Saturday, November 30, 2013

மகாத்மா முதல் மன்மோகன் வரை ! - 2


அடுத்த வீட்டுக்குள் புகுந்து அப கரிப்பவர்​களுக்குப் பெயர் கொள் ளையன், திருடன் என்றால்... சொந்த வீட்டுக் குள்ளேயே திருடுபவர்களுக்கு என்ன பெயர்? அரசியல்​வாதிகளா?!
ஊழல் செய்தார், லஞ்சம் வாங்கினார், முறைகேட்டில் ஈடுபட்டார்... என்பதெல்லாம் இன்று வெட்கித் தலைகுனிய வைக்கும் கீழான செயல்களின் பட்டியலில் இல்லை. மாறாக, அது ஒரு கௌரவமாக மாறிவிட்டது. 'அஞ்சு வருஷம் இருந்தாரு... நல்லா சம்பாதிச்சாரு’ என்று மக்களே நற்சாட்சிப் பத்திரம் கொடுக்கப் பழகிவிட்டனர். 'அஞ்சு வருஷம் பதவியில இருந்தாரு... நல்லா திருடுனாரு’ என்று எவரையும் சொல் வதில்லை. காரணம், எப்படியாவது பணம் வந்தால், அது தகுதி வந்ததாக வரவு வைக்கப்படுகிறது. அதனால்தான், இன்று ஊழல்கள் வெளிப்படையாகவே வக்காலத்து வாங்கப்படுகின்றன.
நிலக்கரி முறைகேடு வெளிச்​சத்துக்கு வந்தபோது, உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே சொன்னதுதான், இந்திய மனச் சாட்சியின் குரல்.
''நிலக்கரி... நிலக்கரி... என்று பேசு​கிறார்கள். சில நாட்களுக்கு அப்படித்தான் பேசுவார்கள். பிறகு மறந்துவிடுவார்கள். இப்படித்தான் ஒரு காலத்தில் போஃபர்ஸ்... போஃபர்ஸ்... என்று பேசினர். அதன் பிறகு மறந்துவிட்டனர் அல்லவா? அப் படித்தான் நிலக்கரியையும் மறந்து போவார்கள்! யாரும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்'' - என்று ஷிண்டே சிரித்துக்கொண்டே சொல்ல... முன்வரிசையில் இருந்தவர்கள் சிலிர்த்தபடி கைதட்டினர். உற்சாகமான ஷிண்டே, தன் முன்னால் இருந்த மேஜையைப் பெருமிதமாகத் தட்டிக்கொண்டார். அந்தக் காட்சியை டி.வி-யில் பார்த்தவர்களுக்குத் தெரியும், எத்தகைய மலை முழுங்கி மகாதேவன்கள் மத்தியில் நாம் வாழ்ந்து​கொண்டிருக்​கிறோம் என்று.
போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் என்பது, காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தலை​குனிவை இன்றுவரை ஏற்படுத்திவரும் விவகாரம். காங்கிரஸ் கட்சி 1984-க்கு முன்பும் பின்பும் 450 இடங்களை இந்திய நாடாளுமன்றத்தில் பெற முடிந்தது இல் லை. அப்படிப்பட்ட செல்வாக்குடன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை, 1989 தேர்தலில் அதல பாதாளத்துக்குத் தள்ளியது போஃபர்ஸ். நேரு, இந்திரா, ராஜீவ் என்று 40 ஆண்டுகளாக இந்தியா முழுக்க அறிமுகமான குடும்பத்தை... நான்கு மாதங்களுக்கு முன்பு வரை இன்னார் என்று தெரியாத வி.பி.சிங், அருண் நேரு... போன்றவர்கள் வீழ்த்தக் காரணமானது போஃபர்ஸ். அதைத்தான் மக்கள் மறந்துவிட்டனர் என்றார் ஷிண்டே. மக்கள் மறந்துவிட்டதாக ஷிண்டேக்கள் நினைக்கிறார்கள். இப்படிச் சொல்வதன் மூலமாக போஃபர்ஸ் பீரங்கிகளை எளிதாக மறைக்க முடியும் என்று நம்புவதுதான் அரசியல் துரதிருஷ்டம்.
நிலக்கரிக்கு முன்னதாகக் கிளம்பியது ஸ்பெக்ட்ரம். இந்த முறைகேட்டால் லாபம் அடைந்த நிறுவனங்கள் பெற்ற உரிமத்தை  உச்ச நீதிமன்றம் ரத்துசெய்தது. அப்போது அமைச்சர் சல்மான் குர்ஷித் கொடுத்த வாக்கு மூலம் மொத்த இந்தியர்களையும் தலைகுனிய வைத்தது.
''இப்படியெல்லாம் லைசென்ஸை கேன்சல் செய்தால், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்குவார்கள். இதனால் இந்தியாவுக்குத்தான் நஷ்டம்'' என்று குதித்தார் குர்ஷித்.
