Saturday, November 23, 2013

தங்கமே தங்கம்! ஒரு ‘நகைமுரண்’ பார்வை

ங்கத்திலேயே கோயில் கட்டுகிறார்கள் வேலூரில்; சாமியாருக்குக் கனவு வந்தது என்று தங்கப் புதையலைத் தேடி பூமியைத் தோண்டுகின்றனர் உத்தரப்பிரதேசத்தில்; 'தாலிக்குத் தங்கம்’ தருகிறது தமிழக அரசு; மகளின் திருமணத்துக்கு மாதம் 500 ரூபாய் நகைச் சீட்டு கட்டுகிறார் காய்கறி மார்க்கெட் தொழிலாளி... இப்படி எங்கெங்கும் தங்க மோகம்!
இந்தப் பூமியில் உள்ள எத்தனையோ கனிமங்களில் தங்கமும் ஒன்று. ஆனால், எப்படியோ அது மனிதகுலத்தை வசீகரித்து விட்டது.
'எல்லாம் என்னுடையது’ என்றது தங்கம்.
'எல்லாம் என்னுடையது’ என்றது வாள்.
'என்னால் எல்லாவற்றையும் வாங்க முடியும்’ என்றது தங்கம்.
'என்னால் எல்லாவற்றையும் பறிக்க முடியும்’ என்றது வாள்.
- ரஷ்ய கவிஞர் புஷ்கினின் இந்தக் கவிதை, யுத்தத்துக்கும் தங்கத்துக்குமான தொடர்பை விவரிக்கிறது.
இப்போதும் இந்தியாவில் நடைபெறும் 25 சதவிகிதக் குற்றங்களுக்கு தங்கம் சார்ந்த காரணங்களே பின்புலம். இந்தியர்களின் தங்க மோகம் வேறுபட்டது. தங்கம் என்பது, இங்கு சமூக கௌரவம்; சென்டிமென்ட். உலக அளவில் இதுவரை
சுமார் 17 கோடி கிலோ தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், இந்தியக் குடும்பங்களில் உள்ள தங்கத்தின் அளவு, சுமார் 1,87,00,000 கிலோ. சுமார் 11 சதவிகிதம்!
தங்க மோகம்... பின்னணி என்ன?
மக்கள் ஏன் தங்கம் வாங்கு கிறார்கள்? முதலீடு, சேமிப்பு என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அதன் மீது இனம்புரியாத ஓர் ஈர்ப்பு. வரலாற்றின் ஏதோ ஒரு தருணத்தில் இந்தத் தகதகக்கும் மஞ்சள் உலோகத்தின் மீது மனிதகுலத்துக்கு மோகம் வந்துவிட்டது. அது காலந்தோறும் அரசர்கள், செல்வந்தர்கள், பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள்... என சகல பிரிவினரையும் ஆட்கொண்டுவிட்டது. அதனால்தான் 5,000 ரூபாய் சம்பாதித்தாலும், 500 ரூபாய்க்கு நகைச் சீட்டுப் போட்டு குண்டுமணித் தங்கமேனும் வாங்க முயற்சிக்கின்றனர். காலத்தின் வளர்சிதை மாற்றங்களில் எத்தனையோ நம்பிக்கைகள், பழக்கங்கள், கருத்துகள் மாறியபோதிலும் தங்க மோகம் இன்னும் தொடர்வதுடன், மேலும் வளர்த்தெடுக்கப்படுகிறது.
திருமணப் பேச்சின் முதல் கேள்வியே, 'எத்தனை பவுன் நகைப் போடுவாங்க?’ என்பதில்தான் தொடங்குகிறது. தங்கள் மகளுக்கு இத்தனை பவுன் நகை போட்டுத் திருமணம் செய்து கொடுத்தால்தான் அவளுக்கும் தங்களுக்கும் கௌவரம் என்று பெற்றோர் நினைக்கின்றனர். இதனால் பெண் குழந்தை பிறந்த உடனேயே, அவளுக்காக நகை சேர்க்கத் தொடங்குகிறார்கள். இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள், தங்கள் மொத்த வாழ்நாளையும் பிள்ளைகளின் திருமணச் செலவுக்குப் பணம் சேர்ப்பதிலேயே கழிக்கின்றனர். வேறு விருப்பங்கள் பற்றி அவர்கள் சிந்திக்கவே முடியாது. இது எவ்வளவு பெரிய மன அழுத்தம்? 'இனிமேல் திருமணத்தின்போது பெண்களுக்கு நகைப் போடத் தேவை இல்லை’ என்ற நிலை இருந்தால் எப்படி இருக்கும்? கற்பனையே எத்தனை சுகமாக இருக்கிறது?!
வேட்கையைத் தூண்டும் விளம்பரங்கள்!
1990-ம் ஆண்டு வரையில் இந்தத் தங்க மோகம் வரம்புக்கு உட்பட்டே இருந்தது. இந்தியாவில் 91-ல் அறிமுகப்படுத்தப்பட்ட தாராளமயக் கொள்கை, தங்க இறக்குமதியின் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. அந்தச் சமயம் 100 கோடியை எட்டிப்பிடிக்கும் தொலைவில் இருந்த இந்திய மக்கள்தொகையை, கொழுத்த வியாபார வாய்ப்பாகப் பார்த்தார்கள் தங்க வியாபாரிகள். இந்தியா முழுவதும் பெரும் தங்க நகைக் கடைகள் படையெடுத்தன. ஏற்கெனவே இந்தியர்கள் இந்த 'மஞ்சள் பிசாசின்’ மீது  கொண்டிருந்த காதலை, தங்கள் விளம்பரங்கள் மூலம் பித்து நிலைக்குக் கொண்டுவந்தார்கள். அட்சயத் திருதியை போன்ற நாட்களைத் திட்டமிட்டு உருவாக்கினார்கள். இப்போது சினிமா நட்சத்திரங்கள் ஆளுக்கொரு நகைக்கடைக்கு விளம்பரம் செய்கிறார்கள். சென்னையில் குழந்தைகளுக்கான நகைகளை விற்பதற்கு என்றே தனியே கடை இருக்கிறது. பாதுகாப்பான முதலீடு என்பதைத் தாண்டி சமூக அந்தஸ்துக்கான அச்சாரமாக்கப்பட்டது தங்க மோகம்!

