Sunday, June 17, 2012

மயக்கம் என்ன?

From Junior vikatan..



சேலத்தில் என் நண்பன் ஒருவன். மிகக் கௌரவ​மான பணியில் இருந்தான். செய்தொழில் நேர்த்திக்காகவே போற்றப்படுபவன். ஆனால், மிக அதிகமாகக் குடிப்பான். ஒருநாள் நெத்திமேடு பஸ் ஸ்டாப்பில் நான் நின்றுகொண்டு இருந்தபோது கைலி, பனியனுடன் ரோட்டில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தான். என்னவோ ஏதோவென நானும் அவனைப் பின்தொடர்ந்து ஓட... அவன் பக்கத்தில் இருந்த ரம்பா ஒயின்ஸ் ஷாப்புக்குள் தாவினான். (தனியாரிடம் மதுக்கடை இருந்தபோது நடிகை ரம்பாவின் கவர்ச்சிப் படம் போட்ட போர்டுடன் வைக்கப்பட்ட பெயர், இன்று வரை நிலைத்துவிட்டது.) உள்ளே நுழைந்தவன் பரபரவெனப் பார்த்தபடி ஒரு டேபிளில் இருந்த ஆஃப் பாட்டிலை வெடுக்கென எடுத்துக்கொண்டு ஓடத் துவங்கினான். 
செயின் பறிப்பு திருடன் ரேஞ்சுக்கு பாட்டிலை  இறுக்கமாகப் பிடித்தபடி அவன் ஓட...  'ஏய், பிடி... பிடி’ என்றபடி துரத்த ஆரம்பித்தார்கள். பார் பணியாளர் ஒருவர் இடையே புகுந்து மறிக்க... அங்குமிங்கும் அலைபாய்ந்தவன், வாட்டர் பாக்கெட் மூட்டையில் கால் இடறி... பொத்தென விழுந்தான். நான்கு பேர் அவனை அமுக்கிப் பிடித்து பாட்டிலைப் பிடுங்க... அப்போதும்விடாமல் அவன் பாட்டிலை வாய்க்குள் சரித்து அப்படியே குடித்தான். அவனிடம் இருந்து பாட்டிலைப் பாடாதபாடுபட்டு பிடுங்கினார்கள். அதை ஒருவன் அவனது முகத்தில் ஊற்றி, அவன் பிறப்பைக் குறித்து கேள்வி எழுப்பினான். கும்பலில் இருந்த இன்னொருவன் காலி பீர் பாட்டிலை எடுத்து நண்பனின் தலையில் ஓங்கி அடித்தான். ரத்தம் வழிந்த நிலையிலும் இவன், 'பாஸு, கொஞ்சம் குடுங்க பாஸு... ஒரு கட்டிங் குடுங்க...’ என்று கெஞ்ச ஆரம்பித்தான்.
ஓடிச் சென்று நண்பனை சூழ்ந்திருந்த கும்பலை சமாதானப்படுத்தி, அவனை அழைத்து வந்தேன். இந்தக் களேபரத்தில் அவனது கைலியைக் காணோம். தூரத்தில் கிடந்த கைலியை ஒரு சிறுவன் எடுத்துத் தர, அதைக் கட்டிவிட்டேன். குவாட்டர் வாங்கித் தந்தே ஆக வேண்டும் என்றான் நண்பன். நான் மறுக்க... திடீரென்று என் காலைப் பிடித்துக்கொண்டு கதறினான். வேறு வழி இல்லாமல் குவாட்டர் வாங்கித் தந்தேன். தண்ணீர்கூட கலக்கவில்லை. மூடியைத் திறப்பதற்கு அவசரம். மூடியை பல்லால் பெயர்த்து எடுத்து, அப்படியே குடித்து, ஆசுவாசமானான்.
''அடி வாங்கி இப்பிடிக் கேவலப்பட்டு இதைக் குடிச்சாகணுமா?'' என்றேன். ''அடியைவிடு... குடிதான் முக்கியம் மச்சி...'' - பஞ்ச் அடித்து சிரித்தது பானம். எனக்கு வயிறு பற்றி எரிந்தது. அப்புறம் அவன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. கைத்தாங்கலாக அவனை டாக்டரிடம் அழைத்துச் சென்றேன். டாக்டர் தலையில் கட்டுப் போட்டுவிட்டார். 'ஊசி வேண்டாம்; போட்டாலும் வேலை செய்யாது. நாளைக்கு காலையில இந்த மாத்திரையை சாப்பிடச் சொல்லுங்க...’ என்றார். அவனுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றேன்.
வீடு உள்பக்கமாகத் தாழிடப்பட்டு இருந்தது. சரியாக வீட்டு வாசலில் இவன் வாந்தி எடுத்து சரிய... வாந்தியில் ரத்தம் கலந்து இருந்தது. குடல், இரைப்பை அரித்து ஓட்டையானால்தான் இப்படி வாந்தியுடன் ரத்தம் கலந்து வரும். இல்லை என்றால் தொண்டையில் புண் இருந்திருக்க வேண்டும். நான் கதவைத் தட்டினேன். கதவைத் திறந்தது ஒரு அழகான குட்டிப் பையன். கீழேகிடந்த நண்பனை பார்த்துவிட்டு, 'அங்கிள் ரொம்ப தேங்ஸ்...’ என்றான். அப்பாவைப் பார்த்து அவன் அதிர்ச்சி அடையவில்லை. ஏற்கெனவே ரொம்பப் பட்டு இருப்பான் போலிருக்கிறது. நானும் அவனும் நண்பனின் தோளைப் பிடித்து வீட்டுக்குள் இழுத்துச் சென்று படுக்க வைத்தோம். அந்த குட்டிப் பையன் பெரிய மனுஷ தோரணையில் வாளியில் தண்ணீரும் விளக்குமாறும் கொண்டு வந்து வாசலைக் கழுவி விட்டான்.
''இவர் வாங்குற சம்பளத்துக்கு இப்படிக் குடிச்சா குடும்பம் நடத்த முடியுமா அங்கிள். லைன் வீட்டுக்காரங்க எல்லாம் தினமும் கண்டபடி திட்டுறாங்க. ஹவுஸ் ஓனர் வீட்டைக் காலி பண்ணச் சொல்றார். நான் ஸ்கூலுக்கு போறதா? இவரைப் பார்த்துகிறதா?'' என்றான். நான்காம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவனிடம் கொஞ்சமும் மழலை இல்லை. அப்பனின் குடியும் அடியும் அவனை அப்படிப் பக்குவப்படுத்தி இருக்கும்போல. ''அம்மா எங்கடா?'' என்றேன்.
''அம்மா கோவிச்சுக்கிட்டு ஊருக்குப் போய் ஒரு வாரம் ஆச்சு. என்னைக் கூப்பிட்டாங்க. நான் வர மாட்டேன்னுட்டேன். ஆயா வேலைக்கு போயிருக்கு. இவர் தூங்குறப்ப வெளியே கதவைத் தாழ்ப்பாள் போட்டுட்டு, ஸ்கூலுக்குப் போனேன். எப்படியோ திறந்துக்கிட்டு ஓடி இருக்கார்...'' என்றான். நொந்து திரும்பும்போது ஏனோ வாஸ்கோடகாமா நினைவுக்கு வந்தார்!
வாஸ்கோடகாமா, 1498 மே மாதம் கள்ளிக்கோட்டை மன்னர் சமோரினை சந்தித்தபோது, போர்ச்சுக்கீசிய மதுச்சந்தையை இந்தியாவுக்குக் கொண்டுவர வாய்ப்பு இல்லையே என்று கவலைப்பட்டார். காரணம், அப்போது இந்தியாவில் குடிப்பழக்கம் மிக, மிக அரிதாகவே இருந்தது. குறிப்பாக, மொகலாய மன்னர்கள் உண்மையான முசல்மான்களாக இருந்து, மதுவை 'ஹராம்’ செய்து இருந்தார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னர் ஜஹாங்கீர் ஆட்சியில்தான் போர்ச்சுக்கீசிய, பிரெஞ்சு நாட்டு மதுபானச் சந்தைக்கு இந்தியாவின் கதவுகள் அகலத் திறந்தன. மன்னர் ஜஹாங்கீர் விதவிதமான மது பானங்களைச் சுவைப்பதிலும் மது சுவைப்பவர்களை ஊக்குவிப்பதிலும் ஆர்வமாக இருந்தார். ஆட்சியை வழிநடத்தும் ஒரு மன்னரால் அப்போது தொடங்கி சந்தைப்படுத்தப்பட்ட மது கலாசாரம், இன்று தமிழகத்தில் அரசே மதுபானங்களை கூவிக்கூவி விற்கும் நிலைக்குக் கொண்டுவந்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களை நடுத்தெருவில் நிறுத்தி உள்ளது. 'குடி உயர கோன் உயரும்’ என்ற அவ்வை வாக்கை தப்பாய் புரிந்துகொண்டால் இப்படித்தான்!
இன்று உலகிலேயே மிக அதிகமாக மது குடிப்பவர்கள் இந்தியர்கள். மதுவால் ஏற்படும் சமூகப் பிரச்னையால் இந்தியா மிகப்பெரிய அழிவை நோக்கிச் செல்கிறது. அணு, மொத்தமாக அழிக்கும் என்றால், மது கொஞ்சம் கொஞ்சமாக. வீட்டுக்கு ஒரு குடிகாரர் என்பதுதான் அரசாங்கத்தின் குறைந்தபட்ச இலக்கு. வரும் ஆண்டுகளில் இது அதிகரிக்கும் என்றுஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். அதிகாரிகள் கோடிகளில் டார்கெட் நிர்ணயித்துக் காத்து இருக்கிறார்கள்.
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் மதுக் கடைகள், மதுக் கேளிக்கை விடுதிகளின் எண்ணிக்கை  சராசரியாக ஆறு முதல் எட்டு சதவிகிதம் வரை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவருகிறது. 1952-ம் ஆண்டில், மது அருந்தத் தொடங்கும் இந்தியரின் சராசரி வயது 19. இன்று அது 13. பன்னாட்டு மது நிறுவனங்களின் மிகப்பெரிய 'ஹப்’பாக மாறிவிட்டது இந்தியா. மாறாக, மேற்கத்திய நாடுகளில் குடிப்பழக்கம் குறைந்து வருகிறது - பிரபல இன்டர்நேஷனல் மருத்துவ பத்திரிகையான லேண்ட்செட் சமீபத்தில் வெளியிட்ட தகவல் இது!
தமிழகத்திலோ, நிலைமை மிக மிக மிக மோசம்.  ஏழு கோடி மக்களில் சுமார் ஒரு கோடிப் பேர் குடிக்​கிறார்கள். சுமார் 49 லட்சம் பேர் தினமும் குடிக்கும் மது அடிமைகள். இதில் 13 வயது சிறுவர்களும் அடக்கம்.
அதுசரி, அப்புறம் அந்த நண்பன் என்ன ஆனான் என்று சொல்லவே இல்லையே... 'தினைக் கள் உண்ட தெளிதோல் மறவர்’ வழி வந்த அந்த நண்பன், பின்னாளில் டாஸ்மாக் சரக்கின் போதை போதாமல் எங்கோ ஸ்பிரிட் வாங்கி வந்து குடித்து செத்துப்போனான்!  
அரசு மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மோகனை ஒருமுறை யதேச்சையாக பார்த்தபோது அவனைப் பற்றிக் கேட்டேன். ''அவங்கம்மாதான் அவனை இங்க கூட்டிட்டு வந்தாங்க. குடிச்சிட்டு சுயநினைவு இல்லாம இருந்தான். இங்க வர்றப்பயும் குடிக்கணுமானு அவங்கம்மாகிட்ட சத்தம் போட்டேன். 'இங்க கூட்டிட்டு வர எனக்கு வேற வழி தெரியலைப்பா... அதான் நானே அரை பாட்டில் வாங்கிக் கொடுத்தேன்...’னு அழுதாங்க.
நாலு மணி நேரம் கழிச்சு எழுந்தவன், சுற்றிலும் பார்த்துட்டு எழுந்து ஓட ஆரம்பிச்சான். தடுத்த நர்ஸைத் தள்ளிவிட்டதில் அவங்களுக்கும் காயம். ஒருவழியா அவனைப் பிடிச்சு, பெட்டுல கட்டிப்போட்டோம். ஆனாலும், அவன் பிழைக்க அஞ்சு சதவிகிதம்தான் வாய்ப்பு இருந்துச்சு. கணையத்தை ஆல்கஹால் அடைச்சு, ஜீரண நீர் வெளியேற வழி இல்லாம அது பந்து மாதிரி வீங்கி, எந்நேரமும் வெடிக்கத் தயாரா இருந்துச்சு. இரைப்பையோட உள்சுவரான 'மியூக்கஸ்’-ல கிழிஞ்சுபோன பனியன் மாதிரி ஏகப்பட்ட ஓட்டைங்க. உள்ளே எந்த உணவும் தங்காது. கல்லீரல் 80 சதவிகிதம் அழுகிப்போயிருந்தாக்கூட அதை வெட்டி எடுத்துட்டா, அது தானாகவே வளரும் தன்மைகொண்டது. ஆனால், கல்லீரல் முழுக்க ஹெபாடிடிஸ், சிரோசிஸ் பரவி இருந்தது. பத்து நாள் இங்க பொழுதுக்கும் கத்திட்டே கெடந்தவன், ஒருநாள் தப்பிச்சு ஓடிட்டான். அப்புறம் ஏதோ ஸ்பிரிட் குடிச்சு செத்துட்டான்னாங்க...'' என்றார்.
இப்படி என் நண்பன் மட்டும் அல்ல... இன்று தமிழகத்தில் குடிநோயால் மட்டுமே தினமும் அநேகம் பேர் இறக்கிறார்கள். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் ராஜீவ்காந்தி மருத்துவ​மனையிலும் கணையம், கல்லீரல் வீங்கி, பார்வை சொருகி, பாதி மனிதனாய் வருபவர்களின் எண்ணிக்​கையும் அதிகரித்து இருக்கிறது. அதுசரி, டாஸ்மாக் ஆரம்பித்தபோது 2,828 கோடியாக இருந்த ஆண்டு வருமானம் கடந்த ஆண்டில் 18,000 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இதனைச் சாதனையாகச் சொல்லும் அரசு... மருத்துவமனைகளில் செத்து விழும் மனிதர்கள் எண்ணிக்கை உயரும்போதும் அதையும் சாதனையாகச் சொல்லுமா? ஆபத்தை உணராமல் அரசாங்கம் பரப்பும் வியாதியின் கோரம் என்ன தெரியுமா?  
    தெளிவோம்      
           மது மூலம்!
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையில் மது தயாரிக்கப்படுகிறது. ரஷ்யாவின் ஓட்கா உருளைக் கிழங்கிலும், சீனாவின் மவுத்தாய் - ஜப்பானின் சாக்கே ஆகியவை அரிசியிலும், ஸ்காட்லாந்தின் ஸ்காட்ச் கோதுமை மற்றும் மக்காச்சோளத்திலும், ஃபிரான்ஸின் ஷாம்பெயின் திராட்சையிலும், கோவாவின் பென்னி முந்திரியில் இருந்தும் தயாராகிறது. இதுதவிர அரபு நாடுகளில் பேரீச்சம் பழத்திலும், இலங்கை, ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தென்னை, பனையின் பொருட்களில் இருந்தும் மது தயாரிக்கப்படுகிறது. கரும்பு ஆலையில் இருந்து வெளியேறும் கழிவான மொலாசஸில் இருந்து மதுவைத் தயாரிப்பது தமிழ்நாடு மட்டுமே!

மது - ஆசிட் வேறுபாடு என்ன?
மதுவுக்கும் ஆசிட்டுக்கும் வித்தியாசம் பெரிதாக ஒன்றும் இல்லை என்கிறார் இந்திய பொது சுகாதார சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் இளங்கோ. ''மீத்தைல் ஆல்கஹால் என்பது டாய்லெட் கழுவும் ஆசிட், பெயின்ட், வார்னிஷ் போன்ற பொருட்களில் பயன்படுத்தப்படும் ரசாயனம்.
ஈத்தைல் ஆல்ஹகால் என்பது மதுபானங்களில் போதைக்​காக கலக்கும் ரசாயனம். இவை இரண்டும் அண்ணன் - தம்பி போலத்தான். இரண்டுக்கும் ஒரே வாசனை, ஒரே சுவை. மீத்தைல் ஆல்கஹாலை குடித்தால், ஐந்து நிமிடங்​களில் பார்வை பறிபோகும். 15 நிமிடங்களில் மூளை செயல் இழக்கும். 30 நிமிடங்களில் உயிர் போகும். இதே வேலை​யைதான் ஈத்தைல் ஆல்கஹாலும் கொஞ்சம், கொஞ்சமாக செய்கிறது. மீத்தைலுக்கு நிமிடங்கள் என்றால் ஈத்தைலுக்கு ஆண்டுகள். அவ்வளவுதான்!'' என்கிறார் அவர்.



மிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (tamilnadu state marketing corporation limited). இதுதான் 'டாஸ்மாக்’கின் விரிவாக்கம். தமிழக அரசாங்கம் எந்தத் தொழிலைவாணிபமாக மதிக்கிறது பார்த்தீர்களா? அது சரி, ஊத்திக்கொடுப்பதுதான் தொழில்என்றாகிவிட்டது; அதிலாவது ஒரு நியாயம் இருக்​கிறதா? 
இங்கு ஏன் இப்படி ஒரு கேள்வி அவசியம் ஆகிறது என்றால், மது, மது வகைகள், மதுப் பழக்கம், மது விற்பனை, மதுவிலக்கு இவற்றைப் பற்றி நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். ஆனால், ஒரு தொழிலில் நீங்கள் ஈடுபடுகிறீர்கள் என்றால், அந்தத் தொழிலுக்கு என்று உள்ள அறநெறிகளைப் பின்பற்றுவதுதானே நியாயம்?
தமிழ்நாட்டில், தான் விற்கும் சரக்கை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் என்று குறிப்பிடுகிறது தமிழக அரசு. ஆனால், உண்மையில் வெளிநாட்டு வகை மதுபானத்துக்கும் இங்கு அரசு விற்கும் மதுபானத்துக்கும் சம்பந்தமே கிடையாது என்பதுதான் உண்மை.
அசல் சீமைச் சரக்குகள் ஏதாவது ஒரு தானியத்தில் இருந்தோ, பழரசத்தில் இருந்தோ, கிழங்கில் இருந்தோ நேரடியாகத் தயாரிக்கப்படுபவை. விஸ்கி என்றால் முளைதானியங்களில் இருந்தும் (மால்ட்), ரம் என்றால் கரும்புச் சாறு அல்லது கரும்புச் சக்கைக் கூழில் இருந்தும், ஒயின், பிராந்தி, கிரப்பா என்றால் திராட்சையில் இருந்தும், வோட்கா என்றால் கிழங்கு மற்றும் தானியங்களில் இருந்தும் தயாரிப்பதே வெளிநாட்டுப் பாணி.  எதில் இருந்து தயாரிக்கிறார்கள், எதை எல்லாம் சேர்த்து இருக்கிறார்கள் என்ற விவரங்கள் எல்லாமும்கூட மது பாட்டிலின் மீதே தெளி​வாகக் குறிப்பிடப்படும். புதுவை, கோவா ஆகிய மாநிலங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மது வகைகள் அதிகம். அதனாலேயே, அங்கு விற்கப்படும் உள்ளூர் மது வகைகளும்கூட தரமாகவே இருக்கும். முக்கியமாக, அங்கு விற்கப்படும் மது வகைகளில் நிர்ணயிக்கப்பட்ட ஆல்கஹால் சேர்க்கப்படுகிறது. அதனால், அது ஏற்படுத்தும் போதையும் குறைவு. ஆனால், இங்கு அரசே நடத்தும் கடைகளில் விற்கப்படும் மது வகைகளின் தரம் என்ன? அவற்றில் உள்ள மூலப் பொருள்கள் என்ன? ஏன் இவ்வளவு ஆல்கஹால் அதிகம்கொண்ட மது வகைகள் விற்கப்படுகின்றன? யாருக்காவது தெரியுமா?
சாதாரண டீக்கடைக்குச் சென்றாலே, நாம் ஓரளவு காற்​றோட்​டமும் சுகாதாரச் சூழலும் நிரம்​பிய கடையாகப் பார்த்து தேடுவோம். நல்ல நாற்காலிகளைத் தேடுவோம். சர்வர்களின் உபசரிப்பை எதிர்பார்ப்போம். டீக்கடைக்காரருக்கு நாம் கொடுப்பது என்னவோ ஆறேழு ரூபாய்கள்தான். அதற்கே ஒரு டீக்கடை முதலாளி எவ்வளவு வசதிகளைத் தர வேண்டி இருக்கிறது? ஆனால், ஆண்டுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாயை வாரிக் கொடுக்கும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு எப்படிப்பட்ட வசதிகளை நம்முடைய அரசும் டாஸ்மாக் நிறுவனமும் ஏற்படுத்தித் தந்து இருக்கின்றன?  
என்னடா, திடீரென்று குடிகாரர்களுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று பார்க்காதீர்கள். இவை எல்லாமே இன்றைக்குத் தமிழகத்தில் நிலவும் மோசமான குடிக் கலாசாரத்துடன் தொடர்பு​டையவை.ஒருவர் வாந்தி எடுத்துக்கிடக்க, இன்னொ​ருவர் பக்கத்திலேயே சிறுநீர் கழித்துக்கொண்டு இருக்க இருவருக்கும் நடுவில் சாவதானமாக குடித்துக்​கொண்டு இருக்கும் ஆட்களை இங்குதான் நாம் பார்க்க முடியும். எப்படி மது இந்த நிலைக்கு எல்லோரையும் தள்ளுகிறது?    
மது அருந்துவது ஒருவரின் மூளை​யின் நரம்புகளில் முதலில் பாதிப்பு ஏற்படுத்தும். ரத்தத்தில் ஆல்கஹால் அளவை பி.ஏ.சி. (Blood Alcohol Count) என்பார்கள். இது 0.10 அளவு வரை இருந்தால் பிரச்னை இல்லை. இந்த அளவைத் தாண்டினால் வரும் சிக்கல் ஆரம்பத்தில் வெகு சாதாரணமாகத் தெரியும். சொல்லப்போனால், இந்தப் பாதிப்பு ஆரம்ப நிலை​யில் செம ஜாலியாகக்கூட இருக்கும்.
மது அருந்தியவுடன் ஆல்கஹால் நேராக சிறு மூளையைப் பாதிக்கிறது. அப்போது மூளை என்னும் முதலாளியின் கட்டுப்பாட்டில் இருந்து சுமார் 50 சதவி​கிதம் வரை உடல் உறுப்புகள் விடுபட்டுவிடும். அதனால் நேராக நடக்க முடியாது. நினைப்பதை சீராகப் பேச முடியாது. முதலாளி, 'நேராக நட’ என்று கட்டளை போட்டாலும் கால்கள் கேட்காமல் பின்னிக்கொண்டுதான் செல்லும்.
இந்த மூளை நரம்பு மண்டலப் பாதிப்பை கோர்சிகா காஃப்ஸ் சிண்ட்​ரோம் (Corsica Cofs Syndrome) என்பார்கள். ஆரம்பப் பிரச்னை ஜாலி​யாக இருக்கும் என்பதன் அர்த்தம் சேட்டைகள் இப்போதுதான் தொடங்​கும் என்பதுதான்!      
என் நண்பன் ஒருவனுக்கு  மூன்று லார்ஜ் உள்ளே போனால்... அவன் சுபாவமே மாறிவிடும். அவன் மூடைப் பொறுத்து 'அன்பே சிவம்’ கமல்ஹா​சனாக மாறுவான் அல்லது 'அமைதிப் படை’ சத்யராஜாக மாறுவான். ஒரு நாள் காலை 11 மணிக்கு டீ சாப்பிடச் சென்றோம். டீ குடித்த பின்பு, 'நான்தான் காசு கொடுப்பேன்’ என்று பேன்ட் பாக்கெட்டில் கையைவிட்டு எதையோ வெளியே எடுத்தான். அது டூ வீலர் பெட்ரோல் டேங்கின் மூடி. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அது ஆச்சர்யம் இல்லை. ஆனால், அவனுக்கும் ஒன்றும் புரியவில்லை என்பதுதான் ஆச்சர்யம். அதைப் பார்த்தபடி திருதிருவென முழித்தான்.
அப்புறம் திடீரென்று யோசனை வந்தவனாக, 'நேத்து ராத்திரி டாஸ்மாக்ல என் வண்டியை மறிச்சு ஒருத்தன் வண்டியைப் போட்டு இருந்தான். கொஞ்சம்கூட பொறுப்பே இல்லாம அப்படியா நிறுத்துறது? என் வண்டியை எடுக்குறதுக்குள்ள நாக்கு தள்ளிப்போச்சு. அதான் அவன் பெட்ரோல் டேங்க் மூடியைக் கழட்டிட்டு வந்துட்டேன்...’ என்றான் சாதாரணமாக. இது ஆரம்ப கட்டத்தில்தான் ஜாலி. இந்த கோர்சிகா காஃப்ஸ் சிண்ட்ரோம் சேட்டைகள் எல்லாம் இருக்கட்டும். இதன் உச்சபட்ச பாதிப்பு எப்படி இருக்கும் தெரியுமா? கற்பனை செய்யக்கூட முடியாது. ஆம், மிகக் கொடூரமான மனநோய் அது.
இந்த மனநோய் மனிதர்களை உற்பத்தி செய்​வதற்குள் அரசியலும் வர்த்தகமும் பணமும் மட்டுமே முக்கியமான காரணம்!
ஆட்சி மாறும்போது காட்சி மாறும். கல்லாக்களும் இடம் பெயரும். ஆனால், டாஸ்மாக் அப்படி அல்ல!
டாஸ்மாக் நிறுவனத்துக்கு பீர், பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகளை சப்ளை செய்யும் தொழிற்​சாலைகளில் முக்கியமானவை தி.மு.க. அல்லது அ.தி.மு.க. பின்புலம் கொண்டவை. சம்பந்தப்​பட்ட கட்சி ஆட்சிக்கு வரும்போது, வேண்டப்பட்ட நிறுவனத்​திடம் இருந்து அதிக அளவில் கொள்முதல் செய்வது வழக்கம்​தான். அதனால் ஜெயலலிதாவின் ஆட்சியில், சசிகலாவுக்கு வேண்டப்​பட்டவர்களால் நடத்தப்படுவதாகச் சொல்லப்படும் மிடாஸ் நிறுவனம், டாஸ்மாக்குக்கு எவ்வளவு சரக்கு சப்ளை செய்திருக்கிறது என்பதை அறிய நினைத்தோம். தகவல் அறியும் உரிமைச் சட்டப் போராளி வழக்கறிஞர் லோகநாதனும் நமக்குக் கை கொடுத்தார். இதில் கிடைத்த பல தகவல்கள் அரசியலைத் தாண்டிய அதிர்ச்சி ரகம்.  
டாஸ்மாக் நிறுவனத்தை 1983-ம் ஆண்டு அன்றைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். துவக்கினார். அப்போது ஐந்து நிறுவனங்களிடம் இருந்து மதுபான வகையறாக்களை மொத்தமாகக் கொள்முதல் செய்து, தனியார் மதுபானக் கடைகளுக்கு விற்று வந்தது அரசு. பிறகு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் (2003-ம் ஆண்டு) அரசு நிறுவனமான டாஸ்மாக், மது பானங்களை சில்லறையாக விற்பனை செய்யத் தொடங்கியது. கூடவே, சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்களுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் 'மிடாஸ் கோல்டன் டிஸ்டிலரீஸ் பிரைவேட் லிமிடெட்’ என்கிற நிறுவனம் புதிதாக லைசென்ஸ் பெற்று, கனஜோராக சப்ளையைத் தொடங்கியது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தனக்குத் தரப்பட்ட தகவல்களை விரிவாகச் சொன்னார் லோகநாதன். ''2003 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் 130 கோடி ரூபாய்க்கு மிடாஸிடம் இருந்து டாஸ்மாக் கொள்முதல் செய்துள்ளது. 2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் 872 கோடியாக எகிறி இருக்கிறது. பிறகு வந்த ஐந்து ஆண்டு தி.மு.க. ஆட்சியில் நானூற்று சில்லரைக் கோடிகள், ஐநூற்று சில்லரைக் கோடிகளாக இருந்திருக்கிறது. தற்போது அ.தி.மு.க. ஆட்சி அமைந்த கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 1,404 கோடி ரூபாய்க்கு சரக்கு கொடுத்துள்ளது. இத்தனைக்கும் இந்த நிறுவனம் மூன்று கோடி ரூபாய் முதலீட்டில்தான் தொடங்கப்பட்டது.
இது ஒரு புறம் இருக்கட்டும். தி.மு.க-வைச் சேர்ந்த மத்திய அமைச்சரான ஜெகத்ரட்சகனின் மனைவி மற்றும் மகன் பெயரில் இருக்கிறது 'எலைட் டிஸ்டிலரீஸ்’ நிறுவனம். தி.மு.க. ஆட்சியில் இருந்த (2006 - 2011) ஐந்து ஆண்டுகளில் இந்த நிறுவனம் 1,275 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்குக்கு சரக்கு சப்ளை செய்திருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் இந்தத் தொழிற்சாலை என்ன ஆனது என்று பார்த்தால் மெகா ஆச்சர்யம். ஆம், 2011-2012 நிதி ஆண்டில் மட்டும் 1,008 கோடி ரூபாய்க்கு சப்ளை செய்திருக்கிறது.
கருணாநிதி கதை, வசனம் எழுதிய 'பெண் சிங்கம்’ மற்றும் 'உளியின் ஓசை’ திரைப்படங்களைத் தயாரித்த என்.ஜெயமுருகனின் எஸ்.என்.ஜெ. டிஸ்டிலரீஸ் நிறுவனத்தின் நிலை இதைவிட ஆச்சர்யத்தைத் தருகிறது. ஆம், 2010-2011 நிதி ஆண்டில் 1,235 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்குக்கு சரக்கு சப்ளை செய்த இவர்கள், ஜெ. ஆட்சி அமைந்த பிறகு 1,494 கோடி ரூபாய்க்கு சப்ளை செய்திருக்கிறார்கள். இது எப்படிச் சாத்தியமாகிறது என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும்.
அதாவது, மிடாஸ் நிறுவனத்தின் முக்கியமான பங்குதாரராக, மதர் மீரா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இருக்கிறது. இதன் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர், டாஸ்மாக்குக்கு மதுபானங்கள் சப்ளை செய்யும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான மோகன் பிரீவரீஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும் இருக்கிறார். இவரும் கருணாநிதி வசனம் எழுதிய படங்களைத் தயாரித்த ஜெயமுருகனும் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருக்கிற சாகர் சர்க்கரை ஆலையின் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். சசிகலாவுக்கு நெருங்கிய 'மிடாஸ்’ நிறுவனத்தின் பங்குதாரரோடு கருணாநிதிக்கு மிக நெருங்கிய நபர் தொழில் தொடர்பில் இருக்கிறார் என்றால், அதற்கு என்ன அர்த்தம்? அதனால்தான் ஜெயமுருகனின் நிறுவனம் மதுபான சப்ளையில் இப்போதும் உச்சத்தில் இருக்க முடிகிறது. அரசியல் யுத்தம் நடத்தும் இரண்டு பெரும் கட்சிகளின் மேல்மட்டத் தொடர்புகள், தொழில் பிணைப்புகள் எதுவும் அப்பாவித் தொண்டர்களுக்குத் தெரிவது இல்லை என்பதுதான் கொடுமை.  
மிடாஸின் முக்கியப் பங்குதாரரான மதர் மீரா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான விஷ்ணு பிரசாத் யார் தெரியுமா? சமீபத்தில் வருமான வரித் துறையால் ரெய்டு நடத்தி கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட செய்தியால் லைம் லைட்டுக்கு வந்தவர் விஷ்ணு பிரசாத். யூகிக்க முடியவில்லையா? சிரஞ்சீவியின் மருமகன்தான் விஷ்ணு பிரசாத். இப்படி எல்லாக் கட்சிகளும் ஒன்றுக்குள் ஒன்றாகத்தான் இருக்கின்றன. இது தெரியாமல்தான் அப்பாவித் தொண்டர்கள் அடித்துக்கொள்கிறார்கள்'' என்று வருந்தினார்.
இதைப் படித்தாலே  தலையைச் சுத்துதா..?



டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலு வலகத்தை நீங்கள் நேரில் பார்த்து இருக்கிறீர்களா? சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராசன் மாளிகை வளாகத்தில் இயங்குகிறது இந்த தலைமை அலுவலகம். அந்த அலுவலகத்தை, நாளை காலை முதல் செக்கானூரணி பஸ் ஸ்டாண்​டுக்குப் பக்கத்தில் இயங்கும் டாஸ்மாக் பாருக்கு மாற்றிவிட்டால் என்ன ஆகும்? 
தலைமை அலுவலகத்தின் வரவேற்பறையில் தொடங்கி அதன் தலைவர், நிர்வாக இயக்குநர், அதிகாரி​கள், அலுவலர்களின் அறைகள் எல்லாம் நட்சத்திர விடுதிபோல் இருக்கிறது. எனக்கு ஒரு விஷயம்தான் புரியவில்லை. தங்களுடைய அலுவலகத்தை இவ்வளவு ஆடம்பரமாக வைத்துக்கொள்ளும் இவர்கள், டாஸ்மாக் கடைகளையும் பார்​களையும் மட்டும் எப்படி பொதுக் கழிப்பிடங்களைவிட அசுத்தமான, துர்நாற்ற​மான, சுகாதாரக் கேடான சூழலில் நடத்த அனுமதிக்​கிறார்கள்?
அதுசரி, 'குடி குடியைக் கெடுக்கும்’ என்று போர்டு போட்டு, எவன் குடி கெட்டால் நமக்கென்ன என்று கல்லாக் கட்டும் தொழில்தானே நடத்துகிறோம் என்ற அலட்சியமா?
சில வாரங்களுக்கு முன், கலிஃபோர்னியா  நண்பர் ஒருவர் சென்னை வந்திருந்தார். அவர் ஒரு மருத்துவர். நம் நகரத்தில் தெருக்கள்தோறும் இருக்கும் மதுக்கடைகளைப் பார்த்த அவர், ஒரு கடைக்குள் சென்று பார்க்க விரும்பினார். உள்ளே போனார். சில நிமிடங்கள் மௌனமாக அந்தச் சூழலைக் கூர்ந்து கவனித்த அவர் சொன்னார்... ''உலகம் எல்லாம் மதுவைக் குடித்தால் என்னென்ன கேடுகள் வருமோ, அவை அத்தனையும் உங்கள் ஊரில் மட்டும் இரண்டு மடங்காகி விடும். இப்படி ஒரு சுகாதாரமற்ற சூழலை நான் எங்குமே பார்த்தது கிடையாது. உங்கள் அரசாங்கம் இதை எல்லாம் எப்படி அனுமதிக்​கிறது?'' என்றார். ''எங்கள் அரசாங்கம்தான் இந்தக் கடைகளையே நடத்துகிறது'' என்றேன். விறுவிறுவென்று சென்று காரில் ஏறிய அந்த நண்பர் அதற்குப்பின் கடைசி வரை அந்த விஷயம்பற்றி பேசவே இல்லை!
எழுத்தாளர் அறந்தை நாராயணன், 'குடியால் குடைசாய்ந்த கோபுரங்கள்’ என்று ஒரு புத்தகம் எழுதினார். தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த நடிகர்கள் சிலர், தங்களது குடிப்பழக்கத்தால் எப்படி சொந்த வாழ்க்கையை அழித்துக்கொண்டார்கள் என்பதை விவரிக்கும் அந்தக் காட்சிகளைப் படிக்கும்போது ரத்தம் கொதிக்கும். கோபுரங்களில் இருந்தவர்களை எல்லாம் குடிசையை நோக்கித் தள்ளி... பட்டுப் பீதாம்பரங்களில் தவழ்ந்தவர்களைக் கட்டாந்தரையில் தவழவைத்துச் சிதைத்து...
மது போதைக்கு எதிராகக் கல்லூரிகளில் அடிக்கடி விழிப்பு உணர்வு வகுப்புகளை நடத்துபவர் டாக்டர் மோகன். மாணவர்கள் எப்படிப் போதைக்கு அடிமையாகிறார்கள் என்பதுபற்றி தொடர் ஆய்வில் ஈடுபட்டு இருக்கும் அவர் சொல்லும் தகவல்கள் அதிர வைக்கின்றன. ''பள்ளி அல்லது கல்லூரிக் காலத்தில் ஜாலிக்காக என்று பீர் குடிக்கத் தொடங்கும் மாணவர்களில், பத்தில் மூன்று பேர் காலப்போக்கில் முழுநேரக் குடிகாரர்களாக மாறுகிறார்கள். அதனாலேயே நோயாளி ஆகி, 40 வயதுக்குள் மரணத்தைத் தழுவுகிறார்கள்'' என்று பெரிய ஆய்வறிக்கையையே தருகிறார் மோகன்.
மாணவர்களின் முதல் அனுபவம் பெரும்பாலும் நண்பர்களின் வற்புறுத்தல்களால்தான் தொடங்குகிறது.'சும்மா அடி மச்சி. ஒரு த்ரில் தான ’ என்று ஏ(ஊ)ற்றி விடுவார்கள். இதை 'பீர் பிரஷர்’(peer pressure) என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். இந்த இடத்தில்தான் மாணவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் 'சும்மா’ மது குடிப்பது என்பது செத்த எலியின் வாலைப் பிடிப்பதுபோல எளிதாகத்தான் இருக்கும். ஆனால், அது உண்மையில் புலி வால் என்பது போகப்போகத்தான் தெரியும்!
சிலர் சொல்வார்கள், ''எப்போவாச்​சும் குடிப்பேன்... கம்பெனி மீட்டிங்... ஃப்ரெண்ட்ஸ் கெட் டு கெதெர்... மன்த்லி ஒன்ஸ்... வெளியூர் போனால்தான்... ஆனா, நான் குடிகாரன் இல்லை'' என்று. குடிக்கும் பழக்கம் இருக்கும் எவருக்கும் நான் குடிகாரன் இல்லை என்று சொல்லும்  தகுதி கிடையாது. ஏனெனில் மனநல மருத்துவர்கள் மது குடிப்பதை 'குடிப்பழக்கம்’ என்று சொல்வது இல்லை. 'குடிநோய்’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். ஒரு  முறை குடித்தாலும் கிருமி, கிருமிதானே? அதேபோல, 'எப்போதாவது குடிக்​கிறேன் ஆசாமி’கள் பார்க்க ஆரோக்கிய​மாகத் தெரியலாம். ஆனால், குடிப் பழக்கம் உள்ள எவருக்கும்  கல்லீரல், கணையம் போன்றவை குறைந்தது 10 சதவிகிதமாவது பாதிக்கப்பட்டு இருக்கும். ஆக,  'எப்போதாவது குடிக்கிறேன் ஆசாமி’கள் முதல்நிலைக் குடிநோயாளிகள்!
எப்போடா பொழுது சாயும் என்று காத்​திருந்து மதுக்கடைக்கு ஓடுவது இரண்டாம் நிலை நோய்க்கான அறிகுறி. இந்தக் கட்டத்தில் இருப்பவர்கள் குடிக்கப்போகும் நேரத்துக்கு நான்கு மணி நேரத்துக்கு முன்பாகவே 50 சதவிகிதம் தன்னிலையை இழந்துவிடுவார்கள். நாம் ஒன்று கேட்டால், அவர்கள் ஒன்று பதில் சொல்வார்கள் அல்லது திருதிருவென முழிப்பார்கள். அதாவது, வயிற்றுக்குள் சாராயம் போகவில்லை என்றாலும் 'போகப்​போகிறது’ என்ற மனநிலையிலேயே தடுமாறத் தொடங்கி ​விடுவார்கள். வேலைநேரம் முடிந்து, ஏழு மணிக்கு குடிக்கப் போக வேண்டும் என்றால், குடிப்பதற்கானத் திட்டமிடல் மதியம் மூன்று மணிக்கே மனதுக்குள் தொடங்கிவிடும்.  குடிக்கும்போது அதிகமாகப் போதை ஏற வேண்டும் என்று மதிய உணவைக் குறைத்து சாப்பிடுவார்கள் சிலர். உணவே வேண்டாம்; வெறும் வயிற்றில் குடித்தால்தான் போதை அதிகம் ஏறும் என்பது வேறு சிலரின் தத்துப்பித்துவம். இரவு முழுவதும் மது அருந்திவிட்டு, மறுநாள் காலை தன்னைத்தானே திட்டிக்கொண்டும் 'நாளை முதல் குடிக்க மாட்டேன்’ என்று சபதம் எடுத்துக்கொண்டும் அன்றாட அலுவலில் ஆஜர் ஆவது இவர்களுடைய குணாதிசயம். ஏமாற்றிச் சென்ற காதலியில் தொடங்கி பெட்ரோல் விலை உயர்வு வரை எல்லாமே இவர்கள் குடிப்பதற்கான காரணங்கள் ஆகலாம். குடிக்க வேண்டும் என்பதற்காகக் இப்படிக் காரணங்களை உருவாக்குவதை மன நல மருத்துவத்தில் 'ரேஷனலைசேஷன்’ (rationalization) என்பார்கள். இவர்கள் இரண்டாம் நிலைக் குடி நோயாளிகள். இரவு மட்டும் குடிக்கும் இந்த இரண்டாம் நிலை குடி நோயாளிகளுக்கு ஒரு கட்டத்தில் ஆல்கஹால் அவர்களின் மூளை நரம்புகளிலும் ரத்தத் தட்டுகளிலும் சேகரமாகிவிடும். இதனால், ஏற்கெனவே குடித்த மதுவின் அளவு போதாமல் ஒரு வருட இடைவெளிக்குள் மதுவின் அளவு இரண்டு மடங்காக அதிகரித்துவிடும். குவாட்டர் அடித்தவர் ஆஃப் பாட்டில் அடிக்க வேண்டிய சூழல். இதனால், இயல்பாகவே உடலில் உள்ள மொத்த உறுப்புகளும் பாதிக்கப்பட்டு, கை நடுக்கம், பதற்றம் இவை எல்லாம் ஏற்படும். மறுநாள் காலை இயல்பாக இருக்க முடியாது. குறைந்தது 90 மில்லி மதுவாவது குடித்தால்தான் இயல்பு நிலைக்குத் திரும்பும் நிலை ஏற்படும். இங்குதான் காலையிலேயே மதுவை தேடிச் செல்லும் உச்சபட்ச மூன்றாம் நிலைக் குடி நோயாளி உருவாகிறான்.
ஒருவர் மூன்றாம் நிலைக் குடி நோயாளியாக மாறிவிட்டார் என்பதைக் கீழ்க்காணும் ஆறு விஷயங்களில் இருந்து மனநல மருத்துவர்கள் அனுமானிக்கிறார்கள்.
1. மதுவின் அளவை அதிகரித்துக்கொண்டே செல்வது.
2. மனைவி, குழந்தை, காதல், காமம், சினிமா, புத்தகம், விளையாட்டு... இப்படி எல்லா இன்பங்களையும்விட மதுவே சந்தோஷம் என நினைப்பது.
3. மது அருந்திய போதை தெளிந்த பின், மீண்டும் மது கிடைக்கும் வரை, குடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருப்பது.
4. குடிக்க ஆரம்பித்துவிட்டால் எந்த அளவும் இல்லாமல் சுயநினைவு இழக்கும்வரை  குடித்துக்கொண்டே இருப்பது.
5. மது அருந்துவது தவறு. உடல் நலம், குடும்ப நலம் பாதிக்கிறது என்று உணர்ந்து மதுவைவிட முயற்சிக்கும்போது, கை உதறல், மனப்பதற்றம், அபரிமிதமான வியர்வை, உறக்கம் இன்மை போன்ற சூழலுக்குத் தள்ளப்படுவது.
6. உடல் நலம் பாதிக்கப்பட்டுவிட்டது... மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுவிட்டோம் என்று தெரிந்தும் குற்ற உணர்விலேயே குடித்துக்கொண்டே இருப்பது.
ஒருவர் மூன்றாம் நிலைக் குடி நோயாளியாகி​விட்டால், அவரை மீட்பது அவ்வளவு எளிது இல்லை. இதற்கான சிகிச்சையை 'ஆன்டி ரெட்ரோ வைரல்’  (anti retroviral)  என்று சொல்வார்கள். ஜீவ மரணப் போராட்டம் இது.
உதாரணத்துக்கு, உருண்டையாக இருக்கும் மூளையின் மேல் ஆல்கஹால் என்கிற தொப்பியை ஒருவர் பல ஆண்டுகளாக அணிந்து இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். திடீரென்று ஒரு நாள் இந்த தொப்பியைக் கழற்றினால், மூளை உச்சபட்சக் கொதிநிலையை அடையும். அப்போது உடலுக்குக் கட்டளையிடும் மூளையின் நரம்புகள் ஆத்திரத்தில் கன்னாபின்னா என்று கட்டளையிட்டு... கை கால்கள் உதறி, நாக்கை துருத்திக் கடித்து, தற்கொலை செய்துகொள்ளத் துடிப்பார்கள் அல்லது எதிரே இருப்பவரைத் தாக்கவும் துணிவார்கள்.
இந்தச் சிகிச்சையின்போது முதல் 72 மணி நேரத்தில் குடி நோயாளியின் உடலில் இருந்து ஆல்கஹாலின் விஷத்தன்மையை அகற்றும் பணி நடக்கும். இந்தச் சமயத்தில் வலிப்பு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். இதை 'ரம் ஃபிட்ஸ்’  (rum fits) என்பார்கள். மரண வேதனையைவிடக் கொடிய வேதனை இது. சொல்லப்போனால், வெளியேறத் துடிக்கும் உயிரைத் தடுத்து நிறுத்தி, சிகிச்சை அளிப்பது என்பது இதுதான்.
    அதெல்லாம் சரி, நீங்கள் குடி நோயாளியா?
உலகச் சுகாதார நிறுவனம் அங்கீகரித்து சர்வதேச அளவில் மனநல மருத்துவர்கள் பயன்படுத்தும் அடிப்படைக் கேள்வித்தாள் இது. இந்தக் கேள்விகளை 'ஆடிட் கொஸ்டீன்ஸ்’  (The alcohol use disorders identification test) என்பார்கள். இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் உங்களுக்கே உங்களுக்கானவை. அது அடுத்த இதழில்...
 - தெளிவோம்
 மது உருவான கதைகளுள் ஒன்று!
 மதியை மயக்கும் மது எப்படி உருவானது என்பதற்கான நாடோடிக் கதைகளுள் இதுவும் ஒன்று. ஷாம்ஜெட் என்கிற பாரசீக மன்னன் திராட்சைப் பிரியன். அரசவையில் இருந்தாலும், அந்தப்புரத்தில் இருந்தாலும் அவனுக்கு முன்பாக பெரிய ஜாடி ஒன்றில் திராட்சை நிரப்பப்பட்டு இருக்க வேண்டும். ஒரு நாள் மன்னன் வெளியூர் சென்று திரும்பியபோது, அவனது படுக்கை அறையில் வைக்கப்பட்டு இருந்த ஜாடியில் திராட்சை அழுகி, நொதித்துப்போய் கிடந்தது. மன்னன் அதை விரலால் எடுத்து நக்கிப் பார்த்தான். துர்நாற்றத்துடன் கசந்தது. உடனே, இது சைத்தானின் வேலை என்று கருதியவன், ஜாடியில் 'விஷம்’ என்று எழுதி அரண்மனைக்கு வெளியேவைக்க உத்தரவிட்டான்.
அந்த நேரம் அந்தப்புரத்தின் அரசிகளில் ஒருத்தி, மன்னனிடம் கோபித்துக்கொண்டு வெளியே ஓடினாள். ஜாடியில் விஷம் என்று எழுதப்பட்டு இருப்பதைப் பார்த்தவள், உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பி, அதை எடுத்துக் குடித்தாள். அதுவரை, அழுதுகொண்டே 'கண்ணில் நிறைந்த கணவரை எண்ணி கண்ணீர்க் கடலில் குதிக்கவா...’ என்று பாடிக்கொண்டு இருந்தவள், சில நிமிடங்களில் பரவச நிலையை அடைய, ஆன் தி ஸ்பாட்டில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். தகவல் அறிந்து வெளியே வந்த மன்னன், தானும் அதை எடுத்து சுவைக்கவும் அரண்மனை வாயிலில், 'ஓஹோ எந்தன் பேபி... நீ வாராய் எந்தன் பேபி...’ என்று இருவரும் டூயட் பாடத் தொடங்கிவிட்டார்கள். என்னவோ ஏதோ என்று வெளியே வந்த அரசவை அறிஞர்களும் அதை சுவைக்க... அப்புறம் என்ன, 'வேர் இஸ் த பார்ட்டி... அரண்மனை வாசலில் பார்ட்டி!’தான்.
 ஊறல்... ஊழல்...
மதுரை கோச்சடையில் டாஸ்மாக் கடை ஒன்றின் மேற்பார்வை​யாளராக இருக்கும் ஷாஜகான், டாஸ்மாக் பார்களில் நடக்கும் மோசடிகளை எதிர்த்துக் குரல் கொடுப்பவர். அவர் சொல்லும் விஷயங்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம். டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் எப்படி எல்லாம் நடக்கிறது என்பதற்கு அவர் சொன்ன ஓர் உதாரணம்...
''ஒரு கடையின் தினசரி வியாபாரத்தில் 2.5 சதவிகிதம் அடிப்படைத் தொகையாக நிர்ணயித்து, மாதத்துக்கு இவ்வளவு தொகை கட்ட வேண்டும் என்று பார் உரிமத்துக்கு டெண்டர் விடுவார்கள். ஒரு நாளைக்கு கடையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் என்றால், தினசரி 2,500 வீதம் மாதத்துக்கு 75 ஆயிரம் என நிர்ணயித்து டெண்டர் விடுவார்கள். இந்தத் தொகைக்கு மேல் யார் அதிகமாகக் கேட்கிறார்களோ... அவர்களுக்கு லைசென்ஸ் கிடைக்கும்.
இப்படி உரிமம் பெறுபவர், மூன்று மாத முன்வைப்பு தொகை செலுத்த வேண்டும். மூன்று மாதங்கள் தொடர்ந்து தொகை செலுத்தவில்லை என்றால், உரிமத்தை ரத்து செய்துவிடுவார்கள். இங்குதான் மோசடியே ஆரம்பம். உரிமம் ரத்து ஆன பின்பு அதிகாரிகளுடன் பேசிவைத்துக்கொண்டு, அந்தக் கடைக்கான ஏலத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால், அதிகாரப்பூர்வமற்ற முறையில் பார் தொடர்ந்து நடக்கும்.
தமிழகத்தில் மொத்தம் 7,434 டாஸ்மாக் கடைகள். இதில் சுமார் 2,000 கடைகளில் அனுமதி இல்லாமல் இப்படி பார் நடக்கிறது. இந்த 2,000 கடைகளில் ஒரு நாளைக்குச் சராசரியாக ஒரு லட்சம் வியாபாரம் என்று வைத்துக்​கொண்டாலும், 2.5சதவீத கணக்குப்படி மாதத்துக்கு 15 கோடி அரசுக்கு நஷ்டம். இது ஒரு லட்சம் வியாபாரம் என்ற அடிப்படையில் போடப்பட்ட கணக்கு மட்டுமே. இரண்டு அல்லது நான்கு லட்சம் வரை வியாபாரம் ஆகும் கடைகளுக்கு நஷ்டக் கணக்குப் போட்டால் இன்னும் தலை சுற்றும்!''

சரி, குடிநோய்ப் பரிசோதனைக்குத் தயாராகி​ விட்டீர்களா?

