Monday, May 11, 2015

விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்!

- vikatan article.

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மீண்டும் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
கோடிக்கணக்கான தமிழர்கள் ஓட்டளித்து வெற்றி பெற்ற மகிழ்ச்சியை விட விடுதலைத் தீர்ப்பு கட்டாயம் 'வாழ்வில் நிம்மதியும்' ஆனந்தத்தையும் கொடுத்திருக்கும். மக்களின் முதல்வர் மீண்டும் தமிழக முதல்வராகிறார் என வாண வேடிக்கையும், காது கிழிக்கும் பட்டாசுகளும். ஆர்ப்பாட்டமான ஆட்டமும் முதல்வரை வரவேற்கத் தயாராகி விட்டன. நீதிபதி குன்ஹாவை வெறுத்தவர்கள் நீதிபதி குமாரசாமிக்கு கோவில் எழுப்பும் நிலையில் உள்ளனர்.

டாஸ்மாக் மதுக்கடைகளை அடைப்பது ஒட்டு மொத்த தமிழருக்கும் விடுதலை அளிக்கும் செய்தியாகும். மதுவால் அழிந்த குடும்பங்கள் கூட உங்கள் விடுதலைக்காக கோவிலில் நேர்த்திகடன் செய்தவர்கள்தான். அப்படிப்பட்ட குடும்பங்கள் மதுவால் அழிய வேண்டுமா? உங்கள் மகிழ்ச்சியின் பரிசாக, 'டாஸ்மாக் கடைகள் பூட்டப்படும்' என்ற அறிவிப்பை தமிழ் பெண்களுக்கு கொடுப்பீர்களா?  உங்களுக்கு கிடைத்த விடுதலைச் செய்தி போல எங்களுக்கும் டாஸ்மாக்கில் இருந்து விடுதலைச் செய்தி வேண்டும். ஆந்திராவில் தமிழனை கொள்கிறார்கள், இலங்கை கடற்படை மீனவத் தமிழனை சுடுகிறார்கள், நாமும் நம் பங்கிற்கு டாஸ்மாக் மூலம் தமிழனை கொல்ல வேண்டுமா?

அதிக தரத்துடன், அதிக எண்ணிக்கையில் அம்மா உணவகத்தின் மூலம் வருமானம் தேடலாம். இலவசத்தை ஒழித்து மக்கள் வாழ்வு முன்னேற மனம் வையுங்கள். அரசிடம் இலவசம் வாங்கும் தமிழன் மறு கையில் காசு கொடுத்து சாவை (டாஸ்மாக் சரக்கு) விலைக்கு வாங்கி வருகிறான். இனி தமிழ் இனம் மலட்டு சமூகமாக மாறுவதும், மனிதனாக மலர்வதும் உங்கள் கையில் தான் உள்ளது. டாஸ்மாக் ஒழிந்தால் உங்கள் கட்சிக்கு பெண்களது ஒட்டு விகிதம் கட்டாயம் கூடும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

மலைக்க வைத்த மலை அழிப்பு கிரானைட் கொள்ளை, கடல் தாண்டிச் சென்ற கனிம மணல் கொள்ளை என தமிழகத்தின் இயற்கை வளக் கொள்ளைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, அவற்றை அரசே ஏற்று நடத்த வேண்டும். டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் நமது இயற்கை வளங்கள் மூலம் பெற முடியாதா? அரசுக்கு வருமானம் பார்க்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன. இலவசத்தை ஒழித்து, அரசின் செலவுகளை குறைத்து, பொதுப்பணித்துறையின் ஊழல்களை ஒழித்தாலே அரசுக்கு பல ஆயிரம் கோடிகள் மிச்சமாகுமே. தேவை அற்ற அரசின் செலவுகளை குறைப்பதும் லாபத்திற்கு வழி.

நீங்கள் அடைந்த மகிழ்ச்சியைப்போலவே தமிழர்களும் நிம்மதி, மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். ஆனால், கடந்த ஆறு மாதங்களாக ஆட்சி முடங்கி விட்டது, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அதிகமாகி விட்டது. கொலை, கொள்ளை சம்பவங்கள் மக்களின் நிம்மதியை அழித்து விட்டது. மக்களுக்கான எந்த திட்டமும் சீரிய முறையில் செயல்படவில்லை. பொதுப்பணித்துறை பொறுப்பாக லஞ்சம் வாங்கும் துறையாக மாறி விட்டது. லஞ்சம் வாங்கவே அரசு அலுவலகம் பயன்படுகிறது  என்ற நிலைக்கு தமிழர்கள் அரசு அலுவலகத்தை நினைத்து கொதித்துப் போய் வருகின்றனர். கற்றுக்கொடுக்கும் கல்வி முதல், நாட்டை காக்கும் காவல் துறை வரை லஞ்சப் பேய்களின்   ஆக்கிரமிப்பு அதிகரித்து விட்டது. உங்கள் அறையை தூய்மை செய்வது போல, அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் தூய்மை ஒட்டு மொத்த தமிழருக்கும் செய்யும் மாபெரும் சேவையாகும்.

