Thursday, March 13, 2014

மோசமானவங்கள்ல முக்கியமானவங்க! தமிழக எம்.பி-க்களின் ரேங்க் கார்டு- எம்.பரக்கத் அலி

பார்லிமென்டின் 'ஃபேர்வெல் டே’ முடிந்துவிட்டது. புதிய எம்.பி-க்களைத் தேர்ந்தெடுக்கத் தயாராகிவிட்டார்கள் வாக்காளர்கள். எம்.பி-க்களில் பலர், வாக்காளர்களின் வாசல்களைத் தேடி மீண்டும் வரலாம். தமிழகம், புதுச்சேரியில் இருந்து போன 40 பேர், பார்லிமென்ட் பள்ளியில் சாதித்தார்களா... சறுக்கினார்களா..? எம்.பி-க்களின் 'ரேங்க் கார்டு’ என்ன?
வருகைப் பதிவேட்டில் இருந்து ஆரம்பிப்போம்!
2009-ம் ஆண்டில் இருந்து 2014 வரை நாடாளுமன்றத்தில் 15 கூட்டத்தொடர்கள் நடந்திருக்கின்றன. மொத்தமாக 350 நாட்கள். அதிக நாட்கள் அவைக்கு வந்த எம்.பி-க்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராமசுப்புவுக்கு முதல் இடம். மொத்தம் 341 நாட்கள் வந்து 97 சதவிகித அட்டென்டண்ஸ் வைத்திருக்கிறார். இரண்டாம் இடத்தில் சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த லிங்கம். மூன்றாவது இடத்தில் தி.மு.க-வைச் சேர்ந்த டி.கே.எஸ். இளங்கோவன்.  
அதிகம் மட்டம் போட்ட எம்.பி-க்களில் முதல் இடம், ராமநாதபுரம் தி.மு.க. எம்.பி., நடிகர் ரித்தீஷுக்குதான். தமிழக எம்.பி-க்களின் வருகைப் பதிவில் இவருக்கே கடைசி இடம். 350 நாட்களில் 135 நாட்கள் மட்டுமே அவைக்கு வந்திருக்கிறார். ரித்தீஷ§க்கு முந்தைய இடத்தில் விடுதலைச்சிறுத்தைகள் தொல். திருமாவளவன் இருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் உள்ள வருகைப் பதிவேட்டில் அமைச்சர்கள் கையெழுத்துப் போடும் மரபு இல்லை. இதனால் தமிழகம், புதுவையைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், நாராயணசாமி ஆகியோரின் வருகைப் பதிவுகளைக் கணக்கிட முடியவில்லை. ஆ.ராசா 2010 நவம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு ஸ்பெக்ட்ரம் வழக்கில் அவர் கைதுசெய்யப்பட்டு, 15 மாதங்கள் சிறையில் அடைக்கப் பட்டார். இந்தக் காலகட்டத்தில் ராசா நாடாளுமன்றத்தில் பங்கேற்கவில்லை. 2012 மே மாதம் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டப் பிறகு நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை ஈழ விவகாரத்துக்காக 2013 மார்ச் மாதம் தி.மு.க. வாபஸ் வாங்கியதைத் தொடர்ந்து தி.மு.க-வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஐந்து பேர் ராஜினாமா செய்தார்கள். அதன் பிறகு நடந்த கூட்டத்தொடரில் பழனிமாணிக்கம் 18 நாட்களும் காந்தி செல்வன் 32 நாட்களும் அவைக்கு வந்திருக்கிறார்கள். ஜெகத்ரட்சகன் 11 நாட்கள், மு.க.அழகிரியும் நெப்போலியனும் இரண்டே இரண்டு நாட்கள் அவைக்கு வந்திருக்கிறார்கள்.
விவாதம், சிறப்புக் கவன ஈர்ப்பு, கேள்விகள், துணைக் கேள்விகள், அரசினர் மசோதாவில் விவாதம், தனிநபர் மசோதா, தனிநபர் தீர்மானம்... என நாடாளுமன்றத்தில் ஸ்கோர் செய்ய இப்படி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த சப்ஜெக்ட்டில் தேறியவர்கள் ஒருசிலர்தான்.
இப்படி நாடாளுமன்றச் செயல்பாடுகளின் பல்வேறு அம்சங்களை அடிப்படையாக வைத்து எம்.பி-க்களின் செயல்பாடுகளை அலசுவோம்.
அமைச்சர்களாக இருந்தவர்களைத் தவிர மற்றவர்களை எடை போட்டபோது, முதல் ரேங்க், திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராமசுப்புவுக்கு. இரண்டாவது ரேங்க்கில் சுகவனம் (தி.மு.க.), மூன்றாவது ரேங்க்கில் தாமரைச் செல்வன் (தி.மு.க.) இருக்கிறார்கள். நான்காவது, ஐந்தாவது இடங்களில் செம்மலை (அ.தி.மு.க.), சிவசாமி (அ.தி.மு.க.) உள்ளனர். பார்லிமென்ட் கிளாஸில் கடைசி இடம் டி.வேணுகோபால் (தி.மு.க.). அதற்கு முந்தைய இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தொல். திருமாவளவன் இருக்கிறார்.
கட்சிவாரியாக அலசினால் தி.மு.க. எம்.பி-க்களில் முதல் இடம் சுகவனத்துக்கும், கடைசி இடம் டி.வேணுகோபாலுக்கும் போகும். அ.தி.மு.க. எம்.பி-க்களில் செம்மலைக்கு முதல் இடம். கடைசி இடம் ஓ.எஸ்.மணியன். ஆனால், இந்த இரண்டு பேருக்குமே ஜெயலலிதா இப்போது சீட் தரவில்லை. காங்கிரஸ் எம்.பி-க்களிலேயே கடைசி இடத்தில் இருக்கிறார் கிருஷ்ணசாமி. முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரான இவர், அன்புமணியின் மாமனார்!
கேள்விகள் எழுப்புவது, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவது போன்ற சில சம்பிரதாயங்கள் அமைச்சர்களுக்குக் கிடையாது. அதன் அடிப்படையில் தமிழக அமைச்சர்களாக இருந்து பதவியை ராஜினாமா செய்தவர்களையும், இப்போது அமைச்சர்களாக இருப்பவர்களையும் மதிப்பிட்டபோது அதில் முதல் இடம் பிடித்தவர்... '15 நாள் புகழ்’ நாராயணசாமி. அடுத்தடுத்த இடங்களில் ப.சிதம்பரம், பழனிமாணிக்கம், காந்தி செல்வன் வருகிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இந்த ரிப்போர்ட்டில் கடைசி இடம் 'அஞ்சாநெஞ்சன்’ அழகிரிக்கு. எந்தப் பிரிவிலும் அவர் மார்க் வாங்காமல் சைபர் மேல் சைபர்களாகக் குவித்திருக்கிறார்.
ஒவ்வொரு எம்.பி-க்கும் தொகுதியின் வளர்ச்சிக்காக 'தொகுதி மேம்பாட்டு நிதி’ என ஆண்டுக்கு ஐந்து கோடி வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு 25 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. அந்த நிதியைக்கூட சிலர் முழுமையாகப் பயன்படுத்தவில்லை. இந்த நிதியை 100 சதவிகிதம் பயன்படுத்தியவர்களில் முதல் இடத்தில் இருக்கிறார் ஆதிசங்கர். இரண்டாவது இடத்தில் மு.க.அழகிரியும், மூன்றாவது இடத்தில் குமாரும் இருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் ஆங்கிலம், இந்தி மொழிகளில் பேச விரும்பாத 'அமைச்சர்’ அழகிரி, 'தமிழிலேயே பேசட்டும்’ என சபாநாயகர் மீரா குமார் சொல்லியும் கண்டுகொள்ளவில்லை. ரித்தீஷ், நெப்போலியன், கே.பி.ராமலிங்கம் இவர்கள் அழகிரியோடு புடைசூழ அரிதாக நாடாளுமன்றத்துக்கு வருவார் அழகிரி. அமர்வார்; சில நிமிடங்களில் கிளம்பிவிடுவார். மற்ற எந்த வட இந்திய எம்.பி-க்களுடனும் பேச மாட்டார். ஆனால், ஆச்சரியமாக, பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கிஷார் சந்திரா தேவ் என்பவரிடம் சகஜமாக உரையாடுவார் அழகிரி. அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றாலும், அழகிரியின் பள்ளித் தோழன். கோபாலபுரத்தில் ஒன்றாக கிரிகெட் விளையாடியவர்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புண்ணியத்தில் எம்.பி.-யான ஆரூண், சித்தன், கிருஷ்ணசாமி, விஸ்வநாதன், மாணிக் தாகூர் ஆகியோர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவுமே செய்யவில்லை.  பாராளுமன்ற ஊழியர்களால் அதிக சலாம் அடிக்கப்பட்ட எம்.பி. ஆரூண். பீடியைப் போல கரன்சிகளை பாக்கெட்டில் சுருட்டி வைத்திருப்பார். அதைத் தாராளமாக ஏராளமாக ஊழியர்களுக்கு வழங்குவார். அதனால் அவருக்கு ஸ்பெஷல் சலாம்!
அ.தி.மு.க. எம்.பி-க்களில் தம்பிதுரைதான் 'நாடாளுமன்றத்தின் ஜெயலலிதா’! அவரை மீறி அங்கே யாரும் பெர்ஃபார்மன்ஸ் செய்துவிட முடியாது. அ.தி.மு.க. உறுப்பினர்கள் எது பேசுவதாக இருந்தாலும் அவர் அனுமதி பெற்ற பிறகே பேச முடியும்.
தமிழக எம்.பி-க்களில் மத்திய அமைச்சர்களாகப் பணிபுரிந்தவர்களுள் தங்கள் துறை மூலம் கிள்ளுக்கீரை நன்மைகூட செய்யாதவர்களில் முன்னிலையில் இருப்பவர்கள் ஜெகத்ரட்சகன்,  நெப்போலியன், பழனிமாணிக்கம், காந்திசெல்வன் ஆகியோர். ப.சிதம்பரம் தனது சிவகங்கை தொகுதிக்கு நிறைய வங்கிக் கிளைகளையும், ஏ.டி.எம். சென்டர்களையும் கொண்டுவந்தார். சோனியாவை ஒரு முறையும், மன்மோகன் சிங்கை இரண்டு முறையும் தொகுதிக்கு அழைத்துவந்தார். திருமயத்தில் பாய்லர் ஆலை குழாய்கள் பிரிவை பிரதமரை வைத்து திறந்துவைத்தார்.    
ஆக மொத்தத்தில், 'சிறப்பாகச் செயல்பட்டவர்கள்’ என்று தமிழக எம்.பி-க்களில் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. 'மோசமானவங்கள்ல முக்கியமானவங்க’ என்ற ரீதியில்தான் 40 எம்.பி-க்களின் சொற்ப சாதனைகளை பூதக்கண்ணாடி வைத்து தேட வேண்டியிருக்கிறது. பிறகு, இந்தியா எப்படி வல்லரசு ஆகும்?