இந்த கேள்விகளுக்கான உண்மையான பதிலை 'டிக்’ அடியுங்கள். கிடைக்கும் மதிப்பெண்களை வைத்து
நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
1.எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மது அருந்துகிறீர்கள்?
அ. எப்போதும் இல்லை
ஆ. இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை
இ. மாதத்துக்கு 2 முதல் 4 முறை
ஈ. வாரத்துக்கு 2 முதல் 3 முறை
உ. வாரத்துக்கு 4 முறை, அதற்கு மேலும்
2.எத்தனை கோப்பை (லார்ஜ்) மது அருந்து கிறீர்கள்?
அ. 1 அல்லது 2  ஆ. 3 அல்லது 4
இ. 5 அல்லது 6   ஈ. 7 முதல் 9
உ. 10 ,அதற்கு மேல்
3. ஒரே தடவையில் ஆறு கோப்பை அல்லது அதற்கு மேலும் குடிக்கிறீர்கள் என்றால் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை அப்படிக் குடிக்கிறீர்கள்?
அ. எப்போதும் இல்லை
ஆ. இரண்டு மூன்று மாதங்களுக்கு
ஒரு முறை
இ. மாதத்துக்கு ஒருமுறை
ஈ. வாரம் ஒருமுறை
உ. தினமும்
4. மது அருந்த ஆரம்பித்து விட்டால் நிறுத்தவே முடியாது என்ற சூழ்நிலை கடந்த ஆண்டில் எத்தனை முறை உங்களுக்கு ஏற்பட்டது?
அ. எப்போதும் இல்லை
ஆ. இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை
இ. ஒவ்வொரு மாதமும்
ஈ. ஒவ்வொரு வாரமும்
உ. தினமும்
5. குடிப்பதற்காக கடந்த ஆண்டு, நீங்கள் வழக்கமான செய்யும் அலுவல்களை எத்தனை முறை புறக்​கணித்து இருக்கிறீர்கள்?
அ. எப்போதும் இல்லை
ஆ. இரண்டு மூன்று
மாதங்களுக்கு ஒரு முறை
இ. ஒவ்வொரு மாதமும்
ஈ. ஒவ்வொரு வாரமும்
உ. தினமும்
6. மிக அதிகமாகக் குடித்த பிறகு மறுநாள் காலை எழுந்தவுடன் மீண்டும் மது அருந்த வேண்டும் என்ற சூழ்நிலை கடந்த ஆண்டு எத்தனை முறை ஏற்பட்டது?
அ. எப்போதும் இல்லை
ஆ. இரண்டு மூன்று
மாதங்களுக்கு ஒரு முறை
இ. ஒவ்வொரு மாதமும்
ஈ. ஒவ்வொரு வாரமும்
உ. தினமும்
7. மது அருந்தியதால் குற்ற உணர்ச்சி மற்றும் நீங்கள் செய்த செயலுக்காக வருந்தும் சூழ்நிலை கடந்த ஆண்டு எத்தனை முறை ஏற்பட்டது?
அ. எப்போதும் இல்லை
ஆ. இரண்டு மூன்று
மாதங்களுக்கு ஒரு முறை
இ. ஒவ்வொரு மாதமும்
ஈ. ஒவ்வொரு வாரமும்
உ. தினமும்
8. அதிகமாகக் குடித்த பின், கடந்த இரவில் என்ன நடந்தது என்பதே நினைவு இல்லாத சூழல் கடந்த ஆண்டில் எத்தனை முறை ஏற்பட்டது?
அ. எப்போதும் இல்லை
ஆ. இரண்டு மூன்று
மாதங்களுக்கு ஒரு முறை
இ. ஒவ்வொரு மாதமும்
ஈ. ஒவ்வொரு வாரமும்
உ. தினமும்
9. நீங்கள் குடிப்பதால் உங்களுக்கோ அல்லது உங்களால் மற்றவர்களுக்கோ கடந்த ஆண்டு காயம் ஏற்பட்டுள்​ளதா?
அ. இல்லை
ஆ. ஆம், ஆனால் கடந்த ஆண்டு இல்லை
இ. ஆம். கடந்த ஆண்டு ஏற்பட்டது.
10. உறவினர், நண்பர், மருத்துவர் என யாரேனும், நீங்கள் குடிப்பது குறித்து கவலை தெரிவித்து குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று அறிவுரை கூறி இருக்கிறார்களா?
அ. இல்லை
ஆ. ஆம், ஆனால் கடந்த ஆண்டு இல்லை
இ. ஆம், கடந்த ஆண்டு கூறினார்.
மதிப்பெண்கள்:
1-8 கேள்விகளுக்கு: அ-0; ஆ-1; இ-2; ஈ-3; உ-4.
9-10 கேள்விகளுக்கு: அ-0; ஆ-2; இ-4.
உங்கள் மதிப்பெண் எவ்வளவு என்று கணக்கிட்டுப் பார்த்தீர்களா?
இப்போது ரிசல்ட்:
ஆணோ, பெண்ணோ உங்கள் மதிப்பெண் 8 என்றால், நீங்கள் அபாய கட்டத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.
பெண்ணாக இருந்து 13 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறீர்கள் என்றாலோ... ஆணாக இருந்து 15 மதிப்பெண்களைப் பெற்றிருக்​கிறீர்கள் என்றாலோ... சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய குடிஅடிமை நீங்கள். அதற்கு மேலும் மதிப்பெண் பெற்று இருந்தால், உங்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!
சரி, மது அருந்துவதால் ஒருவருக்கு ஏற்படும் உடல்நிலை, மனநிலை பாதிப்புகள் நமக்குத் தெரியும். ஆனால், மதுவே அருந்தாமல் குடி நோயாளிகளுடன் குடும்பம் நடத்தும் பெண்களுக்கு உடல் அளவிலும் மனஅளவிலும் ஏற்படும் பாதிப்புகள்பற்றி உங்களுக்குத் தெரியுமா?
குடிநோயாளிகள் கொஞ்சமும் கற்பனை செய்துகூட பார்க்க விரும்பாத அந்த நரக வேதனையை இப்போது பார்க்கலாம்.
மதுவை முகர்ந்துப் பார்க்கும்போது வரும் துர்நாற்றத்தைவிட மது குடித்தவரின் வாய், சுவாசம், வியர்வையில் இருந்து வரும் துர்நாற்றம் பத்து மடங்கு அதிகம். பாழாய்போன பாரில் அழுகிய முட்டையில் போடப்பட்ட ஹாஃப் பாயில், முந்தா நாள் போட்ட சில்லி சிக்கன்... ஏற்கெனவே வயிற்றுக்குள் அழுகிக்கொண்டு இருக்கும் கல்லீரல், காயம்பட்ட இரைப்பை இவை எல்லாம் சேர்ந்து மதுரை மல்லி வாசனையா மணக்கும்?
மது நாற்றத்துடன் வீட்டுக்கு வரும் ஒரு குடிநோயாளி, இரவில் காம நோக்கத்துடன் தனது மனைவியை நெருங்கும்போது... அதுதான் பெண்ணுக்கு உலகிலேயே சகித்துக்கொள்ள முடியாத வேதனையாக இருக்கும். கிட்டத்தட்ட வல்லுறவுபோலத்தான் இதுவும். தமிழக அரசு வழங்கும் டாஸ்மாக் சாபத்தால் ஒவ்வொரு தெருவுக்கும் பத்து பெண்களாவது இந்தக் கொடுமையை தினம்தினம் அனுபவிக்கிறார்கள்.
நடத்தையில் சந்தேகம்... மனைவி கொலை... கணவன் கைது என்று நாளிதழ்களில் நாள் தவறாமல் வரும் செய்திகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதற்குப் பின்னணியில் இருக்கும் குடிநோய் தொடர்பான மருத்துவ ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?
கடந்த தொடரில் படித்த உச்சபட்ச மூன்றாம் நிலை குடிநோயாளிகளுக்கு ஒரு முக்கியமான பிரச்னை இருக்கும். அது... இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதுபோல நினைத்துக்கொள்வது. குறிப்பாக, தன் மனைவி தனக்கு நேர்மையாக இல்லையோ... நடத்தை தவறி இருப்பாளோ என்ற சந்தேகம் (குடியால் பலர் ஆண்மைக்குறைவு பிரச்னைக்கு உள்ளாவதும் அதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையும்கூட இதற்கு ஒரு காரணம்). மனநல மருத்துவத்தில் இதை  Delusion of Infidelity என்பார்கள்.
குடித்துவிட்டு வருவதால் இயல்பாகவே மனைவி தன்னை சரிவரக் கவனிக்காமல் இருப்பது, திட்டுவது, பண விஷயங்களை மறைப்பது போன்றவற்றால் மனைவி மீது வரும் வெறுப்பு இதற்கு ஒரு காரணம். இன்னொரு முக்கியமான மருத்துவரீதியான காரணம், ஆண் மலட்டுத்தன்மை. மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் இந்த வாக்கியம் ஏகப் பிரபலம். Provokes the desire but, takes away the performance. அதாவது, காமத்தைத் தூண்டிவிடும்; ஆனால், செயல்படுத்தவிடாது என்று அர்த்தம். மதுவும் அப்படித்தான். ஆல்கஹால், காமத்தைத் தூண்டிவிடும். ஆனால், செயல்படவிடாது. தொடர்ந்து குடிக்கும் குடிநோயாளிகள் மனைவியுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது, நீண்டநேரம் போராடுவார்கள். ம்ஹூம், உருப்படியாக எதுவும் நடக்காது. பெண்களுக்குத் திருப்தியை ஏற்படுத்த முடியாது. ஆணுக்கும் தன்னால் இயலவில்லையே என்கிற குற்றஉணர்வு ஏற்படும்.
ஆனால், தொடர்ந்து மது அருந்துவதால்தான் மேற்படி விஷயத்தில் தான் வீக் என்பதை ஆண் அவ்வளவு சீக்கிரம் ஒப்புக்கொள்ள மாட்டான். அது ஆணின் ஈகோ. தன்னால் மனைவியைத் திருப்திப்படுத்த முடியாததால், மனைவி வேறு எங்கோ தாகத்தைத் தீர்த்துக்கொள்கிறாளோ என்ற சந்தேகம் கணவனுக்கு ஏற்படும். குடிபோதையில் இருக்கும் ஒரு குடிகாரனால் வார்த்தைகளை அளந்து பேச முடியாது. குடித்துவிட்டு வந்து மனைவியின் நடத்தை குறித்து ஆபாசமாகக் கேள்வி எழுப்புவான்.
கணவன் குடிப்பதை, குடித்து விட்டு அடிப்பதை, குழந்தையின் மருத்துவத்துக்கு வைத்து இருக்கும் பணத்தைப் பிடுங்கிக்கொண்டு சென்று குடிப்பதை எல்லாம்கூட பொறுத்துக்கொள்ளும் ஒரு நல்ல மனைவியால், தான் நடத்தை கெட்டவள் என்று கணவன் திட்டுவதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. வன்முறையும் விவாகரத்துகளும் குற்றங்களும் தொடங்கும் இடம் இதுதான்!
செக்ஸ் ரீதியான இந்தப் பாதிப்பின் அடுத்த கட்டம் தெரியுமா? அசிங்கத்தின் உச்சம் அது!

தரம்... தரை டிக்கெட்டு!

வருமானத்தைப் பெருமையாகச் சொல்பவர்கள் மதுவின் தரத்தைப் பற்றிக் கொஞ்சமாவது கவலைப்படுகிறார்களா?
தயாரான மதுபானம் தொழிற்சாலையில் இருந்து வெளியே வர வேண்டும் என்றால் அதற்கு ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு மதுபான நிறுவனத்துக்கும் துணை வட்டாட்சியர் அந்தஸ்தில் ஓர் அதிகாரி இருப்பார். அன்றைய தினம் டாஸ்மாக் கிடங்குக்குச் செல்லத் தயாராக உள்ள மதுபானத் தொட்டியில் அவர் குறிப்பிட்ட அளவு மதுவை சாம்பிள் எடுத்துக்கொண்டு தொட்டிக்கு சீல் வைக்க வேண்டும். பின்னர், அந்த சாம்பிளை அரசு தரக்கட்டுப்பாடு ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி சான்றிதழ் வாங்க வேண்டும். அதன் பின்னரே அந்த மதுபானம் பாட்டிலிங் செய்யப்படும். ஆனால், இதிலும் ஏகப்பட்ட முறைகேடு நடக்கிறது என்பதுதான் குடல் எரிய வைக்கும் உண்மை.
ஆரம்பத்தில் ஒரு மதுபானத்தின் புதிய பிராண்டை அறிமுகப்படுத்தும்போது அந்த மதுவைக் குடிக்கும் குடிநோயாளி, 'ரொம்ப நல்லா இருக்கு பேஷ் பேஷ்’ என்று குடிப்பான். இப்படி வாய்மொழி விளம்பரம் மூலமே அதன் விற்பனை பல மடங்கு கூடும். அதைக் குடித்துப் பழகிய குடி நோயாளிகள் அவ்வளவு சீக்கிரம் வேறு பிராண்டுக்கு மாற மாட்டார்கள். ஆனால், திடீரென்று அந்த மதுபானத்தின் தரத்தை பல மடங்கு குறைத்து விடுவார்கள். மூடியைத் திறந்தாலே குப்பென வீசும் எரிசாராய வாடை!
சில ஆண்டுகளுக்கு முன், ஒரு நிறுவனம் அறிமுகப்​படுத்​திய ஐஸ்கிரீம் வாசனை கொண்ட ஒரு மதுபானத்தை, 'மாப்ளே, வீட்ல கண்டேபிடிக்கல... சூப்பரு’ என்று தொடர்ந்து இரண்டு மாதம் வாங்கிச் குடித்த ஒரு நண்பன், திடீரென்று ஒருநாள் ஆரம்பித்து பல மாதங்கள் உடம்பெல்லாம் சொரிந்து கொண்டே இருந்தான்.  ஒரு கட்டத்தில் சொரிந்து சொரிந்து ரத்தமே வந்துவிட்டது அவனுக்கு. அந்த மதுவின் மகிமை அப்படி!


ங்கிலத்தில் 'சோஷியல் டேபோ’ (Social taboo) என்றுசொல்வார்கள். அதா​வது, சமூகத்தில் இவை எல்லாம் சரி... இவை எல்லாம் தவறு என்று நாம் ஒரு வரையறை வைத்திருக்கிறோம் அல்லவா? அதைத்தான் 'சோஷியல் டேபோ’ என்கிறார்கள். ஒரு தாய்க்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம்? சகோதரியிடம் எப்படி நடந்து​கொள்ள வேண்டும்... தாயிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? இதை எல்லாம் நமக்குள் விதைப்பது இந்த 'சோஷியல் டேபோ’தான். மது உள்ளே போகும்போது இந்த 'சோஷியல் டேபோ’ எல்லாம் நம் கண்ணில் இருந்து மறைந்து, நம்மைக் குருடாக்குவதுதான் கொடூரம்!

கடந்த இதழில் வெளியான கேள்வி - பதிலைப் படித்து நிலை​குலைந்து போனவர்கள் மிக அதிகம்.
அந்தக் கேள்வி - பதிலில் 15+ மதிப்பெண் பெற்றவர்கள் குடிநோயாளிகள் என்றால், 20+ மதிப்பெண் எடுத்தவர்கள் குடி - மன - பாலியல் நோயாளிகள். நிறையப் பேருக்கு அது அதிர்ச்சி!
நம்புங்கள் நண்பர்களே... அவை அத்தனையும் சர்வதேச அளவில் நிரூபிக்கப்​பட்ட உண்மை. சமீபத்திய இரு சம்பவங்களை இங்கே தருகிறேன். அவை நான் சொன்ன குடிநோய் உண்மைகளோடு எவ்வளவு பொருந்திப்​போகிறது என்று பாருங்கள்...கடந்த வாரம், விழுப்புரம் மாவட்டம், குச்சிப்​பாளையத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண் தன்னுடைய தந்தை மூன்று கொலைகளைச் செய்தவர் என்றதோடு, தன்னிடமே பல முறை தவறாக நடக்க முயற்சி செய்தார் என்று கண்ணீர் மல்க தொலைக்காட்சியில் கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம். மதுரையில் வீரணன் என்பவர் தன் மனைவியாலேயே  கொலை செய்யப்பட்டதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இப்படிப்பட்ட செய்திகளின் பின்னணியில் பொதுமக்கள் பார்​வைக்கு வராத ஒரு பின்னணி இருக்கும். அது... குடி.
வீரணனும் முருகனும்கூட முழுநேரக் குடிநோயாளிகள் என்பதைச் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் உறுதிசெய்தார்கள்.
நன்றாக யோசித்துப் பாருங்கள்... 'மாமியாரைக் கற்பழித்த மருமகன்...’ 'மூதாட்டியைக் கற்பழித்த வாலிபன்’ என்பது போன்ற செய்திகள் அதிகரித்துக்​கொண்டேபோகக் காரணம் என்ன? மது ஒருவனை கற்காலத்துக்கும் கடத்திப்​போகும்!
இப்படி முறை தவறி, அளவுக்கு அதிகமாகக் காமவெறி கொண்டு அலையும் குடிநோயாளி​களை அதிதீவிர பாலியல் வெறிகொண்டவர் (High risk sexual behaviour person) என்பார்கள். ஏழெட்டு லார்ஜ் உள்ளே போனதும் இவர்களுக்கு போதை ஏறுகிறதோ இல்லையோ... கட்டுப்படுத்த முடியாத காமம் தலைக்கு ஏறிவிடும்!  
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பட்டு அமைப்பு பெங்களூருவில் இருக்கும் தேசிய மனநல மருத்துவம் மற்றும் மூளை நரம்பியல் மையத்தில் இருக்கும் மதுமறுவாழ்வு மீட்பு சிகிச்சைப் பிரிவில் 177 குடிநோயாளிகளிடம் ஆறு மாத காலம் ஆய்வு நடத்தியது. இதில், 53 பேர் (30%) அதிதீவிர பாலியல் வெறிகொண்டவர்களாக இருந்தனர்.
சேலம் எஸ்.பி-யாக பொன்.மாணிக்கவேல் இருந்த​போது, ஓமலூர் அருகே கர்ணன் என்பவரை போலீஸ் என்கவுன்ட்டர் செய்தது. அதிகாலை நேரத்தில்  வயக்காட்டுப் பக்கம் ஒதுங்கும் வயதான மூதாட்டி​களைக் கற்பழித்து, காதில், கழுத்தில் இருக்கும் சொற்ப நகைகளைக் கொள்ளை அடிப்பது இவன் பழக்கம். நகைகளை விற்று மஞ்சள் பை நிறைய குவார்ட்டர் பாட்டில்களை வைத்துக்​கொண்டு குடிப்பது... போதை தலைக்கு ஏறியதும் மீண்டும் கற்பழிப்பது என சுமார் மூன்று ஆண்டுகள் அழிச்சாட்டியம் செய்தவனை, ஒரு​வழியாக சுட்டுக் கொன்றார்கள் போலீஸார். அதிகாரி ஒருவரிடம் கேட்டேன்... கர்ணன் ஏன் மூதாட்டிகளை மட்டும் கற்பழித்தான் என்று. 'குடித்து, குடித்து அவன் மூங்கிலைப்போல மெலிந்து இருந்தான். 70 வயதைத் தாண்டிய மூதாட்டிகளை கீழே சாய்க்கும் அளவுக்கு மட்டுமே அவனிடம் சக்தி இருந்தது’ என்றார்.
குடி ஒருவனை இந்த அளவுக்குக் கொண்டு​செல்​லுமா என்று அதிர்ச்சி அடைய வேண்​டாம். இதையும் தாண்டிய கட்டத்துக்கும் கொண்டுசெல்லும். அந்த நோயின் பெயர்  Zoophila அல்லது Bestiality . அதாவது ஒரு மனிதன், மனிதன் அல்லாத உயிரினங்களுடன், விலங்குகளுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வது. இது மன​நோயின் ஒரு பகுதிதான் என்றாலும் மண வாழ்க்கை சிக்கலாகி, தனிநபராக (ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும்) இருக்கும் முழுநேரக் குடிநோயாளிகளிடம் இந்தக் குரூர நோய் இருக்க வாய்ப்பு உண்டு. இவர்கள் நாய், பூனை போன்ற தங்களுடைய செல்லப் பிராணிகளிடம் உடலுறவு கொள்வார்கள். அப்படி உடல் உறவு கொள்வது மட்டும் அல்ல... அவர்களின் உலகமும் அந்தப் பிராணியைச் சுற்றியே இயங்கும். பிராணி​களிடம் மனம்விட்டுப் பேசுவார்கள். கட்டிப் பிடித்து செல்லம் கொஞ்சுவார்கள். அழுவார்கள். கிட்டத்தட்ட சமையல் செய்யத் தெரியாத மனைவி அல்லது கணவன் அது!
விலங்கின் யோனியில் இருக்கும் திரவம், எச்சில், சிறுநீர் போன்றவை மனிதனின் உள் உறுப்புகளுடன் மற்றும் வாயில் படும்போது எலிக் காய்ச்சல், க்யூ காய்ச்சல் மற்றும் ப்ரூசெல்லோசிஸ் (Brucellosis),  லெப்டோஸ்பைரோஸிஸ் (Leptospirosis), டாக்ஸோகேரியாசிஸ் (Toxocariasis) ஆகிய மோசமான கிருமிகளின் தொற்று ஏற்படும். இதேபோல, விலங்குகளுடன் புணரும் பெண்​களுக்கு விலங்குகளின் விந்தணுக்களால் கரு உருவாகாது என்றாலும், சில நேரங்களில் விலங்கின் விந்தணுக்களால் பெண்ணுக்குத் தீவிர ஒவ்வாமை ஏற்பட்டு மரணம் வரை கூட அழைத்துச் சென்றுவிடும்.
சில மாதங்களுக்கு முன், கோவை மாவட்டம், போத்தனூர் அருகேயுள்ள செட்டிப்பாளையம் கிராமத்தில் சில வாலிபர்கள் ஒன்று சேர்ந்து காளை மாட்டை (?!) பலாத்காரப்படுத்தி உள்ளனர். அதற்கும் சில மாதங்களுக்கு முன், சென்னிமலை அருகேயுள்ள ஈங்கூரில் ஒரு கும்பல் நிறை மாதப் பசுவிடம் தங்கள் ஆண்மையைக் காட்டி உள்ளனர். இந்த இரண்டு கும்பலில் இருந்தவர்களுமே பயங்கர போதையில் இருந்தவர்கள் என்பது நாம் இங்கு கவனிக்க வேண்டியது!
இவை எல்லாவற்றையும் விடக் கொடுமை மன நல மருத்துவர் ஒருவர் சொன்னது... மனநலம் மற்றும் குடிநோய் மீட்புச் சிகிச்சைக்கு வரும் நூற்றில் ஐந்து பேர் இந்த வகைக் குரூர நோயுடன் வந்து தங்களை விடுவிக்கும்படி கதறுகிறார்கள் என்றார் அந்த மருத்துவர்.
சரி, டெலிபோன் ஸ்காட்டலாஜியா (Telephone scatologia) என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? டாடாவுக்கும் அம்பானிக்கும் மிட்ட லுக்கும் கோடி கோடியாய் அள்ளித் தரும், குடிநோயாளிகளின் அந்த நோயைப் பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்.
- தெளிவோம்
நீயும் போலி நானும் போலி!


ஒரு பக்கம் போலீஸார் போலி மது பானங்களைப் பிடித்துக்கொண்டே இருந்தாலும், இன்னொரு பக்கம் போலி மது தயாரிப்பு உற்சாகமாக நடந்துகொண்டேதான் இருக்கிறது. இரண்டு நாளைக்கு முன்புகூட ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரிசாராயத்தை விழுப்புரம் போலீஸார் கைப்பற்றி இருக்கிறார்கள். சரி, போலி மதுபானங்களை எப்படித் தயாரிக்கிறார்கள்?
ஃபார்முலா 1: இது சாதாரண முறை. டாஸ்மாக் சரக்கு இரண்டு பங்கு. கேசரி பவுடர், ஆப்பிள், ஆரஞ்சு, லெமன் மூன்றில் ஏதாவது ஒரு எசன்ஸ் கலந்த தண்ணீர் ஒரு பங்கு. போலி சரக்கு ரெடி. இது பெரும்பாலும் டாஸ்மாக் பணியாளர்கள் அல்லது பார்களில் வேலை செய்பவர்கள் மூலம் தயாரிக்கப்பட்டு, அவர்களாலேயே விற்கப்படுவது. நம் ஊரில் அதிகம் விற்பனையாகும் விலை குறைந்த பிராண்டின் குவாட்டர் பாட்டில்களில்தான் அதிகம் இந்த தில்லாங்கடி நடக்கிறது. குவாட்டர் பாட்டிலின் மூடியை அலேக்காக திறந்து, தங்கள் கலவையை ஊற்றி, பாட்டிலை மூட ஒரு பெரிய சைஸ் குண்டூசி போதும்.
ஃபார்முலா 2: கர்நாடகம் மற்றும் புதுச்சேரியில் குறிப்பிட்ட சில சரக்குகள் மட்டும் விலை குறைவு. ஃபுல் பாட்டில் ரூ. 180-க்கும் கிடைக்கிறது. ஆனால், கிக் கொஞ்சம் குறைவுதான். இவற்றை மொத்தமாக வாங்கி வந்து, ஸ்பிரிட் (எரிசாராயம்) கலந்து தயாரிப்பார்கள். உதாரணத்துக்கு, குவார்ட்டர் தயாரிக்க எரிசாராயம் ஐந்து மி.லி. வெளி மாநிலச் சரக்கு 100 மி.லி. கலர் பவுடர், எசன்ஸ் கலந்த தண்ணீர் 75 மி.லி. இதுதான் கலவை. 180 மி.லி. குவாட்டர் தயார்!
  ஃபார்முலா 3: இது கொஞ்சம் ஏமாந்தாலும் டேஞ்சர்தான். கிட்டத்தட்ட கள்ளச்சாராயம். காலாவதியான பேட்டரிகளை உடைத்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கிறார்கள். அது ஆறியவுடன் வடிகட்டி அதை ஃப்ரீஸரில் ஐஸ் கட்டியாக மாற்றுகிறார்கள். ஐஸ் கட்டியை அண்டாவில் போட்டு மீண்டும் காய்ச்சல். இப்படி மீண்டும் மீண்டும் காய்ச்சும்போதுதான் தண்ணீரில் இருக்கும் ஆக்ஸிஜன் மற்றும் மினரல் எல்லாம் காலியாகி பூஜ்ஜிய சதவிகித கனிமங்கள் இல்லாத தண்ணீர் கிடைக்குமாம். அப்போதுதான் ஸ்பிரிட்டைத் தண்ணீரில் கலக்கும்போது ஸ்பிரிட்டின் முழு வீரியத்தையும் தண்ணீர் உள்வாங்கிக் கொள்ளுமாம். கனிமங்கள் இருந்தால், தண்ணீரில் கலக்கப்படும் ஸ்பிரிட்டின் வீரியம் குறைந்துவிடும் என்கிறார்கள் இந்தப் போலி விஞ்ஞானிகள்.
இதில்  ஒரு லிட்டர் தண்ணீரில் 200 மி.லி. ஸ்பிரிட், தேவையான எசன்ஸ் மற்றும் கலர் பவுடர் கலந்தால் சரக்கு தயார். இந்தச் சரக்கைத் தயாரிப்பவர் சரக்கை அடித்துவிட்டு கைத்தவறி கொஞ்சம் ஸ்பிரிட்டைச் சேர்த்து கலந்துவிட்டால், அதைக் குடிப்பவர் 30 நிமிடங்களுக்குள் கண் நரம்பு பாதிக்கப்பட்டு பார்வை பணாலாகி, உடனடி சிகிச்சை கிடைக்காத பட்சத்தில் ஒரு மணி நேரத்தில் மரணத்தைத் தழுவுவார்!