அவர்கள் என்ன ஆனார்கள்?
20 வருடங்களுக்கு முன்பு நகைக் கடை என்றால் எப்படி இருக்கும்? ஒரு சிறிய அறை, அதில் கண்ணாடித் தடுப்புக்கும் கீழே வரிசையாக அடுக்கிவைக்கப்பட்ட நகைகள், சந்தனப்பொட்டு வைத்து, வெள்ளை வேட்டி சட்டையில் வாய் நிறையப் புன்னகையுடன் வரவேற்கும் கடைக்காரர், நம்பிக்கையின் பேரில் கடனுக்குக்கூட நடந்த வியாபாரம், ரோஸ் நிறக் காகிதத்தில் மடித்துத் தரப்படும் நகைகள், கடையின் பெயர் அச்சிடப்பட்ட மணி பர்ஸ், மஞ்சள் பை... இந்தக் காட்சிகள் இப்போது கிட்டத்தட்ட வழக்கொழிந்துவிட்டன. இப்போது நகைக் கடைகள், பிரமாண்டமாக இருக்கின்றன. மூன்று, நான்கு தளங்களில் ஆயிரக்கணக்கான டிசைன்களில் நகைகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. 'இத்துணூண்டு நகையை விற்க இவ்வளவு பெரிய கடை எதற்கு?’ என்று நீங்கள்கூட நினைத்திருக்கலாம். ஆனால், எத்தனை நகைக் கடைகள் திறந்தாலும் காலை 10 மணிக்கே அதன் வாசலில் 10 பேர் நிற்கத்தான் செய்கின்றனர்.
முன்பு ஒவ்வோர் ஊரிலும் நகைக் கடை வீதி ஒன்று இருக்கும். உதாரணமாக கோவையில் டவுன்ஹால், மதுரையில் பச்சரிசிக்காரத் தெரு, தஞ்சையில் காசுக்கடை வீதி... என்று நகைப் பட்டறைகளுக்காகவே பெயர்பெற்ற வீதிகள் இருந்தன. இன்று அந்த வீதிகள் மட்டுமே இருக்கின்றன. பட்டறைகள் பெரும்பாலும் அழிந்துவிட்டன. அவற்றில் வேலை செய்தவர்களில் 90 சதவிகிதத்தினர் வேறு வேலைகளுக்கு மாறிவிட்டனர். பிரமாண்ட நிறுவனங்களின் விஸ்வரூபத்துக்கு முன்னால் சிறு வியாபாரிகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனில், இன்றைய நகைக் கடைகளில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் விதம் விதமான நகைகளை யார்தான் செய்வது? இது, துயரமான ஒரு பதிலுக்கான கேள்வி.
முன்பு சொந்தமாக நகைப் பட்டறைகள் வைத்திருந்தவர்கள்தான், இப்போதைய பிரமாண்ட நகைக் கடைகளுக்கான பட்டறைகளில் கூலிக்கு வேலை பார்க்கிறார்கள். 1995-க்குப் பிறகு படையெடுத்த 'தங்க மாளிகை’களை எதிர்கொண்டு இவர்களால் தொழில் நடத்த முடியவில்லை. பட்டறையை மூடிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக வேறு வேலைகளுக்கு மாறத் தொடங்கினர். அதிலும் தாக்குப்பிடித்து நின்றவர்களை, 2000-ம் ஆண்டுக்குப் பிறகு படையெடுக்கத் தொடங்கிய பிரமாண்ட சங்கிலித் தொடர் நகை நிறுவனங்கள் அடியோடு துடைத்து வீசிவிட்டன. இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல், 1999-ம் ஆண்டு வாக்கில் நூற்றுக்கணக்கான நகைப் பட்டறைத் தொழிலாளர்கள், நகைத் தொழிலில் பயன்படுத்தப்படும் சயனைடு உண்டு தற்கொலை செய்துகொண்டனர். இது அப்போது பரபரப்பான செய்தியானது. எஞ்சியவர்களுக்கு, வாழ்வதற்கு வேறு வழி தெரியவில்லை. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் நகை வேலை மட்டுமே. அவர்கள் அத்தனை பேரும் பெரும் நிறுவனங்களின் தொழிற்கூடங்களில் சரணடைந்தனர். இப்போதைய பிரமாண்ட நகை நிறுவனங்களின் உற்பத்திப் பிரிவில் பணிபுரிவதில் முக்கால்வாசி பேர் இவர்கள்தான்.
இவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் போக, 'இவ்வளவு நகை செய்தால், இவ்வளவு ரூபாய் ஊக்கத்தொகை’ என்று நிர்ணயிக்கப்படுகிறது. அந்த ஊக்கத் தொகையைக் கூடுதலாகப் பெறுவதற்காக இரவும் பகலும் பணிபுரிகின்றனர். அட்சயதிருதியை, முகூர்த்த நாட்கள்... போன்ற சமயங்களில் இவர்கள் மூன்று, நான்கு நாட்கள் தூக்கம் இல்லாமல் வேலை செய்தாக வேண்டும். தங்கத் துகள்களைக் கவர்ந்து சென்றுவிடக் கூடாது என்பதற்காகக் கடும் கண்காணிப்பு எப்போதும் இருக்கும். வேலை செய்யும் இடம் காற்றுப் புக வழி இல்லாத, நான்கு புறமும் அடைக்கப்பட்ட அறையாகவே இருக்கும். வேதிப்பொருள்களை நாள் முழுக்க சுவாசிக்க வேண்டியிருக்கும். இதனால் இந்தத் தொழிலில் உள்ளவர்களை ஆஸ்துமா, மூலவியாதி, தோல் நோய்கள்... போன்றவை எளிதில் தாக்குகின்றன. நாம் வாங்கும் தங்கம் ஜொலிக்கலாம். ஆனால், அதை உருவாக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையோ மங்கிக்கிடக்கிறது!
தங்கம் லாபம்... ஆனால், சரியானதா?
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏறுமுகத்திலேயே இருக்கும் விலைதான், தங்கத்தை உலக மக்களின் நம்பிக்கைக்குரிய முதலீட்டுத் தேர்வாக வைத்திருக்கிறது. பாதுகாப்பு, உத்தரவாதம், நம்பகத்தன்மை போன்ற அம்சங்களால் மக்கள் இதைத் தேர்வு செய்கின்றனர். ஆனால், தங்கத்தின் இருப்பு என்பது வரம்புக்கு உட்பட்டது.
ஒவ்வொரு நாளும் உலகின் தங்கத் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலக அளவில் தங்க உற்பத்தி ஆண்டொன்றுக்கு 2,450 டன். ஆனால், தேவை, 3,550 டன். பற்றாக்குறை, 1,100 டன். இந்தப் பற்றாக்குறை இனிவரும் ஆண்டுகளில் அதிகரித்தபடியே இருக்கும். மேலும், தங்கத்தைத் தேடி பூமியின் அடி ஆழத்துக்குச் செல்லச் செல்ல.. அதற்கான செலவும் அதிகரிக்கும். எனவே, தங்கத்தின் விலை அவ்வப்போது ஏறி, இறங்கினாலும் நீண்ட கால அடிப்படையில் ஏறுமுகமாகவே இருக்கும் என்பது இந்தத் துறை நிபுணர்களின் கருத்து. அதாவது, அவர்கள் ஒரு முதலீடு என்ற கோணத்தில் தங்கத்தை வாங்குவது லாபகரமானது என்கிறார்கள். லாபமாக இருக்கலாம்; ஆனால், சமூக நலன் நோக்கில் இது சரியானதா?
'தங்கம் என்பது ஒரு கனிமம். அதில் இருந்து வேறு எதுவும் உற்பத்தி செய்யப்படுவது இல்லை. வெறுமனே லாபத்தை மட்டுமே கருத்தில்கொண்டு இதில் கொட்டப்படும் பல லட்சம் கோடி ரூபாயை, ஆக்கபூர்வமான வேறு துறைகளுக்குப் பயன்படுத்தலாம். மின்சாரம், விவசாயம், கட்டுமானம், தொழிற்துறை போன்ற உற்பத்தி சார்ந்த துறைகளில் இந்தப் பணம் பாயும்போது, அதனால் மக்களுக்குப் பயன் உண்டு. மாறாக, தங்கத்தை வாங்கிக் குவிப்பதால் எந்தப் பலனும் இல்லை. இது, மூலதனத்தை முடக்கும் செயல். இதில் கிடைப்பதாகச் சொல்லப்படும் லாபம் என்பது, செயற்கையான யூக லாபம். தங்கத்தை ஒரு சேமிப்பு என்ற அளவில் வாங்குவது வரை சரி. முதலீடு என்ற கோணத்தில் தங்கம் வாங்குவது, சமூக நலன் நோக்கில் சரியானது இல்லை!’ என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
மக்கள் தங்கத்தை ஏராளமாக வாங்கிக் குவிப்பதால் வேறொரு பிரச்னையும் இருக்கிறது. 'நடப்புக் கணக்குப் பற்றாக்குறை’ என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கக் கூடியது. இறக்குமதி அதிகம்; ஏற்றுமதி குறைவு என்ற நிலையில், இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்தான் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை. இது, ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 2.5 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது. அதுதான் ஆரோக்கியமான பொருளாதாரம். ஆனால், இந்தியாவில் இது, 4 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது. இதற்கு, தாறுமாறான தங்க இறக்குமதியும் ஒரு முக்கியக் காரணம். இந்தியத் தங்கத் தேவையின் 97 சதவிகிதம் இறக்குமதிதான்.
கீழே உள்ள கணக்கைப் பாருங்கள். இது ஒவ்வோர் ஆண்டும் இந்தியா இறக்குமதி செய்யும் தங்கத்தின் அளவு...
2007            7,59,000 கிலோ
2008            4,81,000 கிலோ
2009            5,78,000 கிலோ
2010            9,63,000 கிலோ
2011            9,86,000 கிலோ
2012            8,00,000 கிலோ
ஆனால், உலகமே இப்படித்தான் இருக்கிறது என்பதால், 'எந்த நாடு அதிகமான தங்கம் வைத்திருக்கிறதோ... அந்த நாடுதான் பிஸ்தா’ என்ற நிலைதான் நிலவுகிறது. ஏனெனில், பொருளாதாரத் தள்ளாட்டம் எல்லா நாடுகளையும் பீடித்து வருகிறது. இந்தச் சூழலில், தத்தமது நாட்டு கரன்சிகளை நம்புவதைவிட, தங்கத்தை நம்புவதைத்தான் நாடுகள் விரும்புகின்றன. இதனால் பல நாடுகள் தங்களின் கையிருப்புத் தங்கத்தை, வாய்ப்புக் கிடைக்கும்போது எல்லாம் உயர்த்திக்கொள்கின்றன. உலக அளவில் அதிகத் தங்க கையிருப்புகொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு இப்போது 11-வது இடம்!
அதிகரிக்கும் அடகுக் கடைகள்!
தங்க நகைக் கடைகள் மட்டும் அதிகரிக்கவில்லை. அடகுக் கடைகளும் தெருவுக்கு நான்காக முளைத்துள்ளன. அவை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களாக வளர்ச்சி அடைந்துள்ளன. அந்தப் பக்கம் சினிமா நட்சத்திரங்களை வைத்து தங்கம் விற்பவர்கள், இந்தப் பக்கம் அவர்களைக்கொண்டே, அடகு வைக்கச் சொல்லி அழைக்கிறார்கள். தெருவுக்கு நான்கு நகைக் கடைகள் முளைக்க மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்ததுதான் காரணம் என்றால், தெருவுக்கு எட்டு அடகுக் கடைகள் முளைக்க என்ன காரணம்?
ஏனெனில், புதிய தாராளமயக் கொள்கை ஒரு பகுதி நடுத்தரவர்க்க மக்களைச் செழுமைப்படுத்தி இருக்கும் அதே சமயம், பெரும்பான்மை மக்களை இறுக்கிப் பிடிக்கிறது. கல்வி, மருத்துவம், அன்றாடச் செலவுகள் அதிகரித்துவிட்டன. எனவே, மக்கள் வாங்கிய நகைகளை அடகுக் கடைகளை நோக்கிக் கொண்டுசெல்கின்றனர். பொருளாதார நெருக்கடி அதிகரிக்க அதிகரிக்க, அடகுக்கடைகளும் அதிகரிக்கின்றன. உதாரணத்துக்கு, 'முத்தூட் ஃபைனான்ஸ்’ நிறுவனம்தான் தங்க நகைக் கடன் வழங்குவதில் உலகிலேயே பெரிய நிறுவனம். இந்த நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் 4,000 கிளைகள் உள்ளன. ஆனால், தேசியமயமாக்கப்பட்ட வங்கியான இந்தியன் வங்கிக்கு 2,100 கிளைகள் மட்டுமே உள்ளன. 2009-ம் ஆண்டு முத்தூட் நிறுவனத்துக்கு 985 கிளைகள்தான் இருந்தன. அதன் பிறகான நான்கு ஆண்டுகளில் 3,000 புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு கிளைகள். அதிலும் 2011-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி மட்டும் இந்த நிறுவனம் 103 புதிய கிளைகளைத் திறந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, 'ஆத்திர அவசரத்துக்குப் பயன்படுமே’ என்ற எண்ணத்துடன்தான் தங்கம் வாங்குகின்றனர். அந்த 'ஆத்திர அவசரம்’ எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதற்கு மேலே உள்ள புள்ளிவிவரமே சாட்சி. பெரும்பான்மையான நகைக் கடைகளின் பூர்விகம் கேரளாதான். அதேபோல பெரும்பான்மையான நகை அடகுக் கடைகளுக்கும் கேரளாதான் பூர்விகம். உடம்பு முழுக்க நகைகளை அணிவித்து, பெண்களை நடமாடும் நகைக் கடையைப் போல வலம்வரச் செய்வதும் கேரளப் பாரம்பரியம்தான். இந்தியாவிலேயே அதிகம் கல்வியறிவு பெற்ற மாநிலம் கேரளாதான் என்பது இதில் உள்ள நகைமுரண்.
என்னவென்று சொல்வது... செய்கூலி, சேதாரம், ஹால்மார்க், பி.எஸ்.ஐ., கே.டி.எம்., ரேட்கார்டு, பிரைஸ் டாக், க்ளியர் பிரைஸ் டாக், புரட்சி, போராட்டம்!

மகாத்மா முதல் மன்மோகன் வரை!

ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் எதற்காக இருக்கிறது? 
55 கோடி ரூபாய் பணத்துக்காகத்தான் மகாத்மா உயிரைவிட்டார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
''நான் (கோட்சே) ஏன் காந்தியைக் கொலை செய்தேன்? இப்படிப்பட்ட சிந்தனை எனக்கு எதற்காக வந்தது? தாதாபாய் நௌரோஜி, விவேகானந்தர், கோபாலகிருஷ்ண கோகலே, பாலகங்காதர திலக், வீரசாவர்க்கர் ஆகியோரின் படைப்புகளையும், இவற்றுக்கு எல்லாம் மேலாக காந்தியின் எழுத்தோவியங்களையும்தான் அதிகம் படித்தேன். நான் படித்த படிப்பெல்லாம் என் கடமை எது என்பதை உணர்த்தியது.
இந்த நாட்டைப் பிளந்து துண்டாடியவரை தெய்வம் என்று மற்றவர்கள் மதித்தாலும், என் உள்ளம் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. காந்தி மீது எனக்கு கோபம்தான் வருகிறது. காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பது எனக்குத் தெரியும். என் எதிர்காலம் சிதைந்துபோய்விடும் என்பதும் உறுதி. ஆனால், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருந்தும் அட்டூழியத்தில் இருந்தும் இந்தியா விடுதலை அடைய வேண்டும். என்னை நீங்கள் முட்டாள் என்று சொல்லலாம். ஆனால், இந்தியா பலமுள்ள நாடாக ஆகவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். இந்தியா பலமுள்ள வல்லரசாக மாற வேண்டுமானால், காந்தியின் கொள்கை​களை நாம் கைவிட வேண்டும். அவர் உயிரோடு இருந்தால், அவரது விருப்பத்தை மீறி நம்மால் செயல்பட முடியாது. அதனால்தான் அவரைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டேன். தேசத்தந்தை என்று அவர் அழைக்கப்பட்டார். ஆனால், உண்மையான தந்தைக்குரிய கடமையில் இருந்து அவர் தவறிவிட்டார். அதனால்தான் பட்டப்பகலில் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்தியைச் சுட்டேன். இது உண்மை...''
- இந்தியாவின் தலையெழுத்தைத் தீர்மானித்த மகாத்மா காந்தியின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கோட்சே அளித்த வாக்குமூலத்தின் சாராம்சம் இது!
'இந்தியாவை இரண்டு துண்டாடுவதற்கு காந்தி சம்மதம் தெரிவித்தார். தனது பிரார்த்தனைக் கூட்டங்களில் பகவத் கீதையுடன் குரான் ஓதுவதற்கு அனுமதித்தார். இந்துக்கள் கொல்லப்படும்போது அமைதியாக இருந்தவர், முஸ்லிம்கள் கொலையாகும்போது அதிகமாகக் கவலைப்பட்டார்.’ - என்றெல்லாம் காந்தி மீது கோட்சேவுக்கு கோபம் இருந்தாலும், உடனடியாக காந்தியைக் கொலை செய்தே ஆகவேண்டும் என்று ஜனவரி 30-ம் தேதியை சதி நாளாகத் தீர்மானிக்க வைக்கக் காரணம்... அந்த 55 கோடி ரூபாய் பணம்!
1947 ஆகஸ்ட் முதல் கொந்தளிப்பான காலகட்டம். இந்திய - பாகிஸ்தான் எல்லையில் ரத்தக்களறி தினந்தோறும் நடக்கிறது. அந்தச் செய்திகள் உடனுக்குடன் கோட்சேவுக்கு வருகிறது. 'நம் தாய்நாடு கூறு போடப்பட்டுவிட்டது. கழுகுகள் பாரத தேவியின் சதையைத் துண்டு துண்டாகக் கிழித்துவிட்டன’ என்று தன்னுடைய கொந்தளிப்பை வார்த்தைகளால் வடிக்கிறார் கோட்சே. கொல்கத்தா நவகாளி கலவரப் பகுதிக்குப் போய்விட்டு டெல்லி திரும்பிய காந்தி, ஏழு கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் உட்காருகிறார். இந்தக் கோரிக்கைகளில்  ஒன்றுதான், பாகிஸ்தானுக்கு இந்தியா தருவதற்கு ஒப்புக்கொண்ட பணத்தைத் தரவேண்டும் என்பது!
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்கு இந்தியா 75 கோடி ரூபாய் பணத்தைத் தரவேண்டும். இதில், 20 கோடி ரூபாய் உடனடியாகத் தரப்பட்டது. மீதம் உள்ள 55 கோடியை இந்தியா தரவேண்டும். இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திக்கொண்டு இருப்பதால், அந்தப் பணத்தைக் கொடுத்தால் அதனை நமக்கு எதிரான போருக்குப் பயன்படுத்துவார்கள் என்று இந்தியா நினைத்தது. 55 கோடியைத் தராமல் இழுத்தடித்தனர். ''இந்த 55 கோடி ரூபாயை உடனடியாக பாகிஸ்தானுக்குக் கொடுத்தால்தான் உண்ணாவிரதத்தை நிறுத்துவேன்'' என்று காந்தி சொல்லிவிட்டார். காந்தியை இனியும் உண்ணாவிரதம் இருக்க அனுமதித்தால், அவர் உயிருக்கே அது ஆபத்தாக முடியலாம் என்பதை அவரது உடல் சொல்லியது.
இப்படிப்பட்ட இரண்டு கடினமான நெருக்கடியில் பிரதமர் நேருவும் அமைச்சர் படேலும் சிக்கிக்கொண்டனர். விடுதலை வாங்கிக் கொடுத்த மகாத்மாவை அநாதையாகச் சாகவிடும் அளவுக்கு அவர்களுக்கு மனம் கல்லாக ஆகிவிடவில்லை. உடனடியாக 55 கோடியை அனுப்பிவைக்கிறோம் என்று படேல் வாக்குறுதி கொடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட காந்தி தனது உண்ணாவிரதத்தை ஜனவரி 18-ம் தேதி முடித்துக்கொண்டார்.
''பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுத்தே ஆகவேண்டும் என்று நிபந்தனை விதித்து காந்தி உண்ணாவிரதம் தொடங்கிவிட்டார்'' என்ற தகவல் கோட்சேவுக்குக் கிடைக்கிறது. இதுபற்றி   அவருடைய நண்பர் ஆப்தேவிடம் சொல்கிறார். ''இந்துக்களுக்கு எதிராக எதையாவது செய்துகொண்டே இருக்கிறார் காந்தி. இந்துக்கள் மானத்தோடு வாழ வேண்டுமானால், அது காந்தி உயிரோடு இருக்கும்வரை நடக்காத காரியம். அவரைக் கொலை செய்தே ஆகவேண்டும்'' என்று அப்போதுதான் கோட்சே முடிவுக்கு வருகிறார். அதனை அவரது சகாக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஜனவரி 30-ம் தேதி காந்தி, உயிரற்ற உடலாகச் சரிகிறார்.
காந்தியின் மீது பல்லாண்டுகளாக இவர்களுக்கு கோபம் இருந்தாலும்... உடனடிக் கோபம், பாகிஸ்தானுக்கு 55 கோடி கொடுக்கக் கூடாது என்பதுதான்!
55 கோடியை இன்னொரு நாட்டுக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்காக மகாத்மாவைப் பறிகொடுத்தோம். ஆனால், எத்தனை லட்சம் கோடிப் பணம் இந்தியாவை விட்டு வெளியில் இந்த 60 ஆண்டுகளில் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் போயிருக்கிறது?
உலக அளவில் கறுப்புப் பணம் பதுக்கலில் இந்தியாவுக்கு 8-வது இடம் கிடைத்துள்ளது. சுவிஸ் உள்ளிட்ட பல நாட்டு வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணம் 25 லட்சம் கோடி முதல் 70 லட்சம் கோடி வரை இருக்கலாம் என்று சொல்கின்றன புள்ளி விவரங்கள். இங்கே இருந்து கறுப்பாக வெளியே போய் வெள்ளையாக உள்ளே வருவதை 'முதலீடு’ என்றுகூடப் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
2000 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியாவுக்குள் வந்துள்ள அந்நிய முதலீடுகளில் 41.80 சதவிகிதம் மொரிஷியஸ் நாட்டில் இருந்தும், 9.17 சதவிகிதம் சிங்கப்பூரில் இருந்தும் வந்துள்ளது என்று கடந்த ஆண்டு மத்திய அரசு சொல்லியது. கறுப்புப் பணத்தின் கொல்லைப்புற வழி இதுதான் என்று சி.பி.ஐ. மிகத் தாமதமாகக் கண்டுபிடித்துள்ளது. மொரிஷியஸ், கேமேன் தீவுகள் உள்ளிட்ட வரியில்லாத சொர்க்கங்கள் வழியாகத்தான், இவை மீண்டும் இந்தியாவுக்குள் வருகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனையோ லட்சம் கோடி ரூபாய் வரை கணக்கில் வராத கறுப்புப் பணம் உருவாக்கப்படுகிறது என்று வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த கறுப்புப் பணத்தை அரசியல்வாதிகள் மட்டுமே போட்டு வைத்துள்ளார்கள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிடி அமைப்பின் இயக்குநர் ரேமண்ட் பேக்கர் சொன்னதாக வெளியான அறிக்கையின்படி, அரசியல்வாதிகள் போட்டுவைத்திருப்பது மொத்தமே மூன்று சதவிகிதம்தான். மற்றவை அனைத்தும் பன்னாட்டு கம்பெனிகள், தொழில் அதிபர்கள், வர்த்தக முதலைகள் பதுக்கிவைத்திருப்பது.
அதைப்பற்றி எல்லாம் கவலைப்படும் பிரதமராக இல்லை மன்மோகன் சிங். ''கறுப்புப் பணம் இருப்பது உண்மைதான். ஆனால், இந்தப் பிரச்னை எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் இருக்கிறது. இந்தியக் கறுப்புப் பணம் குறித்து ஆளாளுக்கு ஒரு தொகை சொல்கிறார்கள். எப்படி இவர்கள் இந்தத் தொகையைக் கணிக்கிறார்கள் என்று தெரியவில்லை?'' என்று எதுவும் தெரியாதவராகக் கேட்கிறார் மன்மோகன்.
ஏழை நாடு, வளரும் நாடு... என்று சொல்லிப் புலம்பியபடி பல லட்சம் கோடி ரூபாயை வெளிநாட்டில் பதுக்குவது, ஆயிரம் கோடி, லட்சம் கோடி ரூபாய் என்று ஊழல் செய்வதும் சர்வசாதாரணமாகப் போய்விட்டது என்றால், வெள்ளையர்களை விரட்டியதே உள்ளூர்க்காரர்கள் கொள்ளையடிப்பதற் காகத்தானா? இதனைத்தானே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் செய்தார்கள். அவர்களை விரட்டியதும் அதற்குத்தானே?
பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்களைப் பற்றி தாதாபாய் நௌரோஜி எழுதினார்...
''பிரிட்டிஷாருக்கு முந்தைய படையெடுப்பாளர்கள் நாட்டைச் சூறையாடி கொள்ளையடித்து திரும்பியபோது, பெரும் காயங்களை ஏற்படுத்தினர். இருப்பினும், தன் விடாமுயற்சியால் இந்தியா மீண்டும் பலம் பெற்றது. காயங்கள் ஆறின. படையெடுப்பாளர்கள் இந்தியாவிலேயே தங்கி ஆட்சியாளர்கள் ஆனபோதுகூட, அவர்களது ஆட்சி அன்றைய சூழலுக்கு ஏற்றார்போல் அமைந்திருந்ததே தவிர, நாட்டின் செல்வங்கள் ஏதும் வெளியேறவில்லை. இந்தியா உற்பத்திசெய்த பொருட்கள் இந்திய நாட்டிலேயே தங்கின.
ஆனால், ஆங்கிலேயரைப் பொறுத்தவரை பிரச்னை நூதனமானதாகும். போர்களின் மூலம் நாட்டின் மீது ஆங்கிலேயர் சுமத்திய கடன், பெரும் காயத்தை ஏற்படுத்தியது. உயிர்காக்கும் ரத்தத்தைத் தொடர்ந்து வெளியேற்றுவதன் மூலம், அடைந்த காயம் ஆறாதவாறு செய்கின்றனர்.
முன்னாள் படையெடுப்பாளர்கள் எல்லாம், இங்கும் அங்கும் வெட்டிய கசாப்புக்காரர்கள் என்றால்... ஆங்கிலேயர், நிபுணத்துவம் மிக்க கத்தியை இதயத்துக்குள் பாய்ச்சுபவர்களாக உள்ளனர். காயம் வெளியே தெரியாத அளவுக்கு நாகரிகம், வளர்ச்சி எனப் பேசி அதை மறைக்கின்றனர். அனைத்துக்கும் சவால் விட்டு இந்தியாவின் நுழைவாயிலில் காவலர்களாக நின்றுகொண்டு எத்தகைய செல்வத்தைக் காப்பாற்றுவதாகச் சொல்கிறார்களோ அவற்றையே பின்கதவு வழியாக அபகரித்து எடுத்துச் செல்கிறார்கள்''  - என்று எழுதினார் தாதாபாய் நௌரோஜி.
இன்றும் இந்த நிலைமைதான் தொடர்கிறது என்றால், இந்தியா பெற்றது சுதந்திரமா... வெறும் தந்திரமா? அல்லது சுரண்டலுக்கான சுதந்திரமா?
சுரண்டலை உணர்வோம்!

தனியார் வங்கி VS பொதுத்துறை வங்கி வீட்டுக்கடன் வாங்க எது பெஸ்ட்?

