Friday, August 12, 2016

கேன்சர் திகிலில் ஈரோடு!

Vikatan article

கேன்சர் திகிலில் ஈரோடு!

காவிரி நீர்... கழிவுநீர்... குடிநீர்!அதிர்ச்சி

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஈரோட்டில் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் ஈரோட்டில் மக்களுக்காக விநியோகிக்கப்படும் குடிநீர் என்பதுதான் அதிர்ச்சி. காவிரியில் இருந்துதான் ஈரோடு நகருக்குக் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.  அந்த நீரில் கேன்சரை உருவாக்கும் நச்சுப்பொருட்கள் இருப்பது ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சியின் உச்சம். 

‘ஈரோடை’ என்ற அமைப்புதான் குடிநீரை ஆய்வு செய்து இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் தலைவரான டாக்டர் சுதாகரிடம் பேசினோம். “ஈரோட்டில் சமீபகாலமாகக் கொசு மூலம் பரவும் டெங்கு, மலேரியா ஆகிய நோய்கள் அதிகமாகக் காணப்பட்டது. நோய் தாக்கியவர்களிடம் விசாரித்தபோது, குறிப்பிட்ட இரண்டு ஓடைகளின் கரைப்பகுதியில் வசிப்பவர்களாக இருந்தார்கள். ஈரோட்டில் உள்ள மொத்தக் கழிவுகளையும் இரவு நேரங்களில் ஓடைகளில்தான் கொட்டுகிறார்கள். இதனால் ஓடையில் கொசுக்கள் உருவாகின்றன.  கொசுக்களின் மூலம் தொற்றுநோய் பரவியிருக்கிறது. எனவே, அந்த ஓடைகளைத் தூர்வாரிச் சுத்தப் படுத்தினோம். அதுமட்டுமின்றி, சமீபகாலமாக கேன்சரால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை அறிந்தோம். அதன்பிறகு ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் விநியோகம் செய்யும் குடிநீரில் வெவ்வேறு இடங்களில் இருந்து 10 மாதிரிகள் சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பினோம். ஆய்வின்படி புற்றுநோயை ஏற்படுத்தும் hexavalent chromium என்ற நச்சுப்பொருள் குடிநீரில் இருப்பது தெரியவந்திருக்கிறது. எங்களின் ஆய்வுகள் குறித்து ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் புகாராகக் கொடுத்தோம். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். அதிகாரிகளை அழைத்து ஆலோசனையும் நடத்தி இருக்கிறார். நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது” என்றார். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஈரோடை அமைப்பைச் சார்ந்த பாரதி, “ஈரோட்டில் இரண்டு கேன்சர் மருத்துவமனைகள் இருந்தன. 2009-10-ம் நிதி ஆண்டில் மட்டும் இந்த மருத்துவ மனைகளில் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களில் ஏழாயிரம் பேர் கேன்சர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டு அரசுக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது ஒரு கேன்சர் மருத்துவமனை மட்டுமே இருக்கிறது. அதிலும் மாதத்துக்கு 150-க்கும் மேற்பட்டோர் புதிய நோயாளிகளாகச் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக ஈரோட்டில் உள்ள மக்களுக்குப் புற்றுநோய் மற்றும் தொற்றுநோய்கள் அதிகரிப்பதற்கு இந்த நகரின் சுற்றுச்சூழல் சீர்கேடுதான் காரணம். இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னும் சில வருடங்களில் ஈரோட்டில் இத்தனைபேர் வசித்தார்கள் என்கிற விவரம் மட்டுமே மிஞ்சும்” என்றார்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சரான கருப்பண்ணனிடம் பேசினோம். “சரி என்னன்னு பார்ப்போம். கழிவுநீர் ஆற்றில் கலக்கிறது நம்ம டிபார்ட் மென்ட் இல்லை. அது சம்பந்தமா நீங்க உள்ளாட்சித் துறையிலதான் கேக்கணும். இல்லைனா, மாநகராட்சியிலதான் கேக்கணும். நான் அடுத்த வாரம் வரும்போது நேர்ல போய்ப் பார்க்கிறேன்” எனப் பொறுப்பான பதிலைத் தந்தார்.

நல்ல அரசு, நல்ல அமைச்சர், பாவம் மக்கள்!

- வீ.மாணிக்கவாசகம், படங்கள்: ரமேஷ் கந்தசாமி

எப்படி அசுத்தமாகிறது காவிரி?

‘‘காவிரி ஆற்றில் குடிநீர் எடுக்கும் இடத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்துகிடக்கின்றன. அருகிலேயே சுடுகாடும் இருக்கிறது. அந்த இடத்தில்தான் ஈரோட்டின் மொத்தக் கழிவுகளும் காவிரியில் கலக்கின்றன. ஈரோட்டில் உள்ள தோல் தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நீர்நிலைகளில் விடப்படுகிறது. இதனாலும் ஈரோட்டில் உள்ள நீர்நிலைகள், நிலத்தடி நீர் பாழ்படுகின்றன. ஈரோட்டில் மட்டுமின்றி காவிரியில் இருந்து குடிநீர் எடுக்கும் அத்தனை ஊர்களிலும் ஆய்வு செய்ய வேண்டும்’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Friday, August 5, 2016

தோற்றவர்களின் கதை - 4

Vikatan document..