- Vikatan

Tuesday, March 11, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 29

'இந்திராவே இந்தியா; இந்தியாவே இந்திரா’ - என்ற ஆணவ முழக்கத்தின் காரணமாக இந்தியாவே இந்திராவின் பண்ணை வீடாக மாற்றப்பட்டு, பழக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இனி இந்தியாவில் தேர்தல் நடக்குமா, ஜனநாயகம் தழைக்குமா, நாடாளுமன்றத்தில் கருத்துரிமை கேட்குமா, எதிர்க்கட்சிகள் என்ற ஒன்றே இருக்குமா என்ற சந்தேகக் கேள்விகள் வரிசையாக எழுந்துநின்று அனைத்துக்குமே இல்லை என்ற பதிலே கிடைத்துக்கொண்டிருந்த நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

இப்போது தேர்தல் வைத்தாலும் காங்கிரஸ் கட்சிதான் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்ற உளவுத் துறையின் அறிக்கையை அப்படியே நம்பியோ, இதற்குமேல் அவசரநிலையை நீட்டித்தால் சஞ்சய் காந்தியின் சகாக்களால், தானே மீள முடியாத புதைக்குழிக்குள் தள்ளப்படுவோம் என்ற பயத்தினாலோ இந்திரா தேர்தல் தேதியை அறிவித்திருக்கலாம்!
எப்படிப் பார்த்தாலும் அது துணிச்சலான முடிவே. இந்திராவுக்குள் இருந்த நேருவின் மகள் என்ற ரத்தம் இன்னும் வற்றிப் போய்விடவில்லை என்பதை வெளிச்சப்படுத்தியது அந்த காரியம். இதைத்தான் சோஷலிஸத் தலைவர் மதுலிமாயி சொன்னார்.
''1977-ல் இந்திரா தேர்தலை நடத்த முன்வந்ததற்குக் காரணம் அவருடைய ஆழ் மனத்தில் பதிந்திருந்த உண்மையான சொரூபம்தான். தவறான காரண காரியங்கள் முடிவுக்கு வந்ததற்கு அதீத சுயமதிப்பீடு போன்ற காரணங்கள் இருந்தாலும், எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் பங்கேற்புடைய ஜனநாயக நெறியின் மேன்மையின்பால் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையும் அரசியலமைப்பு விதித்த முறைப்படித்தான் ஆட்சியில் தொடரவேண்டுமென்ற நாட்டமும்தான் தேர்தலை நடத்தக் காரணமாயின. தான் ஜவஹர்லால் நேருவின் மகள் என்பதையும் எங்களைப்போலவே மகாத்மா காந்தியின் தலைமையில் நடந்த சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் குழந்தை என்பதையும் இந்திரா ஒருபோதும் மறந்திருக்க மாட்டார்'' என்று இந்திராவால் 19 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்ட மதுலிமாயி சொன்னார். உண்மைக் காரணம் இதுதான். இந்தியாவுக்கு ஜனநாயக ஆட்சி முறையே பொறுத்தமானது. மிகப் பெரிய ஆட்டத்தை ஆடி... அது தன்னால் அடக்க முடியாத நிலைக்கு போகப்போவதுவரை தெரிந்து... அதன்பின் இறங்கிவர வேண்டியிருந்தது.
1977-ன் ஆரம்பம் இந்தியாவுக்கு நல்லபடியாக இருந்தது. 75, 76-ம் ஆண்டுகள் மிக மோசமானவையாகக் கழிந்தன.
''18 மாதங்களுக்கு முன்பு நாடு மிகப் பெரும் ஆபத்தில் இருந்தது. மிக மோசமான நிலைமையில் நாடு இருந்ததால்தான் அவசரநிலை கொண்டுவரப்பட்டது. இப்போது நாடு பாதுகாக்கப்பட்டுவிட்டது. இனி நாம் தேர்தலை எதிர்கொள்வோம்'' என்று 1977 ஜனவரி மாதம் வானொலியில் இந்திரா பேசினார். நாட்டுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆபத்து அவரது பதவிக்கு வந்தது. எமர்ஜென்சியை அறிவிக்காமல் இருந்திருந்தால் அவர் பதவி விலகி இருக்க வேண்டும். இன்னொருவரையோ, சஞ்சய் காந்தியையோ கொண்டுவந்திருக்கலாம். அடுத்து ஒரு தொகுதியில் போட்டியிட்டு அவரே வென்று மீண்டும் பிரதமர் ஆகி இருக்க முடியும். ஆனால், இந்த மாற்று ஏற்பாடுகள் எதையும் ஏற்க மறுத்ததால்தான் அவசரநிலையை அமல்படுத்தி இந்திய அரசியலில் மாபெரும் அவமானத்தை சந்திக்கும் நிலைக்கு இந்திரா தள்ளப்பட்டார்.
தேர்தல் நடத்த இருப்பதாக அவர் அறிவித்த ஜனவரி 18-ம் தேதிதான், இந்திரா பிரதமராகப் பதவியேற்ற 11-வது ஆண்டின் தொடக்கம். இந்திரா மனம் மாறுவதற்கும், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒற்றுமைப்படுவதற்கும் இந்த ஒன்றரை ஆண்டுகள் பயன்பட்டன என்று சொல்லலாம். தேர்தல் தேதியை இந்திரா அறிவித்த அன்றே சோனா டாக் பங்களா தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மொரார்ஜி தேசாய் விடுதலையானார். தனிமைச் சிறையில் இருந்தாலும் இந்திராவை எதிர்க்க தலைவர்கள் ஒன்று சேர்க்கும் முடிவை எடுத்துவிட்டார்கள். ஜனவரி 19 அன்று மொரார்ஜி தேசாயின் டெல்லி வீட்டில் தலைவர்கள் ஒன்றுகூடினார்கள்.
மொரார்ஜியின் கட்சியான காங்கிரஸ் (ஓ), சோஷலிஸ்ட் கட்சி, ஜனசங்கம், பாரதிய லோக் தளம் ஆகிய நான்கு கட்சித் தலைவர்களின் கூட்டம் அது. இவர்கள் அனைவரும் ஒரே கட்சியின் பெயரால், ஒரே சின்னத்தில் போட்டியிடப்போவதாக அறிவித்தார்கள். அந்தக் கட்சிக்கு 'ஜனதா கட்சி’ என்று பெயர் சூட்டப்பட்டது. ஜனவரி 23-ம் தேதி அன்று முறைப்படியான அறிவிப்பை ஜெயப்பிரகாஷ் நாராயண் செய்தார். ஜனதா கட்சி, இந்திராவுடன் இருந்தவர்களுக்கே அச்சத்தை ஏற்படுத்தியது. 1975-ல் அவசரநிலைப் பிரகடனத் தீர்மானத்தை மக்களவையில் கொண்டுவந்து முன்மொழிந்த ஜெகஜீவன் ராம் மனதையே அது கரைத்தது. தனது நண்பர்களான பகுகுணா, நந்தினி சத்பதியுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிப்ரவரி 1-ம் தேதி 'விலகிய ஜெகஜீவன் ராம், ஜனநாயக காங்கிரஸ் என்ற புதிய கட்சியை உருவாக்கி, அது ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று அறிவித்தார். ''அவருடைய பதவி விலகல் காங்கிரஸுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் பாபுஜி அரசியல் சாமர்த்தியத்துக்குப் பெயர் போனவர். அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகத் தீர்மானித்தது அந்தக் கப்பல் மூழ்கிக்கொண்டிருப்பதன் அடையாளமாக இல்லாவிட்டாலும் குறைந்தது மிக மோசமாக ஓட்டையாகி ஒழுகிக்கொண்டிருப்பதைக் குறித்தது'' என்று எழுதுகிறார் ராமச்சந்திர குஹா.
1977 மார்ச் 16 முதல் 20 வரை மக்களவைத் தேர்தலுக்கான தேதி குறிக்கப்பட்டது. எமர்ஜென்சியை அகற்றி இந்திராவை விரைவில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என, தனிமைச் சிறையில் இருந்தபடி சபதம் போட்ட ஜெயப்பிரகாஷ் நாராயண் உடல்நலம் அளவுக்கதிகமாக குன்றிப்போயிருந்தது. ஆனால், 'நடப்பது கடைசி யுத்தம், இதிலும் களத்தில் இருப்பேன்’ என்று அறிவித்தபடி நகரம் நகரமாகப் போய் பேசிக்கொண்டு இருந்தார். ''காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதுதான் கடைசியான சுதந்திரத் தேர்தலாக இருக்கும். அப்படியானால் 19 மாத சர்வாதிகாரம் என்பது 19 ஆண்டு பயங்கரவாதமாகிவிடும்'' என்று பம்பாயிலும் பாட்னாவிலும் பயமுறுத்திக்கொண்டு இருந்தார் ஜே.பி. இந்தியாவுக்குத் தன்னால் ஆன வளார்ச்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார் இந்திரா.
மார்ச் 6-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவே இந்திராவுக்கு எதிராக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்கான பேரணி அது. அதே நாளில் பிரபலமான இந்தி காதல் படமான 'பாபி’யை ரிலீஸ் செய்து கூட்டத்தை கலைக்கப் பார்க்கிறார்கள் என்று செய்தி பரவியதாகவும், அதையும் மீறி பேரணிக்கு கூட்டம் வந்ததாகவும் ஒரு தகவல் சொல்கிறது. பேரணிக்கு வருபவர்களைக்கூட தடுக்க முடிந்திருக்கலாம். ஆனால் மக்களை..?
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது ரேபரேலி தொகுதியில் சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தனது பழைய போட்டியாளர் ராஜ்நாராயணிடம் இந்திரா தோற்றுப்போனதாக அறிவிக்கப்பட்டது. அதற்குப் பக்கத்துத் தொகுதியான அமேதியில் அரசியல் அனுபவம் இல்லாத கல்லூரி மாணவன் ரவீந்திர சிங்கிடம் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சஞ்சய் காந்தி தோல்வியைத் தழுவினார். எமர்ஜென்சியின் கதாநாயகர்களான வி.சி.சுக்லா ராய்பூரிலும், பன்சிலால் பிவானியிலும், ஸ்வரண் சிங் ஜலந்தரிலும் தோற்றுப்போனார்கள்.
மொத்தமுள்ள 542 இடங்களில் ஜனதாவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 330 இடங்களைப் பிடித்தன. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமே 154 தொகுதிகளே கிடைத்தன. இந்த 154-ல் 92 இடங்கள் தென் மாநிலங்களில் இருந்து கிடைத்தன. தமிழகம் 14, ஆந்திரா 41, கர்நாடகா 26, கேரளா 11 என காங்கிரஸுக்கு வாரி வழங்கியது. வட மாநிலங்கள் அனைத்துமே இந்திராவுக்கு மிகப் பெரிய சரிவை ஏற்படுத்தியது.
தான் தோற்றுவிடக் கூடும் என்பது மார்ச் 19 மாலை 4 மணிக்கு இந்திராவுக்குத் தெரியவந்தது. தனது செயலாளர் ஆர்.கே.தவானிடம், ''ரேபரேலிக்கு போன் செய்து சரியான தகவல் என்ன என்று கேளுங்கள்'' என்று உறுதிப்படுத்தினார். அப்போது இந்திராவின் தோழியான பூபுல் ஜெயகர் பரிதவித்து ஓடிவந்தார்.
'உனக்கா இந்து... இப்படி நடக்க வேண்டும்?’ என்று பதறினார் பூபுல் ஜெயகர். 'இதெல்லாம் சகஜம் பூபுல், நடக்கக் கூடியதுதான்’- சாதாரணமாக பதிலளித்தார் இந்திரா. இரவு நேரம் ஆகியது. அனைவரையும் சாப்பிட அழைத்துச் சென்றார் சோனியா. யாருக்கும் சாப்பிட மனமில்லை. ஆனால், இந்திரா மட்டும் கவலைப்படாமல் சாப்பிட்டார். இரவு 10.30-க்கு அமைச்சரவையை இந்திரா கூட்டினார். 11 மணிக்கு சஞ்சய் வந்து சேர்ந்தார். அம்மாவைப் பார்த்ததும், 'நடக்கக் கூடாதது நடந்துவிட்டது’ என்று புலம்பினார். அவரை அமைதிப்படுத்திவிட்டு நள்ளிரவு 2 மணி வரை அதிகாரிகளோடு பேசிக்கொண்டு இருந்தார் இந்திரா. 2 மணிக்கு தூங்கி 4 மணிக்கு எழுந்தார். உடனடியாக உத்தரவு போட்டார். 'இந்த வீட்டை உடனடியாக காலிசெய்தாக வேண்டும்’ என்று எண் 1 ஸபதர்ஜஸ் சாலை வீட்டில் இருந்த பொருட்கள் 6.30 மணிக்கு கலைக்கப்பட்டன.
''ஜவஹர்லால் நேருவின் மகள், 11 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர், ஆனந்த பவன் என்ற அரண்மனை போன்ற இல்லத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தவர். தங்குவதற்கு தமக்கென்று ஒரு வீடு இல்லாமல் தவிக்கும் நிலைமையை என்னால் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. வாழ்க்கையை வருவதுபோல் ஏற்கும் மனமுள்ளவர் திருமதி காந்தி என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் அவரிடம் ஒரே ஒரு பொருளுக்கு மட்டும் பஞ்சமில்லை. அதுதான் அவர் மன உறுதி'' என்று இந்திரா குடும்பத்துக்கு நெருக்கமான முஹம்மத் யூனுஸ் எழுதியிருக்கிறார்.
அந்த மனஉறுதியை அசைத்துப் பார்த்தது ஜனதா ஆட்சி!


- Vikatan

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 28

நாடாளுமன்றத்தை ரப்பர் ஸ்டாம்ப் ஆக்கி தங்கள் விருப்பங்களை எல்லாம் சட்டமாக உருவாக்கும் தன்னிச்சையான சூழ்நிலை தாண்டவம் ஆடியதுதான் சர்வாதிகாரத்தின் உச்சம். எதுவெல்லாம் தனது செயல்பாடுகளுக்குத் தடையாக இருந்ததோ, அந்தச் சட்டங்களை எல்லாம் பகிரங்கமாகக் கழுத்தை நெரித்துக் கொல்வதற்கு இந்திரா திட்டமிட்டார்.

1. தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அமல்படுத்தப்பட்ட அவசரநிலைப் பிரகடனத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதற்காகத் தாக்கல் செய்தார். அந்தத் தீர்மானத்தை ஜெகஜீவன்ராம் தாக்கல் செய்தார். அந்தத் தீர்மானம் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் விவாதம் இல்லாமல் நிறைவேறியது.
2. அரசு ஊழியர் ஒருவரைத் தேர்தல் ஏஜென்டாக வைத்துக்கொண்டதால்தானே இந்திராவின் வெற்றி செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் அறிவித்தது. அரசு ஊழியர்களைத் தேர்தல் ஏஜென்டாகப் பணியாற்றுவதை அனுமதிக்கும் சட்டத்திருத்த மசோதா அறிமுகம் ஆனது.
3. அமல்படுத்தப்பட்ட அவசரநிலைப் பிரகடனத்தை யாருமே கேள்வி கேட்கக் கூடாது என்று இந்திரா நினைத்தார். அப்படி கேள்வி கேட்கும் உரிமை நீதிமன்றங்களுக்குத்தானே இருந்தது. எனவே, அவசரநிலைப் பிரகடனம் குறித்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை விசாரிக்கும் உரிமையை அரசியலமைப்புச் சட்டத்தின் 38-வது திருத்தம் மூலமாகப் பறித்தார்.
4. தனது பதவியைப் பறிக்கும் செய்கையை யார் செய்தது? நீதிமன்றம்தானே? அவர்களுக்கு அந்த உரிமை இருந்தால்தானே செய்ய முடியும்? அதையே பறித்துவிடலாமே? அதற்கும் ஒரு திருத்தம் அமல் ஆனது.
பிரதமர் மற்றும் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல் வழக்கை உயர் நீதிமன்றம், மற்றும் உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் 39-வது திருத்தம் மாநிலங்களவை, மக்களவையில் நிறைவேறியது.
5. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னால், யாருமே விசாரிக்கக் கூடாது என்று நினைப்பதாகக் கருதிவிடக் கூடாது என்பதற்காக ஒரு பொம்மை குழுவை உருவாக்க நினைத்தார் இந்திரா.
அதாவது பிரதமர், சபாநாயகர் ஆகியோரின் தேர்தல் வழக்குகளை இனி நாடாளுமன்றம் நியமிக்கும் குழு மட்டுமே விசாரிக்கும் என்ற திருத்தமும் கொண்டுவரப்பட்டது. நாடாளுமன்றக் குழு என்றால் தனக்கு வேண்டப்பட்ட யாரை வேண்டுமானாலும் அந்தக் குழுவில் நியமித்து, விசாரணை நாடகத்தை நடத்தி முடித்துக்கொள்ளலாம்.
6. இந்தத் திருத்தங்கள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டம் 9-வது அட்ட வணையின் கீழ் நிறைவேற்றப்பட்டது. 9-வது அட்டவணையின் கீழ் நிறைவேற் றப்படும் எந்தத் திருத்தங்களையும் நீதிமன்றங்கள் விசாரிக்க முடியாது.
7. குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் ஆகிய பதவிகளை வகிக்கிற எவர் மீதும் அவர்கள் பதவி ஏற்பதற்கு முன்போ, பதவி வகிக்கும் போதோ, தனிப்பட்ட முறையிலோ, அதிகாரபூர்வமாகவோ செய்த எந்தக் காரியத்துக்கும் குற்றவியல் வழக்கோ, உரிமையியல் வழக்கோ போட முடியாது என்ற சட்டத்திருத்தம் தயார் ஆனது. அதாவது, குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் ஆகிய மூவரையும் யாராலும் கேள்வி கேட்க முடியாத சூப்பர் பவர் அந்தஸ்துக்குக் கொண்டுபோனது அந்தத் திருத்தம். நல்லவேளை அது நிறைவேறவில்லை.
8. இவ்வளவையும் கேள்வி கேட்க நீதிமன்றங்கள் இருக்கிறதே? அது தேவையா என்ற அபரிமிதமான யோசனையில் உருவானதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் 42-வது திருத்தம். நீதித் துறையின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்ததுடன் நாடாளுமன்றத்துக்கு வரம்பற்ற அதிகாரத்தைத் தூக்கிக் கொடுத்து பிரதமர் எதை நினைத்தாலும் செய்யலாம் என்று அனுமதி வழங்கிய சட்டத்திருத்தம் அது.
நாடாளுமன்றத்துக்கு அடுத்த நிலையில் உச்ச நீதிமன்றத்தைக் கொண்டுபோய் நிறுத்தினார்கள். அன்றைக்கு அதிகார ஆட்டம் ஆடிய ஏ.ஆர்.அந்துலே, '1967-ம் ஆண்டு முதலே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சதித் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்’ என்று நாடாளுமன்றத்திலேயே பேசினார் என்றால் அன்றைய அத்துமீறல்கள், நீதிமன்ற அவதூறுகளின் குவியல்களாக இருந்தன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
அதாவது நாடாளுமன்றத்துக்குள் அடங்கிய ஒரு அமைப்பாக உச்ச நீதிமன்றத்தை மாற்ற இந்தத் திருத்தம் அடித்தளமிட்டது.
9. நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாக மாற்ற வழிவகை செய்யும் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 1976-ல் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வந்திருக்க வேண்டும். 6 ஆண்டுகளாகப் பதவிக்காலம் நீடிக்கப்பட்டதால் 1977-ல் தேர்தல் நடத்தினால் போதும். ஓராண்டு காலம் இன்னும் கூடுதலாக அனுபவிக்கலாம் என்று நினைத்து அதற்கும் ஒரு திருத்தம் கொண்டுவந்தார்கள்.
10. இப்படி தனித்தனியாக சட்டங்கள், சட்டத் திருத்தங்கள், தீர்மானங்கள் கொண்டுவருவதைவிட மொத்தமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கான வேலையில் காங்கிரஸ் கட்சி மும்முரமானது.
உச்ச நீதிமன்றத்தையே ஒரு அரசியல் கட்சியைப் போலப் பாவித்து அவதூறுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தி வந்த அன்றைய காங்கிரஸ் தலைவர் டி.கே.பரூவா, 'நமது அரசியலமைப்புச் சட்டம் குறித்த புதிய பார்வை - சில கருத்துக்கள் என்ற அறிக்கையைத் தயாரித்து அனைத்து நீதிமன்ற பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கும் அனுப்பினார். இந்த அறிக்கையை அவர் எழுதவில்லை... ஏ.ஆர்.அந்துலே எழுதினார் என்ற ரகசியம் பின்னர்தான் அம்பலம் ஆனது. பிரதமர் ஆட்சி முறையைவிட அதிபர் ஆட்சி முறைதான் சரியானது என்று வாதிட்டது இந்த அறிக்கை. கௌஹாத்தியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர ஸ்வரன் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையில் 1975 ஏப்ரல் 3 அன்று காங்கிரஸ் தலைவர் ஓ.கே.பரூவாவிடம் ஸ்வரன்சிங் கொடுத்தார். அதிபர் ஆட்சி முறை என்ற எண்ணத்தை இந்த காங்கிரஸ் குழுவே ஏற்காமல் இருந்ததுதான் இந்தியாவின் அதிர்ஷ்டம். மாறாக, இவர்கள் ஆதரித்து இருந்தால் இந்தியா இன்று ஜனநாயக நாடாகவே இருந்திருக்குமா என்பதே சந்தேகம்.
அதிபர் முறையைக் கொண்டு வரலாம் என்று சஞ்சய் விரும்பியதாகவும் ஆனால், இந்திரா அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் ஒரு தகவல் உண்டு. அதிகாரம் பொருந்தியவராக ஆக இந்திரா நினைத்தார். ஆனால், சஞ்சய் அதிகாரம் பொருந்தியவராக ஆகியேவிட்டார்.
இந்திராவின் பெயரைச் சொல்லி நடந்ததில் பெரும்பாலானவை சஞ்சய் கட்டளைப்படி நடந்தவையே. அடுத்த சில மாற்றங்களில் இந்திரா இடத்தில் அமர சஞ்சய் திட்டமிட்டு இருந்தார். சஞ்சய் பற்றி தன்னிடம் புகார் செய்த ஒருவரிடம், 'நம்மை முந்திக்கொண்டு அவர்கள் சாமர்த்தியசாலிகள் ஆகிவிட்டார்கள்’ என்று இந்திரா கூறினார். நெருக்கடி நிலையை நீடித்துக்கொண்டே போவதுதான் சஞ்சய் நண்பர்களின் ஆலோசனையாக இருந்தது.
அப்போது பிரிட்டனில் இந்தியத் தூதராக இருந்தவர் பி.கே.நேரு. இவர் இந்திரா குடும்பத்தின் உறவினர். இவரிடம் அரசியமைப்புச் சட்ட ஆலோசனையை சஞ்சய் சொல்லி பன்சிலால் கேட்டுள்ளார். 'எங்கள் சகோதரியை வாழ்நாள் முழுக்கவும் இந்தியாவின் அதிபராக்கிவிடுங்கள். அப்புறம் பிரச்னையே இருக்காது’ என்று பன்சிலால் கேட்க, ஆடிப் போனாராம் பி.கே.நேரு. இந்திராவைப் பெரிய புதைகுழிக்குள் அமுக்கப் பார்க்கிறது ஒரு கூட்டம் என்று அலறிய பி.கே.நேரு, தன்னுடைய மனைவி ஃபோரின் நேருவை உடனடியாக இந்திராவைப் பார்க்க அனுப்பி வைத்தார். இந்தச் சந்திப்பு நடந்தபோது இந்திரா அதிக குழப்பமான மனநிலையில் இருந்ததாக எழுதுகிறார்கள்.
'சிக்கலில் இருந்து விடுபட நினைக்கிறார். ஆனால், எப்படி விடுபடுவது என்று தெரியவில்லை. சுற்றிலும் நிறைய சதி நடக்கிறது. அதில் பாதிக்கு மேல் தனக்குத் தெரியாமலேயே நடக்கிறது. புதிய அரசியலமைப்பு சபையை உருவாக்க வேண்டும்’ என்று தனக்குச் சொல்லப்பட்ட ஆலோசனையை இந்திரா நிராகரித்துவிட்டார், ஆனால் புது அரசியலமைப்பு சபையை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் ஆளும் மாநில சட்டசபைகளில் இருந்து தீர்மானம் போட்டு அனுப்புகிறார்கள். இதையெல்லாம் யார் சொல்லிச் செய்கிறார்கள், அவர்களுக்கு உத்தரவிடுவது யார் என்று அவரால் புரிந்து தெளிய முடியவில்லை. இதிலிருந்து விடுபட ஒரே வழிதான் இருக்கிறது என்பதை இந்திரா கண்டுபிடித்தார்.
தேர்தல் நடத்திவிட்டால் என்ன என்பதுதான் அந்த யோசனை. தேர்தல் நடத்தினால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று உளவுத் துறையை விசாரிக்கச் சொன்னார். 1977 நவம்பரில் ஒருநாள் பத்திரிகையாளர் குல்தீப் நய்யாரைச் சந்தித்த உளவுத் துறை அதிகாரி ஒருவர், 'எமர்ஜென்சி விலக்கப்பட இருக்கிறது’ என்று லேசாகக் காதில் சொல்ல... அவர் அதனை தனக்குத் தெரிந்த கமல்நாத்திடம் உறுதிப்படுத்தி... இந்தியன் எக்ஸ்பிரஸில், அவசரநிலை இரண்டு வாரங்களில் விலக்கிக்கொள்ளப்பட்டு தேர்தல் நடத்தப்படும்’ என்று தலைப்புச் செய்தி ஆக்கினார். எக்ஸ்பிரஸ் உரிமையாளர் கோயங்காவால் நம்ப முடியவில்லை. காலையில் நாளிதழ் வெளிவந்தது. அன்றைய செய்தித் துறை அமைச்சர் வி.சி.சுக்லா இதைப் பார்த்து கோபமாகி, 'குல்தீப் நய்யார் விரைவில் கைது செய்யப்படுவார் என்பதை அவருக்குச் சொல்லுங்கள்’ என்று கத்தினார்.
எடுத்த முடிவில் இந்திரா உறுதியாக இருந்தார். தேர்தல் தேதியை அறிவித்தார்.

- Vikatan

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 27

ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து, எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்து, பத்திரிகைகளை முடக்கி, சிறைகளைச் சித்ரவதைக் கூடங்களாக மாற்றி, யாரெல்லாம் காங்கிரஸ் நடவடிக்கைகளை எதிர்த்தார்களோ அவர்களை எல்லாம் முடக்கிவைத்த அவசரநிலைக் காலகட்டத்தை, இந்தியாவின் வளர்ச்சியான காலகட்டம் என்று வர்ணித்தார் பிரதமர் இந்திரா. நாட்டில் கட்டுப்பாடு ஏற்படவும், நல்வாழ்வை நோக்கி வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தவும்தான் அவசரநிலை அறிவிக்கப்பட்டது என்று சொல்லி, அதன் ஓராண்டு நிறைவு விழாவைக் கொண்டாடினார் இந்திரா.  அதற்காகப் பல்வேறு பத்திரிகைகளில் சிறப்பு பேட்டிகளையும் கொடுத்தார். அதுதான் கொடுமையிலும் கொடுமை!

