Thursday, March 24, 2016

குடும்பத்தை நேசிப்பவர்களுக்கு கைகொடுக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ்!


Vikatan document

குடும்பத்தை நேசிப்பவர்களுக்கு கைகொடுக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ்!

சத்யன் ஜம்புநாதன், முதன்மை ஆக்சுவரி, ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ்.

லைஃப் இன்ஷூரன்ஸ் திட்டங்களில் மிகவும் எளிமையான பாலிசி என்றால் அது டேர்ம் இன்ஷூரன்ஸ் தான். இதில் தனிநபர் ஒருவர் குறிப்பிட்ட தொகையை பிரீமியமாக கட்டவேண்டும். பாலிசிதாரர் எதிர்பாராத விதமாக மரணம் அடையும் வரையிலோ அல்லது பாலிசி காலம் முடியும் வரையிலோ செலுத்த வேண்டியிருக்கும். 

இடைப்பட்ட காலத்தில் பாலிசிதாரருக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் காப்பீடு எடுக்கப்பட்டிருந்த மொத்த தொகை அவரின் குடும்பத்தாருக்குக் கிடைக்கும்.

ஏன் டேர்ம் இன்ஷூரன்ஸ்? 

இன்றைக்கு ப்பல குடும்பங்கள் ஒருவருடைய வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கின்றன. வருமானம் ஈட்டும் அந்த நபருக்கு எதிர்பாராத விதமாக நிகழும் சம்பவங்களினால், அவரின் வருமானத்தை அந்தக் குடும்பத்தி னர் இழக்க நேரிடலாம். அந்தப் பொருளாதார இழப்பை ஈடுசெய்ய இந்த பாலிசி உதவும்.  

உதாரணமாக, ஒரு நபரின் வருமானம், செலவு மற்றும் கடன் ஆகியவற்றை கவர் செய்யும் வகையில் பாலிசி கவரேஜ் தொகையை நிர்ணயித்துக் கொள்ளலாம். அதாவது, 30 வயதுடைய திருமணமான ஆண், மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார் என வைத்துக் கொள்வோம். அவர் ரூ.10 லட்சம் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார். (ரூ.25,000 X 12 மாதங்கள் X 28 வருடம் = ரூ.84,00,000. இதனுடன் வீட்டுக் கடன் ரூ.10,00,000-த்தை சேர்த்தால், மொத்தம் ரூ.94,00,000.) ஆக மொத்தமாக அவரின் தேவை ரூ.94,00,000-க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம். டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தபின் அவருக்கு எதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், அவரது குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து வீட்டுக் கடன் செலுத்த வேண்டியதில்லை. அதனுடன் அன்றாட தேவைகளையும் யாருடைய உதவியும் இல்லாமல் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.  

இந்த பாலிசியின் மூலமாக கிடைக்கும் தொகையை, தங்களது எதிர்கால பொருளாதார தேவை களுக்கும், கடன்கள் இருப்பின் அவற்றை அடைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

எதற்கெல்லாம் கவரேஜ் கிடைக்கும்?

சில டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் கிரிட்டிகல் இல்னஸ், விபத்துக் காப்பீடு கவரேஜூம் வழங்குகிறது. அதாவது, தீவிர நோயினால் பாதிக்கப்படும்போது சிகிச்சைக்கான தொகையைக் க்ளெய்ம் செய்ய முடியும். அதேபோல, விபத்தினால் மரணம் அடையும்போது கூடுதல் கவரேஜ் கிடைக்கும். 

மாறி வரும் நம் வாழ்க்கை முறையினால் வாழ்வியல் சார்ந்த பல பிரச்னைகள் உருவாகின்றன.குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் தீவிர நோயினால் பாதிக்கப் படும்போது பொருளாதார ரீதியாக பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதாவது, தீவிர நோய் பாதிப்பு இருப்பது தெரிந்தால் கிரிட்டிகல் இல்னஸ் கவரேஜ் தொகை கிடைக்கும். 

15 வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது டேர்ம் இன்ஷூரன்ஸ் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் உள்ளது. அதாவது, பாலிசியின் பிரீமிய மானது 50% வரை குறைந்துள்ளது. மேலும், இப்போது டேர்ம் இன்ஷுரன்ஸ் பாலிசி விரிவாக்கப்பட்டு, பல்வேறு சிறப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது, விபத்துக்காப்பீடு, தீவிர நோய் பாதிப்பு, குணப்படுத்த இயலாத நோய்கள் ஆகியவற்றுக்கு கவரேஜ் கிடைக்கும். இதனுடன் ஆயுள் காப்பீடும் கிடைக்கும். 

பாலிசி எடுப்பதற்குமுன் கவனிக்க வேண்டியவை!

க்ளெய்ம் செட்டில்மென்ட் ரேஷியோ: நீங்கள் பாலிசி எடுக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் க்ளெய்ம் ரேஷியோ தொடர்ந்து அதிகமாக இருக்க வேண்டும். அது போன்ற நிறுவனங்களில் பாலிசி எடுப்பது நல்லது. 

நாமினி: பாலிசி எடுக்கும் போது நாமினி யார் என்பதை குறிப்பிடுவது அவசியம். அதாவது, அந்த பாலிசியின் மூலமாக யார் பயன் அடைய வேண்டும் என நினைக்கிறீர்களோ, அவர்களை நாமினியாக நியமிப்பது நல்லது. 

உண்மையான தகவல்களை தருவது:பாலிசி எடுக்கும்போது பாலிசிதாரர் தன்னைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாக கொடுப்பது அவசியம். முக்கியமாக, மருத்துவ ரீதியான தகவல்களை தருவது முக்கியம்.  

மருத்துவப் பரிசோதனை: மருத்துவப் பரிசோதனையில் உடல் ரீதியாக பாலிசிதாரருக்கு பிரச்னை இருப்பது தெரிய வந்தால் பிரீமியம் அதிகரிக்கும். இதனால் பாலிசி எடுக்கும் முடிவை மாற்றிக்கொள்ள கூடாது. இதுபோன்ற சூழ்நிலையில்தான் உங்களுக்கு நிதி சார்ந்த பாதுகாப்பு அதிகம் தேவை. 

