Saturday, November 30, 2013

மகாத்மா முதல் மன்மோகன் வரை ! - 3

ராபர்ட் கிளைவ் இறந்து விட் டார். ஆனால், இப்போது இருப்பவர்களுக்கும் ராபர்ட் கிளைவுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல முடி யுமா?  
 ''ராபர்ட் கிளைவ் குவித்த செல் வத்துக்கு அளவே இல்லை. வங் காளத்தில் இருந்த பொக்கிஷத்தை எல்லாம் தன்வசப்படுத்தினார். இந்திய மன்னர்கள் குவியல் குவியலாகச் சேகரித்து வைத்திருந்த நாணயம், நகைகள், ரத்தினங்கள் அனைத்தும் கிளைவுக்கு சொந்தம் ஆக்கப்பட்டது. கிளைவ், பொன்குவியல்களுக்கும் வெள்ளிக் குவியல்களுக்கும் இடையே உல்லாசமாக இருந்தார். வைரங்கள், நவரத்தினங்களுக்கு மத்தியில் கிளைவ் மூழ்கிக் கிடந்தார்'' என்று சுதேசித் தலைவர்கள் சொல்லவில்லை. தன்னுடைய குறிப்புகளில் இப்படி எழுதியிருப்பது மெக் காலே. இன்று நாம் எந்தச் சட்டத்தைக் கடைப்பிடிக்கிறோமோ... எந்தக் கல்வி முறையைப் பின்பற்றுகிறோமோ... அதற்கு அடித்தளம் அமைத்த மெக்காலேதான் இப்படி வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்!
ராபர்ட் கிளைவ் இறந்து போனார் என்றால் ராபர்ட் வதேரா யார்? கேத்தன் தேசாய் யார்? அமர் சிங் யார்?
இந்தியாவிலேயே உயர்ந்த ரியல் எஸ்டேட் அதிபராக ராபர்ட் வதேரா உயர்ந்திருக்கிறார். 2007-ம் ஆண்டு பித்தளை வியாபாரம் பார்க்க ஆரம்பித்த ராபர்ட் வதேரா, இந்தியாவின் உயர்ந்த குடும்பத்தின் மகளான பிரியங்காவை அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டவர். ஒரே ஒரு இடத்தை விற்று 42 கோடி ரூபாய் பணம் கிடைத்தது. ஆனால், 2009-ம் ஆண்டுக்குப் பிறகு வாங்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு மற்றும் அவை வந்த பாதைகள் பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம். அவரது சொத்தும் முதலீடும், 20 ஆண்டுகளாக பெருந்தொழிலில் இருப்பவர்களால்கூட அடைய முடியாதது. ஊடகங்களுக்கு முன்னால் தலைதொங்கி ராபர்ட் வதேரா நின்றுகொண்டு இருக்கிறார். சோனி யாவிடம் ராகுல் சொன்னதாக டெல்லியில் ஒரு ஜோக் உண்டு.
''முதலில் 2ஜி, அப்புறம் நிலக்கரிஜி, இப்போது ஜிஜாஜி'' என்றாராம் ராகுல். (ஜியாஜி என்றால் மச்சான்!)
2008-ம் ஆண்டு இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு ஏற்பட்டது. இதனால், இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக்கொண்டதால், காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கையில்லா வாக்கு கோரப்பட்டது. பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்களுக்கு மாற்றி வாக்களிக்குமாறு கோரிக்கை வைத்த அமர் சிங், ஒவ்வொரு எம்.பி-க்கும் மூன்று கோடி ரூபாய் தருவதாக வாக்களித்தார். 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்துக்கு வந்த எம்.பி-க்கள் சிலர், தங்களுக்குத் தரப்பட்ட ஒரு கோடி ரூபாயைக் கொண்டுவந்து காட்டினர். கரன்சியால் மிதந்தது நாடாளுமன்றம். ஒரே ஒரு தடவைதான் இப்படி பணத்தைக் கொண்டுவந்து காட்டினர் என்பதால், ஒரே ஒரு தடவைதான் இப்படி நடந்திருக்கும் என்று சொல்ல முடியுமா? அந்தப் பெரிய மனிதர்கள் யாரும் இதுவரை சிக்கவில்லை!