தோற்றவர்களின் கதை - 4

சுசி திருஞானம்தொடர்

தோல்விகளே மிகச் சிறந்த பரிசுகள்!

வால்ட் டிஸ்னியின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.  மிக்கி மவுஸ், டொனால்ட் டக் போன்ற அற்புதமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கிய மகத்தான கலைஞர். டிஸ்னி லேன்ட் கேளிக்கைப் பூங்காக்களின் ஸ்தாபகர். வால்ட் டிஸ்னி கம்பெனியின் நிறுவனர்.

இந்தச் சாதனைகளின் பின் உள்ள கொடுமையான சோதனைகள் பற்றிப் பெரும் பாலானவர்களுக்குத் தெரியாது. 

தோல்விகளின் வலி மிகுந்த தனது வாழ்க்கைப் பயணம் வெற்றிகரமானதாகத் தோற்றமளிப்பது பற்றி வால்ட் டிஸ்னி இப்படிக் குறிப்பிட்டார். 

“நான் தொட்ட காரியமெல்லாம் வெற்றி பெறுவதாகவும், நான் எடுக்கும் முடிவுகள் அபூர் வமாகவே தோற்பதாகவும் சிலர் நினைக்கிறார்கள். உண்மையில் நான் எடுத்தத் தவறான முடிவுகளால் பல முறை படுதோல்வி அடைந்திருக்கிறேன். எனினும், நான் அடுத்தடுத்து முயற்சி செய்து கொண்டே  இருப்பதால், தவறுகள் வெளியில் தெரியாதபடி அதிலிருந்து வேகமாக மீண்டு வந்திருக்கிறேன். என்னைப்போல நீங்களும் அடுத்தடுத்த ஏராளமான முயற்சிகளை எடுக்கக் கற்றுக்கொண்டால் உங்களுக்கும் சராசரி வெற்றி அதிகமாகவே இருக்கும்.” 

அமெரிக்காவில் சிக்காகோ நகரில் 1901-ம் ஆண்டு பிறந்தார் வால்ட் டிஸ்னி. வறுமையான பின்னணியால் அவரது தந்தை எலியாஸ் சார்லஸ் டிஸ்னி, தனது கோபத்தை எல்லாம் குழந்தைகள் மீது காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தந்தையின் துன்புறுத்தல் பொறுக்காமல் வால்ட் டிஸ்னியின் அண்ணன்மார்கள் மூவர் ஊரைவிட்டே ஓடிவிட்டனர். சிரமங்களைச் சகித்துக்கொண்டு பள்ளி சென்றுவந்தார் வால்ட் டிஸ்னி. 

டிஸ்னி குடும்பம் கான்சாஸ் நகருக்கு இடம்பெயர்ந்தது. வால்ட் டிஸ்னியின் தந்தை 1911-ம் ஆண்டில் செய்தித்தாள் விநியோக ஏஜென்சி எடுத்தார். அதில், தனது 10 வயதிலேயே பேப்பர் விநியோகிக்கும் கடுமையான வேலையில் வால்ட் டிஸ்னி ஈடுபட்டார். இதன்மூலம் வால்ட் டிஸ்னிக்கு கிடைத்த சொற்ப வருமானத்தையும் அவரது அப்பா பறித்துச் சென்றுவிடுவார். இருந்தாலும், தனது வருமானத்தில் ஒருபகுதியை மறைத்துவைத்து சேமித்தார்.   

1917-ல் டிஸ்னி குடும்பம் மீண்டும் சிக்காகோவுக்கு இடம்பெயர்ந்தது. மெக்கின்லி பள்ளியில் சேர்ந்த வால்ட் டிஸ்னி, சிக்காகோ நுண்கலை அகாடமியில் இரவுநேரப் படிப்பில் சேர்ந்தார். பிற்காலத்தில் அவரது சாதனைப் பயணத்துக்கான படைப்பாற்றல் பயிற்சி அங்கே கிடைத்தது. 

1918-ல், முதல் உலகப்போரின்போது ராணுவ வீரராகச் சேர்ந்து போரிட விரும்பிய வால்ட் டிஸ்னியால் அதில் சேர முடியவில்லை. எனினும், செஞ்சிலுவைச் சங்கத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராகச் சேர்க்கப்பட்டு, பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே அவரது ஆம்புலன்ஸ் மிகவும் பிரபலமாகியது. காரணம், அதன் வெளிப்புறத்தில் அற்புதமான கார்ட்டூன் சித்திரத்தை வரைந்துவைத்திருந்தார் வால்ட் டிஸ்னி.