நாம் இல்லாவிட்டாலும் நம் குடும்பம் எந்த வகையிலும் கஷ்டப்படக் கூடாது என்று நினைப்பவர்கள் டேர்ம் இன்ஷுரன்ஸ் பாலிசியை இளமையிலேயே எடுப்பது அவசியம்.

- தொகுப்பு: இரா.ரூபாவதி

Wednesday, March 23, 2016

ரோடு டெஸ்ட் மஹிந்திரா KUV100


  - motor vikatan post



பேபி எஸ்யுவி!


ரோடு டெஸ்ட் மஹிந்திரா KUV100தொகுப்பு: ராகுல் சிவகுரு

எஸ்யுவி தயாரிப்பாளர் என மஹிந்திராவை உறுதியாக அழைக்கலாம். ஏனெனில், இந்தியாவின் 40 சதவிகித எஸ்யுவி மார்க்கெட்டைத் தன்வசம் வைத்திருக்கிறது மஹிந்திரா. இப்போது காம்பேக்ட் க்ராஸ்ஓவர் மற்றும் எஸ்யுவி கார்களுக்கு இருக்கும் டிமாண்டை உணர்ந்து, தனது வழக்கமான கோட்பாடுகளில் இருந்து வெளிவந்து, KUV 1OO எனும் பெயரில் ஒரு மாஸ் மார்க்கெட் ஹேட்ச்பேக் காரைக் களமிறக்கியிருக்கிறது மஹிந்திரா. போட்டி கார்களிடம் இருந்து தனித்துத் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள KUV 1OO இடவசதி, பெர்ஃபாமென்ஸ், மைலேஜில் எப்படி இருக்கிறது?

டிஸைன்

மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் i10 ஆகிய பிரபலமான கார்களை விட நீளத்தில் குறைவாக இருந்தாலும், உயரம் அதிகம். அதனால், முன்பக்கம் பார்த்தால், ஒரு மினி கிராஸ்ஓவர்/எஸ்யுவி போல இருக்கிறது KUV 1OO. ரேஞ்ச்ரோவர் இவோக் காரில் இருப்பதுபோன்ற கிரில்லுடன், கிட்டத்தட்ட ‘ஏ’- பில்லர் வரை நீளும் ஹெட்லைட் இணையும் விதம் அழகு. பின்பக்கக் கதவுக் கைப்பிடிகள் செவர்லே பீட் காரில் இருப்பதுபோல ஜன்னல் அருகே வைக்கப்பட்டிருக்கின்றன. பின்பக்கம் வழக்கமான ஹேட்ச்பேக்போல இருக்கிறது. ஆனால், பின்பக்க பம்பரில் பாடி கிளாடிங் மற்றும் அம்சமான டெயில் லைட்டைக் கொடுத்து, அந்த எண்ணத்தைத் தவிர்க்க மஹிந்திரா முயற்சித்திருக்கிறது. எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், மெக்ஃபர்ஸன் ஸ்ட்ரட்  டார்ஷன் பார் சஸ்பென்ஷன் அமைப்பு, மோனோகாக் சேஸி, ஃப்ரன்ட் வீல் டிரைவ், குறுக்குவாட்டில் வைக்கப்பட்டுள்ள இன்ஜின் என KUV 1OO மெக்கானிக்கலாக ஹேட்ச்பேக் கார்களைப்போலவே இருக்கிறது.

காரின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, ABS மற்றும் EBD அனைத்து வேரியன்ட்டிலும் ஸ்டாண்டர்டாக அளிக்கப்படுவது பாராட்டுதலுக்குரியது. எதிர்பார்த்ததுபோலவே டாப் வேரியன்ட்டான K8-ல் இரு காற்றுப் பைகள் இடம் பெற்றிருப்பதுடன், + பேக்கேஜில் [K2, K4, K6] வேரியன்ட்டுகளில் இரு காற்றுப் பைகள் ஆப்ஷனலாக வழங்கப்படுகின்றன.

இன்டீரியர் மற்றும் சிறப்பம்சங்கள்

இந்தியக் குடும்பங்களைக் கவர்ந்திழுக்கும் வகையில், டட்ஸன் கோ காரைப்போல ஆறு இருக்கைகளுடன் வந்திருக்கிறது KUV 1OO. சென்டர் கன்ஸோலிலேயே கியர் மற்றும் ஹேண்ட் பிரேக் லீவர்களை வைத்ததால் கிடைத்த ஃப்ளாட் ஃப்ளோர் மற்றும் லெக்ரூமைப் பயன்படுத்தி, முன்பக்க இருக்கைகளுக்கு நடுவே ஒரு சீட்டைச் சேர்த்துவிட்டது மஹிந்திரா. ஆனால் நடுவில் இருக்கும் அந்தச் சீட்டில் ஒரு சிறுவன் அல்லது  சிறுமிதான் உட்காரமுடியும். 
 
டட்ஸன் கோ காருடன் ஒப்பிடும்போது, பக்காவான 6 சீட்டராக மிளிர்கிறது KUV 1OO. ஆனால், பாதுகாப்பற்ற அந்த சீட்டை மடக்கிவிட்டால் வசதியான ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கிறது. பெஞ்ச்போல இருக்கும் மூன்று பேர் உட்காரக்கூடிய இருக்கை, தனித்தனியாக இரண்டு பேர் உட்காரக்கூடிய இருக்கைகளைப்போல சப்போர்ட் அளிக்கவில்லை. ஃப்ளாட் ஃப்ளோர், உயரமான இருக்கைகள் என இந்த காருக்குள் நுழைவது சுலபமாக இருக்கிறது. மேலும் KUV 1OO காரின் கேபின் ஸ்மார்ட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

உள்ளலங்காரம்

நீட்டான சென்டர் கன்ஸோலைக் கொண்டிருக்கும் டேஷ்போர்டின் மேல்பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக்கின் தரம் சூப்பராக இருந்தாலும், கீழ்ப்பகுதியின் தரம் சுமார்தான். இந்த டச் ஸ்கிரீன் யுகத்தில், ஆடியோ சிஸ்டத்தில் பழைய மோனோக்ரோம் டிஸ்ப்ளேவை ஏன் மஹிந்திரா சேர்த்தது எனப் புரியவில்லை.