- Nanayam Vikatan

சொந்தமாக ஒரு வீட்டை வைத்திருப்பது அவசியமா அல்லது அந்தஸ்தா என்பதில் எல்லோருக்கும் இருவேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால், நம்மில் பலரும் ஒரு வீட்டை வாங்குவதாக இருந்தால், அதற்கான வீட்டுக் கடனை அரசு வங்கியில் வாங்குவதா அல்லது தனியார் வங்கியில் வாங்குவதா என்பதில் பல்வேறு கருத்துக்களுடனும், குழப்பங்களுடனும்  இருப்போம்.
அனைத்து பொதுத்துறை வங்கிகளும் வீட்டுக் கடனை வழங்கி வருகின்றன என்றாலும், எஸ்.பி.ஐ. உள்ளிட்ட ஓரிரு பொதுத்துறை வங்கிகளே வீட்டுக் கடன் வழங்குவதில் மிக தீவிரமாக இருக்கின்றன.
பொதுத்துறை வங்கிகளில் கடனுக்கான வட்டி பெரும்பாலும் சிறிது குறைவாக இருக்கும். காரணம், அவற்றுக்கு நிதித் திரட்டும் செலவு (காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்) குறைவு. அதனால் வீட்டுக் கடனை  குறைந்த வட்டியில் பொதுத்துறை வங்கிகளால் தர முடிகிறது.  
இப்படி வட்டி குறைவாக இருந்தாலும், அவற்றை விட்டுவிட்டு தனியார் வங்கிகள் அல்லது தனியார் வீட்டு வசதி நிறுவனங்களில் பலரும் வீட்டுக் கடன் வாங்குவது ஏன்? பொதுத்துறை வங்கிகளில் அப்படி என்னதான் பிரச்னை? என முன்னணி பொதுத்துறை வங்கி ஒன்றின் அதிகாரியிடம் கேட்டோம்.
''பல பொதுத்துறை வங்கிகளில் ஆள் பற்றாக்குறை இருக்கிறது. வீட்டுக் கடன் வழங்குவதற்கு என தனிப்பிரிவு சில பொதுத் துறை வங்கிகளில்தான் இருக்கிறது. யாராவது வீட்டுக் கடன் கேட்டு வந்தால், ஏதாவது ஒரு பிரிவில் இருக்கும் வங்கிப் பணியாளர்தான் அந்த வேலையைச் செய்ய வேண்டும். இதுதான் மிகப் பெரிய பிரச்னை'' என்றவர், சற்று நிறுத்தி தொடர்ந்தார்.
''வீட்டுக் கடன் வழங்குவதில் தனியார் வங்கிகளும் வீட்டு வசதி நிறுவனங்களும் மும்முரமாகச் செயல்படுவதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கவே செய்கிறது. அதாவது, அந்த நிறுவனங்கள் ஒரு மாதத்தில் இவ்வளவு தொகையை வீட்டுக் கடனாக தரவேண்டும் என இலக்கு இருக்கிறது. மேலும், தருகிற கடனுக்கு ஏற்ப ஊக்கத்தொகையும் தந்துவிடுகிறார்கள். இந்த ஊக்கத்தொகை என்பது வீட்டு வசதி நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் ஏஜென்ட்கள் வரை பிரித்துத் தரப்படுகிறது. இதனால் எல்லோரும் சுறுசுறுப்பாக வேலை பார்த்து வேகமாக வீட்டுக் கடனைத் தந்துவிடுவார்கள்.
இதுமாதிரியான இலக்கும் ஊக்கத் தொகையும் பொதுத்துறை வங்கிப் பணியாளர் களுக்கு கிடையாது. எனவேதான், இதில் அவர்கள் பெரியளவில் ஆர்வம் ஏதும் காட்டுவதில்லை'' என்றார்.
தனியார் வங்கிகளை வீட்டுக் கடனுக்கு பலரும் ஆர்வமுடன் அணுகுவது ஏன் என்று முன்னணி தனியார் வங்கி ஒன்றின் உயர் அதிகாரியிடம் பேசினோம்.
''அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்றவை பொதுத்துறை வங்கிகள் மூலம் பரிவர்த்தனை செய்யப்படு வதால் மிகக் குறைந்த செலவில் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது. ஆனால், தனியார் வங்கிகளுக்கு நிதி திரட்டும் செலவு அதிகமாக இருப்பதால் அவற்றால் அரசு வங்கிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு குறைவான வட்டியில் கடன் தர முடிவதில்லை. ஆனால், தனியார் வங்கிகள் தரும் சிறப்பான சேவையைப் பார்த்து பலரும் தேடி வரத்தான் செய்கிறார்கள்'' என்றார்.
வீட்டுக் கடன் வாங்குபவர்கள் தனியார் நிறுவனங்களை விரும்புவது ஏன் என்பது குறித்து வீட்டுக் கடன் துறையில் பத்தாண்டுகள் அனுபவம் கொண்டவரும், வீட்டுக் கடன் ஆலோசகருமான எஸ்.சிவக்குமார் விளக்கிச் சொன்னார்.
''அரசு வங்கிகளுடன் ஒப்பிடும்போது தனியார் வங்கிகள் மற்றும் வீட்டுக் கடனுக்கு என்று இருக்கும் வீட்டு வசதி நிறுவனங் களில் கடன் நடைமுறைகள் வேகமாக நடக்கும். இதற்கென இருக்கும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களை அவர்களின் அலுவலகம் அல்லது வீடு தேடி சென்று கடனுக்கான ஆவணங்களைச் சேகரிப்பது, வக்கீலிடம் லீகல் ஒப்பீனியன் வாங்குவது என்பது போன்ற வேலைகளைச் செய்து தந்துவிடுவார்கள். ஆனால், பொதுத் துறை ஊழியர்கள் அலுவலக நேரத்தில் மட்டுமே வீட்டுக் கடன் தொடர்பான வேலைகளை எடுத்துக்கொள்கிறார்கள். கடன் வாங்குபவர்கள் அலுவலக ஊழியராக இருக்கும்பட்சத்தில் வங்கிப் பணியாளர் சொல்லும் நாள் அல்லது நேரத்துக்கு கஷ்டப்பட்டுதான் வரவேண்டியிருக்கிறது. தனியார் வங்கி மற்றும் வீட்டு வசதி நிறுவனப் பணியாளர்கள், வீட்டுக் கடன் கேட்டவர்களின் வீடு அல்லது அலுவலகத்துக்கே போய் கடன் நடைமுறைகளை கச்சிதமாக செய்து முடித்துவிடுகின்றனர். தனியார் வங்கி ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமைகூட வேலை பார்ப்பார்கள். இதனால் வீட்டுக் கடனை சீக்கிரமாக தர முடிகிறது.
ஆனால், பொதுத்துறை வங்கி எனில், வாடிக்கையாளர்தான் நேரடியாக தேடிப் போய் அத்தனை விஷயங்களையும் செய்து முடிக்க வேண்டும். இந்த அலைச்சலுக்கு பயந்தே பலரும் வட்டி அதிகம் என்றாலும் தனியார் வங்கி அல்லது தனியார் வீட்டு வசதி நிறுவனத்தைத் தேர்வு செய்கிறார்கள்'' என்றார்.
இது எந்த அளவுக்கு உண்மை என பஞ்சாப் நேஷனல் வங்கியின் உதவி பொது மேலாளர் (சென்னை) கணேசனிடம் கேட்டோம்.
''வீட்டுக் கடன் சந்தையில் அதிக போட்டி ஏற்பட்டுள்ளதால், பொதுத்துறை வங்கிகளும் இப்போது வேகம் காட்டத் தொடங்கி இருக்கின்றன. பொதுத்துறை வங்கிகளில் வீட்டுக் கடன் கிடைக்க அதிக  நாட்களாகிறது என்கிறார்கள். நாங்கள் நிதானமாக ஆராய்ந்து, சரியான நபர்களுக்கும் சரியான சொத்துகளுக்கும் மட்டுமே கடன் தருவோம். வீட்டுக் கடன் வழங்க ரீடெய்ல் அசெட் பிராஞ்சுகள் நிறைய வந்துவிட்டதால், பொதுத் துறை வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்க முன்பு போல அதிக காலம் ஆவதில்லை.  
மேலும், வீட்டுக் கடன் பெறுவதற்கான ஆவணங்களை சொத்தின் உரிமையாளர் நேரில் சென்று வாங்கி வருவதுதான் நல்லது. அதாவது, நமக்கான ஆவணங்களை நாம்தான் தேடிப்போக வேண்டும். வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனப் பணியாளர்கள் வாங்கி வருவது நல்லதல்ல. இதன்மூலம் பிற்காலத்தில் பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது.
அடுத்து, சொத்துக்கான கட்டட அப்ரூவல் ப்ளான் விஷயத்தில் அரசு வங்கி கறாராக நடந்துகொள்ளும். இதனை பெற்றுத்தர கடன் பெறுபவருக்கு சற்று அதிக காலம் ஆகத்தான் செய்யும். அதேநேரத்தில், எந்த ஒரு சொத்தும் உடனே விற்பதற்கு ஏற்றதாக, எந்த வங்கிக்கு சென்றாலும் மீண்டும் கடன் வாங்கக்கூடியதாக அப்ரூவலுடன் இருப்பதுதான் சொத்தின் உரிமையாளருக்கும் வங்கிக்கும் நல்லதாக அமையும்.
அந்த வகையில், சரியான அப்ரூவல் இல்லாமல் பொதுத்துறை வங்கிகள் வீட்டுக் கடன் வழங்குவதில்லை. இதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்தை காலதாமதமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கடன் வாங்குபவர் அப்ரூவல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சரியாக சமர்ப்பித்தால் ஒரு வார காலத்துக்குள் பொதுத்துறை வங்கிகளில் கடன் கிடைத்துவிடும்'' என்றார்.
பொதுத்துறை வங்கிகளைவிட தனியார் வங்கிகளில் வீட்டுக் கடன் விரைவில் கிடைக்கும். ஆனால், கடனுக்கான வட்டி சுமார் 1% அதிகமாக இருக்கும். இப்படி கூடுதலாக கட்டப்படும் 1% வட்டியானது ஒருவர் 20 ஆண்டுகளுக்கு கட்டினால், அவர் எவ்வளவு பணத்தை அதிகமாக கட்டியிருப்பார் என்பதை ஒரு சின்ன கணக்கு மூலம் பார்ப்போம்.
ஒருவர் 25 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனை 10.5 சதவிகிதத்தில் பொதுத்துறை வங்கியில் 20 ஆண்டுகளில் திரும்பக் கட்டுகிற மாதிரி வாங்குகிறார். ஆனால், அவரது நண்பர் இதே தொகையை தனியார் வங்கியில் 11.5% வட்டியில் கடன் வாங்கி 20 ஆண்டுகளில் திரும்பக் கட்டுகிற மாதிரி வாங்குகிறார். இந்த 1 சதவிகித வட்டி வித்தியாசத்தைக் கணக்கிட்டால், தனியார் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியவர் பொதுத்துறை வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியவரைவிட சுமார் 4 லட்சம் ரூபாய் அதிகமாக கட்டி இருப்பார். 0.5% வித்தியாசம் என்றால்கூட 2 லட்சம் ரூபாய் அதிகமாக கட்ட வேண்டும்.
வீட்டுக் கடன் வாங்குவதில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளிலுள்ள சாதக, பாதகங்களைப் பட்டியலிட்டு சொல்லிவிட்டோம். நல்ல லாபகரமான முடிவு எடுப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.
- சி.சரவணன், படம்: ப.சரவணகுமார்.

 பொதுத்துறை வங்கிகளே பெஸ்ட்!
 ரவி, முகப்பேர்
''பொதுத்துறை களில் கடன் வாங்கும் முன்பே, அதற்கான கட்டணங்களையும் வட்டியையும் வெளிப்படையாக சொல்லிவிடுகிறார்கள். மறைமுக கட்டணங்கள் இல்லை. வட்டி விகிதத்தைப் பொறுத்தவரை, ஆர்.பி.ஐ. அதிகரித்த சிலநாட்களுக்குள் பொதுத் துறை வங்கிகளும் உயர்த்திவிடுகின்றன. ஆனால், தனியார் வங்கி மற்றும் தனியார் வீட்டு வசதி நிறுவனங்களில் ஆர்.பி.ஐ. அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஏற்றிவிடுகின்றன. இதனால் கூடுதலாக வட்டி கட்ட வேண்டியிருக்கிறது! என்னைப் பொறுத்தவரை, பொதுத்துறை வங்கிகளே பெஸ்ட்!''
ஆனால், அரசுத் துறை வங்கிகள் ஆமை வேகத்தில் செயல்படுவதால், பலரும் வேறு வழியில்லாமல்தான் கடன் வாங்குவதாகச் சொல்கிறார்கள்.

 விரைவான சேவைதான் தேவை!
அஜய் தீபக், பெருங்குடி
''தனியார் வீட்டு வசதி நிறுவனத்தின் விரைவான சேவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு வாரத்தில் எனக்கு கடனுக்கான காசோலையைத் தந்துவிட்டார்கள். இதே கடனை பொதுத்துறை வங்கியில் வாங்க வேண்டும் எனில், குறைந்தது இரண்டு மாதம் அலையவேண்டியிருந்திருக்கும். விரைவான சேவைதான் எனக்குத் தேவை''
எனினும், வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ.யை ஒரு மாதம் கட்டத் தவறினாலும், அபராதத் தொகையைப் போட்டு அலறவைத்துவிடுகின்றன. ஒரு முன்னணி தனியார் வங்கியில் இ.எம்.ஐ. கட்டத் தவறும் ஒவ்வொரு நாளுக்கும் 500 ரூபாய் அபராதமாம். இதே பொதுத் துறையில் வங்கியில் ஒரு நாளைக்கு 5 ரூபாய்தானாம்!

கவனிக்க வேண்டிய விஷயங்கள்...
* வீட்டுக் கடன் வட்டி விகிதம் அடிப்படை வட்டி விகிதத்துடன் (பேஸ் ரேட்) இணைக்கப்பட்டிருக்கிறதா? என்பதைக் கவனியுங்கள். பிரதான வட்டி விகிதத்தை (பி.எல்.ஆர்)விட பேஸ் ரேட் வெளிப்படையானதாக இருக்கும்.
* ஆரம்பத்தில் குறைவான வட்டி என்கிற கவர்ச்சியில் மயங்கி பலரும் வீட்டுக் கடனை வாங்கி வருகிறார்கள். இது முதல் ஓரிரு ஆண்டு மட்டுமே. அடுத்துவரும் ஆண்டுகளில் சாதாரணமாக விதிக்கப்படும் வட்டியைவிட அதிக வட்டி விதிப்பார்கள். எனவே, உஷார்!

ஆறாம் திணை - 63

-VIkatan
டந்த வாரம், பன்னாட்டு சித்த மருத்துவ மாநாட்டில் உரையாற்ற கோலாலம்பூர் பயணம். ''பன்னாட்டு உணவுகளை வரிந்துகட்டிச் சாடுகிறீர்களே... இட்லி, தோசை, கம்பங்கூழ்... இவற்றைத் தாண்டி எதையும் சாப்பிடக் கூடாதா?'' என்று அங்கும் பிலுபிலுவென பிடித்துக்கொண்ட சில நண்பர்கள், ''இன்று இரவு உங்களுக்கு  'மீ ஹோன்ங் சூப்’தான் சாப்பாடு!'' என்றனர். ஜாக்கி சான் பட வில்லன் போல ஒலித்தாலும், சூப்  சுவையாகவே இருந்தது.
இடியாப்பத்துக்கும் நூடுல்ஸுக்கும் நடுவில், ஒல்லியான சேமியா போல் இருக்கும் வஸ்துவை 'மீ’ என்கிறார்கள் சீனர்கள். அந்த மீ-யுடன், கட்டைவிரல் அளவுக்கு வளர்ந்த முளைகட்டிய பாசிப்பயறு, நம் ஊரில் அடைப்பிரதமன் பாயசத்துக்குப் போடும் வெந்த அரிசியடை, 'தோஃபு’ எனும் சோயா பன்னீர், பிராக்கோலி துண்டுகள், வெங்காயத்தாள், கொத்துமல்லி இலை இதையெல்லாம் ஒரு குவளையில் போட்டு, எதிரே ஒரு பானையில் காய்கறி சூப்பை வைத்து, ''டாக்டர், இந்தப் பானையில் இருந்து சூப்பை உங்கள் குவளையில் ஊற்றிக் குடியுங்கள்'' என்றனர். அற்புதமான சுவை!
விருந்து முடிந்து கிளம்புகையில், சூப்பைத் தயாரித்த சீனப் பாட்டிக்கு நன்றி சொன்ன போது, அந்தப் பாட்டி சொன்னதை நண்பர் மொழிபெயர்த்தார். ''நீங்க ரசிச்சுச் சாப்பிட்ட இந்த சூப், உடம்புக்கு நல்லது. சாப்பாட்டுல கவனமா இருந்தா உடம்புக்கு நோய் வராதுனு நம்புறவங்க நாங்க. நீங்க சாப்பிட்ட சூப்ல கம்போ மருந்துகள் (சீன ஜப்பானிய பாரம்பரிய மருத்துவம்) சேர்ந்திருக்கு. இந்த மீ-யில் கெமிக்கல்ஸ் இல்லை. இரவு நீங்க உறங்கச் செல்வதற்குள் ஜீரணமாகிடும். இந்த உணவே மருந்து!'' என்றார்.

