிகளிலும் சிறப்பு வாகனங்களிலும் சிரமப்பட்டு வந்திருந்தனர். எந்த இடத்தில் அறவுணர்வும் ஆவேசமும் ததும்ப போராட்டம் நடத்தினார்களோ, அதே காங்களா வாயிலில் 10 வருடங்களுக்குப் பின் குழுமிய அவர்கள், உணர்வு மேலோங்கக் கதறி அழுதனர்.  
பூக்கள், ரூபாய் நோட்டுகள், மெழுகுவத்திகள்  வைத்து சில நொடிகளில் காங்களா கேட்டை வழிபாட்டுத் தலமாக மாற்றிவிட்டனர். தங்கள் மீது சன்னதம் வந்து போராடச் சொன்னது தங்கள் மூதாதையர்கள்தான் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். அதனாலேயே அந்தப் போராட்டக் களம் அவர்களுக்கு வழிபாட்டு இடமாக மாறியுள்ளது.  அவர்கள்  மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொன்ன கோரிக்கைகள் இரண்டுதான். 'AFSPA என்ற ஆயுதப் படையின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும்’, 'மணிப்பூரில் நிரந்தரமாகத் தங்கியிருக்கும் ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும்’. தங்கள் மண்ணைச் சேர்ந்த பெண்கள் சுதந்திரத்துடன், சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்றால், ராணுவத் தலையீடு இருக்கக் கூடாது என்பது அவர்களின் நிலைப்பாடு. 'எங்கள் மகள்களை ஆடையில்லாமல் தெருவில் இறந்த உடல்களாகப் பார்த்த பின், எங்களிடம் இழப்பதற்கு எதுவும் இருக்கிறதா என்ன? எதிர்காலத்திலும் எங்கள் மகள்களின் மானத்துக்கு உத்தரவாதம் என்ன?’ என்று கேட்கிறார்கள். பதில் சொல்லத்தான் யாரும் இல்லை.
இவர்களின் போராட்டத்தின் விளைவாக, அசாம் ரைஃபிள்ஸ் அகற்றப்பட்டு காங்களா கேட் வளாகம் பூங்காவாக மாற்றப்பட்டது. ஆனால், மணிப்பூரின் பிற பகுதிகளில் இன்னும் ராணுவம் நிலைகொண்டிருக்கிறது. அதையும் முற்றாக நீக்க வேண்டும் என்பதே கோரிக்கை. கொலைகாரச் சட்டம் AFSPA நீக்கப்படும் வரை ஓய மாட்டோம் என அந்தத் தாய்மார்கள் இணைந்து 'இமா மூவ்மென்ட்’ ('இமா’ என்றால் 'அம்மா’!) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். தொடர்ந்து நடந்துவரும் உள்நாட்டுப் போரால் கொல்லப்பட்டவர்களில், காணாமல்போனவர்களில், ஆயுதப் போராட்டத்தில் இணைந்ததில் ஆண்களின் எண்ணிக்கை அதிகம். இதனால் பெண்கள் தலைமையில்தான் மணிப்பூரில் பெரும்பாலான குடும்பங்கள் நடக்கின்றன. மணிப்பூரின் அடையாளமாக மாறிப்போன 'இமா மார்க்கெட்’ அதற்கு ஒரு சாட்சி. இயல்பாகவே மணிப்பூர் மக்களின் போராட்டத்தில் பெருமளவு பெண்கள் பங்கு எடுப்பதன் காரணத்துக்கான அடிப்படையும்  இதுதான்!'' என்கிறார் லீனா.
''இமா இயக்கத்தின் தலைமையில் நடந்த மனோரமாவின் 10-ம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலிக் கூட்டத்தையும் படமாக்கினேன். அந்த நிகழ்ச்சிக்கு மனோரமாவின் அம்மா தங்ஜம் குமன்லேய் வந்திருந்தார். அவர் கையில் மலர்கள்  இருந்தன. அது மணிப்பூரில் பிரசித்திபெற்ற லெய்ஹோ மலர். அவை மனோரமாவால் நடப்பட்ட செடியில் பூத்த பூக்களாம். அதைச் சொல்லி வெடித்துக் கதறி அழுதார் அந்தத் தாய். மேற்கொண்டு எதையும் பேசும் நிலையில் அவர் இல்லை.