லெக்ரூம், ஹெட்ரூம், சாய்மானம், சென்டர் ஆர்ம் ரெஸ்ட், மூன்று இருக்கைக்கும் அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் என சொகுசு மற்றும் இடவசதியில் ஆச்சரியப்படுத்துகிறது KUV. 
243 லிட்டர் பூட் ஸ்பேஸ் போதுமானதாக இல்லை. தவிர, பூட் உயரமாக இருப்பதுடன் பூட்டின் வாய் குறுகலாக இருப்பது வசதியாக இல்லை. அதிக இடம் தேவைப்பட்டால், பின்பக்க இருக்கைகளை மடக்கிக்கொள்ளலாம்.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

பெரிய கார்களுக்கு mHawk - mEagle என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்க, தனது சின்ன கார்களுக்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள mFalcon சீரிஸ் இன்ஜின்களை, முதன்முறையாக KUV 1OO காரில் பொருத்தியுள்ளது மஹிந்திரா. முழுக்க அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ள 3 சிலிண்டர், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் ஒரு சிலிண்டருக்கு 4 வால்வுகள் மற்றும் வேரியபிள் வால்வு டைமிங் (இன்டேக் - எக்ஸாஸ்ட்) போன்ற தொழில்நுட்பங்கள் இருந்தாலும், இந்த இன்ஜின் வெளிப்படுத்தும் பவர் (81.8bhp@5,500rpm) மற்றும் டார்க் (11.7kgm@3600rpm) போட்டியாளர்களைவிட அதிகமாக இல்லை. ஆனால், இன்ஜினின் செயல்பாடு நிறைவாகவே இருக்கிறது.

அதேபோல், 3 சிலிண்டர் டீசல் இன்ஜினிலும் சிலிண்டருக்குத் தலா 4 வால்வுகள். இது 77bhp சக்தியையும், 19.37kgm டார்க்கையும் அளிக்கிறது. 0-100 கி.மீ வேகத்தை எட்டிப் பிடிக்க ஸ்விஃப்ட் டீசல் காருக்கு 13.65 விநாடிகளும், KUV 1OO காருக்கு 14.85 விநாடிகளும் தேவைப்படுகின்றன. உண்மையைச் சொல்வது என்றால், கிராண்ட் i10 காரைவிட KUV 1OO காரின் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருக்கிறது. 1,500 ஆர்பிஎம்மிலேயே டர்போ சார்ஜர் வேலை செய்ய ஆரம்பித்துவிடுவதால், டர்போ லேக் மிகக் குறைவாகவே தெரிகிறது. 1,800 - 3,500 ஆர்பிஎம் வரை பவர் நன்றாக வெளிப்படுகிறது. அதற்கு மேல் பெரிதாக பவர் இல்லை என்பதுடன், இன்ஜினின் அதிகபட்ச வேகமான 4,800 ஆர்பிஎம் வரை செல்வதற்குப் பொறுமை மிக அவசியம். ஏனெனில், இந்த நேரத்தில் இன்ஜின் அதிக சத்தம் போடுவதுடன், வேகத்தில் முன்னேற்றம் இல்லை. டீசல் இன்ஜினில் பவர் - எக்கோ என இரு டிரைவ் மோடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. உங்களுக்குத் தேவையானதை ஸ்டீயரிங் அருகே இருக்கும் பட்டன் மூலமாகத் தீர்மானிக்கலாம். எதிர்பார்த்ததுபோலவே எக்கோ மோடில் பெர்ஃபாமென்ஸ் டல்லாக இருப்பதுடன், அதிகபட்சமாக 3,500 ஆர்பிஎம் வரைதான் இன்ஜின் ரெவ் ஆகிறது.

டீசல் இன்ஜினில் உள்ள எக்கோ மோடில் 0 - 100 கி.மீ வேகத்தை எட்டிப் பிடிக்க, பவர் மோடுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமான நேரம் - அதாவது, 28.88 விநாடிகள் தேவைப்படுகிறது! ஆனால், நெரிசல் மிகுந்த சிட்டி டிராஃபிக்கில் நல்ல மைலேஜுடன் பயணிக்க, இந்த டிரைவ் மோடு உபயோகமானதாக இருக்கிறது.  கிளட்ச்சைப் பயன்படுத்துவது ஸ்மூத்தாக இல்லாவிட்டாலும், கியர்பாக்ஸ் துல்லியமாகச் செயல்படுகிறது. TUV 3OO-ல் இருக்கும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனை ஏன் மஹிந்திரா இதில் சேர்க்கவில்லை என்பது தெரியவில்லை. 

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை 

அமெரிக்க நிறுவனமான Cayman Dynamics உதவியுடன் TUV 3OO காரைத் தொடர்ந்து, KUV 1OO காரின் சஸ்பென்ஷனையும் வடிவமைத்துள்ளது மஹிந்திரா. சாலைகளில் உள்ள இடர்பாடுகளை இது எளிதாகச் சமாளித்துவிடுகிறது. காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீ என்பதால், பெரிய ஸ்பீடு பிரேக்கர்களில் அடிபடாமல் கார் தப்பிவிடுகிறது. சஸ்பென்ஷன் சத்தம் காருக்குள்ளே கேட்பது நெருடல். தவிர, சின்ன 14 இன்ச் சக்கரங்களைக்கொண்டிருக்கும் KUV 1OO-ல் பெரிய மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது கவனம் தேவை. சஸ்பென்ஷன் மென்மையாக செட் செய்யப்பட்டுள்ளதால், அதிக வேகத்தில் செல்லும்போது காரின் பின்பக்கம் நிலையாக இல்லாமல் ஆட்டம் போடுகிறது. மேலும், ‘ஏ’ -பில்லர் அருகே Wind Noise தொடர்ச்சியாகக் கேட்கிறது. மென்மையான சஸ்பென்ஷன் மற்றும் காரின் அதிக உயரம் காரணமாக, திருப்பங்களில் காரைச் செலுத்தும்போது பாடி ரோல் ஆகிறது. பிரேக்குகள் இன்னும் கொஞ்சம் திறன்மிக்கவையாக இருந்திருக்கலாம். ஸ்டீயரிங் போதுமான எடையுடன் இருப்பதால், அதன் செயல்பாடு நம்பிக்கையளிக்கும் விதத்தில் இருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், XUV 5OO காரைவிட KUV 1OO காரை ஓட்டுவது நல்ல அனுபவமாக இருக்கிறது. அதற்காக இதனை ஸ்விஃப்ட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது.