செஞ்சிலுவைச் சங்கப் பணி முடிந்து ஊருக்குத் திரும்பிய வால்ட் டிஸ்னி, சிபாரிசுகளைப் பிடித்து கன்சாஸ் பத்திரிகை ஒன்றில் கார்ட்டூன் உதவியாளர் பணியில் சேர்ந்துவிட்டார். ஆனால், அவரது மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அவருக்கு அரசியல் சமூக கோபம் போதிய அளவில் இல்லை என்றும், அதனால் பத்திரிகை கார்ட்டூனிஸ்ட் வேலைக்கு அவர் ஒத்துவரமாட்டார் என்றும் விமர்சிக்கப்பட்டு, வேலையில் இருந்து சில மாதங்களில் வெளியேற்றப் பட்டார் வால்ட் டிஸ்னி. 

பின்னர், பேஸ்மன் ரூபின் ஆர்ட் ஸ்டுடியோவுக்கான எடுபிடி வேலைகள் செய்யும் பணி கிடைத்தது. அங்கேயும் கிறிஸ்துமஸ் சீசன் வியாபாரம் முடிந்தவுடன் துரத்திவிட்டர்கள்.
  
அந்த ஸ்டுடியோவில் வேலைபார்த்த ஐவர்க்ஸ் என்ற கார்ட்டூனிஸ்ட் வால்ட் டிஸ்னியின் நண்பரானார். இருவரும் சேர்ந்து ஐவர்க்ஸ் - டிஸ்னி வரைகலை நிறுவனத்தைத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் ஒருசில வாடிக்கையாளர்கள் கிடைத்தபோதும் போதிய வருவாய் ஈட்டமுடியவில்லை.

சுயதொழில் முயற்சியை அப்படியே கைவிட்டுவிட்டு, கான்சாஸ் சிட்டி சினிமா விளம்பர நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தனர். அந்த நிறுவனம் கட்-அவுட் முறை அனிமேஷன் என்ற பழைய தொழில்நுட்பத்தில் விளம்பரப் படங்களைத் தயாரித்து வந்தது. ‘‘செல்லுலாய்டு அனிமேஷன் என்ற புதிய தொழில்நுட்பத்தில் விளம்பரப் படங்களைத் தயாரிப்பது சிறந்தது’’ என்று வால்ட் டிஸ்னி எடுத்துச் சொன்னார். அந்த விளம்பர நிறுவனம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அங்கிருந்தும் வெளியேறினார் வால்ட் டிஸ்னி. 
 
வீட்டிலேயே செல்லுலாய்டு அனிமேஷன் தொழில்நுட்பம் குறித்து பயிற்சிசெய்த அவர், ஹர்மன் என்ற நண்பருடன் இணைந்து சிறிய அனிமேஷன் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். ஈசாப் குட்டிக் கதைகள் பாணியில் “Newman’s Laugh-O-Grams” என்ற அனிமேஷன் தொடரை வால்ட் டிஸ்னி உருவாக்கினார். 

இந்தத் தொடருக்குக் கிடைத்த வரவேற்பால் உற்சாகமான வால்ட் டிஸ்னி, 1921-ம் ஆண்டில் Laugh-O-Gram ஸ்டுடியோவைத் தொடங்கினார். பிரபலமான அலைஸ் இன் வொண்டெர்லேண்ட் கதையை அனிமேஷன் படமாகத் தயாரித்தார். 12 நிமிட அனிமேஷன் படத்தைத் தயாரித்து முடிப்பதற்குள் பெரும் நிதிநெருக்கடிகளைச் சந்தித்த அந்த ஸ்டுடியோ நிறுவனம், 1923-ம் ஆண்டில் திவாலானது. பெரும் அவமானத்துடன் அந்த ஸ்டுடியோ முயற்சியைக் கைவிட நேர்ந்தது.

வேறு வழியின்றி லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்குக் குடிபெயர்ந்தார் வால்ட் டிஸ்னி. தான் தயாரித்த அலைஸ் இன் வொண்டெர்லேண்ட் அனிமேஷன் படத்தை விற்பனை செய்திட அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இறுதியில் நியூயார்க் பட விநியோகஸ்தர் மார்கரெட் வின்க்லெர் என்பவர் வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் படங்களை விநியோகிக்க முன்வந்தார். 

1923-ம் ஆண்டு அக்டோபரில், வால்ட் டிஸ்னியும் அவரது அண்ணன் ராய் டிஸ்னியும் இணைந்து வால்ட் டிஸ்னி கம்பெனியை ஹாலிவுட்டில் தொடங்கினார்கள். இதனை பழைய நண்பர்களுடன் ஒரு வலிமையான அனிமேஷன் பட நிறுவனமாக வளர்க்கத் தொடங்கினார் வால்ட் டிஸ்னி.