'சமாச்சார்’ செய்தி நிறுவனத்துக்காகவும், 'அமிருதபஜார் பத்திரிகா’ இதழின் ஆசிரியர் துஷார் காந்தி கோஷ§க்கு அளித்த பேட்டியிலும், பிரதமர் இந்திரா சொன்ன விஷயங்களைப் பார்த்தால், அன்றைய காலகட்டத்தில் அவரது சிந்தனையை முழுமையாக உணர முடியும்.
இந்திராவின் பதிலில் மட்டுமல்ல... கேள்வியில்கூட எப்படிப்பட்ட அரசியல் இருக்கிறது என்பதை கவனியுங்கள்!
கேள்வி: தேசிய நெருக்கடியை முன்னிட்டு அவசரநிலை அறிவிக்கப்பட்டபோது அதை மிகக்கடுமையாக எதிர்த்த சிலரும்கூட, இன்று அதன்மூலம் நாட்டில் இந்த ஓராண்டு காலத்தில் பொருளாதாரப் புரட்சி தோன்றியிருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள். அரசியல் துறையில், இந்த ஓராண்டு காலத்தில் கிடைத்துள்ள பலன்கள் என்று நீங்கள் குறிப்பிட விரும்புவது என்ன?
பதில்: அரசியல் துறையைவிட பொருளாதாரத் துறையிலேயே நாம் பலன் கண்டிருக்கிறோம். பொருளாதார வளர்ச்சி, சமூகத்தில் இழைக்கப்படும் அநீதிகளை அகற்றுதல், ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது ஆகியவற்றில் செலுத்தப்படும் முயற்சிகளில் இருந்து கவனத்தைத் திருப்பவும் கலைக்கவும் எதிர்க்கட்சியினர் முற்படுகிறார்கள். வெவ்வேறு தோற்றங்களிலும் விதவிதமான கோஷங்களிலும் இந்த சக்தி மறைந்திருந்தாலும், நாட்டில் குழப்பம் விளைவிக்கும் அவர்களது நோக்கம் என்னவோ அப்படியே மாறாமல் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
கேள்வி: உள்நாட்டில் சிலருடைய எதிர்ப்பு நேர்ந்தாலும், வெளிநாடுகளில் இருந்து விரோதமான உணர்ச்சிகள் தோன்றினாலும், நாட்டுக்குக் கிடைக்கும் பொருளாதார, அரசியல் லாபங்களை உத்தேசித்து, அவசரநிலைமையை நாம் பொறுத்துக்கொள்ளலாம் என்று மக்கள் பலரும் நினைக்கிறார்கள். நீங்கள் இந்தக் கருத்தை ஏற்கிறீர்களா?
பதில்: இன்று இவ்வாறு நம்மிடம் பகைமைப் பாராட்டுபவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவசரநிலை அறிவிக்கப்படுவதற்கு முன்பே இருந்தார்கள். அவர்களுடைய கண்களுக்கு அரசாங்கத்தின் செயல்கள் எதுவுமே சரியாகத் தோன்றியது இல்லை. அவர்களில் ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் எல்லாருமே என் தந்தையை அவருடைய ஆயுட்காலம் முழுவதும் அவருடைய கொள்கைகளுக்காக எதிர்த்தவர்களே.
சமீபத்தில் தோன்றியுள்ள ஒரு புதிய சிக்கலை, மேற்கத்திய நாடுகளின் பத்திரிகைகள் மக்கள் கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றன. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் உள்ள நாடுகளின் அரசாங்கங்களை நிலைகுலையச் செய்வதில், தொடர்ந்து தீவிரமான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அந்த நாடுகளில் உள்ள சுதந்திர உணர்ச்சி மிகுந்த தலைவர்களை அவதூறுக்கு ஆளாக்குவதிலும், கொலை செய்வதிலும்கூட இந்த சக்திகள் முனைந்திருக்கின்றன. அந்தந்த நாட்டில் உள்ள சில தனிப்பட்ட நபர்களையோ, குழுவினரையோ தங்கள் வசப்படுத்தவும், பணம் செலவுசெய்து வாங்கிவிடவும், அவர்கள் முற்படுகிறார்கள். தெரிந்தோ, தெரியாமலோ இந்த முயற்சிக்கு சில நாட்டினர் துணை நிற்கிறார்கள்.
கேள்வி: 'அரசாங்கம், தான் செய்துமுடிப் பதாக மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை, மன உறுதியுடன் நிறைவேற்றி வைக்க முற்பட்டிருந்தால், அவசரநிலைக்கு அவசியம் இருந்திராது. அப்படி ஓர் அறிவிப்பு இல்லாமலே இந்த ஓராண்டில் கிடைத்த வெற்றிகளை இந்தியா சாதித்திருக்க முடியும்’ என்று எதிர்க்கட்சிகள் சொல்லிக்கொண்டு வருவதைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்னவென்று கூறுவீர்களா?
பதில்: மக்களுக்கு நாங்கள் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில், நாங்கள் மெத்தனமாகச் செயல்பட்டிருந்தால், அதற்குக் காரணம் போதிய மன உறுதி இல்லாமை அல்ல; எங்களை மீறிய சில சந்தர்ப்பங்களே அதற்குக் காரணம். பங்களாதேஷில் விளைந்த சங்கடமான சூழ்நிலையும், தொடர்ந்து விளைந்த போரும், அரசாங்கத்தின் மீது பளுவான பொறுப்புகளைச் சுமத்திவிட்டன. இதைத் தவிர, சில பகுதிகளில் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கும்கூட, வறட்சி நிலை ஏற்பட்டிருக்கிறது. நாடு இத்தகைய இன்னல்களுக்கு ஆளாகி இருக்கும்போது, ஒன்றுசேர்ந்து தோள் கொடுத்து, மக்களின் உதவிக்கு வரவேண்டியது எதிர்க்கட்சிகளின் பொறுப்பு அல்லவா? இதற்கு மாறாக, இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்டு கட்டுப்பாடின்மை, பலாத்காரம், குற்றங்கள் புரிவது ஆகியவற்றுக்கான சூழ்நிலையை மென்மேலும் தூண்டுவதிலேயே அவர்கள் ஈடுபடலாம் என்று எண்ணினார்கள். சமுதாயத்தின் பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்களும் இந்த அழிவு சக்தியின் சூழலால் பாதிக்கப்பட்டார்கள். உலக வங்கிகூட, நாங்கள் சந்திக்க நேர்ந்த இந்த இடையூறுகளையும், அவற்றை நாங்கள் துணிவுடன் சமாளித்துப் பெற்ற வெற்றியையும் பாராட்டி இருக்கிறது.
கேள்வி: அவசரநிலையைத் தொடர்ந்து நீட்டிப்பதன் மூலம்தான் நாட்டின் முன்னேற்றத்தைச் சாதிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது, அரசியல் சட்டத்தில் தேவையான மாறுதல்களைச் செய்து முடித்த பிறகு, அவசரநிலையை முடித்துக்கொள்வது சாத்தியம் என்று கருதுகிறீர்களா?
பதில்: அவசரநிலையை முடிவின்றி நீட்டிப்பது என்பது சாத்தியம் அல்ல. அதே சமயம் நாட்டு மக்களின் பல பகுதியினருக்கும், அர்த்தமுள்ள ஜனநாயகக் கொள்கைகளின் அமைப்பு உருவாகி அதன் நன்மைகள் கிடைக்கும்படியான ஒரு சூழ்நிலையை நிச்சயமாகக் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
கேள்வி: 20 அம்சப் பொருளாதாரத் திட்டத்தை நீங்கள் அறிவித்தபோது, விலைவாசி பற்றிச் சிந்தித்து எடுக்க வேண்டிய முயற்சிகளுக்குத் தடைசெய்வதுபோல் எழுந்த சவாலை நீங்கள் வெற்றிகரமாகச் சமாளித்துள்ளதாக நினைக்கிறீர்களா? விலைவாசி குறைவதற்கு, உற்பத்தி பெருக வேண்டும். இதில் கணிசமான முன்னேற்றம் கிடைத்துள்ளதா?
பதில்: பெருமளவுக்கு விலைவாசிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. விலைவாசி உயராமல் தடுத்துள்ளோம். தொடர்ந்து தடுத்துக் கட்டுப்படுத்திக்கொண்டு வருகிறோம். ஆனால், எதையும் நாமே நேரடியாகக் கட்டுப்படுத்தக் கூடிய வசதிகள் நமது அமைப்பில் இல்லை. பெரும்பாலான பொருட்களை உற்பத்தி செய்வது, தனியார் துறையினரிடம் இருக்கிறது. சந்தைகளில் பல்வேறு வகையான சக்திகளுக்கு ஈடுகொடுக்க வேண்டியிருக்கிறது.
உற்பத்தியைப் பெருக்குவதுதான் எங்கள் முக்கியமான முயற்சி. உற்பத்திப் பெருகி இருப்பதும் உண்மை. குறிப்பாக, பொதுத் துறையில் உள்ள நிறுவனங்கள் இதில் முன்னேற்றம் காட்டியிருக்கின்றன. பொதுத் துறையில் உள்ள நிறுவனங்கள் இப்போது நிறைய லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளன. நிறைய நஷ்டம் ஏற்பட்டுக்கொண்டிருந்த இடங்களில், அத்தகைய நஷ்டம் பெருமளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.
கேள்வி: கடத்தல்காரர்களின் கொட்டம் ஒடுக்கப்பட்டிருக்கிறது. வரி ஏய்ப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. ஏராளமான கறுப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டு வெளியே கொண்டுவரப்பட்டிருக்கிறது. தொழிற்சாலைகளில் நிலைமை நிச்சயமாக முன்னேறி இருக்கிறது. ஏற்றுமதி வாய்ப்புகள் பெருகி இருக்கின்றன. ஆனால், இவற்றில் பல நிலைகளில் உள்ளே பொருந்திவிட்ட சிறு குறைகள் குந்தகம் விளைவிக்கின்றன. இந்த சிறு இடையூறுகளைத் தவிர்க்க, காலவரையறை செய்யப்பட்ட ஒரு திட்டத்தை வகுத்து, தொழில் முயற்சிகளைக் கூட்டவும், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஊக்கமளிக்கவும் நீங்கள் உத்தேசித்து இருக்கிறீர்களா?
பதில்: இடையூறுகளை நீக்குவதும், உற்பத்திக்கு ஊக்கம் தருவதும், புதிய முதலீடுகளைத் தூண்டி ஆதரிப்பதும் எங்களுடைய முக்கியக் கொள்கைகளாக இருந்து வருகின்றன. பல புதிய யோசனைகளை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். எங்கள் அமைச்சர்கள் தங்களால் ஆனவரை முயன்று வருகிறார்கள். கள்ளக் கடத்தல் பற்றிக் குறிப்பிட்டீர்கள். மறுபடியும் அது தலைதூக்கத் தொடங்கி இருக்கிறது. எங்கள் தீவிர முயற்சிகளைக் கொஞ்சம் தளர்த்தினாலும், அது மறுபடியும் தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. நாங்கள் தொடர்ந்து விழிப்பாக இருந்து செயல்பட்டு வருகிறோம். ஒன்றுக்கொன்று தொடர்புள்ள, இணைந்த முயற்சிகள் அரசாங்கத் துறைகளால் செய்யப்பட வேண்டும். மக்கள் முழு மனத்துடன் ஈடுபாடுகொண்டு, ஒத்துழைக்க வேண்டும். மக்களின் பங்கு என்பது என்ன? தனிப்பட்ட ஒரு பிரஜை தவறான வழிகளில் ஈடுபட்டாலும் அல்லது, அரசாங்க அலுவலர்கள் மக்களை வருத்தித் துன்புறுத்தினாலும், உடனே அதை எங்கள் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான். இப்படிப்பட்ட முறையீடுகளையும் யோசனைகளையும் கவனிப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய முயன்று வருகிறோம்.
கேள்வி: அடுத்த 12 மாதங்கள் எப்படியிருக்கும் என்று உருவகம் செய்து பார்க்கிறீர்கள்?
பதில்: அடுத்த 12 மாதங்களின் விளைவுகளை, கடந்த 12 மாதங்களுடன் இணைத்துப் பார்ப்பது சரியல்ல. பொருளாதார நிலையில் ஒரு நல்ல வளர்ச்சிபெற இன்று நாடு தயாராகிக்கொண்டிருக்கிறது. நாம் நமது திட்டங்களில் தொடர்ந்து நீர்ப்பாசனத்துக்கும், மின்சார உற்பத்திக்கும் கவனம் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துவருகிறோம். தேவையான முதலீட்டு வசதிகள் இல்லாமையினால், புதிய திட்டங்கள் பலவற்றைத் தொடங்க முடியாமல் இருக்கிறோம். அவை பற்றிய யோசனைகள் தேக்க நிலையிலேயே இருக்கின்றன. எடுத்துக்கொண்டு பாதி முடித்துவிட்ட திட்டங்களை, அவற்றை அந்த நிலையில் நட்டாற்றில் விட்டுவிட்டால் நஷ்டமாகிவிடுமே என்பதற்காக தொடர்ந்துகொண்டிருக்கிறோம். நிதி நிலைமை சிரமமாக இருப்பதால், ஒப்புதல் அளிக்கப்பட்டுத் தயாராக இருக்கும் திட்டங்களைக்கூடத் தள்ளிப்போட்டிருக்கிறோம். நல்ல பருவமழையைப் பொறுத்தே பெருமளவுக்கு நாட்டின் நல்லகாலம் அமைந்திருக்கிறது. வானிலை முன்போல இல்லை. ரொம்ப மாறிவிட்டது. டில்லியின் இன்றைய நிலை, ஜூன் மாதம் போலவா உங்களுக்குத் தோன்றுகிறது?'
- இப்படிச் சொல்லிக்கொண்டு இருந்தார் இந்திரா.
அவசர நிலைக் காலத்தில் நடந்த சில நன்மைகள் இன்றுவரை நினைவுகூரப்படுகின்றன. கடைக்காரர்கள் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களின் விலைப்பட்டியலை வெளியிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள். கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் அதற்கான வருமான வரியைத் தாங்களாகவே முன்வந்து கட்டவேண்டும் என்பதை வலியுறுத்தி சிறப்பு அறிவிப்பு செய்யப்பட்டது. அதனால் சுமார் 250 கோடி ரூபாய் வரை அரசு கஜானாவுக்கு வந்து சேர்ந்தது. நாடுமுழுவதும் கடத்தல், கள்ளச்சந்தைக்காரர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். இப்படிப்பட்டவர்களைக் கைது செய்வதற்காகத்தான் 'மிசா’ சட்டமே ஒரு காலத்தில் கொண்டுவரப்பட்டது. இப்படி மேலோட்டமான சில விஷயங்கள் பயத்தின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்டன. ஆனால் சட்டம் சந்தித்த அவலம்தான் அந்தக் காலத்தில் அதிகம்!