விடுதிக்கு வரும் வழியில், வழியெல்லாம் உணவகத்தில் 'மீ சவான்’, 'மீ கோரிங்’... என சீன நூடுல்ஸ் உணவுகளின் படங்களை வண்ண வண்ண விளக்குகளில் அலங்கரித்திருந்தார்கள்.
பொதுவாக, சீனர்கள் உணவுப் பிரியர்கள். கிட்டத்தட்ட 35 ஆயிரம் உணவு வகைகள் சீனாவில் இருக்கின்றனவாம். அனைத்துவிதமான பழங்கள், காய்கறிகள், தானியங்களையும் வற்றலாக, மிட்டாயாக ஆக்குவதில் அவர்களுக்கு நிகர் அவர்கள்தான். மீன் வற்றல், நண்டு வடாம், இறால் அப்பளம், உலர்கொய்யா மிட்டாய், பப்பாளி சூயிங் கம், புளி கம்மர்கட்... இவற்றுடன் சித்த மருந்துகளான இஞ்சித் தேனூறலும் நெல்லிக்காய் தேனூறலும்கூட அங்கே இருந்தன. வீட்டிலேயே செய்யக்கூடிய இஞ்சித் தேனூறல், 'மைக்ரேன்’ எனும் ஒற்றைத் தலைவலி வராமல் காக்கக்கூடியது. நெல்லிக்காய் தேனூறல், அடிக்கடி சளி பிடிக்கும் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து. (இவற்றின் செய்முறை பெட்டிச் செய்தியில்)
சீனா, தாய்லாந்து, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, இந்தியா... போன்ற நாடுகளுக்கு இடையே இருந்த உணவு-மருத்துவக் கலாசாரப் பரிமாறல்கள் ஏராளம். காப்புரிமை பஞ்சாயத்துகள் வரும் முன்னரே, பல விஷயங்கள் அங்கும் இங்கும் பரிமாற்றம் நிகழ்ந்திருக்கின்றன.
'ஜாவா டீ’ மலேசியக் கடைகளில் பிரபலம். 'உடல் உறுதிக்கு, சர்க்கரை நோய்க்கு, சிறுநீரகக் கல்லுக்கு சிறந்த மருத்துவ உணவு’ என சொல்லி விற்கப்படும் அந்தத் தேநீரை வாங்கிப் பார்த்தால், 'மிசாய் குச்சிங்’ என்று மலாய் மொழியில் எழுதியிருந்தது. இது பற்றி மலாய் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, ''மிசாய் என்றால் மீசை, குச்சிங் என்றால் பூனை'' என்றார். 'நம்ம ஊர் மூலிகைப் பூனை மீசையா?’ என ஆர்வத்துடன் விசாரித்தால், சாட்சாத் இரண்டும் ஒன்றுதான்.
துளசிச் செடி போலவே இருக்கும் அந்த மூலிகைப் பூனை மீசை, சர்க்கரை வியாதியில் வரும் ஆரம்பகட்ட சிறுநீரக நோய்களுக்குப் பயனளிக்கும் ஒரு மூலிகை. 4000, 5000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த இரு நாடுகளுக்கு இடையே தொன்றுதொட்டே ஒரு பாரம்பரியப் புரிதல் இருந்திருக்கிறது. சோழர் காலத்தில் சென்றிருக்கலாம் அல்லது லெமூரியக் குடிகளின் அறிவுச் சொத்தாக இருந்திருக்கலாம்.
வணிக இரைச்சலில் ஓரமாக ஒடுங்கி வயோதிகச் சுருக்கங்களில் ஒளிந்திருக்கும் பாரம்பரிய அறிவையும், அக்கறைகளையும் மீட்டெடுத்துப் பயனாக்குவது, பின்னாளில் சில இறுக்கமான நோய்ப்பிடியிலிருந்து நம்மை விடுவிக்க நிச்சயம் வழிவகுக்கும்!
- பரிமாறுவேன்...
இஞ்சித் தேனூறல் - நெல்லிக்காய் தேனூறல்
இஞ்சித் தேனூறல் செய்ய, இஞ்சியின் மேல்தோலைச் சீவி நீக்கிவிட்டு, பின் சிறு கீற்றுகளாக நறுக்கி, தேனில் ஊறவைக்கவும். நெல்லிக்காய்த் தேனூறலுக்கு, நெல்லிக் காயின் கொட்டையை நீக்கிவிட்டு, சதைப் பகுதியை சிறு பூண்டுகளாக நறுக்கி, லேசாக உலர்த்திய பின் தேனில் ஊறவைக்கவும். சிலர் நெல்லியை சில நிமிடம் மட்டும் ஆவியில் வேகவைத்த பின்னரும் தேனில் ஊற வைப்பர். எளிதில் புளித்துவிடும் என்பதால், அவ்வப்போது குறைந்த அளவில் செய்வது சிறப்பு!

ஆறாம் திணை - 62

நாகரிகம், நம் பாரம்பரியப் புரிதலையும் வாழ்வியல் கூறுகளையும் சிதைக்கும் வேகம் மிகப் பயங்கரம். அதிஅவசரங்களில் மூழ்கிய நம் காலைப் பொழுதுகளுக்கு நாம் காவு கொடுத்தது, காலை உணவை!
பொறியியல் பொறியில் அதிகாலையிலேயே சிக்கிக்கொள்ளும் இளைஞன், கார்ப்பரேட் கண்ணி இறுக்கும் நவயுவதி, 'ஓட்ஸ் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும்’ என அமெரிக்காவிலிருந்து மகனின் வழிகாட்டலில் வாழும் உள்ளூர் அப்பா, 'இவங்களை எல்லாம் கிளப்பி அனுப்பவே நேரம் சரியா இருக்கு’ எனும் 'ஐயோ பாவம்’ அம்மாக்கள்... இவர்கள் எல்லோருமே காலை உணவைத் தொலைத்து பல யுகங்கள் ஆயிற்று!
இரவில் எட்டு மணி நேரம் அமில ஊறலில் இருக்கும் இரைப்பை, காலை உணவைச் சாப்பிடாவிட்டால் அமிலத்தால் சிதையத் தொடங்கும் என்பது ஏன் பலருக்கும் புரிவது இல்லை. காலை உணவின் மூலம் இரைப்பையை நிரப்பாமல் இருந்தால், இரவில் உடலில் இயல்பாக ஏறிய பித்தம் மெதுவாகத் தலைக்கு ஏறும். அது வயிற்றுப் புண், வயிறு உப்புசம், தீவிர வயிற்று வலி, வாந்தி, பசியின்மை, அதிக ரத்தக்கொதிப்பு, மன அழுத்தம் வரை பல நோய்களைக் கொண்டுவந்து சேர்க்கும். காலை 9 மணிக்குள் சாப்பிடாமல், 11 மணிக்கு எழும் அகோரப் பசியில் பர்கர், பீட்சா அல்லது வென்னிலா மில்க்ஷேக் என சாப்பிடுவதில் எக்குத்தப்பாக எகிறும் டிரான்ஸ்ஃபேட் கொழுப்பும் கலோரியும் அடிவயிற்றில் படிந்து பெருகும்.
காலையில்தான் மிகச் சிறப்பான தேர்ந்தெடுத்த உணவு மிக அவசியம். தினையரிசிப் பொங்கல், வளரும் குழந்தை உள்ள வீட்டுக்கும்; வரகரிசி உப்புமா, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஊக்கமாக வேலைசெய்ய விரும்புவோருக்குமான மினி டிஃபன். 'அதெல்லாம் எப்படிச் செய்வது?’ எனப் பதற வேண்டாம். பொங்கல், உப்புமா செய்யத் தெரிந்தவர்களுக்கு இதுவும் சாத்தியமே!
அரிசிக்குப் பதில் தினை. ரவைக்குப் பதில் வரகரிசி.
'விடிஞ்சும் விடியாத அதிகாலைல அவசர அவசரமா ஓடுற நாங்க என்ன பண்றது?’ என கேட்பவர்களுக்கு, இருக்கவே இருக்கிறது மாப்பிள்ளைச் சம்பா அவல் பிரட்டல். அடுப்படிக்குப் போகாமலே இதனைச் செய்ய முடியும். அதிலும் சர்க்கரை எட்டிப்பார்க்காத பாக்கியவான்கள் ஆர்கானிக் வெல்லமிட்டு இதைச் சாப்பிட்டால் அமிர்தம்!
காலையில் புத்திசாலித்தனமாக மூளை வேலைசெய்யவும், நோய் எதிர்ப்பாற்றல் நிறைந்திருக்கவும் பப்பாளிப் பழத் துண்டுகள், மாதுளைமுத்துகள், மலை வாழைப்பழம், நிலக்கடலை, காய்ந்த திராட்சை... என ஏதேனும் இருக்க வேண்டும். கேழ்வரகு இட்லி, பலதானியத் தோசை என எதுவுமே காலையில் நல்லதுதான்.

ர்க்கரை வியாதியினர் கஞ்சியைத் தவிர்க்கவும். கஞ்சி ஹைகிளைசிமிக் தன்மை உடையது. சிறுதானியமாக இருந்தாலும் அடையாகவோ, தோசையாகவோ, உப்புமாவாகவோ பிற காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவதுதான் சர்க்கரை ரத்தத்தில் சேர்வதை மெதுவாக்கும். பல கீரைகளில், 'ஆல்ஃபா அமைலோஸ் இன்ஹிபிட்டர்’ எனும் தாவரச் சத்து இருக்கிறது. இது, ரத்தத்தில் வேகமாக சர்க்கரை கலப்பதைத் தடுக்கும் தன்மைகொண்டது. கீரையுடன் சேர்த்து எந்தத் தானிய உணவைச் சாப்பிட்டாலும் இந்தப் பயனைப் பெறலாம். உயிர் போகும் காரணமாகவே இருந்தாலும், சர்க்கரை நோயாளிகள் காலை உணவைத் தவிர்க்கவே கூடாது!
சத்துமாவுக் கஞ்சி, தமிழர்களை பல தலைமுறைகளுக்கு ஊக்கப்படுத்திய ஊட்ட உணவு. கர்ப்பிணிப் பெண், பாலூட்டும் பெண், கைக் குழந்தை, வளரும் குழந்தை என அனைவருக்குமான காலை உணவில் இந்தக் கஞ்சிக்குத்தான் முதல் இடம். சிவப்புச் சம்பா அரிசி (கிடைத்தால் மாப்பிள்ளை சம்பா), முளைகட்டி உலரவைத்த பாசிப்பயறு, சிவப்புக் கொண்டைக்கடலை, நன்கு வறுத்த தொலிஉளுந்து, நிலக்கடலை, பொட்டுக்கடலை, பார்லி அரிசி, சம்பா கோதுமை, தினையரிசி, கேழ்வரகு, வரகரிசி, குதிரைவாலி அரிசி... இவையெல்லாம் வகைக்கு 250 கிராம், முந்திரிப் பருப்பு 100 கிராம், தோல் சீவிய சுக்கு 50 கிராம் எடுத்து, எல்லாவற்றையும் வறுத்து மாவாகப் பொடி செய்துகொண்டால், அதுதான் சத்துமாவு. இதனைத் தேவைப்படும் அளவுக்கு 3-4 ஸ்பூன் (30 கிராம்) அளவில் எடுத்து கஞ்சியாகக் காய்ச்சி, விருப்பப்பட்டால் பாலும் வெல்லமும் கலந்து சாப்பிடலாம். இதே மாவை காரம் சேர்த்து கொழுக்கட்டையாகவும், வெல்லம் சேர்த்து மாலாடு உருண்டையாகவும் பிடிக்கலாம். மிக அத்தியாவசியமான புரதம், கால்சியம் மற்றும் நுண் கனிமங்களுடன் உங்கள் ஆயுளின் அத்தனை காலைகளையும் உற்சாகமாக்கும் வல்லமைகொண்டது, இந்தச் சத்துமாவு!

கதறவைக்கும் ஈழக் காட்சிகள்!