இந்திய அரசின் கஜானாவுக்கு வரவேண்டிய பணத்தை தனியார் சிலர் கொழிப்பதற்காக விதிமுறைகளை மீறி வேறுபக்கமாகத் திருப்பி விட்டனர் என்பதுதான் ஸ்பெக்ட்ரம் வழக் கின் மையமான குற்றச்சாட்டு. சிலரின் சுயநலச் சுரண்டலால் இந்திய அரசு நஷ்டம் அடைந்தது சல்மான் குர்ஷித்தின் கண்ணுக்குத் தெரியவில்லை. 'கொள்ளை லாபம் அடைய முடியாமல் வாசலை அடைத்தால் இந்தியாவுக்கு முதலீடு வராது. அதனால் இந்தியாவுக்கு இழப்பு’ என்று ஊழலுக்கு பச்சையாக உரம் போட்டு வளர்க்கிறார்கள். 'நீ வா... இந்தியாவுக்குள் வா... எந்த விதிமுறைமீறலும் செய்துகொள்’ என்று அழைப்பதற்குப் பெயர் வர்த்தகமா? கூட்டுக் கொள்ளையா?
''சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு வாருங்கள்'' என்று நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் கோரிக்கை வைத்தபோது அன்றைய நிதி அமைச்சரும் இன்றைய குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜிக்கு கோபம் பீறிட்டது. ''மீட்டுக்கொண்டு வாருங்கள்... மீட்டுக்கொண்டு வாருங்கள் என்றால், பணத்தை மீட்டுவர ராணுவத்தையா அனுப்ப முடியும்?'' என்று கேட்டார். யார் யார் பணம் போட்டு வைத்துள்ளனர் என்ற பட்டியலையாவது கொடுங்கள் என்றபோது, இன்னொரு பல்டி அடித்தார்.
''கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக வெளி நாடுகளில் இருந்து 36 ஆயிரம் தகவல்களைப் பெற்றுள்ளோம். ஆனால், வெளியிட மாட்டோம் என்று சொல்லித்தான் அந்தத் தகவல்களை வாங் கினோம்.'' -இது பிரணாப் அளித்த பதில். யாருக்கும் சொல்லாமல், நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க, அந்தத் தகவலை எதற்காக வாங்க வேண்டும்? அதாவது, அரசியல் நெருக்கடி காரணமாக தகவ லைப் பெற்று, அதை அப்படியே ஊறவைப்பது ஊழலுக்கு உரமாகத்தான் அமையுமே தவிர, உலை வைக்காது.
''எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போவதோ?'' என்று பாரதி பாடியது, அந்நிய வியாதிகளைப் பார்த்து. ஆனால், அது சுதேசி  அரசியல்வாதிகளுக்கும் பொருத்தமாய் இருக்கிறது.  
'இதுதான் சுரண்டல் கொள்கை’ என்ற வரையறையை இந்திய மண்ணில் முதலில் பேசியவர் தாதாபாய் நௌரோஜி. இந்தியாவின் வளம் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுதான் இங்கிலாந்தின் சுரண்டல் தத்துவம் என்று வரையறுத்தார். 'வறுமையும் இந்தியாவில் பிரிட்டிஷ் அல்லாத ஆட்சியும்’ என்ற அவரது புத்தகம் 1901-ம் ஆண்டு வெளியானது. 'இந்தியா தொடர்ந்து வறுமையான நாடாக மாறுவதற்குக் காரணம் இந்தச் சுரண்டல்தான்’ என்று பிரிட்டிஷ் ஆதிக்கத்தை பொருளாதாரப் பார்வை கொண்டு பார்த்தவர் இவர். பிரிட்டிஷ் ஆதிக் கத்தை பொருளாதார நோக்கத்துடன் பார்க்க வேண்டும் என்று காந்தியைத் தூண்டியது இந்தப் புத்தகம். ''நான் இந்தியாவின் ஏழ்மையின் ஆழ, அகலங்களை தாதாபாயின் புத்தகத்தில் இருந்துதான் தெரிந்துகொண்டேன்'' என்று காந்தி எழுதியிருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சியின் இந்தச் சொத்துச் சுரண்டல்தான் இந்தியாவில் வறுமைத் தன்மையை அதிகப்படுத்தியது என்று தாதாபாயும் காந்தியும் சொன்னது  உண்மையானால், இன் றைய வறுமைக்கும் ஏழ்மைக்கும், இன்றைய ஊழலும் கறுப்புப் பணமும்தானே காரணமாக இருக்க முடியும்?
சுதந்திரம் மலர்ந்து 60 ஆண்டுகள் ஆன பிறகும், புதிய பொருளாதாரக் கொள்கை பூத்து 23 ஆண்டுகள் ஆனபிறகும், இந்தியாவின் வறுமையும் ஏழ்மையும் குறையவில்லை. அதிகமாகத்தான் ஆகி இருக்கிறது.