அலைஸ் இன் வொண்டெர்லேண்ட் அனிமேஷன் தொடருக்கான பணிகள் 1927 வரை தொடர்ந்தன. அதில் சலிப்படைந்த வால்ட் டிஸ்னி, தனது நண்பர் ஐவர்க்ஸுடன் இணைந்து Oswald the Lucky Rabbit என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கினார். இந்தத் தொடரினால் அதிக லாபம் பெற்ற பட விநியோக நிறுவனமான மின்ட்ஸ், உரிய பங்கினை டிஸ்னிக்குத் தர மறுத்தது. Oswald கதாபாத்திர உரிமை தன்னிடமே இருப்பதாக மிரட்டியது. டிஸ்னி நிறுவன ஊழியர்களை வெளியேறச் செய்து, தானே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில், அவர்களைப் பணிக்கு அமர்த்தி டிஸ்னிக்கு நெருக்கடி கொடுத்தது.

நெருக்கடிகளைச் சந்தித்துப் பழகிப்போன வால்ட் டிஸ்னி, விநியோக நிறுவனத்தின் மிரட்டல்களுக்குப் பணிய மறுத்துவிட்டார். வால்ட் டிஸ்னியின் நெருங்கிய நண்பரான ஐவர்க்ஸ் தவிர, பல மூத்த கலைஞர்கள் டிஸ்னியில் இருந்து வெளியேறிவிட்டனர். 

தனது நண்பர் ஐவர்க்ஸுடன் இணைந்து ‘மிக்கி மவுஸ்’ என்ற அட்டகாசமான கதாபாத்திரத்தை 1928-ம் ஆண்டு உருவாக்கினார் வால்ட் டிஸ்னி. முன்னர் திவாலாகிப்போன Laugh-O-Gram ஸ்டுடியோவில், தான் இரவுபகலாக உழைத்தபோது தன்னோடு விளையாடிய ஒரு செல்லமான எலியை மனதில்கொண்டே இந்தக் கதாபாத்திரத்தை வால்ட் டிஸ்னி உருவாக்கினார். 
  
மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தின் முதல் அனிமேஷன் படம் முடிவுற்றபோதும் உரிய விநியோகஸ்தர் கிடைக்கவில்லை. ஒருவழியாக, பவர்ஸ் சினபோன் என்ற விநியோக நிறுவனத்துடன் ஒப்பந்தம்போட்டு மிக்கி மவுஸ் படம் வெளியானது. படம் வெற்றிபெற்று, விநியோக நிறுவனம் லாபம் குவித்தது. லாபத்தில் உரிய பங்குத் தொகையை வழங்குமாறு டிஸ்னி நிறுவனம் கேட்டபோது, அதற்கு மறுப்புத் தெரிவித்த விநியோக நிறுவனம், வால்ட் டிஸ்னியின் நெருங்கிய நண்பர் ஐவர்க்ஸுக்கு ஆசைகாட்டி அவரை டிஸ்னி நிறுவனத்திலிருந்து வெளியேறச் செய்து, அவரோடு திருட்டுத்தனமாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. 

இப்படி அடுத்தடுத்த ஏமாற்றங்களைச் சந்தித்த வால்ட் டிஸ்னிக்கு நரம்புத் தளர்வு ஏற்பட்டது. நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டு, கியூபா, பனாமா நாடுகளுக்குச் சென்றுவந்து தனது மனதைத் தேற்றிக்கொண்டார் வால்ட் டிஸ்னி. 

புதுத் தெம்புடன் வந்த வால்ட் டிஸ்னி, கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் விநியோக ஒப்பந்தம் செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து மிக்கி மவுஸ் படங்கள் உலக அளவில் பிரபலமாகின. விருதுகள் தேடிவந்தன. அது, அனிமேஷன் படங்களின் பொற்காலமாக மாறியது. வால்ட் டிஸ்னிக்குப் பல வெற்றிகளைத் தந்தது.  

1939-ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் டிஸ்னி படங்களுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. செலவுகள் மிக அதிகமாகிவிட்டதால், டிஸ்னி நிறுவனம் கடனில் தத்தளித்தது. கடனைச் சமாளிக்க டிஸ்னி நிறுவனம் பொதுப் பங்குகளை வெளியிட்டது. இருப்பினும் நிதிச் சிக்கல்கள் தீரவில்லை. வேறு வழியின்றி தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை டிஸ்னி நிறுவனம் மேற்கொண்டபோது அதற்குப் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. டிஸ்னி நிறுவனத்துக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன.   

1944-ம் ஆண்டில் அமெரிக்க வங்கியில் டிஸ்னி நிறுவனத்தின் கடன் தொகை 40 லட்சம் டாலராக இருந்தது. பெரும் உழைப்புடன் உருவாக்கப்பட்ட அனிமேஷன் படங்கள் சில, எதிர்பாராதத் தோல்வியைத் தழுவின. தோல்வி மேல் தோல்விகள். கடன் கொடுத்தவர்கள் துரத்திவந்து நெருக்கடி கொடுத்தார்கள். 