மைலேஜ்

அதிக மைலேஜுக்காக இரண்டு இன்ஜின்களிலும் மைக்ரோ ஹைபிரிட் ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டத்தைச் சேர்த்துள்ளது மஹிந்திரா. பெட்ரோல் மாடல், நகரத்தில் 11 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 15.5 கி.மீ-யும் மைலேஜ் தந்தது. டீசல் மாடல், நகரத்தில் 13 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 17.3 கி.மீ-யும் மைலேஜ் அளிக்கிறது.

 ஹேட்ச்பேக் காரின் விலையில் (5.2 - 7.90 லட்ச ரூபாய்) 14 வேரியன்ட்டுகளாகக் களமிறங்கியிருக்கிறது KUV 1OO. ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையில் இது சற்று பின்தங்கிவிட்டதையும் சொல்லியாக வேண்டும். மேலும், ஒட்டுமொத்த பெர்ஃபாமென்ஸில், ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய இன்ஜின்களுடன் போட்டியிடும் அளவுக்கு KUV 1OO காரின் இன்ஜின்கள் இல்லை. ஆறு பேர் உட்காரக்கூடிய வசதி மற்றும் பல்வேறு ஸ்டோரேஜ் ஸ்பேஸ்கள் என காரின் கேபின் அசத்துகிறது. தவிர, நகரத்தில் ஓட்டுவதற்கு எளிதான காராக திகழும் KUV 1OO, இந்த விலைக்குக் கிடைக்கும் மற்ற ஹேட்ச்பேக் கார்களில் இருந்து தனித்துத் தெரிகிறது.

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்!

- vikatan post

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்!

மார்ச் 18 உலக தூக்க தினம்#lightsoffpleaseபு.விவேக் ஆனந்த், படங்கள்: இரா.யோகேஷ்வரன், மாடல்: ஷெரின்

கடைசியாக இரவு 9 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது என உங்களுக்கு நினைவிருக்கிறதா?கடந்த 20 ஆண்டுகளில் நாம் தூங்கச்செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதைக் கவனித் திருக்கிறீர்களா? 

8 மணிக்குள் இரவு உணவு முடித்து, 8:30-க்கு வெளிச்சம் அணைத்து, பேசிக்கொண்டே படுக்கையில் விழுந்தால் 9 மணிக்குள் உறங்கிப்போவோம். அது ஒரு காலம். 9 மணித் தூக்கம் 10 மணியாகி, நள்ளிரவாகி, இப்போது அதிகாலை வரை வந்துவிட்டது. அதிகாலை 3 மணி, 4 மணி வரைகூட விழித்திருக்கிறார்கள். இரவு வேலையின் காரணமாக கண் விழிப்பது, என்றோ ஒருநாள் தூக்கம் வராமல் இப்படி ஆவது... என்பது எல்லாம் தனி. எந்த உடனடி காரணமும் இல்லாமல் தொடர்ந்து இரவுகளில் கண் விழிப்போர் பெருகிக்கொண்டிருக்கின்றனர். இதன் விளைவுதான், இந்த 20 ஆண்டுகளில் புதிது புதிதாகப் பெருகிப் பெருக்கெடுக்கும் நோய்கள். இரவுத் தூக்கம் தள்ளிப்போவதற்கும், நோய்களின் வருகைக்கும் நேரடித் தொடர்பு உண்டு. தவறான வாழ்வியல்முறைகளால் ஏற்படும் உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய், இதயநோய் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது. 

நம் இரவுத் தூக்கம் எதனால் தள்ளிப்போகிறது...நமக்கு ஏன் தூக்கம் வருவதில்லை? இதற்கு `நமது உடல் பிரச்னைகள், மனக் கவலைகள்தான் காரணம்' என நினைக்கிறோம். இது முழு உண்மை அல்ல.

உண்மையில் நாம் உறக்கத்தைத் தள்ளிப்போடும் ஒவ்வொரு நிமிடத்திலும், பல நிறுவனங்கள் பல கோடிகளுக்கு வருமானம் பார்க்க ஆரம்பித்து விட்டன. இரவுச் சந்தையில்தான் இப்போது நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு `கோடி’கள் புரள்கின்றன. இரவுச் சந்தை என்பது, முழுக்க முழுக்க டிஜிட்டல் சந்தை. டிஜிட்டல் பொருட்களை நாம் சரியாக அணுகத் தெரியாமல் தடுமாறுவதையே வியாபாரம் ஆக்கிவருகிறார்கள்.

அதிகரித்துவரும் `காஸ்ட் ஆஃப் லிவிங்' மற்றும் குடும்பக் கடமைகளைச் சமாளிக்க, தனக்குப் பிடிக்காத வேலைகளையும் செய்தாக வேண்டும். அதுவும் தொழிலாளர் சட்டத்தை மதித்து 8 மணி நேர வேலை எல்லாம் கிடையாது. குறைந்தது 10 மணி நேரம் உழைக்க வேண்டும். அதில் டார்கெட்டை எட்டிப்பிடிக்க வேண்டும். மனஉளைச்சல் தரும் இந்த வேலையைச் செய்து விட்டு, வெளியே வந்தால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டும். சோர்வுடன் வீட்டுக்கு வந்து விழுந்ததுமே டி.வி-யை ஆன் செய்து விடுகிறார்கள். அந்த மாய உலகத்தில் விரியும் வண்ண வண்ணக் காட்சிகளில் மனம் மயங்குகின்றனர். 

முன்னர் எல்லாம் மாலை 6 முதல் 8 மணி வரை ப்ரைம் டைம். அதிகபட்சம் இரவு 10 மணி வரைதான் நிகழ்ச்சிகள் இருக்கும். அதற்குப் பிறகு பாடல்கள்தான் ஓடும். ஆனால் இப்போது ப்ரைம் டைம் என்பது, இரவு 11:30 மணி வரை நீண்டுவிட்டது. லேகிய வியாபாரிகளும், ஆண்மையை அதிகரிக்க குறிசொல்லும் போலி மருத்துவர்களின் பிரசாரங்களும் டி.வி-யை மொய்க்க ஆரம்பித்துவிட்டன. இரவு நீண்டநேரம் விழித்திருப்பவர்கள்தான் இவர்களின் டார்கெட். 