கிராமத்தில் 27 ரூபாய் 20 பைசாவுக்கு மேலும், நகரத்தில் 33 ரூபாய் 40 பைசாவுக்கு மேலும் ஒரு நாளைக்கு செலவுசெய்யக் கூடியவர்களை ஏழைகளாகக் கருத முடியாது என்று வரையறுத்துள்ளனர். இந்த அடிப்படையில் பார்த்தால் 2012-ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 26 கோடியே 90 லட்சம் பேர். இந்த செலவுக் கணக்குக்கு முன்னதாக 2004-ம் ஆண்டு எடுக் கப்பட்ட கணக்கின்படி, இந்தியாவில் ஏழை களின் எண்ணிக்கை 40 கோடியே 70 லட்சம் பேர். ஒரு நாளைக்கு கிராமத்தில் 28 ரூபாயையும், நகரத்தில் 34 ரூபாயையும் வைத்து எதையுமே செய்ய முடியாது என்பது, இந்த வரையறையைச் செய்தவர்களுக்குத் தெரியும். ஆனால், 'ஃபுல் மீல்ஸ் சாப் பிடலாம்’ என்று எகத்தாளம் காட்டியவர் ரசூல் மஷீத். மருத் துவ இடத்தை முறைகேடாக விற்பனை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, இப்போது சிறையில் களி தின்றுகொண்டு இருக்கிறார். இந்த ரூபாயை வைத்து ஒரு நாளை ஓட்ட முடியுமா, முடியாதா என்பதல்ல கேள்வி. 'இன்னமும் 28 ரூபாய், 34 ரூபாய் தரத்துடன் இந்திய வாக்காளன் இருக்கிறானே... அவனிடம் வாக்குக் கேட்டுப் போகிறோமே...’ என்ற வெட்கம் அதிகார வர்க்கத்துக்கு இருக்கிறதா? இந்த வறுமைக்குக் காரணம், ஊழலும் கறுப்புப் பணமும்தான். கடந்த 17 ஆண்டுகளில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 940 விவசாயிகள் இறந்துபோயிருக்கிறார்கள். இன்னும் பல லட்சம் பேர் சாவின் விளிம்பில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் லட்சம் கோடி ரூபாய், ஆயிரம் கோடி ரூபாய் என்று வெளிநாடுகளில் பதுக்கும் தகவலும் நமது நாட்டில்தான் என்றால், இதை எப்படி புரிந்துகொள்வது.
இரண்டே வாக்கியத்தில் கார்ல் மார்க்ஸ் சொன்னார்: ''ஒரு முனையில் செல்வம் குவிகிறது. இதன் விளைவாக இன்னொரு முனையில் வறுமைத் துயர் குவிகிறது.''
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, கட்டாந்தரையான விவசாய நிலங்கள், தற் கொலை செய்துகொள்ளும் விவசாயிகள், தொழில் உற்பத்தியின் வீழ்ச்சி... இவ்வளவுக்கும் மத்தியில் ஊழல் செய்வதற்கு மட்டும் பணம் எங்கிருந்து கிடைக்கிறது? பதுக்குவதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது?
இந்தியா வாங்கியுள்ள கடன் 2007-ம் வருட கணக்கின்படி 62.3 பில்லியன் டாலராக இருந் தது. கடந்த ஆண்டு டிசம்பரில் அது 376.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதில், குறுகியகாலக் கடன் 159.6 பில்லியன் டாலர். 2014 மார்ச் மாதத்துக்குள் 172 பில்லியன் டாலரை நாம் செலுத்தியாக வேண்டும். இந்தியாவில் வறுமை தாண்டவம் ஆடுகிறது. தலையை கடன் அமுக்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால், வெளிநாட்டில் கறுப்புப் பணம் குவிந்துகொண்டு இருக்கிறது. இந்த சொத்துச் சுரண்டலை புரிந்துகொள்ளாவிட்டால் வாழ்ந்து பயனில்லை.
எந்த அமெரிக்காவாக நாம் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ... அந்த அமெரிக்காவே பல லட்சம் கோடி கடனில்தான் இருக்கிறது. ''கடன்தான் மிகவும் மோசமான வறுமை'' என்று தாமஸ் ஃபுல்லர் சொன்னார். ''இளையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில், அவர்கள்தான் தேசியக் கடனை ஏற்றுக்கொள்ளப் போகிறவர்கள்'' என்று அமெரிக்க பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திட்ட அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவர் சொன்னார். அப்படி ஆசீர்வதிக்கப்பட்ட இளைஞர்கள் தலையில் ஏராளமான கடனை ஏற்றிவைத்துவிட ஊழலும் முறைகேடும்தான் காரணம்.
இந்தியாவின் மிக முக்கியமான பொரு ளாதார மேதைகளில் ஒருவரான ஜி.வி.ஜோஷி எழுதினார்... ''நாம் வரலாற்றைச் சரியாகப் படித்தால், செல்வத்தை நோக்கித்தான் அதி காரம் ஈர்க்கப்படும்.''
ஆம்! இந்தியா விடுதலை அடைந்தது முதலே பணத்தை நோக்கித்தான் அதிகாரம் ஈர்க்கப்பட்டது!
 - சுரண்டலை உணர்வோம்
-Thanks Vikatan!

No comments:

Post a Comment