காமன்வெல்த் மாநாடு ராஜபக்ஷேவின் காலைச்​சுற்றிய பாம்பாக மாறி​விட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லி அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் மிகப்பெரிய இன அழிப்பு யுத்தம் அங்கு முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி தமிழர்களுக்கு உரிமைகளை மறுத்துவந்தது இலங்கை அரசு. விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையிலும் தமிழர்களுக்கு எந்த உரிமையையும் அந்த அரசு தர மறுத்துவருகிறது. ஆனால், அந்தக் கொடூரங்களை உலக நாடுகள் புரிந்துவைத்துள்ளன. தன் மீதான களங்கங்களைத் துடைப்பதற்காக காமன்வெல்த் மாநாடு நடத்துவதற்கான முயற்சிகளை ராஜபக்ஷே எடுத்தார். ஆனாலும் அவரது எண்ணம் நிறைவேறவில்லை. 
'காணாமல் போனவர்கள் எங்கே?’
காமன்வெல்த் மாநாடு கொழும்பில் நடப்பதால் உலகத்தின் பார்வை இலங்கை மீது பட்டது. அப்போதும் தமிழர்கள் முழுமையாக அலட்சியப்படுத்தப்பட்டார்கள். இலங்கையின் தலைநகர் கொழும்பில் காமன்வெல்த் மாநாடு கோலாகலமாக நடந்த சமயத்தில், 'ராணுவத்தில் சரணடைந்த எங்கள் உறவினர்களை எங்கே?’ எனக் கேட்டு அமைதியான முறையில் தமிழர்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த மக்களை சர்வதேச ஊடகங்களுக்கு முன்னாலேயே ஷூ கால்களால் எட்டி உதைத்து ராணுவத்தினர் அட்டூழியம் செய்து இருக்கின்றனர்.
அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனந்தி சசிதரன், விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி. முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிகப்படியான விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபைக்குத் தேர்வானவர். ராணுவத்திடம் சரணடைந்த இவரது கணவர் எங்கு இருக்கிறார் என இன்னமும் தெரியவில்லை. அனந்தியிடம் பேசினோம்.
'வடக்கு கிழக்கு மாகாணங்களில் உயிர் உருக்கும் பிரச்னை​யாக இருப்பது, 'சரணடைந்தவர்கள் எங்கே? காணாமல்போன எங்கள் உறவுகள் எங்கே?’ என்ற கேள்விகள்தான். பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேணும் என்று சொல்லித்தான் யாழ்ப்பாணம் நூலகம் முன்பு போராட்டம் நடத்தினோம். பல குடும்பங்கள் அழிந்து உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வரும்போது, நாங்கள் யாருமே இயல்பு வாழ்க்கை வாழவில்லை, சரணடைந்த எங்கள் உறவுகள் எங்கே... என்பதை கருத்தில் கொண்டுதான் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டோம். ராணுவ புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக எங்களைப் பயம் காட்டிக்கொண்டே இருந்தனர். தடியடி நடத்தத் திட்டம் தீட்டினார் நாங்கள் யாழ்ப்பாண நூலகம், முனியப்பர் கோயிலில் அருகே வாயை கறுப்பு துணியால் கட்டி, சரணடைந்த எங்கள் உறவினர்களின் புகைப்படங்களை வைத்து கவனஈர்ப்புப் போராட்டத்தை நடத்தினோம்.
நாங்கள் உணர்வுபூர்வமாக ஒரு போராட்​டத்தை நடத்திக்கொண்டு இருக்கும்போது, அங்கு இருந்த போலீஸார் பெண்களின் மார்புகளில் கையை வைத்து மோசமாகத் தள்ளினார்கள். நான் அங்கு இருந்த போலீஸ் அதிகாரிகளிடம், 'எங்கள் பெண்களை அடிக்க எந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கும் அதிகாரம் இல்லை. பெண் போலீஸாரை வரச் சொல்லுங்கள்’ என்றேன். 'அப்படி உங்க இஷ்டத்துக்கு கொண்டு வர இயலாது’ என்று சொன்னது மட்டும் அல்லாமல் 'ஊர்வலம் முடியட்டும்.. உன்னை கவனித்துக்கொள்கிறேன்’ என்று சொல்லி என்னைச் சரமாரியாக அடித்தார்கள். அன்று நாங்கள் சர்வதேச ஊடகங்களுக்கு முன்னால் மோசமாகத் தாக்கப்பட்டோம். சர்வதேச ஊடங்கள் இருக்கும்போதே எங்களை இப்படித் தாக்கினார்கள் என்றால், மற்ற நேரங்களில் எங்களை எவ்வளவு சித்ரவதைகள் செய்து இருப்பார்கள் என்று நினைத்துப்பாருங்கள்'' என்று தழுத்தழுத்தார்.
''பெண்களை உதைத்தார்கள்... மிதித்தார்கள்''
அவரே தொடர்ந்து பேசினார். 'பெண்கள் என்றும் பாராமல் கழுத்தில், மார்பில், வயிற்றிலும் போலீஸார் எட்டி உதைத்தனர். நான் வட மாகாண சபை உறுப்பினர். எனக்கு போராடும் உரிமை இருக்கிறது என்பதை சொல்லியும் அவர்கள் எல்லை மீறினார்கள். மக்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று கேமரூனுக்கு காட்ட நினைத்தார்கள். நாங்கள் உடுப்புக்கோ, செருப்புக்கோ, சாப்பாட்டுக்கோ அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவில்லை. ராணுவத்தில் சரணடைந்த எங்கள் உறவுகள் எங்கே என கேட்டுத் தான் போராட்டம் நடத்தினோம்' என்றார்.
''அமைதியாகச் சென்ற எங்களைத் தாக்கினார்கள்''
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரான துரைராசா ரவிகரனிடம் பேசினோம். இவரும் அந்தப் போராட்டக் களத்தில் இருந்தவர்.
'காணாமல் போனோரின் உறவினர்கள், கணவனை இழந்த பெண்கள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்.. என பலரும் போராட்டம் நடத்தினோம். கொழும்பில் சிறிகோத்தா என்ற இடத்தில் இடம்பெற்ற மனித உரிமைக் கண்காட்சியில் பங்கேற்பதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து சகாயம் என்பவர் தலைமையில்  மக்கள் திரண்டார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து என் தலைமையில் நாங்கள் புறப்பட்டுச் சென்றபோது மதவாச்சி என்ற இடத்தில் வைத்து சிங்கள ராணுவம் மடக்கி திருப்பி அனுப்பியது. இதேபோல மன்னாரில் இருந்து வணபிதா செபமாலை அடிகளார் தலைமையில் வந்தவர்களையும் திருப்பி அனுப்பினர். இந்த சூழ்நிலையில் நாங்கள் வவுனியா நகரசபை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்த தீர்மானித்தோம். டேவிட் கேமரூன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த நாளன்று, யாழ்ப்பாணம் துரையப்பா ஸ்டேடியத்துக்கு அருகில் இருக்கும் முனியப்பர் கோயிலடியில் காலை 9 மணியில் இருந்து ஏராளமானவர்கள் கூடி இருந்து தங்களுடைய கவன ஈர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
அங்கு சிறிது நேரம் கழித்து ஹெலிகாப்டர் சத்தம் கேட்டது. அப்போது கேமரூன் வருகிறார் என்ற நோக்கோடு அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ்.கஜேந்திரன், வட மாகாண சபை உறுப்பினர்களான நான் மற்றும் அனந்தி சசிதரன், பொதுமக்கள் அனைவரும் எழுந்து யாழ் நூலகத்துக்கு முன்பாக உள்ள வீதியோரமாக எந்தவித இடையூறுமின்றி கைகளில் படங்களை ஏந்தியபடி கவலையை வெளிப்படுத்தும் விதமாக அழுதுகொண்டே ஊர்வலமாக நடந்து சென்றோம். மக்களும் கூட்டமாகக் கூடிவிட்டதால் போலீஸார் எங்களைத் தள்ள... நாங்களும் போலீஸாரைத் தள்ளினோம். வயதானவர்கள் பலர் கீழே விழுந்தனர். பிள்ளையைத் தேடி வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வயதான தாயருவரை போலீஸார் சப்பாத்துக் கால்களால் உதைத்ததில் அவர் இடறப்பட்டு கீழே விழுந்து கிடந்ததை நான் நேரில் பார்த்தேன்.
அந்த நேரம் சேனல் 4 ஊடகவியலாளர்கள் ஓடி வந்தனர். பிள்ளைகளைக் காணாது துயரத்தில் இருந்த பெற்றோர் அவர்களைக் கட்டிப்பிடித்து அழுதனர். இதைக் கண்டு அந்த ஊடகவியலாளர்களும் அழுதுவிட்டதை பக்கத்திலிருந்த நானும் நேரில் பார்த்தேன். இதற்கு நிச்சயம் தாங்களும் தங்களால் இயன்ற நடவடிக்கையினை எடுப்பதாக அவர்கள் மக்களிடம் கூறினர்'' என்றார்.
சுற்றிலும் உளவாளிகள்!
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக கொழும்பு வந்தி​ருந்த டேவிட் கேமரூன், இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் உதயன் பத்திரிகையையும் பார்வையிட்டார்.
உதயன் நாளிதழின் நிர்வாக இயக்குனர் சரவணபவனிடம் பேசினோம். 'காமன்வெல்த் மாநாட்டை வைத்து மட்டும் இலங்கையில் மாற்றம் நடந்துவிடும் என்று கருத முடியாது. எல்லாம் சாதாரண நிலைக்கு திரும்பிவிட்டதாக ராஜபக்ஷே அரசு சொல்கிறது. ஆனால், எந்த மாற்றங்களும் இதுவரை நடக்கவில்லை என்று இங்கு இருக்கும் மக்களுக்குத் தெரியும். காமன்வெல்த் மாநாட்டுக்கு இலங்கை வந்திருந்த கேமரூன் முக்கியமாக மூன்று இடங்களைப் பார்த்தார். முதலாவதாக வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினார். இரண்டாவதாக, பல வருடங்களாக மக்கள் குடியேற்றப்படாமல் இருக்கும் முகாம்களைப் பார்த்தார். அதன் பிறகு எங்கள் ஸ்தாபனமான உதயன் பத்திரிகைக்கு வந்திருந்தார்.
கேமரூன் வரும்போது எங்களுடைய ஸ்தாபனத்தை சுற்றி உளவாளிகள் இருந்தனர். அதாவது ராணுவ உளவாளிகள் நிறைய பேர் எங்களைச் சுற்றிப் போடப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் எங்களுடைய பக்கத்தில் இருந்த ஒரு கட்டடத்தின் மூன்றாவது மாடியில் நின்று அவதானிக்க முற்பட்டார்கள். ஆனால், அந்த கட்டடமும் எங்களுடைய ஸ்தாபனத்துக்குச் சொந்தமானது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் அவர்களிடம் கொஞ்சம் உருக்கமான தொனியில் சொல்லி அப்புறப்படுத்தினோம்'' என்றார்.
''நீங்கள் மிகவும் துணிச்சலான வீரர்கள்!''
தொடர்ந்து பேசிய அவர், 'நேரடியாக வந்த கேமரூன், எங்கள் அலுவலகத்தின் பல இடங்களையும் அதன் நிலைமைகளையும் சரியாகப் பார்த்து, உண்மையில் என்ன நடக்கிறது என்பதையும் தெரிந்துகொண்டார். உதயன் பத்திரிகை காலம் காலமாகத் தொடர்ச்​சியாகத் தாக்கப்பட்டு வந்துள்ளது. இதை தாக்கியவர்களில் ஒருவரைக்கூட இலங்கை அரசு இதுவரை கைது செய்யவும் இல்லை. கிட்டதட்ட முப்பதுக்கும் மேற்பட்ட அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிட்டன. எங்கள் ஊடகத்தைச் சேர்ந்த பலர் கொடூரமாகக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதை எல்லாம் கேமரூனிடம் சொன்னோம். எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டார்.
நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும் புகைப்​படத்தை நீங்கள் பார்த்தால் பின்னாடி சிவப்பு மையால் வட்டமிட்டு இருப்போம். அவை இலங்கை ராணுவம் எங்கள் பத்திரிகை மீது தாக்குதல் நடத்திய துப்பாக்கி ரவைகள் துளைத்துச் சென்ற இடங்கள். இன்று வரை நாங்கள் அதை வட்டமிட்டு அழிக்காமல் வைத்து இருக்கிறோம். எங்கள் பத்திரிகையாளர்கள் பலர் கொல்லப்பட்டதையும் சொன்னோம். படங்களைப் பார்த்து அனுதாபங்களை தெரிவித்தார். எங்கள் ஸ்தாபனத்தில் தாக்குதல் நடந்த இடங்களை எல்லாம் பார்வையிட்டார்.  கேமரூன் போகும்போது எங்கள் ஊடகவியலாளர்களைப் பார்த்து பேசி ஒரு படமும் எடுத்தார். எங்களது ஊடகவியலாளர்களிடம் 'நீங்கள் மிகவும் துணிச்சலான வீரர்கள். உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்!’ என்றும் சொன்னார். அவரது ஃபேஸ்புக், டிவிட்டர் தளத்திலும் இதையே நிலைத் தகவலாகவும் வெளியிட்டார்' என்கிறார் சரவணபவன்.
இங்கிலாந்து பிரதமரை நினைக்க பெருமையாக இருக்கிறது!
- நா.சிபிச்சக்கரவர்த்தி, செ.கிரிசாந்