காப்பீடு... கமிஷன்... கள்ள டீலிங்!
இன்றைக்கு ஏதாவது ஒரு டாஸ்மாக் கடையில் தீப்பிடித்து எரிந்தாலோ அல்லது ஏதாவது விபத்தில் சேதமானாலோ காப்பீட்டுத் தொகை கிடைக்காது தெரியுமா? லட்சக்கணக்கான நஷ்டத்தை அந்தக் கடையில் வேலை பார்க்கும் கடை மேற்பார்வையாளர், பார் மேற்பார்வையாளர், மூன்று விற்பனையாளர்கள், இரண்டு பார் உதவியாளர்கள் என்று ஏழு பேர்தான் ஏற்க வேண்டும். ஆரம்பத்தில் கடைக்கான மதுபான தேவைப்பட்டியலை கடையில் விற்பனையாகும் மது வகையின் தேவையைப் பொறுத்து கடையின் மேற்பார்வையாளரே எழுதிக் கொடுப்பார். ஆனால், சில ஆண்டுகளாக என்ன தேவை என்று கடை மேற்பார்வையாளர் எழுத முடியாது. கடையில் என்ன இருப்பு இருக்கிறது என்பதை மட்டுமே அவர் குறிப்பிட வேண்டும். தேவைப் பட்டியலை நிரப்புவது அதிகாரிகளே.
ஒரு கடையில் ஒரு நாளைக்கு விற்பனையாகும் மதுபானங்களின் மதிப்பில், 10 நாட்களுக்கான இருப்பு மட்டுமே இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு கடையில் ஒருநாள் விற்பனை சராசரியாக 50 ஆயிரம் என்றால், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மட்டுமே இருப்பு இருக்க வேண்டும். அப்போதுதான் விபத்து ஏதாவது நடந்தால் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். ஆனால், இன்றைக்கு  ஒரு நாளைக்கு 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் ஒரு சிறிய கடையில் 23 லட்சம் ரூபாய் மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
அதிகாரிகளுக்கும் மதுபான நிறுவனங்களுக்கும் இடையில் நடக்கும் மெகா டீலிங் இது. ஒவ்வொரு மதுபான நிறுவனமும் தனது நிறுவனத்தின் மதுபானங்களை அதிகமாக விற்க வேண்டும் என்று போட்டி போட்டுக்கொண்டு அதிகாரிகளை வகையாகக் கவனிக்கின்றன. இதற்கு கோட் சூட் மாட்டிய கார்ப்ரேட் இடைத்தரகர்கள் உண்டு. வெளிநாட்டு டூர், ஆடம்பர அன்பளிப்புகள், பலான விஷயங்கள் என எல்லாமே உண்டு. இவை இல்லாமல், கமிஷன். அதுதான் மிக முக்கியம். இன்றைய மார்க்கெட் நிலவரப்படி மாவட்ட அளவிலான ஒருவருக்கு ஒரு பெட்டிக்கு கமிஷன் (48 குவாட்டர் பாட்டில்கள் அடங்கியது ஒரு பெட்டி) 55 ரூபாய் முதல் 115 ரூபாய் வரை என்கிறார்கள். இப்படி போட்டி போட்டுக்கொண்டு மதுபான நிறுவனங்கள் கவனிப்பதால், அதிகாரிகள் இஷ்டத்துக்கு சரக்குகளை வாங்கிக் குவிக்கிறார்கள். கோடிகள் இங்கே விளையாடுகின்றன.
கமிஷன் அதிகம் கொடுக்கும் நிறுவனத்தின் மதுபானங்களை அதிகம் விற்கும்படி பணியாளர்களை வற்புறுத்துகிறார்கள். கூட்டத்தில் சட்டை கிழிந்து வெற்றிகரமாக கவுன்ட்டரைச் சென்றடைந்தும், அங்கு நீங்கள் கேட்கும் பிராண்டு கிடைக்காததற்கு இதுவே காரணம். இந்த கமிஷன் தொகை அதிகாரிகளுக்கு மட்டும் அல்ல... மேலிடம் வரை செல்கிறது!

'கட்டளைக்கு கீழ்ப்படி’ என்பது தான் உலகெங்கும் உள்ள ராணுவ வீரர்களின் தாரக மந்திரம். பெருமூளை டு சிறுமூளையின் சிஸ்டமும் அப்படியே. போதை ஏறாத வரை சிறுமூளை என்பது கண்ணியமான, கடமை தவறாத ராணுவவீரன். ஆனால், மூளையின் நரம்புகளுக்குள் மது போதை ஊடுருவிய பிறகு பெரு மூளையில் இருந்து சிறுமூளைக்குச் செல்லும் சாலையில் ஆல்கஹால் வாகனங்கள் அணிவகுத்து டிராஃபிக் ஜாம் ஆகிவிடும். பெரியவன் காட்டுக் கத்தலாகக் கட்டளை இட்டாலும் சின்னவன் சட்டையே செய்ய மாட்டான். பிரச்னை ஆரம்பிப்பது இங்கேதான்!
பத்திரிகைகளில் பெண்களின் புகைப்படங்களோடும் தொலைபேசி எண்களோடும் விளம்பரங்கள் வருமே... பார்த்து இருக்கிறீர்களா? என்றைக்காவது அந்த எண்களைத் தொடர்புகொண்டு பேசி இருக்கிறீர்களா? நிமிஷங்களில் நூறுகளைக் கரைக்கும் எண்கள் அவை. ஆனாலும், கல்லா நிரப்பிக்கொண்டுதான் இருக்கின்றன. எப்படி?
போதை ஏறினால், யாரிடமாவது 'பேசி’ ஆக வேண்டிய கட்டாய நிலைக்கு மனிதனைத் தள்ளுவதும் மதுவின் இயல்புகளில் ஒன்று. முன்பெல்லாம் 'பேச’ வேண்டும் என்றால், ஆட்கள் நேரில் கிடைத்தால்தான் போச்சு. ஆனால், இப்போது அப்படியா? இருக்கவே இருக்கிறது டெலிபோனும் செல்போனும்.
சரக்கு உள்ளே இறங்கினால், சிலருக்கு அரட்டை வேண்டும். சிலருக்கு அழ வேண்டும். இரவில் படுக்கை அறையிலோ அல்லது வேறு எங்கேயோ தனிமையில் இருள் சூழ்ந்த நிலையில் இப்படிப் பேசும்போது எதிர் முனையில் இருப்பவர் உண்மையிலேயே தனது அருகில் இருப்பதுபோன்ற உணர்வு இருக்குமாம். பெண்களுடன் பேச எண்களைத் தேடுவது இந்தச் சூழலில்தான். இதற்குத்தான் 'டெலி போன் ஸ்காட்டலாஜியா’ என்று பெயர்.
பச்சைத் தண்ணீரில் பாலை எடுக்க முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங் களின் சி.இ.ஓ-க்கள் 'டெலிபோன் ஸ்காட்டலாஜியா’வை விட்டு வைப்பார்களா? கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்து, 24 மணி நேரமும் ஆபாசமாகப் பேச பெண்களை நியமித்து ஸ்காட்டலாஜியாவைக் காசாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்!
பெங்களூருவில் இருக்கும் ஒரு போதை மீட்பு சிகிச்சை மையத் துக்கு கடந்த வாரம் சென்றிருந்தேன். அங்கு ஒரு மருத்துவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரை அவரது மனைவி அழைத்துக்கொண்டு வந்தார். மருத்துவர் அந்த மனிதரிடம், ''மாத்திரை எல்லாம் சரியா சாப்பிடுறீங்களா? நல்லா தூக்கம் வருதா?'' என்று கேட்டார். ''சரக்கை நிறுத்தி மூணு மாசம் ஆச்சு. ஆனா, அவன் சீண்டிக்கிட்டே இருக்கான் டாக்டர். கேலி பண்றான். வண்டியை ஓட்டுறப்ப 'அந்த மரத்து மேல வண்டியை விடு... வேன் மேல மோது... அந்தப் பச்சை சட்டைக்காரன் மேல ஏத்து...’னு கத்துறான். நான் அவன் பேச்சைக் கேட்காம என்னை ரொம்பக் கட்டுப்படுத்தி கன்ட்ரோலா போறேன். அசிங்க அசிங்கமாத் திட்டுறான். முந்தா நாளு அவன் டார்ச்சர் தாங்க முடியாம வண்டியை ஓரம் கட்டி நிறுத்திட்டேன். இப்ப நான் உங்ககிட்ட வரக் கிளம்பறப்பகூட 'வேண்டாம்டா, அவன் என்னைக் கொன்னுடுவான்’னு அழுறான்...'' என்று இவர் அழுதார்.
நீண்ட காலம், அளவுக்கு அதிகமாக தொடந்து மது அருந்தியதால் ஏற்படும் இந்த நிலைக்குப் பெயர்... 'ஆடிட்டொரி ஹாலுசினேஷன்’ (கிuபீவீtஷீக்ஷீஹ் லீணீறீறீuநீவீஸீணீtவீஷீஸீ). காதுக்குள் யாரோ ஒருவர் அல்லது பலர் கண்டபடி திட்டுவார்கள்; கட்டளையிடுவார்கள். அதுதான் இவரது நோய். அது சரி, 'மரத்து மேல வண்டியை விடு’ என்று கட்டளை வந்ததாகச் சொன்ன அவர் என்ன பணியில் இருக்கிறார் தெரியுமா? நீங்கள் அதிர் வதைத் தவிர வேறு வழியே இல்லை. அவர் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஓட்டுநர். அதுவும் அடிக்கடி இரவுப் பணியில் இருப்பவராம்!
பெரும்பாலான ஓட்டுநர்களுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. அதில் எத்தனை பேருக்குக் காதுக்குள் கட்டளை வருகிறது என்று தெரியவில்லை!
மருத்துவர் என்னிடம் சொன்னார்: ''வண்டி ஓட்டுகிறவர்கள் ரொம்ப சீக்கிரம் மதுவுக்கு அடிமையாகி விடுகிறார்கள். அறியாமையே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது'' என்றவர் ''சரி, படித்து எல்லாம் தெரிந்தவர்கள் மட்டும் எப்படி இருக்கிறார்கள்... அட, டாக்டர்களே எவ்வளவு பேர் குடிக்கிறார்கள்!'' என்றார்.
''படிக்காதவர்களுக்குப் புரியவைப்பது கடினம். ஆனால், படித்தவர்களிடம் குடியினால் ஏற்படும் பிரச்னைகள், நோய்கள்பற்றி எளிதாகப் புரிய வைக்கலாம் இல்லையா?'' என்று கேட்டேன்.
''அடப் போங்க சார்... படிக்காத ஒரு கிராமத்தானை ரொம்ப ஈஸியாத் திருத்திடலாம். ஆனா, நல்லாப் படிச்சவங்களைத் திருத்துறதுதான் கஷ்டம். படிக்காதவங்க நாங்க சொல்றதை நம்பி, சொல்பேச்சு கேட்பாங்க. ஆனா, படிச்சவங்க மோசம். 'நாலு ஐஸ்கீரிமைச் சாப்பிட்டு ஏழு பெக் போட்டா ஒண்ணும் செய்யாது’ன்னு அவனா ஒரு சயின்ஸ் பேசுவான். அதுவும் பணக்காரன்னா கேட்கவே வேண்டாம். 'அதான் லிவர் டிரான்ஸ்பிளான்டேஷன்’ வந்துடுச்சேன்னு வியாக்கியானம் பண்ணுவான்...'' என்றவர் அடுத்து சொன்ன விஷயத்தைக் கேட்டு வியர்த்துப்போனேன்.
மருத்துவர் என்னைப் பார்த்துக் கேட்டார்:
''கண்ணதாசன் எவ்வளவு பெரிய கவிஞர்? வின்ஸ்டன் சர்ச்சில் எவ்வளவு பெரிய தலைவர்? அவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்த மதுவே ஒரு தீவிர நோயை அவர்களுக்குத் தந்திருந்தது உங்களுக்குத் தெரியுமா?''
 - தெளிவோம் 
பார் பாலிடிக்ஸ்! 
ஒரு பாரை ஏலம் எடுப்பவர் பாரை எப்படி நடத்த வேண்டும் தெரியுமா? உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின்படி, முதலில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம், உணவு வழங்க உரிமம் பெற வேண்டும். பார்கள் அமைந்திருக்கும் இடம் ஈரத்தன்மை இல்லாமல் காய்ந்த நிலையில், காற்றோட்டமாக விசாலாமானதாக இருக்க வேண்டும். சுகாதாரமான கழிவறை இருக்க வேண்டும். சுத்தமான உடை அணிந்த பணியாளர்கள் இருக்க வேண்டும். அங்கு வரும் வாடிக்கையாளருக்கு சுகாதாரமான உணவைத் தருவதுடன், இலவசமாக சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். ஆனால், பாரில் நடப்பது என்ன?
ஒரு விஷயம்... பாரில் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் தண்ணீர் பாக்கெட்டின் உண்மையான விலை உங்களுக்குத் தெரியுமா? 30 பைசா.
100 தண்ணீர் பாக்கெட்டுகள் விற்றால் 460 ரூபாய் லாபம். நகரப் பகுதியில் ஒரு பாரில் சராசரியாக 4000 பேரும் கிராமப் பகுதிகளில் ஒரு பாரில் சராசரியாக 1000 பேரும் குடிக்கிறார்கள். ஒருவர் தலா இரண்டு தண்ணீர் பாக்கெட் வாங்கினாலும் ஒரு நாளைக்கு 8000 தண்ணீர் பாக்கெட்டுகள் வரை விற்பனை. அப்படி என்றால் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆறாயிரத்து சொச்சம் கடைகளுக்கும்  இந்தத் தரமற்ற தண்ணீரால் மட்டும் எவ்வளவு லாபம் என்று கணக்குப் பார்த்துக்கொள்ளுங்கள்! 
பிளாஸ்டிக் டம்ளரிலும் இதே கொள்ளைதான். சட்டப்படி 40 மைக்ரான் அளவுக்கு மேல் இருக்கும் (மறுஉற்பத்தி செய்யக் கூடிய அளவு) பிளாஸ்டிக் டம்ளர்களைதான் விற்பனை செய்ய வேண்டும். ஆனால், எவ்வித மைக்ரான் கணக்குக்கும் உட்படாத மட்டமான பிளாஸ்டிக் நாற்றம் வீசும் டம்ளர்கள்தான் பார்களில் கிடைக்கும். ஐந்து ரூபாய்க்கு விற்கப்படும் இந்த டம்ளரின் உண்மையான விலை எவ்வளவு தெரியுமா? 15 பைசா. அதாவது 15 ரூபாய் முதலீட்டில் 485 ரூபாய் லாபம். இப்போது இதற்கு ஒரு கணக்கைப் போடுங்கள்.
அடுத்து ஸ்நாக்ஸ்... பேருதான் பெத்த பேரு...  வறுத்த நிலக்கடலை, பொட்டுக்கடலை, வத்தல்... இவைதான் நம்மூரில் ஸ்நாக்ஸ். பாரில் விற்கப்படும் நிலக்கடலை பாக்கெட்டை  வாங்கினால், எப்படி கூட்டிக் கழித்து எண்ணிப் பார்த்தாலும் 15 கடலைக்கு மேல் இருக்காது. அதன் விலை ஆறு ரூபாய்!
கடலையே இந்த விலை என்றால், அசைவ சைட் டிஷ்ஷின் தரமும் விலையும் எப்படி இருக்கும்? இதில் எவ்வளவு கொள்ளை நடக்கும்?
அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கடைகளில் உள்ளாட்சி நிர்வாகத்தால் ஆய்வு செய்யப்பட்டு, முத்திரையிடப் பட்ட இறைச்சியை மட்டுமே சமைத்து விற்பனைக்குக் கொண்டுவர வேண்டும். இதை 15 நாட்களுக்கு ஒரு முறை அந்தந்தப் பகுதி உள்ளாட்சி நிர்வாகத்தைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டு உறுதிசெய்ய வேண்டும். ஆனால், இன்றைக்கு அப்படி எல்லாம் விதிமுறை பார்த்து, ஆய்வு நடத்தினால் எத்தனை பார்கள் மிஞ்சும்?
 அட்டைப் பெட்டிகளும் காலி பாட்டில்களும்!
 பாரில் ஒருவர் காலி பாட்டிலுக்கும் சேர்ந்து விலை கொடுத்துத்தான் மதுவை வாங்குகிறார். அப்படி வாங்கிக் குடித்துவிட்டுப் போட்டுவிட்டுப்போகும் காலி பாட்டில்கள், மது பாட்டில்கள் அடைக்கப்பட்டு வரும் அட்டைப் பெட்டிகள் இவற்றை வைத்து உள்ளூர் அரசியல்வாதிகள் எவ்வளவு லாபம் அடைகிறார்கள் தெரியுமா?
ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாகும் மது பாட்டில்களில் 60 முதல் 70 சதவிகிதம் பாட்டில்கள் பாரில் சேகரமாகும். முன்பு எல்லாம் இந்தக் காலி பாட்டில்களை வாங்க பல நிறுவனங்கள் இருந்தன. பாரை ஏலம் எடுத்தவர் அந்த நிறுவனங்களிடம் காலி பாட்டில்களை விற்று விடுவார். அவர்கள் பாட்டிலைச் சுத்தம் செய்தோ, செய்யாமலோ மீண்டும் மது தயாரிப்பு நிறுவனங்களிடம் பாட்டில்களை விற்று விடுவார்கள்.
ஒரு குவார்ட்டர் பாட்டில் அறுபது காசு, ஆஃப் பாட்டில் ஒரு ரூபாய், ஃபுல் பாட்டில் இரண்டு ரூபாய் என்று முன்பு எடுத்துக்கொண்டு இருந்தார்களாம். ஆனால், இதிலும் காசு பார்த்தால் என்ன என்று யாரோ ஒரு நல்ல மனிதருக்குத் தோன்ற இப்போது இங்கும் சிண்டிகேட் வந்துவிட்டது. அதாவது, ஒவ்வொரு பகுதிக்கும் அந்தந்தப் பகுதி அரசியல் தலைகளின் ஆசி பெற்ற ஒருவர் இப்படிக் காலி பாட்டில்களைச் சேகரிக்க இருப்பார். அவரிடம்தான் அந்தப் பகுதியில் உள்ள எல்லா பார்களும் காலி பாட்டில்களை அளிக்க வேண்டும். அவர் வைத்ததுதான் விலை. முன்பு கொடுத்ததில் பாதியை மட்டுமே கொடுத்து இதிலும் வசூல் பார்க்கிறது ஒரு குரூப்!
ஒரு கடைக்கு மது பாட்டில்களைச் சுமந்து வரும் அட்டைப் பெட்டியை வைத்து சில கோடிகள் புரள்கின்றன என்றால் நம்புவீர்களா? ஓர் அட்டைப் பெட்டியின் விலை ரூ. 3.50. ஒரு கடைக்கு மாதம் எத்தனை அட்டைப் பெட்டிகள் மது போகிறதோ அத்தனை அட்டைப் பெட்டிகளுக்கும் கணக்கு செய்து, அதற்கான வரைவோலை எடுத்து டாஸ்மாக் நிறுவனத்துக்கு பணியாளர்கள் அனுப்பி விட வேண்டும். இந்த அட்டைப் பெட்டிகளை வெளியே தனியாருக்கு டாஸ்மாக் பணியாளர்கள் விற்றுக்கொள்ளலாம். முன்பு எல்லாம் இப்படி அட்டைப் பெட்டிகளை வெளியே விற்கும்போது,  பெட்டிக்கு ஒரு ரூபாய் கிடைக்குமாம். கடைக்கு வரும்போதே உடைந்து வரும் பாட்டில்களால் ஏற்படும் இழப்பைச் சரிகட்ட இது பயன்படுமாம். ஆனால், இதிலும் இப்போது கை வைத்துவிட்டார்களாம் அரசியல் புள்ளிகள். ஒவ்வொரு பகுதிக்கும் அந்தந்தப் பகுதி அரசியல் தலைகளின் ஆசி பெற்ற ஒருவர் இப்படி அட்டைப் பெட்டிகளைச் சேகரிக்க இருப்பார். அவரிடம்தான் அந்தப் பகுதியில் உள்ள எல்லா மதுக்கடைகளும் அட்டைப் பெட்டிகளை அளிக்க வேண்டும். அவர் வைத்ததுதான் விலை. முன்பு கொடுத்ததில் பாதியை மட்டுமே கொடுத்து இதிலும் வசூல் பார்க்கிறது இன்னொரு குரூப்!