இளம்வயதினர் மட்டுமின்றி, பலரும் ஸ்மார்ட்போனில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என மூழ்க ஆரம்பித்துவிடுகிறார்கள். சமூக வலை தளங்கள் எனும் உலகத்துக்குச் சென்றுவிட்டால் அங்கு அதற்கான வேடம் தரித்து பலர் பிஸியாகிவிடுகிறார்கள். முன்னர் எல்லாம் இரவு உணவு முடித்ததும் திண்ணையில் ஓரிரு மணி நேரம் நண்பர்களோடு உட்கார்ந்து பேசிவிட்டே உறங்கச் செல்வார்கள். வீட்டுத் திண்ணை வாட்ஸ்அப் ஆனது. வாட்ஸ்அப் உரையாடலில் நேரம் போவதே தெரிவதில்லை.

சொந்த வீட்டில் இருப்பவர்களுடன்கூட, வீட்டில் இருந்துகொண்டே சமூக வலைதளங் களின் வழியே தொடர்புகொள்பவர்களும் இருக்கிறார்கள். தினமும் நள்ளிரவைத் தாண்டிய சாட்டிங்குக்குப் பிறகு `குட்மார்னிங்' சொல்லி விட்டுத்தான் படுக்கைக்குச் செல்கிறார்கள். 

11 மணிக்கு மேல் ஃபிளிப்கார்ட், அமேஸான் என ஆன்லைன் தளங்களில் ஷாப்பிங் செய்வது பலரின் பொழுதுபோக்காக மாறிக் கொண்டிருக்கிறது. நள்ளிரவு நேரங்களில் தான் பல ஆயிரங்களில் பணப்பரிவர்த்தனைகள் நடக்கின்றன.

இரவு உறங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென எழுந்து, `ஃபேஸ்புக்கில் போட்ட போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ், வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்திருக்கிறதா?' என அடிக்கடி செக் செய்து கொண்டே இருப்பதை `கம்பல்சிவ் பிஹேவியர்' எனச் சொல்லும் ஒருவகையான மன நலப் பிரச்னை என்றும், `கண்டிஷனல் இன்சோம்னியா' எனும் தூக்கமின்மை நோய் என்றும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். பலர் தினமும் காலையில் விழித்து எழுந்ததும் செய்யும் முதல் வேலை என்ன? தலையணை அருகே இருக்கும் மொபைலை எடுத்து இன்டர்நெட்டை ஆன் செய்து, வாட்ஸ்அப்பில் ஏதேனும் மெசேஜ் வந்திருக்கிறதா எனப் பார்ப்பதுதான். நாம் எவ்வளவு தூரம் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகிவருகிறோம் என்பதை உடனடியாக உணரவேண்டிய தருணம் இது.

டி.வி., சமூக வலைதளங்கள் ஆகியவற்றையும் தாண்டி இன்னொரு குரூப் இருக்கிறது. வேறு என்ன தமிழகத்தையே குடிகாரக் கூட்டமாக்கி வைத்திருக்கும் அரசின் டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு, நள்ளிரவைத் தாண்டி வீட்டுக்கு வருபவர்கள்தான். மது அருந்தினால் ஒருவித போதை மயக்கம்தான் வருமே தவிர, தூக்கம் வராது. கையில் காசு கம்மியாக இருந்தால் டாஸ்மாக், கொஞ்சம் எக்ஸ்ட்ரா இருந்தால் உயர்ரக பார், அல்ட்ரா லெவல் பணம் இருந்தால் பப், நைட் பார்ட்டி, பீச் ஹவுஸ் என இரவு கேளிக்கைக்குப் பஞ்சம் இல்லை.

டி.வி., ஸ்மார்ட்போன், மது, சினிமா என ஏதாவது ஒன்றுக்கு அடிமையாகாதவர்கள் சொற்பமாகத் தான் இருக்கிறார்கள். நாம் எல்லோருமே இரவில்தான் ஆட்டம் போடுகிறோம். பொழுதை உற்சாகமாகக் கழிக்க ஆரம்பித்திருக்கிறோம். அமெரிக்கா போன்ற சில நாடுகளில் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசமே இருக்காது. 24 மணி நேரமும் அங்கு கடைகள் திறந்தே இருக்கும். அதேபோல தூக்கமின்மை தொடர்பான `இன்சோம்னியா' போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் அங்கே அதிகம். இந்த நோய்கள் இப்போது நமக்கும் வர ஆரம்பித்துவிட்டன. 

இரவுத் தூக்கம் தடைபடுவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, தூக்க சிறப்பு நிபுணர் ராமகிருஷ்ணனிடம் கேட்டேன்.

``நமது உடலுக்குள் மனசுழற்சிக் கடிகாரம் இருக்கிறது. பொதுவாக சூரிய உதயத்தின்போது எழுந்து உற்சாகமாக வேலைசெய்வதும், சூரியன் மறைந்த பின்னர் இரவு உணவை முடித்துவிட்டு உறங்கச் செல்வதும்தான் இயற்கையோடு இயைந்த வாழ்வு. ஏன் நாம் சூரிய வெளிச்சத்தில் மட்டும் இயங்க வேண்டும் என்பதற்கு அறிவியல் விளக்கமும் உண்டு. சூரியன் மறைந்த பிறகு, இருட்டு நேரத்தில்தான் மெலட்டோனின் முதலான பல ஹார்மோன்கள் நமது உடலில் சீராகச் சுரக்கும். நாம் இரவு நேரத்தில் உடலுக்கு ஓய்வு தந்து உறங்கும் போதுதான் மெட்டபாலிசம் எனும் வளர்சிதை மாற்றம் உடலில் சீராக நடக்கும். நமது உடல் வளர்ச்சிக்குத் தேவையான குரோத் ஹார்மோன், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டீரான் போன்ற  பிரத்யேக செக்ஸ் ஹார் மோன்கள் சமச்சீராகச் சுரக்கும். முறையற்ற இரவுத் தூக்கத்தால் ஹார்மோன்கள் சீராக உற்பத்திசெய்யப் படாமல் பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. கடந்த சில வருடங்களாக குழந்தைப் பேறின்மை பிரச்னை இளம் தம்பதிகளிடம் அதிகரித்துவருகிறது. பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, ஆண்களுக்கு விந்தணுக்களின் வீரியம் குறைவு ஆகியவற்றுக்கு, முறையற்ற இரவுத் தூக்கமே முக்கியக் காரணம். 

