Friday, December 16, 2011

விகடன் மேடை - வைகோ

அ.குணசேகரன், புவனகிரி. 
''வாழ்க்கையில் தாங்கள் எடுத்த முடிவுகளுள், நல்ல முடிவு எது? தவறான முடிவு எது?''
 ''அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள், அவரது அமைச்சரவையில் என்னை இடம் பெறச் சொல்லி வற்புறுத்தியபோது, அதனை ஏற்க மறுத்தது நல்ல முடிவு!
2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவதைத் தவிர்த்தது, தவறான முடிவு!''
த.சத்தியநாராயணன், அயன்புரம்.
''நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் ஜெயிப்பாரா? நீங்கள் வரவேற்பீர்களா?''
 ''சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று அட்டைப்படங்களில், எட்டுக் காலங்களில் ஏடுகள் பலமாக ஆரூடம் சொல்லிக்கொண்டு இருந்த நிலையில், 1996 மார்ச் 8-ம் நாள், பிற்பகல் 2.30 மணி முதல் 6.00 மணி வரை அவரிடம் நான் தனியாக உரையாடினேன். 'நீங்கள் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்குவதாக இருந்தால் வரவேற்கிறேன். ஆனால், உங்கள் பெயரை வேறு சிலர் தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்துவது சரி அல்ல. எங்கள் இயக்கத்திலும், வேறு பல இயக்கங்களிலும் உங்கள் ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே, ஒரு சிலரின் சுயநல அரசியலுக்கு உங்கள் பெயரைப் பயன் படுத்த அனுமதிக்காதீர்கள்’ என்றேன்.
அதற்கு அவர், 'நான் கட்சி ஆரம்பிக்கப்போவது இல்லை; என்னுடைய ரசிகர்களை அல்லது என் பெயரை, தங்கள் கட்சிக்கு ஆதரவு என்று எவரும் பயன்படுத்துவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்’ என்று அதற்கு ஓர் உதாரணத்தையும் சொன்னார்.
அத்துடன், இன்னும் 10 நாட்களில் அமெரிக்கா செல்லப்போகிறேன்; அதற்கு முன்பு, யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்துவிட்டுத்தான் செல்வேன் என்று என்னிடம் சொன்னார். அதே போல, அறிவித்துவிட்டு அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார்.
ஆனால், மதிப்புக்குரிய மூப்பனார் அவர்கள், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தனிக் கட்சி தொடங்கியதை ஒட்டி, தமிழ்நாட்டில் இருந்து சிலர், அவருக்கு நிர்பந்தம் கொடுத்தனர். அதனால், அவர் அமெரிக்காவில் இருந்து ஓர் அறிக்கை தந்தார். அதனைச் சுட்டிக்காட்டி, தி.மு.க. தமிழ் மாநில காங்கிரஸ், தங்கள் பிரசாரத்தில் முழுக்க முழுக்க ரஜினியின் பெயரையும் படத்தையும் மட்டுமே பயன்படுத்தினர்.
தற்போது நீங்கள் கேட்டு இருக்கின்ற கேள்விக்கு, அவரே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தமிழ்நாட்டின் கலைத் துறைக்கு, அவர் விலை மதிக்க முடியாத பொக்கிஷம்!''
சத்தியநாராயணன், சென்னை.
''ஜெயலலிதாவின் மூளையாகச் செயல்படும் சோ பற்றி..?''
 ''ஜெயலலிதா அவராகவே முடிவு எடுத்து, அவராகவே செயல்படுகின்றார். பிறரது யோசனைகளை எல்லாம் கேட்டு அதன்படி முடிவு எடுக்கும் இயல்பு, அவரிடம் இல்லை. சோ, தன்னுடைய ஆலோசனைகளை முடிந்த மட்டும் சொல்லிப்பார்க்கிறார். ஆனால், அந்த யோசனைகள் எல்லாமே நல்லவை என்றும் சொல்ல முடியாது. சட்டமன்றத் தேர்தலின்போது, கூட்டணிக் கட்சிகள் கேட்டு இருந்த இடங்களையும் சேர்த்து, 160 தொகுதிகளுக்கு அண்ணா தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்தபோது, அது ஜெயலலிதா எடுத்த முடிவு அல்ல என்றும் மற்றவர்கள்தாம் காரணம் என்றும் சிலர் சப்பைக்கட்டுக் கட்டினார்கள்.