கலங்கவில்லை  வால்ட் டிஸ்னி.   பின்வாங்குவதற்குப் பதிலாக விரிவாக்கம் பற்றிச் சிந்தித்தார். பொதுமக்கள் விடுமுறைகளைக் குதூகலமாகச் செலவிடுவதற்கான டிஸ்னி லேன்ட் கேளிக்கைப் பூங்காவை பிரமாண்டமாக உருவாக்கத் திட்டமிட்டார். இதற்கு நிதி வழங்க  வங்கிகள் மறுத்துவிட்டன. இந்தநிலையில், அப்போது தொலைக்காட்சியில் பிரபலமாகிவந்த டிஸ்னி லேன்ட் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியைத் தொடங்கி, அதன்மூலமாக பெரும் நிதி திரட்டினார். 

கேளிக்கைப் பூங்காவை முதலில் ஆதரிக்காத மக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக ஈர்க்கப்பட்டு தேடிவரத் தொடங்கினர். கூட்டம் குவிந்தது. இதுவரை சுமார் 70 கோடி மக்கள் அந்தப் பூங்காவைப் பார்வையிட்டுள்ளனர். உலகின் 14 இடங்களில் கிளைகள் விரிந்தன. தோல்விகளைப் படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறுவதில் வல்லவரான வால்ட் டிஸ்னி 1966-ம் ஆண்டில், அவரது 65-வது வயதில் புற்றுநோயால் மரணமடைந்தார். எனினும், அவர் உருவாக்கிய டிஸ்னி நிறுவனம் ஆலமரமாய் தழைத்தோங்கியபடி இருக்கிறது. அதன் ஆண்டு வருமானம் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் என்பதே வால்ட் டிஸ்னி விதைத்த நம்பிக்கை விதைகளின் வலிமையைப் பறைசாற்றுகிறது. 

மாபெரும் கனவுத் திட்டங்களை நனவாக்கிய நம்பிக்கை  நாயகன் வால்ட் டிஸ்னி  இளைஞர்களுக்குக் கூறும் அனுபவப் பாடம் இதுதான்: 

‘‘தோல்விகளே மிகச் சிறந்த பரிசுகள். நீங்கள் தோல்வி அடையும்போது அதன் அருமை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். உங்களைக் கீழே வீழ்த்தும் தோல்விதான், இந்த உலகம் உங்களுக்குத் தரும் மிகச் சிறந்த பரிசு என்பதை பின்னர் நீங்கள் உணர்வீர்கள்.’’

(இன்னும் வெல்வோம்)

Wednesday, July 27, 2016

தோற்றவர்களின் கதை - 3

தோற்றவர்களின் கதை - 3

சுசி திருஞானம்தொடர்

பல தொழில் முயற்சிகளில் தோல்விமேல் தோல்வி கண்டு, விரக்தியின் விளிம்புக்குப் பலமுறை சென்றவர் அவர். தொடர் தோல்விகளில் இருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் எழுந்துவந்த கதை இது...

ஐ போன், ஐ பேட், ஐ புக், ஐ மாக் கம்ப்யூட்டர் போன்ற ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் இன்று உலகெங்கும் அதிகம் விரும்பி வாங்கப்படும் உயர்தர எலெக்ட்ரானிக் பொருட்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவற்றைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தை வெற்றியின் உச்சிக்குக்கொண்டு சென்றவர் அதன் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ். 2011-ம் ஆண்டில், புற்றுநோய் காரணமாக தனது 56 வயதிலேயே அவர் மறைந்தபோது அவரது சொத்து மதிப்பு 2,12,000 கோடி ரூபாய். இவை எல்லாம் வெளியில் தெரிந்த வெற்றிச் சித்திரங்கள். அதிகம் பேசப்படாத மற்றொரு பக்கம் இருக்கிறது.

வறுமை காரணமாக கல்லூரிப் படிப்பைப் பாதியில் கைவிட்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். தான் கனவுகண்டு, தனது நண்பனுடன் உழைத்து உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்திலிருந்து அவமானகரமான முறையில் வெளியில் துரத்தப்பட்டவர் அவர். பல தொழில் முயற்சிகளில் தோல்விமேல் தோல்வி கண்டு, விரக்தியின் விளிம்புக்குப் பலமுறை சென்றவர் அவர். தொடர் தோல்விகளில் இருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் எழுந்துவந்த கதை இது...   

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் 1955-ம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்தவுடன், பால் தம்பதியருக்குத் தத்துக் கொடுக்கப்பட்டார். முழுமையான அன்புடன் வளர்க்கப்பட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். எனினும், தான் தத்துக் கொடுக்கப் பட்டவன் என்ற மன உளைச்சல் அவருக்குள் தொடர்ந்து இருந்து வந்தது உண்மை. 

பள்ளிப் படிப்பின்போதே எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்தின்மீதும், வரைகலையின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். ரீட் கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்ந்த சில மாதங்களில், ஸ்டீவ் ஜாப்ஸுக்கு கல்லூரிப் படிப்பு கசந்தது. சுதந்திரச் சிந்தனையை விரும்பிய அவருக்குக் கட்டுப்பாடான கல்வி முறைக்குள் இருக்க முடியவில்லை. கட்டணம் செலுத்தத் தனது பெற்றோர் படும் சிரமத்தை உணர்ந்த அவர், கல்லூரிப் படிப்பைவிட்டு வெளியேறினார்.

