Tuesday, June 14, 2016

தோற்றவர்களின் கதை - 1

- vikatan document


தோற்றவர்களின் கதை - 1

சுசி திருஞானம்தொடர்

வமானகரமான படுதோல்விகளைச் சந்தித்த ‘தோல்வியின் சிகரங்கள்’ பற்றி எழுதப் போகிறேன். எல்லா உடைமைகளையும் இழந்தபோதும், எல்லா உறவுகளாலும் பரிகசிக்கப்பட்டபோதும், இலக்கை நோக்கி அசராமல் உழைத்தவர்களின் கதைகளை இங்கே விவரிக்க இருக்கிறேன்.

இவர்களின் பிரமாண்டமான வெற்றியைப் பற்றி மட்டும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், தோல்வி என்ற உலைக்கூடத்தில் இவர்கள் வாங்கிய மரண அடிகள், ரண வேதனைகள், கேவலங்கள் பற்றி யாரும் அதிகம் பேசியது இல்லை. தம்மீது வீசப்பட்ட தோல்விக் கற்களை ஒன்றுகுவித்து, படிக்கட்டுகளாக எப்படி இவர்கள் மாற்றினார்கள் என்பதை மட்டுமே இங்கே விவரிக்க இருக்கிறேன்.

ஹோண்டாவின் வெற்றிப் பயணம்!

“பிழைக்கத் தெரியாத முட்டாள்” என்று அந்த 18 வயது இளைஞனைத் திட்டினார் அவனது அப்பா. “தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்​டக்காரன்” என்று கேலி பேசினர் அவனது நண்பர்கள். 

அவன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை முடிவுக்குப் போயிருக்கக்கூடும்.அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியைச் சாதித்த அந்த மாமனிதர் சாய்க்கிரோ ஹோண்டா. தனது வாழ்க்கை அனுபத்தைச் சாறுபிழிந்து சொன்னார்: “வெற்றி என்பது 99 சதவிகிதம் தோல்வி.” 

டொயோட்டா கம்பெனிக்கு பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு. யாருக்காகவும் அவர் காத்திருக்கவில்லை. அப்பாவின் வசவு, சக மாணவர்களின் பரிகசிப்புக்கு இடையே, மாதிரி உலைக்கூடம் ஒன்றை 1928-ம் ஆண்டு உருவாக்கினார். இரவு பகலாக உழைத்தார். 

ஓராண்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி பிஸ்டனை பெரும் எதிர்பார்ப்புடன் டொயோட்டா கம்பெனிக்கு எடுத்துச் சென்றார். “எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது பிஸ்டன் இல்லை” என்று நிராகரித்துவிட்டார்கள் பொறியாளர்கள். முதலாவது கனவுத் திட்டம் படுதோல்வி அடைந்தது. மனம் பாரமாக இருந்தது. திரட்டிவைத்த முதலீடு மொத்தமும் காலி. எல்லோரும் வசைமாரி பொழிந்தார்கள்.

புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார். மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய பிஸ்டன் மாதிரியை டொயோட்டா கம்பெனி, “அருமை” என்று பாராட்டி ஏற்றுக்​கொண்டது. தயாரிப்புக்கு கான்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது. மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு. பெரிய தொழிற்கூடம் கட்டினால்தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையில் பிஸ்டன் தயாரிக்க முடியும். எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா.  அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சிமென்ட் தட்டுப்பாடு. எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டை சிமென்ட்கூட கிடைக்க​வில்லை. 

“ஒழுங்காக ஏதாவது வேலையில் போய்ச் சேர்ந்துவிடு” - அப்பா. 

“வாழ்க்கை முழுவதுமா ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாய்?” - உயிர் நண்பன். 

தனது நலன் விரும்பிகளுடன் விவாதித்து, சிமென்ட் கலவைக்கு இணையான மாற்றுக் கலவையை உருவாக்கும் ஃபார்முலாவை கண்டுபிடித்தார் ஹோண்டா. ஆங்காங்கே கடன் வாங்கி, அடுத்த சில மாதங்களில் பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்தார். தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, பிஸ்டன் தயாரிக்கும் தொழில் அமர்க்களமாகத் தொடங்கியது. 

கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது. அமெரிக்கா போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்துச் சுக்குநூறாக்கியது. ஹோண்​டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால், தனது மொத்தத் தொழிலாளர்​களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிறங்கி இடிபாடுகளைச் சீர்செய்து, தொழிற்​சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா.  

ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கிவிட்டது. மொத்தத் தொழிற்சாலையையும் திருப்பிக்கட்ட முடியாத அவலநிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு டொயோட்டா கம்பெனிக்கு விற்றுவிட்டார் ஹோண்டா.    இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப் பாருங்கள். ஹோண்டா தனது அப்போதைய நிலைமை பற்றிச் சொல்கிறார். “நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளிகூட கவலைப்பட மாட்டேன்... இருக்கிற நிலைமையை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கி விடுவேன்.”

இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம். ஜப்பான் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலகட்டம். எங்கும் பெட்ரோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன. எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிள் மிதிக்கிறார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார். அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது. அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டா​வுக்கு ஒரு புத்தம்புது ஐடியா பளிச்சிட்டது.

அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்திய​போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது.  அதை எடுத்துக்கொண்டு ஜம்மென்று சுற்றி வந்தார் ஹோண்டா.

‘‘அதேபோன்று எனக்கும் செய்துகொடு’’ என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள். அவரும் சளைக்காமல் செய்துகொடுத்தார். விளைவு? அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா. கையில் பணமில்லை. வங்கிகள் கடன் தரத் தயாரில்லை. ‘ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன்’ என்று எல்லோரும் சான்றிதழ் கொடுத்துவைத்திருந்தார்கள். கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார். முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார். 5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள் முன்வந்து பண உதவி செய்தனர்.  ஹோண்டா மோட்டார் சைக்கிள் கம்பெனி உதயமானது. முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலைக்கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் ரகங்களைக் கொண்டுவந்தார்.

அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா. இப்போது ஹோண்டா கம்பெனி ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் பைக்குகளைத் தயாரிக்கிறது. ஹோண்டா கார்களுக்கு மேலை நாடுகளிலும் பெரும் வரவேற்பு. எத்தனையோ வகை வகையான தயாரிப்புகளில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது இந்த நிறுவனம்.

ஹோண்டா தயாரிப்புகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது, அதன் பிதாமகன் சாய்க்கிரோ ஹோண்டா தனது வாழ்க்கை அனுபவங்களைச் சாறுபிழிந்து சொன்ன வார்த்தைகள்தான்: “வெற்றி என்பது 99 சதவிகிதம் தோல்வி.”

(இன்னும் வெல்வோம்)

சுசி திருஞானம்: ஊடகத் துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ‘கிட்ஸ் புன்னகை’, ‘ஜீனியஸ் புன்னகை’ கல்வி மாத இதழ்களின் ஆசிரியர். சுயமுன்னேற்றப் பயிற்சியாளர். 

‘என்.டி.டி.வி - விஜய் செய்திகள்’, ‘சன் நியூஸ்’ சேனல் ஆகியவற்றின் முன்னாள் செய்தி ஆசிரியர். ‘வெற்றியின் அறிவியல்’, ‘நேர நிர்வாகம்’, ‘உனக்குள் ஒரு மேதை’ ஆகிய நூல்களை எழுதியவர். ஆக்கபூர்வமான ஊடகவியலாளர் என்று டாக்டர் அப்துல் கலாமால் பாராட்டப்பட்டவர்

- vikatan article

No comments:

Post a Comment