''கண்ணதாசனுக்குக் குடிப்பழக்கம் ஒரு வியாதியைத் தந்து இருந்தது. மன நல மருத்துவத்தில் அதற்கு, 'இரு துருவக் கோளாறு’ என்று (Bipolar mood disorder) பெயர். வின்சென்ட் சர்ச்சிலும் இதே நோயால் பாதிக்கப் பட்டவர்தான்'' என்றார் டாக்டர்.
நான் இந்த வியாதியைக் கேள்விப்பட்டு இருக்கிறேன். வாழ்வில் எல்லோருக்கும் மேடும் வரும்... பள்ளமும் வரும். இந்த ஏற்ற இறக்கம் சாதாரணமாக இருக்கும் வரை பிரச்னை இல்லை. இந்த மேடு அசாதாரண மேடாகவும் பள்ளம் பெரிய பள்ளமாகவும் மாறும்போது அது ஒருவருக்கு மனநலம் சார்ந்த பிரச்னையாகி விடும். இரு துருவக் கோளாறு உள்ளவர் பித்து, மனச்சோர்வு என்று இரண்டு பிரச்னைகளுக்கும் மாறி மாறி உள்ளாகித் துன்பப்படுவர்.
முதலில் தோன்றுவது பித்து நிலை. அந்த நிலையில் உயர் சக்தியுள்ள மனோபாவத்துடன் இருப்பார்கள். அப்போது அசைக்க முடியாத தன்னம்பிக்கை, உயர்ந்த, கலவையான, புதுமையான எண்ணங்கள், சிறந்த படைப்பாற்றல், நகைச் சுவை உணர்வு, அதிகபட்சக் கோபம், கணக்கு வழக்கு பார்க்காமல் செலவு செய்வது, உறக்கமே இல்லாமல் தான் மேற்கொண்ட காரியத்தைச் சிரத்தையாக முடித்தல் ஆகிய குணங்களுடன் இருப்பார்கள். இவை எல்லாம் உயர் உணர்வுகள். சிறிது காலம் இந்த நிலை நீடித்த பின், பெரும் மனச்சோர்வு, விரக்தி ஏற்படும். தற்கொலை எண்ணங்களும் எழ வாய்ப்பு இருக்கிறது. இதுதான் இருதுருவக் கோளாறு.
கண்ணதாசனின் நடவடிக்கைகளை ஆராய்ந்த பல மன நல மருத்துவர்கள் கண்ணதாசன் இருதுருவக் கோளாறால் அவதிப்பட்டார் என்று உறுதியாகக் கருதுகிறார்கள். அவர் கோபப்பட்டபோது எழுதிய பாடல்களையும், அதீத உற்சாக மாக இருந்தபோது எழுதிய பாடல் களையும், சோகமாக இருந்தபோது எழுதிய பாடல்களையும் வகைப்படுத்தி சில மருத்துவக் கட்டுரைகளில் அவர்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.
''ஒரு முறை பாடல் ஒலிப்பதிவின் போது இயக்குநர் ஸ்ரீதர், எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் நீண்ட நேரம் கண்ணதாசனுக்காகக் காத்திருந்திருந்தனர். ஒரு கட்டத் தில் கடுப்பான எம்.எஸ்.வி., 'இந்தக் குடிகாரரோட இதே வேலையாப் போச்சு. சொன்ன நேரத்துக்கு வந்து தொலைக்க மாட்டார்...’ என்றார். லேட்டாக வந்த கண்ணதாசனிடம் யாரோ ஒருவர் இதைப் போட்டுக்கொடுக்க, கண்ணதாசன் எதையும் காட்டிக் கொள்ளாமல் இயக்குநர் ஸ்ரீதரிடம் சிச்சுவேஷனைக் கேட்டுக்கொண்டார். பின்பு சாந்தம் ததும்ப எம்.எஸ்.வி-யை பார்த்து, 'நீங்க அப்படி எல்லாம் பேச மாட்டீங்களே...’ என்றவர் இசையின் ராகத்துடன் இழுத்துப் பாடினார் - 'சொன்னது நீதானா... சொல்... சொல்... சொல்... என்னுயிரே...’
இன்னொரு முறை, கவிஞர் புதிதாக அறிமுகமான பிரெஞ்சு மதுவைக் குடிக்க ஆசைப்பட்டு இருக்கிறார். கையில் காசு இல்லை. அவரது உடன்பிறந்த அண்ணனிடம் காசு கேட்டபோது, அண்ணன் மறுத்து விட்டாராம். அந்த வேகத்தில் கவிஞர் எழுதிய பாடல்தான், 'அண்ணன் என்னடா... தம்பி என்னடா... அவசரமான உலகத்திலே...’ '' என்று கண்ணதானின் உயர் உணர்வுகளின் வெளிப்பாடுகளைச் சொல்லும் மருத்துவர்கள், அதே கண்ணதாசன் மனச்சோர்வுக்கு உள்ளாகும்போது கடுமையான விரக்திக்கு ஆளானதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாஜி படைகள் இங்கிலாந்தை நெருங்கியபோது, நாடாளுமன்றத்தில் சர்ச்சில் ஆற்றிய பேருரைதான் இங்கிலாந்து மக்களையும் ராணுவ வீரர்களையும் சிலிர்த்து எழச் செய்து நாஜிப் படைகளைச் சின்னாபின்ன மாக்கியது. ஆனால், சர்ச்சிலால் இரண்டு லார்ஜ் அடிக்காமல் இயல்பாகப் பேசவே முடியாது. பெரும்பாலும் அவரது காலை உணவில் இரண்டு லார்ஜ் மது இல்லாமல் இருக்காது. மதுவிடம் நான் இழந்ததை விட மதுவிடம் நான் பெற்றதே அதிகம் என்பது அவர் அடிக்கடி சொல்லும் வாக்கியம். அவர், மதுவின் ஒவ்வொரு துளியையும் ரசித்துக் குடித்தார். அதனால் அவரும் இரு துருவக் கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
உலகப்புகழ் பெற்ற ஓவியர் வின்சென்ட் வான்கா, ஹாலிவுட் நடிகர் மெல் கிப்ஸன், எழுத்தாளர் ஷிட்னி ஷெல்டன் என நூற்றுக்கணக்கான படைப்பாளிகள் இரு துருவக் கோளாறில் பாதிக்கப்பட்டு இருந்தனர்.  அதே சமயம், இரு துருவக் கோளாறு மது குடிக்காதவர்களுக்கும்கூட வரும் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனாலும், மது குடிப்பவர்களே 90 சதவிகிதம் இந்தப் பிரச்னையை எதிர்கொள்கின்றனர் என்று சொல் கிறார்கள்.  
ஒரு விஷயம் உறுதி... நானும் கவிதை எழுதுகிறேன் என்று யாரும் குவார்ட்டர் பாட்டிலைத் தட்டித் திறக்க வேண்டாம்... கவிதை வராது; குடிநோய்தான் வரும்.
டாஸ்மாக் பணியாளர்களின் சிரமம்குறித்து எழுதி இருந்ததற்கு நிறைய டாஸ்மாக் ஊழியர்கள் தொலைபேசியிலும் கடிதம் வாயிலாகவும் நன்றி தெரிவித்தனர். நல்லது. ஆனால், இந்தப் புள்ளிவிவரத்தை எழுதினால் திட்டுவார்களோ என்று நினைக்கிறேன். சரி, போற்றுவார் போற்றட்டும்... மண்ணை வாரித் தூற்றுவார் தூற்றட்டும்!
கடந்த ஏப்ரல் 11-ம் தேதியில் இருந்து மார்ச்12-ம் தேதி வரை ஓர் ஆண்டில் தமிழகத்தில் காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருவள்ளூர், திருப்பூர், சேலம், மதுரை, திருச்சி, வேலூர், ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் அதிக அளவாக 251.27 லட்சம் மதுபானப் பெட்டிகள் விற்பனை ஆகி இருப்பதாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவிக்கிறது.
சுமார், இரண்டரைக் கோடி பெட்டிகள். ஒரு பெட்டிக்கு 48 பாட்டில்கள். அப்படி என்றால் மொத்தம் 120 கோடி பாட்டில்கள். ஒரு பாட்டிலுக்கு இரண்டு ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்கிறார்கள். அப்படி என்றால், ஆண்டுக்கு  240 கோடி ரூபாயை 'குடி’மகன்களிடம் இருந்து இவர்கள் கூடுதலாகப் பறிக்கிறார்கள். இந்த 240 கோடி என்பது வெறும் இரண்டு ரூபாய் கணக்குதான். பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பவர்களும் உண்டு. அதைச் சேர்க்கவில்லை. பீருக்கு 10 ரூபாய் வரை கூடுதலாக விற்கிறார்கள். அதையும் இந்த 240 கோடியில் சேர்க்கவில்லை. காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை...  இரவு 10 மணி தொடங்கி விடிய, விடிய ஒரு பாட்டிலுக்கு 30 முதல் 50 ரூபாய் வரை கூடுதலாக விற்கிறார்கள். அதுவும் இதில் சேர்க்கப்படவில்லை. காந்தி ஜெயந்தி, மஹாவீர் ஜெயந்தி உட்பட ஓர் ஆண்டுக்கு டாஸ்மாக் நிறுவனம் அளிக்கும் எட்டு விடுமுறை நாட்களிலும் கள்ளச்சந்தையில் ஒரு பாட்டிலுக்கு 50 ரூபாய் கூடுதலாக விற்கிறார்கள். அதைச் சேர்க்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக மேற்கண்ட 240 கோடி ரூபாய் என்பது 10 மாவட்டங்களுக்கான சராசரி கணக்கு மட்டுமே. எனவே, மிக, மிக, மிகக் குறைந்தபட்சமாக ஒரு ஆண்டுக்கு 240 கோடி பகல் கொள்ளை அடிக்கிறார்கள். அப்படி என்றால் முழுமையான கணக்குதான் எவ்வளவு?
'டாஸ்மாக்’ நிறுவனத்தில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.
''எல்லா வகையான சட்ட விரோத விற்பனை மூலமாக ஒரு நாளைக்குச் சராசரியாக மாநிலத்தில் 10 கோடி ரூபாய் வசூல் ஆகிறது...'' என்றார் அசராமல். அதாவது, மாதத்துக்கு 300 கோடி. ஆண்டுக்கு 3,600 கோடி. அதாவது டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தில் சுமார் 20 சதவிகிதம். என்ன, தலை கிறுகிறுக்கிறதா?!
நண்பர் சொன்னதை முழுமையாகப் படியுங்கள்... ''எல்லாவற்றை யும் நாங்கள்தான் அள்ளிக்கொண்டு போகிறோம் என்று நினைக் காதீர்கள். யார், யாருக்கு எல்லாம் போய்ச் சேர்கிறது தெரியுமா?
ஒரு மாதக் கணக்கு சொல்கிறேன். கேளுங்கள். அதிகாரிகளுக்கு ஒரு லட்சம். மதுவிலக்குப் பிரிவுக்கு 10 ஆயிரம். ஏரியா கவுன்சிலருக்கு 5,000. லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு 5,000. லோக்கல் தாதா, அரசியல் அடிப்பொடிகளுக்கு 5,000. ஆக, ஒரு கடைக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மொய் எழுதியாக வேண்டும். கூடுதல் விலை வைத்து விற்பதால், ஒரு கடையின் சராசரி மாத வருமானம் மூன்று லட்சம் ரூபாய். லஞ்சம் கொடுத்தது போக மீதம் இருப்பது ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய். இதை ஒரு கடையின் ஏழு ஊழியர் களுக்குப் பிரித்தால், ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம். இந்தப் பாவப் பணத்துக்கு நாங்கள் கொடுக்கும் விலை என்ன தெரியுமா?
இன்றைக்கு 80 சதவிகித டாஸ்மாக் ஊழியர்கள் தினமும் குடிக்கிறார்கள். இதில் 40 சதவிகிதம் பேர் காலையிலேயே குடிப்ப வர்கள். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 100 டாஸ்மாக் ஊழியர்கள் கல்லீரல் வீங்கி இறந்து இருக்கிறார்கள். பலர் குடித்து, குடித்து நடைப் பிணமாக இருக்கிறார்கள். பாதிப்பேருக்கு பேனா எடுத்து எழுத முடியாது. கை உதறும். இவை எல்லாம் உடல் ரீதியான பிரச்னைகள். 'எங்கே வேலை பார்க்கிறீர்கள்?’ என்று சொந்தக்காரர்கள் கேட்பார்கள். நாங்கள் தயங்கித் தயங்கித்தான் பதில் சொல்வோம். உடனே அவர்களின் முகமே மாறிவிடும். எங்கள் ஊழியர்களில் 50 சதவிகிதம் பேருக்கு வயது 40-ஐ நெருங்கியும் திருமணம் ஆகவில்லை என்ற அதிர்ச்சியான உண்மை உங்களுக்குத் தெரியுமா? எங்களுக்கு யாரும் பெண் கொடுக்க முன்வருவது இல்லை.
'குடிக்காமல் இருந்து தொலைய வேண்டியதுதானே? அத்தனைப் பேருமா குடிக்கிறார்கள்?’ என்று நீங்கள் கேட்கலாம். ஒழுக்கத்தைக் கற்றுத்தரும் ஆசிரியர்களே குடித்துவிட்டுப் பள்ளிக்குச் செல்கிறார்கள் என்று செய்திகளை படிக்கிறோம். புத்தகங் களுக்கு நடுவே இருப்பவருக்கே மனம் தடுமாறுகிறது என்றால், பாட்டில்களுக்கு மத்தியில் இருக்கும் எங்களுக்கு மனம் தடுமாறாதா? சரி, அப்படியும் கட்டுப்பாடாக இருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு ஒரு கடைக்கு 100 பெட்டிகள் வந்து இறங்குகிறது என்றால், குறைந்தது 10 பாட்டில்கள் உடைகின்றன. அதை நாங்கள் என்ன செய்வதாம்? மனம் தடுமாறாமல் இருக்க டாஸ்மாக் ஊழியர்கள் அத்தனை பேரும் என்ன புத்தர்களா? இல்லை, போதி மரத்தடியில்தான் டாஸ்மாக் கடை இருக்கிறதா?  
ஒரு பேச்சுக்கு நாங்கள் மொத்த ஊழியர்களும் திருந்தி விடுகிறோம். கூடுதல் விலை வசூலிக்க வில்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள். விடுவார்களா அதிகாரிகள்? பிடுங்கி எடுத்துவிட மாட்டார்கள்? உண்மையைச் சொல்லப் போனால், மாதம் 25 ஆயிரம் ரூபாய் வருமானத்துக்காக வாழ்க்கையைத் தொலைத்து விட்டோம்'' என்றார் அவர்!

லகளாவிய மதுத்தரம் என்று ஒன்று உண்டு. அதை நாம் பக்கத்தில்கூட நெருங்க முடியாது. தமிழகக் 'குடிமகன்கள்’ அதை நினைத்து ஏக்கப் பெருமூச்சு மட்டும் விட்டுக்கொள்ளலாம். அதுகிடக்கட்டும், இந்திய மதுத்தரம் (Indian standard alcohol specifications) என்று ஒன்று உண்டு தெரியுமா? மதுவை இப்படித்தான் தயாரிக்க வேண்டும்; இந்தந்த வஸ்துகள், இந்தந்த விகிதாச்சாரத்தில் சேர்க்கப்பட வேண்டும்; குறிப்பிட்ட நாட்களுக்கு கொள்​கலன்களில் அடைத்து வைத்து இருக்க வேண்டும் என்று எல்லாம் விதிமுறைகள் உண்டு.
இப்படி மதுவுக்கு மட்டும் அல்ல... மது அடைக்கப்​படும் பாட்டில்களின் தடிமன், பாட்டில் மூடியின் தடிமன், மூடியின் உட்புறம் இருக்கும் இருக்கும் கார்க்கின் தடிமன் இவை எல்லாவற்றையுமே ஐ.எஸ்.ஓ. அமைப்பு (ஐ.எஸ் - 4450/2005) கர்ம சிரத்தையாக நிர்ணயித்துள்ளது. மது அடைக்கப்படும் பாட்டில்கள் எடை தாங்கும் பரிசோதனை, வெப்பக் கதிர்வீச்சு பரிசோதனை செய்​யப்பட வேண்டும் என்று எல்லாம் சொல்கின்றன அந்த விதி​முறைகள்.
நிர்ணயிக்கப்பட்டுள்ள தரத்​தின்படி இந்தியாவில் மதுவை எப்படித் தயாரிக்க வேண்டும் என்று தெரியுமா?
பொதுவாக...
தண்ணீர் ஸ்பிரிட் வடிகட்டப்பட்ட மொலாஸிஸ் எசன்ஸ் = மது.
இதில் 'பிரீமியம்’, 'மீடியம்’, 'லோ’ என்று மூன்று தரங்கள் உண்டு. பிரீமியம் மற்றும் மீடியம் தர மது பானங்களில் நியூட்ரல் ஸ்பிரிட் (Neutral spirit) கலப்பார்கள். அதாவது, நன்றாக வடிகட்டிய, குறைந்த காட்டம் கொண்ட ஸ்பிரிட். பிரீமியம் ரகத்தில் மரத்திலான கொள்கலன்களில் அடைத்து, நொதிக்க வைக்கப்பட்ட பழரசத்தைக் கூடுதலாகச் சேர்ப்பார்கள். 'லோ’ ரக மதுவில் ரெக்டிஃபெய்டு ஸ்பிரிட் (Rectified spirit) கலப்பார்கள். அவ்வளவாக வடிகட்டாத ஸ்பிரிட் இது.
இவற்றை எல்லாம் கலந்து கட்டி ஒவ்வொரு வகை மதுவுக்கு ஏற்ப, குறிப்பிட்ட நாட்கள் கொள்கலன்களில் இருப்பு வைக்க வேண்டும். பின்பு, அதில் ஒரு பாட்டில் (குவாட்டர், ஆஃப், ஃபுல் என எந்த அளவு என்றாலும் சரி) சாம்பிள் எடுத்துப் பரிசோதனை செய்தால், அதில் 42.86 - 43.86 சதவிகிதத்துக்குள் ஆல்கஹால் இருக்க வேண்டும். இந்த அளவுக்குக் கூடவும் கூடாது; குறையவும் கூடாது. இதுதான் விற்பனைக்கு உகந்த மது. அரசாங்கத்தின் பார்வையில் குடிக்க உகந்த மது!
ஆனால், இங்கு நடப்பது என்ன? ஒரளவு நல்ல ஹோட்டலிலேயே இட்லி, தோசையை மிருது​​வாக்க வயிற்றுக்கு ஒவ்வாத சோடா உப்பு கலக்கிறார்கள். அப்படி என்றால், புறநகர்ப் பகுதிகளில் கோட்டைபோல் மதில் சுவர்களை எழுப்பிக்கொண்டு, ஏகப்பட்ட செக்யூரிட்டிகளின் பாதுகாப்புடன், வெளி ஆட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல், 'நானே ராஜா நானே மந்திரி’ ரேஞ்சுக்கு மதுபானங்களைத் தயாரிக்கும் மதுபான நிறுவனங்கள் எப்படி எல்லாம் தில்லுமுல்லு செய்ய முடியும்?
இதைப் படித்து, மதுவை ரட்சிக்கும் எந்த ஒரு ரட்சகரும் கடுப்பாக வேண்டாம். 'அரசுத் தடயவியல் ஆய்வுக்கூடத்தில் சான்றிதழ் பெற்ற பின்புதானே விற்பனைக்கு அனுப்புகிறோம்’ என்று கொதிப்படைய வேண்டாம். அவர்களது மனசாட்சிக்குத் தெரியும்... என்ன எல்லாம் செய்கிறார்கள் என்று!
சர்க்கரை ஆலைகளில் இருந்து வாங்கும் ஒவ்​வொரு லிட்டர் ஸ்பிரிட்டையும் மது ஆலைகள் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுத்தயாரிப்புக்கு மட்டும்தான் பயன்படுத்துகின்றனவா? வேறு வணிக நோக்கத்தில் வெளியே கைமாற்றப்படவே இல்லையா? அனுமதிக்​கப்பட்ட, உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்காத எசன்ஸை மட்டும்தான் உபயோகப்​படுத்துகின்றனவா? ஐ.எஸ்.ஓ. நிறுவனம் வகுத்துள்ள அத்தனை விதிமுறைகளையும் ஒன்று விடாமல் பின்பற்றுகின்றனவா?
ஆம், என்று சொல்பவர்கள் தங்கள் ஆலையில் நடக்கும் மதுத்தயாரிப்பை எப்போதுமே வீடியோ காட்சிக்கு உட்படுத்துவார்களா? பரிசோதனைக்கு சாம்பிள் அனுப்பும்போது அந்த வீடியோ காட்சிகளையும் தடயவியல் சோதனைக்கூடத்துக்கு அனுப்புவார்களா? விதிமுறைகளின்படி புதிய பாட்டில்களில்தான் மது அடைக்கப்பட வேண்டும். அதனால், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது பாட்டில்களை விற்கும்போது புதிய பாட்டில்களுக்கான விலையைச் சேர்த்து​தானே குறிப்பிடுகிறார்கள்? அப்படி இருக்கும்போது பாட்டில் ரீ-சைக்கிளிங் என்பது எப்படி வந்தது?
ஆள்வோருக்கும் தெரியும்; அதிகாரிகளுக்கும் தெரியும்... மது நிறுவனங்களுக்கும் தெரியும்... இதை எல்லாம் எந்தக் குடிமகனும் கேட்க மாட்​டான். அதுதான் குடிப்பவனை மது முட்டாள் ஆக்கி விடுகிறதே?  பாட்டிலில் எவ்வளவு மட்டமான மதுவை அடைத்துக் கொடுத்தாலும் மூக்கைப் பிடித்துக்கொண்டு குடித்து விடுவான் என்று இந்த நிறுவனங்கள் நம்புகின்றன. இப்படி விதிமுறைகளை மீறுவது சமூக விரோதச் செயல் இல்லையா?
சமூக விரோதச் செயல் என்றவுடன்தான் டாக்டர் சொன்னது நினைவுக்கு வந்தது. மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருவிதக் குணாதிசயம் உண்டு. அதாவது, பஞ்சாபகேசன்... பயந்த ஆளு. முனுசாமி... கோபக்காரன். சரவணன்... சாது. உமா... ரொம்ப உணர்ச்சிவசப்படுவாள். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். இந்தக் குணாதிசயம், தனக்கோ அல்லது சமூகத்துக்கோ ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்தால், அதுதான் ஆளுமைக் கோளாறு. சிலருக்கு இயல்பாகவே மனதின் அடி ஆழத்தில் விதிமீறல் மீது ஒருவித ஈர்ப்பு இருக்கும். பொதுவாகவே, மது உள்ளே சென்றால் கட்டுப்பாடற்ற, சுதந்திரமான நிலைக்கு மனிதனை அது கொண்டுசெல்லும். இந்த 'விதிமீறல் ஆட்கள்’ தொடர்ந்து மது அருந்தும்போது, அவர்களுக்கு ஏற்படும் மனநோய்தான் சமூக விரோத ஆளுமைக் கோளாறு (Anti - social personality disorder).
மிக, மிக ஆபத்தானவர்கள் இவர்கள். யாருடைய உணர்வுகளையும் கொஞ்சம்கூட மதிக்க மாட்டார்கள். சட்டங்கள், விதிமுறைகள் எல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.  யாரையும் பொருட்படுத்தாமல் கன்னாபின்னாவென்று தவறுகளைச் செய்வார்கள். எந்தக் குற்றத்தையும் செய்துவிட்டு, கூலாக ஃபீல் செய்வார்கள். நம் ஊரில் இருக்கும் பல அடாவடி தாதா அரசியல்வாதிகளுக்கு இது பொருந்தும். கொலைக் குற்றத்துக்காக இவர்களைக் கைதுசெய்து வண்டியில் ஏற்றும்போதும் சிரித்துக்கொண்டே, கைகளை ஆட்டி  போஸ் கொடுப்பார்கள். இவர்களை எல்லாம் நீங்கள் நாளிதழ்களில் நிறையப் பார்க்க முடியும்.
சிறைகளில் மூன்று 'டூக்கள்’ பிரபலம் sணீபீ, னீணீபீ, தீணீபீ. சிறையில் இருப்பவர்களை இப்படி மூன்று பிரிவுகளாகப் பிரித்துச் சொல்வார்கள் சிறை அதிகாரிகள். இதில் மூன்றாம் வகையினர்தான் மேற்கண்ட ஆட்கள்.
மனிதர்கள் எல்லோருக்கு ஒருவித உந்துதன்மை (Impulsivity) இருக்கும். அதாவது, ரோட்டில் அழகாக ஒரு பெண்ணைப் பார்க்கிறீர்கள். 'பொண்ணு செம க்யூட்பா...’ என்று நினைத்துக்கொண்டே அவளைக் கடந்து சென்றால், அது நார்மல். அதுவே, அழகான பெண்ணைப் பார்த்த உடனே, கையைப் பிடித்து இழுத்தால் அது, சமூக விரோத ஆளுமைக் கோளாறு. இன்று சிறையிலும் வெளியிலும் நீக்கமற நிறைந்து இருக்கும் கொடிய சமூக விரோதிகள், காசுக்காகக் கொலை செய்யும் கூலிப்படையினர், அடாவடி அரசியல்வாதிகள், ஆன்மிக ஆராய்ச்சிப் போர்வையில் உலா வரும் போலி சாமியார்கள்... இவர்கள் எல்லாம் சமூக விரோத ஆளுமைக் கோளாறு நோயாளிகளே; இவர்களின் 90 பேருக்குக் குடிப்பழக்கம் இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
பொதுவாக விதி என்று ஒன்று இருந்தால், விதிவிலக்கும் உண்டுதானே... உலகிலேயே ஏராள​மானவர்களைக் கொலை செய்து மிகக்கொடியவராக பெயர் எடுத்த ஹிட்லர், தனது 30 வயதுக்குப் பின்பு சாகும் வரை மதுவையே தொடாதவர். அதற்கும் முன்பும் கூட ஓரிரு முறை மட்டுமே அவர் மது அருந்தி இருக்கிறாராம். இன்னொரு தகவல், ஒருமுறை கசாப்புக் கடைக்குச் சென்ற ஹிட்லர், அங்கு மாட்டை அறுப்பதைப் பார்த்து மனம் கலங்கி, அதன் பின்பு அசைவத்தையே ஒதுக்கி விட்டார். ஆனால், அவரும் சமூக விரோத ஆளுமைக் கோளாறு நோய்கொண்டவர் என்பது எவ்வளவு முரண்பாடான உண்மை பாருங்கள்!
''விற்பனை குறைந்தால் அதிகாரிகள் திட்டுகிறார்கள்!''
 கடந்த இதழில் டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதல் விலை வைத்து விற்பதை எழுதி இருந்ததைப் படித்து விட்டு, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கப் (ஏ.ஐ.டி.யூ.சி) பொதுச்செயலாளர் தனசேகரன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். ''நீங்கள் சொன்னதில் நிறைய உண்மைகள் இருந்தாலும்... சில முரணான தகவல்களும் இருக்கின்றன. கூடுதல் விலை வைத்து விற்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மைதான். ஆனால், கடையைத் திறக்கும் முன்பும், கடை மூடிய பின்பும் விடிய, விடிய விற்பது டாஸ்மாக் பணியாளர்கள் அல்ல... பாரில் வேலை பார்ப்பவர்கள், பாரை ஏலம் எடுத்து நடத்துபவர்கள், அரசியல் தரகர்கள்.... இவர்களே, மதுபாட்டில்களை மொத்தமாக கொள்முதல் செய்து அப்படி விற்கிறார்கள்'' என்றார்.
அவரிடம், ''அவர்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யத்தான் தினமும் மொத்தமாக மது பாட்டில்களை வாங்குகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? அப்படி என்றால் அந்த முறைகேட்டுக்கு ஊழியர்களும் உடந்தைதானே?'' என்று கேட்டோம். ''ஒவ்வோர் ஆண்டுக்கும் 20 சதவிகிதம் மது விற்பனையை உயர்த்தி இலக்கு நிர்ணயித்து, விற்பனை குறைந்தால் கெட்ட வார்த்தைகளில் அதிகாரிகள் அர்ச்சனை செய்யும் சூழலில், எப்படியோ விற்றால் போதும் என்ற நிலைக்குத்தான் யாராக இருந்தாலும் தள்ளப்படுவார்கள். தவிர, டாஸ்மாக் நிர்வாகம் ஒவ்வொரு கடைக்கும் இத்தனை யூனிட் மட்டுமே மின்சாரக் கட்டணம் தர முடியும் என்று சீலிங் வைத்துள்ளது. இந்த சீலிங் முறைப்படி பார்த்தால் மின் கட்டணத்தில் பாதியை நாங்கள் கையில் இருந்து செலுத்த வேண்டி இருக்கிறது. தவிர, ஒவ்வொரு கடையிலும் அளவுக்கு அதிகமாக இருப்பு வைக்க அதிகாரிகள்  கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், பல கடைகளில் மது பாட்டில்களை வைக்க இடம் இல்லாமல் பக்கத்தில் ஒரு அறையைப் பிடித்து அங்கு இருப்பு வைக்கிறார்கள். அதற்கு கைக்காசைப் போட்டு வாடகை செலுத்துவதும் ஊழியர்களே. அந்தக் கட்டடத்தில் இருப்பு வைக்கும் மதுபானத்துக்கு ஆபத்து ஏற்பட்டால், மொத்தத்தையும் ஊழியர்களே ஏற்க வேண்டும். இப்படி ஊழியர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களைப் பட்டியல் போடலாம்'' என்றார்.

Saturday, June 2, 2012

ஸ்ட்ரீட் ரேஸ்...