வீட்டுக்கும் செல்ல இயலாமல், விடுதியும் பிடிக்காமல், பல நாட்கள் தனது நண்பர்களின் அறைகளில் மாறி மாறித் தங்கினார். உணவுக்குக் காசில்லாதபோதெல்லாம், 10 கிலோ மீட்டர் நடந்துசென்று ஹரே கிருஷ்ணா கோயிலில் வழங்கப்பட்ட இலவச உணவை வாங்கிச் சாப்பிட்டதாக அவரே பின்னாட்களில் தெரிவித்திருக்கிறார்.

கல்லூரியைவிட்டு வெளியேறிய இந்த நாட்களில்தான் ஓவிய எழுத்துப் பயிற்சி வகுப்பில் தன்னால் சேர முடிந்தது என்றும், அந்தப் பயிற்சியால்தான் பிற்காலத்தில் மாக் கம்ப்யூட்டருக்கான அழகான எழுத்துருக்களைத் தன்னால் சேர்க்க முடிந்தது என்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் குறிப்பிட்டார்.

1974-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஹிப்பிபோல் முடி வளர்த்து, நாடோடி போன்ற மனநிலையோடு இந்தியா வந்த அவர், ஆன்மிகத் தேடலில் இறங்கினார். லுங்கியைக் கட்டிக்கொண்டு இமயமலை அடிவாரத்துக்குப் பலமுறை பேருந்துப் பயணம் போய் வந்தார். பஞ்சை பராரிபோல் வாழ்ந்து திரிந்த இந்தக் காலகட்டத்தில் இவருக்கு வயிற்றோட்டம், தோல் வியாதி எனப் பல அவஸ்தைகள். மேலும் இமயமலையில் இருந்து திரும்பிவரும் வழியில் வரலாறு காணாத கடும் புயல் மழை. உயிர்பிழைத்தால் போதும் என்ற யதார்த்த சூழலில் ஆன்மிகத் தேடல் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். சாமியார்களிடம் அறிவைத் தேடுவதைவிட தாமஸ் ஆல்வா எடிசன் போன்ற அறிவியலாளர்களிடம் அறிவைத் தேடுவதே சரியானது என்ற படிப்பினையைத் தான் பெற்றதாக ஜாப்ஸ் தெரிவித்தார்.

எனினும், இந்தியப் பயணத்தின் மூலமாக எதையும் தாங்கும் வலிமையான மனப்பாங்கை அவர் வளர்த்துக்கொண்டார். ‘மன வலிமையைப் பெறுவதற்கு இந்தியாவுக்குப் போய்வா’ என்று பின்னாட்களில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்குக்கு அவர் அறிவுரை கொடுத்ததும், மார்க் ஜக்கர்பர்க்கும் அதேபோன்ற பயணம் மேற்கொண்டதும் பலரும் அறிந்த செய்தி. 

அமெரிக்கா திரும்பிய ஸ்டீவ் ஜாப்ஸ், வீடியோ கேம் தயாரித்துவந்த அட்டாரி நிறுவனத்தில் தொழில்நுட்பப் பிரிவில் வேலையில் சேர்ந்தார். தனது நண்பர் ஸ்டீபன் வாஸ்னிக்கை சந்தித்து, நாம் இணைந்து செயல்பட்டால் வளர்ந்துவரும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் சாதனை படைக்கலாம் என்று கூறினார்.

ஆப்பிள் கம்ப்யூட்டரை உருவாக்கி விற்பனை செய்ய இருவரும் திட்டமிட்டனர். ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டின் கார் நிறுத்தும் இடத்தைத் தங்கள் தொழில்நுட்பக் கூடமாக மாற்றினர். ஸ்டீபன் வாஸ்னிக்கின் அபாரமான தொழில்நுட்ப அறிவும், ஸ்டீவ் ஜாப்ஸின் தொழில்முனைப்பும் இணைந்து ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் உருவாகக் காரணமாக இருந்தன.

இருப்பினும், அதனை அதிக எண்ணிக்கையில் தயாரிக்க இருவரிடமும் பணம் இல்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் அசரவில்லை. வீடியோ கேம் கணினிகளை விற்றுவந்த பைட் ஷாப் என்ற கடை உரிமையாளரைச் சந்தித்து, தங்களது ஆப்பிள் 1 மேசைக் கணினியின் சிறப்புகளை எடுத்துக் கூறினார். “50 கணினிகளை நீங்கள் தயாரித்துக் கொண்டுவந்தால் தலா 12,000 ரூபாய் விலையில் வாங்கிக்கொள்கிறேன்” என்று உரிமையாளர் சொன்னபோது, அதனை வணிக ஒப்பந்தமாக எழுதிக் கையெழுத்துப் போட்டு வாங்கிக்கொண்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். 