மணிப்பூர் என்றதுமே, தொடர்ந்து பட்டினிப் போராட்டம் நடத்திவரும் இரோம் சர்மிளாவின் முகம்தான் நம் நினைவுக்கு வரும். அந்தப் போராளியை, ராணுவத்தின் நெருக்கடிகளுக்கு இடையில் சிறைச்சாலை மருத்துவமனையில் சந்தித்தேன். ஒடிசலான உருவம். நாம் அறிந்த தேவதைக் கதைகளில் இருந்து வழிதவறி வந்த தேவதையைப் போலதான் சர்மிளா இருந்தார். கட்டிலின் ஒருபக்கம் முழுக்க பொம்மைகள் அடுக்கப்பட்டிருந்தன. மறுபக்கம் உலகின் எல்லா மூலைகளில் இருந்தும் பரிசாக வந்து குவிந்திருந்த புத்தகங்கள். சன்னமான குரலில், ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் நீண்ட இடைவெளிகளுடன் பேசினார். உணவு, தண்ணீர் எதுவும் அருந்துவது இல்லை; எச்சிலைக்கூட விழுங்கக் கூடாது என அவ்வப்போது பஞ்சைக்கொண்டு உதடுகளைத் துடைத்துக்கொள்கிறார். ஆனால், அவரது மூக்கின் வழியாக 13 செ.மீ குழாயை நுழைத்து, உணவைத் திணித்துவருகிறது மணிப்பூர் அரசு. உண்மையில் அது வெறுமனே பைப் இல்லை, 13 செ.மீ அரசாங்கம்!'' என்கிறார் லீனா மணிமேகலை.
1947-க்கு முன்பு வரை மணிப்பூர், சுதேச சமஸ்தானமாக இருந்தது. 1949-ம் ஆண்டு மணிப்பூரின் அரசர் புதசந்திரா மணிப்பூரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால் மணிப்பூர் மக்களில் பெரும்பாலானவர்கள் இந்தக் கட்டாய இணைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. மணிப்பூர் சுயாட்சிபெற்ற சுதந்திர பூமியாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள். அரசர் புதசந்திரா மிரட்டப்பட்டுத்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்றும் சொல்லப்படுகிறது. மணிப்பூர் விடுதலை அடைய வேண்டும் என அமைதி வழியில் ஆரம்பித்த போராட்டங்கள், ஈழம் தொடங்கி உலகின் பல பகுதிகளில் நடந்ததைப்போல ஆயுதப் போராட்டத்தில் முடிந்தது. பல்வேறு ஆயுதக் குழுக்கள் மணிப்பூரில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தன. இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்காகவும் மணிப்பூரில் 'அமைதி’யை நிலைநாட்டுகிறோம் என்ற பெயரிலும் ராணுவம் குவிக்கப்பட்டது. மக்கள் திரும்பும் திசையெங்கும் ராணுவம், செக்போஸ்ட் சோதனைகள். பல   இடங்களில் ராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்ந்தன. உலகின் எல்லா இடங்களிலும் ராணுவம் என்ன கொடுமைகளைச் செய்யுமோ, அவற்றையே மணிப்பூரிலும் செய்தது. தாங்கள் சந்தேகப்படுபவர்கள் மீது,  விசாரணை என்ற பெயரில் வன்முறைகளை ஏவுவது, பெண்கள் என்றால் பாலியல் துன்புறுத்தல் அளிப்பது எனப் பலவிதமான அத்துமீறல்கள். இதற்கெல்லாம் ராணுவத்துக்கு உதவியாக இருந்ததுதான் ஆயுதப் படையினரின் சிறப்பு அதிகாரச் சட்டம் AFSPA. அந்தச் சட்டத்தின்படி கைது வாரன்ட் இல்லாமல், ராணுவம் எவரையும் கைதுசெய்யலாம்; சிட்டுக்குருவிகளைப்போல சுட்டுக் கொல்லலாம். உண்மையில் இந்தக் கொடுமையான சட்டத்தின் முன்வரைவு, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வெள்ளைக்காரர்களால் கொண்டுவரப்பட்டது.  'வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் அது. ஆனால், சுதந்திர இந்தியாவிலும் அந்தச் சட்டத்துக்கு விசேஷ அந்தஸ்து அளித்து செம்மையாகப் பராமரிக்கிறார்கள். வெள்ளையன் வெளியேறிய பிறகும் அந்தச் சட்டம் வெளியேறவில்லை!
