Friday, August 12, 2016

கேன்சர் திகிலில் ஈரோடு!

Vikatan article

கேன்சர் திகிலில் ஈரோடு!

காவிரி நீர்... கழிவுநீர்... குடிநீர்!அதிர்ச்சி

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஈரோட்டில் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் ஈரோட்டில் மக்களுக்காக விநியோகிக்கப்படும் குடிநீர் என்பதுதான் அதிர்ச்சி. காவிரியில் இருந்துதான் ஈரோடு நகருக்குக் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.  அந்த நீரில் கேன்சரை உருவாக்கும் நச்சுப்பொருட்கள் இருப்பது ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சியின் உச்சம். 

‘ஈரோடை’ என்ற அமைப்புதான் குடிநீரை ஆய்வு செய்து இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் தலைவரான டாக்டர் சுதாகரிடம் பேசினோம். “ஈரோட்டில் சமீபகாலமாகக் கொசு மூலம் பரவும் டெங்கு, மலேரியா ஆகிய நோய்கள் அதிகமாகக் காணப்பட்டது. நோய் தாக்கியவர்களிடம் விசாரித்தபோது, குறிப்பிட்ட இரண்டு ஓடைகளின் கரைப்பகுதியில் வசிப்பவர்களாக இருந்தார்கள். ஈரோட்டில் உள்ள மொத்தக் கழிவுகளையும் இரவு நேரங்களில் ஓடைகளில்தான் கொட்டுகிறார்கள். இதனால் ஓடையில் கொசுக்கள் உருவாகின்றன.  கொசுக்களின் மூலம் தொற்றுநோய் பரவியிருக்கிறது. எனவே, அந்த ஓடைகளைத் தூர்வாரிச் சுத்தப் படுத்தினோம். அதுமட்டுமின்றி, சமீபகாலமாக கேன்சரால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை அறிந்தோம். அதன்பிறகு ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் விநியோகம் செய்யும் குடிநீரில் வெவ்வேறு இடங்களில் இருந்து 10 மாதிரிகள் சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பினோம். ஆய்வின்படி புற்றுநோயை ஏற்படுத்தும் hexavalent chromium என்ற நச்சுப்பொருள் குடிநீரில் இருப்பது தெரியவந்திருக்கிறது. எங்களின் ஆய்வுகள் குறித்து ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் புகாராகக் கொடுத்தோம். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். அதிகாரிகளை அழைத்து ஆலோசனையும் நடத்தி இருக்கிறார். நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது” என்றார். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஈரோடை அமைப்பைச் சார்ந்த பாரதி, “ஈரோட்டில் இரண்டு கேன்சர் மருத்துவமனைகள் இருந்தன. 2009-10-ம் நிதி ஆண்டில் மட்டும் இந்த மருத்துவ மனைகளில் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களில் ஏழாயிரம் பேர் கேன்சர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டு அரசுக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது ஒரு கேன்சர் மருத்துவமனை மட்டுமே இருக்கிறது. அதிலும் மாதத்துக்கு 150-க்கும் மேற்பட்டோர் புதிய நோயாளிகளாகச் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக ஈரோட்டில் உள்ள மக்களுக்குப் புற்றுநோய் மற்றும் தொற்றுநோய்கள் அதிகரிப்பதற்கு இந்த நகரின் சுற்றுச்சூழல் சீர்கேடுதான் காரணம். இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னும் சில வருடங்களில் ஈரோட்டில் இத்தனைபேர் வசித்தார்கள் என்கிற விவரம் மட்டுமே மிஞ்சும்” என்றார்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சரான கருப்பண்ணனிடம் பேசினோம். “சரி என்னன்னு பார்ப்போம். கழிவுநீர் ஆற்றில் கலக்கிறது நம்ம டிபார்ட் மென்ட் இல்லை. அது சம்பந்தமா நீங்க உள்ளாட்சித் துறையிலதான் கேக்கணும். இல்லைனா, மாநகராட்சியிலதான் கேக்கணும். நான் அடுத்த வாரம் வரும்போது நேர்ல போய்ப் பார்க்கிறேன்” எனப் பொறுப்பான பதிலைத் தந்தார்.

நல்ல அரசு, நல்ல அமைச்சர், பாவம் மக்கள்!

- வீ.மாணிக்கவாசகம், படங்கள்: ரமேஷ் கந்தசாமி

எப்படி அசுத்தமாகிறது காவிரி?

‘‘காவிரி ஆற்றில் குடிநீர் எடுக்கும் இடத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்துகிடக்கின்றன. அருகிலேயே சுடுகாடும் இருக்கிறது. அந்த இடத்தில்தான் ஈரோட்டின் மொத்தக் கழிவுகளும் காவிரியில் கலக்கின்றன. ஈரோட்டில் உள்ள தோல் தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நீர்நிலைகளில் விடப்படுகிறது. இதனாலும் ஈரோட்டில் உள்ள நீர்நிலைகள், நிலத்தடி நீர் பாழ்படுகின்றன. ஈரோட்டில் மட்டுமின்றி காவிரியில் இருந்து குடிநீர் எடுக்கும் அத்தனை ஊர்களிலும் ஆய்வு செய்ய வேண்டும்’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

No comments:

Post a Comment