இந்த ஒப்பந்தத்தை எடுத்துச்சென்று, க்ரேமர் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் பேசினார் ஜாப்ஸ். “என்னிடம் விற்பனை ஒப்பந்தம் இருக்கிறது, ஒரு மாதக் கடன் நிபந்தனையுடன் எலெக்ட்ரானிக்ஸ் மூலப்பொருட்களை கொடுங்கள்” என்று கோரிக்கை வைத்தார். க்ரேமர் எலெக்ட்ரானிக்ஸ் விற்பனை மேலாளர், ஸ்டீவ் ஜாப்ஸின் மன உறுதியைப் பார்த்து வியந்து எலெக்ட்ரானிக்ஸ் மூலப் பொருட்களைக் கொடுத்து உதவினார். ஸ்டீவ் ஜாப்ஸும், ஸ்டீபன் வாஸ்னிக்கும் இரவு பகலாக உழைத்து, ஒரே மாதத்தில் 50 மேசைக் கணினிகளை சப்ளைசெய்து முதல் லாபத்தைச் சுவைத்தனர். 

அடுத்து, கலர் மானிட்டர், ஒருங்கிணைந்த விசைப்பலகை போன்றவற்றோடு கூடிய ஆப்பிள் 2 மேசைக் கணினியை அதிக அளவில் தயாரித்து விற்க முடிவு செய்தனர். வங்கிகள் இவர்களை நம்பி கடன் தர மறுத்தன. இதுபோன்ற தொடக்க நிறுவனங்களில் முதலீடு செய்துவந்த மைக் மற்குலாவைச் சென்று சந்தித்து தங்களது கனவுத் திட்டத்தை விவரித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். மைக் மற்குலா இசைவு தெரிவித்தார். சுமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதி கிடைத்தது. ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீபன் வாஸ்னிக், மைக் மற்குலா மூவரையும் பங்குதாரர்களாகக் கொண்ட ஆப்பிள் இங்க் நிறுவனம் 1976-ல் பதிவு செய்யப்பட்டது.

1977-ல் வெளிவந்த ஆப்பிள் 2 மேசைக் கணினிகள் மாபெரும் வரவேற்பைப் பெற்றன. ஆப்பிள் நிறுவனம், 1980-ல் பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டபோது முதலீடுகள் குவிந்தன. மொத்த பங்குச் சந்தையும் ஆப்பிள் பக்கம் திரும்பியது. பெப்சிகோலா கம்பெனியில் துணைத் தலைவராக இருந்த ஜான் ஸ்கல்லியைச் சந்தித்த ஸ்டீவ் ஜாப்ஸ், அவரை ஆப்பிள் நிறுவனத்தில் இணையுமாறு கேட்டுக்கொண்டார். ஜான் ஸ்கல்லி தயங்கியபோது, “எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அந்தச் சர்க்கரை கலந்த தண்ணீரை விற்கப் போகிறாயா அல்லது எங்களுடன் சேர்ந்து உலகை மாற்றும் உன்னதப் பணிக்கு வருகிறாயா?” என்று ஸ்டீவ் ஜாப்ஸ் கிடுக்கிப்பிடி போட்டார். ஆப்பிள் நிறுவனத்தில் சி.இ.ஓ ஆக இணைந்தார் ஜான் ஸ்கல்லி.

ஆப்பிள் நிறுவனத்தில் நிதி குவிந்தபோதும் வேறுவகையான சிக்கல்கள் தலைதூக்கின. வியாபாரப் போட்டி பெரிதாகியது. ஐ.பி.எம் நிறுவனம் கம்ப்யூட்டர் தயாரிக்கத் தொடங்கி, பெர்சனல் கம்ப்யூட்டர்களைப் பிரபலமாக்கி பந்தயத்தில் முந்திச் சென்றது. பெரிய விளம்பரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் லிசா கம்ப்யூட்டர்கள் தோல்வியைத் தழுவின.

கிராஃபிக்ஸ் நுட்பத்துடன் கூடிய மாக் கம்ப்யூட்டர்கள் தயாரிப்புப் பிரிவு, ஸ்டீவ் ஜாப்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆப்பிள் 2 கம்ப்யூட்டர்கள் பிரபலமான அளவுக்கு மாக் கம்ப்யூட்டர்கள் பிரபலமாகவில்லை. எனினும், சந்தைத் தேவைக்கும் அதிகமாக மாக் கம்ப்யூட்டர்கள் தயாரிக்கப் பட்டன. ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் கட்டுப்பாட்டில் மாக் கம்ப்யூட்டர் தயாரிப்புப் பிரிவு இருந்த காரணத்தால் சி.இ.ஓ ஜான் ஸ்கல்லியால் அதனைக் கேள்வி கேட்க முடியவில்லை. 