இந்தச் சட்டத்தை நீக்கச் சொல்லி, தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்தாலும், அதன்  உச்சகட்டம் 2000-ம் ஆண்டு தொடங்கியது. இம்பாலுக்கு அருகில் உள்ள மலோம் எனும் கிராமத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த 10 பேரை, பாதுகாப்புப் படையினர் எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காமல் சுட்டுக் கொன்றார்கள். ராணுவத்துக்குக் கொல்வதற்கு ஆட்கள் தேவையே தவிர, காரணங்கள் தேவை இல்லை. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்துதான் இரோம் சர்மிளா தன் போராட்டத்தைத் தொடங்கினார். மைலமா விருது, ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது என பல விருதுகள் சர்மிளாவுக்கு அளிக்கப்பட்டுவிட்டன.  ஆனால், அவரது போராட்டத்துக்கான தீர்வு மட்டும் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் ஒரு நட்சத்திரத்தைப் போல கண்சிமிட்டிக்கொண்டிருக்கிறது.
''ஆக்கிரமிக்கும் நாடாகத்தான் மணிப்பூர் மக்கள் இந்தியாவைப் பார்க்கிறார்கள். குறிப்பாக, இந்தி மொழியை நெருடலோடும் அந்நியத்தோடும் பார்க்கிறார்கள். தென்னிந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் மீது  தனிப் பிரியம் அவர்களுக்கு. நம்முடைய இந்தி எதிர்ப்புப் போராட்டம் அங்கு பிரசித்தி. பொதுவாக தமிழர்கள் அல்லாதவர்களுக்கு ஈழப் பிரச்னை குறித்து விரிவாக விளக்க வேண்டும். ஆனால், மணிப்பூர் மக்களுக்கு ஈழப் பிரச்னை குறித்து ஓரளவு புரிதல் இருக்கிறது. விடுதலைப்புலிகளுக்கு அங்கிருக்கும் ஆயுதக் குழுக்களோடு நெருக்கம் இருந்ததாலும், தனிநாடு போராட்டங்கள் குறித்த சகோதரத்துவப் புரிதல் மணிப்பூர் மக்களுக்கு இருப்பதாலும் ஈழப் பிரச்னை குறித்து அவர்கள் அறிந்திருக்கிறார்கள். மணிப்பூர் மக்களில் கணிசமான பேர் இப்போது தமிழகத்தில் வந்து வேலைபார்ப்பதற்கும்  வட இந்தியாவின் மீது இருக்கும் ஆதார வெறுப்பும் ஒரு காரணம்!'' என்று தன் நேரடி அனுபவங்களைப் பகிர்கிறார் லீனா.
2013-ல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி ரஷீதா மன்ச்சூ, மனோரமாவின் தாயைச் சந்தித்துப் பேசினார். மனோரமாவின் வீட்டைவிட்டு வெளியில் வந்த அவர், ஊடகங்களிடம் கதறி அழுதார். ஆனாலும் அந்தக் கதறல்களையும் அலறல்களையும் இந்திய மத்திய அரசும் ராணுவமும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. இரோம் சர்மிளா தன் போராட்டத்தை ஆரம்பித்து 14 ஆண்டுகள் ஆகின்றன. மனோரமா சிதைக்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிகின்றன.
''இனப் படுகொலை, ராணுவ அத்துமீறல், சாதிக்கலவரம், மத மோதல்கள் என வன்முறை நிகழும் இடங்களில் எல்லாம் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அப்படி அத்துமீறும் ராணுவம் மணிப்பூரிலும் பெண்களைப் பாலியல்ரீதியாகச் சீண்டுவதும் வல்லுறவுக்கு உள்ளாக்குவதுமான ஓர் அத்தியாயமே மனோரமா சிதைக்கப்பட்ட சம்பவம். எந்தப் பெண்ணுடலை ஒடுக்குமுறைக்கான களமாக ஆக்கினார்களோ, அதே பெண்ணுடலைப் போராட்டத்துக்கான கருவியாக மாற்ற முடியும் என நிரூபித்த போராட்டம்தான் மணிப்பூர் பெண்கள் நிர்வாணப் போராட்டம்.'' என்கிறார் லீனா.
'தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்!’ என்ற வாக்கியத்தை ஒரு மந்திர உச்சாடனம்போல் அடிக்கடி உச்சரிக்கிறோம். ஆனால், ஆளும் வர்க்கமும் அதிகார நிறுவனங்களும் அந்த வாக்கியத்தை ஏளனச் சிரிப்புடன் கடந்துபோகின்றன!

No comments:

Post a Comment