ஒழுங்கற்ற தூக்கத்தால் பயம், பதற்றம், சோர்வு ஆகியவை வருகின்றன. மனநலன் சார்ந்த பல பிரச்னைகள் வருவதற்கும் இதுதான் காரணம். இரவு நெடுநேரம் கழித்து உறங்குவதாலும், போதுமான நேரம் தூங்காததாலும், ஆழ்நிலை தூக்கம் அடையாமல் மேம்போக்காகத் தூங்கு வதாலும் மெள்ள மெள்ள உடற்பருமன், சர்க்கரை நோய், குறிப்பாக ரத்த அழுத்தம், ஸ்ட்ரோக் ஆகியவை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

எல்லோராலும் இயல்பாக உடனடியாகத் தூங்கிவிட முடிவதில்லை. ஒவ்வொருவருக்கும் தூக்கம் தடைபடுவதற்கு வெவ்வேறு காரணிகள் இருக்கின்றன. பொதுவாக, தூக்கத்தைப் பாதிக்கும் காரணி வெளிச்சம்தான். இருள்தான் மனிதர்களுக்குத் தூக்கத்தைத் தூண்டும். அதனால்தான் வெளிச்சத்தை அணைத்துவிட்டுத் தூங்குகிறோம். சமீப ஆண்டுகளாக இரவிலும் வெளிச்சம் கண்களைப் பறிக்கிறது. வீதிகளில் மட்டும் அல்ல, வீட்டுக்குள்ளும் இரவு வெளிச்சம் அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிட்டது. ஒரு காலத்தில் மின்சார விளக்கு மட்டும்தான் நமக்கு இரவு வெளிச்சம். பிறகு டி.வி வந்தது, கம்ப்யூட்டர், செல்போன், லேப்டாப், டேப்லெட் எல்லாம் வந்துவிட்டன. அனைத்தும் அதிஉயர் வெளிச்சத்தை உமிழ்கின்றன. இதனால் நமது தூக்கம் தள்ளிப்போகிறது. 

சென்னை போன்ற பெரு நகரங்களில் காலை 7 மணிக்குக் கிளம்பி ஆபீஸ் சென்றுவிட்டு, இரவு 7 மணிக்குத்தான் வீடு திரும்புகிறார்கள். பெரும்பாலான ஆபீஸ்களில் ஏ.சி போட்டு வைத்திருப்ப தால், ஜன்னல்களை அடைத்து விடுகிறார்கள். எது இரவு, எது பகல் எனத் தெரியாத செயற்கை விளக்கு வெளிச்சத்தில்தான் பலரும் வேலைசெய்கிறார்கள். நாம் வெப்ப மண்டலப் பகுதியில் வாழ்கிறோம். ஆனால், சமீப ஆண்டுகளாக நமக்கே விட்டமின்-டி குறைபாடு வர ஆரம்பித்துள்ளது. காரணம், சூரிய ஒளியே உடலில் படாமல் வாழ ஆரம்பித்திருப்பதுதான். இரவு வீட்டுக்கு வந்தவுடன், வீட்டில் பளிச் வெளிச்சம் தரும் விளக்குகளைத் தவிர்த்து வெளிச்சம் குறைந்த விளக்குகளைப் பயன் படுத்துங்கள். அரை மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு மேல் டி.வி., லேப்டாப் பார்க்காதீர்கள். மொபைல் வெளிச்சம் தூக்கத்துக்குக் கடும் எதிரி. பலர் அறை விளக்குகளை அணைத்துவிட்டு மொபைலில் நோண்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். கண்களுக்கு அருகில் வைத்து மொபைலைப் பயன்படுத்தும் போது, அந்த வெளிச்சம் நமது கண்களையும் மூளையையும் பாதிக்கும்; தூக்கத்தைத் தாமதப்படுத்தும். ஒவ்வொருவருக்கும் வேலை நேரம் என்பது வித்தியாசப்படும். வேலைக்கு ஏற்ப தங்களது வாழ்வியல்முறையை ஆரோக்கியமான வகையில் மாற்றிக்கொண்டால் பிரச்னை வராது.

பொதுவாக இரவு 9 முதல் 11 மணிக்குள் உறங்குவதும். காலை ஐந்து முதல் ஏழு மணிக்குள் எழுவதும்தான் சிறந்தது. அதிகத் தூக்கம் எப்படி ஆபத்தோ, அதுபோல குறைந்த தூக்கமும் ஆபத்தானது. இரவு தாமதமாக உறங்கினாலும் காலையில் அலாரம் வைத்து சீக்கிரமாக எழுந்துவிடுவது தவறு. அனைவருக்கும் ஆறு மணி முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம் என்கிறார் ராமகிருஷ்ணன்.

நாம் அவசியம் நன்றாகத் தூங்கியே ஆக வேண்டும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். நேர மேலாண்மையைச் சரியாகக் கையாளத் தெரியாதவர்கள் தடுமாறுகிறார்கள். நண்பர்களுக்கு, மொபைலுக்கு, டி.வி-க்கு என நேரம் ஒதுக்குவதில் தவறு இல்லை. உங்கள் உடலுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.

லைட்ஸ் ஆஃப் ப்ளீஸ்!

நைட் ஷிஃப்ட் - கவனிக்க

பி.பி.ஓ மட்டுமின்றி, பல்வேறு துறைகளிலும் 24 மணி நேரம் இயங்கும் அலுவலகங்கள் இருக்கின்றன. நைட் ஷிஃப்ட் வேலைக்குச் செல்லும் பலருக்கு, தூக்கம் மிகப் பெரிய பிரச்னை. இவர்கள் வாழ்வியல்முறையை மாற்றிக்கொள்வது அவசியம். உங்களின் உலகம் வேறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு இரவு என்பது உங்களுக்கு காலை நேரம்; மற்றவர்களுக்கு நள்ளிரவு என்பது உங்களுக்கு பகல்; மற்றவர்களுக்கு காலை என்பது உங்களுக்கு மாலை; மற்றவர்களுக்கு பகல் என்பது உங்களுக்கு இரவு. இந்தச் சுழற்சியைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப உணவு சாப்பிடும் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். மாலை வேலைக்குச் செல்லும்போது வழக்கமாக காலை சாப்பிடும் உணவுகளையும், அலுவலகத்தில் நள்ளிரவு உணவு இடைவேளையில் வழக்கமாக மதியம் சாப்பிடும் லன்ச் உணவுகளைச் சாப்பிட வேண்டும். காலை நேரத்தில் வீட்டுக்கு வந்தவுடன் காபி, டீ போன்றவற்றைத் தவிர்த்து இரவு சாப்பிடும் உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு, படுக்கையறைக்குச் சென்று ஜன்னல்களைப் பூட்டி, அறையில் சூரிய வெளிச்சம் வருவதைத் தடுத்து, அறையை இருட்டாக்கி உறங்கி, மதியத்துக்கு மேல் எழ வேண்டும். வாழ்வியல்முறைகளை மாற்றியும் பலன் இல்லை எனில், இரவு வேலையைத் தவிர்ப்பதுதான் சிறந்த வழி!