தோல்விகளுக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் காரணம் என்று சுட்டிக் காட்டப்பட்டபோது அவரால் ஜீரணிக்க முடியவில்லை. ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேறுமாறு ஜான் ஸ்கல்லிக்கு சொல்லி அனுப்பினார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆனால், நிர்வாகக்குழு வேறு மாதிரி முடிவு எடுத்தது. ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேறுமாறு நிர்பந்தித்தது. தனது நண்பர்கள் அனைவரும் எதிரிகளாக மாறி, தான் உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்தில் இருந்தே தன்னை வெளியேற்றியபோது ஸ்டீவ் ஜாப்ஸ் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். 21 வயதில் தொழில் முனைவோர். 23 வயதில் கோடீஸ்வரர். 25 வயதில் மிகப் பிரபலமான மனிதர். 30 வயதில் தனது நிறுவனத்திலிருந்தே துரத்தியடிக்கப்பட்ட தோல்வியாளர்.  

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உரையின்போது அந்த துயரமான நாட்களைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ்: “அப்போது அதனை நான் எதிர்பார்க்கவில்லை என்பதால், அதிர்ச்சி அடைந்தது உண்மைதான். ஆனால், அதுதான் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு என்பதை பின்னர் உணர்ந்தேன். வெற்றியாளரின் கனத்த இதயத்துக்குப் பதில், தொடங்குபவரின் மென்மையான இதயம் எனக்குக் கிடைத்தது. பரபரப்பிலேயே ஓடிக்கொண்டிருந்த நான் மிகவும் ஆக்கபூர்வமாகச் சிந்திக்கத் தொடங்கிய காலம் அதுதான்.’’

ஆப்பிளில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், தொழில் வணிக நிறுவனங்களை இலக்காகக் கொண்டு நெக்ஸ்ட் என்ற புதிய கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் தொடங்கினார் ஸ்டீவ் ஜாப்ஸ். அதேபோன்று கணினி வரைகலை நிறுவனமான பிக்சர் நிறுவனத்தின் பாதிக்கும் மேற்பட்ட பங்குகளை வாங்கி அதன்  தலைவரானார். இவை இரண்டுமே அவரது வெற்றிகரமான முடிவுகளாக அமைந்தன. பிக்சர் நிறுவனத்தை பின்னாட்களில் 50,000 கோடி ரூபாய்க்கு டிஸ்னி நிறுவனம் வாங்கியது. ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேற்றத்துக்குப் பின்னர் சிறிதுகாலம் வளர்ச்சி பெற்ற ஆப்பிள் நிறுவனம், 1990-க்குப் பின்னர் பெரும் நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேறக் காரணமாகக் கருதப்பட்ட ஜான் ஸ்கல்லி 1993-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

வரலாறு சுழன்றது. ஆப்பிள் நிறுவனத்தின் மாக் கம்ப்யூட்டருக்கு, நெக்ஸ்ட் நிறுவன மென்பொருளை உபயோகிப்பது என்று 1996-ல் முடிவானது. நெக்ஸ்ட் நிறுவனத்தைப் பெரும் தொகை கொடுத்து ஆப்பிள் நிறுவனம் வாங்கிக்கொண்டது. நெக்ஸ்ட் நிறுவனத் தலைவரான ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிறுவன ஆலோசகரானார். பின்னர், ஆப்பிள் நிறுவனத்தின் முடிசூடா மன்னரானார். 

சவால்களை எதிர்கொண்டு ஆப்பிள் நிறுவனத்துக்குப் புதுரத்தம் பாய்ச்சும் புதிய பொறுப்பு அவருக்குத் தரப்பட்டது. ஐ போன்,     ஐ பாட், ஐ புக்  என விதவிதமான, வெற்றிகரமான தயாரிப்புகளை ஊக்குவித்து வெளியிடச் செய்த ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிறுவனத்தை உன்னத இடத்துக்கு இட்டுச் சென்றார். ஆப்பிள் நிறுவனத்தை 30 லட்சம் கோடி ரூபாய் பெருமானம் உள்ள ராட்சச நிறுவனமாக மாற்றிக் காட்டினார்.

தனது தொழில் துறை சவால்களுக்கு இடையே ஸ்டீவ் ஜாப்ஸ், மற்றொரு போராட்டமும் நடத்திக்கொண்டிருந்தார். 2003-ம் ஆண்டிலேயே அவருக்கு கேன்சர் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மரணத்துடன் அவர் நடத்திய நீண்ட போராட்டம், 2011-ம் ஆண்டு அவரது 56-வது வயதில் முடிவுக்கு வந்தது.  

தனது வாழ்நாளில் பிறப்பு முதல் இறப்புவரை, தோல்விகளைத் தாங்கிக்கொண்டு, மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கப் பழகிய ஸ்டீவ் ஜாப்ஸ், இளைஞர்களுக்குச் சொல்லிய முக்கிய அறிவுரை: “வாழ்க்கை சில வேளைகளில் உங்கள் தலையில் செங்கல்லைக் கொண்டு தாக்கும். மனம் தளராதீர்கள். நம்பிக்கையை மட்டும் ஒருபோதும் இழக்க வேண்டாம்.”

(இன்னும் வெல்வோம்)

- vikatan document