ஸ்ட்ரீட் ரேஸ்.... சென்னையின் மரண விளையாட்டுகளில் முதல் இடத்தில் உள்ள விபரீதம். எந்த அனுமதியும் பெறாமல், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பரபரப்பான நகர டிராஃபிக்குகளின் இடையே புயல் வேகத்தில் ஊடுருவி நடத்தப்படும் பைக் ரேஸ் பயங்கரங்களை அறிவீர்களா?
 இந்த ஐந்து மாதங்களில் சென்னையில் 53 பைக் விபத்துகள் நடந்து இருக்கின்றன. இதில் 55 பேர்  இறந்திருக்கிறார்கள். அந்த 55-வது உயிர்... ஏழாவது படிக்கும் ஒரு குட்டிப் பெண் ஷைலஜா. அப்பாவுடன் ஆக்டிவாவின் பின்பக்கம் அமர்ந்து சென்றபோது அதி வேகமாக வந்த பைக் மோதி, ரோட்டில் தூக்கி வீசப் பட்டாள். பின்னால் வந்த அரசுப் பேருந்து அவள் தலை யில் ஏறியதில் குட்டி தேவதை உடல் சிதறி உயிர்விட்டாள்.
'கட்டுப்படுத்திவிட்டோம்’ என்று போலீஸார் அடித்துச் சொன்னாலும், 'வீர்ர்ர்ர்ரூம்’ சத்தத்தால் சாலையில் செல்வோரை மிரளவைக்கும் பைக் ரேஸர்களை இன்றும் காண முடிகிறது. முன்னரெல்லாம் இரவுகளில் ஆளரவம் அற்ற சாலைகளிலோ, கடற்கரைச் சாலைகளிலோ நடத்தப்பட்ட இந்த ரேஸ்கள், இப்போது நெரிசல்மிக்க அலுவலக நேரத்திலும் சாலைகளில் நடக்கின்றன. அதிலும் சில ரேஸ்களின் விதிகள்... பைக்கின் கிளட்ச், பிரேக் முதலியவை பயன்படுத்தக் கூடாது, சிக்னல் சிவப்புக்கு நிற்கக் கூடாது என்றெல்லாம் திகில் கூட்டுகின்றன.
இந்த பைக் ரேஸ்கள் எப்படித்தான் நடத்தப்படுகின்றன?
ஆதி முதல் அந்தம் வரை அறிந்துகொள்ள முயற்சித்தேன். நண்பரின் நண்பர் மூலம் பென்சில் ஸ்ட்ரெட்ச் மற்றும் ஜிக்ஜாக் பைக் ரேஸ்களில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பென்சில் ஸ்ட்ரெச் என்றால், சுமார் 150 கி.மீ. வேகத்தில் ஒரே நேர்க்கோட்டில் பறந்து இலக்கை மிகக் குறைந்த நேரத்தில் கடப்பது. லயோலா கல்லூரி சாலையில் வைத்து கறுப்பு கரிஷ்மாவை உறுமவைத்துக்கொண்டு இருந்தான் அந்தச் சுள்ளான். பில்லியனில் ஏறி அமர்ந்தால், ஒட்டகத்தின் மீது அமர்ந்ததுபோல செம உயரம். செமத்தியாக உறுமிவிட்டு எடுத்த எடுப்பில் எழுபதைத் தொட்டது கரிஷ்மாவின் ஸ்பீடாமீட்டர். ஒரே நொடியில் உயிர் பயத்தைக் காட்டிவிட்டான் சுள்ளான். கண்களை மூடிக்கொண்டேன்.  
கார்ட்டூன் படங்களில் வில்லனை ராக்கெட் நுனியில் கட்டி அனுப்புவார்களே... சத்தியமாக அப்படித்தான் இருந்தது. டிராஃபிக் இல்லாத அந்த அதிகாலை வேளையில் நம்பினால் நம்புங்கள்... முழுதாக ஒரே நிமிடம்தான்... மூன்று கிலோ மீட்டர்களைக் கடந்து ஸ்கைவாக் அருகே வந்து சேர்ந்தோம். பைக்கை நிறுத்திய நொடி விருட்டென்று தாவி இறங்கினால் கண்களில் பூச்சி பறக்க... காலுக்குக் கீழே சாலை நழுவியது!
''ஈவ்னிங் சிக்ஸ்... ஹாரிங்டன் ரோடு... ஜிக்ஜாக்!'' என்று சங்கேத பாஷைபோலச் சொல்லிவிட்டுப் பறந்துவிட்டான் சுள்ளான்.
மாலை 6 மணி... போக்குவரத்து நெரிசலில் பிதுங்கி வழிந்துகொண்டு இருந்தது ஹாரிங்டன் சாலை. குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொண்டு அந்த பல்சரில் ஏறி அமர்ந்தேன். கியர் தட்டிப் புறப்பட்டு நூறைத் தொட்ட பின் அதில் இருந்து இம்மியும் குறையவில்லை வேகம். அவ்வளவு நெரிசலிலும் பாம்பு போல வளைந்து நெளிந்து பறந்தது பைக். முன் பின் செல்பவர்கள் பைக்கின் உறுமல் சத்தத்துக்கே வழிவிட்டுத் தெறித்தார்கள். 'ஜஸ்ட் மிஸ்’ஸில் சிக்னல் சிவப்பைக் கடந்தான் பையன். டிராஃபிக் கான்ஸ்டபிள் ஊதிய விசில் பகீர் கிளப்பியது. மாநகரப் பேருந்துக்கும் மெட்ரோ வாட்டர் லாரிக்கும் நடுவே லேசாக உரசி சைக்கிள் கேப்பில் பறந்தது பைக்.  ஸ்டெர்லிங் சாலை பெட்ரோல் பங்க்தான் எண்ட் பாயின்ட். பைக்கில் இருந்து இறங்கி நீண்ட நேரத்துக்குப் பிறகும் வயிற்றைக் கலக்கிக்கொண்டே இருந்தது.
''பிரதர்... இதெல்லாம் தப்பு இல்லையா? பப்ளிக்கை இப்படித் தொந்தரவு பண்ணலாமா? போலீஸ் பிடிச்சா என்ன சொல்வீங்க?'' என்று கேட்டேன். ''ஹ... எங்களை சேஸ் பண்ணிப் பிடிக்க சென்னை சிட்டி யில ஒரு போலீஸ்கூடக் கிடையாதுங்க. ஏன், சோழாவரம் பைக் ரேஸர்கள்கூட எங்களைப் பிடிக்க முடியாது. ஏன்னா, அவங்களுக்கு டிராக்குல மட்டும்தான் ஓட்டத் தெரியும். டிராஃபிக்ல ஓட்ட எங்களுக்குத்தான் தெரியும். சரி... வாங்க அடுத்து மவுன்ட் ரோட்ல ஒரு ஜெர்க் போடலாமா?'' என்று அழைத்தான். தலைக்கு மேலே கும்பிடு போட்டு இடத் தைக் காலி செய்தேன்.
பிறகு, பைக் ரேஸ் விவரங்களை விசாரித்தால், டாப் கியரில் கிறுகிறுப்பு தட்டுகிறது.
டிராக் ரேஸ்களைப் போலவே பக்கா பகீர் விதிமுறைகளுடன் சென்னையில் நடக்கின்றன ஸ்ட்ரீட் ரேஸ்கள். ஃபார்முலா 1 முதல் ஃபார்முலா 7 வரை பல பிரிவுகளாகப் பிரித்து விதவிதமாக ரேஸ் நடத்துகிறார்கள். பல்ஸர் 180, பல்ஸர் 220, யமஹா ஆர்-15, கரிஷ்மா, அப்பாச்சி, யமஹா ஆர்.எக்ஸ் 100 இவையே ரேஸுக்கான பைக்குகள்.
ஃபார்முலா 1: ரேஸுக்கு அறிமுகமாகும் பொடிப் பையன்களுக்கான வரவேற்புப் பிரிவு. அதிகாலை அல்லது இரவு 10 மணிக்கு மேல் வெறிச்சோடிய சாலைகளில் நடக்கும். பைக்கை டியூன் செய்யக் கூடாது. அடையாறு பாலம் தொடங்கி கலங்கரை விளக்கம் சிக்னலுக்கு முன் முடியும் இந்த ரேஸ். ஐந்து நிமிடங்களுக்குள் வந்து சேர வேண்டும். 1,000 ரூபாய் அல்லது பீர் பார்ட்டி... இதுதான் பந்தயம்.
ஃபார்முலா 2: தாம்பரம், மதுரவாயல், கானாத்தூர் புறநகர் பைபாஸ், கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். பக்கம் பகல் நேரங்களில் நடக்கும் ரேஸ். டபுள்ஸ் கட்டாயம். 10 கி.மீ. பயண தூரம். பைக் டியூனிங் கூடாது. சைலன்ஸரின் உள்ளே இருக்கும் மப்ளரை வெட்டக் கூடாது. ஹெல்மெட் கட்டாயம். பந்தயத் தொகை 5,000 தொடங்கி 10 ஆயிரம் வரை!
ஃபார்முலா 3: காந்தி சிலை டு ராயபுரம் அல்லது காந்தி சிலை டு திருவான்மியூர் ரூட். பைக் நன்றாக ஓட்டத் தெரிந்த ரேஸர்கள் மட்டுமே பங்கெடுக்க முடியும். மிதமான போக்குவரத்து இருக்கும் நண்பகல் 12 மணியில் இருந்து மதியம் 3 மணிக்குள் ரேஸுவார்கள். ஹெல்மெட் அணியக் கூடாது. பந்தயம் பணம் மட்டுமே. 10 ஆயிரம் தொடங்கி 20 ஆயிரம் வரை.
ஃபார்முலா 4: காந்தி சிலையில் இருந்து ராயபுரம் சென்று அங்கு குறிப்பிட்ட நபரிடம் இருக்கும் ரகசிய எண் எழுதப்பட்ட அட்டையை வாங்கிக்கொண்டு, ஜெமினி வழியாக வடபழனி லட்சுமண் - ஸ்ருதி சிக்னல் வரை சென்று அங்கு இன்னோர் அட்டையைப் பெற்றுக்கொண்டு காந்தி சிலை வர வேண்டும். டபுள்ஸ் கட்டாயம். பந்தயத்தை நடத்துபவர்களின் பிரதிநிதிகள் பயண தூரம் முழுக்கப் பயணித்துக் கண்காணிப்பார்கள். நேரக் கணக்கு இல்லை. முதலில் வருபவரே வெற்றியாளர். பந்தயத் தொகை 20 ஆயிரம் தொடங்கி 40 ஆயிரம் வரை.
ஃபார்முலா 5: சென்னையின் குறிப்பிட்ட இரு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களே இதில் பங்கெடுக்கிறார்கள். பல்ஸர் மற்றும் அப்பாச்சி பைக்குகளில் பூந்தமல்லி நெடுசாலையில் தாசப்ரகாஷ் ஹோட்டல் அருகே தொடங்கி, கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள மாநகராட்சிப் பூங்கா வரை. காலை மற்றும் மாலையின் பீக் ஹவர்களில் மட்டுமே இந்த ரேஸ் நடக்கும். 5,000 தொடங்கி 20 ஆயிரம் வரை பந்தயம். சைலன்சரில் சின்ன மாற்றம் மேற்கொள்வதன் மூலம் செம விர்ர்ர்ரூம் சத்தத்தையும் அதிக புகையையும் கிளப்பு வார்கள்.  
ஃபார்முலா 6: மெக்கானிக்குகளுக்கு இடையே  நடத்தும் ரேஸ் இது. கலங்கரை விளக்கு முதல் திருவொற்றியூர் வரை. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறைதான் நடக்கும். ஒரு டீமூக்கு இரண்டு பைக்குகள். டபுள்ஸ் கட்டாயம். இரண்டில் எந்த பைக் முந்தி னாலும் அணிக்கு வெற்றிதான். மொத்தம் ஐந்து அணிகள் களத்தில் இருக்கும். பந்தயத் தொகை 50 ஆயிரம் தொடங்கி ஒரு லட்சம் வரை. போட்டி தொடங்கும் முன்னே நடுவரின் சாட்சிக் கையெழுத் துடன் பந்தயத் தொகைக்குப் பத்திரம் எழுதிவிடுவார்கள். பெரும்பாலும் பல்ஸர் 220-தான் இந்தப் பந்தயத்தில் பறக்கும். குறிப்பிட்ட ஐந்து இடங்களில் பைக்கை ஜிக்ஜாக் செய்து, மெயின் ஸ்டாண்டை சாலையில் உரசி தீப்பொறி பறக்கவைக்க வேண்டும். இதைக் கண்காணிக்க ஸ்பாட்டில் ஆட்கள் இருப்பார்கள். பீக் ஹவரில் நகர நெரிசலில் தொடங்கி வட சென்னையின் புழுதி பறக்கும் சாலை கன்டெய்னர் லாரி டிரைவர்கள் வரை கண்ணில் விரல்விட்டு ஆட்டிவிடுவார்கள் இந்த ரேஸர்கள். சைலன்சர் மட்டும் அல்ல, இன்ஜின் மற்றும் பெட்ரோல் டேங்குகளிலும் சிற்சில மாற்றங்களை மேற்கொண்டு பைக்கின் வேகத் திறனை அதிகரிப்பார்கள்.
ஃபார்முலா 7: செம டெரர் ரேஸ் இது தான். தேர்ந்த மெக்கானிக்குகள், கல்லூரி மாணவர்கள், ஆட்டோ டிரைவர்கள்எனக் கலந்து கட்டிய ரேஸர்கள் பங்கெடுக்கும் ரேஸ். இரண்டு இரண்டு பைக்குகளாக 10 அணிகள் களம் இறங்கும். ஒரே சாலையில் அத்தனை பைக்குகளும் சென்றால் சிக்கிக் கொள்வார்கள் என்பதால், ஒவ்வோர் அணிக்கும் ஒவ்வொரு ரூட். அனைத்து ரூட்டுகளும் சரியாக ஐந்து கி.மீ. தூரம் இருக்கும். ஹெல்மெட் அணியக் கூடாது. சைடு ஸ்டாண்டை மடக்கக் கூடாது. பைக்கை ஜிக் ஜாக் செய்து ஐந்து இடங் களில் தீப்பொறி பறக்கவைக்க வேண்டும். சமயங்களில் பந்தயத் தொகையைப் பொறுத்து பைக் பிரேக்கின் க்ரிப் மிகவும் குறைவாக இருக்க வேண்டும். சிக்னலில் நிற்கக் கூடாது. இவை இந்த ரேஸின் கண்டிப்பான விதிமுறைகள்.
கடும் போக்குவரத்து நெரிசலில் மட்டுமே நடக்கும் இந்த ரேஸில் வேகத்தைக் குறைக்க பிரேக் பிடிக்க மாட்டார்கள். கியர்கள் மூலமே வேகத்தைக் கட்டுப்படுத்தி, முழு த்ராட்டிலிலேயே பறப்பார்கள். எவ்வளவு போக்குவரத்து நெரிசலிலும், வளைந்து நெளிந்து கட் அடித்துச் செல்வது இவர்களின் முதுகெலும்பைச் சிலிர்க்கச் செய்யும் ஸ்பெஷாலிட்டி. ரேஸின்போது வேறு வழி இல்லாமல் சிக்னலில் வண்டியை நிறுத்தியவர்கள், போலீஸிடம் மாட்டியவர்கள், தடுமாறிக் கீழே விழுந்தவர்கள், விபத்தை ஏற்படுத்தியவர்கள் வாழ்நாள் முழுக்க மீண்டும் ரேஸில் கலந்துகொள்ள அனுமதி இல்லை.
இந்த ரேஸில் கலந்துகொள்ளும் பைக்குகளின் மதிப்பு ஏழெட்டு லட்சங்களை நெருங்கும். தவிர, ரீ-மாடிஃபிகேஷனுக்கு ஓரிரு லட்சங்களை இறைத்திருப்பார்கள். பந்தயத் தொகை ஒரு லட்சம் தொடங்கி 10 லட்சம் தாண்டியும் எகிறும். அதிக ரேஸ்களில் ஜெயித்த பைக்கும் சமயங்களில் பந்தயமாக வரும். இதில் பெரும்பாலும் பைக்கை ஓட்டுபவர் பணம் கட்ட மாட்டார். குதிரைப் பந்தயத்தில் குதிரையை ஓட்டும் வீரன்போலத்தான் இதில் பைக்கை ஓட்டு பவரும். உயிரைப் பணயம் வைத்து பைக் ஓட்டுபவருக்குச் சம்பளம் 10 ஆயிரம் மட்டுமே. ஜெயித்த ரேஸர்களுக்கு பந்தயத் தொகையைப் பொறுத்து ஆயிரங்களில் தொடங்கி லட்சம் வரை போனஸ் கிடைக்கும்.
இந்த ரேஸ் கொடுக்கும் விறுவிறு போதை இளைஞர்களைச் சுண்டி இழுக்கிறது. ஆனால், இதன் மறுபக்கம்... தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையின் முன்னாள் இயக்குநர் டாக்டர் இளங்கோ, வாகன விபத்துகளில் ஏற்படும் தலைக் காயம் உண்டாக்கும் பகீர் விளைவுகளைப் பட்டியலிடுகிறார். ''தலைக் காயம் ஏற்படும்போது மண்டையின் சருமம் கிழிந்து, மண்டையோட்டு எலும்புகள் நொறுங்கும். மூளையைப் பாதுகாக்கும் மூளை உறையில் ரத்தம் உறைந்துவிடும். மூளையின் உள்ளே நிரம்பியிருக்கும் திரவம் ரத்தம் கலந்து காதில் வழியும். கண்ணுக்குச் செல்லும் நரம்புகள் அறுந்து கண் பார்வை பாதிக்கும்.       மூளைக்கு ரத்தம் செல்லும் நாளம் வெடித்து, மூளையின் உள்ளேயும் ரத்தம் உறைந்துவிட்டால்... அது கிட்டத்தட்ட மரண நிலைதான். மூளையில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து, ரத்த அழுத்தம் உயரும். மூளையின் செல்கள் இறந்ததாலும் ரத்த இழப்பாலும் உடனடியாக உடலின் தாதுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு, சிறுநீரகமும் பாதிக்கும்!விபத்து நடந்த இடத்திலேயே அடிப்படை முதலுதவிகள் அளித்து உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பிக்கவில்லைஎன்றால், வாழ்க்கையே கேள்விக்குறியில் முடியும்!'' என்கிறார்!
ஐந்து ஆண்டுகளுக்கு முன் சென்னையில் பைக் ரேஸ்கள் மிக அதிக அளவில் நடக்கும். போலீஸ் கண்காணிப்பு என்பதே கிட்டத்தட்ட இல்லாமல் இருந்தது. ஆனால், சமீப வருடங்களில் கொஞ்சம் கெடுபிடி காட்டினார்கள். இப்போது சிறுமி ஷைலஜாவின் மரணத்துக்குப் பிறகு கெடுபிடி இன்னும் இறுகி இருக்கிறது. இருந்தாலும் ஸ்ட்ரீட் ரேஸர்கள் அசருவதாக இல்லை. இப்போதும் தினமும் ஒரு ரேஸ் சென்னையின் ஏதோ ஒரு மூலையில் விறுவிறுத்துக்கொண்டேதான் இருக்கிறது.
சென்னையின் போக்குவரத்து இணை ஆணையர் சஞ்சய் அரோராவிடம் இதுபற்றிப் பேசினால், ''சென்னை நகரில் இப்போது முற்றிலுமாக பைக் ரேஸ் ஒழிக் கப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கடுமை யாக்கப்பட்டு பைக்கில் அதிவேகமாகச் செல்பவர்களையும் குடித்துவிட்டுச் செல் பவர்களையும் கைதுசெய்துவருகிறோம். பைக் ரேஸ் நடத்துபவர்களைக் குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளவும் திட்டம் இருக்கிறது'' என்று மிரட்டுகிறார்.
ஆனால், அதற்கெல்லாம் பயப்படாமல் ரேஸர்கள் ஆக்ஸிலரேட்டர் முறுக்குவதுதான் பிரச்னையே!

எச்சரிக்கைப் பாடம்!
சம்பவம் 1...
ஷைலஜா... 12 வயது. ஏழாம் வகுப்பில் தேறி எட்டாம் வகுப்புக்குச் செல்ல ஆர்வமாகக் காத்திருந்தவள். அவள் வென்ற பதக்கங்களும் சான்றிதழ்களும் கை கொள்ளாதவை. தன்னைவிடச் சிறிய வயது உள்ள பிள்ளைகளிடத்தில் அவள் காட்டிய பரிவும் பெரியோர்களிடம் அவள் காட்டிய பணிவும்... ஷைலஜாவின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல வந்த அனைத்து உறவினர்களின் பேசு பொருள் இதுதான்.
கடந்த வாரத்தின் ஞாயிற்றுக் கிழமையில் ஒரு திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டுவிட்டு, தன் மகள் ஷைலஜாவை ஆக்டிவா வின் பின்னால் அமரவைத்து, ராஜ் பவன் சாலையில் மெதுவாக வந்துகொண்டு இருந்தார் ஹரிஹரன். அதன் பின் அரங்கேறிய கொடூரத்தை ஹரிஹரன் வார்த்தைகளிலேயே கேட்போம்...
''நான் முன்னாடி போய்க்கிட்டு இருக்கேன். ஒரு பஸ் எனக்குப் பின்னாடி வந்துட்டே இருக்கு. நான் இடப்பக்கமா திரும்பணும். பஸ் எங்களைக் கடந்து போகட்டும்னு ஸ்லோ பண்ணேன். அப்போ பின்னாடி டமால்னு சத்தம். வண்டியே உலுக்குச்சு. என்ன நடந்ததுன்னே தெரியலை. திரும்பிப் பார்த்தா, பில்லியன்ல உட்கார்ந்திருந்த என் மக, ரோட்ல வீசியெறிப்பட்டு கெடக்கா. 'அம்மா’னு மட்டும்தான் கேட்டுச்சு. அந்த பஸ் என்னைத் தாண்டி நின்னுச்சு. அப்புறம் எம் பொண்ணு... எம் பொண்ணு... அவ... அவ...'' என்பவருக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வர வில்லை.
அசுர வேகத்தில் வந்த பைக், ஹரிஹரன் ஆக்டிவாவின் ஸ்டெப்னியில் மோதியதில் ஷைலஜா தூக்கியெறியப்பட்டு இருக்கிறாள். சுதாரிக்க நேரம் இல்லாமல் பின்னால் வந்த பேருந்து ஷைலஜா மேல் ஏறி இறங்கியிருக்கிறது. பைக் ஓட்டி வந்த சுரேஷ் என்ற இளைஞனைப் பொதுமக்கள் அடித்திருக்கிறார்கள். மது அருந்தி பைக் ஓட்டியது, சட்டத்துக்குப் புறம்பாகப் பொது மக்கள் பயன்படுத்தும் சாலையில் ரேஸில் ஈடுபட்ட குற்றங்களுக்காக போலீஸார் அந்த இளைஞனைக் கைது செய்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஏழு வக்கீல்களை வைத்து வாதாடியும் சுரேஷின் ஜாமீன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது!
சம்பவம் 2...
ஒரு கல்லூரி மாணவனான தாமோதரன் இந்த வகை ரேஸில் செம கில்லி. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு ரேஸில் ஆழ்வார்பேட்டை அருகே கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் சென்ற தாமோதரன், சாலையின் நடுவில் அமைந்திருக்கும் டிவைடரில் மோதி, எதிர்ப் பக்கம் வந்த ஒரு பைக்கில் இடித்து, சுவரில் மோதி தூக்கி எறியப்பட்டான். தாமோதரனும் பின்னால் அமர்ந்திருந்த மெக்கானிக்கும் ஸ்பாட் அவுட். தாமோதரனின் அம்மா பிரேமா வேண்டிக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க... அந்தக் கல்லூரியில், சாலையில் வாகனம் ஓட்டுவது குறித்த விழிப்பு உணர்வுப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி இருக்கிறார்கள்.
ஸ்ட்ரீட் ரேஸர்கள் உணர வேண்டிய பாடமும் எச்சரிக்கையும் இந்தச் செய்திகளில் அடங்கி இருக்கிறது.  
- ந.வினோத்குமார்(junior vikatan)

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!