பகல் தூக்கம் தவறா? 

இரவுத் தூக்கம் போதுமான அளவில் இல்லாத பலரும், காலையில் தாமதமாக எழுவார்கள். அவர்களில் அநேகர், காலை உணவைத் தவிர்த்துவிடுகிறார்கள். விளைவு, மதிய உணவை வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு தூங்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இது தவறு. காலையில் ஆறு, ஏழு மணிக்கெல்லாம் எழுந்து வேலைக்குச் சென்று மிகுந்த உடல் உழைப்பு செய்பவர்களுக்கு மதியம் கொஞ்சம் நேரம் ஓய்வு தேவைப்படும். ஆனால், வேண்டும் என்றே இரவுத் தூக்கத்தைத் தாமதப்படுத்திவிட்டு, உடல் உழைப்பும் இன்றி தினமும் மதியம் தூக்கம்போட்டால் உடல்பருமன்தான் மிஞ்சும்.  

இது மல்லையாக்களின் தேசம்!


- vikatan post

இது மல்லையாக்களின் தேசம்!

காட்சி - 1


தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாயி பாலன்,  2011-ம் ஆண்டில் ஒரு தனியார் வங்கியிடம் இருந்து 3.8 லட்ச ரூபாய் கடன் வாங்கி டிராக்டர் வாங்கினார். கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தியும் வந்தார். இதுவரை 4.11 லட்ச ரூபாய் திரும்பக் கட்டியிருந்தாலும் இன்னும் 1.30 லட்ச ரூபாய் மீதம் இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாகப் பணமுடை. அதனால் பணத்தைக் கட்ட இயலவில்லை. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென போலீஸுடன் ஊருக்குள் நுழைந்த தனியார் வங்கியைச் சேர்ந்தவர்கள், விவசாயி பாலனை வழிமறித்து கடன் தொகையைக் கேட்டுத் தகராறு செய்துள்ளனர். `இப்படி திடுதிப்புன்னு வந்து நின்னா எப்படிங்க?’ என அவர் கேட்க, எதிர்பாராதவிதமாக அவரை நடுரோட்டில் வைத்து ஊரார் பார்க்க அடித்து இழுத்துச் சென்றது போலீஸ். அவருடைய டிராக்டரையும் பறிமுதல்செய்து எடுத்துச் சென்றனர். 

காட்சி - 2 

டிசம்பர் 18-ம் தேதி, தன் 60-வது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடினார் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் விஜய் மல்லையா. இதற்காக மூன்று நாட்கள் கோவாவில் பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக வெளிநாட்டில் இருந்து பல இசைக் கலைஞர்களும் நடன மங்கைகளும் வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்தியாவின் டாப் அரசியல்வாதிகளும் மீடியா பிரபலங்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி நடந்த அதே நேரத்தில்தான், ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை ஏமாற்றிய ‘டிஃபால்ட்டர்’ என விஜய் மல்லையாவை அறிவித்திருந்தது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. ஆனால், அதைப் பற்றி அவர் அலட்டிக்கொள்ள வில்லை. கடந்து மூன்று மாதங்களாக அவர் இந்தியாவில் இருந்தபோதிலும், அவரை யாரும் நெருங்கக்கூட முடியவில்லை. இப்போது `அவர் அப்பவே லண்டனுக்குப் போயிட்டாரே?’ எனக் கையை விரிக்கிறது சி.பி.ஐ.
காட்சி - 3

மார்ச் 2015-ம் ஆண்டுடன் முடிந்த நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள்,  52,242 கோடி ரூபாய் வாராக் கடனை கணக்கில் இருந்து நீக்கியுள்ளன. அதாவது இந்தக் கடன் இனிமேல் வரவே வராது என்று அர்த்தம். இதில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பங்கு மட்டும் 21,313 கோடி ரூபாய். 6,587 கோடி ரூபாய் வாராக் கடனுடன் பஞ்சாப் நேஷனல் வங்கி அடுத்த இடத்திலும், 3,131 கோடி ரூபாயுடன் ஐ.ஓ.பி வங்கி அடுத்த இடத்திலும் இருக்கின்றன. 100 கோடிக்கு மேல் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத `மாபெரும் கடன்கார ஏழை(?)களின்’ பட்டியலை ஆர்.பி.ஐ-யிடம் கேட்டபோது ‘எங்களிடம் அந்தத் தகவல் இல்லை’ என்று சொல்லி கைவிரித்திருக்கிறது. 

இந்த மூன்று காட்சிகளுக்கு ஒரு தொடர்பும் நீதியும் இருக்கின்றன. தொடர்பு - இந்தியாவில் நிறையப் பேர் கடன் வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார்கள். நீதி - கோடிக்கணக்கில் கடன் வாங்கினால் உல்லாசமாக இருக்கலாம்; 

லட்சக்கணக்கில் கடன் வாங்கினால் அடிபட்டுச் சாகவேண்டியிருக்கும்.  

விஜய் மல்லையா... இன்று நேற்று அல்ல. அவரது ஆரம்பமே நிதி நிறுவன மோசடிதான். 1990-களில் மெக்டோவல் க்ரஸ்ட் ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தைத் தொடங்கினார் மல்லையா. பொதுத்துறை வங்கிகளைவிட அதிக வட்டி தருவதாகக் கூறி நிதி வசூல் செய்தார். அதில் கிடைத்த பணத்தைக் கொண்டுதான் தனது சாராய கம்பெனியான யுனைட்டெட் பிரீவரிஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். பிறகு, முந்தைய மெக்டோவல் நிறுவனத்தின் பெயரை மாற்றி கோல்மால் செய்ய... அது பிரச்னையாகி, மல்லையா மஞ்சள் நோட்டீஸ் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அந்த வழக்கு இப்போது வரை நடைபெற்றுவருகிறது. 