தற்போதைய கோடை காலத்தில் கண்மாயில் நிற்க வேண்டிய மழை  நீர், சாலைகளில் வெள்ளம் போல மக்களை கஷ்டப்படுத்தி வருகிறது. கண்மாயில் நீர் இல்லாமல் சாலைகளில் வெள்ளம் பார்க்க வைத்த  அரசு நீர் வள பொதுப் பணித்துறையினரின் செயல்பாடுகள் விவசாயிகளை மிரட்டி வருகிறது. தூர் வாரப்படாத கண்மாயும், வரத்துக் கால்வாயும் உங்களுக்காக ஓட்டு போட்ட விவசாயிகளுக்கு கஷ்டத்தையே தரும் என்பதை உணர்ந்து, நீர் நிலைகளை தூர் வார உத்தரவிட வேண்டும். தமிழகத்திலும் விவசாயிகள் தற்கொலை ஆரம்பமாகி விட்டது. அதை தடுக்க நவீன திட்டம் கொண்டு வர வேண்டும்.

மக்களின் அடிப்படைத் தேவையான நீர், சாலை சதி, போக்குவரத்து, மருத்துவ வசதி இந்நான்கிலும் மக்களின் எதிர்பார்ப்பு எப்போதும் அதிகமாக இருக்கும். ஆனால், தற்போது சுத்தமான நீர் கிடைப்பது அரிது, தரமான சாலைகள் இருந்தால் 'கின்னஸ் சாதனைக்கு' சொல்லும் அளவிற்கு உள்ளது. பள்ளமான சாலைகள் பல அரசு ஊழியர்களை கோடீஸ்வரராக மாற்றி இருக்கும். பேருந்துகள்   பெயரில் மட்டுமே சொகுசுப் பேருந்து, மற்றபடி பேருந்துகள் எல்லாம் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் அளவிற்கு தரமற்றதாக, உயிரை எடுக்கும் அளவில் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் லஞ்சமும், தரமற்ற மருத்துவ சேவையும், படுக்க இடமின்றி நோயாளிகள் அவதிப்படுவதும் மக்களுக்கு அரசு செய்யும் நன்றிக்கடனா எனத் தெரியவில்லை.

இன்றைய நவீன தொழில் நுட்பத்தில் ஊடகங்கள் வாயிலாக தங்களது விடுதலைச் செய்தி ஒரு நிமிடத்திலேயே உலகம் முழுவதும் தெரிந்து விட்டது. அமைச்சர்கள் தங்களது பணிகளை முனைப்புடன்   கவனிக்கவும், விடுதலை ஆனந்த பெருவிழா என்ற பெயரில் ஊர் ஊருக்கு காது கிழியும் பாடல்களுடன், மக்களை இம்சிக்கும் பொதுக்கூட்டம் நடத்தாமல் இருக்கவும் ஆணையிட வேண்டும்.   தங்களுக்காக ஆடல் பாடல் நிகழ்சிகள், குத்துப்பாட்டு, கோவில் வேண்டுதல்கள் நடத்துவதை மக்கள் பிரதிநிதிகள் நடத்துவதற்கு பதிலாக, மக்கள் குறையை கேட்க தொகுதிப்பக்கம் வரச் சொன்னால் அதுவே மக்களுக்கு நீங்கள் செய்யும் பேருதவி.

உங்கள் கூட்டணியில் உள்ள ஒருவரே நான் முதல்வராக மக்கள் ஆசைப்படுகிறார்கள் என்று சொல்வதும், கூட்டணி திசை மாறி நான்தான் முதல்வர் வேட்பாளர் என்று ஒருவரும், பத்திரிகையளர்களை மிரட்டும் கட்சித் தலைவரும், உங்களை புகழ்ந்து பேசி தவறான வழியில் சம்பாதிக்கும் உங்கள் அருகில் உள்ள அமைச்சர்களும்  சூழ்ந்துள்ள தமிழகத்தில் மக்களுக்காக மட்டுமே செயல்பட வேண்டும் என்ற உறுதியுடன் திறம்பட செயல்பட வேண்டும்.

தங்களது வெற்றி மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வீண் ஆடம்பரமும், விளம்பரமும் இல்லாத அரசியலை பொதுமக்கள் விரும்புகின்றனர். ஏழை மக்களுக்காகவே மீண்டும் முதல்வராக நீங்கள் பதவி ஏற்பதாகச் சொன்னால், டாஸ்மாக் ஒழிப்புச் செய்தி எங்கள் இதயங்களில் விடுதலைச் செய்தியாக மகிழ்ச்சியுடன் வந்து நிறையட்டும். மகிழ்ச்சி என்றும் நிலைக்கட்டும்.

எஸ். அசோக்

No comments:

Post a Comment