Monday, May 11, 2015

குற்றம் புரிந்தவர் : கொல் அந்தக் கிழவனை..! 1

- Vikatan article

னவரி 20. 1948. பிற்பகல்.
நாத்துராம் விநாயக் கோட்ஸே, அவரது சகோதரர் கோபால் கோட்ஸே, நாராயண் ஆப்தே, ஷங்கர் கிஸ்தயா, மதன்லால் பஹ்வா, திகம்பர் பட்கே மற்றும் விஷ்ணு கர்கரே என்னும் ஏழு நடுத்தர வயது இளைஞர்கள் ரகசியமான இடத்தில் கூடியிருந்தனர்.
இறுக்கமான சூழ்நிலை.
“தர்மத்தை நிலைநாட்ட கிருஷ்ணன் எவ்வளவு கொலைகள் புரிந்திருப்பான்? அது போலத்தான் இதுவும்! ஹிந்து தர்மத்தை அழிவிலிருந்து காப்பதற்காகவே இந்தச் செயலில் ஈடுபடப் போகிறோம். இது ஒன்றும் வெட்கப்படவேண்டிய செயல் அல்ல. புறப்படுங்கள்..” என்று நாத்துராம் கோட்ஸே முழங்கினார்.
ஏழு பேரும் தனித்தனியாகப் புறப்பட்டார்கள். வெவ்வேறு வழிகளில் பயணப்பட்டு மாலையில் தில்லி பிர்லா மாளிகைக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கேதான் நாட்டுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தி தங்கியிருந்தார். அவர்களது திட்டம் தெளிவாக இருந்தது.
காந்தி பிரார்த்தனை செய்யும் போது மதன்லால் பஹ்வா, மேடைக்குப் பின்புறம் சென்று குண்டு ஒன்றை வெடிக்க வைக்கவேண்டும். மக்கள் பீதியில் அங்கும் இங்கும் ஓடுவார்கள். அதே சமயத்தில் விஷ்ணு கர்கரே கூட்டத்தில் கையெறி குண்டை வீசவேண்டும். இதனால் பெரிய கலவரம் உண்டாகும். இந்தச் சூழ்நிலையில் திகம்பர் பட்கேயும், ஷங்கர் கிஸ்தயாவும் காந்தியை நெருங்கி, அவரைத் தலையில் சுட்டுக் கொல்லவேண்டும். அப்போது ஏற்படும் கூச்சலையும் குழப்பத்தையும் பயன்படுத்தி ஏழு பேரும் தப்பித்துச் சென்று விடவேண்டும்.
மதன்லால் திட்டப்படி காந்தி பிரார்த்தனை செய்யும் மேடையின் பின்புறத்தை நோக்கி முன்னேறினார். ஆனால் அங்கே இருந்த காவலாளி, மதன்லாலை மேடைக்குப் பின்புறம் செல்ல அனுமதிக்கவில்லை. 
வேறு வழியின்றி மதன்லால் பிர்லா மாளிகையை விட்டு வெளியேறினார். பிரார்த்தனை மேடையின் பின்புறம் இருந்த சுவர் மீது, வெளியிலிருந்தபடி குண்டை வைத்து வெடிக்கச் செய்தார்.
குண்டு பேரொலியுடன் வெடித்தது. புகையும் எழுந்தது. ஆனால் காந்தி இருந்த மேடைக்குச் சற்று தூரத்தில் இது நிகழ்ந்ததால், சதிகாரர்கள் எதிர்பார்த்தபடி, மக்களிடையே கலவரம் எதுவும் ஏற்படவில்லை. 
மதன்லாலின் துரதிர்ஷ்டம், அவர் காவலர்களிடம் சிக்கினார். அங்கேயே இருந்தால் அனைவரும் சிக்க வேண்டியதுதான் என்ற நிலை. திட்டத்தை நிறைவேற்றாமலேயே, மற்ற சதிகாரர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றார்கள். 
மதன்லால் விசாரிக்கப்பட்டு, அவர்கள் தில்லியில் தங்கியிருந்த ஹோட்டல்களைச் சோதனையிட்டது தில்லி போலீஸ். ஆனால், விடுதிகளை அவர்கள் காலி செய்திருந்தனர்.
போலீஸ் அவர்களைத் தேடி மும்பை விரைந்தது. அவர்களை அப்போதே கண்டுபிடித்திருந்தால், இந்திய சரித்திரமே மாற்றி எழுதப்பட்டிருக்கும். அங்கும் சதிகாரர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லையே!
காந்தியை அவர்கள் கொலை செய்ய முயற்சி செய்ததன் பின்னணி என்ன?
நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி புரிந்த ஆங்கிலேய அரசை எதிர்த்து காந்தி தீவிரமான விடுதலைப் போராட்டத்தில் குதித்தார். ஆண், பெண், இளைஞர்கள் என அனைவரும் ஜாதி, மத வேறுபாடின்றி ஒன்றுபட்டு, தங்கள் சொத்து, சுகம் அனைத்தையும் துறந்து, காந்தியின் தலைமையை ஏற்றனர். ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடத் துவங்கினர்.
இந்திய மக்களில் பெரும்பான்மை யானவர்கள் ஹிந்துக்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் இருந்தவர்கள் இஸ்லாமியர்கள். மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் திணறிய ஆங்கில அரசு, இந்தத் தகவலை அடிப்படையாகக்கொண்டு, போராட்டத்தைத் திசைதிருப்ப ஒரு சூழ்ச்சி செய்தது.
“இந்தியா ஹிந்துக்களின் நாடு! நாடு விடுதலை பெற்றால் ஹிந்துக்களே ஆட்சி புரிவார்கள். காந்தியும் ஹிந்துதான். அவரும் ஹிந்துக்களுக்குச் சாதகமாகத்தான் நடந்துகொள்வார். இன்று ஹிந்துக்களுடன் இணைந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போரிடும் சிறுபான்மையினரான முஸ்லிம்கள், விடுதலைக்குப் பின் ஹிந்துக்களாலேயே ஏமாற்றப்படுவது நிச்சயம்” என்றொரு விஷமப் பிரசாரத்தைச் செய்தது.  
ஆங்கிலேயர்களின் இந்தப் பிரசாரத்தால், சுதந்திர இந்தியா ஹிந்துக்களின் நாடாகவே இருக்கும் என்ற பயம் முஸ்லிம்களின் உள்ளத்தை ஊடுருவியது. தங்களுக்கென தனியொரு சுதந்திர நாடு வேண்டும் என்று அவர்கள் கருதத் தொடங்கினார்கள். 
இஸ்லாமியத் தலைவரான முகம்மது அலி ஜின்னா, ‘முஸ்லிம்களுக்குத் தனி நாடு தேவை..’ என்ற முழக்கத்துடன் களம் இறங்கினார்.
அரசியலில் ஏற்பட்ட இந்தத் திடீர் திருப்பம், ஹிந்து, முஸ்லிம் இருவரையும் இரு கண்களாகவே பாவித்து வந்த காந்திக்குப் பெரும் மன வேதனையை அளித்தது.
‘இது ஆங்கிலேயர்களின் தந்திரம்’ என்று உணர்ந்த காந்தி, ஹிந்துக்களின் மீது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தைப் போக்குவதற்கும் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்கும் பலவாறு முயன்றார். 
“ஹிந்துக்கள், இஸ்லாமியர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வது அவசியம். அவர்களுக்காகச் சில தியாகங்களைச் செய்வது ஹிந்துக்களுடைய கடமை” என்று ஹிந்துக்களை வலியுறுத்தத் தொடங்கினார். இதன்மூலம் ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமை வலுப்பட்டு, விடுதலைப் போர் தீவிரமடைந்து, நாடு விரைவில் சுதந்திரம் அடையும் என்று அவர் நம்பினார்.
ஆனால், காந்தியின் கூற்று தீவிரவாத ஹிந்துக்களிடையே எதிர்மறையான உணர்வுகளை உண்டாக்கின.
“பாரதத்தைப் பிளவுபடுத்த நினைக்கும் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் ஹிந்துக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறார் காந்தி. இது தொடர்ந்தால், ஹிந்து தர்மம் அழிந்துவிடும். அதிகார மமதை கொண்ட முஸ்லிம்களின் அடிமைகளாக, ஹிந்துக்கள் தங்களது நாட்டிலேயே அந்நியராகிப் போவார்கள்” என்று ஹிந்து அமைப்புகள் பிரசாரம் செய்து, இளைஞர்களை மூளைச்சலவை செய்யத் தொடங்கின.