இப்படித்தான் சுதந்திரத்துக்கு முந்தைய இந் தியாவிலும் பணம் பொங்கியது!
''கடல் பொங்குவதுபோல் இந்தியாவின் பணம் இங்கிலாந்துக்குப் பொங்கி வந்தது''- என்று எழுதினார் மெக்காலே. அந்த அளவுக்கு கிழக்கிந்திய கம்பெனி மூலமாக இந்தியாவின் பணம் இங்கிலாந்துக்குப் போனது. கிரீஸ் தேசத்து அலெக்சாண்டர், இந்தியாவுக்குள் நுழைந்ததும் எப்படி நடந்துகொண்டாரோ... கஜினி, வட இந்தியாவின் கானோஜ் சமஸ்தானத்தில் எதைச் செய்தாரோ... அதைத்தான் பிரிட்டிஷ் அரசாங்கமும் செய்தது. இப்படி, வந்தவர்கள் எல்லாம் கொள்ளையடிக்கும் வசதி கொண் டதாகத்தான் இந்தியா இருந்தது.
இந்தியாவுக்கு பிரிட்டிஷார் ஏன் வந்தனர்? வியாபாரம் செய்வதற்கு! இந்தியா ஏழை நாடாக இருந்திருந்தால், யாராவது வியாபாரம் செய்வதற்கு வந்திருப்பார்களா? வளமுள்ள இடத்தில்தானே வியாபாரம் நடக்கும்? எனவே, பிரிட்டிஷார் வருவதற்கு முன்பே இந்தியா வள மாகத்தான் இருந்தது.
''வங்கதேசம் சொத்து உள்ள நாடாக இருந்தது. வழிப்போக்கர்களில் யாராவது சொத்தை வழியில் இழந்து விட்டால், அந்த சொத்தைக் கண்டெடுத்தவர்கள் பக்கத்து மரங்களில் அதைக் கட்டி வைத்து விடுவார்கள். அதன்பிறகு அருகில் உள்ள காவலர்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள்'' என ஹால்வெல் என்ற வெளிநாட்டுப் பயணி எழுதி இருக்கிறார். இதே வங்கநாடு, பிரிட்டிஷ் ஆளுகைக்கு வந்த பிறகு, பெரிய மாறுதலை அடைந்தது. இந்தியாவில் இருந்து இங்கிலாந்து போகும் ஒவ்வொரு கப்பலிலும் வங்கநாட்டு நிதிக்குவியல் போய்க்கொண்டே இருந்தது.
இந்த நிலைமை 1850-களில் அப்படியே மாறி விட்டது. இதை, டாக்டர் மார்ஷமன் எழுதினார். ''வங்கநாட்டில் உள்ள மக்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக மாறியிருக்கிறது. நாய் வசிக்கத் தகுதியற்ற பாழடைந்த சிறு குடிசைகளில், கந்தல் துணியுடனும் ஒருவேளை உணவு இல்லாமலும் மக்கள் துன்பப்படுகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு 40 லட்சம் ரூபாய் வருமானத்தை மட்டும் திரட்டுபவர்களின் காதுகளில், மக்களின் பரிதாபக் கூக்குரல் விழாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?'' என்று கேட்டார்.
நான்கு விதங்களில் பணத்தை கிழக்கிந்திய கம்பெனி திரட்டி, இங்கிலாந்துக்குக் கொண்டுசென்றது. அன்றைக்கு இருந்த மன்னர்களிடம் இனாமாகவும் காணிக்கையாகவும் பெற்ற பணம், மக்களிடம் வசூல் செய்தது, கம்பெனி ஆட்கள் செய்த வர்த்தகத்தின் மூலமாக திரட்டிய பணம், சுதேச சமஸ்தானங்களிடம் இருந்து தட்டிப்பறித்த பணம்... என்று பொன்னும் பொருளும் பணமும் திரட்டப்பட்டது.