அதன் பிறகு ஏராளமான வங்கிகளில் வகைதொகை இல்லாமல் கடன் வாங்கியிருக்கும் மல்லையா, மொத்தம் 17 பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 7,000 கோடி ரூபாய் கடனாகப் பெற்றிருக்கிறார். அது வட்டியுடன் சேர்த்து சுமார் 9,000 கோடி ரூபாயைத் தொடுகிறது. இந்தப் பிரமாண்டமான தொகையை அவர் இப்போது அல்ல... 2012-ம் ஆண்டில் இருந்தே திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்துவருகிறார். அவரிடம் இருந்து கடன் தொகையை மீட்பதற்காக, மல்லையாவுக்கு கடன் வழங்கிய வங்கி அதிகாரிகள் ஒன்றிணைந்து மும்பையில் ஒரு கூட்டம் நடத்தினார்கள். 2012-ம் ஆண்டில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு மல்லையாவும் அழைக்கப் பட்டிருந்தார்.  ஆனால் அவர், தான் வெளிநாட்டில் இருப்பதாகவும், வருவதற்கு நேரம் இல்லை என்றும் கூறி, வரவே இல்லை. இவ்வளவுதான் அவர் வங்கிகளை மதிக்கும் லட்சணம்.
அவர் மோசடிக்காரர் என அறிவித்த வங்கிகள், கடனை வாங்கிவிட பின்னால் அலையோ அலை என அலைந்துகொண்டிருக்கிற இந்த நிலைமையில்கூட விஜய் மல்லையா ராஜ்ய சபா எம்.பி-யாக இருக்கிறார். வங்கிப் பிரச்னை உச்சத்தில் இருந்த மார்ச் 1-ம் தேதிகூட அவர் நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தார். ஆனால் `மார்ச் 2-ம் தேதி வெளிநாட்டுக்குப் பறந்துவிட்டார்' எனச் சொல்கிறது சி.பி.ஐ.  
நீதிமன்றமும் வங்கிகளும் அவரிடம் இருந்து கடனை வசூலிக்க தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருந்த வேளையில் மல்லையா என்ன செய்துகொண்டிருந்தார் தெரியுமா? பல கோடி ரூபாய்க்கு குதிரை வாங்கினார். ஐ.பி.எல் போட்டிகளுக்காக கிரிக்கெட் வீரர்களை ஏலம் எடுத்துக்கொண்டிருந்தார். கோவா கடற்கரையில் பார்ட்டி நடத்திக்கொண்டிருந்தார். கிங்ஃபிஷர் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் தங்களுக்கு வரவேண்டிய சம்பளத்தைக் கேட்டுப் போராடிக்கொண்டிருந்தபோது அவர் லட்சத் தீவுகளில் ஒரு தீவை வாங்கி, அதில் சொகுசு பங்களா கட்டி திறப்பு விழா நடத்தினார். நம் அரசு அமைதியாக அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. மல்லையா வாழும் இதே நாட்டில்தான் கடன் தொல்லை காரணமாக 2014-ம் ஆண்டில் 6,710 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார்கள். (தேசிய குற்ற ஆவணக் காப்பக ஆய்வறிக்கை-2014).

நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்த கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு ஏன் இத்தனை கோடிகள் கடனாகக் கொட்டித் தரப்பட்டது? பதில் இல்லை. மூடப்பட்ட நிறுவனத்தின் கடனை ஏன் இதுவரை வசூலிக்கவில்லை? பதில் இல்லை. மல்லையா மீது ஏன் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை, ஏன் அவர் கைதுசெய்யப்படவில்லை? பதில் இல்லை. இது ஒரே ஒரு மல்லையாவின் கதை அல்ல. இந்தியாவில் இதுபோல் ஆயிரம் மல்லையாக்கள் அப்பாவி மக்களின் பணத்தை ஆட்டையைப் போட்டுவிட்டு அர்த்தராத்திரி பார்ட்டிகளில் பிஸியாக இருக்கிறார்கள். 

இவர்களில் பலரும் நாடாளுமன்ற இன்னாள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. லகடபடி ராஜகோபால்... விசாகப்பட்டினம் முன்னாள் எம்.பி-யான  இவர்தான் இந்தியாவின் மிகப் பெரிய கடன்காரர். இவர் நம்முடைய வங்கிகளுக்கு திருப்பிச்செலுத்த வேண்டிய தொகை 34 ஆயிரம் கோடி ரூபாய். பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இருக்கிறார் ஒய்.எஸ்.சௌத்ரி (அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்). இவர் தற்போது மொரீஷியஸ் வங்கி ஒன்றில் 106 கோடி கடன் வாங்கி ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியவர்களில் 73 சதவிகிதம் பேர் இதுவரை திருப்பி அடைக்கவில்லை.  

வீட்டுக்கடன் கட்டுகிறவர்களுக்குத் தெரியும், திருப்பிச் செலுத்தாத மூன்றாவது தவணை என்பது மரண தண்டனைக்கு ஒப்பானது. 91-வது நாளில் இருந்து உளவியல் தண்டனைகள் தொடங்கும். 121-வது நாளில் உங்கள் வீட்டு வாசலில் கும்பல் கும்பலாக வங்கி ஆட்கள் வந்து நிற்பார்கள். 

151-வது நாளில் மிரட்டல்கள் வரும். உங்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்து மானத்தை வாங்குவார்கள். இவை எல்லாம் சாதாரண நடுத்தர வர்க்கத்துக்கு. ஆனால் மல்லையா போன்றோர் 9,000 கோடி கடன் இருந்தாலும் அதைப் பற்றி கவலையே படுவது இல்லை. ஏனெனில், மல்லையாக்களைக் காப்பாற்ற எப்போதும் மீட்பர்கள் இருக்கிறார்கள். அவர்களே அதிகார மையங்களின் தரகர்களாகவும் இருக்கிறார்கள்!