ஆறாம் திணை - 61

தினை, கண்ணுக்கு நல்லது; கம்பு, பெண்ணுக்கு நல்லது! கேழ்வரகு வளரும் குழந்தைக்கும், பனிவரகு வளர்ந்த பெரியவருக்கும் நல்லது! - இதனால் மட்டும் நான் சிறுதானியங்களை உயர்வாகச் சொல்லவில்லை. சிறுதானியங்களின் சாகுபடிக்கு ஆகும் தண்ணீரின் அளவு, நெற்பயிருக்கு ஆகும் செலவைக் காட்டிலும் மிகவும் குறைவு. இன்னொரு விஷயம், சிறுதானிய சாகுபடிக்கு மண்ணைப் புண்ணாக்கும் உரங்களோ, பூச்சிக்கொல்லி ரசாயனங்களோ தேவை இல்லை. இரண்டாம் உலகப் போரில் மீந்துபோன வெடிமருந்து உப்பை, எப்படியாவது விற்றுப் பிழைக்கவேண்டி இருந்ததால் உருவானதுதான் உரங்களின் வரலாறு என்று பலருக்கும் தெரியாது. இப்போது கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் மானியத்தில் இந்தியாவின் மண்ணைக் கெடுக்கும் இந்த உரத்தின் பயன், குழந்தைக்குத் தரவேண்டிய தாய்ப்பாலை ஒதுக்கிவிட்டு புட்டிப்பாலில் புளகாங்கிதம் அடைவதைப் போலத்தான்.
1960-களில் ரேச்சல் கார்சனின் 'சைலன்ட் ஸ்பிரிங்’ நூல் மட்டும் வெளியாகவில்லை என்றால், 'டிடிடீ’ எனும் பூச்சிக்கொல்லி மருந்தின் நச்சுமுகம் பலருக்கும் தெரிந்திருக்காது. 'என்னடா... கொஞ்ச நாட்களாக, இளவேனிலின் வருகையை அறிவிக்கும் ராபின் பறவையின் குரலைக் காணவில்லையே?!’ எனப் பதறித் தேடிய விஞ்ஞானி ரேச்சல் கார்சன், 'டிடிடீ’ துணுக்குகள், ராபின் பறவையின் முட்டையின் மீது படிந்து அதன் வலுவைக் குறைத்து, முட்டைகளை உடைத்து நொறுக்கி... சத்தம் இல்லாமல் ஓர் இனப்படுகொலை நடத்துவதைக் கண்டறிந்தார். அவரது ஆய்வுக் கட்டுரையின் நூல் வடிவம்தான் உலகை உலுக்கிய 'சைலன்ட் ஸ்பிரிங்’ (தமிழில்: மௌன வசந்தம்)!
ராபின் பறவையின் முட்டையில் பிரச்னை எட்டிப்பார்த்தபோது அவ்வளவாகப் பதறாத அறிவியல் உலகம், அப்பாவி மனிதனான ராபினுக்கு உயிரணுக்கள் குறையும்போதும், 'எனக்கு மட்டும் ஏன் இப்படிக் குழப்புகிறது?’ என அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்து மருகும் ராமலட்சுமியின் சினைப்பையில், முட்டையைவிட நீர்க்கட்டிகள் அதிகமானதைப் பார்த்தபோதும், 'இது ரசாயனத் துணுக்குகளின் உக்கிரவேட்டையாக இருக்குமோ?’ என யோசிக்கத் தொடங்கியிருக்கிறது. சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, புற்றுநோய்... என தினம் நோய்க்கூட்டங்கள் கட்டுக்கடங்காமல் பெருகுவதைப் பார்த்த பின்னர்தான், 'உற்பத்தி என்ற பெயரில் உணவைச் சிதைத்துவிட்டோமோ?’ என யோசிக்கத் தொடங்கியிருக்கிறது.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற மிகத் தெளிவான ecocentrism புரிதலோடு இருந்த நாம், மனித சுயநலனை மட்டும் முன்நிறுத்தி வாழும் வாழ்வியலுக்குள் (anthropocentrism) சிக்கவைக்கப்பட்டது யாரின் சூழ்ச்சி? உலகை அரைகுறையாகப் புரிந்துகொண்டு, இயற்கையை வெற்றிகொண்டதாக நினைத்து, பூமியின் ஒட்டுமொத்த உரிமையாளன் நாம்தான் என்ற எண்ணத்தில், பூமியை அதன் கடைசிக் காலத்தை நோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறோம்.
இந்த உலகில் பிறந்த ஒவ்வோர் உயிரினத்துக்கும் பூமியில் வாழ முழு உரிமை உண்டு. 'பூமி’ என்ற புகைவண்டியில் எஸ் 6-ல் படுக்கை வசதியுடன் ரிசர்வ் செய்து பயணிக்கும் பயணிதான் மனிதன். ரயில் சினேகத்தில் எதிர் படுக்கைக்காரரிடம், 'மேல் படுக்கைக்கு என்னால் ஏற முடியாது சார்... கீழ் படுக்கை தர முடியுமா?’ எனக் கேட்கலாமே தவிர, அவருக்கு உரிய படுக்கையில் வம்படியாகப் படுப்பதோ, ரயில் பாதைக்கு அருகேதான் உங்கள் வீடு இருக்கிறது என்பதற்காக, வீட்டுக்கு அருகே ரயிலை நிறுத்துவதோ எங்கேயாவது சாத்தியமா? ஆனால், நவீனகால மனிதன் பூமி விஷயத்தில் அதைத்தான் செய்கிறான்.
இயற்கை உணவுச்சங்கிலியில் ஒரு கண்ணிதான் மனிதன் என்பதும், கண்ணுக்குத் தெரியாத ஒரு சின்ன வைரஸ்கூட மனிதனை 'கண்ணம்மாபேட்டை’க்கு அனுப்பும் வலுகொண்டது என்பதையும் பல நேரம் நாம் உணர மறுக்கிறோம்!  
ஒருகாலத்தில் பூமியை ஒட்டுமொத்தமாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இனம் டைனோசரஸ். அதை இப்போது கல் பதிவுகளில் மட்டுமே பதித்திருக்கிறது இயற்கை. அதேபோல இன்னோர் உயிரினம், மனிதனின் கல் பதிவுகளைப் பார்த்து, 'பயங்கரப் புத்திசாலியான சுயநல இனம் ஒண்ணு இருந்துச்சு. அதுக்கு, 'மனுஷன்’னு பேர். அது இங்கேதான் இருந்துச்சு தெரியுமா?!’ என கதை பேசும் நிலை சீக்கிரமே வரலாம் என்பதை மறந்துவிடக் கூடாது.  
'அண்டத்திலுள்ளதே பிண்டம்; பிண்டத்திலுள்ளதே அண்டம். அண்டமும் பிண்டமும் ஒன்றே... அறிந்துதான் பார்க்கும்போதே!’ என பிரபஞ்சத்தின் ஒரு கூறாக மட்டுமே தன்னைப் பார்த்தது நம் தமிழ் இனம். முல்லைக்குத் தேர் கொடுத்த 'பாரி’யாகட்டும், மயிலுக்குப் போர்வை கொடுத்த 'பேகனா’கட்டும், மணிகள் ஒலிக்க வேகவேகமாகத் தேரோட்டி வந்தபோது, மணியோசையில் சிறு பறவைகள் பதறித் திரிவதைப் பார்த்து மனம் வெதும்பி, மணியின் நாக்குகளைக் கட்டச் சொன்ன 'தாதூண் பறவை பேதுறல் அஞ்சி மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரனா’கட்டும், 'இந்த மரத்தை வெட்டியா எனக்கு மருந்து வேண்டும், அதற்கு நான் மடிந்துபோகிறேன்’ என பேசிய அந்த நாள் மனிதனாகட்டும்... இவர்கள் எல்லோரிடமும் வெளிப்படுவது உயிர் நேயத்தின் உச்சங்கள்தானே! 'கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்தகுடி’ என எத்தனை நாள் வெற்றுப் புளகாங்கிதம் பேசிக்கொண்டிருப்போம். கொஞ்சம் அந்தக் குடியின் உயிர்பன்மய வாழ்வியலை உற்றுப்பார்த்து, பிற உயிரையும் உலகையும் நேசித்துதான் வாழ்ந்துபோவோமே!
- பரிமாறுவேன்...

-Vikatan

ஆறாம் திணை - 60

ருத்தரித்த பெண்ணுக்கென நம் பாரம்பரியம் தேடித்தேடிச் சொன்ன வைத்திய முறைகளை மெள்ள மெள்ள மறந்துவிட்டோம். 'கன்சீவ் ஆயிட்டீங்களா? வாழ்த்துகள், நல்ல டாக்டரா உடனே போய்ப் பாருங்க’ என மருத்துவமனையையும் மருத்துவரையும் மட்டும் நம்பி இருக்கும் கர்ப்பக்கால வாழ்வியல் வந்துவிட்டது. மகப்பேறு மருத்துவம், மிக அவசியமான மருத்துவத் துறை. ஆனால் கருத்தரித்த காலம் முழுமையும், மருந்தையும் டானிக்கையும் தாண்டி மற்ற எந்தப் பாரம்பரிய மருத்துவ விஷயங்களையும் புறக்கணிப்பது வேதனையான விஷயம். தம் குடும்ப மருத்துவரை அணுகி தேவையான பாதுகாப்பு விஷயங்களை அறிந்துகொள்வதும், தன் உடல் நோய் எதிர்ப்பாற்றல், சர்க்கரை, ரத்தக்கொதிப்பின் அளவு, தொற்று நோய்கள் இருப்பு ஆகியவற்றை, கருத்தரித்த பெண் அறிந்துகொள்வது மிக அவசியம். இந்த நவீன மருத்துவ அறிவியல்தான், மகப்பேறுகால உயிரிழப்பையும், பேறுகாலத்தின்போது குழந்தை மரணம் அடைவதையும் பெருவாரியாகக் குறைத்திருக்கிறது.
அதேசமயம், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் சுகப்பிரசவங்கள் அதிகமாக நடக்க, நம் ஊரில் மட்டும் சிசேரியன் பிரசவம் அதிகமாவது ஏன்? நம் ஊர் பெண்களின் இடுப்பு (Pelvic) நலம் குறைந்தது காரணமா? அல்லது சிசேரியன் பிரசவம், சுகப்பிரசவத்தைக் காட்டிலும் மருத்துவருக்கு கொஞ்சம் ரிஸ்க் குறைவு என்ற நிலை காரணமா? அல்லது 'சிம்மராசி, மகம் நட்சத்திரத்தில், இத்தனையாவது நாழிகையில் பாப்பாவை எடுத்து தர எவ்வளவு ஃபீஸ் ஆகும் டாக்டர்?’ எனக் கேட்கும் கூட்டம் பெருகியது காரணமா? 'அய்யோ! இப்பல்லாம் பயலாஜிக்கல் பேபி அதிகப்பிரசங்கித்தனம் பண்ணுது. இதுல பிரசவ வலி வேறயா? மூணாம் நாள் ஆபீஸ் போற மாதிரி சிம்பிளா சிசேரியன் பண்ணிருங்க’ என்ற அவசரங்கள் காரணமா? பாப்பா கனவோடு நிற்கும் கணவனிடம், 'குழந்தை மெக்கோனியம் சாப்பிட்டிரும் சார். அப்புறம் குழந்தை சஃபகேட் ஆயிரக் கூடாது பாருங்க... ஆபரேஷன் பண்ணிடலாமா? நீங்க சொல்லுங்க’ என மருத்துவர் பாதி ஆங்கிலத்தில் பரபரப்பாகக் கேட்க, அந்தக் கணத்தில் கடவுளாக மட்டுமே அவரைப் பார்த்து, 'நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க; எனக்கு பாப்பாவும் அம்மாவும் பத்திரமா வேணும்’ எனும் பயம் கலந்த பதில் காரணமா?’ - இவற்றை நான் கேட்கவில்லை; உலக சுகாதார நிறுவனம் கேட்கிறது!
கருத்தரித்த பெண் அதிகம் சாப்பிட வேண்டியது மாதுளை. கர்ப்பக்கால வாந்தி, ரத்தசோகை, முதல் டிரைமஸ்டரில் சிலருக்கு ஏற்படும் ரத்தச் சொட்டுகள் என அனைத்துக்கும் மாதுளை தீர்வு அளிக்கும். காரணமற்ற வெள்ளைபோக்குக்கு, முளைகட்டிய வெந்தயக் கஞ்சி, உளுத்தங்கஞ்சி போதுமானது. கர்ப்பக்காலத் தொடக்கத்தில் ஏற்படும் ரத்தக்கசிவு, கருப்பையின் தேவையற்ற சுருக்கம் ஆகியவற்றுக்கு கொட்டையுள்ள கறுப்பு பன்னீர் திராட்சை நலம் அளிக்கும். தாமரைப் பூவும், தக்கோலமும், நெய்தல் கிழங்கும், செங்கழிநீர் கிழங்கும், கர்ப்பக்கால சங்கடங்களிலிருந்து மீள சித்த மருத்துவம் சொல்லும் மருத்துவ உணவுகள். ஃபோலிக் அமிலம் நிறைந்த, வலி நிவாரணி தன்மையுடைய, வைரஸ்களுக்கு எதிரான ஆற்றலுடைய, ஆன்ட்டி ஆக்சிடண்ட் தன்மையுடைய, இரும்பு மற்றும் கனிம சத்துகள் நிறைந்த இந்த மூலிகைகள், இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால், தாய்-சேய் நலத்துக்கும் சுகப்பிரசவத்துக்கும் உதவக்கூடிய மிகச் சிறப்பான உணவுகள் பல கிடைக்கக்கூடும்.
வண்ணமுள்ள பழங்கள், கீரை, மீன், முட்டை, பால், கேழ்வரகு, கைக்குத்தல் அரிசி கொண்ட உணவு, கர்ப்பிணிகளின் நலத்துக்கு மிக அவசியம். முருங்கைக் கீரையும் பாசிப் பருப்பு கலந்த பொரியலும் கேழ்வரகு அடையும் தரும் பயனை, விலை உயர்ந்த எந்த டானிக்குகளாலும் தர முடியாது. முன்பக்கம் சிறுநீர்ப்பையும் பின்பக்கம் மலக்குடலும் அழுத்தப்படுவதால் முறையே நீர்ச்சுருக்கமும் மலச்சிக்கலும் கர்ப்பக் காலத்தில் சர்வசாதாரணம். அதற்கு தினசரி நான்கு லிட்டர் தண்ணீர், அத்திப்பழம், வாழைத்தண்டு பச்சடி, கனிந்த வாழைப்பழம், தேவைப்பட்டால் மருத்துவர் ஆலோசனைப்படி இரவில் கடுக்காய் பிஞ்சு சாப்பிட்டால், இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். இன்று கர்ப்பக்காலத்தில் மட்டும் பெருகிவரும் சர்க்கரை நோயைக் (Gestational diabetes) கண்டு பதறத் தேவை இல்லை. தேவைப்பட்டால் உரிய மருத்துவமும், வெள்ளைச் சர்க்கரை இல்லாத உணவும் இவர்களுக்குக் கொடுப்பது அவசியம். தினசரி உணவில் வெந்தயம், கறிவேப்பிலை பொடி எடுத்துக்கொள்வது, கூடுதல் கட்டுப்பாட்டைத் தரும்.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அறிவியல் வசதி இல்லாத அந்தக் காலத்தில், 'செப்பியதினம் ஒன்றில் கடுகு போலாம்’ என 23 மி.மீ. அளவிலான கர்ப்பப்பையையும் 'பூவிலே இரண்டு திங்கள் கழுத்துண்டாம், புகழ் சிரசு முறுப்பாகும்’ என்று, ஐந்தாம் மாதம் காது, மூக்கு உதடும், ஏழாம் மாதம் தலைமுடியும் தெரியும் என, கருவின் வளர்ச்சியை ஒவ்வொரு நாளும் கணக்கிட்டு அகத்தியர் வல்லாதியிலும், பரராச சேகரத்திலும், யூகி சிந்தாமணியிலும் சொன்னவர்கள் நம் சித்தர்கள்.
1700-களில் வெறும் கால்நடையாகவும் குதிரையிலும் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று ஏராளமான தாவரங்களைப் பதிவுசெய்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 'நவீனத் தாவரவியலின் தந்தை’ கார்ல் லின்னேயஸுக்கு வரலாறு கொடுத்த மரியாதையை, நம் தமிழ் சித்தர்களுக்குக் கொடுக்கத் தவறிவிட்டோம்.
இயற்கையைப் பார்த்து மற்ற மரபுகள் பயந்து கொண்டிருந்தபோதே, அதனை ஆராய்ந்து புரிந்துகொள்ளும் ஒரு நீண்ட அறிவியல் தேடல் நம்மிடையே இருந்தது. அந்த அறிவியலை அப்படியே ஒதுக்குவதும் மறுப்பதுமா வளர்ச்சி?
- பரிமாறுவேன்...