இந்தியாவின் உள்நாட்டு வியாபாரம் அனைத்தும் கம்பெனியின் நன்மைக்காக நடந்தது. கம்பெனி அதிகாரிகள் இந்திய தறி நெசவாளர்களைக் கொடுமைப்படுத்தினர். ஒரு விலையைச் சொல்லி, அந்த விலைக்குத்தான் பொருட்களைத் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். தொழிலாளர்களையும் நெசவாளர்களையும் கம்பெனிக்காக மட்டுமே தவிர, மற்றவர்களுக்கு வேலை செய்யக் கூடாது என்று கட்டளையிட்டனர். இதை எழுதி வாங்கினர். எழுதித்தர மறுத்தவர்களை, மரத்தில் கட்டிவைத்து அடித்தனர். இந்தக் கொடுமைக்குப் பயந்த பல நெசவாளிகள் தங்களது கையின் கட்டை விரலை வெட்டிக்கொண்டனர். 'விரல் இருந்தால்தானே நெசவு நெய்துதரச் சொல்வாய்?’ என்று நினைத்து கட்டை விரலை வெட்டிக்கொண்டார்களாம். சில இடங்களில் தங்களது பேச்சைக் கேட்காத தொழிலாளர்கள் மற்றும் நெசவாளிகளின் கட்டை விரலை பிரிட்டிஷாரே வெட்டியுள்ளனர்.
1765 முதல் 1771 வரையிலான ஐந்து ஆண்டு காலத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு நான்கு கோடி ரூபாய் கொண்டு செல்லப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் கம் பெனிக்கு வந்த மொத்தப் பணம் 13 கோடி என்றால், மூன்றில் ஒரு பங்கு பணம் இங்கிலாந்துக்குச் சென்றது. படை நடத்த, போர் புரிய, சம்பளம் கொடுக்க, சாப்பிட, உள்கட்டமைப்பு வசதி போக மிஞ்சியது அனைத்தையும் இங்கிலாந்துக்குக் கொண்டுபோனார்கள்.
கம்பெனி வர்த்தகம் செய்தது போக, கம்பெனியின் அதிகாரிகள் தனியாக வர்த்தகம் பார்த்தனர். உப்பு, வெற்றிலை பாக்கு, புகையிலை வியாபாரம் பார்த்தார் கிளைவ். அவர் இதைச் செய்யக் கூடாது என்று கம்பெனியின் வர்த்தகர்களும், கீழே இருந்த அதிகாரிகளும் கோரிக்கை வைத்தனர். ஆனாலும், அவர் கேட்கவில்லை.
புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான விசாரணை ஆணையத்தை பிரிட்டிஷ் அரசு அமைத்தபோது, அதில் ஜான்ஸவிவன் என்ற நிர்வாகி (1804 முதல் 1841 வரை இந்திய நிர்வாகத்தில் அதிகாரியாக இருந்தவர்) சாட்சியம் அளித்தார். ''தர்மத்தின்படியும் பொருளாதார நிலை மையின்படியும் என்னைக் கேட்டால், அவர்களது பழைய சுதேச மன்னர்களிடமே இந்த ஆட்சியை ஒப்படைத்துவிடுவதே சரியானது என்று கூறுவேன். அவர்களிடம் இருந்து நாம் பணம் பெறுவதை அவர்கள் குறை சொல்லவில்லை. ஆனால், அவர்களிடம் இருந்து பெறும் பணத்தை அவர்களது நாட்டில் செலவழிக்காததையே அவர்கள் குறை சொல்கிறார்கள். இந்தியா சுரண்டப்படுவதாக நினைக்கிறார்கள். எல்லா நல்ல பொருள்களையும் - பஞ்சு, பன்னீரை இழுத்துக்கொள்வதைப் போல - நம் ஆளுகைக்கு இழுத்துக்கொண்டு, கங்கையில் உள்ளதை தேம்ஸ் நதிக்கரையில் கொண்டுபோய் கொட்டிக்கொண்டு இருக்கிறோம்'' என்று அவர் சாட்சியத்தில் சொன்னார்.
அப்போது தேம்ஸில் மட்டுமே கொட்டினார்கள். இன்று எல்லா நாடுகளிலும் கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அதில் பேதம் காட்டுவது இல்லை!