ஜார்கண்ட் மாநிலத் துணை முதல்வர் ஹேமந்த் சோரனிடம், ''காட்டிலும் கிராமங்களிலும் உள்ள மக்களை வலுக்கட்டாயமாகக் காலி செய்து, தொழில் அதிபர்களுக்குத் தாரை வார்க்கும் செயலைத்தான் அரசு செய்கிறதா'' என்று கேட்டதும் தயக்கம் இல்லாமல் பதில் சொல்லத் தொடங்கினார். 
''உண்மைதான்! யாரும் எங்கள் மக்களை ஏறெடுத் தும் பார்ப்பது இல்லை. இங்கு உள்ள கனிம வளங்களை அள்ளுவது பற்றியும் எப்படி குறுக்கு வழிகளில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க லாம் என்பதுபற்றியும்தான் தொழில் அதிபர்கள் யோசிக்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமா, இந்தியாவின் பிரபலத் தொழில் நிறுவனம் ஒன்று,  தனக்கு நிலம் கொடுத்த மக்களுக்குத் தான் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் இன்னும் இழுத்தடிக்கிறது. தொழிற்சாலைகளுக்காக இடம் பெயர்ந்த மக்களின் தீர்க்கப்படாத பிரச்னைகள் இங்கே ஏராளம். மாவோயிஸ்ட்கள் தலையெடுக்கக் காரணமே இதுபோன்ற நிலைதான். அவர்கள் கிராமங்களில் வசிக்கும் ஏழைகளைத் தங்கள் வசப்படுத்திக்கொள்கிறார்கள். அங்கெல்லாம் அவர்கள் ராஜ்ஜியம் நடத்துகிறார்கள். அரசாங் கத்திடம் இருந்து மக்களுக்கு விடுதலை என்கிறார் கள். அந்தப் பகுதிகளில் மாநில அரசின் நிர்வாகத் தையே செயல்பட விடுவது இல்லை. அரசு ஊழியர்களால் தங்கள் கடமைகளைச் செய்ய முடிவதும் இல்லை. பல வருடங்களாக நிலவும் இந்தப் பிரச்னையின் பின்னணியையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
சுரங்கத் தொழிலில் மத்திய அரசின் கொள்கைகள், சட்டங்கள் மாநில அரசுகளுக்கு சாதகமாக இல்லை. மாநிலத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத சூழலும் இந்தப் பிரச்னைக்கு இன்னொரு முக்கிய மான காரணம். அதனால், ஒரு தெளிவான முடிவை எடுக்க முடிவது இல்லை. மாவோயிஸ்ட் பிரச்னை என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளுடன் தொடர்புடையது'' என்றவர் நம்மைப் பார்த்து,
''நீங்கள் எந்தெந்தப் பகுதிகளுக்குச் சென்றீர்கள்?'' என்று கேட்டார்.
''லத்தேகர், சர்ஜூ, சைபாஸா, பெட்லா'' என்று வரிசையாக நாம் சொல்ல ஆரம்பிக்க இடைமறித்த அவர், ''நீங்கள் போன பகுதிகள் எல்லாம் மாவோயிஸ்ட்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளான பகுதிகள். ஆனால், இப்போது நிறைய சாலைப் பணிகள், சிறுபாலங்கள், கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை வழிநெடுகிலும் பார்த்திருப்பீர்களே. ஏதோ எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்'' என்றார்.
அடுத்து, மாவோயிஸ்ட் பற்றி அவரது பேச்சு திரும்பியது!
''மாவோயிஸ்ட்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல. அவர்கள் ஆரம்பித்த இடத்தில் இருந்து எங்கேயோ போய்விட்டார்கள். பணம்தான் அவர்களுக்கு முக்கியம். அதற்காகவே, உள்ளூரில் பிரச்னைகளை உருவாக்குகிறார்கள். அரசின் வளர்ச்சித் திட்டங்களை கிராமங்களில் நிறைவேற்றப் போனால், அதற்கு மாவோயிஸ்டுகள் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள். வளர்ச்சி என்ற சொல்லையே அவர்களால் சகித்துக்கொள்ள முடியாது. எங்கள் மாநிலத்தில் பெரும்பான்மையான கிராமங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டம், சுகாதாரச் சீர்கேடு, கல்வியின்மை, மின்சார வசதி என்று செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவோ கிடக்கின்றன. காடு, மலைகளை ஒட்டியுள்ள கிராமத்து மக்களின் நிலைமை ரொம்பவும் பரிதாபம். கிராமங்களை ஆக்கிரமித்துள்ள மாவோயிஸ்ட்களிடம் இருந்து மீட்க போலீஸார் சண்டை போட்டு வருகிறார்கள். மாவோயிஸ்ட் ஒழிப்புத் திட்டத்தைப் பொறுத் தவரை, மத்திய அரசுக்குத் தேவையான ஒத்துழைப்பு தருகிறோம். மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா, நடப்பதை அமைதியாகக் கவனித்து வருகிறார். வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்'' என்றார்.
''சுரங்கத் தொழிலில் மத்திய அரசின் கொள்கையும் சட்டதிட்டமும்தான் இவ்வளவு குளறுபடிகளுக்கும் காரணம் என்கிறீர்களா?'' என்று கேட்டோம்.
''நிச்சயமாக. பெரும்பாலான சுரங்கங்களை நடத்துவது மத்திய அரசுதான். அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் அளப்பரியது. அதில் மாநில அரசாங்கத்துக்குக் கிடைக்கும், 'ராயல்டி' தொகை மிகவும் சொற்பம்தான். கனிம வளங்களுக்குத் தரும் 'ராயல்டி’ தொகையை உயர்த்திக் கொடுத்தால், வளர்ச்சிப் பணிகளுக்கு அவை உதவியாக இருக்கும். மத்திய அரசுடன் எவ்வளவோ போராடிப் பார்த்து விட்டோம். ஆனால், அவர்கள் செவி சாய்க்கவே இல்லை. சுரங்கத் தொழிலில் உள்ள பழைய கொள்கைகள், சட்டத் திட்டங்களை மாற்றத் தயங்குகிறார்கள். ஆனால், பூமியில் புதைந்து கிடக்கும் கனிம வளங்களை எடுப்பதற்கு மட்டும் புதிது புதிதாகத் திட்டங்களைப் போடுகிறார்கள். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் எங்கள் மாநிலத்துக்கு வந்து, அவராகவே சில திட்டங்களை அறிவிக்கிறார். மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கைக்கு உள்ளான கிராமங்களில் வசிக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை கேட்டுத் தெரிந்துகொண்டு, அதற்கான திட்டங்களை அறிவிக்கிறார். இதனால் ஒரு கையில் துப்பாக்கியும் மறு கையால் மருத்துவ உதவியும் செய்ய வேண்டிய நிலையில் போலீஸார் இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கைக் கவனிக்க துப்பாக்கி பிடிக்கலாம். ஆனால், அவர்களை சமூகப் பணிகளில் எப்படி ஈடுபடுத்த முடியும்? அவர் எதிர்பார்ப்பு நிறைவேற நிறையக் காலம் பிடிக்கும். எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தால் சரி என்று நாங்களும் போகிறோம். ஆனால், ஒரு மாநில மக்களின் உணர் வையும் தேவைகளையும் அந்த மாநில அரசுதான் நன்கு உணர்ந்து இருக்கும் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். வளர்ச்சிப் பணிகளில் எங்களையும் முழுவதுமாக இணைத்துக் கொள்ள வேண்டும்'' என்கிறார்.
''உங்கள் அப்பா சிபுசோரனுக்குச் செல்வாக்கு உள்ள பகுதிகளில் மட்டும் மாவோயிஸ்ட்கள் இல்லை யாமே? இது எப்படிச் சாத்தியம்? மாவோயிஸ்ட் டுகளால் உங்களுக்கு ஆபத்து இல்லையா?'' என்றோம்.
''எங்கள் பகுதிகளில் மாவோயிஸ்ட் பாதிப்பு கொஞ்சம் உண்டு. அவர்கள் அங்கே தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சித்து வருகிறார்கள். மற்றபடி, எங்கள் கட்சிக்கு அவர்களிடம் இருந்து எந்த ஒரு மிரட்டலும் வந்தது இல்லை. மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். எங்கள் மாநில மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உண்மையாக இருப்பதும்கூட காரணமாக இருக்கலாம். ஏனென் றால், இந்த விஷயங்களுக்காகத்தானே அவர்களும் போராடுகிறார்கள். என்ன, நாங்கள் அரசியல் வழியில் போராடுகிறோம்; அவர்கள் துப்பாக்கி வழியில் போராடுகிறார்கள். அப்படியிருக்க, அவர்கள் ஏன் எங்களை எதிரிகளாகப் பார்க்கப் போகிறார்கள்? என் அப்பா சிபுசோரன் கடந்த 30 ஆண்டுகளாக காடுகள், மலைகள், கிராமங்கள் என்று அடித்தட்டு மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். இரவு, பகல் எந்தநேரத்திலும் மக்களைச் சந்திக்கிறார். நானும் அவர் வழியில்தான் செல்கிறேன். எங்களுக்கு மாவோயிஸ்ட்டுகள் எந்த மிரட்டலும் விடுத்தது இல்லை'' என்றார்.
''அப்படியானால் நீங்கள் மாவோயிஸ்ட்களை அழைத்துப் பேசி சுமுகமாக ஒரு தீர்வை ஏற்படுத் தலாமே?''
''பேசத் தயார். அவர்கள் முன்வந்தால், பேசுவோம். ஆனால், இதுவரை அதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. எனக்கு மாநில அரசியலில் எதிர்காலம் இருக்கிறது. நான் துணை முதல்வர் பதவிக்கு வந்து 16 மாதங்கள்தான் ஆகின்றன. நிறையச் செய்ய வேண்டும் என்றே நினைக்கிறேன். நல்ல வாய்ப்பு வரும்போது, அவர்களை அழைத்துப் பேசுவேன். பின்தங்கிய கிராமப்புற மக்களுக்கு எது நல்லதோ, அதைச் செய்வேன்'' என்றவரிடம் இருந்து விடைபெற்றுக் கிளம்பினோம்.
பெட்லா வனப் பகுதி. ஜார்கண்ட் - சத்தீஸ்கர் இரண்டு மாநிலங்களில் எல்லையை வருடும் அடர்ந்த காட்டுப் பகுதி. நாம் அங்கு சென்றபோது, மாவோயிஸ்ட்களுக்கும் சி.ஆர்.பி.எஃப். போலீஸாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்துகொண்டு இருந்தது. சண்டை தொடங்கி இது 49-வது நாள் (11.05.2012) என்றார்கள். பெட்லா வனப் பகுதி வழியாகத்தான், மாவோயிஸ்ட்கள் முகாம் அமைத்துள்ள பகுதிக்குப் போலீஸார் போக முடியும் என்பதால், அங்கே பரபரப்புக்கு பஞ்சம் இல்லை!
வானத்தில் விர்விர் என்று இறக்கையைச் சுழற்றியபடி வட்டமடிக்கிறது விமானப் படையின் ஹெலிகாப்டர். வனத்தின் இடையே மோட்டார் சைக்கிள்களில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அங்குமிங்கும் பறந்தபடி இருக்கிறார்கள். சி.ஆர்.பி.எஃப். தலைவர் விஜயகுமார், பெட்லா கெஸ்ட் ஹவுஸில் முகாம் இட்டிருப்பதாகச் சொன்னார்கள். அங்கே சென்றோம். வனப் பகுதியின் வரைபடம் சகிதம் சக அதிகாரிகளுடன் ஆலோசனையை முடித்துவிட்டு, வெளியே வந்தார் விஜயகுமார். யூனிபார்ம், கூலிங்கிளாஸ் சகிதம் கம்பீரமாக நடந்து வந்த அவர் தோளில் ஏகே 47 ரக துப்பாக்கி. அதை சரிசெய்தபடி, நம்முடன் பேச ஆரம்பித்தார் விஜயகுமார்...

 - அதிர்ச்சி தொடரும்.. 
பெட்லாவின் விசேஷங்கள்...
ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து 170 கி.மீ. தொலைவில் இருக்கிறது பெட்லா. வனத்துறைக்குச் சொந்தமான புலிகள் சரணாலயம் இங்கே இருக்கிறது. காட்டுப் பகுதியில் ஏராளமான புலிகள் நடமாட்டம் உண்டு. யானை உள்ளிட்ட நிறைய காட்டு மிருகங்கள் மற்றும் அரிய வகை பறவைகள் காணப்படுவதால், அவற்றை  பார்க்கவும்,  நீர்வீழ்ச்சி மற்றும் ஆற்றில் குளிக்கவும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும்.  இங்குள்ள அரண்மனை சரித்திரப் புகழ் வாய்ந்தது.  சேரோ மன்னன் 16-ம் நூற்றாண்டில் ஆட்சி நடத்திய அரண்மனை, சிதைந்த நிலையில் இருக்கிறது. இதற்கு அருகில் மன்னனின் வாரிசு ஓர் அரண்மனையைக் கட்டத் தொடங்கி, அது கட்டி முடிக்கப்படாமல் பாதியில் நிற்கிறது. ஒரு காலத்தில் ஏராள மான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தவை இந்த இடங்கள். போலீஸ் ரோந்து போன்ற பிரச்னைகள் இப்போது நிலவுவதால், சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது இல்லை. நாம் போனபோது, வனக் கண்காட்சி மையம் வெறிச்சோடிக்கிடந்தது. சரணால யத்திலும் பார்வையாளர்கள் யாரும் கண்ணில் தென்படவில்லை. பெட்லா வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமத்திலும் ஆட்களைக் காணோம்.
அருகில் தென்பட்ட ஒரு டீக்கடையில் பேச்சு கொடுத்தோம். ஆனால், அவர்களும் பேச மறுத்தார்கள். பெட்லாவை ஒட்டி ஆதிவாசிகள் வசிக்கும் கிராமத்துப் பக்கம் நடை போட்டோம். ஒரு வீட்டில் கும்பல் கூடி இருந்தது. அங்கே தென்பட்ட ஒரு சிவப்புத் துணி பேனரில் மாவோ கம்பீரமாகத் தெரிகிறார். நக்ஸல்பாரி இயக்கத்தின் நிறுவனரான சாரு மஜூம்தார், மார்க்ஸ் படங்களில் தெரிகிறார்கள். நம்மைப் பார்த்ததும், அருகில் வந்து இன்முகத்தோடு வரவேற்றார்கள். ஆனால், போலீஸ், மாவோயிஸ்ட் என்று நாம்  பேசத் தொடங்கியதும், ஒரு கணத்தில் விலகிப் போய்விட்டார்கள்.
அவர்கள் அனைவர் முகத்திலும் ஒருவித பதற்றத்தை மட்டுமே பார்க்க முடிந்தது!

து வித்தியாசமான யுத்தக்களம். எதிரி​களுக்குச் சீருடை கிடையாது. பொதுமக்கள் போலத்தான் வேஷம் போட்டுக்கொண்டு அவர்கள் வருவார்கள். நாலா புறங்களில் இருந்தும் அவர்கள் வீசும் குண்டுகள் பறந்து வரலாம். ஆனால், எங்களுடைய ஒரு துப்பாக்கி ரவை கூட பொதுமக்கள் மீது பாய்ந்துவிடக் கூடாது. நடுக்காட்டில், கும்மிருட்டில், கண்ணைக் கட்டிக்கொண்டு குறிதவறாமல் சுடுவதுபோல என்று வைத்துக்கொள்ளுங்களேன். அப்படித்தான் போரிட்டுக்கொண்டு இருக்கிறோம். நீங்கள் இப்போது நிற்கும் இடத்தில் 49-வது நாளாக சண்டை நடக்கிறது. இதுவரை, மாவோயிஸ்ட் தரப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டு உள்ளனர். மூவருக்குப் படுகாயம். எங்கள் தரப்பில் ஒருவரை இழந்து விட்டோம். ஆறு பேருக்குப் பலத்த காயங்கள். எதுவுமே சுலபம் இல்லை.''
- நம்மிடம் நிதானமாகத்தான் பேசுகிறார் விஜய​குமார். ஆனால், அவருடைய கண்கள் சுற்றிலும் கண்காணித்துக்கொண்டே இருக்கின்றன.
''மூன்று லட்சம் வீரர்களை வழிநடத்தும் அனு​பவம் எப்படி இருக்கிறது?''  
''நாம் சரியாக இருந்தால், நமக்குப் பின்னால் இருப்பவர்களும் சரியாக இருப்பார்கள். என்னை  என் வீரர்கள் கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களை என் நடவடிக்கைகளால்தான் வழிநடத்து​கிறேன். சவாலான நேரம் என்றால், எனக்குக் கீழே இருப்பவர்கள் ஏதாவது தப்பு செய்துவிட்டு, என் முன்பு அவர்கள் நிற்கும் நேரம். கண்ணியமான, தைரியசாலியான அதிகாரி ஒருவர் தவறு செய்கிறார் என்றால், நான் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். அதற்கு முந்தைய காலங்களில் அவர் எந்த ஒழுங்கு நடவடிக்கைக்கும் ஆளாகாமல் மிகச்சிறப்பாகப் பணி செய்திருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவும் வேண்டும். அந்த மாதிரி தருணங்கள்தான் சவாலாக இருக்கும். மற்றபடி, எனக்குக் கீழே இருப்பவர்களின் எண்ணிக்கையை நான் தனித்தனியாகப் பார்ப்பது இல்லை. எனக்குக் கீழே ஒரு வீரர் இருக்கிறார். அவரோடு நானும் ஓடிக்கொண்டு இருக்கிறேன். அப்படித்தான் எப்போதும் நினைப்பேன்.''
''ஜார்கண்டில் இதுவரை எத்தனை ஆபரேஷன்களை நீங்கள் நடத்தி இருக்கிறீர்கள்? எல்லா​வற்றிலும் வெற்றி கிடைத்ததா?''
''ஜார்கண்ட்டில் இப்போது நாங்கள் நடத்திக்​கொண்டிருக்கும் ஆபரேஷனின் பெயர்... 'ஆபரேஷன் ஆக்டோபஸ்’. முதல் தாக்குதலை சரண்டாவில் நடத்தினோம். அடுத்து சர்ஜூவில். மூன்றாவதாக புர்ஹா பகட்டில் தாக்குதல் நடத்தினோம். இவை திட்டமிட்டு நடத்தப்பட்ட ஆபரேஷன்கள். ஆனால், சத்தீஸ்கரிலோ, ஜார்கண்​டிலோ எல்லைப் பகுதிகளில் அடிக்கடி துப்பாக்கிச் சண்டைகள் நடப்பது சகஜம். திடீரென்று நாம் இப்போது நிற்கும் இடங்களை எதிரிகள் சூழ்ந்துகொண்டால், என்ன செய்வோம்? போன வாரம் நவீன்மாஞ்சி (மாவோயிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்) அவருடைய மூன்றாவது மனைவியின் வீட்டுக்கு வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. சுற்றி வளைத்துப் போலீஸார் பிடித்தார்கள். இதற்கெல்லாம் கணக்கே கிடையாது. ஆனால், மாவோயிஸ்ட்களைத் துரத்துவதோடு விட்டுவிடுவது இல்லை. அவர்களுடைய முகாம்களை எங்கெல்லாம் அழித்து, அவர்களைத் துரத்துகிறோமோ, அங்கெல்லாம் எங்கள் படையின் நிரந்தர முகாம்களை அமைத்து விடுகிறோம்.  இதை எல்லாம் வெற்றி என்று சொல்வதைவிட, இது தொடர்ச்சியான ஒரு போர் நடவடிக்கை என்றுதான் சொல்ல வேண்டும்.''
''வீரப்பன் ஆபரேஷன், உளவுத் தகவலை அடிப்​படையாக வைத்துத்தான் வெற்றி பெற்றதாக முன்பு சொல்லி இருந்தீர்கள். தொழில்நுட்ப உளவு - மனித உளவு இரண்டையும் சேர்த்து பயன்படுத்தி வெற்றி பெற்​றோம் என்று சொன்னீர்கள். இங்கேயும் அதே பாணிதானா?'' 
''ஆமாம். படை வேறு... உளவுப் பிரிவு வேறு. இவர்கள் கொடுக்கும் துல்லியத் தகவல் அடிப்படையில்தான் படையினரால் அதிரடித் தாக்குதல் நடத்த முடியும். இதையெல்லாம் மனதில் வைத்துத்தான், புதிய உளவுப்பிரிவு ஒன்றை சமீபத்தில் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆரம்பித்து வைத்தார். மேலும், 3,500 பேர்கொண்ட உளவுப்பிரிவை நாடு முழுவதும் தயார் செய்து இருக்கிறோம். அதிரடிகளைப் பொறுத்திருந்து பாருங்கள்!''
''இந்தத் தாக்குதல் யுக்தியில் உங்களின் குரு யார்?''
''பிரிட்டிஷ் படையின் ஃபீல்டு மார்ஷல் பெர்னார்டு மன்ட்கோமெரி. இரண்டாம் உலகப்போரில் மிகச்சிறந்த ராணுவத் தளபதியாக விளங்கியவர். அவரது போர் யுக்திகள் எனக்குப் பிடிக்கும். ராணுவ, போலீஸ் பணியில் இருக்கும் ஒவ்வொருவரும் அவரைப் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். இங்கிலாந்து ராணுவம் மிகவும் வலுவுடையதாக மாறியது அவருடைய சாதனையால்தான். ஒரு சில மாதங்களில் 10 லட்சம் வீரர்களுக்கு முறைப்படி பயிற்சி கொடுத்து போருக்குத் தயார் செய்தவர். அவரது பெயரை கூகுளில் தட்டிப்பாருங்கள். அவரது சாதனை நுணுக்கங்​களைப் படித்துப் பிரமித்துப்போவீர்கள்.''
''சரி, மாவோயிஸ்ட் பிரச்னையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''ஓர் அரசு ஊழியனாக இருக்கும் நான் இதுபற்றி கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. அரசு எனக்குக் கொடுத்துள்ள வேலையை நான் செய்கிறேன். அவ்வளவுதான். ஆனால், மக்கள் பாதிப்படையாமல் வேலை செய்கிறோம் என்பதும் இங்கு மோசமான சூழலில் இருக்கும் மக்களின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தத் தேவையானவற்றை கவனிக்கிறோம். அரசாங்கமும் மக்களுடைய நிலையை மாற்ற முயற்சி எடுக்கிறார்கள்.''
''அப்பாவி மக்களைப் படையினர் கைதுசெய்து துன்புறுத்துவதாகவும் சுட்டுக்கொல்வதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் சொல்கிறார்களே? அரசியல்​வாதிகளேகூட குற்றம் சாட்டுகிறார்களே?''
''மனித உரிமை மீறல் தொடர்பான புகார்கள் வரவே கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். அதையும் மீறி வந்தால், அதைக் கண்டுகொள்ளாமல் விடுவது இல்லை. ஐ.ஜி. லெவல் அதிகாரியை அனுப்பி விசாரித்து, சம்பந்தப்பட்டவர் தவறு செய்திருந்தால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறோம். ஆனால், இன்னொன்றையும் புரிந்துகொள்ளுங்கள். இங்கே நிஜமாக என்ன நடக்கிறது என்பது மனித உரிமை ஆர்வலர்களுக்குத் தெரியாது. மாவோயிஸ்ட்களிடம் இருந்து வரும் பிரஷர் காரணமாக, அவர்கள் விரும்புகிற மாதிரி அறிக்கை விடும் ஒருசில அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தெற்கு ஒடிசாவில் நடந்த பஞ்சாயத்து தேர்தல்களில் 30 சதவிகித தேர்தலில் மாவோ​யிஸ்ட்கள் போட்டி இல்லாமல் ஜெயித்து இருக்கிறார்கள். 'பரவாயில்லையே. ஜனநாயகப் பாதைக்கு அவர்கள் வந்து விட்டார்களே' என்று சந்தோஷப்படலாம். ஆனால், 'அரசியல்வாதிகள் அந்தப் பதவிகளுக்கு வந்துவிடவே கூடாது' என்று மாவோயிஸ்ட்கள் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். அதனால் அதிருப்தி அடைந்த அரசியல்வாதிகள் பலர், தங்கள் அரசியலில் பாதையைவிட்டே விலகிவிட்டனர். இது மிகவும் மோசமான அணுகுமுறை. ஏற்கெனவே இருக்கிற அரசியல் அமைப்பை மாவோயிஸ்ட்கள் மொத்தமாக அழிக்கப் பார்க்கிறார்கள். நமது ஜனநாயக அமைப்பில் சில தவறுகள், குறைகள் இருக்கலாம். ஆனால், இதைவிட சிறந்ததை மாவோயிஸ்ட்களால் தர முடியாது!''
''மத்திய அரசுக்கும், சில மாநில அரசுகளுக்கும் மாவோயிஸ்ட் ஒழிப்பு விஷயத்தில் கருத்து வேறு பாடு நிலவும் சூழல், படையினரைப் பாதிக்​கிறதா?''
''மாவோயிஸ்ட்கள் விவகாரத்தில் மத்தியஅரசு எங்களுக்கு என்ன சொல்கிறதோ, அதை மாநில அரசின்  உதவியுடன் செய்கிறோம். இந்த விவகாரத்தை, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இப்போது நாலைந்து மாநிலங்களில் பரவிஇருக்கும் மாவோயிஸ்ட்கள், நாடு முழுவதும் பரவாமல் தடுக்க வேண்டும். சின்னச் சின்ன பிரச்னைகள் வந்தாலும் பொதுநலன், தேச நலன் கருதி மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கையில் அனைவரது ஒத்துழைப்பும் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு.''
''பெருநிறுவனங்கள் இங்குள்ள கனிமவளங் களைச் சுரண்டுவதற்காக மக்களை விரட்​டப் பார்க்கின்றன. அவர்களுக்குஎதிராக மாவோ யிஸ்ட்கள் போராடுகிறார்கள். ஆதி​வாசி​களிடமும் கிராமப்புற மக்களிடமும் மாவோயிஸ்ட்​களுக்கு நல்ல செல்வாக்கு இருப்பது வெளிப்​படையாகவே தெரிகிறது. இத்தகைய சூழலில் உங்களது நடவடிக்கைகள் எப்படி வெற்றி​பெறும்?''
''எனக்கும் தெரியும். இங்கே பல வருடங்களாக சில மின் உற்பத்தி நிலையங்கள் இயங்கிவருகின்றன. ஆனால், அதற்குப் பக்கத்துக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மின்சாரம் என்றாலே என்ன வென்று தெரியாது. நிறைய வளர்ச்சிப் பணிகள் செய்ய வேண்டி இருப்பதும், அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டியதும் உண்மைதான். இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பார்வையில்தான் நான் பேச முடியும். பொதுவாகச் சொன்னால், எங்கள் கூட்டுமுயற்சி நிச்சயமாக பயன் அளிக்கும். இந்தியப் பிரதமர் சொன்னதுபோல, மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கையில் முதல் படி - உள்துறை தொடர்புடையது. இரண்டாவது - மனிதவளத் துறை தொடர்பான வளர்ச்சித் திட்டங்கள். இந்தப்பாதையில்தான் நாங்கள் பயணிக்கிறோம்'' என்று சொல்லிக் கொண்டு இருந்த போது, விஜய குமாரின் கைக்கு ஒரு துண்டுச்சீட்டு வருகிறது.
''நாம் திரும்பவும் இன்னொரு தருணத்தில் சந்திக்கலாமே'' என்றபடி அவசரமாகக் கிளம்புகிறார். ஒரு ஜீப்பில் அவர் ஏற அவரைப் பின்தொடர்ந்து வீரர்கள் சரசரவெனக் கிளம்ப, என்ன விஷயமாக இருக்கும் என்ற நினைப்புடனேயே நாம் புறப்படு கிறோம். தூரத்தில் மனித நடமாட்டம் தெரிந்தது...