-Ananda vikatan article

Sunday, November 3, 2013

தமிழ்நாடு பத்திரமாக உள்ளதா?

-vikatan

மெஷின் இன்டலிஜென்ஸ்.. ஹியூமன் இன்டலிஜென்ஸ்.. ஸ்டெரைல் ஜோன்... இன்டர்மீடியட்..

முக்கியத் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் அதிகமாகிக்கொண்டு வருகிறது. அதற்கு உஷார்படுத்தவே இந்தக் கட்டுரை! 
''வெடிகுண்டுக்கு வேண்டியவன், வேண்டாதவன் என்று யாரும் கிடையாது. ஸ்மூத்தாக ஹாண்டில் செய்தால் ஓகே. கொஞ்சம் எசகுபிசாகாக கையாண்டால், சுக்குநூறாக ஆக்கிவிடும். உஷார்தனம் ரொம்ப முக்கியம்.'’ - மேலே உள்ள டயலாக்கை அடிக்கடி சொல்வார் இந்திய உள்துறை அமைச்சகத்தின் சீனியர் செக்யூரிட்டி அட்வைஸர் விஜயகுமார்.
பாதுகாப்பு பலவிதம்!
தீவிரவாதிகள் அச்சுறுத்தலை வைத்து இந்திய வி.ஐ.பி-க்களுக்கு தேசியப் பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி) பாதுகாப்பு வீரர்கள் இசட், இசட் ப்ளஸ்... என இரண்டு பிரிவுகளில் பாதுகாப்பு தருகிறது. தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா... ஆகிய இருவருக்கு இசட் ப்ளஸுடன் கூடிய என்.எஸ்.ஜி. பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடியும் இந்தப் பிரிவில் வருகிறார். என்.எஸ்.ஜி. படைவீரர்கள் சூழ, பீகார் தலைநகர் பாட்னா வில் மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இந்தத் துயரச் சம்பவத்தை தொடர்ந்து, மக்கள் மத்தியில் ஒருவித கவலை ரேகைகள் படிய ஆரம்பித்துள்ளன. தீவிரவாதிகளின் இதுபோன்ற திடீர் தாக்குதலை சமாளிக்கக்கூடிய அளவுக்குத் தமிழகப் போலீஸ் இருக்கிறதா? மக்கள் நிம்மதியாக வலம் வரலாமா?
பகீர் பைப்!
புத்தூரில், தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் குடியிருந்த வீட்டின் மாடியைச் சோதனை செய்தபோது, தமிழகப் போலீஸ் இதுவரை கண்டிராத பகீர் ரக வெடிகுண்டு சிக்கியதாம். காந்தத்தின் கீழே டி.ஏ.டி.பி. ரக வெடிகுண்டை இணைத்து செய்திருக்கிறார். இதை ஒரு கார், வேன், டிரக்... இவற்றின் அடியில் பொருத்திவிட்டால், சுக்குநூறாக வெடித்துச் சிதறும். போலீஸ் பக்ருதீன் வீட்டில் இருந்து அதை அப்புறப்படுத்தி ரகசிய இடத்துக்கு கொண்டுபோய் செயலழிக்கச் செய்தனர் போலீஸார். அதைப்போல, ஏராளமான பைப் குண்டுகளையும் அதே மாடியில் கண்டெடுத்துள்ளனர். அவையெல்லாம் எங்காவது பொதுக்கூட்டத்தில், மக்கள் நடமாடும் இடங்களில் வெடித்திருந்தால்? இந்தக் கவலைதான் மக்களுக்கு இப்போது அதிகரித்துள்ளது.
மெஷின் இன்டலிஜென்ஸ்,
ஹியூமன் இன்டலிஜென்ஸ்!
டெல்லியில் இருந்த செக்யூரிட்டி அட்வைஸர் விஜயகுமாரிடம் பேசினோம்.
''1991-ம் ஆண்டில் ஸ்பெஷல் செக்யூரிட்டி குரூப் என்ற பெயரில் தமிழகத்தில் இந்தப் படைகளை ஆரம்பித்தோம். இதன்மூலம் வி.வி.ஐ.பி. பாதுகாப்பை கவனித்தோம். 1992-ல் பாம் ஸ்குவாட் முழுவீச்சில் செயல்பட்டது. தமிழ​கத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் யாராவது ஒருவர் விசேஷ பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்பதை அப்போதே திட்டமிட்டு செயல்படுத்தினோம். அது இன்றைக்கு நன்றாகக் கைகொடுக்கிறது.
கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரை விசேஷ பயிற்சி என்பது ஒன்றுதான். என்.எஸ்.ஜி, எஸ்.பி.ஜி, பி.எஸ்.எஃப், ராணுவம்... ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்களை வரவழைத்து பயிற்சி அளித்தோம். அந்தப் படையினரிடம் உள்ள நவீன கருவிகளை இந்தியாவிலேயே முதன்முதலாக இங்கே வரவழைத்து பயிற்சி அளித்தோம். மெஷின் இன்டலிஜென்ஸ் 50 சதவிகிதம், ஹியூமன் இன்டலிஜென்ஸ் 50 சதவிகிதம் என்ற விகிதத்தில் பணியாற்றினால் எந்தத் தாக்குதலையும் முறியடிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தியா விளங்குகிறது. அதற்கு எந்தவகையிலும் தமிழகம் சளைத்ததல்ல. எந்த ஒரு ஆபத்துக் காலத்திலும் எதிர்தாக்குதல் நடத்தக்கூடிய திறமைசாலிகளை தமிழகத்தில் என்னால் பட்டியல் போட முடியும்'' என்றார்.
ஸ்டெரைல் ஜோன், இன்டர்மீடியட்...
ஒரு மாதத்துக்கு முன், திருச்சிக்கு நரேந்திர மோடி வந்தார். அப்போது அங்கே எடுத்திருந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகிறார்...
''பாட்னா பொதுக்கூட்ட பாதுகாப்பு ஏற்பாட்டில் என்ன குழப்பம் நடந்தது என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், திருச்சியில் பொதுக்கூட்டம் நடப்பதற்கு பத்து, பதினைந்து நாட்களுக்கு முன்பே ஐந்து கி.மீ. சுற்றளவை பாதுகாப்புப் படையினரின் வசப்படுத்தி, சாலைகளில் செக்போஸ்ட் மற்றும் சில ஏற்பாடுகளை செய்தோம். எங்களுக்கு எங்கெங்கு சந்தேகம் ஏற்படுகிறதோ அதையெல்லாம் செக்யூரிட்டி பாயின்ட்களாக பட்டியல் தயாரித்தோம். அடுத்து, பொதுக்கூட்டம் நடப்பதற்கு 72 மணி நேரம், 48, 24, 12, 6, அரை மணி நேரம்... என்று பல்வேறு கட்டங்களாக சோதனை நடத்தினோம். உதாரணத்துக்கு, எதாவது எலெக்ட்ரானிக் பொருள் புதைத்து​வைக்கப்பட்டுள்ளதா? வான்வெளித் தாக்குதல் நடத்த வாய்ப்பு உண்டா? மைக், ஸ்பீக்கர், போட்டோ​கிராபர் என ஒவ்வொன்றையும் பரிசோதித்தோம். வெளியில் இருந்து வருபவர்களை முழுமையாக ஸ்கேன் செய்தோம். கண்ணி வெடி, ரிமோட் வெடிகுண்டு இருக்கிறதா என்று தேடினோம். உளவுத் துறை என்ன சொல்கிறது என்று உன்னிப்பாகக் கவனித்தோம். எந்தெந்த தீவிரவாத இயக்கங்கள் எந்த மாதிரியான தாக்குதலை நடத்தும்? அதைச் சமாளிப்பது எப்படி என்று ஒத்திகை பார்த்தோம்.
பொதுக்கூட்ட மேடையை மையமாக வைத்து 300 மீட்டர் சுற்றளவை ஸ்டெரைல் ஜோன் (பாதுகாக்கப்பட்ட பகுதி) என்று சொல்வோம். அதில் வெளியாட்கள் யாரையும் அனுமதிக்க மாட்டோம். அடுத்து, இன்டர்மீடியட் என்று சொல்லக்கூடிய 300 மீ - 1,000 மீ இடைவெளி. இந்தச் சுற்றளவில் எங்காவது வெடிகுண்டு வெடித்தால், வி.ஐ.பி-க்கு பாதிப்பு இருக்காது. கடைசியாக, சப்போர்ட்டிங் ஏரியா... 1000 மீ சுற்றளவுக்கு வெளியே உள்ளது. இங்கெல்லாம் மோப்ப நாய் சுற்றிவரும். எங்காவது, வெடிபொருள் இருப்பதை அறிந்தால், உடனே எங்களுக்குத் தகவல் கொடுக்கும். தமிழகத்தில் 103 வெடிகுண்டு மோப்ப நாய்கள் இருக்கின்றன. இவைதவிர குற்றவாளிகள், போதைப் பொருட்களைக் கண்டுபிடிக்கும் 87 நாய்கள் உள்ளன. தினமும் அவை மோப்பப் பணியில் இருக்கின்றன. வதந்தி என்றால்கூட, முழுமையாக சோதனையை நடத்திவிட்டுத்தான் நாங்கள் வருவோம். இதனால்தான் இதுவரை தமிழகத்தில் அசம்பாவிதம் நடக்காமல் தடுத்து வருகிறோம்'' என்றார்.
எட்டு சூட்!
உலகத்தில் என்னென்ன நவீன வெடிகுண்டுகள் இருக்கின்றனவோ, அதன் டம்மிகளை வெடிகுண்டு வடிவிலேயே செய்துதரும் நிறுவனங்கள் இருக் கின்றன. அவற்றை 'டெமோ'வுக்காக வைத்துப் பயிற்சி பெற முடியும். அதை எல்லாம் காவல் துறையில் வாங்கி வைத்து பயிற்சி எடுக்கிறார்கள்.
வெடிகுண்டு இருக்கும் இடத்துக்குச் சென்று பார்க்கும் வீரர் அணியும் 'சூட்'கள் எட்டு உள்ளன. ஒன்றின் மதிப்பு சுமார் ஒன்பது லட்ச ரூபாய். ரிமோட் வெடிகுண்டைக் கண்டுபிடிக்கும் ஸ்பெஷல் கருவி வைத்திருக்கிறது. திருப்பதி அருகே சந்திரபாபு நாயுடு காரில் சென்றபோது, ரிமோட்டில் வெடி குண்டை வெடிக்க வைத்தார்களே... அதுபோன்ற அசம்பாவிதத்தை தவிர்ப்பது, வெடிமருந்து, கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் மானிட்டர், போர்டபிள் எக்ஸ்ரே மிஷின், ஒரு சூட்கேஸ் அல்லது இரும்புப் பெட்டியையோ ஸ்கேன் செய்து வெடிகுண்டை கண்டறியலாம். இப்போது கெமிக்கல் போரை தீவிரவாதிகள் நடத்தினால், அதை எதிர்கொள்ளக்கூடிய முகமூடியுடன் கூடிய சூட்கூட தமிழகப் போலீஸிடம் இருக்கிறது.
உளவுத் தகவல் ஒரு கண் என்றால் இன்னொரு கண்... பாம் ஸ்குவாட். இரண்டும் இணைந்து செயல்பட்டால்தான் இப்போது உள்ள சூழ்நிலைபோல் எதிர்காலத்திலேயும் எந்தத் தீவிரவாதத் தாக்குதலையும் தமிழகப் போலீஸாரால் எதிர்கொள்ள முடியும்!