- Vikatan

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 26

1976-ம் ஆண்டு பிப்ரவரி 1, 2 ஆகிய இரண்டு நாட்களும் மரணத்தின் குரலை சென்னை மத்தியச் சிறைச்சாலை கேட்டது. அதுவரை தொழுநோயாளிகள் அடைக்கப்பட்டு இருந்த அறையைத் தேர்ந்தெடுத்து, அரசியல் கைதிகளை அடைத்துவைக்கும் குரூரம் அன்று அரங்கேறியது. மத்தியச் சிறையில் ஒன்பதாவது பிளாக்கில் கைதிகள் அடைக்கப்பட்டபோது, வார்டன்கள், கைதி வார்டன்கள், முதன்மைத் தலைமை வார்டன், ஜெயிலர், உதவி ஜெயிலர் ஆகியோர் சேர்ந்துநின்று அரசியல் கைதிகளைத் தாக்கினார்கள். இது அன்றைய சிறைக் கண்காணிப்பாளராக இருந்தவர் முன்னிலையிலேயே நடந்தது.

இந்தக் காட்சிகளை அப்போது சிறைக்​கைதியாக அடைக்கப்பட்டு இருந்த சிட்டிபாபு டைரியாக எழுதினார். சிறைகளின் கோரத்தைச் சொல்லும் முக்கியமான ஆவணமாக இன்று​வரைக்கும் இருக்கும் புத்தகம் அது. சென்னை மத்திய சிறைச்சாலையில் 1976 பிப்ரவரி முதல் 1977 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் அரசியல் கைதிகளைக் கொடுமைப்படுத்தியதாகவும் அடித்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட மாண்புமிகு நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் தலைமையிலான கமிஷனில், மிக முக்கியமான ஆதாரமாக சிட்டிபாபுவின் சிறை டைரி இருந்தது.
''கர்வத்தோடு ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன. நாங்கள் அனைவரும் இரண்டாவது நுழைவாயிலைக் கடந்து சென்றோம். இப்போது நாங்கள் ஒரே வரிசையில் நின்றுகொண்டிருந்தோம். ஒருவர் அவசரமாக அங்கு வந்தார். அவர் வரும்போதே, 'யாருடா இவன்கள் எல்லாம்?’ என்று கத்திக்கொண்டே வந்தார். அவருடைய பேச்சே புதுமையாக இருந்தது. வரவேற்புக்குப் பின்னர் எங்களுக்கு வாழ்த்துக்கூறுவதுபோல அவை இருந்தன. 'இவன்களையெல்லாம் சோதனை போடுங்கள். எந்தப் பயலும் பணம் கொண்டுவந்திருக்கக் கூடாது’ என்று அவர் கூறினார். அப்போது ஒரு வார்டன், ஆசைத்தம்பியிடம் 67 ரூபாய் இருப்பதாகக் கூறினார். அவ்வளவுதான், அந்த அதிகாரியின் சொற்கள் கொடூரமாக இருந்தன. 'அப்படியா ஆசைத்தம்பி? உனக்கு மூளையில்லை? நீ அடிக்கடி சிறைக்கு வந்திருக்கிறாயே’ என்று பேசிக்கொண்டே போனார். அப்போதே எவருக்கும் புரிந்திருக்கும். அமைதியாக இருந்த பாம்பு தலையைத் தூக்கிப் படமெடுத்து ஆடத் தொடங்கிவிட்டதாக நாங்கள் அறிந்துகொண்டோம். 'இவர்களை எல்லாம் ஏழாவது பிளாக்கில் வேண்டாம், ஒன்பதாவது பிளாக்கில் அடைத்து வையுங்கள்’ என்று அவர் கட்டளையிட்டார்!'' என்று தொடங்குகிறது அந்த டைரி. ஒன்பதாவது பிளாக் என்பது அதற்கு முந்தைய தினம் வரை தொழுநோயாளியான கைதிகள் இருந்த அறை. இந்த அறையில் இவர்களை வைப்பதற்காகவே நோயாளிகளை இடம்மாற்றி காலி செய்துவிட்டார்கள் அதிகாரிகள்.
அந்த அறைக்குள் சிட்டிபாபு உள்ளிட்டவர்கள் நள்ளிரவில் அனுப்பிவைக்கப்பட்டனர். அறைக்குள் இருந்த துர்நாற்றத்துக்கு என்ன காரணம் என்றே அவர்களால் உணர முடியவில்லை. ஆனாலும், அதில்தான் அன்றைய இரவு முழுவதும் தூங்கினார்கள். இரவு ஒரு மணிக்கு மேல் மு.க.ஸ்டாலின் அழைத்துவரப்பட்டு அதே சிறையில் அடைக்கப்பட்டார். மறுநாள் மாலையில் என்ன நடந்தது என்பதை சிட்டிபாபு தனது டைரியில் விவரிக்கிறார்...
''இரவு 7.30 மணி. அந்த அறை இருட்டாக இருந்தது. அறைக்கு வெளியே இன்னும் ஓரிரு விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. இரவு சுமார் 8 மணிக்குச் சிலர் அங்கு நுழைவதை மங்கலான வெளிச்சத்தில் காண முடிந்தது. காக்கி ஆடை அணிந்தவர்களும் வெள்ளை ஆடை அணிந்தவர்களும் வந்தனர். அவர்கள் இரண்டு வரிசையாக நின்றனர். அந்த இரண்டு வரிசைகளுக்கும் இடையே அவர்கள் வைத்திருந்த கைத்தடி நீளத்துக்கே இடைவெளி இருந்தது. அறைக் கதவு திறக்கப்பட்டது. அடிக்கும் சப்தம் கேட்டது. அது சினிமாவில் நடப்பதைப்போன்று இருந்தது. கொலைகாரர்களின் கைகளில் இருந்த கைத்தடிகள் அரசியல் கைதிகளின் உடலைப் பதம் பார்த்தன. அய்யோ, அப்பா, அம்மா என்ற அழுகுரலும் கூக்குரலும் கேட்டன...
அடுத்து நாங்கள்! கதவு திறக்கப்படும் ஒலி கேட்டோம். கதவை அவர்கள் வேகமாகத் தள்ளினர். 'வாங்கடா’ என்று குரல் கேட்டது. நான் ஓர் அடி எடுத்துவைப்பதற்கு முன்பாக எனது கன்னத்தில் அறை விழுந்தது. அவர்கள் என்னை சுவற்றின் மேல் தள்ளிவிட்டனர். ஒருவர் என் வயிற்றில் அடித்தார். நான் சுவரில் சரிந்து உட்கார நினைத்தேன். ஆனால் வீராசாமி (ஆற்காடு வீராசாமி) மரம் போல் தரையில் சாய்ந்தார். அவரை ஒரு மதம் பிடித்த யானையைப் போன்ற ஒருவர் தனது வலது காலாலும் இடது காலாலும் உதைத்தார். கையாலும் அடித்தார்.
தமிழகத்து முதலமைச்சர் மகன் என்று நேற்றுவரை அறிந்திருந்த அந்த அதிகாரி, தன் கால் பூட்ஸால் அவன் அழகிய முகத்தைச் சுவை பார்க்க உதைத்தான். அடுத்து கொலைகாரன் ஒருவன் ஓங்கிய கோல், அவனது தோள் பட்டையில். காக்கி உடை அணிந்த வார்டன் ஒருவன், அவனது கன்னத்தில் கை நீட்டினான். இவர்கள் இவனை அடித்தே கொன்றுவிடுவர் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. ஏனையோர் தரையில் படுத்துக்கிடந்தனர். அவர்கள் உதவிக்காக எழுந்து வரமுடியாத நிலையில் இருந்தனர். உடனே என் தம்பியைத் தள்ளிக்கொண்டு குறுக்கே ஓடினேன். தடி அடிகள் என் கழுத்தில் விழுந்தன. அவை அடிகளே அல்ல; கொல்லன் உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பின் மீது சம்மட்டி கொண்டு அடிப்பதைப்போன்று அவை இருந்தன. இந்தக் கொடுமைகளைத் தாங்கிக்கொண்ட பின்னர், என் அருமைத் தம்பியை அறைக்குள் தள்ளிக்கொண்டு வர என்னால் முடிந்தது'' என்று போகிறது அந்த டைரி.
அடிகளை வாங்கி வாங்கி ஆசிரியர் கி.வீரமணியின் முகம் வீங்கிப்போயிருந்ததாகவும் சிட்டிபாபு எழுதி இருக்கிறார். 'விடுதலை’ என்.எஸ்.சம்பந்தம் ஏற்கெனவே இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டவர். அவரை அடித்தார்கள். 'இதற்கு மேல் அடித்தால் அவர் செத்துவிடுவார்’ என்று வீரமணி சொன்னதை அதிகாரிகள் கேட்கவில்லை. சிறை அதிகாரிகளின் நடவடிக்கையை ஜாலியன் வாலாபாக் சம்பவத்துடன் சிட்டிபாபு ஒப்பிட்டுள்ளார்.
''அடுத்து அடியார் (முரசொலி அடியார்) அனுப்பப்பட்டார். அந்தோ பரிதாபம், முந்தைய ஒரு தடவை தாம் அழைக்கப்பட்டிருப்பது போன்று நினைத்துக்கொண்டு அவர் சென்றார். அடியார் என்று அழைத்தவாறே அவர் அடிக்கப்பட்டார். அடிபட்ட பின்னர், அவர் அதிகாரியைச் சந்தித்தார். அன்று இரவு அவர் இருந்த சிறைக்கூடத்துக்கு நான் மாற்றப்பட்டேன். நீலநாராயணன் என்னோடு இருந்தார். வெட்டுண்ட மரம்போல கீழே விழுந்த அடியாரைத் தூக்கிவிட நீலம் முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. அடியாரது முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. ஆயினும், ஒரு சிறு அசைவுகூடத் தென்படவில்லை. அவரது வாயில் நுரை தள்ளியது. அவரது கைகால்கள் கடும் குளிர் கண்டது போன்று நடுங்கின. அவரது முகத்தில் சவக்களைத் தட்டியது. மரணம் அவரை நெருங்கியது'' என்று எழுதி இருக்கிறார் சிட்டிபாபு.
ஏன் இவர்கள் அடிக்கப்பட்டார்கள் என்பது குறித்து நீதிபதி இஸ்மாயில் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிடுகிறார்:
''திராவிட முன்னேற்றக் கழகத்தையும் நிறுவன காங்கிரஸையும் சேர்ந்த காவல் கைதிகளை அவர்களது கட்சியில் இருந்து விலகுமாறு சிறைத் துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். அந்த கைதிகளின் கூற்றுப்படி, அவர்கள் கட்சியில் இருந்து விலக விரும்பவில்லை. அவர்களை அடித்தும் அச்சுறுத்தியும் அவர்கள் கட்சியில் இருந்து விலக வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்கள் தாங்களாகவே முன்வந்து இந்த விலகல் கடிதத்தை கொடுக்கவில்லை. எனவே, சிறை அதிகாரிகள் அரசியல் கைதிகளை அவரவரது கட்சிகளில் இருந்து விலக ராஜினாமா கடிதங்களைக் கொடுக்கும்படி வலியுறுத்தியுள்ளனர் என்ற முடிவுக்கு நான் வருகிறேன்'' என்று சொல்லியிருக்கிறார் நீதிபதி. அந்தளவுக்கு நெருக்கடிகள் தரப்பட்டன.
மாநிலக் கட்சிகளையே தடைசெய்ய பிரதமர் இந்திரா திட்டமிட்டு இருப்பதாக, டெல்லியில் இருந்து தகவல் வந்தது. அப்போதுதான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று எம்.ஜி.ஆர். பெயர் மாற்றம் செய்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரையும் மாற்ற கருணாநிதிக்கு கட்சிக்குள் இருந்த சிலரே ஆலோசனை சொன்னார்கள். ஆனால், அப்படி மாறுதல் செய்யக் கூடாது என்பதில் கருணாநிதி உறுதியாக இருந்தார். சென்னை மத்திய சிறையில் இருந்து கருணாநிதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் ஒன்றில், 'கழகத்தின் தலைமையிலும் மாற்றம் கூடாது. பெயரிலும் மாற்றம் கூடாது’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. தேவையில்லாமல் இந்திராவை கருணாநிதி பகைத்துக்கொண்டதால்தான் இப்படிப்பட்ட சிக்கல் கட்சிக்கு வந்தது என்று சொல்லி சிலர் கருணாநிதியைத் தலைவர் பதவியில் இருந்து அகற்ற திட்டமிட்டார்கள். அதைத்தான் அந்தக் கடிதம் குறிப்பிடுகிறது.
தி.மு.க-வினரை மொத்தமாகச் சிறையில் வைப்பது, கருணாநிதி மற்றும் அவரது அமைச்சர்கள் மீது விசாரணை கமிஷன் வைப்பது, அவரைத் தலைமைப் பதவியில் இருந்து தூக்குவது, தொண்டர்களைப் பயமுறுத்தி அந்தக் கட்சியில் இருந்து விலகவைப்பது என எல்லாவிதமான அச்சுறுத்தல்களும் அந்தக் காலக்கட்டத்தில் செய்யப்பட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை 1976-ம் ஆண்டு முழுக்கவே நெருப்பாறு ஓடிய ஆண்டாக கனன்றுகொண்டு இருந்தது.
இந்திராவுக்கு எதிராக அகில இந்தியக் கட்சிகள் அனைவரும் ஓர் அணியாகத் திரள வேண்டும் என்று கருணாநிதி அறிவித்தார். இதற்கான கலந்துரையாடல் கூட்டம் 76-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் நாள் தி.மு.க. எம்.பி-யான இரா.செழியனின் டெல்லி வீட்டில் நடந்தது. இந்திராவுக்கு எதிரான மிகப்பெரிய அஸ்திரமாக அந்தக் கூட்டம் அமைந்தது.
அசோக் மேத்தா (அகில இந்திய பழைய காங்கிரஸ்), பிலுமோடி (பாரதிய லோக்தளம்), பிஜு பட்நாயக் (சோஷலிஸ்ட் கட்சி), வாஜ்பாய் (ஜனசங்கம்) உள்ளிட்ட தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 'அனைவரும் ஏற்கத்தக்க உடன்பாடு இந்தக் கூட்டத்தில் எட்டப்பட வேண்டும்’ என்று கருணாநிதி சொன்னார். மறுநாள், இதே தலைவர்களது கூட்டம் ஹெச்.எம்.படேல் வீட்டில் நடந்தது. இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்று இந்தக் கூட்டத்தில்தான் முடிவுசெய்யப்பட்டது. அப்போது பாட்னாவில் தங்கியிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண், தனக்கு இது மகிழ்ச்சியைத்தருவதாகக் கருணாநிதிக்குக் கடிதம் அனுப்பினார். எதிர்க்கட்சிகள் அகில இந்திய அளவில் ஓரணியில் திரளத் தொடங்கியதைப் பார்த்து திகைத்த இந்திரா, கொஞ்சம் இறங்கிவர ஆரம்பித்தார்.