நாம் கூர்ந்து கவனித்தபோது அவர்கள் நமக்கு ஏதோ சைகை காட்டியது தெரிந்தது. நாம் அவர்களைப் பின்தொடர ஆரம்பித்தோம். காட்டுக்குள் விறுவிறுவெனக் கடந்து சென்றார்கள் அவர்கள். அவர்களுடைய நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாகச் சென்றோம். ஒரு கட்டத்தில் திடீரென நின்றவர்கள் அப்படியே திரும்பி நம்மை நோக்கி வந்தனர். முகத்தை துணியால் மறைத்துக் கட்டி இருந்தனர். கைகளில் ஏகே 47 ரகத் துப்பாக்கிகள். விஷயம் நமக்குப் புரிய ஆரம்பித்தது.
 நாம் இந்தப் பகுதியில் நடமாடி வருவதை சி.ஆர்.பி.எஃப். படையினரைப் போலவே மாவோயிஸ்ட் இயக்க உளவுப்பிரிவினரும் கண்காணித்து வந்துள்ளனர். நம்மைப் பின்தொடர்ந்து வந்து நாம் யாரென்று தெரிந்துகொண்டும் இருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், மாவோயிஸ்ட்களை நாம் சந்திக்க வேண்டும் என்று கிராமத்து மக்களிடம் சொன்ன தகவலும் அவர்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது.  
இருவரும் நம்மைப் பார்த்து 'வணக்கம்' சொன்ன கையோடு, ''தமிழ்நாட்டுப் பத்திரிகை​யாளர்கள்தானே?'' என்றனர். ''ஆமாம்'' என்றோம்.
நாம் ஒரு குடிசையை நோக்கி அழைத்துச் செல்லப்​பட்டோம். உரையாடல் மெள்ளத் தொடங்கியது.  
''இங்குள்ள பிரச்னையை, உங்களுடைய கோரிக்கை​களைச் சொல்லுங்களேன்?'' என்றோம்.
''இது எங்கள் மண். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். எங்கள் ஊர் இல்லை. எங்கள் மண். இந்தக் காடுகளும் மலைகளும்தான் எங்களுக்கு எல்லாமும். காலையில் எழுந்ததும் காட்டுக்குள்தான் போவோம். பொழுது சாயும்போதுதான் வீடு திரும்புவோம். வீடு இருப்பதும் காட்டுக்குள்தான். ஆக, எங்களுக்கு உணவு, உழைப்பு, உறைவிடம், உலகம் எல்லாமே இந்தக் காடும் மலைகளும்தான். இதைத்தவிர வேறு ஒரு வாழ்க்கை எங்களுக்குத் தெரியாது.
எங்கள் குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம் வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாங்கள் அரசிடம் கேட்​டோம். அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. எங்களுக்கு மருத்துவமனை வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாங்கள் அரசிடம் கேட்டோம். அரசாங்கம் செவிசாய்க்க​வில்லை. சாலைகள் வேண்டும் எனப் பல ஆண்டு​களாக நாங்கள் அரசிடம் கேட்டோம். அரசாங்கம் செவிசாய்க்க​வில்லை. இப்படி எங்களுக்கென்று எதுவும் செய்யாத அரசாங்கம் இன்றைக்கு இந்த மண்ணைவிட்டு எங்களை வெளியேறச் சொல்கிறது. எங்கள் காடுகளையும் மலைகளையும் அழித்து சுரங்கம் தோண்டப்«​பாகிறோம் என்கிறது. எங்கள் சூழலில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? அதனால்தான் நாங்கள் போராடுகிறோம். எங்களைத் தீவிரவாதிகள் என்கிறது உங்கள் அரசாங்கம்'' என்றார்கள்.
''நீங்கள் தமிழ்நாடுதானே... மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் பழக்கம் உண்டா?'' என்றனர்.  
''பத்திரிகையாளர் என்கிற வகையில் அவரைத் தெரியும். நெருக்கமான பழக்கம் இல்லை'' என்​றோம்.
''உங்கள் சிதம்பரம் நடத்தும் 'பச்சைவேட்டை’ தாக்குதலின் உக்கிரத்தால், எங்கள் மக்கள் துடித்துக்​கொண்டு இருக்கிறார்கள். அவர்தான் விஜயகுமாரை இங்கு கொண்டுவந்தார். இது போதாது என்று  எங்களை ஒழிக்க ராணுவத்தையும் அடுத்த வருடம் இறக்கிவிட இப்போதே திட்டம் போட்டு வருகிறார் சிதம்பரம்'' என்றார்கள்.
''இந்தத் தாக்குதலை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?'' என்றோம்.
''மாவோயிஸ்ட் பகுதிகளில் வேலை செய்யும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளில் பலர் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளா எனத் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் மொழி எங்களுக்குத் தெரியாது. எங்கள் மொழி அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அடி. நாங்கள் அழுகையாலும் ஆயுதங்களாலும் பதில் சொல்கிறோம்'' என்றார்கள்.
''இங்கே பல வருடங்களாக, அரசியல்வாதிகளும் பெரும் பணக்காரர்களும் எங்களைச் சுரண்டுகிறார்கள். போதாக்குறைக்கு அரசாங்கம் இப்போது பெரு
நிறு​வனங்களையும் அழைத்து வருகிறது. ஆரம்பத்தில் அரசாங்கம் தந்த பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தோம். பிறகுதான் சுதாரித்து, நிலம் தர மறுக்கும் இயக்கத்தைத் தொடங்கினோம். மக்களின் எந்தத் தேவையையும்  பூர்த்தி செய்ய முடியாத ஓர் அரசாங்கம் இருந்து என்ன பயன்? மக்கள் அனைவரும் எங்களைப் பாதுகாவலராக நினைக்கிறார்கள். கிராமங்களில் நாங்கள் முன் னின்று நடத்தும் மக்கள் நீதிமன்றங்களை வந்து பாருங்கள். நாங்கள் வேறு அல்ல; மக்கள் வேறு அல்ல என்பதைப் புரிந்து கொள்வீர்கள்'' என்றவர்கள், அவர்களே தொடர்ந்தார்கள்.
''சரண்டா வனப்பகுதியில் எங்கள் இயக்கத்​தினர் மீது தாக்குதல் நடத்தினார்கள். அந்தச் சமயத்தில் கிராம மக்களிடம் எந்த அளவுக்குக் கொடூரமாக நடந்து கொண்டார்கள் என்பதை இங்கு உள்ள மனித உரிமை ஆர்வலர்களிடம் கேட்டுப்பாருங்கள்'' என்றவர்களிடம், ''ஆனால், இப்போது வளர்ச்சிப் பணிகள் நடக்கின்றன அல்லவா?'' என்று கேட்டோம்.
''இங்கு ரூ. 248.48 கோடியில் அவர்களுடைய 'வளர்ச்சிப் பணி’ நடக்கிறது. ரூ. 104 கோடியில் 130 கி.மீ. தூரத்துக்குச் சாலை அமைக்கிறார்கள். 7,000 பேருக்கு சைக்கிள் வழங்கினார்கள். அதாவது, நாங்கள் சைக்கிளில் செல்லத்தான் அந்தச் சாலைகளை அமைப்பதாக அரசாங்கம் நம்பச் சொல்கிறது? எங்களுக்கா தெரியாது? கனிம வளத்தைச் சுரண்ட வரும் பெருநிறுவனங்களின் கனரக வாகனங்களுக்காக அமைக்கப்படும் சாலை அது.
ஜார்கண்ட் அரசு இதுவரை இரும்புத்தாது எடுக்க 17 சுரங்கத்தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி இருக்கிறது. எங்களுக்குச் செய்வ​தாகச் சொல்லிக்கொண்டு அவர்களுடைய வளர்ச்சிக்​கான பணிகளைத்தான் அரசு செய்கிறது'' என்றார்கள்.
''இங்கு சி.ஆர்.பி.எஃப். வந்த பிறகு, நிலைமை எப்படி இருக்கிறது? அவர்கள் கை ஓங்கி இருப்பதாகச் சொல்கிறார்களே?'' என்றோம்.
''அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். இங்குள்ள சி.ஆர்.பி.எஃப்-காரர்களில் சமீப காலத்தில் தற்கொலை செய்துகொண்டவர்கள் எத்தனை பேர், படையைவிட்டு திடீரென்று காணாமல்போனவர்கள் எத்தனை பேர், விருப்ப ஓய்வில் போனவர்கள் எத்தனை பேர் என்று தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப்பாருங்கள்... அவர்களுடைய நிலை தெரியும். அவர்கள் எங்களுடன் மோதினால், தோற்றுப்போவார்கள். ஆனால், அப்பாவி மக்களுடன் மோதிக்கொண்டு இருக்கிறார்கள்'' என்று அவர்கள் சொன்னபோதே, வெளியே இருந்த மர உச்சி ஒன்றில் இருந்து வித்தியாசமான குரல் ஒலித்தது.
தூரத்தில் கையில் அம்புகளுடன் ஆதிவாசிகள்!
அதிர்ச்சி தொடரும்
உளவு பார்க்கும் சிறப்பு போலீஸ்...
 ஜார்கண்ட் மாநிலத்தில் இயங்கிவரும் 'ஜோகார்' (ஜார்கண்டீஸ் ஆர்கனைசேஷன் ஃபார் ஹியூமன் ரைட்ஸ்) என்ற அமைப்பின் முக்கியப் பிரமுகரான கோபிநாத் கோஷ், ரமேஷ் ஜெர்ரி ஆகியோர் நம்மிடம் பேசினர்...
''கடந்த 30 வருடங்களாக எங்கள் அமைப்பு செயல்பட்டு​வருகிறது. போலீஸார் தவறு செய்தாலும், மாவோயிஸ்ட் தவறு செய்தாலும் நாங்கள் களத்தில் போய் விசாரித்து உண்மை நிலையை வெளி உலகுக்குத் தெரிவிக்கிறோம்.
ஜார்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை, போலீஸ்தான் மாவோயிஸ்ட்களை உருவாக்கியது. இதனால்தான், போலீஸ் - மாவோயிஸ்ட் மோதல் ஒரு புறம் நடக்க... 'இவர் ஆளா? அவர் ஆளா?' என்கிற சந்தேகத்தில் இரு தரப்பினரும் துப்பாக்கியை உயர்த்துவதால் இறந்துபோகும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. வேலையில்லாமல் கஷ்டப்படும் கிராமப்புற இளைஞர்கள் 6,500 பேரை சிறப்பு போலீஸ் என்ற பெயரில் உலவ விட்டிருக்கிறார்கள். இவர்களின் பணி, மாவோயிஸ்ட்களைப் பற்றித் துப்பு கொடுப்பது. மாதம் 3,000 சம்பளம் என்று ஆசை காட்டுகிறார்கள். இந்த இளைஞர்களும் தங்களை நிஜபோலீஸ் போல நினைத்துக்கொண்டு வலம் வருகிறார்கள். செல்போன் தருகிறார்கள். அவ்வப்போது கொஞ்சம் பணம் தருகிறார்கள். இவர்கள் மீது சந்தேகப்படும் மாவோயிஸ்ட்கள் பல சந்தர்ப்பங்களில் சுட்டுக் கொன்று விடுகிறார்கள். துப்பாக்கி மோதலில் போலீஸ் இறந்தால், அவரது குடும்பத்துக்கு 40-50 லட்ச ரூபாய் நஷ்டஈடு, அரசு வேலை என்றெல்லாம் தருகிறார்கள். ஆனால், இந்த சிறப்பு போலீஸ் பணியில் இருக்கும் அப்பாவிக் கிராம இளைஞர்கள் இறந்தால், போலீஸ் கண்டுகொள்வதே இல்லை. 'எங்களுக்கும் அவர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக எந்தத் தொடர்பும் இல்லை' என்று கைவிரித்து விடுகிறார்கள். பண்டாரிய மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 14 போலீஸாரைக் கொன்றுவிட்டுத் ஓடிவிட்டனர். அந்தக் கிராமத்து மக்களையே போலீஸ் வாட்டி வதைத்தது. திருமண விழாவில் சிவப்பு வண்ணச்சேலை கட்டியிருந்த ஒரு பெண்ணை, 'மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவள்தானே’ என்று கேட்டு அடித்துத் துன்புறுத்தினர். இப்போதெல்லாம், கிராமத்து பெண்களில் பலர் சிவப்பு நிற உடை அணிவதையே தவிர்க்கிறார்கள்.  
மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தவர்கள், அதே பாணியில், வெவ்வேறு பெயர்களில் கிராமங்களில் ஆயுதங்களுடன் நடமாடுகிறார்கள். போலீஸுடன் பினாமிகளாகச் செயல்படும் அமைப்பினரும் உண்டு. இவர்கள் மாவோயிஸ்ட்களை எதிர்த்துச் சண்டை போட வேண்டும் என்பது ஒப்பந்தம். சில கார்ப்பரேட் கம்பெனிகள் தங்கள் கம்பெனியின் அறிவிக்கப்படாத கூலிப்படைகளாக ஒருசில அமைப்புகளை இயக்குகிறார்கள். துப்பாக்கி வாங்கித் தருகிறார்கள். ஏதாவது பிரச்னை என்றால், அந்த கம்பெனிகள் சார்பாக இவர்கள் சண்டை போடுகிறார்கள். மாவோயிஸ்ட் பாணியில் இவர்களும் வரி வசூலிக்கிறார்கள். இவர்கள் எங்காவது மாவோயிஸ்ட்களுடன் மோத வேண்டிய சூழ்நிலை வரும்போது, வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன''என்றனர்.



திவாசிகளைப் பார்த்ததும் நாம் திடுக்கிட்டோம். ஆனால், அவர்களோ சர்வசாதாரணமாக அருகில் வந்து நம்மை வணங்கினார்கள். 'தோழர்கள்’ நம்மை அறிமுகப்படுத்தினார்கள். ''பயங்கரவாதிகள், அதிநவீன ஆயுதங்களை வைத்திருக்கிறோம் என்றெல்லாம் சொல்கிறார்களே... மக்கள் படையின் பெரும்பான்மை ஆயுதங்கள் இவை தான்'' என்று 'தோழர்கள்’ நமக்குக் காட்டியது ஆதிவாசிகள் வைத்திருந்த வில்லையும் அம்பையும்! 
அவர்கள் தொடர்ந்தனர்.
''தும்கா மாவட்டத்தில் அணை கட்டும் விவகா ரத்தில் ஆதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு பக்கம் அதிநவீனத் துப்பாக்கிகளுடன் ஆயிரக்கணக்கான போலீஸார், எதிர்ப்பக்கம் அவர் களுக்கு இணையான எண்ணிக்கையில் கையில் வில் அம்புடன் ஆதிவாசிகள். இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல். ஆதிவாசிகள் தரப்பில் நாலைந்து பேர் இறந்தனர். ஆனாலும், அம்புகளைக் கண்டு கலங்கிப்போனது போலீஸ் படை'' என்றார்கள்.
நமக்கு, ஹாசாரிபாத் மாவட்ட வனத்துறை அதிகாரி தங்கப்பாண்டியன் சொன்னது ஞாபகத் திற்கு வந்தது. ''இங்குள்ள ஆதிவாசிகள் மிகவும் நல்லவர்கள்.  வேண்டும் என்று யாரையும் தாக்க மாட்டார்கள்’' என்று கூறிய தங்கப்பாண்டியன் ஒரு சம்பவத்தையும் குறிப்பிட்டார்.
''இங்குள்ள பழங்குடி மக்கள் தங்கள் தற்காப்பு ஆயுதமாக வைத்திருப்பது வில்-அம்பு. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று அனைத்துத் தரப்பினரின் கைகளிலும் அம்பு இருக்கும். இப்படித்தான் ஒரு முறை கிராமத்தினர் வில்-அம்பு சகிதம் திரண்டு என் அலுவலகத்துக்கு வந்துவிட்டனர். அவர்களின் அனுமதி பெறா மலேயே, தொழிற்சாலை ஒன்று கிராமத்து நிலத்தை ஆக்கிரமித்ததை எதிர்த்து புகார் கொடுக்க வந்திருந் தார்கள். நான் முதலில் அதிர்ந்துபோனேன். ஆனால், அவர்கள் மிகுந்த மரியாதையோடு மனு அளித்துவிட்டு திரும்பிப் போனார்கள்'' என்றார் தங்கப்பாண்டியன்.
சைபாஸா மாவட்ட கலெக்டர் சீனிவாசனும் கூட இதே வில் அம்பு அனுபவம் பற்றி நம்மிடம்சொல்லியிருந்தார். ஏதாவது பிரச்னை என்றால், அவர்கள் ஏரியாவுக்கு அவர் போகும்போது, ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கையில் வில் அம்புடன்தான் திரண்டு நிற்பார்களாம். முதல் முறை அவர் அப்படிப் போனபோது அவர்களைப் பார்த்து ஆடிப்போய் இருக்கிறார். ஆனால், கலெக்டரின் அணுகுமுறையை பார்த்து இயல்பாகப் பேச ஆரம்பித்து தங்கள் பிரச்னைகளை ஆதங்கத்தோடு சொல்லியிருக்கிறார்கள். எழுத்தாளர் அருந்ததி ராய் சொல்வதுபோல, அரசும் நவீன சமூகமும்தான் அந்த மக்களைப் போரில் இறக்குகின்றன.
அந்த ஆதிவாசிகளில் ஒருவர் நமக்கு மரப் பாத்திரத்தில் தேன் எடுத்து வந்திருந்தார்.  அவர் வைத்திருந்த வில் அம்பை நாம் கையில் வாங்கி தடவிப்பார்த்தோம். காட்டில் வளர்ந்து கிடக்கும் மூங்கிலை வளைத்து வில்லாக மாற்றியிருந்தார்கள். அம்பு நுனியில் இரும்பு பூண் செருகியிருந்தார்கள். அவர்களின் பாரம்பர்ய நடனமான 'சாஹூ' ஆடிக்காட்டினார்கள்.
''வில் அம்பை நாங்கள் தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்த மாட்டோம். எங்களின் கடவுள் இயற்கை. அதைச் சீரழிக்க வரும் எவரும் எங்கள் எதிரிகள்தான்'' என்றார்கள்.
தொடர்ந்து, ''எங்களவர்கள் வில் வித்தையில் படு கில்லாடிகள். எங்கள் மாநிலப் பெண் தீபிகா குமாரிபற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வில் வித்தையில் கெட்டிக்காரி. ஏராளமான பதக்கங்களை வாங்கி குவித்துவிட்டாள். ஒலிம்பிக்ஸ் போக இருக்கிறாள்'' என்றார்கள். இது, நமக்கு வியப்பை ஏற்படுத்தியது.
''ஆதிவாசிகள் என்றால், அப்பாவிகள் என்று நினைக்கிறது அரசாங்கம். ரொம்ப நாளைக்கு எதுவுமே அறியாமலும் ஏமாளிகளாகவும் நாங்கள் இருந்தது உண்மைதான். ஆனால், இப்போது எங்களுக்கு எல்லாம் தெரியும். தீபிகா குமாரி கதையும் தெரியும். எங்கள் கிராமங்களில் வாழும் மாணவ- மாணவியரைத் தேடிப்பிடித்து அழைத்துப்போய் டாடா நிறுவனம் செரைகலாவில் உள்ள தன்னுடைய வில் வித்தைப் பயிற்சி மையத்தில் ஏன் பயிற்சி அளிக்கிறது என்ற பின்னணியும் தெரியும்'' என்கிறார்கள். அவர்கள் சொல்வதை ஆமோதித்து அட்டகாசமாக ஒரு சிரிப்பு சிரித்தனர் மற்ற ஆதிவாசிகள்!
''ஐயா, நாங்கள் வேறு... இவர்கள் வேறு அல்ல. இதை அரசாங்கத்திடம் அழுத்திச் சொல்லுங்கள்'' என்றனர்.
'தோழர்கள்’ தொடர்ந்தனர்.  
''மூலிகை வைத்தியத்தில் கைதேர்ந்தவர்கள் இவர்கள். இங்குள்ள மக்களின் பெரிய எதிரி மலேரியாவை உண்டாக்கும் கொசு. காடுகளை ஒட்டியுள்ள ஊர்களில் வருடத்துக்கு பல நூறு பேர் மலேரியா காய்ச்சலால் இறந்துபோகிறார்கள். சரண்டா வனப்பகுதியில் ஆபரேஷன் மான்சூன் நடந்தபோது, சி.ஆர்.பி.எஃப்-காரர்கள் கும்பல் கும்பலாக மலேரியா காய்ச்சலால் துடித்தார்களாம். அவர்களைக் காப்பாற்ற ஹெலிகாப்டர் உதவியுடன் ஜாம்ஷெட்பூர் மருத்துவமனைக்கு அள்ளிப்போனார்களாம். அப்படியும் சிலரைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால், ஆதிவாசிகள் தங்களுக்கே உரித்தான மூலிகை வைத்தியத்தைப் பயன்படுத்துவதால், யாரும் இறந்துபோவது இல்லை'' என்றார்கள். அது என்ன மூலிகை என்றோம்.  ''வேண்டாம்... பின் அதற்காகவும் பல நிறுவனங்கள் இங்கே வரும்'' என்று சிரித்தார்கள். பெருநிறுவனங்களின் மேலாதிக்கம் அவர்களை எந்த அளவுக்குப் பாதித்து இருக்கிறது என்று புரிந்தது.
சுரங்கத் தொழிற்சாலைகளில் பல ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்கள் மண்ணுக்கு அடியில் தொங்கியபடி வேலை செய்வதையும் பல சமயங்களில் அவர்கள் தவறி விழுந்து இறந்துபோவதைப் பற்றியும் கவலையுடன் சொன்னார்கள்.  
''இந்த விவகாரங்களை நீங்களாவது மத்திய அரசாங்கத்திடம் சொல்லுங்கள் என்பதுதான் நாங்கள் உங்களிடம் வைக்கும் கோரிக்கை'' என்றார்கள். கை கூப்பி விடைபெற்றோம்.
பெட்லா நகருக்கு வந்து சேர்ந்தோம். அங்கு ஒரு பத்திரிகை நண்பரைச் சந்தித்தோம். அவர் சொன்ன ஒவ்வொரு தகவலும் மனதை உறையவைக்கக் கூடியவை. ''இந்த மாநிலத்தில் கடந்த 2001 முதல் 2010 வரையிலான 10 வருடங்களில் மட்டும் 7,563 பெண்கள் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 2,707 பெண்கள் வரதட்சணைக் கொடுமை காரணமாக உயிரை விட்டிருக்கிறார்கள். 3,854 பெண்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். சூனியக்காரிகள் என்ற முத்திரை குத்திக் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை மட்டும் 1,157.
சட்டம் ஒழுங்குக்குத்தான் இந்த நிலை என்று இல்லை. அடிப்படைக் கட்டமைப்பின் நிலையும் இப்படித்தான். இந்த ஹாசாரிபாத் மாவட்டத் திலேயே 92 சதவிகித மக்கள் திறந்தவெளிக் கழிவறையைத்தான் பயன்படுத்துகிறார்கள். 32 சதவிகிதப் பெண்கள் குடிநீருக்காக ஒரு கி.மீ. தூரம் வரை நடந்து போகிறார்கள். இங்குள்ள மக்களுக்கு நோய் ஏற்பட்டால், மருத்துவமனைக்குச் செல்வது சிரமம். காரணம், டாக்டர்கள் பற்றாக்குறை. மாநிலத்தில் மூன்று மருத்துவக் கல்லூரிகள்தான்  இருக்கின்றன. அங்கே உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை 350. வருடத்துக்கு இவ்வளவு மருத்துவர்கள்தான் வெளியே வருகிறார்கள் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள் (மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் 3 கோடி). மருத்துவக் கல்லூரிகளின் நிலைதான் இப்படி என்று இல்லை. பொறியியல் கல்லூரிகளின் நிலைமை இதைவிட மோசம். மக்கள் கொந்தளிக்கிறார்கள் என்றால் சும்மாவா கொந்தளிக்கிறார்கள்?'' என்றார் அந்த நண்பர். நியாயம்தானே?
நாம் அங்கு சுற்றிய ஏழு நாட்களில், மின்வெட்டு என்பது அங்கு சர்வசாதாரணம் என்பது தெரிந்தது. சர்ஜூ கிராமத்தில் இரவு தங்கியிருந்தபோது, அங்கு ஓர் இரவு முழுக்கவே மின்சாரம் இல்லை. துணை முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டில் பேசிக்கொண்டு இருந்தபோதும் பல முறை மின்வெட்டு. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று எந்த வேறுபாடும் இன்றி மின் வெட்டு.
மனித உரிமை ஆர்வலர் சுரேஷ் கூறுகிறார்...
''எங்கள் மாநிலத்தின் 50 சதவிகித கிராமங்களில் மின்சாரம் இல்லை. அதைச் சரிசெய்யும் எண்ணமே அரசுக்கு இல்லை. மின்சாரம் தொடர்பான தொழில்கள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன. வீடுகளில் படிக்கும் பிள்ளைகள் படும்பாடு பரிதாபகரமானது. மாவோயிஸ்ட் பிரச்னை இருப்பதால், பகல் நேரங்களில் மட்டும்தான் சாலைகளில் பஸ்களைப் பார்க்க முடியும். நீண்ட தூரப் பயணம் என்றால், ஓர் இடத்தில் இரவு தங்கிவிட்டு, அடுத்த நாள்தான் பயணத்தைத் தொடர முடியும். இந்த மாதிரி வினோதமான சூழல் இந்தியாவில் இருக்கிறது என்று உங்கள் ஊர்க்காரர்களுக்குத் தெரியுமா?'' என்றார்.
ஜார்கண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நாம் பயணித்த சாலைகள் அனைத்துமே மேடு பள்ளமாகத்தான் காட்சி அளித்தன. இன்று வரை இந்த மாநிலத்துக்கு என்று அரசின் அதிகாரப்பூர்வ வெளியூர் பஸ் போக்குவரத்துக் கழகமே இல்லையாம். நகர்ப்புறங்களில் சில பகுதிகளில் மட்டும் தனியார் பஸ்கள் ஒடுகின்றன. சிறு ரக வாகனங்களை தனியார்கள் ஓட்டிவருகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் அவஸ்தையை அனுபவிப்பவர்களுக்குத்தானே தெரியும் வலியும் துயரமும்? மத்திய அரசின் நிதி, நேரடியாக பஞ்சாயத்துக்களுக்கு போய் சேரும் வகையில் சிஸ்டம் இருக்கிறது. ஆனால், இந்த மாநிலத்தைப் பொறுத்தவரை கடந்த பல ஆண்டுகளாக பஞ்சாயத்து தேர்தலே நடக்கவில்லையாம். இப்போதுதான் தேர்தல் நடந்திருக்கிறது. இன்னும் கூட சில பகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதனால், இந்த மாநிலத்துக்கான மத்திய அரசின் நிதி, பஞ்சாயத்து தேர்தல் முடிந்தபிறகுதான், வந்து சேருமாம். இதனால்தான் கல்வி, சுகாதாரம், சாலை மேம்பாடு.. .இப்படி எந்த ஒரு கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுமே முழுமையாக செயல்படுத்தப்படாமல் கிடக்கிறதாம். சில நேரங்களில் மாநில அரசு தங்கள் நிதியை போட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற முயலும்போது, கான்ட்ராக்டர்கள் வருவதே இல்லையாம். பொதுக்கட்டடங்கள் கட்ட பலமுறை டெண்டர் விடுகிறார்களாம். இதற்குக் காரணமாக மாவோயிஸ்ட்களை அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது. ஆனால், அதிகாரிகள் கமிஷன் கேட்பதால், கான்ட்ராக்டர்கள் வரத்தயங்குவதாக மாவோயிஸ்ட்கள் சொல்கிறார்கள். மொத்தத்தில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடக்கவில்லை.
மறுநாள் ஊர் திரும்ப வேண்டிய சூழல். ஆனால், அன்றைக்கு இரவு தூக்கமே வரவில்லை. இந்த அரசாங்கம் எவ்வளவு பெரிய குற்றத்தைத் தன் மக்களுக்கு எதிராக நடத்திக்கொண்டு இருக்கிறது? மாவோயிஸ்ட்டுகள், பயங்கரவாதிகள், பச்சை வேட்டை, ரத்த வெறி...
மீண்டும் மீண்டும் அந்த மக்கள் படும் துயரக் காட்சிகள் மனதை அலைக்கழித்தன.
அரசாங்கங்கள் எதிர்க்கலாம். ஆனால், வரலாறு எப்போதுமே மக்கள் பக்கம்தான் இருக்கிறது. துயரத்தையும் அடக்குமுறையையும் எதிர்கொள்ளும் மக்களே வரலாற்றின் அடுத்தடுத்த அத்தியாயங்களை எழுதுகிறார்கள். இந்த ஆதிவாசி மக்களும் புதிய வரலாற்றை எழுதுவார்கள் என்று மனம் சொன்னது. வெளியே எட்டிப்பார்த்தோம். விடிந்திருந்தது.
முற்றும்
 மாவோயிஸ்ட்களின் சிவப்பு பிராந்தியம்
பீகாரில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் என்ற அமைப்பும், ஆந்திர மக்கள் யுத்தக் குழுவும் 2004-ல் இணைந்தன. அதன்பிறகு, உருவானதுதான் மாவோயிஸ்ட் இயக்கம். இதன் தலைவராக கணபதி பதவியேற்றார். இவர்களுக்குத் தேர்தல் பாதையில் நம்பிக்கை இல்லை. இந்தியாவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்ட்கள் செயல்படுகின்றனர். இந்திய நிலப்பரப்பில் சுமார் 40% பகுதிகளில் செயல்படுகிறார்கள். அவர்கள் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளை 'சிவப்புப் பிராந்தியம்' என்று அழைக்கிறது அரசு வட்டாரம். மாவோயிஸ்ட் இயக்கத்தில் அரசியல் பிரிவு, ராணுவப் பிரிவு என்று இரண்டு பிரிவுகள் உண்டு. ஆதரவாளர்கள் பல லட்சம் இருந்தாலும், ஆயுதம் ஏந்திக் களத்தில் நிற்கும் மாவோயிஸ்ட்கள் சுமார் 40 ஆயிரம் பேர்தான் என்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் காவல்படைகள் - மாவோயிஸ்ட்கள் இடையேயான மோதல் சம்பவங்கள் நடந்து வந்தாலும், மிக முக்கியமான நிகழ்வு - 2010-ல் நடந்ததாகும். அப்போது சுமார் 1,000 பேர் தாக்கியதில் 75 பாதுகாப்புப் படையினர் இறந்தனர். அரசாங்கம் சொல்லும் கணக்குப்படி கடந்த ஐந்து வருடங்களில், 1,730 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதேநேரம், சுமார் 2,500 காவல் படையினரைக் கொன்றிருப்பதாக மாவோயிட்டுகள் சொல்கிறார்கள்.  இரு தரப்பினருக்கும் இடையே நடந்துவரும் போரில் சுமார் 2,765 ஆதிவாசிகள், கிராம மக்கள் வரை இறந்து போனதாக மனித உரிமை ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.



-Junior vikatan