இந்த வருத்தங்கள் மெள்ள எழுந்தபோது, 'உங்களுக்கு என்ன சலுகை எல்லாம் செய்து தருகிறோம்’ என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் பட்டியல் போட ஆரம்பித்தனர். ''தற்கால நாகரிகத்தை ஒட்டிய தொழில்களையும், தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சாதகமான ஒரு அரசாங்கத்தை அடைந்த பாக்கியம் ஒன்றே உங்களுக்குப் போதுமே'' என்று, லண்டனில் இருந்த இந்திய ஆலோசனை சபை உறுப்பினர் ஸர்ஜான் ஸ்ட்ராச்சி சொன்னார்.
இதைப் படிக்கும்போது ஆ.ராசா சொன்னது உங்களுக்கு ஞாபகம் வரவேண்டும். ''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் செய்த ஒரே தவறு, சாமான்யர்கள் அனைவர் கையிலும் செல்போன் இருக்க வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டேன் அல்லவா... அது ஒன்றுதான் நான் செய்த தவறு'' என்றார் ஆ.ராசா. பிரிட்டிஷார் எல்லாம் செய்துவிட்டு, தொழில் வளர்ச்சி என்று பேசினர். இன்றைய இந்திய ஆட்சியாளர்கள், மக்கள் நலன் என்கிறார்கள்.
அன்றைக்கு ராபர்ட் கிளைவ் கொள்ளையடித்துச் சென்ற பணத்துக்கு அவரை மட்டுமே குற்றம்சாட்டி தண்டனை வழங்கியது பிரிட்டிஷ் கோர்ட். இன்றும் அதுதானே நடக்கிறது. ஸ்பெக்ட்ரம் வழக்கில், ஆ.ராசா மட்டுமே குற்றவாளி என்று நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை அறிக்கை சொல்கிறது. ''இல்லை! இந்தியாவின் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் தெரியாமல் எந்த விதிமுறையையும் நான் மாற்றவில்லை. அனைவருக்கும் எனது நடவ டிக்கைகளைச் சொல்லியே வந்தேன்'' என்கிறார் ஆ.ராசா. இன்னும் ஒருபடி மேலே போன கருணாநிதி, ''தனிப்பட்ட ஒருவரால் இவ்வளவு பெரிய விஷயத்தைச் செய்திருக்க முடியுமா?'' என்று கேட்டார். ராசாவை மட்டும் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. பிரதமரையும் நிதி அமைச் சரையும் ராசா குற்றம் சாட்டுகிறார். இதில் இருந்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதி என்ன?
கற்பரசி கண்ணகியா, சீதையா என்று பட்டிமன்றம் நடந்ததாம். கண்ணகியை கற்பரசி என்று பேசியவர்கள், சீதையைக் கொச்சைப்படுத்தினர். சீதையைக் கற்பரசி என்று பேசியவர்கள், கண்ணகியைக் கொச்சைப்படுத்தினர். விவாதத்தைக் கேட்டவர்கள், கண்ணகியையும் சீதையையும் சந்தேகப்பட ஆரம்பித்தார்களாம். அப்படித்தான் நடந்தது ஸ்பெக்ட்ரம் விவகாரமும்!
''அனைத்து நிலைகளிலும் ஊழல்கள் நமது சமுதாயம் முழுவதும் பெருநோயாக பரவிவருகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஊழல் என்ற நோய்க்கு ஏழைகள்தான் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. அவர்கள்தான் அதன் சுமையைச் சுமக்க வேண்டி இருக்கிறது'' என்று 83-வது காங்கிரஸ் மாநாட்டில் சோனியா சொன்னார். அதையே அவரது அத்தை இந்திராவும் சொன்னார். அதையே நேருவும் சொன்னார். ஆனால், என்றும் மாறாததாக ஊழல் இருந்தது. இருக்கிறது. இருக்கும்!
''கள்ளச் சந்தைக்காரர்களும் கறுப்புப் பணக்காரர்களும் அதிகமாகிவிட்டார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் அருகில் உள்ள மின் கம்பங்களில் அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்படுவார்கள்'' என்று அடிமை இந்தியாவில் நேரு சொன்னார். ஆனால் அவரால் அதைச் செய்ய முடிந்ததா?
சுரண்டலை உணர்வோம்!

- Vikatan

No comments:

Post a Comment