- VIkatan

தண்ணீர்..தண்ணீர்... - 3

தண்ணீர்..தண்ணீர்...
ஆர். குமரேசன் படங்கள்: ஆர். ராம்குமார்
 நீர் மேலாண்மை
நிலத்தை மனித உயிரெனக் கொண்டால், ஓடைகளும், வாய்க்கால்களும்தான் ரத்தநாளங்கள். நிலத்தின் குருதியான தண்ணீரை அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு சேர்ப்பவை, இந்த ரத்த நாளங்கள்தான். அப்படி நகரும் குருதியை சேமித்து வைக்கும் இதயங்கள் போன்றவை குளங்கள், ஏரிகள் மற்றும் கண்மாய்கள். மனித உடலில் ரத்த நாளங்களோ, இதயமோ பாதிக்கப்பட்டால், என்ன விளைவுகள் ஏற்படுமோ... அதுதான் நிலத்துக்கும், நீருக்கும் ஏற்பட்டுள்ளது. ஓடைகள், வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், தண்ணீரின் சீரான ஓட்டம் தடைபட்டிருக்கிறது. பல இடங்களில் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவுதான் இன்றைய தண்ணீர் தட்டுப்பாடு. காலம் கடந்த நடவடிக்கை என்றாலும், பூமியின் இதயங்களான குளங்களை குணப்படுத்த வேண்டிய அவசர அவசியத்தில் இருக்கிறோம்.
அதைப் பற்றி திண்டுக்கல் நீர்வடிப்பகுதி முகமையின் விரிவாக்க அலுவலரும், உதவி பொறியாளருமான பிரிட்டோ சொல்வதைக் கேட்போமா...
''மூன்றாண்டுகளாக மழை இல்லை. வரலாறு காணாத வறட்சி என்கிறார்கள். ஆனால், இதுபோன்ற நிலையை இதற்கு முன்பும் பல முறை சந்தித்து இருக்கிறோம். கடந்த 50 வருட மழையளவை எடுத்துப் பார்த்தால், ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நான்காண்டுகள் வரை மழை இல்லாமல் இருந்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, ராஜஸ்தானை அடுத்து குறைவான மழை பெறும் இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு. நமது சராசரி மழையளவு 760 மில்லிமீட்டர். இதில் நீலகிரி, கன்னியாகுமரி, கொடைக்கானல், சென்னை ஆகிய பகுதிகள் அதிகளவு மழை பெறுகின்றன. இங்கு பெய்யும் மழையால் பெரும்பான்மையான மக்களுக்குப் பயனில்லை என்பதால், அதைக் கழித்து கணக்கிட்டால், தமிழகத்தின் சராசரி மழையளவு 415 மில்லி மீட்டர். இது ராஜஸ்தானில் பெய்யும் மழையை விடக் குறைவு. ஆக, பாலைவனத்தில் கிடைக்கும் மழைநீர் அளவில்தான் நமக்குக் கிடைக்கிறது. அப்படி கிடைக்கும் நீரை, கிடைத்தற்கரிய மாமணியை நாம் பேணிக் காத்து பயன்படுத்த வேண்டாமா?
குளங்களைப் புரிந்து கொள்ளுங்கள்!
அந்தந்தப் பகுதியில் பெய்யும் மழைநீரை சேமித்து வைப்பவை குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் மற்றும் அணைகள் போன்ற நீர்நிலைகள்தான். மேடான பகுதிகளிலிருந்து வழிந்தோடி வரும் மழை நீரை, பள்ளமான பகுதிகளில் (குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் மற்றும் அணைகள்) சேமித்து வைத்து, வாய்க்கால் வழியாக அடுத்தடுத்துள்ள குளங்களுக்கு சென்று இறுதியில், ஆறுகளில் கலக்கும் வகையில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டவை, நமது பாசன முறைகள். அதனால்தான், உலக நாடுகள், நமது பண்டைய நீர் மேலாண்மை முறைகளை இன்றைக்கும் வியந்து நோக்குகின்றன. நீர் மேலாண்மையின் அடிப்படை அம்சங்களாக முன்னோர் உருவாக்கி வைத்திருக்கும் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளையும், வாய்க்கால்களையும் பாதுகாக்காத வரை, நீராதாரம் குறைந்து கொண்டே போவதைத் தடுக்க முடியாது.
முதலில் குளங்கள், ஏரிகள் மற்றும் கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைப் பற்றிய புரிதல், நம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். நிலத்தில் உள்ள ஆழமான குழி அல்லது தொட்டி போன்ற அமைப்புதான் குளம், ஏரி மற்றும் கண்மாய் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மை அதுவல்ல. நினைத்த இடத்தில் எல்லாம் இவற்றை உருவாக்கிவிட முடியாது. இவை அமைவதற்கான மண் கண்டம் மிகவும் அவசியம். குறிப்பாக, செம்மண் சரளை உள்ள இடங்கள்தான் இத்தகைய நீர்நிலைகள் அமைப்பதற்கு ஏற்றவை. இவை, திறந்தவெளி நீர்தாங்கிகள். நிலத்தடியில் இருக்கும் ஒவ்வொரு பாறைப் பிளவுகளுக்கும் நீரைக் கடத்துபவை. மேற்பரப்பில் வண்டல் மண்ணும், அதற்கு கீழ் அடுக்கில்சிறுகற்கள் கொண்ட சரளை மண்ணும், அதற்கு அடுத்து ஜல்லிக் கற்களும், அதைத் தாண்டி இளகும் தன்மையுள்ள படிவுப் பாறைகளும் (சுண்ணாம்புப் பாறைகள்) கடைசியாக கரும்பாறைகளும் இருக்கும். தண்ணீர், வண்டலால் உறிஞ்சப்பட்டு, சரளையில் ஊடுருவி, ஜல்லி வழியாக நிலம் முழுக்க படுக்கை வசமாக பரவும். இதனால்தான் குளம், ஏரி மற்றும் கண்மாய் அருகிலுள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் உயர்கிறது.
பொதுவாக, நீர்நிலைகளில் மண் எடுக்கும் விவசாயிகள், மேற்பரப்பில் உள்ள வண்டலை மட்டும் அள்ளிச் செல்வார்கள். அடுத்த மழையின்போது, வழிந்தோடி வரும் நீரானது... வழியெங்கும் உள்ள வண்டலை அள்ளி வந்து திரும்பவும் மேற்பரப்பில் சேர்த்துவிடும். ஆனால், சாலை விரிவாக்கம், மேம்பாட்டுப் பணி என்று சொல்லி குளம், ஏரி மற்றும் கண்மாய்களில் மண் எடுப்பவர்கள், அதிக ஆழத்துக்குத் தோண்டி விடுகிறார்கள்.
வண்டலையும் தாண்டி, சரளை மண் அடுக்கு, ஜல்லி அடுக்கு என பாதாளம் வரை தோண்டிக் கொண்டே செல்வதால், அடுத்த மழைக்கு வந்து சேரும் நீர்... நான்காவது அடுக்கான சுண்ணாம்புப் பாறைகள் மீதே தேங்குகின்றன. இந்தப் பாறைகள் மீது படியும் நீர் உடனடியாக ஆவியாகிவிடும். அதனால்தான், இப்போதெல்லாம் குளங்களுக்கு வரும் நீர், ஓரிரு நாட்களிலேயே காலியாகி விடுகிறது. இந்த பேராபத்தை சரி செய்யாவிட்டால்... நமக்கு எதிர்காலம் இல்லை என்பதே உண்மை. ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளின் அமைப்பு முறையை முழுமையாகப் புரிந்துகொண்டு, முறையாக தூர்வார வேண்டும். தண்ணீர் வெளியேறும் பாதைகளான கலிங்குகளை (கலங்கல், கலுங்கு என்றும் சொல்வார்கள்)  முறையாகப் பராமரிக்க வேண்டும்.
கால்வாய்கள், வளைவான இடங்களில் அகலமாக இருக்கும். வளைவுகளில் நீரின் போக்கு தாராளமாக இருக்கும். வாய்க்கால் குறுகலாக இருந்தால், அடிக்கடி மண் அரிப்பு ஏற்பட்டு, உடைப்பு ஏற்படும். இதைத் தவிர்க்கத்தான் வளைவுகளில் அகலமாக அமைத்தார்கள். ஆனால், தற்போது கால்வாய்களின் அகலமான பகுதியில் உள்ள கரைகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால், அகலம் குறைந்தே இருக்கிறது. இதனால் வளைவுகளில் உள்ள கரைகளில் மோதும் நீர், கரையைத் தாண்டி தன் பாதையை மாற்றிக் கொள்கிறது. இதனால் குளங்களுக்கான நீர்வரத்து பாதிக்கப்படுகிறது.
1970-ம் ஆண்டு வருவாய்துறை வரைபடத் தில் ஒவ்வொரு பகுதிக்குமான குளங்களும், வாய்க்கால்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அந்தந்தப் பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் அந்த வரைபடங்கள் கிடைக்கின்றன. அந்த வரைபடத்தில் உள்ள வாய்க்கால்கள், குளங்களை முறையாகப் பராமரித்தாலே தண்ணீர் பிரச்னையை சுலபமாக சமாளிக்கலாம். அந்தந்த ஊராட்சி மன்றங்கள் இதைக் கையிலெடுக்க வேண்டும்.
ஓர் ஊராட்சியில் மட்டுமே செய்வதைவிட, ஒரு ஒன்றியம் முழுக்க ஒரே நேரத்தில் செய்தால்தான் முழுமையான பலனை அடைய முடியும். முதலில் கால்வாய்களைத் தூர் வாருங்கள். முட்கள் புதர்களை அப்புறப் படுத்துங்கள். பிறகு, குளங்களை சரி செய்யுங் கள். அரசியல் பேதங்களைத் தாண்டி, நீங்கள் செய்யும் இந்தச் செயலால் வருங்காலம் உங்களை வாழ்த்தும். இதற்கான அனைத்து உதவிகளையும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், செய்து கொடுக்க தயாராக இருக்கிறது.
எதிர்வரும் மழைக் காலத்துக்கு முன்பாக, இதைச் செய்து முடிப்பது அவசியம்'' என்று வேண்டுகோள்களை முன் வைத்த பிரிட்டோ...  ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கான அடிப்படை விஷயங்கள், விவசாய நிலங்களுக்கான நீர் மேலாண்மை நுட்பங்கள் என்று நிறைய நிறைய பேசினார்...