இப்போது, உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிரண்டு கட்சிகளை அழைத்துப் பேசியும் மற்றவர்களை அழைக்காமலேயும் தன்னிச்சையாக, அனைத்து மாநகராட்சி மேயர் வேட்பாளர்களையும் நகர்மன்றத் தலைவர் வேட்பாளர்களையும் அறிவித்த போது, இது ஜெயலலிதாவே அறிவித்த முடிவு என்றனர்!''
எம்.ஆதி, திருவண்ணாமலை.
''இதுவரை எத்தனை தடவை நடைப் பயணம் போயிருக்கின்றீர்கள். எத்தனை கிலோ மீட்டர் நடந்து இருக்கின்றீர்கள்?''
 ''இதுவரையிலும், ஆறு தடவைகள் நடைப்பயணம் சென்று உள்ளேன்.
முதலாவது நடைப்பயணம்:
1986-ம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரையில், மகரநெடுங்குழைக்காதர் ஆலயத்தில் நகைகளைக் கொள்ளை அடித்த குற்றவாளிகளைக் கைதுசெய்து, நகைகளை மீட்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி, தென்திருப்பேரையில் இருந்து புறப்பட்டு, கிராமங்கள் வழியாகப் பிரசாரம் செய்துகொண்டே, திருநெல்வேலி வரையிலும், மூன்று நாட்கள் 60 கிலோ மீட்டர்கள் நடந்தேன்.
இரண்டாவது நடைப்பயணம்:
1994 ஜூலை 27-ம் நாள், மூன்று கடல்கள் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, ஒட்டுமொத்தமாக அந்தப் பயணத்தில் மட்டும், 1,600 கிலோ மீட்டர்கள் நடந்து உள்ளேன். ஒரு நாளைக்கு சராசரி யாக 32 கிலோ மீட்டர்கள் நடந்தேன். இதில் ஒன்பது நாட்கள், முழுக்க முழுக்க மழையில் நனைந்து உள்ளோம். அப்போதும், குடை களைப் பிடித்தது இல்லை.
அப்போதைய அண்ணா தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கையும் கடுமையான ஊழலையும் எதிர்த்து, விழிப்பு உணர்வுப் பிரசாரப் பயணமாகவே நடத்தினேன். செப்டம்பர் 15-ம் நாள், சென்னை அண்ணா நகரில், அந்த எழுச்சி நடைப்பயணத்தை நிறைவு செய்தேன். மொத்தத்தில், கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்து ஏற்படுத்திய தாக்கம், 1996-ல் ஆட்சி மாற்றத்துக்கு ஒரு காரணமாக அமைந்தது.
மூன்றாவது நடைப்பயணம்:
காவிரி நதி நீரில் தமிழகத்தின் உரிமையை மறுக்கும் கர்நாடக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து, மக்கள் சக்தி யைத் திரட்ட, பூம்புகாரில் இருந்து புறப் பட்டு, கல்லணை வரையிலும், ஏழு நாட்கள், 180 கிலோ மீட்டர்கள் நடந்தேன்.
நான்காவது நடைப்பயணம்:
1997-ம் ஆண்டு, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து, திருவைகுண்டத்தில் இருந்து புறப்பட்டு, சுற்றுவழியாகக் கிராமங்கள் ஊடாகச் சென்று, நான்கு நாட்கள் நடந்து பிரசாரம் செய்து, தூத்துக்குடிக்கு வந்தோம். நான்கு நாட்களில், சுமார் 120 கிலோ மீட்டர்கள் நடந்தோம்.
ஐந்தாவது நடைப்பயணம்:
2004 ஆகஸ்ட் 5-ம் நாள் திருநெல்வேலியில், தாமிரபரணியில் நீராடிவிட்டு, மறுமலர்ச்சி நடைப்பயணத்தைத் தொடங்கினேன்.
சென்னைக்கு, 42 நாள்களில் 1,200 கிலோ மீட்டர்கள் நடந்தேன். என்னுடன் சீருடை அணிந்த 3,000 தொண்டர் படை இளைஞர்களும் கொடி பிடித்து நடந்து வந்தனர். இரவுகளில், கைகளில் தீபச் சுடர்களை ஏந்தி வந்தனர்.
தென்னக நதிகள் இணைப்பின் தேவையை மக்கள் உணரச் செய்யவும், மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தவும், சாதி மத வேற்றுமைகளை அகற்றி, சகோதரத்துவ எண்ணத்தை அனைத்துத் தரப்பிலும் ஏற்படுத்தவும், மது, போதைப் பொருள் பழக்கத்துக்கு இரையாகிவிடாமல், இளம் தலைமுறைக்கு விழிப்பு உணர்வை உருவாக்கவும், தாய் - தந்தையை மதிக்கும் மனநிலையை இளைஞர்களிடம் ஏற்படுத்த வுமே இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டேன். எந்த இடத்திலும், கட்சி அரசியல் பேசவே இல்லை.
ஆறாவது நடைப்பயணம்:
முல்லைப் பெரியாறு அணையில் தமிழ கத்தின் உரிமையை நிலைநாட்டவும், தென் மாவட்டங்களில் விழிப்பு உணர்வை ஏற் படுத்தவும், 2008 டிசம்பர் 18-ம் நாள், மதுரையில் இருந்து புறப்பட்டு 23 வரையிலும் - ஆறு நாட்கள் - உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, உத்தமபாளையம், கம்பம் வழியாக கூடலூர் வரையிலும், 150 கிலோ மீட்டர்கள் நடந்தோம்.
இது தவிர, 1986-ம் ஆண்டு, தி.மு.க. இளைஞர் அணி சைக்கிள் பயணப் பிரசாரத்தை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து 33 நாட்கள் மேற்கொண்டேன். ஆடி மாதப் பெருங்காற்றிலும் வெயிலிலும் ஒரு நாளைக்குச் சராசரியாக 60 கிலோ மீட்டர்கள் சைக்கிள் மிதித்தேன். ஒவ்வொரு நாளும், அந்த ஒன்றியத்தைச் சேர்ந்த 500 இளைஞர்கள் உடன் வந்தார்கள். மறு நாள் வேறு ஒன்றியத்தில், வேறு 500 இளைஞர்களுடன் சைக்கிள் மிதிப்பேன். அனல் கொதிக்கும் வெயிலில் பயணித்ததால், மேனி முழுவதும் கறுத்து, கொப்புளங்கள் ஏற்பட்டுவிட்டன. இந்தப் பயணம் முடிந்து சென்னைக்கு நான் வந்தபோது, என் மகள் கண்ணகி என்னைப் பார்த்து, 'அப்பா கறுப்பர் ஆகிவிட்டார்!’ என்றாள்.
கடந்த 40 ஆண்டுகளில், ஓர் ஆண்டுக்குச் சராசரியாக 2 லட்சம் கிலோ மீட்டர் களுக்கும் மேல் பயணித்து, சுமார் 80 லட்சம் கிலோ மீட்டர்களுக்கும் மேல் சென்றிருப்பேன். இன்றைக்கும் அப்படித்தான் பயணித்துக் கொண்டே இருக்கின்றேன். தேர்தல் பிரசாரச் சுற்றுப்பயணங்கள், கட்சிப் பிரசாரங்களுக் காகப் பயணித்து, தமிழகத்தில் 25,000 கிராமங்களுக்கு உள்ளே சென்று வந்து இருக்கின்றேன். 1995-ம் ஆண்டு, வேலூர் மாவட்டத்தில், முதல் நாள் தொடங்கிய பயணத்தில், மறு நாள் விடிகாலை வரையி லும் இடைவிடாமல், 118 கிராமங்களில் கொடி ஏற்றி உள்ளேன்.
உழைக்கும் மக்கள், விவசாயிகள், குடிசை வாழ் அடித்தட்டு மக்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான மக்களை, நேரில் சந்தித்து எனக்குக் கிடைத்த அனுபவங்களை எழுதினால், பல தொகுப்புகள் வரும். 'மக்களிடம் செல்’ என்றார் அண்ணா. இந்த ஒரு விஷயத்தில் யாரும் என்னுடன் போட்டி போட முடியாது என நினைக்கின்றேன்!''
பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.
''மம்தா பானர்ஜி, மாயாவதி, ஜெயலலிதா, அரசியல் செயல்பாடுகளை ஒப்பிடுங் கள்..?''
 ''பிடிவாதத்தில் மூவரும் ஒன்றுதான். எளிமை, மம்தா பானர்ஜியின் உடன்பிறந்த இயல்பு. எவரும் அணுக முடியும் என்பது, மாயாவதியின் நடைமுறை. இந்த இரண்டும் ஜெயலலிதாவிடம் இல்லை!''
ரேவதிப்ரியன், ஈரோடு.
''நீங்கள் படித்து ரசித்த புத்தகம்... புதிதாகக் கேட்டு ரசித்த பாடல்...''
 ''டாக்டர் சைடுபாட்டம் என்பவர் எழுதிய லயன் ஆஃப் தி சன் (lion of the sun). ரோமாபுரி வரலாறு குறித்த புதினம். யுத்தகளக் காட்சிகளை, அரண்மனைச் சதிகளை, பாலிஸ்டா என்ற கதாநாயகனின் வீரத்தை, அருமையாக வருணித்து இருக்கின்றார்.
பழைய பாடல்களையே திரும்பத் திரும்பக் கேட்டு ரசித்துக்கொண்டு இருக்கின்றேன்.
கே.ரங்கநாதன், புதுச்சேரி.
''கருணாநிதி 1960; 1980; 2010. உங்கள் கருத்து?''
 ''60-களில் அனல் பொங்கும் பேச்சு, எழுத்து, போராட்டக் களங்கள்.
80-களில் எதிர் நீச்சல்.
2010-ல், குடும்ப அரசியலால் பழி சுமந்து நிற்கும் பரிதாபம்!''
என்.பாலகிருஷ்ணன், மதுரை.
''உங்களுக்கு மிகவும் பிடித்த திருக்குறள் எது? ஏன்?''
 '' 'தூங்காமை, கல்வி, துணிவுடமை இம்மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவர்க்கு.’

இது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மன்னர் ஆட்சிக் காலத்தில் சொன்னது. இன்றைக்குப் பொது வாழ்வில் இருப்போர்க் குத் தேவையானது!''

No comments:

Post a Comment