காந்தி மீதும், முஸ்லிம்கள் மீதும் கடும் கோபமும், ஆத்திரமும் கொண்ட ஹிந்து இளைஞர்கள் பலர் உருவானார்கள். அவர்களுள் மிகத் தீவிரமான காந்தி விரோதியாக உருவானவரே நாத்துராம் விநாயக் கோட்ஸே. 
நாத்துராம் விநாயக் கோட்ஸே, பூனேயில் ஒரு சாதாரணக் குடும்பத்தில், 1910-ம் ஆண்டு மே 19-ம் தேதி பிறந்தார். தந்தை தபால் ஊழியர். தாய் குடும்பத் தலைவி. பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத அவர், ஹிந்துமத இயக்கங்களான ராஷ்ட்ரிய ஸ்வயம் ஸேவக் சங்கம் (R.S.S.), ஹிந்து மஹா சபா போன்றவற்றில் உறுப்பினராகச் சேர்ந்தார். ‘ஹிந்து ராஷ்ட்ர’ என்ற ஹிந்துமத ஆதரவு பத்திரிகையையும் நடத்திக்கொண்டிருந்தார்.
கோடிக்கணக்கான மக்களின் இதய தெய்வமாக விளங்கினார் காந்தி. அவரது சொல், இந்த நாட்டுக்கே வேத மந்திரமாகத் திகழ்ந்தது.
1947 ஆகஸ்ட் 15. நாடு சுதந்திரம் பெற்றது. பாரதம், இந்தியா - பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிளவுபட்டது. ஹிந்து, முஸ்லிம்களிடையே கலவரம் வெடித்தது. இந்திய எல்லைப் பகுதிகளில் இருதரப்பிலும் வன்முறை.   
தீவிரவாத ஹிந்து இளைஞர்கள் கொதித்துப் போனார்கள். இந்தக் கொடுமைகள் அனைத்துக்கும் மூல காரணம் காந்திதான் என்று தீவிரமாக நம்பினார்கள்.
‘கொல் அந்தக் கிழவனை’ என்று முழங்கினார்கள்.
“ஆங்கில ஆட்சிக்கே சிம்ம சொப்பனமாக விளங்கியவரை கொள்கை ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ நெருங்கக்கூட முடியாது. மக்களின் ஆதரவுடன் போராடி அவரை வெல்வதென்பது கற்பனைகூட செய்ய முடியாத ஒன்று! காந்தியின் தவறான போக்கைத் தடுத்து நிறுத்தி, தேசத்தைக் காப்பாற்றும் ஒரே வழி, அவரையே தீர்த்துக்கட்டுவதுதான்” என்று நாத்துராம் விநாயக் கோட்ஸே முழங்கினார். இதே எண்ணம் கொண்ட வேறு சில இளைஞர்களும் அவருடன் கூட்டுச் சேர்ந்தனர்.
1948, ஜனவரி 20 அன்று, தேசத் தந்தையைத் தீர்த்துக்கட்ட அவர்கள் மேற்கொண்ட முதல் முயற்சி தோல்வியடைந்தது. மாட்டிக்கொண்ட மதன்லால் பஹ்வாவைத் தவிர, மற்ற சதிகாரர்கள் தலைமறைவானார்கள். ஆனால், ஓய்ந்துவிடவில்லை.
அடுத்த முறை காந்தியைக் கொல்லும் முயற்சியில் தவறு நிகழ்ந்துவிடக் கூடாது என்ற முனைப்புடன் இன்னொரு திட்டத்தைத் தீட்டினார்கள்.
கோட்ஸேயும் ஆப்தேயும் பூனே சென்றார்கள். கங்காதர் தந்தவதே என்ற நண்பன் மூலம் நவீனமான கைத்துப்பாக்கி ஒன்றை ரகசியமாக வாங்கினார்கள்.
தில்லி பிர்லா மாளிகையில் காவலர்களின் சோதனை கடுமையாக இருக்காது. கோட்ஸே துப்பாக்கியை ஒளித்து வைத்துக்கொண்டு உள்ளே நுழைவது,  ஆப்தேவும் அவருடன் செல்வது, பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு, சமயம் பார்த்து காந்தியை நெருங்கி, அவரைச் சுட்டுக் கொல்வது, முடிந்தால் இருவரும் தப்பித்துச் செல்வது இல்லையென்றால், சரணடைவது என்று தீர்மானித்தார்கள். 
 
1948 ஜனவரி 29-ம் தேதி இரவு, இருவரும் மும்பையிலிருந்து ரயிலில் தில்லி வந்து சேர்ந்தனர். ரயில் நிலையத்து விடுதியில், அன்றைய இரவைக் கழித்தனர்.
தங்கள் திட்டத்தை நிறைவேற்ற மறுநாள் மாலை, காந்தி தங்கியிருந்த பிர்லா மாளிகையை அடைந்தனர்.
அடுத்த இதழில்...


No comments:

Post a Comment