- பொங்கிப் பாயும்...

- Vikatan

Saturday, March 1, 2014

செல்லுபடியாகுமா செலெரியோ?

'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக’ என்று விளம்பரப்படுத்துவதுப் போல, 'இந்தியர்களின் கார் ஓட்டும் பழக்கத்தையே மாற்றி அமைக்க வந்திருக்கும் கார்’ என்று செலெரியோவைச் சத்தம் போட்டு அறிமுகப்படுத்தி இருக்கிறது மாருதி.
 ''கியர்-கிளட்ச் என்று மாற்றி மாற்றி அல்லாடி டிரைவ் செய்து, மக்கள் அலுத்து விட்டார்கள். அவர்களை இந்த இரண்டின் இம்சையில் இருந்தும் விடுதலை செய்யும் விதமாக 'ஈஸி டிரைவ்’ எனப்படும் 'ஆட்டோ கியர் ஷிஃப்ட்’ தொழில்நுட்பத்தை செலெரியோவில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம்'' என்கிறது மாருதி.
ஐரோப்பிய நாடுகள், ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்(AMT)  எனப்படும் இந்தத் தொழில்நுட்பத்தைக் கடந்து, அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறிச் சென்றுவிட்டாலும், மாருதி இதை செலெரியோ வாயிலாக அறிமுகப்படுத்தி இருப்பதற்குக் காரணம், இது விலை மலிவான ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் என்பதுதான்.
மாருதியின் சிறப்புகளுக்குக் காரணமே, இந்தச் சிக்கனம்தான். இன்று நாட்டில் இரண்டு கார்கள் விற்பனையானால், அதில் ஒன்று மாருதியின் கார். 'ஜென் எஸ்திலோ’ மற்றும் 'ஏ ஸ்டார்’ ஆகிய இரண்டு கார்களுக்கு வழியனுப்பு விழா நடத்திவிட்ட மாருதி, அந்த இழப்பை ஈடுசெய்யும் விதமாக செலெரியோவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. விலைப் படிக்கட்டுகளின்படி பார்த்தால், வேகன் ஆர் மற்றும் ரிட்ஸ் ஆகிய இரண்டுக்கும் நடுவில் செலெரியோவை பொசிஷன் செய்திருக்கிறது. 'சரி, இது எதனுடன் போட்டி போடும்?’ என்பதிலும் மாருதி தெளிவாக இருக்கிறது. மாருதியின் குறி ஹூண்டாய் ஐ10தான். கிராண்ட் ஐ 10 வெற்றியால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது, அதன் உடன்பிறப்பான ஐ10தான் என்று மாருதி கருதுவதால், செலெரியோவை ஐ10 காருக்கு எதிராக அது களம் இறக்கி இருக்கிறது. செலெரியோவின் விலையும் சரி, மற்ற அம்சங்களும் சரி, ஐ10 காருக்குத்தான் அதிகப் போட்டியாக இருக்கப் போகிறது.
வெளிப்புறத் தோற்றம்
இது, ஐ10 காரோடு போட்டி போட்டாலும் செலெரியோவின் டிஸைனில் எந்தப் புதுமையும் இல்லை. அதேபோல, ஸ்விஃப்ட்டின் டிஸைனில் வெளிப்படும் எந்தப் புதுமையும் இதில் இல்லை. வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஆல்ட்டோவின் சாயலிலேயே செலெரியோவை டிஸைன் செய்துவிடுவது என்று, மாருதியின் டிஸைனர்கள் ஏன் முடிவு செய்தார்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் இதையும் மீறி செலெரியோவின் க்ரில், ஹெட்லைட் ஆகியவை காருக்குப் புதிய தோற்றத்தைக் கொடுக்க முயற்சி செய்கின்றன.
உள்ளலங்காரம்
இத்தனை சின்ன காரில் இவ்வளவு பெரிய இடம் எங்கிருந்து வந்தது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு, காரின் பின்னிருக்கையில் கை கால்களை நீட்டி தாராளமாக உட்கார முடிகிறது. இருந்தாலும் இரண்டு பேர் உட்கார்ந்தால் தாராளமாகத் தெரியும் இது, மூன்று பேர் உட்கார்ந்தால் அசௌகரியமாக இருக்கிறது. பின்னிருக்கைகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஹெட்ரெஸ்ட் இன்னும் பெரிதாக இருந்திருந்தால், இன்னும் பாதுகாப்பாக இருந்திருக்கும். இப்போது முன்னிருக்கைகளுக்கு வருவோம். டிரைவர் சீட்டின் பொசிஷன் உயரமாக இருப்பதும், ஐ10 மற்றும் மாருதி ரிட்ஸில் இருப்பதைப் போலவே கியர் லீவர் கைக்கு எட்டும்விதமாக சற்றே மேலாக இருப்பதும் வசதி.
பூமாலையின் வடிவில் இருக்கும் சென்டர் கன்ஸோல், பார்வைக்கு இதமாகக் காட்சியளிக்கிறது. இதன் உள்ளலங்காரம் ஐ10 காரோடு போட்டி போடும் அளவுக்கு இல்லை.  ஸ்மார்ட் போன் மற்றும் ப்ளூ-டூத் உடன் காரின் ஆடியோ சிஸ்டத்தை இணைத்துக்கொள்ள வசதி இருக்கிறது. பாட்டில் மற்றும் கப்புகள் வைக்கவும் கணிசமாக இடம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். க்ளோவ் பாக்ஸ் இன்னும்கூட கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாம். 235 லிட்டர் அளவுக்கு இருக்கும் டிக்கியில் மேலும் பொருட்களை வைக்க வேண்டி வந்தால், பின்னிருக்கைகளில் ஒன்றை மடக்கிவிட்டுக் கொள்ளலாம். மேலும் தேவைப்பட்டால், இரண்டு இருக்கைகளையும் மடக்கிவிடலாம்.
இன்ஜின்
சிட்டி கார் என்ற வகையில் பார்த்தால், செலெரியோவிடம் குறை சொல்ல முடியாது. இதில் இருப்பது 1 லிட்டர் கே10 இன்ஜின்தான் என்றாலும், இதன் வால்வு மற்றும் ஸ்ப்ரிங்குகள் துவங்கி ஏராளமான விஷயங்களை மாருதி ரீ-டிஸைன் செய்திருக்கிறது. அதனால், இந்த இன்ஜினை ’கே10பி’ என்று அது குறிப்பிடுகிறது. இந்த மாற்றங்களினால் இன்ஜினின் சக்தி வழக்கமான 67bhpக்கு மேல் உயர்ந்து விடவில்லை. ஆனால், இது இன்ஜின் இயங்கும் விதத்தை மாற்றி இருக்கிறது. இதனால், ஆக்ஸிலரேட்டரை எவ்வளவு அழுத்தினாலும் அது செலெரியோவுக்குப் பிடிக்கிறது.
ஆனால், இன்ஜின் சத்தம் காருக்குள்ளே வருவதுதான் ஏன் என்று தெரியவில்லை. 0 -100 கி.மீ வேகத்தை 14.9 விநாடிகளில் கடந்துவிடுகிறது. இது போட்டி கார்களைவிட எவ்வளவோ பெட்டர். இதற்குக் காரணம், இந்த காரின் எடை வெறும் 830 கிலோதான். இதுவும் ஐ10 காரைவிட குறைவுதான். காலியான நெடுஞ்சாலைகளிலும் இது சக்தி போதாமல் திணறவில்லை. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 158 கி.மீ. மேனுவல் மற்றும் ஆட்டோ கியர் ஷிப்ட் என்று இரண்டு விதமாகவும் செலெரியோ விற்பனையாகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட செலெரியோவை எடுத்துக்கொண்டால், இது ஆல்ட்டோ கே10 மற்றும் வேகன் ஆர் ஆகியவற்றில் இருக்கும் கியர்பாக்ஸ்தான். ஆனால், மேம்படுத்தப்பட்ட கியர் பாக்ஸ்.
மாருதி கூவிக் கூவி விளம்பபடுத்தும் ஈஸி டிரைவ் எனப்படும் ஆட்டோமேட்டிக்  மேனுவல் டிரான்ஸ்மிஷன்தான் (AMT)உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதை வழக்கமான ஆட்டோமேட்டிக் கார் என்று சொல்ல முடியாது. மாருதியும் இதை அப்படிக் குறிப்பிடவில்லை. இதில் 'பார்க்கிங் மோடு’-ஐக் குறிக்கும் றி என்ற 'மோடையே பார்க்க முடியாது. ஏனெனில், இந்த (AMT)க்கு இது தேவையில்லை. முழுமையான ஆட்டோமேட்டிக் என்பது டார்க் கன்வெர்ட்டர்கள் மற்றும் ட்வின் கிளட்ச் ஆட்டோவைக் கொண்டது. 'அதனால், ஓட்டுபவர்களுக்கு என்ன?’ என்று கேட்டால், வழக்கமான ஆட்டோமேட்டிக் என்றால், காரின் வேகம் அதிகரிக்கும்போது ஒரு கியரில் இருந்து அடுத்த கியருக்கு கார் மாறும்போது, அது மாறுவதே தெரியாமல் மாறும். ஆனால், செலெரியோவில் இருக்கும் (AMT) தொழில்நுட்பத்தில் கியர் மாறுவதை உணர முடியும். செலெரியோவில் இதை உணர முடிகிறது. குறிப்பாக, முதல் கியரிலிருந்து இரண்டாம் கியருக்கு மாறும்போது உணர முடிகிறது. ஆனால், இது பெர்ஃபாமென்ஸைப் பெரிதாகப் பாதித்துவிடவில்லை. 0-100 வேகத்தைக் கடக்க ஈஸி டிரைவ் எடுத்துக்கொள்ளும் நேரத்துக்கும்  மேனுவல் எடுத்துக்கொள்ளும் நேரத்துக்குமான இடைவெளி, வெறும் 1.66 விநாடிகள்தான்.
கிளட்ச்-கியர் என்று எதுவும் இல்லாமல், ஹோண்டா ஆக்டிவா மாதிரி காரை ஓட்டிச் செல்லும் இந்த 'ஈஸி டிரைவ்’ வசதி, மனைவிக்குப் பிடிக்கும். ஒரு வேளை இது கணவருக்குப் பிடிக்கவில்லை என்றால், அவர் 'மேனுவல் மோட்’-ல் வைத்து இந்த காரை ஓட்டிக்கொள்ள முடியும்.
இந்த ஈஸி டிரைவின் ஹைலைட், இதன் மைலேஜ். ’லிட்டருக்கு 23.1 கி.மீ கொடுக்கும்' என்று சொல்கிறது அராய். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் வேறு எந்த ஒரு ஆட்டோமேட்டிக் காரும் இப்படி ஒரு மைலேஜ் கொடுப்பதில்லை.  அதேபோல, செலெரியோ அதிக மார்க் வாங்கும் இன்னொரு ஏரியா சஸ்பென்ஷன். இதன் சாஃப்ட் சஸ்பென்ஷனைப் போலவே இதன் லைட் ஸ்டீயரிங்கும் கச்சிதமான டர்னிங் சர்க்கிளும் கார் ஓட்டுவதை மிக ஈஸியான விஷயங்களாக்கி விடுகின்றன.
ஈஸி டிரைவ் வசதிகொண்ட செலெரியோவைத்தான் மாருதி வெகுவாக விளம்பரப்படுத்துகிறது. ஆனால், இதில் விலை குறைந்த Lxi மற்றும் VxI   ஆகிய இரண்டு மாடல்களை மட்டுமே மாருதி ஈஸி டிரைவ் ஆப்ஷனோடு அறிமுகப்படுத்தி இருக்கிறது. காற்றுப் பைகள், ஏபிஎஸ் ஆகிய பாதுகாப்பு வசதிகள்கொண்ட Zxi மாடலில், மாருதி 'ஈஸி டிரைவ்’ ஆப்ஷனைக் கொடுக்காதது ஏன்?

- Motor vikatan

Tuesday, February 25, 2014

தண்ணீர்..தண்ணீர்... மிரட்டும் வறட்சியை விரட்டும் தொழில்நுட்பங்கள்...2

'காதலின் அருமை, பிரிவில்
மனைவியின் அருமை, மறைவில்
நீரின் அருமை அறிவாய், கோடையிலே...’
சத்திய வார்த்தைகளை சந்தமாக்கி வைத்திருக்கிறார், கவிஞர் வைரமுத்து. பருவநிலை மாற்றத்தில் உயிரினப் பன்மயம் பலத்த அடி வாங்கிக் கிடக்கும் சூழலில், ஆண்டின் அத்தனை நாட்களுமே கோடையாகத்தான் இருக்கின்றன. கோடை வருவதற்கு முன்னரே ஓடைகள் வற்றிவிட்டன. கிணறுகள் வெறும் கிடங்குகளாகவும், குளங்களில் குரும்பாடுகள் மேய்ந்து கொண்டும், ஆறுகளில் லாரிகள் ஓடிக்கொண்டும் இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், 'வரலாறு காணாத வறட்சி'யில் தமிழகம் சிக்கி பல ஆண்டுகளாக வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது.
எல்லாம் சரிதான். இந்த வறட்சியை வரவழைத்ததில் நமக்கும் பங்குண்டுதானே? நமது தவறுகளை, நாம்தானே சரி செய்ய வேண்டும். உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடிப்பதுதானே முறை. 'வறட்சி... வறட்சி’ என விரக்தியில் வீறிடுவதை விட, அதை விரட்டும் வழிமுறைகளைக் கையிலெடுக்க வேண்டும். இது சாத்தியமில்லாத ஒன்றல்ல. தங்கள் செயல் மூலமாக சாத்தியப்படுத்திக் காட்டியிருகிறார்கள், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர். கோம்பை பகுதியைச் சேர்ந்த சாமான்ய மக்கள்.
தொப்பியசாமி மலையின் மேற்குப் பகுதியில், காப்புக்காடுகளுக்கு கீழ், செம்மண் சரளை பூமியில் அமைந்திருக்கிறது இந்தப்பகுதி. மலையில் கிடைக்கும் மழைத் தண்ணீர், ஓடைகள் வழியாக... வடுகம்பாடி, ஆர்.புதுக்கோட்டை, வாணிக்கரை, கூம்பூர் வழியாக ஈசநத்தம் சென்று குடகனாற்றில் கலந்து, அங்கிருந்து அமராவதி ஆற்றில் ஐக்கியமாகி, காவேரியில் கலந்து கடலில் சேர்கிறது. தரைமட்டத்தில் இருந்து, 360 மீட்டர் மேடான பகுதி என்பதாலும், பெய்யும் மழைநீர் உடனே ஓடி விடுவதாலும், வானம் பார்த்த வெள்ளாமைதான் சாத்தியமாக இருந்தது. ஒரு கட்டத்தில், மழையில்லாமல் மானாவாரி வெள்ளாமைக்கும் வழியில்லாமல், பஞ்சம் பிழைக்க வேறு ஊர்களுக்கு பயணப்பட்டனர் இவ்வூர் மக்கள். இந்நிலையில், 2010-ம் ஆண்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த வள்ளலாரின் பார்வை, இந்தப் பகுதி மீது விழுந்தது. அதன் பிறகுதான், அந்த மாபெரும் மாற்றம் நடந்தேறியது. 'இந்த மண்ணில் இனி எதுவும் விளையாது’ என எண்ணி வெளியூருக்குச் சென்றவர்கள், ஊர் திரும்பிய அதிசயம் அரங்கேறியது.
இது எப்படி சாத்தியமாயிற்று..?
திட்டத்தை செயல்படுத்திய மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் விரிவாக்க அலுவலரும் உதவிப் பொறியாளருமான பிரிட்டோ சொல்வதைக் கேளுங்களேன்..!
''இது ரொம்ப வளமான பகுதி, ஆனா, ஏன் வறட்சியா இருக்குனு கலெக்டர் (வள்ளலார்) எங்களை விசாரிச்சதோட, அந்தப் பகுதியைப் பத்தின அத்தனை தகவல்களையும் திரட்டச் சொன்னாரு. நாங்களும் பழைய வரைப்படங்களையும் அந்தப்பகுதியில இருந்த வயசானவங்ககிட்டயும் விசாரிச்சு நிறைய தகவல்களைத் திரட்டினோம். அதோட, கூகுள் மேப்ல பாத்தப்போ, அந்தப் பகுதியில ஏழு குளங்கள் இருந்ததைக் கண்டுபிடிச்சோம். ஆனா, அங்க முதல் குளமும், ஏழாவது குளமும் மட்டும்தான் கொஞ்சமா இருந்துச்சு. மத்த குளங்கள் இருந்த அடையாளமே இல்ல. அந்தப் பகுதியில தண்ணியில்லாததால விவசாயமே இல்லை. ஆடு, மாடு வளர்க்கக்கூட தண்ணியில்லாததாலதான் வெளியூர்களுக்கு வேலை தேடிப் போக ஆரம்பிச்சாங்க.
அந்தப்பகுதியில முதல்ல நீராதாரத்தைப் பெருக்கணும்னு முடிவு செஞ்சு, குளங்களைப் புனரமைக்க ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல 'வேண்டாத வேலை’னு ஒதுங்கி நின்னு வேடிக்கை பாத்த ஊர்மக்கள், நாங்க ஒரு குளத்தைத் தயார் செஞ்சதும், ஆர்வமா களத்துல இறங்கிட்டாங்க. 100 நாள் வேலை திட்ட பணியாளர்களையும் இதுல ஈடுபடுத்தி ஏழு குளங்களையும் புதுப்பிச்சோம். ஒரு குளம் நிரம்பி, அடுத்த குளத்துக்கு தண்ணி போற மாதிரி, 21 கிலோ மீட்டர் நீளத்துக்கு கால்வாய்களை சரி செஞ்சோம். இதெல்லாம் செஞ்சி முடிக்கவும்... ஒரு மழை பெய்யவும் சரியா இருந்துச்சு. கிணறுகள்லயும், போர்வெல்லயும் தண்ணி ஊறிச்சு. மானாவாரி விவசாயத்துக்குக்கூட வழியில்லாம இருந்த நிலத்துல, இறவை விவசாயம் செழிக்க ஆரம்பிச்சது.
2011-ம் வருஷ ஆரம்பத்துல 18 ஹெக்டேர் நிலத்துல விவசாயம் நடந்துச்சு. இதைக் கேள்விப்பட்டு வெளியூர்களுக்கு வேலைக்குப் போன 21 குடும்பங்கள் ஊர் திரும்பினாங்க. அதே வருஷம் ஜூன் மாசம் 31 ஹெக்டேர்ல கடலை, தக்காளி, வெங்காயம்...னு விவசாயம் ஜோரா நடந்துச்சு. கால்நடைகளும் அதிகமாச்சு. இந்த மூணு வருஷத்துல அந்தப் பகுதியில மூணு நாட்கள் மட்டுமே மழை கிடைச்சுருக்கு. இருந்தாலும், இன்னமும் அங்க விவசாயம் நடக்குது. இவ்வளவு நாளும், மண்ணோட ஈரப்பதம் காக்கப்பட்டு வர்றதுக்கு காரணம் குளங்களை இணைச்சதுதான்'' என்கிறார். பிரிட்டோ.
குளங்கள் இணைப்புத் திட்டத்தின் முதல் தளமான கிழக்கு மெத்தைப்பட்டி கிராமத் துக்குச் சென்றோம். மழையில்லாமல் மொத்தப் பகுதியும் காய்ந்து போய் கிடந் தாலும், சில இடங்களில் முனைப்பாக நடந்து கொண்டிருந்தது, விவசாயம். ஆலமரத் துக்குக் கீழே இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்த திருமலைசாமியிடம் பேசினோம்.
''கலெக்டர் ஐயா, குளங்களை சரி செஞ்சு கொடுத்த பிறகு வெள்ளாமை நல்லா இருந்துச்சு. ஆனா, தொடர்ந்து மூணு வருஷமா மழையில்லாததால பல போர்வெல் கிணறுகள்ல தண்ணி கீழ போயிடுச்சு. இருந்தாலும், சிலர் இன்னும் செழும்பா வெள்ளாமை பாத்துட்டுதான் இருக்காங்க'' என்று கைகாட்டினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய தங்கராஜ், ''ஒரு காலத்துல வெள்ளாமை செய்ய முடியாம காடா இருந்த பூமிங்க. 1950-கள்ல எங்க முப்பாட்டன் பாப்பா நாயக்கர்தான் இதை விவசாய பூமியா மாத்துனாரு. அதுக்கு முன்ன வரை, மலையில பெய்ஞ்ச மழைத்தண்ணி ஒரே ஓட்டமா கீழ ஓடிப் போயிட்டு இருந்துச்சு. எங்க பாட்டன், மலையில இருந்து வாய்க்கால் வெட்டி, ஊர்ப் பக்கமா தண்ணியைக் கொண்டு வந்தாரு. அப்படிக் கொண்டு வந்தவரு, குறிப்பிட்ட இடைவெளிகள்ல சின்னச்சின்னதா குளங்களை வெட்டினாரு. அங்கங்க கிணறுகளையும் வெட்டி, கிணத்துக்கு மேல் பக்கமா மண்ணைக் கொட்டி கரை எடுத்தாரு. அதனால பெய்ற மழைத் தண்ணி கரையில தேங்க ஆரம்பிச்சது. கிணத்துல தண்ணி கொறையாம இருந்துச்சு. எங்க காலத்துல அதை முறையா பராமரிக்காம விட்டதுல, வாய்க்கா தூந்துப் போயி, தண்ணி வராம குளங்கள் அழிஞ்சுப் போச்சு. குளங்களை சரி பண்ணி கொடுத்த உடனே ஒரு மழை கிடைக்கவும், கிணறுகள்ல தண்ணி வந்துச்சு. மறுபடியும் விவசாயத்தை ஆரம்பிச்சுட்டோம்'' என்கிறார் குரலில் உற்சாகத்தைத் தேக்கியவராக.
இந்த கடும் வறட்சியிலும் வெங்காயம் அறுவடை முடித்து, அடுத்த விவசாயத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்த பாப்ப நாயக்கர், ''என் வயலுக்கு மேல இருக்கற ஓட்டைமடை குளம் மழைத்தண்ணியால நிறைஞ்ச, ஒரே நாள்ல என் கிணத்துல தண்ணி மேல வந்துடுச்சு. வெங்காயம், தக்காளி...னு போட்டு எடுத்தேன். ஊர் உலகத்துல தக்காளி வரத்து குறையற நேரத்துல எங்க பகுதியில தக்காளி சக்கைப்போடு போடும். அதனால, இயல்பாவே நல்ல விலை கிடைக்கும். இப்ப வெங்காயம் போட்டு எடுத்துட்டேன். முருங்கையும் என் வயல்ல இருக்கு. இந்த பஞ்ச காலத்துலயும், நான் நஞ்சை விவசாயம் பண்றேன்னா அதுக்கு காரணம் இந்த குளம்தான்'' என்றவர்,
''தண்ணி இருந்தாலும், பல நேரங்கள்ல கரன்ட் இருக்குறதில்ல. அதனால நிலத்துல ஒரு மூலையில, பள்ளம் தோண்டி, களிமண்ணைக் கொட்டி, தொட்டி மாதிரி கட்டி வெச்சிருக்கேன். கரன்ட் இருக்கும்போது, அதுல தண்ணியை நிரப்பிக்குவேன். தேவைப்படும்போது, தொட்டியில இருந்து வாய்க்கா வழியா பாசனம் செஞ்சுக்குவேன். இந்தக் கரையில 50 வாழைக இருக்கு. அது மூலமா ஒரு வருமானம் கிடைக்குது'' என்று தான் பயன்படுத்தி பலன் பார்த்து வரும் தொழில்நுட்பம் ஒன்றை பேச்சின் போக்கிலேயே நம்மிடம் பதிய வைத்தார்!
மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் பொறியாளர் பிரிட்டோ, தன் பேச்சினூடே... தண்ணீர் சேமிக்க மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், குளங்களைப் பராமரிக்கும் முறைகள், போர்வெல் போடும்போது கவனிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் என்று நிறைய விஷயங்களைப் பகிர்ந்தார். ஒவ்வொன்றும் 'அடடா’ ரகம்.
அவை, அடுத்த இதழில்...

- Vikatan